Loading

பெண்கள் மூவரும் தப்பித்து விட்டதை அப்போது தான் உணர்ந்தனர் ஜோஷித்தும் சஜித்தும்.

“அடிப்பாவி, என் பர்ஸை திரும்ப கொடுக்காமலே போய்ட்டாளே” என்ற கவலை சஜித்திற்கு.

‘விஹானா சென்று விட்டாளா?’ ஒரு வித ஏமாற்றம் தாக்க நின்றிருந்தான் ஜோஷித்.

ஸ்வரூப்பிற்கோ, அப்பெண்களை வைத்து சாதிக்க வேண்டிய காரியம் நிறைய இருந்தது. அதனாலேயே, அவர்களை அனுப்ப மறுத்தான். இப்போதோ, தன்னையவே ஏமாற்றி விட்டு சென்றவர்களை எண்ணிக் கடுப்பு எழ, உத்ஷவியின் மீது பெருங்கோபம் எழுந்தது.

“அந்த பொண்ணுங்க நமக்கு வேணும். நம்ம சொல்றதை கேட்கணும்.” என யோசனையுடன் கூறியதில், சஜித், “திருட்டுப் பொண்ணுங்களை நம்ம கூட வச்சுக்குறது சேஃப்டி இல்ல.” என்றான் சலிப்பாக.

“இப்ப இருக்குற நிலைமைக்கு அவளுங்களை வெளில விட்டா தான் நமக்கு சேஃப்டி இல்ல. நம்ம கூட இருந்து, நம்மளோட மூவ்மென்ட்ஸ் எல்லாமே வாட்ச் பண்ணிருக்காளுங்க. யாராவது காசை குடுத்து விஷயத்தை கேட்டா கூட, அச்சு பிசகாம ஒப்பிச்சுடுவாளுங்க. ஏன், திரும்பவும் பக்காவா பிளான் பண்ணிட்டு வந்து திருடவும் செய்யலாம். தட் கேர்ள் உத்ஷவி சரியான விஷம்.” எனக் கடுமையுடன் கூறினான்.

‘அதுவும் சரி தான்’ என இருவரும் யோசிக்கும் போதே, “அது மட்டும் இல்ல” என்ற ஸ்வரூப் மேலும் சில விஷயங்களை விவரித்து விட்டு, ‘கேட்’ அருகில் இருக்கும் சிசிடிவி ஃபுட்ஏஜை பார்த்தவன், ஏளனமாய் புன்னகைத்துக் கொண்டான்.

“ஹ்ம்ம்… சுவத்துல அடிச்ச பந்து மாதிரி திரும்ப நம்மக்கிட்டயே வருவாளுங்க இப்போ!” என எகத்தாளத்துடன் கூற, எப்படி என்பது போல பார்த்தனர் ஆடவர்கள்.

ஆடவர்கள் கவனிக்காத நேரத்தில், கதவு திறந்திருந்ததைப் பயன்படுத்தி, மூவரும் வெளியில் ஓடி விட்டனர்.

ஓடும் போதே, “நிஜமா எனக்கு ஒண்ணும் ஆகாதுல டார்ல்ஸ்” எனத் தோழிகளிடம் ஒருமுறை கேட்டுக்கொண்டாள் அக்ஷிதா.

“அதெல்லாம் ஒண்ணும் ஆகாது. வாடி” என விஹானா கூறும் போதே, அந்த பிரம்மாண்ட கேட்டுக்கு அருகில் வந்து விட்டனர்.

“எஸ். இதை ஓபன் பண்ணிட்டு ஓடுறோம். வீட்டுக்கு போயிட்டு, தெளிவா ஸ்கெட்ச் போட்டுட்டு திரும்ப இங்க வர்றோம்.” என்று வெற்றிக்குறி போட்டுக்கொண்டாள் உத்ஷவி.

“எதே மீண்டும் மீண்டுமா?” என விஹானாவும் அக்ஷிதாவும் விழிக்க,

“பின்ன, நம்மள அடைச்சு வச்சு எவ்ளோ டார்ச்சர் பண்ணுனானுங்க. என்னை அடிக்க வேற செஞ்சான் அந்த டைனோசர். இதுக்குல்லாம் பழி வாங்க வேணாமா. மறுபடியும் வர்றோம், வந்து இருக்குற பணத்தை ஆட்டைய போட்டுட்டு போறோம். நம்ம ப்ராஜெக்ட்டை கெடுத்து விட்டான்ல அதுக்கு பனிஷ்மென்ட்.” என்று கூறிக்கொண்டே கேட்டைத் திறக்க முயல, அந்தோ பரிதாபம் அதனை சிறிதும் அசைக்க இயலவில்லை.

