7 – காற்றிலாடும் காதல்கள்
“ஏய் மிருதங்கம்.. கீழ வா.. வெரசா கெளம்பனும்..“ கீழிருந்து இந்திரன் அவளைக் கத்தியழைத்தான்.
அவனை முறைத்துவிட்டு அவள் மெல்ல தனதுக் கைப்பை சகிதம் தேவையானவற்றை எடுத்துக்கொண்டு அவர்களிடம் வந்தாள்.
“இந்திரா.. இந்தா மீன் கொழம்பு தனியா வாளில ஊத்தி வச்சிருக்கேன் மறக்காம எடுத்துக்க.” என இருளாயி கூறினார்.
“என்ன தூக்கு சிறுசா இருக்கு?”
“நம்ம மிருணா புள்ளைக்கு கொழம்பு ரொம்ப புடிச்சி போச்சி அதான் சேத்து அதுக்கு எடுத்து வச்சிட்டேன். அடுத்த தரம் உனக்கு நெறைய எடுத்து தரேன்.“
“மீனு எங்க?”
“மீனும் புள்ளையே சாப்ட்டுருச்சி இந்திரா.”
“3 மீனுமா?”
“தலையும் வாழும் நாங்க எடுத்துகிட்டோம். உனக்கும் ஒரு தலை வச்சி ஒரு நடு பீசு வச்சிருக்கேன். கொஞ்சம் கொறவா தான் இருக்கு. அதான் சொல்றேன். அடுத்த மொற 4 இல்லைன்னா 5 கொண்டா.. புது மாதிரியா முழு மீன மசாலா போட்டு ஊறவச்சி சுடணுமாம். அதுக்கும் ஒண்ணு இப்ப எடுத்து வச்சிருக்கேன். அதான் மீனு பத்தல.”
இந்திரன் மிருணாவை முறைத்தான். அவள் தனது சிகையைச் சரிசெய்தபடிக் கேலியாகச் சிரிக்க இந்திரன் இன்னும் கடுப்பானான்.
“வேணும்னு தானே பண்ற?”, மிருணாவிடம் கேட்டான்.
“ஆமா.. சும்மா சும்மா என்னைய திட்டிக்கிட்டே இருக்கல்ல நீ..“
“அதுக்குன்னு இப்படியா மீனுல கைய வைப்ப?”
“நீ என்னை திட்டி மொறச்சா எல்லாத்துலையும் வைப்பேன். போலாமா?” எனக் கேட்டபடி முன்னே நடந்தாள்.
“பாவி மவளே.. இரு வாய்க்காளுக்கு போறப்ப தள்ளிவிடறேன்.” என முனகினான்.
“உன்னையும் இழுத்துட்டு தான் விழுவேன்.” என அவள் அவன் காதருகில் வந்து சத்தமாகக் கூற, கீதனும் மற்றவர்களும் வாய்விட்டுச் சிரித்தனர்.
“போதும்டா உங்க சண்ட.. சீக்கிரம் கெளம்பி போயிட்டு வா..“ என வெள்ளைச்சாமி தாத்தா வந்து அவர்களை சமாதானம் செய்து அனுப்பிவைத்தார்.
இவர்களுடையது கிராமச்சூழல் மாறாத ஊர். எந்தக் கடைகளும் பெரிதாக இல்லை. சிறு சிறு அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்திச் செய்யும் கடைகள் மட்டுமே பஸ் நிறுத்தம் அருகில் இருக்கிறது. கீதனின் நண்பன் அன்வர் தான் சூப்பர் மார்க்கெட் ஒன்றை அங்கே நிறுவ முயற்சி செய்துக்கொண்டிருக்கிறான்.
பஸ் நிறுத்தம் விட்டுச் சற்றுத் தள்ளி வயல்வெளி ஆரம்பமாகும் இடத்தில் கட்டிடம் கட்டிக்கொண்டிருக்கிறான். அந்த ஊரில் இதுபோன்ற கடைகள் வருவதைக் கூட வயதானவர்கள் மறுத்துக் கொண்டிருந்தனர்.
“கடைன்னா நம்ம கண்காணிப்புல நம்ம கட்டுக்கோப்புல இருக்கணும். அதென்ன வார்ரவங்களே எடுத்துக்கறமாதிரி வைக்கணும்ன்னு சொல்ற நீ? இதெல்லாம் சரிப்பட்டுவராது. கடைல நாலு பேர போட்டு எடுத்து குடுத்து வியாபாரம் பண்ணு..” எனக் கூறினர்.
