Loading

வெண்மேகமாய் வந்து தாலாட்டவா

 

பதிவு 3

                “என்னங்க இப்படி சொல்லிட்டு போறான்…” என்று கவலை தோய்ந்த முகத்துடனேயே நாச்சியார் கேட்க, மௌனமாய் நிற்கத்தான் ரெங்கநாதனால் முடிந்தது… 

 

                 “என்னங்க எதுவுமே பேசாம அமைதியா நிக்குறிங்க? அந்த பொண்ணு வீட்டுல வேற போயிட்டு தகவல் சொல்லுறோம்னு சொல்லிப்புட்டு வந்துட்டோமே… அந்த புள்ளயப் போயி புடிக்கலைன்னு சொன்னா யாராச்சும் நம்புவாகளா?…” என்று மேலும் புலம்ப ஆரம்பிக்க,

 

                     “கொஞ்ச நேரம் பொலம்பாம இரு நாச்சியா… என்ன பண்ணுறதுன்னு தானே நானும் யோசிச்சுக்குட்டு கெடக்கேன்… நாலஞ்சு வருசம் போனா சரியாயிடுவான் எல்லாத்தையும் மறந்துடுவான்னு நெனச்சேன்… ஆனா இவன் என்னடான்னா இன்னும் எதையோ மறக்காம மனசுக்குள்ளயே போட்டு மருகிக்கிட்டு கெடக்கான்… ப்ச்…” என்று நெற்றியை தேய்க்க, நாச்சியாரோ கைகளை பிசைந்துகொண்டு நிற்க, ரெங்கநாதனே மௌனம் கலைத்தார்…

 

                    “கெளம்பி வா… தம்பி பய வீடு வரைக்கும் போயிட்டு வந்துருவோம்… அவன்ங்கிட்ட பேசுனாத்தான் சரியா வரும்… இவன சரிக்கட்ட அவனும் அவன் பொஞ்சாதியும் தான் சரி…” என்றுவிட்டு செல்ல, கணவன் சொல்வதும் சரி தான் என்று நாச்சியாரும் கிளம்பிவிட்டார்… 

 

                    இவர்கள் இருவரும் இப்படியொரு முடிவெடுத்து செல்ல, பெற்றவர்களிடத்தில் கோபமாய் வார்த்தைகளை உதிர்த்துவிட்டு அறைக்குள் நுழைந்து தாழிட்டவனோ வழமை போலவே தனக்குள்ளாகவே மருகிக்கொண்டிருந்தான்…

 

                ‘என்ன நெனச்சுட்டு இருக்காங்க இவங்க எல்லாரும்? எல்லாத்தையும் ஒடனே மறந்திடுவேன்னு எப்படி நெனச்சாங்க? சட்டுன்னு மறந்துட்டு எனக்கான வாழ்க்கைய வாழணும்னா எப்படி முடியும்? எங்கடி போன நீ? என்ன விட்டுட்டு போக உன்னால எப்படி முடிஞ்சது? உன்ன பாக்கணும் போல இருக்குடி… உன் குரல கேட்கணும் போல இருக்குடி..’ என்று தனக்குள்ளாகவே புலம்பிக்கொண்டிருந்தவன் என்ன நினைத்தானோ! விழிகளை அங்கும் இங்கும் சுழலவிட்டவனாய், அவசரமாய் போய் பீரோவை திறந்து உள்ளேயிருந்து அப்பொருளை எடுத்தான்…

 

                  அறைக்குள் நுழைந்த இரு ஆடவர்களையும் பின்தொடர்ந்து வந்த மேகாவதியும் தேன்மொழியும் எதுவும் பேசாமல் ஆளுக்கொரு கதவின் ஓரமாய் நின்றபடி அவ்விருவரையும் கவனிக்க ஆரம்பித்திருந்தனர்… 

 

                  “என்னடா இது அஞ்சாறு வருசமா பூட்டியே கெடக்குற ரூமுன்னு சொன்னாங்க, இங்க பாத்தா கதவென்னமோ தொறந்து கிடக்கு…” என்று ஒருவன் சொல்ல, மற்றொருவனோ!

