Loading

அத்தியாயம் 13:

“எனக்கு ஹிந்தி எல்லாம் தெரியாது. என்னால சென்னையை விட்டு எங்கயும் வரமுடியாது.” என்று அக்ஷிதா ஒற்றைக்காலில் நின்றாள்.

“ஹிந்தியா? அரைவேக்காடு! ஆந்திரால தெலுங்கு தான் பேசுவாங்க.” என சஜித் அவளை முறைத்திட, “எது வேணாலும் பேசிட்டு போகட்டும். ஆனா என்னால வர முடியாது.” என்று வீம்பு பிடித்தாள்.

“நீ வர்றியா வரலையான்னு இங்க யாரும் உன்கிட்ட பெர்மிஷன் கேட்கல. வந்து தான் ஆகணும். இல்லன்னா, நாய்க்கு தான் இரையாவ. நமக்கு தான் நாய்க்கறி பிடிக்காது, ஆனா, நாய்க்கு மனுஷக்கறி அதுவும் உன்ன மாதிரி யங் கேர்ளோட கறி ரொம்ப பிடிக்குமாம்” என்றான் அசட்டையாக.

அவனை மூச்சு வாங்க முறைத்து வைத்த அக்ஷிதா, “நான் மட்டும் நாயா பிறந்துருந்தா, உன்ன அப்டியே கடிச்சு சாப்பிட்டுருப்பேன். லன்சுக்கு ஃபுல் மீல்ஸ் ஆவது கிடைச்சுருக்கும்” என்றிட,

அவனுக்கோ, பல அர்த்தம் அதில் புரிந்ததில், புருவம் உயர்த்தி அர்த்தப்பார்வை வீசினான்.

“சாரி எனக்கு எங்கேஜ்மெண்ட் ஆகிடுச்சு. சோ, டிஃபனா கூட என்னை சாப்பிட முடியாது அக்ஷிதா.” என பாவம் போல கூறியவன், அவளை நக்கலடித்து விட்டு நகர, ‘நான் என்ன பேசுறேன். இந்த லூசு என்ன பேசுது?’ எனப் புரியாமல் தலையை சொறிந்தாள்.

💙💙

கிளம்பும் நேரத்திற்குள்ளாவது, தப்பிக்க வழி கிடைக்குமா என ஆராய்ந்து தளர்ந்து போனாள் உத்ஷவி.

“இதே ட்ரெஸ்ஸோட என்னால வர முடியாது. நான் வீட்டுக்கு போய் என் திங்க்ஸ எடுத்துட்டு வரேன்.” என்றதில்,

“போற வழியில வேற ட்ரெஸ் வாங்கிக்கலாம். கம் ஃபாஸ்ட்.” என்ற ஸ்வரூப், விறுவிறுவென வெளியில் நடக்க,

“சரி, பஸ் எத்தனை மணிக்குன்னு சொல்லு. அதுக்குள்ள நான் கடைல போய் ட்ரெஸ் வாங்கிட்டு வரேன்.” என்று சமத்தாக கூறினாள்.

‘பஸ்ஸா?’ என ஸ்வரூப் விழிக்க, “அப்போ ட்ரெயினா? எனக்கு ஜன்னல் சீட் வேணாம்.” என வேகமாக மறுத்திட, ஊஃப் என பெருமூச்சு விட்டான் ஸ்வரூப்.

“என்ன ஜன்னல் சீட் போட்டுட்டியா? சரி நீயே அங்க உட்காந்துக்க. நான் விஹா கூட உட்காந்துக்குறேன்.” எனத் தலையசைத்தவள், ‘அப்படியே ட்ரைன்ல இருந்து குதிச்சு ஓடிடணும்’ எனத் திட்டமிட்டுக்கொண்டாள்.

அவளது எண்ணத்தை அழகாய் ஊடுருவிய ஸ்வரூப் அவ்தேஷ், “வாய்ப்பில்லைடி திருடி.” என அவளது மைண்ட் வாய்சிற்கு பதில் சொல்லி விட்டுப் போக, உத்ஷவிப் பல்லைக்கடித்தாள்.

💙💙

“என்னடா நினைச்சுட்டு இருக்கீங்க… பயம் காட்டுனா பயந்துடுவோமா? சும்மா உங்க இஷ்டத்துக்கு எங்களை ஆட வைக்காதீங்க.” என்று விஹானா, ஜோஷித்திடம் கத்திக் கொண்டிருந்தாள்.

அவனோ, சாவகாசமாக சிகரெட்டை புகைத்துக்கொண்டிருக்க, இடை இடையே இருமியவள், “இந்த கருமம் வேற!” என முகத்தை அருவருப்பாய் வைத்து விட்டு, “எங்களை விட்டுடு ஜோஷ்.” என்றாள் கண்டிப்பாக.

ஜோஷித் வில்லங்கமானச் சின்ன சிரிப்பை உதித்து விட்டு, “எங்க இஷ்டத்துக்கு ஆட மாட்டன்னா, உன் பாஸ் ராகேஷோட இஷ்டத்துக்கு மட்டும் ஆடுவியா?” எனக் கேட்டதில், அவள் தடுமாறினாள்.

