
அத்தியாயம் 5
கன்னிபுரம் கிராமம். அங்கே ஒரு ஓட்டு வீட்டில் முன்னே வற்றலை காயபோட்டு கொண்டிருந்தாள் கனிஷ்கா. கழுத்தில் மஞ்சள் காயாத தாலி தொங்கி கொண்டிருக்க நெற்றியை குங்குமம் அலங்கரித்து கொண்டது. கையில் கண்ணாடி வளையல்கள் நிரம்பி இருக்க தலையில் இருந்த மல்லிகை பூவின் வாசம் அந்த இடத்தையே நிறைத்தது.
மங்களகரமான பெண்ணாக இருந்த போதிலும் அவளின் முகம் மட்டும் சோகத்தை பூசியிருந்தது. இரண்டு நாட்களுக்கு முன் தான் அவளுக்கு திருமணம் முடிந்திருந்தது. கணவன் வேலு எந்த ஒரு வேலைக்கும் செல்லாமல் ஊர் சுற்றி கொண்டிருப்பவன். மூன்று தங்கைகளோடு பிறந்திருந்த அவளுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டிய கட்டாயத்தால் இந்த திருமண வாழ்க்கைக்குள் தள்ள பட்டிருந்தாள் கனிஷ்கா. மாமனார் மாமியார் எவரும் சொல்லும் படியாக இல்லை.
முன்பு ஆரவாரமாக ஓடி விளையாடும் பெண் இந்த இரண்டு நாட்களில் யாரோ போல ஆகி விட்டாள்.
மாமியாருக்கு மகனுக்கு பெண் கிடைத்து விட்டாள் என்ற மிதப்பை விட வீட்டு வேலை செய்ய ஒருத்தி கிடைத்து விட்டாள் என்பதே நிம்மதியாக இருந்தது. மாமனாருக்கோ வீட்டில் போடும் சோற்றை உண்டால் போதும் எனும் மனநிலை. வேலுவோ தன் ஆசைகளை கட்டவிழ்த்து விட ஒருத்தி கிடைத்து விட்டாள் என்று இந்த இரண்டு நாளில் அவளை ஒருவழியாக்கி விட்டான்.
அதிலும் அவன் அவளுக்காக ஒருவனிடம் பட்ட அவமானம் தான் இன்னும் அவளை காயப்படுத்தியது.
வற்றலை காய போட்டு கொண்டிருந்தவள் மனமோ இரண்டு மாதங்களுக்கு முன் தன்னிடம் காதல் சொல்ல வந்தவனின் நினைவில் இருந்தது. அவளின் பக்கத்து வீட்டில் வாசுவின் நண்பனாக ஊரை சுற்றி பார்க்க வந்திருந்தான். அவனின் பெயர் கூட அவளுக்கு தெரியாது. ஆனால் இரு வாரங்களிலேயே அவளிடம் காதல் சொல்லி விட்டு சென்றான். அவன் கொடுத்து விட்டு சென்ற விலாசம் கூட அவளின் பெட்டியில் அடியில் தூங்கி கொண்டிருக்கும். இனி அதற்கு தேவையே இல்லை என்பதை போல் அவளின் வாழ்க்கையில் அடுத்தடுத்து நிகழ்வுகள் நடந்து விட இன்றோ இன்னொருவரின் மனைவியாய் இருக்கிறாள். அவளின் நினைவை கலைக்கவென்றே வந்தான் அவளின் கணவன் வேலு.
“ஏய்.. சீக்கிரம் உள்ள வாடி..” என்று அழைக்க தயங்கி நின்றாள் கனிஷ்கா.
“அவ தான் வேலை செஞ்சிட்டு இருக்காளே.. காலையிலேயே உனக்கு தேவையா? ஏய் கனி.. நீ போய் அடுப்புல வச்சிருக்க சோத்தை வடி” என்று அவளின் மாமியார் மங்களம் கூற சமையலறைக்கு திரும்பினாள்.
சட்டென கையில் இருந்த பையால் அவளின் தோளில் அடித்தான் வேலு.
“ஆ..” அவள் வலி தாங்காமல் கத்த, “கத்துனா குரல்வளையை கடிச்சிடுவேன்” என்று அவளை நெருங்கினான் அவன்.
“டேய் அவளுக்கு வேலை இருக்கு” மங்களம் சொல்ல, அவளோ மாமியார் முன் கூனிக் குறுகி நின்றாள்.
எந்தவொரு மருமகளும் மாமியார் முன் கணவனிடம் கேட்க கூடாத பேச்சுகள் எல்லாம் இவள் இந்த இரண்டு நாட்களில் கேட்டு விட்டாள்.
“ரூமுக்கு போடி..” என்று கர்ஜிக்க அதன் பிறகு கணவனை எதிர்த்து பேசும் தைரியம் அந்த பேதை பெண்ணிற்கு இருக்கவில்லை.
இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டிலும் கணவனுக்கு அடங்கி போகும் பெண்கள் தான் பலர். கிராமத்தில் பல விஷயங்களில் முன்னேற்றம் வந்தாலும் கணவன் பேச்சை தட்டாத குணம் தான் மனைவிகளுக்கு. அந்த ஒரு விஷயத்தில் இன்றும் மாற்றம் இல்லை.