 

                     “ஒருவேள நாம வருவோம்னு தொறந்து வச்சுருப்பாங்க போலண்ணே…” என்க, அமைதியாய் அறைக்குள்ளேயே சுற்றி சுற்றி வந்தான் முதலாமவன்… அங்கிருந்த கட்டில் அதன் மேல் கிடந்த மெத்தை, கப்போர்ட், டேபிள் ட்ராயர் என அனைத்தையும் தட்டி தட்டி, திறந்து பார்த்தபடி நின்றுவிட்டு பாத்ரூம் கதவையும் திறந்து உள்ளே ஒரு பார்வை பார்த்துவிட்டு நின்றனர்…

 

                    “என்னண்ணே எல்லாமே தொடச்சு வச்சாப்புல சுத்தமா கெடக்கு…”

என்றவனின் பேச்சை கேட்டுவிட்டு மேகாவும் தேனுவும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்து கொண்டனர்…

 

                     “எனக்கும் அதான்டா புரியல… யூஸ் பண்ணாத ரூம் எப்படி சுத்தமா கெடக்கும்? தூசி நூலாம்படையின்னு ஒன்னத்தையுமே காணலையே… கதவ தொறந்துவிட்டவைங்க சுத்தம் பண்ணிட்டு போயிருப்பாங்களோ!…”

 

                       “நானும் அப்படி தாண்ணே நெனைக்குறேன்…”

 

                       “என்னவோடா! நமக்கு வேல மிச்சம்… ஆமா மத்த ரூமையெல்லா பயலுவல விட்டு பாக்க சொல்லு… ஒப்புக்கு ஒருக்கா தூசி அடிச்சு விட்டுப்புட்டு பளிச்சுன்னு பெயிண்ட அடிச்சு விட்டுடலாம்… இன்னும் ஒருவாரத்துல லீவு முடிஞ்சு புள்ளைங்க எல்லா வந்துருங்கலாம்… வெரசா வேலைய பாக்கணும்…” என்று பேசியபடியே அறையை விட்டு வெளியேற, தலையை தலையை அசைத்தபடியே மற்றொருவனும் பின்னேயே செல்ல, அவர்களின் பேச்சுவார்த்தைகளை வைத்தே என்ன தான் நடக்கிறது என்பது அரூபமாய் நின்றிருந்த இருவருக்கும் தெளிவாக புரிந்துவிட்டது…

 

                  “ஷோ… ஒரு வழியா இந்த ப்ளாக்க திரும்பி தெறக்க போறாய்ங்க போல தேனு…” என்று கைகளை கட்டியபடி மேகா சொல்ல, 

 

                   “நானும் அப்படிதான்ம்ள நெனைக்கிறேன்… ஆனா எனக்கொரு டவுட்டு மேகா.. இத்தினி வருசமா சும்மாவே கெடந்த ப்ளாக்க இப்ப எப்புடி தெறப்பாய்ங்க… ம்ம்ம்… எங்கேயோ இடிக்குதே… வெயிட் அண்ட் வாட்ச் அப்டி போயிட்டு இப்டி வந்துடுறேன்…” என்று சட்டென்று மறைந்துவிட, இவளோ சிந்தனைவயப்பட்டவளாகவே சிறிதுநேரம் வரைக்கும் நின்றிருந்தாள்…

 

                    தேனு சொன்னதைப் போலவே சிலநொடிகளில் அப்படி போய்விட்டு இப்படி சட்டென்று வந்து நின்றவள் மூச்சு வாங்க,

 

                   “மேகா மேகா சேதி கேட்டியா? இந்த ப்ளாக்க திரும்பவும் தொறக்க போறாய்ங்களாம்… ஒங்கப்பாரு காலேஜ கைமாத்திப்புட்டாராம்…” என்க, மேகாவிற்கோ அதிர்ச்சியாய் ஆனது…

 

