Loading

நான்கு மாதங்களுக்கு பின்

நாட்கள் மாதங்களாக வேகமாக உருண்டோட அன்று வழமை போல தன்னவளின் நினைவில் கட்டிலில் கண் மூடிப் படுத்திருந்தான் சஜீவ்.

நித்ய யுவனி சஜீவ்வைத் தன் மடுயில் ஏந்தி காதலுடன் தன் தலை கோதுவது போல் கற்பனை செய்து கொண்டிருந்தவனை மொபைல் ஒலி எழுப்பி நிஜ உலகுக்கு கொண்டு வந்தது.

சஜீவ் அழைப்பை ஏற்று காதில் வைக்க மறுபக்கம் ஆரவ், “டேய் ஏன் டா இப்படி பண்ற… நம்ம ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் எப்பவோ வந்துட்டாங்க… நீ மட்டும் தான் இன்னும் இல்ல… யாரோ போல டைமுக்கு வந்துட்டு போக போறியா…” என எடுத்ததும் சஜீவ்வைத் திட்ட,

சஜீவ், “ப்ச்… வரேன்டா… மறந்துட்டேன்…” என ஏனோ தானோவென பதல் அளித்தான்.

கடுப்பான ஆரவ், “நீ பண்றது கொஞ்சம் கூட சரி இல்லடா… ஒழுங்கா சீக்கிரம் வந்து சேருர வழிய பாரு… மவனே ஏதாவது சாக்கு போக்கு சொல்லி வராம மட்டும் இருந்து பாரு.. அதுக்கப்புறம் இருக்கு உனக்கு..” என்று விட்டு அழைப்பைத் துண்டித்தான்.

ஆரவ் இணைப்பைத் துண்டிக்கவும் பெருமூச்சு விட்டபடி எழுந்தமர்ந்தான் சஜீவ் சர்வேஷ்.

சுவற்றில் பெரிதாக தொங்க விடப்பட்டிருந்த நித்ய யுவனியின் புகைப்படத்தின் அருகில் சென்ற சஜீவ் நித்ய யுவனியின் முகத்தை விரல்களால் வருடியபடி,

“நாளைக்கு நீயும் வருவியா யுவி… உன்ன பாத்து நாழு மாசத்துக்கு மேல ஆச்சு… என் மேல கோவமா இருக்கியா… எனக்கு உன்ன பார்க்கனும் போல இருக்கு யுவி… நீ என் பக்கத்துல இல்லாத ஒவ்வொரு செக்கனும் நரகம் போல இருக்கு டி… என்னை வெறுத்துட்டியா யுவி… நீ என்னை விட்டு போகனும்னு தான் நான் அப்படி பேசினேன்.. என்னால உனக்கு எந்த கெட்டப் பெயரும் வரக் கூடாது யுவி… நாளைக்கு வரவே எனக்கு சுத்தமா விருப்பம் இல்ல… ஆனா எனக்கு ஒரு ஒரு தடவ உன் முகத்த பார்க்கனும் போல இருக்கு யுவி… தூரமா இருந்து பார்த்துட்டு போறேன்… ஏன்னா உன் பக்கத்துல வந்தா என்னால என்னைக் கன்ட்ரால் பண்ண முடியாது…” எனக் கண்ணீர் வடித்தான்.

நித்ய யுவனியின் புகைப்படத்தை முத்தமிட்டவன் கிஃப்ட் ஸ்டோர் ஒன்றிற்கு கிளம்பினான்.

கிஃப்ட் ஸ்டோரின் உள்ளே இருந்த பரிசுகளை கண்களால் வருடியபடி வந்து கொண்டிருந்தவனின் சட்டை நுனியைப் பிடித்து இழுத்தது ஒரு குட்டி வாண்டு.

_______________________________________________

“பேப்… ப்ளீஸ்டா… ஓக்கே சொல்லு ப்ளீஸ்… இன்னெக்கி ஒரு நாள் தானே… ஃப்ரெண்ட்ஸ் யாருமே அவங்க ஃபியான்சி கிட்ட பர்மிஷன் கேக்கல… நான் எவ்வளவு நல்ல பையன் பாரு… உன் கிட்ட பர்மிஷன் கேட்டு தான் பண்றேன்…” என சித்தார்த் ஒரு பெண்ணிடம் கெஞ்ச,

அந்தப் பெண், “குடிக்கிறதே தப்புன்னு சொல்றேன்… இதுல நீ என் கிட்டே பர்மிஷன் கேக்குறியா சித்து…” என முறைக்க,

சித்தார்த், “என்ன பேபி நீ… பேச்சலர் பாட்டி இன்னைக்கு… கொஞ்சம் தான் குடிப்பேன்… அதுவும் லிமிட்டா தான்… ப்ளீஸ்… ப்ளீஸ்…” என அவள் சேலை நுனியைப் பிடித்தபடி அவள் பின்னே கெஞ்சிக் கொண்டு சுற்றினான்.