அதில் முகம் மாறிய உத்ஷவி, “என்னடி இதை அசைக்கவே முடியல. ஏறி குதிச்சுடுவோமா?” எனக் கேட்டதில்,

“இவ்ளோ பெரிய கேட்ல எப்படிடி ஏறி குதிப்ப. கை கால் உடைஞ்சா புத்தூர் கட்டு போட கூட கைல காசு இல்ல.” என விஹானா நொந்ததும்,

“அதுவும் சரி தான், அப்போ நம்ம வந்த வழியிலயே போய்டலாம்.” என சுவர் ஏறி குதிக்கும் பொருட்டு ஓட,

அக்ஷிதா தான், “எப்படியும் டெட் பாடியை கேட்டைத் தாண்டி கொண்டு போகணும் தான டார்ல்ஸ். ஆனா, கேட்டு பக்கம் வரவே இல்லையே. வேற எங்க போயிருப்பனுங்க?” என சந்தேகமாகக் கேட்டாள்.

“பின்னாடி கேட் எதுவும் இருக்குமோ?” விஹானாவும் சிந்தனையுடன் கேட்க, “அதெல்லாம் இல்லைடி. இந்த ஒரு கேட் தான்” என்று கூறும் போதே, ஓட்டத்தை நிறுத்தி இருந்தாள் உத்ஷவி.

அவளது முகம் வெளிறி திகைக்க, மற்ற இருவரும் எச்சிலைக் கூட விழுங்கவில்லை.

அவர்களுக்கு எதிரில், வரிசையாக ராட்சத உருவில் ஐந்தாறு நாய்கள் வேட்டையாடக் காத்திருத்தது.

“என்னடி உண்மையாவே நாய் இருக்கு.” என்று விஹானா அதிர, உத்ஷவி மெல்ல ஒரு அடி எடுத்து முன் வைத்தாள்.

அதற்கே அத்தனை நாய்களும் வெறி கொண்டு பாய்வது போல முன்னால் வர, சட்டென காலைப் பின்னிழுத்துக் கொண்டவள், எங்கும் நகர இயலாமல் நொந்தாள்.

“நம்ம திரும்ப கேட்டையே திறந்து பார்க்கலாம்” என அக்ஷிதா பின்னால் நகர எத்தனிக்க, அப்போதும் நாய்கள் அவர்களைக் கண்டு உறுமியது.

“போச்சு. செத்தோம்… இந்த நாய்களுக்கும் நமக்கும் ஏதோ பூர்வ ஜென்ம சொந்தம் இருக்கு போல. நம்ம வரும் போது இதை எல்லாம் எங்க வச்சு இருந்தானுங்கன்னு தெரியல.” என மிரண்ட உத்ஷவி, அங்கிருந்த சிசிடிவியைப் பார்த்து விட்டாள்.

அதனைக் கோபமாக முறைத்தவள், “டேய் டைனோசர், நீ எங்களை கோர்த்து விட்டு, நாங்க பயப்படுறதைப் பார்த்து ரசிக்கிறன்னு எனக்குத் தெரியும்டா. ஒழுங்கா வந்து உன் அஸிஸ்டன்ஸை போக சொல்லு.” என்று நாயைச் சுட்டிக் காட்டிக் கூற, “இவள் என்னடி தனியா பேசிட்டு இருக்கா.” எனக் குழம்பினாள் அக்ஷிதா.

உண்மையாகவே உத்ஷவியின் பயந்த வியர்வை வழியும் முகத்தைத் தான், ஆடவனது கூர் விழிகள் கூறு போட்டுக்கொண்டிருந்தது.

அதனைக் கணித்து அவள் பேசியதும், “விஷக்கிருமி…” என இழிவாய் புன்னகைத்தவன், “வரேன் இருடி.” என்றவாறு, வாசலுக்கு விரைந்தான்.

அவர்களைக் கண்டு நக்கல் பார்வை வீசியவன், நாய்களுக்கு நடுவில் ஒரு காலை முட்டி இட்டு அமர்ந்து, அதனைத் தடவிக் கொடுத்தான்.

“என் பசங்க என்னை விட மோசமானவங்க திருடி. நானாவது மிரட்ட தான் செய்வேன். இவனுங்க, உன் குடலையும் ஈரலையும் தனி தனியா எடுத்து, என்கிட்ட குடுத்துடுவாங்க.” என்று புருவம் உயர்த்தி அமர்த்தலாகக் கூறியதில், அக்ஷிதாவிற்கே வாந்தி வருவது போல இருந்தது.