“இப்பவும் கடை நம்ம கண்காணிப்புல தான் இருக்கும். சுத்தி கேமரா இருக்கும். அவங்களுக்கு தேவையானத அவங்களே விலை பாத்து வேணுமா வேணாமான்னு முடிவு பண்ணி எடுத்துக்கலாம். வாசக்கிட்டயே நாலு பேர காசு வாங்க உக்காரவச்சா வியாபாரம் அதிகமா நடக்கும். நம்ம ஆளுங்களுக்கும் என்னென்ன பொருள் இருக்குன்னு அப்ப தான் தெரியும் உலகம் மாறிட்டு வருது நாமளும் அதுக்கு தக்கன மாறணும் தாத்தா.” என அவனும் விளக்கம் கொடுத்து இப்போது பெரிதாகவே கட்டிக்கொண்டிருக்கிறான்.
கீதன் தாத்தாவின் நிலங்களைக் கவனிப்பத்தோடு, பாழடைந்த நூலகத்தை சீர் செய்யும் பணியில் இருக்கிறான். அவனோடு இந்திரன் பல அறிய புத்தகங்களைத் தேடி வாங்கும் வேலையில் இருந்து, அவனால் முடிந்தத் தொண்டைச் செய்துக் கொண்டிருக்கிறான்.
அவர்கள் ஊரில் இருந்து 3 கிலோமீட்டர் தள்ளி ஒரு கல்லூரி வரப்போவதாகப் பேச்சு ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால் அந்த ஊர்காரர்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாகவும் நண்பர்கள் குழுவிற்கு தகவல் வந்தது.
அதை அறியும் முயற்சியில் இன்னும் இருவர் இருக்கின்றனர். படிப்பினால், அறிவினால், தற்கால வாழ்க்கைத் தரத்தில், நம்முடைய ஊர் குறைந்து விடக்கூடாது என்ற முனைப்போடு இன்னும் சிலரும் ஊரை மேம்படுத்தும் பணியில் சேர்ந்துள்ளனர்.
ஆனால் என்ன பேசினாலும் இந்த அமாவாசை, பௌர்ணமி, மலைக்கோவில் குகை மற்றும் எல்லைகோவில் விஷயங்களில் யாரின் பேச்சையும் பெரியவர்கள் கேட்பதாக இல்லை. அதற்கு முக்கியக்காரணம் நமது இந்திரன் குடும்பம் ஒரே நேரத்தில் இறந்தது தான். தவிர கீதனின் தந்தையும் தானே இறந்தார், ஆனால் அன்றைய நாளின் மர்மம் இன்றுவரை யாருக்கும் தெரியவில்லை என்பது தான் உண்மை. எத்தனையோ முறை கேட்டும் மாலா வாய் திறக்கவில்லை. விஸ்வநாதனும் அதற்கு மேல் மகளை யாரும் எதுவும் கேட்கவும் அனுமதிக்கவில்லை. இனிமேல் யாரும் மலைக்குகைப் பற்றி ஆராயக்கூடாது என்ற முடிவை ஒருமனதாக எடுத்து அறிவித்தனர். அவர்களின் முடிவை எதிர்க்க யாரும் முன்வரவும் இல்லை.
இந்திரனின் தாயும், தந்தையும் உடல் இரண்டாக பிளந்துக் கிடந்தனர், வடிவேலன் உடலின் அத்தனை பாகங்களும் சிதறிக் கிடந்தது. இந்திரனின் உடன்பிறந்தவர்கள் தலைத் தூண்டிக்கப்பட்டிருந்தது. ஆனால் அங்கே வெளியாட்கள் வந்த அடையாளமோ, கொல்லப் பயன்படுத்திய ஆயுதமோ எதுவுமே கிடைக்கவில்லை. அமானுஷ்யமான மரணம் என்று காவல் துறையும் அந்த வழக்கை முடித்துவிட்டது.
பகவத்கீதன் அந்த வழக்கையும், அந்த மலையில் இருக்கும் குகைப் பற்றிய விவரங்களைக் கொண்டு என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்ள, ஒரு வருடமாக அலைந்துக் கொண்டிருக்கிறான்.
ஊர்காரர்கள் போட்டிருக்கும் ஊர்கட்டுப்பாட்டு விதியை மீறி ஊரைத் தாண்டினால் ஏதேனும் தெரியவருமா என்ற எண்ணத்தில் தான் கடந்த சில மாதங்களாக ஒவ்வொரு அமாவாசை மற்றும் பௌர்ணமியில் எல்லையைத் தாண்ட முயன்றுக் கொண்டிருக்கிறான். அந்த முயற்சியும் தோல்வியிலேயே முடிய மனம் உடைந்திருந்தான்.
