Loading

இருள் போர்வை போர்த்தி அனைத்து உயிரினமும் ஓய்வெடுக்கும் வேளை சாலையின் இருபுறமும் நெடுநெடுவென வளர்ந்து நின்ற மரங்களோடு அங்கங்கு தென்பட்ட விளக்கு வெளிச்சத்தில் ஊர்ந்து சென்று கொண்டிருந்தது அந்த நான்கு சக்கர வாகனம் அப்போது திடீரென்று நிசப்தத்தை கிழித்தவாரு “சூர்யாஆஆஆ…..” என ஒரு பெண் அலறும் சத்தமும் அதை ஒன்றும் இல்லாமல் ஆக்குவது போல் “டம்#₹#₹##_'”*₹” என்ற சத்தத்தோடு “கிங் கிங்…..” என்று சத்தமும் வரத் தொடங்க அந்த இடம் முழுவதும் சிறிது நேரத்தில் புகை மூட்டமாக மாறியது.

“ஐயோ இந்த பொண்ணு பிரகனண்ட்டா இருக்கு”.

“சீக்கிரம்யா யாருக்குமே நினைவில்லை” என யார் யாரோ பேசும் சத்தத்தோடு ஆம்புலன்ஸின் சத்தமும் அப்பெண்ணின் காதில் மெதுவாய் விழ இரு கைகளாலும் தன் நிறை மாத வயிற்றை தாங்கிப் பிடித்தவள் “சூர்யா” என்ற பெயரையே மந்திரம் போல் உச்சரித்துக் கொண்டிருந்தாள் ஆனாலும் அவள் கண்கள் மட்டும் திறக்கவில்லை.

எத்தனை நேரம் சென்றதோ அவள் மெதுவாக கண்களை திறக்க அவளது இடக்கையை பற்றியவாறு அவள் கணவன் குர்ய நாராயணன் நின்றிருந்தான் வேகமாக அவனை ஆராய்ந்தவர் கண்களுக்கு அவனிடம் எந்த மாற்றமும் தெரியவில்லை எப்போதும் இவளை பார்க்கும் போது அவன் முகத்தில் ஒட்டி இருக்கும் அதே அழகான புன்சிரிப்புடன் கண்களில் காதலுடன் அவளை பார்த்திருந்தான்.

அவனுக்கு ஒன்றும் ஆகவில்லை என்ற திருப்தியில் இவள் உதடும் லேசாய் புன்னகைக்க அடுத்ததாய் அவள் பார்வை பதிந்தது அமுங்கியிருந்த அவள் வயிற்றில் அதைப் பார்த்தவளின் எண்ணங்கள் எங்கெங்கோ செல்ல அவனை பரிதவிப்புடன் பார்த்தாள்.

அவள் பரிதவிப்பின் காரணம் புரிந்தவனாய் அவளின் தலையில் கைவைத்து அழுத்தம் கொடுத்து தடவியவன் அவள் முகத்தோடு முகம் உரசி “டோன்ட் வொரி பேபி நமக்கு மகாலட்சுமி பிறந்திருக்கா” என்று கூறி நெற்றியில் அழுத்த முத்தமிட அடுத்த நொடி உதட்டில் நின்ற புன்னகையோடு கண்மூடியவளின் கண்களிலிருந்து வழிந்த கண்ணீர்த்துளிகள் அவள் காதின் ஓரம் சென்று மறைந்தது.

***************

“பேபி எழுந்துட்டியா மெசேஜ் பண்ணு எனக்கு உன் வாய்ஸ் கேக்கணும்னு இருக்கு நான் ஆபிஸ் ரீச் ஆயிட்டேன் நீ என்னடானா இன்னும் தூங்கிட்டு இருக்க” என்ற சத்தம் கேட்க உதட்டில் உறைந்த புன்னகையோடு நாற்பதை தாண்டிய தோற்றமுடைய பெண்ணொருவர் தன் படுக்கையிலிருந்து எழுந்தமர்ந்தார்.

சத்தம் வந்த திசையை நோக்கி கை நீட்டியவர் அங்கிருந்த தன் மொபைலை எடுத்து அலாரத்தை நிறுத்த அது இரவு மணி பன்னிரண்டை நெருங்கிக் கொண்டிருப்பதாக காட்டியது மெல்ல கட்டிலை விட்டு இறங்கியவர் தன் அறையை விட்டு வெளியேறி பக்கத்து அறை கதவை திறந்தார்.