உத்ஷவியோ, “இங்க பாரு… என்கிட்ட மட்டும் என் டூல்ஸ் எல்லாம் இருந்திருந்தா, இந்த நாய்களை சாரி சாரி உன் பசங்களை ஏமாத்திட்டு கிளம்பி இருப்பேன். ஒரு சின்ன டெக்கனிகல் ஃபால்ட். உன்கிட்ட மாட்டிக்கணும்ன்னு என் தலையெழுத்து.” என எரிச்சலானாள்.

“ப்ச்… இனி உன் தலையெழுத்து என் கையில திருடி. இனிமேலும் உங்க மூணு பேரையும் ஒண்ணா சுத்த விட்டா சரிப்படாது. நான் சொல்ற வரைக்கும், நீங்க மூணு பேரும் ஹவுஸ் அரெஸ்ட் ஆகி, எங்க அசிஸ்டன்ஸா எங்க கூடவே இருக்கணும். சொல்றதை செய்யணும்.” என அசட்டையுடன் அவன் கூறியதில் உத்ஷவி முறைத்தாள்.

“டோன்ட் வொரி… நீங்க எப்படி வந்தீங்களா, அப்படியே தான் இங்க இருந்து போவீங்க. இந்த விஷயத்துல எங்களை நம்பலாம். ஆனா, சொல்றதை கேட்கலைன்னா, டெட் பாடி கூட முழுசா இங்க இருந்து போகாது. என் பசங்க தான் உங்களை பிரிச்சு, பார்ட்ஸை தனியா கழட்டி, எலும்பை உடைச்சு, சதையை பிய்ச்சு…” என நாரசமாகப் பேச, அக்ஷிதா அங்கேயே குமட்டினாள்.

“ஐயோ, போதும். இதுக்கு மேல பேசுனா, உன் வீடு தான் நாறிப்போகும்.” எனக் கையெடுத்துக் கும்பிட்டாள்.

விஹானாவோ, “இப்ப எங்களை என்ன தான் செய்ய சொல்ற ஸ்வரூப்?” என்று முடிவாய் கேட்க, அவனும் முடிவாக, “சொல்ல வேண்டியதை ஏற்கனவே சொல்லிட்டேன். உயிரோட வீட்டுக்கு போகணும்ன்னு ஆசை இருந்தா, சொல்றதை கேளுங்க!” என்றான் தோளைக் குலுக்கி.

“நாசமா போனவன்…” என முணுமுணுத்த உத்ஷவி, “சரி, கேட்டு தொலைக்கிறோம். முதல்ல உன் பசங்களை இங்க இருந்து அனுப்பு.” என்றவளை, நக்கல் நகையுடன் ஏறிட்டவன், “தட்ஸ் சௌண்ட்ஸ் குட்! அவங்க இங்கயே இருக்கட்டும். நீ மட்டும் என் கூட வா!” என்று விட்டு முன்னே சென்றான்.

“நான் மட்டும்ன்னா?” எனக் கேட்டு விட்டு மற்ற இரு பெண்களையும் பார்க்க, “இப்போ இருந்து மூணு பேரும் பார்த்துக்கணும்ன்னா, அது நாங்க கூட இருக்கும் போது மட்டும் தான். தனியா மீட் பண்ண அலௌட் கிடையாது! கம்!” என்றதும், உத்ஷவி கோபத்தில் வேக மூச்சுக்கள் எடுத்தாள்.

“இப்ப நீ வர்றியா? இல்லையா?” எனக் கடுமை பொங்க கேட்ட ஸ்வரூப்பை முறைத்தவாறு, விறுவிறுவென வீட்டினுள் சென்றவளுக்கு ஐயோ என்றிருந்தது.

“ஷவி போகாதடி…” என விஹானா கதறும் போதே, அங்கு ஜோஷித் வந்தான்.

வந்தவன், “சொன்ன ரூல்ஸ் எல்லாம் உங்களுக்கும் கேட்டுச்சுல்ல. இப்போதுல இருந்து, நீ என் அசிஸ்டண்ட் விஹானா.” என்றதும்,

“ஐயையே… நீ விடுற புகைக்கு என் நுரையீரல் தாங்காது சாமி. நான் உன் பிரதர்க்கே அஸிஸ்டண்ட்டா இருக்கேன்.” என்று முரண்டு பிடித்தாள்.