“உன் கூட இருக்குறதுல, அக்ஷிதா பிக்பாக்கெட் கேஸ். உத்ஷவி, எதை வேணாலும் திருடுற கேஸ். நீ…?” என நிறுத்தி விட்டு, அவளைப் பார்க்க, அவளுக்கு உள்ளுக்குள் உதறியது.

“ரெண்டு பேரையும் ஃப்ரெண்டா நடிச்சு வேவு பார்த்து ஏமாத்துற கேஸ்? ரைட்?” என இழிவுடன் கேட்க, விஹானா அதிர்ந்து விட்டாள்.

“இல்ல இல்ல. நான் ஏமாத்தல. நீ தேவையில்லாம என்மேல பழி போடுற.” என்றாள் வேகமாக.

“அஹான்? அப்போ நீ, ராகேஷோட பி. ஏ இல்ல. அவன் கூட சேர்ந்து, திருட்டுத்தனம் பண்ணல.” என எகத்தாளத்துடன் கேட்க, விஹானாவிற்கு விழி பிதுங்கியது.

“ஒண்ணுமே விசாரிக்காம, உங்களை கூட வச்சு இருக்கோம்ன்னு எங்களை மட்டமா எடை போட்டுட்டியோ?” என்ற ஜோஷித்தின் கேள்வியில் பெண்ணவள் தான் பேச்சற்று போனாள்.

அவளது அமைதியில் ஆடவனுக்கு கோபம் பெருக்கெடுத்தது. சற்று நேரத்திற்கு முன்பு தான், மூன்று பெண்களின் பின்புலத்தை விசாரிக்க செய்திருந்தான் ஸ்வரூப். அதில் மற்ற இருவரைப் பற்றி உருப்படியான தகவல்கள் எதுவும் கிடைக்காமல் போக, விஹானாவைப் பற்றி மட்டுமே சில தகவல்கள் கிடைத்தது.

“பதில் சொல்லுடி… திருட்டுத்தனத்தோட ஏமாத்து வேலையும் பார்த்துட்டு இருக்கியா? ராகேஷ்க்கும் உனக்கும் என்ன சம்பந்தம்?” என்றான் விழிகள் சிவக்க.

அவன் காட்டிய கடுமை மனதை சில்லிட வைக்க, “ஒரு சம்பந்தமும் இல்ல. அவரு என் பாஸ் அவ்ளோ தான்!” என்றதும், அவளை அறையக் கையை ஓங்கினான் ஜோஷித்.

அதில் அறையை வாங்கும் விதமாக கண்களை இறுக்கி மூடி நின்று கொண்டவள், நொடிகள் கடந்த பிறகே கண்ணை மெல்லத் திறந்தாள்.

அவள் நின்ற தொனியில், அடித்து விஷயத்தை வாங்க இயலாமல், ஆத்திரம் சூழ பார்வையால் எரித்தவன், “உன் ப்ரெண்ட்ஸ்க்கு இன்னும் உன்னை பத்தி தெரியாதுல. அவளுங்களை கூப்பிட்டு சொல்லட்டா?” என வன்மத்துடன் கேட்க, விஹானாப் பதறினாள்.

“வேணாம் ஜோஷ். ஷவிக்கு விஷயம் தெரிஞ்சா, ரொம்ப ரூடா நடந்துப்பா.” என்றும் அவன் வீம்பாக நிற்க,

கண்ணை முடித் திறந்து தன்னை நிலைப்படுத்தியவள், “ராகேஷோட பி. ஏ நான் தான். அவன் சில பெரிய புள்ளிங்களோட முக்கிய டாக்குமெண்ட்ஸ், சொத்து விவரம்ன்னு எல்லாத்தையும் திருடி, ஏதோ பண்ணுவான். என்ன பண்ணுவான்னு எனக்கும் தெரியாது.

திடீர்ன்னு ஒரு நாள், ஒரு பெரிய டாஸ்க் இருக்கு. அதுக்கு ரெண்டு பேரை சூஸ் பண்ணிருக்கேன். ஆனா, அவங்களுக்கே சந்தேகம் வராத மாதிரி, கொஞ்ச நாள் ட்ரெயினிங் குடுத்துட்டு, அப்பறம், அந்த டாஸ்கை கம்ப்ளீட் பண்ண வைக்கணும்ன்னு சொன்னான். அப்போ தான் ஷவியும், அக்ஷியும் எனக்கு பழக்கமானங்க. எங்களை ஒரே வீட்ல இருக்க வச்சு, அப்போ அப்போ ப்ராஜக்ட் குடுப்பான். கடைசியா எங்களுக்கு குடுத்தது தான், உங்க வீட்ல திருட சொல்லி குடுத்த டாஸ்க். இதை எடுத்து கொடுத்ததும், மறுபடியும் நாங்க மூணு பேரும் பார்த்துக்கவே கூடாதுன்னு சொன்னான். ஷவியும் அக்ஷியும் வேலையை கரெக்ட்டா தான் பண்றங்களான்னு பார்க்க தான் என்னையும் அவங்க கூடவே இருக்க சொன்னான்.