மெல்லிய இரவு விளக்கின் வெளிச்சத்தில் நடுநாயகமாக போடப்பட்டிருந்த கட்டிலின் நடுவே இரண்டு கால்களும் தலையும் மட்டும் வெளியே தெரிய தன்னை பெட்சீட்டால் பொதிந்தவாரு மிதமான ஏசி குளிரில் இவருக்கு முதுகு காட்டி படுத்திருந்தாள் ஒர் இளம்பெண்.

அவளருகே சென்று அமர்ந்தவர் ஒர்முறை நேரத்தை பார்த்துவிட்டு அவள் தலைகோதி “ஹாப்பி பர்த்டே சூர்யா” என வாழ்த்தி நெற்றியில் முத்தமிட்டார். காதருகே கேட்ட தன் தாயின் குரலில் தூக்கம் கலைந்தவளாய் வலக்கையால் கண்களைத் தேய்த்தவாரு விழித்து பார்த்தவள் “தேங்க்யூ பேபிமா” என படுத்தவாரே அவரை அணைத்துக் கொண்டாள்.

“எழுந்திரு செல்லம் அம்மா பத்து நிமிஷத்துல ரெடி ஆகிட்டு வரேன் நீங்களும் ரெடியா இருங்க சரியா” என்றவாறு இன்னொரு முத்தத்தை அவளுக்கு வழங்கியவர் அவளை கட்டிலில் இழுத்து அமரவைத்தே சென்றார்.

தாய் வெளியேறியதும் இரு கைகளாலும் தன் முகத்தை ஒரு நொடி அழுத்த பிடித்து துடைத்துக்கொண்டவளின் முகம் மாசு மருவற்று தூரத்தில் தெரியும் நிலாவை போல் இருந்தது இடப்புறம் இருந்த ட்ரெஸ்ஸிங் டேபிள் கண்ணாடியில் தன்னைப் பார்த்து சிரித்தவள் “ஹாப்பி பர்த்டே சூர்யா” என்று கூறிவிட்டு பாத்ரூமுக்குள் புகுந்து கொண்டாள்.

அடுத்த இருபது நிமிடத்தில் தாய் ஜீன்ஸ் பேண்ட் லாங் டாப்பிலும் மகள் பட்யாலா பேண்ட் சாட் டாப்பிலும் தயாராகி அந்த அடுக்குமாடி குடியிருப்பை விட்டு கீழே வந்தவர்கள் பார்க்கிங் ஏரியாவில் இருந்த ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு கேட் அருகே இருந்த காவலாளிக்கு பாய் சொல்லிவிட்டு பறந்தனர்.

ஸ்கூட்டியில் தாயின் பின்னே இருந்து அவரின் இடையை இறுக்கமாக பற்றிக் கொண்டு தோள்பட்டையில் தன் முகத்தை வைத்தவாறு வந்தவள் முகதில் மோதிச் செல்லும் குளிர் காற்றை ரசித்தவாரு “நாம முதல்ல எங்க போறோம் கோயிலுக்கா இல்ல சர்ச்சுக்கா” என கேட்டாள்.

“பீச்”.

“ஓ.. புரிஞ்சிடுச்சு புரிஞ்சிடுச்சு ஒரே கல்லுல மூனு மாங்கா அஷ்டலட்சுமி கோயில் வேளாங்கன்னி தேவாலயம் தென் பீச் சரியா”.

“யா விடியிற வரைக்கும் பீச்ல ஆட்டம் போட்டுட்டு விடிஞ்சதும் போய் தாத்தா பாட்டியை பார்த்துட்டு நம்ம டெய்லி ரொட்டீன தொடங்க வேண்டியதுதான்”.

“பேபிமா என்னோட பர்த்டேக்கு மட்டும் லீவு போட்டுட்டு ஃபுல் டே என்னோட இருக்கலாம்ல” என்று கேட்டாள் என்ன பதில் வரும் என்று தெரிந்தும்.