“இந்த ஆப்ஷன்லாம் உனக்கு யாரும் தரல. ஒழுங்கா என் ரூமுக்கு வந்து சேரு!” என்று கடிந்தவனுக்கு, கோபம் வேறு வந்தது. இந்த மகாராணிக்கு என் கூட இருக்க கூட வலிக்குதாம்!

“கேன்சர் வந்து சாக போறேன்.” என்ற புலம்பலுடனே அக்ஷிதாவைப் பாவமாக பார்த்து விட்டு, விஹானா உள்ளே செல்ல, அடுத்ததாக சஜித் வந்து கையைக் கட்டிக்கொண்டு நின்றான்.

அக்ஷிதா, அவனையும் நாய்களையும் மாறி மாறிப் பார்க்க,

சஜித்தோ, “நான் கடிச்சதுக்காவது ஊசி போட தேவை இல்ல… ஆனா இவனுங்க கடிச்சா…” என்று மேலும் பேச வர, அவனைக் கை நீட்டித் தடுத்தவள், “கிட்சன்ல பிரெட் ஜாம் இருக்கா காட்ஸில்லா? வா சாப்பிடலாம். புண் பட்ட நெஞ்சை ப்ரெட்டு சாப்பிட்டு ஆத்துறேன்.” என நொந்தபடி உள்ளே செல்ல, அவளது புலம்பலில் மென் முறுவல் பூத்தது சஜித்தின் இதழ்கள்.

உத்ஷவியைத் தனது அறைக்கு அழைத்துச் சென்று, “அரை மணி நேரம் டைம். வேகமா ரெஃப்ரெஷ் ஆகு. கிளம்பணும்.” எனக் கட்டளையிட்ட ஸ்வரூப் அவ்தேஷ், குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.

‘கொய்யால, யாரு யாருக்கு டைம் தர்றது?’ எனக் கடியானவள், மெல்ல வெளியில் இருந்து குளியலறைக் கதவைத் தாழ் போட்டாள்.

அவசரமாக சிந்தித்தவள், வாயில் கதவைத் திறக்க முயல, அதுவோ எங்கிருந்து, எந்தப் பக்கம் திறப்பது என்று கூட புரியாத புதிராக இருந்தது.

‘அன்னைக்கு நைட்டு மட்டும் எப்படி ஈஸியா வந்தோம்’ என யோசித்தபோதே புரிந்தது, அன்று கதவு லேசாக திறந்தே இருந்தது என்று.

‘என்னை உள்ள வர விட்டு டிராப் பண்ணி இருக்கான். நானும் எலி மாதிரி அவன் வச்ச பொறில சிக்கி, சின்னா பின்னமாகிட்டு இருக்கேன்.’ என உதட்டைப் பிதுக்கியவள், வேறு ஏதேனும் வழி இருக்கிறதா என்று ஆராய, திரைச்சீலையின் மறைவில் வெளிப்பட்டது, கண்ணாடியால் மூடப்பட்டிருந்த பால்கனிக் கதவு.

“எஸ்…” எனத் தனக்கு தானே கூறிக்கொண்டு, வேகமாக அதன் அருகில் சென்றவளுக்கோ, இது எந்த விதமான லாக் என்றே தெரியவில்லை.

அனைத்துமே ஸ்மார்ட் டெக்னாலஜியால் உருவாக்கப்பட்டது என்றும், ஒவ்வொரு கதவிற்கும் ஸ்வரூப்பின் கைரேகைகள் அவசியம் என்றும் அதன் பிறகே புரிபட, அந்த கண்ணாடிக் கதவை ஓங்கி மிதித்தாள்.

மிதித்த வேகத்தில் பின்னால் நகன்றவள், எதிலோ முட்டி நின்றதில் படக்கெனத் திரும்ப, அங்கு இறுகிய பரந்த மார்பினை கையில்லாத பனியனில் மறைத்துக் கொண்டு திணக்கத்துடன் பெண்ணவளை பார்த்திருந்தான் ஸ்வரூப் அவ்தேஷ்.

“நீயா!” என ஆசுவாசமான உத்ஷவி, சட்டென நிமிர்ந்து, “நீயா? நீ எப்படி வெளில வந்த? நான் தான் பாத்ரூம் கதவை லாக் பண்ணிட்டேனே” எனக் குழம்ப,

“ச்சு ச்சு… தப்பிச்சு போக ரொம்ப ட்ரை பண்ணுனியோ” எனக் கேட்டான் பரிதாபத்துடன்.