ஆனா, உங்ககிட்ட மாட்டுனதுக்கு அப்பறம் ஏன் இப்படி வியர்டா பிஹேவ் பண்ணி, செத்துப்போனான்னு எனக்குத் தெரியல.” என முகத்தைச் சுருக்கி விளக்கம் கொடுக்க, அவனோ சலனமின்றி அவளை ஏறிட்டான்.

“அவன்கிட்ட எத்தனை வருஷமா வேலை பாக்குற?” எனக் கேட்டதில்,

“அஞ்சு வருஷம் இருக்கும்.” என்றாள் முணுமுணுப்பாக.

“அஞ்சு வருஷமா அவன்கூட வேலை பார்த்தும், அவனோட அடுத்த மூவ் என்ன, அவனோட டார்கெட் என்னன்னு தெரியாம தான் இருக்கியா?” என நம்பாத தொனியில் கேட்க,

“சத்தியமா அதான் உண்மை.  அவன் என்கிட்ட அப்போ அப்போ தான் என்ன செய்யணும்ன்னு சொல்லுவான். எதிர்கேள்வி கேட்டா ரொம்ப கோபப்படுவான். அதனால, நான் எதுவும் கேட்குறது இல்ல.” என கையைப் பிசைந்து கொண்டு கூறியதில்,

“இப்பவும் நான் உன்னை முழுசா நம்பல. மவளே! எதையாவது மறைச்சன்னு மட்டும் தெரிய வந்துச்சு, கொன்னே போட்டுடுவேன்.” என்று மிரட்டிட,  அதனைக் கண்டுகொள்ளாதவள், “இதை ஷவி, அக்ஷிகிட்ட சொல்லாத ப்ளீஸ். தெரிஞ்சா, எப்படி ரியாக்ட் பண்ணுவாங்கன்னு தெரியல.” என சமரசம் பேசினாள்.

“நீ கூட இருந்தே வேவு பார்த்ததை உன் ப்ரெண்ட்ஸ்கிட்ட சொல்ல கூடாதுன்னா, அவளுங்களை கன்வின்ஸ் பண்ணி, நாங்க என்ன சொன்னாலும் பண்ண வைக்கணும்.” என டீல் பேசிட,

“ம்ம்க்கும், இல்லன்னா மட்டும் விட்டுடுவீங்களாக்கும்.” என நொடித்தவள், ‘எப்படி வந்து சிக்கி இருக்க பார்த்தியா’ எனத் தன்னையே மானசீகமாக அறைந்து கொண்டாள்.

💙💙

மூன்று ஆடவர்களும், தனித் தனியாக காரில் ஏறி, அவர்களுடன் புது அஸிஸ்டன்ஸையும் இணைத்துக் கொள்ள, உத்ஷவி, “ஆந்திராவுக்கு நம்ம கார்லே போக போறோமா?” எனக் கேட்டாள் யோசனையுடன்.

அவளுக்குப் பதில் சொல்லாமல் முறைத்து வைத்த ஸ்வரூப், சில நிமிட பயணத்தில் ஒரு மிகப்பெரிய காலி இடத்தில் காரை நிறுத்தினான். அவர்கள் பின்னே வந்த, சஜித் மற்றும் ஜோஷித்தும் அவனுக்கு பின்னால் காரை நிறுத்தி விட்டு இறங்க,

உத்ஷவி, அவர்களைப் பார்த்து, “எல்லாரும் ஒரே இடத்துக்கு தான வர்றோம். அப்பறம் ஏன்டா, அரசியல்வாதி மாதிரி, ஆளுக்கொரு கார்ல வர்றீங்க.” எனத் தலையில் அடித்துக் கொண்டாள்.

“கார் வச்சு இருக்கானுங்களாம் டார்ல்ஸ்… அதான் அலப்பறை பண்றானுங்க.” என அக்ஷிதா நக்கலடிக்க,

அந்நேரம், அவர்களது பிரைவேட் ஜெட் ஒன்று, தூரத்தில் தரையிறங்கியது.

விஹானா விழி விரித்து, “நம்ம ஏர்போர்ட்க்கு வந்து இருக்கோமா?” என சுற்றி முற்றி பார்த்து விட்டு, “ஆனா, செக்கிங்கே பண்ணலையே” என்று குழம்பினாள்.

உத்ஷவி, “என்கிட்ட பாஸ்போர்ட்டே இல்ல. ரொம்ப சாரி டைனோசர். உன்கூட வந்து சேவையாற்றணும்ன்னு எனக்கும் ஆசை தான். பட், ப்ராக்டிக்கலி இது நடக்காது. வாங்க டார்ல்ஸ் கிளம்பலாம். சார்ங்க மூணு பேரும் ஆந்திராவை சுத்தி பார்த்துட்டு வரட்டும்.” என நடையைக் கட்ட, அவளது முடியைப் பற்றி இழுத்த ஸ்வரூப்,

“எங்கடி நைசா நழுவுற. ஒழுங்கா வந்து ஏறு.” எனத் தரதரவென இழுத்துச் சென்றான்.