“என்ன பண்ற சித்து நீ… யாராவது பார்த்தா என்ன நெனப்பாங்க… முடியாதுன்னா முடியாது தான்… இது தான் என் கடைசி முடிவு… முதல்ல என் பின்னாடி சுத்திட்டு இருக்காதே… யாராவது பார்த்தா சந்தேகம் வந்துடும்…” எனத் திட்டி விட்டு சென்றாள்.

அவள் சென்றதும் முகத்தைத் தொங்கப் போட்ட சித்தார்த், “இந்த பொண்ணுங்களே இப்படி தான்… கொஞ்சம் கூட பசங்க மேல பாவம் பார்க்க மாட்டாங்க… இவங்க பின்னாடியே சுத்திட்டு இருக்க வைப்பாங்க…” எனத் தனியே புலம்ப அங்கிருந்தவர்கள் அவனைப் பைத்தியமா இவன் என்ற ரீதியில் பார்த்து விட்டு சென்றனர்.

_______________________________________________

சஜீவ் கீழே குனிந்து பார்த்தவன் முகத்தில் புன்னகையுடன், “கவிக்குட்டி…” என்றவாறு கீழே மண்டியிட்டான்.

காவ்யா தான் அவன் சட்டையைப் பிடித்து இழுத்திருந்தாள்.

காவ்யாவோ இடுப்பில் கையூன்றியவாறு உதட்டை சுழித்து விட்டு முகத்தைத் திருப்பிக் கொள்ள,

“என்னாச்சு கவி குட்டிக்கு… ஏன் மாமா கூட கோவமா இருக்கீங்க.. ஆமா நீ இங்க என்ன பண்ற… யாரு கூட வந்த…” எனப் புன்னகையுடன் கேட்டான் சஜீவ்.

காவ்யா, “அப்பா கூட தான் வந்தேன்… போங்க மாமா… நான் உங்க கூட பேச மாட்டேன்… நீங்க ரொம்ப மோசம்.. ” என்க,

சஜீவ், “அதான்டா.. ஏன் கோவமா இருக்க… நீ ஏன்னு சொன்னா தானே மாமாக்கு உன்ன சமாதானப்படுத்த முடியும்…” என்க,

“நீங்க என் கிட்ட என்ன சொல்லி ப்ராமிஸ் பண்ணீங்க… நீங்களே வந்து என்ன உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்னு ப்ராமிஸ் பண்ணி தானே என்னை அனுப்பி வெச்சீங்க… ஆனா நீங்க வரவே இல்ல..” என்றாள் காவ்யா.

சஜீவ், “அச்சோ… அதான் கவி குட்டி மாமா கூட கோவமா இருக்கியா… மாமாக்கு ரொம்ப வேலைடா… லீவே இல்ல… என்ன பண்றது சொல்லு… இல்லன்னா மாமா வராம இருப்பேனா… சாரிடா…” எனப் புன்னகையுடன் கூற,

காவ்யா, “போங்க மாமா… நீங்க பொய் சொல்றீங்க…. இப்போ உங்களுக்குன்னு சொல்லி குட்டிப் பாப்பா வரப் போகுதே… அதனால தான் உங்களுக்கு என் மேல இருந்த பாசம் கொறஞ்சிடுச்சு… எனக்கு தெரியும்..” எனச் சோகமாகக் கூற ஒரு நொடி அதிர்ந்தான் சஜீவ்.

பின் சிறு பெண் ஏதோ தவறாகக் கூறுகிறாள் என நினைத்த சஜீவ், “என்ன கவிக் குட்டி சொல்ற… யாருக்கு குட்டி பாப்பா வரப் போகுது…” எனப் புரியாமல் கேட்க,

“உங்களுக்கும் நித்யாக்காவுக்கும் தான்… அம்மா தான் சொன்னாங்க… அக்கா வயித்துல குட்டிப் பாப்பா இருக்காம்… நான் சித்தி ஆக போறேன்னு சொன்னாங்க…” எனக் காவ்யா கூறவும் சஜீவ்வின் முகம் இரத்தப் பசையின்றி வெளிறிப் போனது.