“மத்த நாள் எல்லாம் உன் கூட இல்லாத மாதிரியே பேசுற நாம எப்பவும் சேர்ந்துதானே இருக்கோம் பர்த்டேக்கு உன்னோட முன்பாதி பின்பாதி மட்டும் பேபிமாக்கு போதும் நடுவுல உன் பிரண்ட்ஸ் கூட என்ஜாய் பண்ணு” என்று தோளில் சாய்ந்திருந்தவளின் தலையை தன் தலையால் லேசாய் இடிக்க அவர்கள் இருவரின் கெல்மட்டும் முட்டிக்கொண்டு “கொய்ங்ங்….” என்ற சத்தத்தை இருவரின் காதிற்க்கும் அனுப்ப இருவரும் சிரித்துக் கொண்டனர்.

சூர்யா சொன்னதுபோல பெசன்ட் நகரில் இருந்த அஷ்டலட்சுமி தெய்வத்தையும் வேளாங்கண்ணி மாதாவையும் வணங்கியவர்கள் இரவு நேரத்தின் ஏகாந்தத்தில் துள்ளி விளையாடும் துள்ளி விளையாடும் அலைகளின் அழகை ரசித்தவாறு பெசன்ட் நகர் கடற்கரையில் சிறிதுநேரம் நடை போட்டனர்.

பின் வெளிச்சம் பரவும்வரை கடல் அலைகளோடு ஆட்டம் போட்டவர்கள் விடிந்ததும் தங்கள் ஸ்கூட்டியை வேளச்சேரி நோக்கி விட்டனர் சூர்யாவின் தாய் வழி தாத்தா பாட்டியை பார்ப்பதற்கு. இவர்கள் சென்று சேரும் நேரம் மணி ஆறை தண்டி இருந்தது அங்கு ஏற்கனவே சூர்யாவின் பாட்டி மேரி இவர்களுக்காக வீட்டின் வெளியே காத்து நின்றிருந்தார்.

“குட்மார்னிங் பாட்டி” என்று ஸ்கூட்டி நின்றதும் தாவி அணைத்துக் கொண்டாள் சூர்யா.

“பிறந்தநாள் வாழ்த்துக்கள் சூர்யா” என்று நானும் அணைத்து கொண்டவராய் “கோயிலுக்குப் போய் பிரேயர் பண்ணிட்டு தானே வந்தீங்க” என்று கேட்டார்.

“ஆமா பாட்டி வேளாங்கண்ணி மாதா கிட்ட போய் இந்த வருஷமாவது எனக்கு சித்திய கொடுனு நல்லா வேண்டிக்கிட்டு தான் வந்தேன் சரி நான் போய் தாத்தாவ பார்க்கிறேன்” என்று தான் பேசியது அவருக்கு புரியும் முன்பே வீட்டினுள் புகுந்து விட்டாள் தன் தாத்தாவை தேடி.

தன் தாயிடம் விளையாடி விட்டு செல்லும் மகளையும் அது புரியாமல் இருக்கும் தாயையும் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தவரை பார்த்த மேரி “என்ன ட்ரெஸ் இது ஜெனிஃபர் உன் பொண்ணுக்கு கல்யாண வயசு வந்துருச்சு இப்ப போய் ஜீன்ஸ் எல்லாம் போட்டுட்டு வந்து நிக்குற” என்று கேட்டார்.

“மா இததான் நீங்க வருஷம் விடாம கேட்கிறீங்க நானும் ஒரே பதில் தான் சொல்றேன் ஒரு நாள் தானேமா வாங்க உள்ளே போகலாம்” என்று தாயை கையோடு வீட்டிற்குள் அழைத்து சென்றார். ஹாலிலேயே தாத்தா சிலுவையுடன் அமர்ந்து அவர் சொல்லும் கதைகளை சீரியஸாய் கேட்டுக்கொண்டிருந்தாள் பேத்தி அவர்களோடு ஜெனிஃபரும் இணைந்துகொள்ள மேரி சமையலறைக்குள் சென்றார்.

சிறிதுநேரத்தில் சமையலை முடித்தவர் அனைத்தையும் சாப்பாட்டு மேசையில் எடுத்துவைத்து “சரி சரி கதை அடிச்சதெல்லாம் போதும் வந்து சாப்பிடுங்க அப்புறம் டைம் ஆயிடுச்சுன்னு ரெண்டு பேரும் ஓடுவீங்க” என்றழைத்தார்.

