Loading

மூனு நாள் முன்ன
நானாக்கிவச்ச கருவாட்டுக் குழம்பதுவ
நாலாம் நாலு
வக்கனையா நீ திண்ண – நாம்பாத்து
நாக்கூற எச்சில் வடிச்சேன்.
ஒருவாய் கேட்டதுக்கு
ஒய்யாரமா சாஞ்சமர்ந்து
ஓரக்கண்ணோட சேர்த்து உதட்ட சுழிச்ச!
ஏன் வந்து பிறந்தாயோ?
நான் பிறந்த வகுத்தினிலே…
என்கூட ஓரண்டை இழுக்க
வரம் வாங்கி வந்தாயோ?
போடாப் பொடிப்பயலே!
நாளை மறுநாள்
நீ சித்தப்பன் வீடு போகையில
நா சமைச்சு நாந்தின்பேன்
உள்ள வந்து எட்டிப்பார்த்தா
உன்கைய உடைச்சு விறகாக்குவேன்
வில்லங்கம் பண்ணிடாத!
வேகமா வந்திடாத!
விளக்கமாறு பிய்ந்து போகும்
என் மனசு இருக்கும் கோபத்துல!
தம்பின்னு பொறந்தானே
தண்டமா வளர்ந்தானே
தவம் வாங்கி பெத்தேன்னு
என்னாத்தா சொன்னாளே
தகரத்த தங்கமுன்னு விளிச்சாளே – கட்டிக்கரும்பு
என்னைய கருப்பாயின்னு சுழிச்சாளே
கருப்பென்ன கருத்திடவா போகுது?
சிவப்பென்ன நிரந்தமாவா ஆகுது?
ராவுக்கு வைக்குற குழம்பு சோத்துல
காரத்த அள்ளிக் கொட்டல – நான்
காந்தாரிக்கு பிறந்தவ இல்ல.
பாருங்கடி பாருங்கடி,
பந்தியில் உட்காரப்போகும் வயிருங்கள
பேதிப் புடுங்கிப்போகும் எம்பொறந்தவனுக்கு!
பச்சப் புள்ளையா நானிருக்க – பாம்புக்கு
பால் வைத்தாளே எந்தாயி
பாம்பா சுருண்டிருவான் – ரா
நான் வைக்கிற பாகற்காய் கூட்டினிலே.
பள்ளியோடம் போவயில
பழம் வாங்கி தின்னானே
பாதி கொடுத்தானா? பாவிப்பய!
பள்ளத்துல விழுந்து போக!
பாம்பொன்னு கடிச்சுப்போக!
என் வயித்தெரிச்சல் அள்ளிக்கொட்டி
அவன் கட்டிலேலே படித்திருக்க
கோழிய புடிச்சு குழம்பாக்கி,
ஆட்டு இரத்தம் அவியல் பண்ணி
பாறைமீனுல பிரியாணி செஞ்சு
காடைய கடிச்சுத் திங்க
நான் சமைப்பேன்
அவன் பத்தியமிருக்கும் வேளையிலே!

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

10 Comments

  1. deiyamma

    மூணு, நாந்திண்பேன் இப்படி வராதா? கொஞ்சம் சந்தேகம்.

    அருமையான கிராமத்து பாடல் போல இருந்தது உங்கள் கவிதை.

    தம்பி கூட சண்டை போடுறதும்… பின் அவன் பத்தியம் இருக்கும் பொழுது சமைச்சு சாப்பிடுறாதா சொல்லி இருப்பதும் அருமை.. கொஞ்சம் சிரிப்பாவும் இருக்கு. ஆனா தம்பி விரதம் இருப்பானா? ஹா ஹா ஹா.. வாழ்த்துக்கள் டா..

    1. மகா சமுத்ரா
      Author

      😍😍 நன்றிகள் ❤️ Loads of Love

      மூன்றுன்னு சொல்றோம்ல அதே போக்குல எப்பையும் மூனுன்னே எழுத வருது எனக்கு…😅😅 நாந்தின்பேன்னு நான் தான் மிஸ்டேக் பண்ணிருக்கேன்🤔 சுட்டிக்காட்டியதுக்கு கூடுதல் நன்றி ❤️

      விரதம் இல்லக்கா… பாம்பு கடிச்சா பத்திய சாப்பாடு தான சாப்பிடனும்… அன்னைக்கு இவ வகை தொகையா சாப்பிடுவாளாம்😅😁😁

  2. ஹாஹாஹா…..வழக்கமாய் எல்லோர் வீட்டிலும் நடப்பதை அழகாய் பாட்டாய் சொல்லிட்டீங்க சகி ..

    வாழ்க வளமுடன் …

  3. Prashadi Krishnamoorthy

    சூப்பர் கா. எனக்கு ரொம்ப பிடிச்சுது. பாவம் யார் பெத்த புள்ளையோ இப்பிடி வசவு வாங்குது. அருமையான சமையல் நகைச்சுவை கலந்த அழகான வரிகள்.
    வாழ்த்துக்கள். ☺️

  4. ஹா ஹா செம்ம செம்ம..கிராமத்து பாஷையில் அழகா சொல்லிட்டீங்க..பேதி புடுங்கிப்போகும் எம்பொறந்தவனுக்கு😂😂😂..ரசித்து வாசித்தேன்..அருமை சிஸ்