அதன் பின் காவ்யா கூறிய எதுவுமே அவன் செவியை அடையவில்லை.

காவ்யா அவனை உலுக்கி “மாமா… மாமா..” எனக் கத்தவும் தான் நிஜ உலகுக்கு வந்தான் சஜீவ்.

அதே அதிர்ச்சியில் காவ்யாவைப் பார்க்க, “அப்பா கிட்ட சொல்லாம உங்கள கண்டதும் ஓடி வந்துட்டேன்… பாவம் அப்பா… என்னைக் காணாம தேடிட்டு இருப்பாரு… நான் கிளம்புறேன்… நீங்க சீக்கிரமா வந்து என்னைக் கூட்டிட்டுப் போங்க மாமா…” என்று விட்டு ஓடினாள் காவ்யா.

சஜீவ் எப்படி வீடு வந்து சேர்ந்தான் என்றே அவன் அறியவில்லை.

உலகமே இருண்டது போல் இருந்தது.

என்ன நடக்கிறது என்றே புரியவில்லை.

காவ்யா கூறியது அவன் மூளையை அடையவே சற்று நேரம் எடுத்தது.

தலையைப் பிடித்தபடி கட்டிலில் அமர்ந்தவனின் பார்வையில் பட்டது நித்ய யுவனி தலையணையின் கீழ் வைத்து விட்டுச் சென்ற ஃபைல்கள்.

கைகள் நடுங்க அதனை எடுத்துப் பார்த்தான் சஜீவ்.

முதலில் இருந்த ஃபைலில் அன்று சுசித்ரா காட்டிய சஜீவ்வின் ரிப்போர்ட் இருக்க அடுத்த ஃபைலில் இரண்டு மாதத்துக்கு பின் எடுத்த சஜீவ்வின் ரிப்போர்ட் இருந்தது.

அதில் சஜீவ்விற்கு எழுபது சதவீதம் தந்தையாக வாய்ப்பு இருக்கிறது எனத் தெளிவாக போடப்பட்டிருந்தது.

அதனைப் பார்த்தவனுக்கு கண்களிலிருந்து கண்ணீர் கொட்டின.

போன உயிர் திரும்ப வந்தது போல் இருந்தது.

இரண்டு ரிப்போர்ட்டுகளும் எடுக்கப்பட்ட திகதியைப் பார்க்க இரண்டுமே அவன் இரத்த தானத்திற்காக சென்ற போது எடுக்கப்பட்டிருந்தன.

சஜீவ்விற்கு இரத்த தானம் வழங்கும் பழக்கம் இருந்தது.

அது பற்றி நித்ய யுவனிக்கு ஏற்கனவே தெரியும்.

இந்த இரண்டு ரிப்போர்ட்டும் எடுக்கப்பட்ட அன்று சஜீவ் இரத்த தானம் வழங்க சென்றிருந்தான்.

அன்று வழமை போலல்லாது ஏதேதோ காரணம் கூறி நிறைய பரிசோதனை எடுத்தனர்.

ஆனால் சஜீவ் அதனைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை.

ரிப்போர்ட்டைப் படித்தவனுக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும் காவ்யா கூறியது தான் தலையில் ஓடிக் கொண்டிருந்தது.

எவ்வளவு யோசித்தாலும் எதுவும் சஜீவ்விற்கு நினைவுக்கு வரவில்லை.

தலைவலி வந்தது தான் மிச்சம்.

சஜீவ் தலையைப் பிடித்தபடி தலைவலி மாத்திரையை எடுக்க செல்ல நித்ய யுவனியின் டயரி மேசை மீதிருந்தது அவன் பார்வையில் பட்டது.

தினமும் இரவு அதில் அவள் எழுதுவது கண்டுள்ளதால் அதனை எடுத்துப் பிரித்தவன் எதையோ வேகமாகத் தேட சற்று நேரத்தில் அவன் தேடியது சஜீவ்விற்கு கிடைத்தது.

_______________________________________________

சஜீவ் வழக்கமாக இரத்த தானம் வழங்கச் செல்லும் மருத்துவமனையில் தான் சித்தார்த்தின் தங்கை காயத்ரி வேலை பார்க்கிறாள்.