இந்த சமயத்தில் சரியாக சுவடிப் படிக்கத் தெரிந்த மிருணாளினி இங்கே வந்திருக்கிறாள். இவளால் ஏதேனும் தெரியவரலாம் என்ற நம்பிக்கை இப்போது அவனுக்குப் புதிதாக உதித்திருந்தது.
இந்திரனுடன் சண்டையிட்டபடி வரும் மிருணாளினியைக் கீதன் அவ்வப்போது கண்ணாடி வழியாகப் பார்த்துக் கொண்டிருந்தான். அதை அவளும் கண்டும் காணாததுப் போல இருந்துக் கொண்டாள்.
இந்திரன் இருவரையும் கவனித்தபடித் தான் இருந்தான். ‘பையன் கவுந்துட்டான். இந்த புள்ளைக்கு எப்புடி அவன பிடிக்க வைக்கறது?’என மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.
சிறிது நேரத்தில் கடைத்தெருவிற்குள் இவர்கள் வாகனம் நுழைந்தது.
“கீதா.. நீ முன்ன கூட்டிட்டு போ.. நான் வண்டிய இடம் பாத்து நிறுத்திட்டு வரேன்.” என அவர்களை முன்னே அனுப்பி வைத்தான்.
இருபக்கமும் பல வகையான கடைகள் அந்த தெருவில் இருந்தது. மலிவு விலையில் இருந்து அதிகவிலை கடைகள் வரை அத்தனையும் அந்த நான்கு தெருக்களில் இடம்பெற்றிருந்தது.
முதலில் ஒரு நகைக்கடையில் புகுந்தாள். மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு நகைக்கடை தான். கட்டிட அமைப்பும், நகைகளின் விதமும் புதுமையாகப் பார்த்ததும் கவரக்கூடிய வகையில் இருந்தது.
“இங்க என்ன வாங்கற மிரு?”
“கிப்ட்.. உன் தங்கச்சி கையளவு தெரியுமா?”, என வளையல்கள் இருக்கும் பக்கம் சென்றாள்.
“இதெல்லாம் எதுக்கு?”
“கல்யாணத்துக்கு நீங்க துணி எடுத்து குடுக்கறத மறுக்காம வாங்கிக்கறோம் தானே.. அதே மாறி தான் இதுவும் அன்புப்பரிசு. உன் கல்யாணத்துக்கும் கூட வாங்கி தருவேன்.” எனக் கூறி அவனைக் கடுப்பாக்கினாள்.
“என் கல்யாணமே உன்கூட தான். அதனால மாப்பிள்ளை சீர உங்கப்பாவும், தாத்தாவும் பண்ணிடுவாங்க.” எனச் சிரித்தபடிக் கூறி அவளைக் கடுப்பாக்கினான்.
“வந்த எடத்துல அமைதியா இரு கீதன்..”
“உனக்கும் அதே தான்.” எனக் கூறிவிட்டு அவள் செல்லுமிடமெல்லாம் அமைதியாக பின்னால் சென்றான்.
“என்ன மாப்ள இப்பவே பின்னாடி பைய தூக்கிட்டு நடக்க பழகறியோ?” எனக் கேட்டபடி இந்திரன் அவனருகில் வந்தான்.
“கம்முன்னு இரு. அவளே என்னை வெறுப்பேத்திட்டு இருக்கா. இப்பவே அவள ஊருக்கு ஓடவிட்டு என்னைய சந்நியாசி ஆக்கிறாத மச்சான்.” என கீதன் இந்திரனின் காதைக் கடித்தான்.
“அப்படியெல்லாம் உன்ன விட்ருவோமா? நாங்க எல்லாம் எதுக்கு இருக்கோம்?”
“உயிர எடுக்கத்தான். அமைதியா ரெண்டு பேரும் அந்த பக்கம் நில்லுங்க. நான் வேலைய முடிச்சிட்டு கூப்பிடறேன்.” எனக் கண்டிப்போடுப் பேசிவிட்டுச் சென்றாள்.
அவளே ஆன்டிக் வகை வளையலைத் தேர்வுச் செய்துவிட்டு, மாப்பிள்ளைக்கும் பிரேஸ்லட் எடுத்து, முடிந்தவரைப் பேசி செய்கூலி சேதாரத்தில் போட்டிருந்த பணத்தைக் குறைத்துக் கட்டிவிட்டு, நகைகளோடு அவர்களிடம் வந்தாள்.