‘இதுல இருந்து குதிச்சு கூட தப்பிக்க முடியாதே’ என நொந்த உத்ஷவி, முகத்தில் ஏகத்துக்கும் கடுப்பைத் தாங்கி உள்ளே சென்று அமர, அக்ஷிதாவோ, அப்போது தான் அத்தனை பெரிய விமானத்தை முதன் முறை பார்த்ததில், அதில் ஏறாமல், விமானத்தை ஒரு சுற்று சுற்றி வந்தாள்.

சஜித், கடிகாரத்தைப் பார்த்தபடி, “ஏய் என்னடி செய்ற?” எனக் கேட்டதில்,

“இரு காட்ஸில்லா, இது எப்படி இவ்ளோ பெருசா இருக்குன்னு சுத்தி பார்த்துட்டு வரேன். இவ்ளோ பெரிய ஃபிளைட்ட உனக்கு ஓட்டத் தெரியுமா?” என விழிகளை அகல விரித்துக் கேட்க,

“எது? பிளைட் ஓட்டவா?” எனத் திருதிருவென விழித்த சஜித், “லூசே, பிளைட்ட பைலட் தான் ஓட்டணும்.” என்றான்.

“ஓ” என இதழ்களைக் குவித்திட, விஹானா “அப்போ எங்க பாஸ்போர்ட் விசா எல்லாம் யாருகிட்ட இருக்கு. எங்களுக்கே தெரியாம, அதெல்லாம் எடுத்துட்டீங்களா?” என அதிசயமாகக் கேட்க, அவளையும் கண்டு பேயறைந்தது போல விழித்த சஜித், “இங்க இருக்குற நெல்லூருக்கு போறதுக்கு விசாவா. விளங்கிடும்.” என சலித்தபடி, “ஏறி தொலைங்க அறிவுஜீவிங்களா.” என்றான் கடுப்புடன்.

ஜோஷித் தான், “இது பிரைவேட் ஜெட். நாங்க மட்டும் தான் யூஸ் பண்ணுவோம்.” என்றதில், வாயைப் பிளந்த அக்ஷிதா, “தனியா கார் வாங்குற மாதிரி தனியா பிளைட்டும் வாங்கிட்டீங்களா… இதுலயாவது சேர்ந்து வருவீங்களா இல்ல, பின்னாடி இன்னும் ரெண்டு பிளைட்டு வருதா?” என வாரி, இரு ஆண்களையும் கோபப்படுத்த, விஹானா சிரிப்பை அடக்கிக்கொண்டு, அவளுடன் விமானத்தினுள் சென்றாள்.

உத்ஷவி பெண்கள் இருவரையும் தன்னுடனே இருத்திக் கொள்ள, ஆண்கள் மூவரும் ஒவ்வொரு திசையில் அமர்ந்தனர்.

“ச்சே! ட்ரெயின்ல போனா, அப்படியே தப்பிச்சு போய்டலாம்ன்னு நினைச்சா, இவனுங்க அந்தரத்துல பறக்க வைக்கிறானுங்க.” என எரிச்சல் பட, விஹானா மெல்ல எச்சிலை விழுங்கினாள்.

அத்தியாயம் 14

“நீ ஏன் தப்பிச்சு போகணும்ன்னு நினைக்கிற ஷவி?” என விஹானாக் கேட்டதும், நிமிர்ந்து முறைத்தவள்,

“பின்ன, இவனுங்களோட ‘இப்ப எங்க நாம போறோம்… ஆந்திராவுக்கு போறோம். நெல்லூர் உங்க கண்ணுக்கு தெரியுதா’ன்னு டோரா புஜ்ஜி மாதிரி அலைய சொல்றியா? இவனுங்களுக்கு என்ன, பணம் மரத்துல காய்க்குது ஊர் ஊரா சுத்துவானுங்க. நமக்கு அப்படியா. ப்ராஜக்ட் கொடுத்தவன் வேற போய் சேர்ந்துட்டான். இனி, அடுத்து எப்படித் திருடி பொழைக்குறதுன்னு தெரியாம நானே குழம்பிப் போயிருக்கேன்.” என்றாள் கடுகடுப்புடன்.

“நீ ஒண்ணும் கவலைப்படாத டார்ல்ஸ் அப்படி ப்ராஜக்ட் எதுவுமே கிடைக்கலைன்னா, நம்ம கூட்டமா இருக்குற பஸ்ஸுக்குள்ள புகுந்து பிக் பாக்கெட் அடிச்சுடலாம்.” என அக்ஷிதா யோசனைக் கொடுக்க, “போற போக்க பார்த்தா அதை தான் பண்ணனும் போல” என்று முனகினாள் உத்ஷவி.