                   “வாட்? என்ன சொல்லுற நீயி?… நல்லா விசாரிச்சுப்புட்டு தான் வந்தியா?… யாரக்கேட்டு கைமாத்துனாரு? இவர் இஷ்டத்துக்கு வித்துட்டு போக இதென்ன அவரு சம்பாத்தியத்துல உருவானதா?.. அந்தாள…”என்று முகமெல்லாம் வெளிறிப்போய் கோபமாய் கேட்டு வைக்க, எதிரே நின்றவளுக்கோ திக்கென்றானது… அவசரமாய் அவள் தோளில் கைவைத்து உலுக்கியவள்,

 

                  “இந்தாப்ள எதுக்கு இப்ப டென்சன் ஆகி என்னையும் சேத்து சுட்டுப்பொசுக்குற? சும்மாவே கொஞ்ச நேரம் விட்டா உடம்பெல்லா கருகுன வாடை வர ஆரம்பிச்சுடுது… நீ வேற கோபத்துல இன்னும் இன்னும் எரிக்குற?…” என்று அங்கலாய்க்க, அவள் முன் நின்றவளின் முகமானது கொஞ்சம் கொஞ்சமாய் இயல்பு நிலைக்கு மாற ஆரம்பித்தது…

 

        இவன் யாரோ இவன் யாரோ வந்தது எதற்காக?…..

சிரிக்கின்றான் ரசிக்கின்றான் 

எனக்கே எனக்காக….

என்னாச்சு எனக்கே தெரியவில்லை.

என் மூச்சின் காய்ச்சல் குறையவில்லை…

அட என்ன இது என்ன இது 

இப்படி மாட்டிக்கொண்டேன்….

இது பிடிக்கிறதா பிடிக்கலையா யாரிடம் கேட்டு சொல்வேன்? 

 

செவிகளில் துள்ளலான இசையோடு கேட்ட அவனவளின் தேன்மதுரக் குரலில் அதுநேரமும் இருந்த மனபாரம் யாவும் கொஞ்சம் கொஞ்சமாய் கரைய ஆரம்பித்தது விக்ரமாதித்யனுக்கு… இமைமூடி படிக்கையில் இரு கைகளையும் விரித்தபடி கிடந்தவனின் செவிகளில் அவள் குரல் விடாது ஒலிக்க, இதழோரம் அரும்பிய புன்னகையோடு சேர்த்து, இமையோரம் துளிர்த்த நீரும் அவனவளை நினைவு படுத்தியபடியே தான் இருந்தது…

 

                       மனதிற்கினியவளை மறந்திருந்தால் தானே நினைப்பதற்கு? கடந்த சில வருடங்களுக்கு முன்புவரை எவராவது ஒருகாலத்தில் நீ இப்படியெல்லாம் இருப்பாய் என்று சொல்லியிருந்தால்! அவர்களை முட்டாள்களை பார்ப்பது போல தான் பார்த்து வைத்திருப்பான்… ஆனால் இன்று அத்தகைய நிலையில் இருப்பதை நினைக்க நினைக்க மனம் சுகமாய் ஒரு வலியை உணரவும் செய்தது… காத்திருப்பில் எவ்வளவு தான் வலி இருந்தாலும் அதில் உள்ள சுகமதனை அனுபவிப்பவர்களால் மட்டுமே உணர முடியும்.. அதே சுகத்தை தான் தற்பொழுது விக்ரமும் அனுபவித்துக் கொண்டிருந்தான்… ஆனால் அந்த காத்திருப்பும் சுகமும் எதற்காக என்பதில் தான் கொஞ்சம் அதிகமாய் வலித்தது…

 

                      இமையோரம் துளிர்த்த கண்ணீரை சுட்டுவிரல் கொண்டு சுண்டி எறிந்தவன், ஹேட்போனை அவிழ்க்காமலேயே மறுபடியும் முதலில் இருந்து பாடலை சப்தமாய் ஒலிக்கவிட, மனமானது அவள் குரலோடு சேர்த்து அவள் இந்த பாடலை பாடிய தருணத்திற்கு போய் நின்றது…

 

                   மேகநாதன் கல்வி நிறுவனங்களில் மேகநாதன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி அண்ட் மேகநாதன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் மிகவும் முக்கியமான பிரசித்தி பெற்ற கல்வி நிறுவனமாகும்… மேலாண்மை பிரிவில் பி.ஹெச்.டி ரிசர்ச் ஸ்காலராக சேர்ந்திருந்தான்… கல்லூரியில் தன் பணியை துவங்கி  ஒன்றிரண்டு வாரங்கள் தான் கடந்திருக்கும், அன்றைய தினம் கல்லூரியே திருவிழாக் கோலம் பூண்டு காட்சியளித்தது… 