இருவருக்கும் திருமணம் நடந்து இந்தியா வந்த ஒரு வாரத்தில் சஜீவ் அங்கு செல்ல சித்தார்த் மூலம் சஜீவ்வைப் பற்றி அறிந்திருந்த காயத்ரி நித்ய யுவனியிடம் அதனைத் தெரிவித்தாள்.

உடனே நித்ய யுவனிக்கு சஜீவ்வை பரிசோதித்துப் பார்க்கத் தோன்ற காயத்ரியிடம் ஏதாவது காரணம் கூறி சஜீவ்விற்கு பரிசோதனைகளை மேற்கொள்ளக் கூறினாள்.

காயத்ரி தந்த சஜீவ்வின் ரிப்போர்ட்டைப் பார்த்த நித்ய யுவனி அதிர்ந்தாள்.

சஜீவ்விற்கு இருந்த குடிப்பழக்கத்தால் அவனின் உடலில் விந்து வளர்ச்சி தடைப்பட்டிருக்க சஜீவ் இதனை அறிந்தால் நிச்சயம் தாங்க மாட்டான் என்பது நித்ய யுவனிக்குப் புரிந்தது.

ஏற்கனவே குற்றவுணர்ச்சியில் இருப்பவன் இவ் விடயத்தை அறிந்தால் இன்னும் குற்றவுணர்ச்சிக்கு உள்ளாகுவான் என்பதால் தன்னவனைக் குணப்படுத்த அவனே அறியாமல் ஒவ்வொரு நாளும் பாலில் மாத்திரை கலந்து கொடுத்தாள்.

மறுமுறையும் சஜீவ்வே அறியாமல் பரிசோதித்த போது நித்ய யுவனி எதிர்ப்பார்த்தது போலவே சஜீவ்வின் உடலில் விந்து வளர்ச்சி சீராகி இருந்தது.

_______________________________________________

தனக்காக தன்னவள் செய்ததை எல்லாம் நினைக்கவே சஜீவ்விற்கு துக்கம் தொண்டையை அடைத்தது.

தான் அவளுக்கு எவ்வளவு கஷ்டத்தைக் கொடுத்திருந்தாலும் தான் யார் முன்னும் தலை குனியக் கூடாது என தன்னவள் எண்ணியிருப்பதை நினைத்து சஜீவ்விற்கு மகிழ்ச்சியாக இருந்தது.

நித்ய யுவனியின் டயரியின் மற்ற பக்கங்களைப் புரட்ட அன்று காவ்யாவை நித்ய யுவனியின் வீட்டில் விட்டு விட்டு வரும் போது மழையில் நனைந்தபடி வீட்டிற்கு வந்த பின் நடந்ததை எழுதி இருந்தாள்.

கையிலிருந்த டயரியை அதிர்ச்சியில் கீழே போட்ட சஜீவ் தன் மீதுள்ள கோவத்தில் தலையில் அடித்துக் கொண்டான்.

சஜீவ், “ஏன்டா இப்படி பண்ண… ச்சே… என்‌ யுவி எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பா… அவள் ஒரு வார்த்தை என்னைக் குத்தம் சொல்லல… ஆனா நான் அவளுக்கு நல்லது பண்றதா நெனச்சி என் யுவிய இன்னும் கஷ்டப்படுத்தியிருக்கேன்… ஐயோ…” என அழுதவன்,

“நா..நான்… அப்பாவாக போறேனா… எங்க குழந்தை யுவி வயித்துல வளருதா…” என அழுது கொண்டே புன்னகைத்தான்.

“நான் யுவிய உடனே பார்க்கனும்… போதும் நாங்க பிரிஞ்சி இருந்தது… இந்தத் தடவை எல்லாத்துக்கும் சேர்த்து அவ கால்ல விழுந்து கூட மன்னிப்பு கேக்குறேன்… அவ.. அவ மண்டபத்துல தான் இருப்பா… நான் உடனே கிளம்பனும்…” என சஜீவ் நித்ய யுவனியைக் காணும் ஆர்வத்தில் வேகமாக வெளியேற சரியாக கேட் போட்டது போல் அவன் முன் வந்து நின்றார் ஈஷ்வரி.