நால்வரும் சேர்ந்து பேசியபடியே சாப்பிட்டு முடித்ததும் அங்கிருந்து பெசன்ட் நகரில் இருக்கும் அவர்களின் குடியிருப்பிற்க்கு சென்றனர். வந்தவர்கள் நேரே அவரவர் அறைக்குள் நுழைந்து கடகடவென்று தயாராகி அரை மணி நேரத்தில் வெளியே வந்தனர் ஜெனிஃபர் முன்பு இருந்ததற்கு சற்றும் சம்பந்தமில்லாது காட்டன் புடவையில் கொண்டையிட்டு பாந்தமாய் தயாராகி வந்திருக்க சூர்யா பிறந்தநாளுக்காக தாயார் வாங்கித் தந்திருந்தார் சுடிதாரில் தயாராகி வந்திருந்தாள்.

“பேபிமா இந்த டிரஸ்ல நான் எப்படி இருக்கேன்”.

“உனக்கென்ன அந்த சூரியனை மாதிரியே பளிச்சுன்னு இருக்க” என்று கூறியவருக்கு பதிலாய் “நானும் பார்க்கதானே போறேன் இன்னைக்கு இந்த சூரியனோட சூட்டுல எத்தனை பேர் பொசுங்க போறாங்கன்னு” என்று முகத்தில் பயத்தை தேக்கி கூறினாள் அவர்கள் ஹால் சோபாவில் அமர்ந்திருந்த சூர்யாவின் வயதை ஒத்த பெண்ணொருத்தி.

“காவியா நீ எப்படா வந்த” என்று ஜெனிஃபர் கேட்க “நீங்க வீட்டுக்குள்ள வந்தா அஞ்சு நிமிஷத்துல நானும் வந்துட்டேன்மா”.

“சாப்பிட்டியா”.

“ம் சாப்பிட்டேன்மா நீங்க சாப்டீங்களா”.

“நாங்க சூர்யா பாட்டி வீட்லயே சாப்பிட்டுட்டு வந்துட்டோம்டா”.

“அதுதான் தெரியுமே எப்பவும் உங்க பர்த்டேக்கும் சூர்யா பர்த்டேக்கும் காலை சாப்பாடு அங்க தானே” என்று கூற அவளை முறைத்த சூரியா “நான் கூட மறந்துட்டேன் நெனச்சேன் ஆனா என் பர்த்டேனு தெரிஞ்சும் நான் உன் கண்ணு முன்னாடி நின்னும் எனக்கு நீ இன்னும் விஷ் பண்ணாம அரட்ட அடிச்சுட்டு இருக்க”.

“ஆமா உனக்கு விஷ் பண்ணாதது தான் இப்ப கொறச்சல் பேசாம போய்டு சும்மாவே நீ ஏதாச்சும் வம்பிழுப்ப இன்னைக்கு பர்த்டே விஷ் பண்றேன்னு சொல்லி எத்தனை பேர் உன்கிட்ட வாங்கப்போறாங்களோ கிருஷ்ணா டென்ஷன் ஆகுதே”.

“ஹலோ மிஸ் காவியா சூர்யாவை என்ன நெனச்ச ரெண்டு மாசமா யோகா கிளாஸ் போயிட்டு இருக்கேன் இந்த ரெண்டு மாசமா என்கிட்ட உனக்கு சின்ன மாற்றம் கூடவா தெரியல”.

“ஒத்துக்குறேன் இந்த ரெண்டு மாசமா நீ யாரையும் கைநீட்டல தான் இருந்தாலும் இன்னைக்கு நினைச்சா எனக்கு பயமா இருக்கே”.

“நீ என்ன நம்ப வேண்டாம் ஆனா நான் படிச்ச யோகா மேல நம்பிக்கை வை அது என்ன கண்ட்ரோல் பண்ணும் சரி வா கலம்பலாம் பேபிமா டைம் ஆயிடுச்சு வாங்க” என்று அழைத்துக் கொண்டு வெளியேறினாள்.