 

                    கல்லூரிக்குள் நுழைந்து தனது பைக்கை பார்க்கிங்கில் போடும் பொழுதே, ஒரு ஆடவனின் குரல் ஒலித்து வைத்தது மெல்லிய இசையினுடனே… 

 

  வேறென்ன வேறென்ன வேண்டும்

ஒரு முறை சொன்னால் போதும்

நிலவையும் உந்தன் கால்மிதியாய் வைப்பேனே வைப்பேனே….

சொல்லவும் கூட வேண்டாம் கண்ணிமைத்தாலே போதும்

கேள்விகளின்றி உயிரையும் நான் தருவேனே….

ஓ ஓ ஓ ..

ஓ மௌனம் மௌனம் மௌனம் மௌனமேன் மௌனமேன்

வேறென்ன வேண்டும் வேண்டும் செய்கிறேன் செய்கிறேன்… 

 

என்ற ஆடவனின் குரலில் இவனது இதழுகள் புன்னகையையே சூடிக்கொண்டது… ஏதோ புதிதாய் பாடப் பழகும் இளைஞன் போல, வார்த்தைகளும் சரி குரலும் சரி ஏனோதானோவென்று இருக்க மாணவர்களின் கரகோஷமும், கூச்சலும், அதிகப்படியான இரைச்சலை கொடுக்க, அவனுக்குள்ளும் கல்லூரி கால நினைவு வந்து சென்றது… எத்தனை பேரை மேடையில் ஏறி ஒழுங்காக பாடவில்லையென கலாய்த்து தள்ளியிருக்கிறோம் என்று நினைத்து புன்னகையுடனே தனது டிபார்ட்மெண்டை நோக்கி நடக்க, அடுத்ததாய் கேட்ட பெண்ணின் குரல் அவனை அசைய விடாமல் அப்படியே நிறுத்தியிருந்தது…

     

இவன் யாரோ இவன் யாரோ வந்தது எதற்காக?…..

சிரிக்கின்றான் ரசிக்கின்றான் 

எனக்கே எனக்காக….

என்னாச்சு எனக்கே தெரியவில்லை.

என் மூச்சின் காய்ச்சல் குறையவில்லை…

அட என்ன இது என்ன இது 

இப்படி மாட்டிக்கொண்டேன்….

இது பிடிக்கிறதா பிடிக்கலையா யாரிடம் கேட்டு சொல்வேன்? 

 

என்ற பெண்ணின் குரல் தொடர்ந்து ஒலித்தபடி இருக்க, சிலையாய் இவனை

சமைந்து நிற்கவைத்திருந்தது…, அத்துனை நேரமும் கேட்ட கூச்சலும் ஆரவாரமும் சட்டென்று சுவிட்ச் போட்டதை போல மொத்தமாய் அடங்க, அந்த குரலுக்கு உரிமையானவளை ஒருமுறை பார்த்துவிடுவோமே என்று நடக்க ஆரம்பித்தான் ஆடிட்டோரியத்தை நோக்கி…

 

                   செவிகளில் அவள் குரலிலும், முன்னே கேட்ட ஆடவனின் குரலிலும் பாடல் விடாமல் ஒலித்தபடியே இருக்க, இவனின் நடையின் வேகம் அதிகமாகியது… ஆனால் அவனது நேரமோ என்னவோ அவன் ஆடிட்டோரிய வாயிலில் போய் நின்ற பொழுது பாடல் முடிந்து பாடியவர்களும் இறங்கி சென்றிருந்தனர்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
5
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    7 Comments

    1. Archana

      பாட்டு பாடினது ஒரு வேலை அந்த மேகாவோ🤔🤔🤔 ஆமா இந்த மேகா&தேனு ஏன் இறந்தாங்க

    2. Sangusakkara vedi

      1. கொஞ்ச வருசமாவே பேய்ய திகிலா சினிமால கூட காட்டுறதில்ல. கதைகள்ல இப்ப தான் முதல்ல பார்க்குறேன். அதுலயும் பேய் பண்ற காமெடியெல்லாம் அல்டிமேட்டா இருக்கு.