ஈஷ்வரி, “இந்த நேரத்துல எங்க போற சர்வா… ரொம்ப லேட் ஆகிடுச்சே…” என்க,

“இவங்க கிட்ட சொன்னா அந்த சுச்சி கூட சேர்ந்து ஏதாவது சதி பண்ணுவாங்க…‌முதல்ல யுவிய சமாதானப்படுத்திட்டு இவங்க ரெண்டு பேரையும் கவனிச்சிக்கலாம்…” என மனதில் நினைத்த சஜீவ்,

“ஆரவ் கால் பண்ணி இருந்தான்மா… அதான்… ஒரு பிரச்சினையும் இல்ல… நீங்க போய் தூங்குங்க… நான் சீக்கிரம் வரேன்..” என்றான் புன்னகையுடன்.

சஜீவ் முகத்தில் பல நாட்கள் கழித்து தெரிந்த புன்னகையினால் ஈஷ்வரிக்கு அவனைத் தடுக்க மனம் வரவில்லை.

ஈஷ்வரி வாசல் வரை சென்று சஜீவ்வை வழியனுப்ப அவரைப் பார்த்து கள்ளப் புன்னகை உதிர்த்த சஜீவ்,

“வரும் போது உங்க மருமகள கையோடு கூட்டிட்டு வரேன்…” என நினைத்தான்.

சஜீவ் மண்டபத்தை அடையும் போது கூட்டம் நிறைந்திருந்தது.

வாசலில் நின்ற பிரேம் சஜீவ்வைக் கண்டு கொண்டு அவன் அருகில் சென்றவன், “வாடா நல்லவனே… இதான் உன் ஃப்ரெண்ட் மேரேஜுக்கு வர அழகா… ஆரவ் செம்ம கடுப்புல இருக்கான்… போ.. போய் அவன சமாதானம் பண்ணு…” என்க,

“ஐயோ.. நம்ம நிலமை தெரியாம பேசுறானே… நான் யுவிய சமாதானம் பண்ண வந்தா இவன் ஆரவ போய் சமாதானம் பண்ண சொல்றான்…” என பிரேமை மனதில் வறுத்தெடுத்த சஜீவ் பிரேமிடம்,

“சரி மச்சான்.. நான் பார்த்துக்குறேன்… ஆஃபிஸ்ல ரொம்ப வேலைடா… அதான் லேட் ஆகிடுச்சு…” என்று விட்டு உள்ளே சென்றான்.

நித்ய யுவனியைக் கண்களால் தேடியபடியே சென்ற சஜீவ்வைப் பிடித்துக் கொண்டான் ஹரிஷ்.

ஹரிஷ், “நல்ல நேரம்டா… இப்பவாச்சும் வந்துட்ட…” என்றவன் சஜீவ்வின் காதில், “உள்ள பேச்சுலர் பார்ட்டி நடக்குது… யாரு கண்ணுலயும் மாட்டாம என் கூட வா..” என சஜீவ்வை இழுத்துக் கொண்டு சென்றான்.

பார்ட்டி நடக்கும் இடத்தில் சஜீவ்வின் மற்ற நண்பர்கள் கையில் க்ளாஸ்களுடன் ஆடிக் கொண்டிருக்க ஆரவ் இருந்த இடத்திற்கு சஜீவ்வை அழைத்துச் சென்றான் ஹரிஷ்.

சஜீவ்வைக் கண்டதும் ஆரவ் முறைக்க அவனைப் பார்த்து இளித்து வைத்த சஜீவ், “ஆஹ் கல்யாண மாப்பிள்ளை… ரொம்ப ஹேப்பி மூட்ல இருக்க போல..” என தானே வாயைக் கொடுக்க,

ஆரவ், “டேய் ஹரி… இவன பேச வேணாம்னு சொல்லுடா… செம்ம கோவத்துல இருக்கேன்… ஏதாவது நல்ல வார்த்தை சொல்லி திட்டிடப் போறேன்…” என்கவும் வாயை மூடிக் கொண்டான் சஜீவ்.

ஆம்… மறுநாள் காலையில் ஆரவ் மற்றும் பிரியாவின் திருமணம் நடக்க இருந்தது.

அதற்காகத் தான் அனைவரும் ஒன்று கூடி இருந்தனர்.

சித்தார்த், பிரேம், ஹரிஷ், ஆரவ் என அனைவரும் பார்ட்டியில் இருக்க சஜீவ்வால் நித்ய யுவனியைக் காணச் செல்ல முடியவில்லை.

மறுநாள் காலை முகூர்த்த நேரத்தை நெருங்க நண்பர்கள் ஆரவ்வைத் தயார்ப்படுத்துவதில் கவனம் இருக்க சஜீவ் மெதுவாக அங்கிருந்து நழுவினான்.