மூவரும் வெளியேறி கதவை அடைக்க அதே நேரம் எதிர்வீட்டின் கதவைத் திறந்துகொண்டு வந்தவர் “சை காலையிலேயே பெத்தவன முழுங்கினவ முகத்துல முழிச்சிருக்கேன் இன்னைக்கு எப்டி இருக்கபோகுதோ” என முனங்கி கொண்டே அங்கிருந்து நகர்ந்தார். சூர்யாவும் ஜெனிஃபரும் அதைக்கண்டு கொள்ளாதவர்களாக நகர காவியா சூர்யாவின் கையை பற்றிக்கொண்டு “சாரி அப்பா அப்படி ” என்று தொடங்க “கமான் காயு அவரைப் பத்தி தெரியாதா என்ன லீவ்இட்” என்று கூறியவாறு திறந்த லிப்டுக்குள் இழுத்து சென்றாள்.

கீழே வந்த தாயும் மகளும் ஆளுக்கொரு ஸ்கூட்டியை எடுத்துக் கொள்ள கவிதா சூர்யாவின் பின்னே அமர்ந்து கொண்டாள் பின் ஒருவருக்கொருவர் விடைபெற்று இரண்டு ஸ்கூட்டியும் எதிரெதிர் திசை நோக்கிச் சென்றது.

சூர்யா கவிதா இருவரும் ஒரே அப்பார்ட்மெண்டில் பக்கத்து பக்கத்து வீட்டில் வசித்து ஒரே பள்ளியில் ஒரே கல்லூரியில் ஹாட்ஸ் ஆஃப் கிராபிக் டிசைன் பயின்று நுங்கம்பாக்கம் ஏஜே ஆட்சில் இரண்டு வருடங்களாக வேலை பார்த்து வருகின்றனர். இருவரின் குணங்கள் வேறுபட்டது என்றாலும் இத்தனை வருட பழக்கமோ என்னவோ ஒருவரின் உணர்வுகளை ஒருவர் புரிந்து தங்கள் நட்பை போற்றி பாதுகாத்து வருகின்றனர்.

பெசன்ட் நகரிலிருத்து நுங்கம்பாக்கம் செல்லும் பாதையில் ஒர் குறிப்பிட்ட இடம் வந்ததும் கவிதா சூர்யாவின் தோளை தட்டி “வேகமாக போ” என்றாள்.

“உன்னோட இதே தொல்லையா போச்சு ஏண்டி இப்டி பயந்து நடுங்குகிற ஏதாச்சு தப்பு பண்ணிட்டியா என்ன”.

“நான் என்னடி இந்த போலீஸ் ஸ்டேஷன் காக்கிச்சட்டை எல்லாம் பார்த்தாலே என் கை காலெல்லாம் நடுங்குது பாரு பாரு இப்ப கூட அந்த போலீஸ் ஸ்டேஷன் முன்னாடி ஒரு அம்மாவும் சின்ன பொணணும் அழுதுட்டு இருக்காங்க யாருமே கண்டுக்கல போலீஸ்காரர்களுக்கு எல்லாம் நெஞ்சுல ஈரமே கிடையாது”.

“சரிதான் நீ இதுக்காவது இவ்ளோ பேசுறேனு சந்தோசப் படுறதா இல்லை இதுக்கு போய் இவ்ளோ பேசுறேன்னு கவலைப் படுறதானே எனக்கு தெரியல ஒரே ஒரு நாள் உங்க அப்பாவோட பாஸ்போட் வெரிஃபிகேஷன்க்கு பொலீஸ் ஸ்டேஷன் போயிட்டு வந்து அங்கு எவனையோ போட்டு அடிச்சதுக்கு போலீஸ தப்பா சொல்லுவியா அதோட இப்ப இருக்க ஏசிபி கொஞ்சம் நேர்மையான அழு இந்த ஸ்டேஷன் கூட அவர் கண்ட்ரோல்லதான் வருது”.

“உன்னோட சொந்தக்காரரா”.

“அதெல்லாம் இல்ல நியூஸ் பேப்பர் சோசியல் மீடியா இதுல எல்லாம் பாக்குறோம்ல பேபிமா கூட சொன்னாங்க”.