“ஏ புள்ள மிருதங்கம்.. இந்த அண்ணனுக்கு எதுவும் வாங்கலியா?” என மெல்ல சிரிப்புடன் கேட்டான்.
“நீ இந்த தங்கச்சிக்கு என்ன வாங்கின?”என எதிர்கேள்விக் கேட்டாள்.
இந்திரன் அமைதியாக வாய்பொத்திக் கொண்டுத் துணிக்கடைக்குச் சென்றான். கீதன் சிரித்தபடிக் கடை முதலாளியைப் பார்த்து தலையசைத்துச் சிரித்துவிட்டு அவளோடு வெளியே சென்றான்.
அவளுக்கு பிடித்தப் புடவையை அவளையே எடுக்கச் சொன்னான். அவளும் அவளுக்கு பிடித்தபடி குறைவான ஜரிகை இருக்கும் பட்டுப்புடவையை எடுத்தாள்.
“அதுக்குள்ள எடுத்துட்டியா?” ஆச்சரியமாகக் கேட்டான்.
“ம்ம்.. அவளோ தான்..”
“5 நிமிஷம் கூட ஆகல புள்ள.. ஒண்ணும் அவசரம் இல்ல.. பொறுமையா இன்னும் ரெண்டு எடு.” இந்திரனும் கூறினான்.
“இல்ல இந்திரண்ணா. நான் அதிகம் புடவை கட்டமாட்டேன். இதுவே மறுபடியும் எப்ப கட்டுவேனோ? போதும். போலாமா?”
“இதுக்கு பிளவுஸ் தெக்க குடுக்கணும்ல. நம்ம கயல்விழி குடுத்த எடத்துலயே நீயும் குடுத்துரு நல்லா பூ டிசைன் எல்லாம் போட்டு தெச்சி தராங்க. நானே வாங்கிட்டு வந்துடறேன்.” எனக் கூறி கயல்விழிக் கொடுத்த தையற்கடையில் அவளை உள்ளே செல்லக் கூறி இவர்கள் வெளிய விவரம் கூறி முன்பணம் கட்டினர்.
மூவரும் இன்னும் சிறிதுநேரம் கடைத்தெருவில் சுற்றி வேண்டியப் பொருட்களை வாங்கிக்கொண்டு, ஒரு உணவகம் சென்றனர்.
“ம்ம்.. இடம் நல்லா இருக்கு.” எனச் சுற்றிலும் பார்வையைச் செலுத்தியபடி அங்கிருந்த கருங்கல்லில் செய்திருந்த இருக்கையில் அமர்ந்தாள்.
அங்கே புல் வெளியின் மேல் கருங்கல் மேடைகளை அமைத்து, இருக்கையும் செய்திருந்தனர். இடையிலிருக்கும் இடைவெளியில் பெரிய மற்றும் சிறிய விளக்குகள் எல்லாம் நடக்கவும், மேடைக்கு அருகேயும் வெளிச்சம் பாயும்படி வைத்திருந்தனர்.
மெல்லிசை எங்கோ ஓடிக்கொண்டிருந்தது. எதிரே கிரிக்கெட் பார்க்க ஏதுவாக வெள்ளைத் திரையைப் போட்டிருந்தனர். சமயத்தில் படமும் கூட போடுவார்கள் என கீதன் கூறினான்.
“ஃபேமிலி, ஃபிரண்ட்ஸ் ரெண்டுக்குமே இது நல்லா இருக்கும்.“
“டேஸ்ட்டும் இங்க நல்லா இருக்கும். உனக்கு என்ன சொல்லட்டும் மிரு?”
“நீயே சொல்லு.. ஆனா அசைவம் சொல்லு. ரெஸ்ட் ரூம் எந்த பக்கமிருக்கு?” எனக் கேட்டபடி எழுந்தாள்.
“இடது பக்கமா போனா கடைசில இருக்கும்.“
“சரி வந்துடறேன்.” எனக் கூறிவிட்டுச் சென்றாள்.
அவள் உள்ளே செல்லும் போது ஒருவன் அவளைக் கூர்ந்துப் பார்த்தபடி அவளைப் பின்தொடர்ந்தான்.
அவள் வெளியே வந்து அவனைக் கண்டதும் அதிர்ந்து, அவனைக் கடந்துச் செல்ல முனைய, அவன் அவளது கைகளைப் பிடித்திழுத்தான்.