அவள் முறைப்பை சட்டை செய்யாமல், “பாத்ரூம் கதவை வெளில லாக் பண்ணாலும், உள்ள ஓபன் பண்ணிக்க முடியும். உன் டூல்ஸ் பேக்ல, நிறைய சாவி வச்சிருந்த. இப்ப இருக்குற லேட்டஸ்ட் டோர்ஸ் பத்தி எல்லாம் தெரிஞ்சுக்க மாட்டியா விஷா. அப்போ தான, ஸ்மார்ட் டோரை ஸ்மார்ட்டா ஓபன் பண்ணி, நூதனமா திருட முடியும்.” என்றான் இளக்காரத்துடன்.

“அதெல்லாம் அப்க்ரேடட் வெர்ஷன்ல கத்துக்குவேன்.” என நொடித்துக் கொண்டவள், “இங்க பாரு என்னை செல்ல பேர் வச்சு கூப்புடுற வேலை எல்லாம் வேணாம்.” என்று கட் அண்ட் ரைட்டாகக் கூற, அவனோ விழி இடுங்கப் பார்த்தான்.

“யாரு உனக்கு செல்லப்பேர் வச்சது? ரொம்பத்தான் ஆசை உனக்கு.” என அசட்டையுடன் கூற,

“இப்போ விஷான்னு கூப்பிட்ட தான… என் பேர்ல அப்படி ஒரு பேர் வரவே இல்லை. ஒருவேளை ஷவியை திருப்பிப் போட்டு விஷான்னு சொன்னியோ?” என அவன் அழைத்த பெயரில் ஆராய்ச்சியைத் தொடங்கினாள்.

அவளை ஒரு கணம், ஒரே கணம் ரசனையாய் தொட்டுச் சென்ற ஆடவனின் அழுத்த விழிகள், மீண்டும் கேலியுடன் ஏறிட்டது.

“அது சரி! உன் பேரே எனக்கு இன்னும் மனப்பாடம் ஆகல. இதுல அதை ரிவர்ஸ் பண்ணி வேற கூப்பிடணுமாக்கும். நீ சரியான விஷக்கிருமிடி திருடி. அந்த பேரை கூப்பிட்டா ரொம்ப லெந்தா இருக்கா, அதான் ஷார்ட்டா விஷான்னு கூப்பிட்டேன்.” என விளக்கம் கொடுத்ததில், உத்ஷவி நெருப்பாய் காய்ந்தாள்.

“நான் விஷக்கிருமின்னா, நீ டைனோசர்டா.” என அவனுடன் மல்லுக்கு நிற்க, அவன் அதனை எல்லாம் காதில் வாங்கியது போல தெரியவே இல்லை.

சிறு பையொன்றில் சில பொருட்களை எடுத்து வைத்தவன், அந்த பேகை அவளிடம் தூக்கி எறிந்தான்.

அதனை இலாவகமாக கேட்ச் பிடித்தவள், அவனையையும் பையையும் மாறி மாறி பார்க்க, “இதுல சில கிட் இருக்கு. பத்திரமா வச்சுக்கோ. நான் கேட்கும் போது சட்டுன்னு எடுத்து தரணும்!” என்று கண்டிப்புடன் கூறியவன், “நீ கிளம்பிட்ட தான…?” எனக் கேட்டு அவளை மேலும் கீழுமாக ஆராய்ந்தான்.

“ம்ம்க்கும்… ரெண்டு நாளா ட்ரெஸ்ஸு கூட மாத்தல…” என முணுமுணுத்தவள், “இப்போ எங்க கிளம்ப சொல்ற என்னை?” எனக் கேட்டாள் கடுப்பாக.

“நெல்லூர், ஆந்திரப்பிரதேஷ்.” என அழுத்தமாகக் கூறியதும், “என்னது, ஆந்திராவா… இங்க கண்டமானது பத்தாதுன்னு, ஆந்திரால போய் உப்புக்கண்டமானுமா?” என விவேக் தொனியில் கதறியவளைக் கண்டு ஸ்வரூப் அவ்தேஷின் இறுகிய இதழ்களிலும் ரசனைப் புன்னகை எட்டிப் பார்த்தது.

முதலும்… முடிவும் நீ!
மேகா!

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
8
+1
48
+1
2
+1
7

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. Indhu Mathy

      விஷா 😯😯😯 ஸ்வரூப் திட்டுறானா கொஞ்சுறனான்னே தெரியல… 😜😜😜😜😜

      இப்போ எதுக்கு இவங்களை ஆந்திராக்கு கடத்துறாங்க… 🤔
      எப்படியோ நமக்கு fun இருக்கு… ☺️☺️☺️☺️☺️