விஹானா தான், “ஏண்டி இப்படி புலம்புறீங்க. இந்த டிராவல்க்கும், மூணு வேளை சாப்பாட்டுக்கும் நம்மளா செலவு பண்றோம். நம்மளை கூட்டிட்டு போறவனுங்களோட பாடு அது. நம்மளே நினைச்சாலும், ஃபிளைட் டிராவல் எல்லாம் பண்ண முடியாது. ஆயிரத்தெட்டு ரூல்ஸ் போடுவாங்க. இப்ப பாரு, ஃபிரீ ஃபிளைட் டிராவல், ஸ்டேட் விட்டு ஸ்டேட் போய் ஊர் சுத்தி பார்க்க போறோம்ன்னு நினைச்சுக்கோயேன். மிஞ்சிப் போனா, அவனுங்களால நம்மளை என்ன பண்ண முடியும். அடைச்சு தான் வைக்க முடியும். எப்படியும் திங்க, தங்கன்னு எல்லாம் கிடைச்சுடுதுல.” என்று நிதர்சனத்தைக் கூற,

“குட் பாய்ண்ட்” என்று தாடையை நீவினாள் அக்ஷிதா.

உத்ஷவிக்கும் அது சரியென்று பட்டாலும், “எல்லாம் ஓகே தான். ஆனா, ‘மை லைஃப் மை ரூல்ஸ்’ ன்னு என் காட்டுல நான் ராணியா வாழ்ந்துட்டு இருந்தேன். இப்போ, அந்த டைனோசர்க்கு அஸிஸ்டண்ட்டா இருக்க சுத்தமா பிடிக்கல டார்ல்ஸ். எனக்கு ஆர்டர் போட அவன் யாரு? எப்படா, இங்க இருந்து தப்பிச்சு போய், மறுபடியும் தனிமையில இனிமை காணலாம்ன்னு இருக்கு.” என்று கண்ணை மூடி மூச்சை ஆழ இழுத்தவள் அறியவில்லை, இனிமையென அவள் எண்ணுவதெல்லாம், பின்னாளில் துயரமென மாறப்போவதை.

“கேப் கிடைக்கும் போது தப்பிச்சுடலாம் டார்ல்ஸ். இப்போதைக்கு அவனுங்க என்ன சொன்னாலும் தலையாட்டி வைப்போம். வெளில போனாலும் சாப்பாட்டுக்கு சிங்கி தான் அடிக்கணும்.” என்று இருவரையும் ஆக வைத்து விட்டு, நடுங்கிய மனதைத் தனக்குள் அடக்கிக்கொண்டாள்.

அந்த ராகேஷ் தன்னை இப்படி ஒரு நிர்பந்தத்தில் நிற்க வைத்து விட்டுச் செத்துத் தொலைவான் என அவள் கனவிலும் எண்ணவில்லை.

அவனால் பூத்த அழகிய நட்பு, தன்னைப் பற்றி தெரிந்தால் பொசுங்கி விடுமோ என்ற பயமே விஹானாவை உண்மையைக் கூற விடாமல் தடுத்தது.

உண்மைத் தெரிந்தால், உத்ஷவி தன்னைத் துச்சமென எண்ணி, ஒதுக்கி விட்டு சென்று விடுவாள். இப்போது கூட அவளுக்கு ஒரு ஓரத்தில், தங்களால் அவளது பிரைவசி பறிபோன கவலை இருக்கிறது என்று உணர்ந்தே இருந்தாள்.

அக்ஷிதாவோ, ஒரு வளர்ந்த குழந்தை. நிச்சயம் வருந்துவாள். எனப் பலதரப்பட்ட உணர்வுகளால் ஆட்கொள்ளப்பட்டவள், பக்கவாட்டில் அமர்ந்திருந்த ஜோஷித்தை வெறித்தாள்.

“நாசமா போனவன்… என்னை சிக்கல்ல மாட்டி விட்டுட்டு, ஜம்முன்னு ஹெட் போன்ல பாட்டு கேட்டுட்டு வரான்.” எனக் குமுறிட, விமானம் தனது பணியை முடித்துக் கொள்ளும் பொருட்டு, தரையிறங்கியது.

அங்கும் மூன்று கார்கள் வரிசையாக நிற்க, “என்னடி இவனுங்க ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு கார் வச்சுருக்கானுங்க.” என அக்ஷிதா அதிசயிக்க,

“ராஜ பரம்பரைன்னு காட்டுறாங்களாமாம். நம்ம எஸ்கேப் ஆகுறப்ப, ஒரு காரை ஆட்டைய போட்டுட்டு போய்டலாம்” என உத்ஷவி அக்ஷிதாவிடம் கிசுகிசுக்க, அதனை முன்னால் நடந்து சென்ற ஸ்வரூப் கேட்டு விட்டான்.

“அதுக்கு முதல்ல உன்னை எஸ்கேப் ஆக விடணுமே திருடி. எப்ப பார்த்தாலும் திருட்டு புத்தி.” எனக் கடிந்தவன், அவளைக் கடுமையுடன் காரினுள் தள்ளினான்.