“உனக்கு அம்மா சொன்னா போதுமே வேற என்ன வேணும்” என்று பேசியவாறு இவர்கள் சென்று கொண்டிருக்க இவர்கள் தாண்டி வந்த போலீஸ் ஸ்டேஷனில் ஒரு லாக்கப்பில் காவியா பார்த்ததை விட பயங்கரமாய் ஒருத்தன் அடி வாங்கிக் கொண்டிருந்தான்.

“ஐயோ… வலிக்குது…. வேண்டாம்…. மன்னிச்சிடுங்க…. மன்னிச்சுடுங்க சார்…. இனிமே பொண்ணுங்களை கிண்டல் பண்ண மாட்டேன்…. என் மேல சத்தியமா சார்…. அம்மா மேல சத்தியமா…. சார் விட்டுருங்க சார்…. வலிக்குது சார்…” என ஒருவன் புழுவைப்போல் துடித்து கதறிக் கொண்டிருக்க அவனின் கதறலை கொஞ்சம் செவிமடுக்காது தன் வலது கரத்தில் இருந்த லத்தியால் அவனைப் போட்டு புரட்டிக் கொண்டிருந்தான் ஆறு அடிக்கும் குறைவான உயரத்தில் மாநிற தேகம் கொண்டு கோபத்தில் சூரியனாய் ஜொலித்துக் கொண்டிருந்தவன்.

“பொறுக்கி நாயே உன்ன படிக்க காலேஜ் அனுப்புனா அங்கவர பொண்ணுகளுக்கு நீ பாடம் எடுக்குறியா ஏன் உன் வீட்ல இருக்க அம்மாக்கும் தங்கச்சிக்கு எடுக்க வேண்டியது தானே வெளியே தான் இருக்காங்க கூட்டிட்டு வரவா எடுக்குறியா” என்று கேட்டுக்கொண்டே ஏற்கனவே கன்னி சிவந்து இருந்த அவன் உடல்களில் மீண்டும் கோடு போட ஆரம்பித்தான்.

அவர்களுக்கு சற்று விலகி நின்றிருந்த இரண்டு கான்ஸ்டபிள்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு “பாவம் இப்பதான் காலேஜ் செகண்ட் இயர் இப்படி போட்டு அடிக்கிறாரே இந்த மனுஷன்”.

“வேற ஏதாவது தப்பு செஞ்சிருந்தா கூட இந்த அடி விழுந்திருக்காது போயும் போயும் பொண்ணுக கிட்ட வம்பு பண்ணி நம்ம சார் கிட்ட மாட்டியிருக்கான் விடுவாரா”.

“சரிதான் கொலை செஞ்சா கூட இவ்வளவு வாங்கி இருக்க மாட்டான் ஆனா ஏன்டா இந்த மனுசனுக்கு இதுக்கு மட்டும் இவ்ளோ கோவம் வருது”.

“நானும் மூணு வருஷமா உன் கூட தானே குப்பை கொட்டுறேன் எனக்கு மட்டும் ஞான திருஷ்டியா இருக்கு கண்டுபுடுச்சு சொல்றதுக்கு” என்று கடுப்பாக உள்ளே இருந்து வந்த “அம்மாஆஆஆஆ” என்ற அலறலில் மீண்டும் அங்கே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தனர் ஐயோ பாவம் என்று.

அவன் மனதிற்க்கு போதும் என்னும் வரை அடித்தவன் “இரண்டு நாள் உள்ளையே இரு அப்பதான் உனக்கு புத்தி வரும்” என்று கூறி அவன் மேலேயே லத்தியை தூக்கி எறிந்துவிட்டு தன் அறைக்கு சென்றான் அவன் ஏசிபி ஆதவ் கிருஷ்ணன்.

அவன் அறைக்குள் வந்து சேரில் அமர்ந்ததும் டேபிளில் இருந்த அலைபேசி ஒளிர்ந்து அடங்க எடுத்துப் பார்த்தான் அவன் தாய் சிவகாமியிடம் இருந்து ஆறை மணிநேர இடைவெளியில் இரண்டு மிஸ்டு கால் வந்திருந்தது உடனே திருப்பி அழைத்துவிட்டான்.