மணமகன் அறையிலிருந்து வெளியே வந்தவன் எல்லா இடத்திலும் நித்ய யுவனியைத் தேட அவளோ எங்குமே தென்படவில்லை.

ஆனால் தூரத்தில் மறைவாக நின்று கொண்டு சஜீவ்வைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள் நித்ய யுவனி.

அஞ்சலி, “நித்து… சஜீவ் அண்ணா உன்ன தான் தேடிட்டு இருக்காருன்னு நெனக்கிறேன் டி… பாவம்ல…‌நீ ஏன் அவர் முன்னாடி போகாம இருக்க…” என்க,

“போடி… அவனுக்கு தான் வாய் இருக்குல்ல… உங்க யாரு கிட்டயாவது நான் எங்கன்னு கேக்க முடியும் தானே… வாய தெறந்து கேக்குறானா பாரு… சரியான திமிரு பிடிச்சவன்… அவனாவே என்ன தேடி கண்டு பிடிக்கட்டும்… அது வரை நான் அவன் முன்னாடி போக மாட்டேன்…” என்றாள் நித்ய யுவனி.

சற்று நேரத்தில் முகூர்த்த நேரம் நெருங்க சித்தார்த் வந்து ஆரவ் அழைத்ததாகக் கூறி சஜீவ்வை மேடைக்கு அழைத்துச் சென்றான்.

பிரியாவை மேடைக்கு அழைத்து வரும் போது நிச்சயம் தன்னவள் வருவாள் என சஜீவ் எதிர்ப்பார்த்துக் காத்திருந்தான்.

ஆனால் ஐயர் மணமகளை அழைத்து வரக் கூறவும் திவ்யாவும் அஞ்சலியும் பிரியாவின் இரு பக்கமும் நின்று அவளை மேடைக்கு அழைத்து வரக் கண்டதும் சஜீவ்வின் முகம் வாடியது.

மேடைக்கு கீழே நித்ய யுவனியைத் தேட தன்னவளைத் தவிர அனைவரும் இருக்கக் கண்டவன் அவளது உடல்நிலை சரியில்லையோ என வருத்தப்பட்டான்.

நித்ய யுவனி மணமக்களுக்குப் பின்னே நின்றவர்களுடன் தான் கூட்டத்தோடு கூட்டமாக நின்றிருந்தாள்.

சஜீவ் தான் அவளை அவதானிக்கவில்லை.

சஜீவ் அப் பக்கம் திரும்பும் போது அவன் பார்வையில் படாதவாறு மறைந்து கொண்டாள் நித்ய யுவனி.

சுப நேரத்தில் ஆரவ் பிரியாவின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு அவளைத் தன் சரிபாதி ஆக்கிக் கொண்டான்.

சஜீவ்வினால் அங்கு நிற்கவே முடியவில்லை.

நித்ய யுவனியைக் காண வேண்டும் என்ற தவிப்பு அதிகரித்துக் கொண்டே இருந்தது.

தன் ஏழு மாத கருவை வயிற்றில் தாங்கியபடி அவனை நோக்கி வந்த ஜனனி, “என்னாச்சு அண்ணா… யாரைத் தேடுறீங்க… ஏன் டென்ஷனா இருக்கீங்க..” என எதுவும் தெரியாதது போல் கேட்க,

“அது யு..யு… நான்…” என வார்த்தை வராமல் தடுமாறினான் சஜீவ்.

எந்த முகத்தை வைத்துக் கொண்டு ஜனனியிடம் நித்ய யுவனியைப் பற்றி கேட்க முடியும் என நினைத்த சஜீவ்,

“எனக்கு இம்பார்டன்ட் வேலை ஒன்னு வந்திடுச்சுமா… நான் கிளம்புறேன்… பிரேமும் ஆரவ்வும் கேட்டா சொல்லிடுமா.. முடிஞ்சா அப்புறம் வர ட்ரை பண்றேன்னு சொல்லு..” என்று விட்டு ஜனனியின் பதிலைக் கூட எதிர்ப்பாராது சென்று விட்டான்.