காரைக் கிளப்பிய நொடியில், அலைபேசியில் யாருக்கோ அழைத்தவன், காரின் ப்ளூடூத்தில் கனெக்ட் செய்து விட்டு, “நான் கேட்ட விவரம் என்ன ஆச்சு? எந்த கேள்விக்கும் பதில் தெரியலைன்னா, நீ எதுக்கு கலெக்டருக்கு பி. ஏ வா இருக்க. நீ என்ன செய்வியோ எனக்கு தெரியாது. அவ கொஞ்ச நாளா யார் யாரை பார்த்தா, என்ன பிரச்சனைகளை ஹேண்டில் பண்ணுனான்ற எல்லா தகவலும் எனக்கு வந்தாகணும்.” என உறுமினான்.

எதிர்முனையில், “போலீஸும் இந்த கேஸ்ல பெருசா இன்வால்வ் ஆனா மாதிரி தெரியல சார்…” எனத் தயக்கத்துடன் குரல் வெளிப்பட,

“அதெப்படி உங்க ஊர் கலெக்டர் காணாம போய் மூணு நாள் ஆகியும் எந்த ஆக்ஷனும் எடுக்காம இருக்காங்க. நான் யார்கிட்ட பேசணுமோ பேசிக்கிறேன்.” என போனை வைத்தவன், அடுத்ததாக யாருக்கோ போன் செய்ய, ஒரே ரிங்கில் எடுக்கப்பட்டது.

“ஐயா வணக்கம். நான் மினிஸ்டர் மோஹன ரெட்டி பேசுறேன். என்ன நீங்களே போன் பண்ணிருக்கீங்க. எதுவும் முக்கியமான விஷயமா? நம்ம ஆளுங்களை எதுவும் அனுப்பி விடவாய்யா…” எனப் பணிந்து, பதற்றத்துடன் பேசினார் மினிஸ்டர்.

அவர் பேசிய தெலுங்கு மொழி புரியவில்லை என்றாலும், ‘மினிஸ்டர்’ என்ற வார்த்தைப் புரிந்து போக, உத்ஷவி எச்சிலை விழுங்கினாள்.

“ஒண்ணும் தெரியாத மாதிரி என்கிட்டயே நடிக்காதயா. கலெக்டர் நாகவல்லி காணாம போனது உனக்கு தெரியாது அப்படி தான?” எனப் பல்லைக்கடித்து கர்ஜித்தவனின் குரலில், மோஹன ரெட்டிக்குக் குலை நடுங்கியது.

“ஐயோ எனக்கு தெரியுங்கய்யா. அவங்களைத் தேடத் தான், எல்லா ஏற்பாடும் செஞ்சுருக்கேன். மூணு நாளா வலை வீசித் தேடிட்டு தான் இருக்கோம். இன்னைக்குள்ள எப்படியும் கண்டுபிடிச்சுடலாங்கய்யா.” என்றிட,

“இன்னைக்குள்ள அவள் கையில கிடைக்கல, நாளைக்கு நீ மினிஸ்டர் பதவில இருக்க மாட்ட. மைண்ட் இட். அவன் என் ஊர்க்காரப்பொண்ணு. என் மக்கள் மேல கை வச்சா, நான் என்ன செய்வேன்னு தெரியும்ல. ஜாக்கிரதை!” என அவரைக் குதறி விட்டான்.

பசை போல இருந்த இடத்தை விட்டு அசையாமல், அவனது உறுமல் மொழிகளைக் கேட்டுக்கொண்டு வந்த உத்ஷவிக்கு, அடிவயிற்றில் பெரும் பிரளயமே நிகழ்ந்தது.

‘டைம் எடுத்து, பிளான் போட்டு திருட வந்துருக்கலாம். வர வர உன் வேலைல ஒரு டீ டிகாஷனே இல்லடி ஷவி’ எனத் தன்னைத் தானே மானசீகமாக செருப்பால் அடித்துக் கொண்டவள், அவளுக்கு எதிரில் அழகுக்காக தொங்க விடப்பட்டிருந்த சிறிய அளவிலான பார்பி பொம்மையை பார்த்தாள்.

எப்போதும் போல ‘அதை தூக்கிடு’ என அவளது மனசாட்சி குரல் கொடுக்க, ‘இது வேற, நான் இருக்குற நிலைமை தெரியாம, திருட ஐடியா குடுக்குது’ என நொந்தாலும், பழக்கதோஷத்தை விட இயலாமல், ஸ்வரூப் மறுபுறம் திரும்பி இருக்கும் நேரத்தைப் பயன்படுத்தி, அந்தப் பொம்மை எடுத்துக்கொண்டாள்.

கார் நேராக, உயர்தர செவன் ஸ்டார் ஹோட்டல் வாசலில் நிறுத்தப்பட, அத்தனை நேரமும் விதியை நொந்து சஜித்துடன் வந்து கொண்டிருந்த அக்ஷிதா, சாப்பாட்டின் மணம் வரவும், குஷியானாள்.