கணவனின் பேச்சை தட்டாத மனைவியாக கனிஷ்கா தங்கள் அறைக்கு செல்ல அவளின் பின்னோடு சென்றான் வேலு.
“உனக்கு என்னடி என் பேச்சை கேட்க கூடாதுன்னு அவ்ளோ திமிரு” என்று அவள் முடியை கொத்தாக பிடிக்க “அய்யோ வலிக்குது விடுங்க” என்று கதறினாள் கனிஷ்கா.
“உன் திமிரை அடக்க வேண்டாமா?” அவன் இழுத்த இழுப்பில் அவளின் முடி கையோடு வந்து விடுவது போல் இருந்தது.
“ப்ளீஸ்.. அத்த பேச்சை தட்ட முடியாம தான் சோறு வடிக்க போனேன்.. இப்போ வேண்டாமே.. காலையிலேயே அசதியா இருக்கு”
அவளின் கெஞ்சல் அவனுக்கு இன்னும் வெறியை ஏற்றியது. “இங்க பாருடி.. எனக்கு எப்போ எப்போ தோணுதோ அப்போ எல்லாம் நீ வரணும்.. நீ என் பெண்ஜாதி.. உனக்கு மூணு முடிச்சு போட்டது இதுக்கு தான்” என்று அவள் தாலியை எடுத்து காட்ட மனதில் தோன்றிய வெறுப்பை வெளியில் காட்ட முடியாமல் தவித்தாள் அவள்.
“என்னடி யோசனை?”
“ஒன்னும் இல்லைங்க..”
“அப்போ வேற ஒன்னும் இல்லனா வேலைய பார்க்கலாம்” என்று அவளோடு கட்டிலில் சாய வேறு வழி அவளுக்கு இருக்கவில்லை.
அவனின் ஒவ்வொரு தொடுகையும் அருவருப்பையே கொடுத்தது. சகித்து கொண்டு அவள் அவனோடு ஒன்ற நினைக்க அதை கண்டு கொண்டவன் அவளின் உதட்டில் தன் முற்றுகையை ஆரம்பித்து வன்மையை கையாள சிறு பெண் அவளால் அவனின் தாக்குதலை தாங்கவே முடியவில்லை.
“வலிக்குதுங்க..” அவளின் வலி அவனுக்கு இன்னும் போதையேற்ற தொடர நினைத்தவன் கவனத்தை கதவு தட்டும் ஒலி கலைத்தது.
“ச்சை இதுவேற..” என்று சலித்தவன் கதவை திறக்க அவனின் தாய் நின்று கொண்டிருந்தார்.
“டேய் அவளை வெளில விடு.. நிறைய வேலை இருக்கு”
“நீ எல்லாம் ஒரு அம்மாவா? தொல்லை பண்ணாம போ.. ரெண்டு மணி நேரம் கழிச்சு சோறு தின்னா செத்து போயிட மாட்ட” என்று கத்தி விட்டு கதவை பூட்ட உள்ளிருந்து கேட்டு கொண்டிருந்த கனிஷ்காவுக்கு அவமானமாக இருந்தது.
கணவனாக இருந்தாலும் அவனின் பேச்சு எல்லை மீறுவது புரிய “இப்போ வேண்டாங்க..” என்று தடுக்க நினைக்க ஓங்கி அவளின் கன்னத்தில் அறைந்தான் அவன்.
“நான் நினைக்குறது மட்டும் தான் நடக்கணும்.. இங்க நீ எனக்கு என் தேவைய பூர்த்தி செய்ய மட்டும் தான் புரியுதா?” என்று சீற அவளால் ஒன்றும் செய்ய முடியாமல் போனது.
முன்பை விட இன்னும் அதிகமாக அவளை துன்புறுத்த அவளால் இரண்டு மணி நேரத்திற்கு பின் நிற்க கூட தெம்பில்லாமல் போனது. அடுத்தடுத்து மாமியார் சொன்ன வேலைகளையும் முடித்து விட்டு கொஞ்சம் நேரம் அமைதியாக இருக்கலாம் என்று நினைத்தால் “கனி வேலுவுக்கு நாட்டு கோழி குழம்புனா இஷ்டம்.. செஞ்சு வச்சிடு” என்ற மாமியாரின் உத்தரவில் அயர்ந்து போனாள்.
அந்த வீட்டில் மிக்சி, கிரைண்டர் எல்லாம் கிடையாது. அம்மியில் மசாலா அரைத்து சிக்கனை வேக வைத்து மசாலா போட்டு வேக வைக்கவும் சில துண்டுகளை பொரித்து எடுக்கவும் அவளுக்கு நேரம் சரியாக இருந்தது. அதை விரும்பி சாப்பிட்ட எவரும் அந்த உணவின் சுவையை பற்றி பேசவே இல்லை.