அந்த பக்கம் எடுத்ததும் “சொல்லுங்கம்மா” என்றவனின் குரல் சற்றுமுன் இருந்ததற்கு எதிர்மாறாக மென்மையாய் வந்தது.

“கண்ணா இன்னைக்கு சிவன் பார்வதிக்கு ஸ்பெஷல் பூஜை இருக்கு ஈவினிங் சீக்கிரமா வந்து அம்மாவை கூட்டிட்டு போடா”.

“அப்பா எங்கம்மா”.

“அப்பா ஆடிட் பண்ணிட்டிருக்க ஆபீஸ்ல ஏதோ பிரச்சினையாகி கேஸ் ஆயிடுச்சுடா அதுல மனுஷன் நேத்துல இருந்து டென்ஷனா சுத்திட்டு இருக்காரு இப்ப நான் கேட்டா என்ன முறை முறைனு முறைப்பாரு”.

“சரிமா நான் வரேன்”.

“சரிடா கண்ணா நீ வேலையை பாரு அம்மா வைக்கிறேன்” என்று வைத்து விட்டார் அப்போது இரண்டு முறை தன் ஆள்காட்டி விரலால் கதவை தட்டி திறந்த கான்ஸ்டபிள் “சார் அந்த பையனோட அம்மாவும் தங்கச்சியும் இன்னும் இங்கதான் இருக்காங்க” என்றான்.

“ம் வரசொல்லு” என்றவன் டேபிளில் இருந்த கம்ப்யூட்டரை ஆன் செய்ய அது ஆண் ஆவதற்கு முன் அந்த தாயும் மகளும் உள்ளே வந்து விட்டனர்.

ஒர்முறை அவர்களை பார்வையால் அலசினான் அந்தப்பெண் இப்பொழுதுதான் பள்ளிக்கு சென்று கொண்டிருக்கும் போல தன் தாயின் கைகளை கெட்டியாக பிடித்து கண்ணீருடன் நின்றிருந்தாள் தாயும் கண்களில் கண்ணீருடன் கைகூப்பி “அய்யாசாமி என் பையன் பண்ணது தப்புதான் ஆனா இனியும் எந்த தப்பும் பண்ணாம நான் பாத்துக்குறேன் இப்ப கேசு போட்ட அவ வாழ்க்கையே பாழாகிவிடும்யா” என்று கதறினார்.

“ஸ்டேஷன் கூட்டிட்டு வந்துட்டு வார்ன் பண்ணி அனுப்புவதற்கு அவன் ஒன்னும் பிட்பாக்கெட் கேஸில மாட்டல ஒரு பொண்ண மன உளைச்சலுக்கு ஆளாக்கி தற்கொலை வரைக்கும் போக வச்சிருக்கான் உங்க பொண்ணுக்கு இப்படி ஆகியிருந்த அதுக்கு காரணமானவங்கள சும்மா விடுவீங்களா”.

“தப்பு தான்யா இனிமே இப்படி நிச்சயமா பண்ண மாட்டான் நான் சொல்றேன்யா”

“நீங்க தப்பு பண்றதுக்கு முன்னாடியே சொல்லி வளத்திருக்கனும் இப்ப எனக்கு வேற ஆப்ஷன் இல்ல”.

“ஜயா சின்னப் பையன்யா அப்பா இல்லாத பைய வயசு பொண்ண வச்சுட்டு நான் எங்கய்யா அலைவேன்”.

“இங்க அழுதுட்டு நிக்குறதால எதுவும் ஆகப்போவதில்லை ஒரு வாரத்தில் அவன் வீட்டுக்கு வந்துடுவான் இது கூட அந்தப் பொண்ணோட உயிருக்கு இப்ப எந்த ஆபத்தும் இல்லாததுனால தான் இனியொரு தடவ இதே தப்பு பண்ணா ஆயுசுக்கும் வெளிய வர முடியாது நீங்க போகலாம்” என்றவன் கணிப்பொறியில் கண்பதித்தான்.

“நன்றிங்கய்யா” என்றவர் அந்த அறையை விட்டு வெளியே வந்து மகன் கிடந்த நிலையைப் பார்த்து முந்தானையால் வாயை மூடி அழுதவாறே மகளை இழுத்துக் கொண்டு சென்று விட்டார்.

🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
7
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    3 Comments