“நான் இன்னும் சாப்பிடலைன்னு தெரிஞ்சு என்னை ஹோட்டலுக்கு கூட்டிட்டு வந்துருக்க பார்த்தியா. அந்த மனசு தான் சார் கடவுள்!” என சஜித்திற்கு எண்ணத்திலேயே கோவில் கட்டியவளை, ஒரு மாதிரியாகப் பார்த்தவன், “அறிவு கெட்டவளே! உனக்கு சாப்பாடு வாங்கி கொடுக்கத்தான் சென்னைல இருந்து இங்க உன்னை கூட்டிட்டு வந்தேனாக்கும். இறங்குடி.” என்றதில், அவனை முறைத்தவாறே இறங்கினாள்.

விஹானா காரை விட்டு இறங்கும் போதே, மூச்சுக்குத் திணறினாள்.

“மனுஷனாடா நீ. ஒரு சிகரெட் பாக்கெட்டையே காலி பண்ணிருக்க. உங்கிட்ட மூச்சடைச்சு சாகுறதுக்கு, நான் அந்த நாய்ங்ககிட்ட கடிபட்டே செத்துக்குறேன். போடா.” எனத் திரும்பி எதிர்புறம் வேகமாக நடந்தவளின் கையைப் பற்றினான்.

“நாய்க்கிட்ட கடி வாங்க ஏன் அவ்ளோ தூரம் போற சீட்டர். இங்கயே, இன்னும் ரெண்டு வளர்ப்பு நாய்ங்க இருக்கு. நானே கொண்டு போய் விடுறேன்” என்றதில் மிரண்டவள், அவனிடம் இருந்து கையை விடுவித்துக் கொண்டு, “நான் உள்ளேயே போறேன்.” எனத் தப்பித்து ஹோட்டலை நோக்கி ஓடி விட்டாள்.

உத்ஷவி காரை விட்டு இறங்கும் வேளையில், “ஏய் விஷக்கிருமி. திருடுனதை உள்ளேயே வச்சுட்டு இறங்கு.” என்று ஸ்வரூப் முறைக்க,

‘இவனுக்கு எப்படி நான் திருடுறது மட்டும் கரெக்ட்டா தெரியுதோ! இம்சை…’ என எரிச்சலடைந்தவள், “முடியாது போ!” என்று முரண்டு பிடித்தாள்.

“அல்பம்! ஆஃப்டர் ஆல், வொர்த்தே இல்லாத பொம்மையைத் திருடி வச்சுக்கிட்டு வீம்பு பண்ணிட்டு இருக்க. எடுத்த இடத்துல வைடி அதை” என்றான் கண்டிப்பாக.

“வொர்த் இல்லாத பொருளை கூட உனக்கு விட மனசில்லை தான. என்னால வைக்க முடியாது!” என்று பிடிவாதம் செய்தவாறு இறங்கியவளை, விசித்திரமாகப் பார்த்தவன், அவனும் இறங்கி, “உத்ஷவி என்னை கோபப்படுத்தாத. ஒழுங்கா திருடுனதை குடுத்துடு.” என்றவனுக்கு ஏனோ ஆத்திரம் மிகுந்து கொண்டே சென்றது.

அவள் திருடுவது அவனுக்குப் பிடிக்கவில்லை. அதனை அப்பட்டமாக அவன் முகத்தில் காட்டி விட, “முடியாது முடியவே முடியாது.” என அவள் மறுக்க, நடப்பதை புரிந்து கொண்ட விஹானா தான், “அவன்கிட்ட ஏண்டி முரண்டு பிடிச்சுட்டு இருக்க. குடுத்துடேன்.” என பரிதாபமாகக் கூற, அவள் மசியவே இல்லை.

அக்ஷிதா தான், ஸ்வரூப்பின் கோப முகத்தைக் கண்டு விட்டு, “அவளுக்கு கிளெப்டோமேனியான்னு ஒரு டிசார்டர் இருக்கு ஸ்வரூப். இப்படி தான் அவளுக்குத் தேவையே இல்லாத பொருளா இருந்தா கூட திருடி வச்சுப்பா.” என்றதும், ஜோஷித், “இது என்ன மேனியா? புதுசா இருக்கு.” என்று புரியாமல் பார்த்தான்.

சஜித்தோ, “ம்ம்க்கும், பண்ற திருட்டு வேலைக்கு இவளுகளே ஒரு பேர் வச்சுருக்காளுங்க.” என மட்டமாகப் பேச,

விஹானா, “அப்படி ஒன்னும் பேர் வச்சுக்க வேண்டிய அவசியம் இல்ல சஜித். திருடிங்கற பேரே எங்களுக்கு நல்லா தான் இருக்கு.” என்று காட்டத்துடன் கூறி விட்டு, “அவளுக்கு உண்மையாவே இது ஒரு மெண்டல் டிசார்டர். அவளால திருடணும்ன்ற அர்ஜை கண்ட்ரோல் பண்ண முடியாது.” என்றவள், ஸ்வரூப்பிடம், “அவள் தூங்குனதும் அவள் எடுத்த பொருளை நானே கொண்டு வந்து குடுத்துறேன் ஸ்வரூப். இப்போ விட்டுடு” என்றாள் கெஞ்சலாக.

ஏனோ, இதனால் அவள் அவமானப்படுவதை ஏற்க இயலவில்லை.