வேலுவும் சாப்பிட்டவன் “அவளை அனுப்பி விடு..” என்று சொல்லி விட்டு செல்ல இருந்த பாத்திரங்கள் அனைத்தையும் கழுவி விட்டு இரண்டு கவளம் சாப்பிட்டவளுக்கு அதற்கு மேல் சாப்பாடு இறங்கவில்லை. கை கழுவி விட்டு அறைக்கு சென்றவள் தூங்க நினைக்க கணவனின் செயலில் அன்று தூங்கா இரவாகி போனது.
திருமணம் ஆகி சென்றால் பெண் என்பவள் சமைத்து போடவும் கணவனின் தேவையை தீர்க்க மட்டும் தானா? கணவன் அன்பாக நடந்து கொள்வான் என்று பல பெண்களின் வாயிலாக தெரிந்து கொண்டவளுக்கு இந்த வாழ்வு மூச்சு முட்டியது. இரண்டே நாட்களில் நரகத்தை உணர்ந்தாள் அவள். இந்த வாழ்வை விட்டு வெளியேற வேண்டும் என்று ஆசையாக இருந்தது. ஆனால் பள்ளிப்படிப்பை மட்டுமே முடித்த பெண்ணவளுக்கு கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்று போதிக்க பட்டிருக்க எப்படி வெளியேறுவது என்று யோசிக்க ஆரம்பித்தாள்.
அவளின் யோசனையை கலைப்பது போல் வேலு அவளின் மேல் கை வைக்க தட்டி விட்டாள் கனிஷ்கா.
அதில் தூக்கம் கலைந்தவன் “என்னடி சொன்னது மறந்து போச்சு போல..” என்று முறைக்க “எனக்கு வலிக்குது போதும்” என்றாள்.
சிறிது தைரியம் வந்தாலே அதை அடக்க நினைக்கும் ஆணவம் கொண்டவன் அவன். ஒரு வார்த்தை திருப்பி பேச நினைத்தால் அதை விடுவானா என்ன? அன்று இரவு முழுவதும் அவளுக்கு வலியை கொடுத்தான் அவன். அதே நேரம் இந்த வாழ்வை விட்டு செல்ல வேண்டும் என்ற ஆசை அவளுக்கும் அதிகமாகியது.
ஆனால் ஆசை இருந்தால் மட்டும் போதுமா? அதற்கான சூழ்நிலை அமைய வேண்டாமா?
அடுத்த நாள் காலையில் அவள் எழும் நேரம் வீட்டின் முன் பக்கம் சத்தம் கேட்க அவசரமாக எழும்பியவள் பக்கத்தில் படுத்திருந்த அவனை தெரியாமல் மிதித்து விட, “எவடி அவ?” என அவளின் முடியை பற்ற வலியை பொறுத்துக் கொண்டு அவனிடம் இருந்து விடுபட துடித்தாள் கனிஷ்கா.
“அம்மாடி கனி” வெளியில் தந்தையின் குரல் கேட்க, “அப்பா வந்திருக்காங்க மாமா.. விடுங்க” என அவனிடம் போராடினாள் கனி.
“எவன் வந்தா எனக்கு என்னடி? நான் வெளில போக சொன்னா மட்டும் தான் உனக்கு என்கிட்ட இருந்து விடுதலை. அதுவரை நீ என்னோட அடிமை. என்ன அந்த வெள்ளைக்காரன் வந்து கூட்டிட்டு போவான்னு இன்னும் கனவுல இருக்கியா?” என அவளின் விரல்களை மடக்க,
“வெள்ளைக்காரனா? யார் அது? எனக்கு யாரையும் தெரியாது. அப்பா தப்பா நினைப்பாங்க மாமா, விடுங்க பிளீஸ்” அவனின் பிடியில் இருந்து கொண்டே போராட,
“அப்போ என்னை கொஞ்சம் கவனிச்சிட்டு போ. அந்த வெள்ளைக்காரனுக்கு கிடைக்காத நீ என்னை விரும்பி நெருங்கி வந்ததா திருப்தி பட்டுக்கிறேன்” என்று கூற, அவனை நெருங்கவே அருவருப்பாக இருந்தது அவளுக்கு.
“என்னடி யோசிக்கிற?”
“இல்ல மாமா” அவள் தயங்க,
“அப்போ உன் அப்பனுக்கு நல்லா கேட்கட்டும்” என்று அவள் கரத்தை பற்றி இழுக்க,
“வேலு” என்று மங்களம் கதவை தட்டினார்.
“என்ன வேணும் உனக்கு?” இவன் உள்ளிருந்தே கத்த, வெளியில் இருந்த அவன் மாமனாருக்கும் கேட்டது.
“கனி அப்பா வந்திருக்காங்க டா”
“அவ இப்போ வர மாட்டா. நீ அந்த ஆளை வெளில அனுப்பு” என்று கனியை இழுக்க, அவள் விருப்பம் இல்லாமலேயே மீண்டும் அவளை காயப்படுத்தியவன் வெளியில் வரும் நேரம் வீட்டில் யாரும் இல்லை.
“ரோச கார மாமனார்” என்றவன் சட்டையை எடுத்து மாட்டிக் கொண்டு வெளியில் சென்று விட, அந்த அறைக்குள்ளேயே கதறி அழுது கொண்டிருந்தாள் கனிஷ்கா.