      2. கதை நல்லா ஃப்லோவா போகுது.

      3. நிறைய கதாபாத்திரங்களுக்கு பின்னால் நிறைய வலி இருக்குன்னு தோணுது. எல்லாரோட உணர்வுகளையும் ரொம்ப நல்லாவே புருஞ்சுக்க முடியுது.

      4. உங்க எழுத்து நடை அழகா இருக்கு. புள்ளி , கமா எவ்லாம் பக்கா.

      குறை

      1. யூடி ரெகுலரா இல்லங்குறத தவிர வேற நெகடிவ் கமெண்ட் இல்லப்பா…

    3. Oosi Pattaasu

      ‘வெண்மேகமாய் வந்து தாலாட்டவா’ ஒரு லவ் கம் ஹாரர் ஸ்டோரி.
      இதோட பாசிட்டிவ்ஸ்,
      1. மேகா, தேனுவ ஸ்டார்ட்டிங்ல நார்மல் பொண்ணுங்க மாதிரி காட்டிட்டு, அப்புறம் பேய்னு சொன்னது, அந்த சஸ்பென்ஸ் நல்லாருக்கு. அதுலயும் இவங்க ரெண்டு பேரோட ட்ரான்ஸ்ஃபர்மேஷன், ப்பா… செம.
      2.ஹீரோவோட கேரக்டர் நல்லாருக்கு. இன்னும் அவன் லவ் பண்ண பொண்ணையே நெனைச்சுட்டு இருக்க விதம் சூப்பர்.
      3. மேகமித்ராவோட படபட பேச்சு செமையா இருக்கு. மத்த டையலாக்ஸும் சூப்பரா இருக்கு.
      நெகட்டிவ்ஸ்னா,
      1. ஒரு சில டைப்பிங் எரர்ஸ் இருக்குப்பா.
      2.பேயா இருந்தாலும் பயம் காட்டாம, இந்த பிள்ளைக ரெண்டும் காமெடி பண்ணுது. போகப் போக அப்டியே டெரரா மாத்துங்க…😜😜😜
      3.மேகா, தேனு என்ன பண்றாங்கன்னுப் புரியல. பட், அடுத்து வர்ற எபிஸ்ல புரியும்னு நெனைக்கிறேன்.
      மொத்தத்துல இந்த ஸ்டோரி, செமையா இருக்கு. ஃப்ளாஷ்பேக் வர வர இன்னும் நல்லாப் புரியும்னு நெனைக்கிறேன்.

    4. கதை மாந்தர்கள் மனதை கொள்ளை கொண்டு விட்டனர். மனதிற்கு ஆர்வத்தைத் தூண்டும் திகிலான கதைக்களம். சிறப்பான எழுத்து நடை. மேலும் படைப்புகளை தொடர வாழ்த்துகள்.

    5. hani hani

      சூப்பர்.. அமானுஷ்யமும் காதலும் கலந்த கதை.

      இன்னும் கொஞ்சம் ஒரு சீன்க்கும் இன்னொரு சீன்க்கும் வித்தியாசம் காட்டுங்க.

      தொடர்ந்து வர்ரதுல குழப்பா இருக்கு.

      அடுத்த எபிசோட் சீக்கிரமா போடுங்க. ரொம்ப நாள் ஆகிடுச்சு

      உரையாடலையும் கொஞ்சம் விளக்கமா காட்டுங்க. சில நேரம் யாரு பேசுறாங்கனே புரியல

      வாழ்த்துக்கள் ❤️

    6. Oosi Pattaasu

      மேகாவும், தேனுவும் இருப்பாங்க பேயா, கோவம் வந்துச்சுன்னா எரிப்பாங்க தீயா…

    7. kanmani raj

      மேகாவும் தேனும் ஆகிட்டாங்க பேயா, அதனாலதான் விக்ரம் நிற்கறானா தனியா…??