சஜீவ் ஜனனியுடன் பேசும் வரை மறைவாக நின்று அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்த நித்ய யுவனி அவன் சென்றதும் வெளியே வர ஜனனி,

“பாவம் நித்து அண்ணா… ஆல்ரெடி குற்றவுணர்ச்சில இருக்காரு… உன்ன பார்க்கனும்னு தான் வந்திருப்பாரு… நீ ஏன் அவர் முன்னாடி போகாம பிடிவாதம் பிடிக்குற…” என்க,

கண்களிலிருந்து வடிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்ட நித்ய யுவனி, “என்னப் பார்த்தா மட்டும் நீ இல்லாம என்னால இருக்க முடியாது யுவி.. வா நாம நம்ம வீட்டுக்கு போலாம்னு சொல்லிடுவான் பாரு… அவன் இன்னும் மாறல ஜெனி… யாராவது ஏதாவது சொல்லுவாங்கன்னு தான் பார்க்குறான்… இப்போ கூட உன் கிட்ட என்ன பத்தி கேக்க முடியல அவனால.. எங்க நீ ஏதாவது கேட்டுடுவியோன்னு பயம்…” என்றாள் தன்னவனின் எண்ணவோட்டத்தை சரியாகக் கணித்தபடி.

நித்ய யுவனி, “அவன் தன் தப்ப ரியலைஸ் பண்ணி வரும் வரை நான் அவன் முன்னாடி போக மாட்டேன் ஜெனி… அவனுக்கு என்ன நடந்தாலும் நான் அவன் கூட எப்பவும் இருக்கனும்னு அவன் மனசு என்னைக்கு உறுதியா சொல்லுதோ அன்னைக்கு எந்த வித தயக்கமும் இல்லாம என்னைத் தேடி வருவான்… அது வரை நான் வெய்ட் பண்ணுவேன்…” என்க,

ஜனனி, “அப்போ அண்ணாக்கு அவர் குழந்தையைப் பத்தி தெரிஞ்சிக்க உரிமை இல்லையா… நாழு மாசம் ஆகிடுச்சு… ஆனா நீ இன்னும் நீ கர்ப்பமா இருக்குற விஷயத்த சஜீவ் அண்ணா கிட்ட சொல்லல… அவர் உரிமைய நீ அவர் கிட்ட இருந்து பறிக்கிற நித்து…” என்றாள் கோவமாக.

தன் முகத்தில் கசந்த புன்னகையொன்றைத் தவழ விட்ட நித்ய யுவனி, “நீ கூட என்னைப் புரிஞ்சிக்கலயா ஜெனி… எனக்கு மட்டும் ஆசை இருக்காதா என்ன என் சஜு ஒவ்வொரு நிமிஷமும் என் கூடவே இருந்து என்னைத் தாங்கனும்னு… ஒரு பொண்ணு கர்ப்பமா இருக்கும் போது தன் புருஷன் அவ பக்கத்துலயே எப்பவும் இருக்கனும்னு விரும்புவா… அஞ்சி வருஷமா என்னோட எல்லா ஆசைகளையும் எனக்குள்ளே போட்டு பொதச்சி வெச்சிருந்தேன்… நானும் மனுஷி தான் ஜெனி… கல்லு இல்ல.. எனக்கும் சின்ன சின்ன ஆசைகள் இருக்கு… இந்த குழந்தைய பத்தி சொன்னா சர்வேஷ் நிச்சயம் என்னைத் தேடி வருவான் தான்… ஆனா திரும்ப அந்த சுசித்ரா போல யாராவது ஏதாவது சொன்னா திரும்ப இவன் உண்மைன்னு நம்பினா நான் என்ன பண்ணுவேன் ஜெனி… முதல்ல சர்வேஷ் எல்லாரும் சொல்றத நம்புறத நிறுத்தனும்… யாராவது ஏதாவது சொன்னா அது எந்த அளவுக்கு உண்மைன்னு தெரியனும் அவனுக்கு… இதெல்லாம் அவன் புரிஞ்சிக்கனும்னு தான் இந்த பிரிவு… எனக்கு என்னை விட… சர்வேஷ விட… என் காதல் மேல அவ்வளவு நம்பிக்கை இருக்கு… நிச்சயம் நானும் சர்வேஷும் ஒன்னு சேருவோம்… அதுக்கப்புறம் சுசித்ரா என்ன அந்த விதியால கூட எங்கள பிரிக்க முடியாது…” என்றாள்.

ஜனனி புன்னகையுடன் நித்ய யுவனியை அணைத்து விடுவித்தாள்.

❤️❤️❤️❤️❤️

– Nuha Maryam –

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
3
+1
1
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்