“மவளே… அப்படி ஏதாச்சு செஞ்ச உன்னை கொன்றுவேன்” என்று உத்ஷவி எகிற, ஸ்வரூப் தான் அவளை நிதானமாக ஏறிட்டான்.

“சரி. உள்ள போங்க!” எனப் பொதுவாய் எல்லாருக்கும் உத்தரவு கொடுக்க, அவனைப் பார்த்து கழுத்தை வெட்டி விட்டு நகன்றாள் உத்ஷவி.

“திருடனும்ன்னுலாமா ஒரு நோய் இருக்கு” என இன்னும் நம்பிக்கை எழாமல், சஜித் கூகிள் ஆண்டவரின் உதவியை நாடி, தெரிந்து கொண்டான்.

ஆறு பேரும் ஒரு பெரிய மேஜையில் சென்று அமர, அக்ஷிதா ஆர்வத்துடன் மெனு கார்டை எடுத்துப் பார்த்தாள்.

அதனை வெடுக்கென பிடுங்கிய ஸ்வரூப் அவ்தேஷ், மெல்லிய அதே நேரம் ஆழ்ந்த குரலில், “எனக்குப் பின்னாடி இருக்குற டேபிள்ல ப்ளூ கோர்ட் போட்டு ஒருத்தன் இருக்கான் தெரியுதா?” எனக் கேட்டான்.

அவளும் பார்த்து விட்டு, “ஓ! நல்லா தெரியுறானே. அவனை விட அவன் சொட்டை மண்டை நல்லா கிளார் அடிக்குது.” என்று பல்லைக்காட்டியவளை முறைத்தவன், “ரொம்ப நல்லது. அவன்கிட்ட பிக் பாக்கெட் அடிச்சுட்டு வா!” என்று அமைதியாகக் கட்டளையிட்டான்.

“என்னது பிக் பாக்கெட்டா? யூ மீன் திருடணுமா ஸ்வரூப்” என அப்பாவியாய் கேட்டவளை, மூவரும் ‘அடிப்பாவி’ எனப் பார்த்து வைத்தனர்.

உத்ஷவியோ, “இது நல்ல கதையா இருக்கு. ராகேஷ் மாதிரி நீங்களும் எங்களை யூஸ் பண்ணிக்கிறீங்க அதான?” என நக்கலுடன் கேட்டதில், ஸ்வரூப் பதில் பேசாமல், அவளை உறுத்து விழித்தான்.

அவளும் அசராமல் அவனது பார்வையைத் தாங்கி விட்டு, “சரி… எவன் எவனுக்கோ ப்ராஜக்ட் பண்ணி குடுத்து இருக்கோம். ரெண்டு நாள் பழக்கத்துக்காக, உங்களுக்காகவும் பண்றோம். ஆனா, ஃப்ரீயா எல்லாம் எதுவும் பண்ண முடியாது.” எனத் தோளைக் குலுக்க, ஸ்வரூப், அவனது பர்சில் இருந்து சில கற்றை நோட்டுகளை எடுத்து அவள் முன் நீட்டினான்.

அதனை மறுக்காமல் வாங்கிக் கொண்டவள், அவளது பேண்ட் பாக்கெட்டினுள் வைத்துக்கொள்ள, அக்ஷிதா இன்னும் இடத்தை விட்டு எழுந்திரிக்கவில்லை.

சஜித் தான் எரிச்சலாக, “அதான் பணம் வாங்கியாச்சுல. போய் சொன்னதை செய்!” என்று அக்ஷிதாவை கடுப்பாகப் பார்க்க, அவளோ, “அதெப்படி திடுதிப்புன்னு போய் திருட முடியும் காட்ஸில்லா. அதுக்குலாம் நேரம் காலம் இருக்கு.” என்றதில், ஜோஷித் பொறுமை இழந்தான்.

“என்னடி, ஓவரா சீன் போட்டுட்டு இருக்கீங்க. அடிச்சு பல்லை பேத்துருவேன் மூணு பேரையும்.” என்று அடிக்குரலில் சீறினான்.

அதில் விஹானா, “சும்மா கத்தாத பனங்கா மண்டையா. சுத்தியும் சிசிடிவி இருக்கு. மாட்டுனா, ஆந்திரா போலீஸ் எங்களை அந்தராக்கிடுவாங்க.” என்றதில்,

அக்ஷிதா, “ம்ம்க்கும்… தர்ம அடி உங்களுக்கும் சேர்த்து நாங்க தான வாங்கணும்.” என முனகிட, அத்தனை நேரமும் அந்த நீல நிற கோர்ட் போட்ட மனிதனை ஆராய்ந்துக் கொண்டிருந்த உத்ஷவி, அக்ஷிதாவின் காதில் நெருங்கி ஏதோ கூற, “டன் டார்ல்ஸ்” என்றபடி விறுவிறுவென எழுந்து சென்றாள்.

முதலும் முடிவும் நீ!
மேகா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
8
+1
48
+1
2
+1
3

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. Indhu Mathy

      சூப்பர் கோயிங் 🥰🥰🥰🥰🥰🥰🥰❤️❤️❤️❤️❤️❤️❤️❤️