Loading

         பகுதி -06

தேவான்ஷி நிஜமாகவே ஆவி தானா என்று குழம்பிய ஜேபி சாமியாரிடம் இதைப் பற்றிக் கூற வேண்டும் என்று எண்ணிக் கொண்டான். 

தேவான்ஷி  ஜேபி அறைக்குள் நுழைந்து கொள்ள, ஜீவன் பின்னாடியே சென்றான். 

“ஏய் இப்ப எதற்கு அவங்களை 
இப்படிப் பண்ண…?” கடுப்புடன் கேட்க 

அவளோ சாவகாசமாக “என்ன பண்ணேன் சார் …?, ஏன் சும்மா சும்மா திட்டிட்டே இருக்கீங்க …?, நான் ஒரு ஆவிங்கிற பயம் கொஞ்சமாவது உங்களுக்கு இருக்கா…!! இல்ல இன்னொரு பர்ஃபார்மன்ஸ் காட்டவா….?”  விரல் நீட்டி மிரட்டல் விடுத்தவளைப் பார்த்து “உன்னை” என்றபடி கையை அவளது கழுத்திற்கு கொண்டு சென்றவன் நறநறவென்று பல்லைக் கடித்தான். 

இதழ் பிரித்திடாது இமைகளைப் 
படபடத்து அவனைச் 
சிறுபிள்ளையாய் பார்க்க, ஏனோ ஜேபிக்கு அவளைத்  திட்டப் பிடிக்கவில்லை தன்னை மறந்து ரசித்துக் கொண்டிருந்தான். 

சற்று நேரத்தில் சுதாரித்தவன்,” ச்சே நான் என்ன பண்ணிட்டு இருக்கேன்…?  ஒரு பேயைப்போய் சைட் அடிச்சுட்டு 
இருக்கேனே…!!”   தலையலடித்துக் கொண்டான். 

அவளோ மெதுவாக, “ஏன் சார் தலையில தூசியா …! நீங்களே தட்டிக்கிறிங்க..?” என்றதும் பக்கென்று சிரித்து விட்டான். 

“இப்ப எதற்குச் சார் சிரிக்கிறீங்க… ?”கோபம் போலக் கேட்கவும்,

” நான் ஒண்ணும் சிரிக்கலை”  என்று கூறி விட்டு வெளியேறினான்.

“சிரிச்சுட்டு…  சிரிக்கலைனு 
சொல்றாரு… லூசாயிட்டாரோ 
இருக்கும் இருக்கும்…”  என்று தலையாட்டியபடி அமர்ந்து விட்டாள். 

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

“என்னய்யா ஏதாவது தகவல் கிடைச்சதா… ? அந்தப் பையனை  ஃபாலோ 
பண்ணிங்களா…?” என மந்திரவாதி கேட்க

“அந்தப் பையன் எப்போதும் போலத் தான் இருக்கான் சாமி.  கடை விட்டா   வீடு, வீடு விட்டா கடை இப்படி தான் சாமி இருக்கான்…  வேற 
மந்திரவாதியைப் பார்த்தது போலத் தெரியலை… நீங்க சொல்ற சடங்கு பூஜை எல்லாம் செஞ்சுட்டு 
வர்றான்.. பெருசா வேற எதுவும் இல்லை… கண்டிப்பாக நாம நினைச்சதை  அடைஞ்சிடலாம் “என ஜேபி பார்த்து விட்டு வரும் மந்திரவாதியின் சீடன் ஒருவன் கூறிக் கொண்டிருந்தான். 

“ம்ம்ம்… சரி.. நீ போய் அந்த தாயத்துக்களை எடுத்துக் கொண்டு வா… இன்று சிலர் என்னைப் பார்க்க வருகிறார்கள் அவர்களுக்காகத் தர வேண்டும்” என்று அறைக் கதவை அடைத்தார். 

சீடன் வெளியே வந்ததும்  ஒரு பெண்ணும்,  ஆணும் நின்று கொண்டிருந்தனர்.

“என்ன விஷயம்…?” பவ்யமாக கேட்டான் சீடன் நல்லசிவம். 

“சாமியைப் பார்க்கனும்…  அவர் கிட்ட இன்னைக்கு  வருகிறதாகத் 
தகவல் சொல்லி இருந்தேன்…  நர்த்தனானு
சொல்லுங்க அவருக்கேத் தெரியும்” என்றாள் .

“ஓஓஓ ஒரு நிமிஷம் இருங்க இதோ 
வரேன் “என்று உள்ளே நுழைந்து மந்திரவாதியிடம்   விஷயத்தைச் 
சொல்ல , அவர் உடனே உள்ளே அனுப்பும்படி பணித்தார். 

நர்த்தனா பயபக்தியுடன் உள்ளே நுழைந்தாள். 

“வணக்கம் சாமி…!!  நான் நர்த்தனா நினைவு 
இருக்குதுங்களா… ?, இது என்னோட அண்ணன்  சண்முகம்…  போன வாரம் உங்களைப் பார்க்க வந்திருந்தேனே …” என்றாள் பணிவாக

 

 “நினைவு இருக்கும்மா…!! 
உங்களுக்குத் தான் தாயத்து ரெடி பண்ணிட்டு இருக்கேன்… இதைக் கட்டு இனிமே அவருடைய திருமணப் பேச்சை யாரும் எடுக்க மாட்டாங்க… அவரும் சம்மதிக்க மாட்டார்… அப்புறம் இந்த மருந்தை அவரது சாப்பாட்டில் கலந்து  கொடுத்துடுங்க… அவரே உங்கள் பேச்சு கேட்பார்…  சொத்து முழுவதும் உங்க கைக்கு வந்திடும்… ” என்று மந்திரவாதி நம்பிக்கை அளிக்க,

 

நர்த்தனா முகத்தில் புன்னகை நர்த்தனமாடியது. 

 

கட்டாக பணத்தை தூக்கி தட்சணை தட்டில் வைத்தவள் தாயத்தையும் , மருந்தையும் வாங்கிக் கொண்டு வெளியே வந்தாள்.

“இனிமே அந்த வீட்டில் என் ராஜ்யம் தான் அண்ணே நீ வேணுன்னா பாரு இந்த கதிரவன் கிட்ட இருந்து சொத்து முழுவதும் எழுதி வாங்கிட்டேன்னா  அவன் தங்கச்சியை ஓட ஓட விரட்டி விட்டுடுவேன்… உன்னை கட்டிக்குவானு எதிர்பார்த்தா,  அவ ஏதோ ஒரு லூசை கட்டிட்டு வந்து நிற்கிறா” 
என்று அங்கலாய்த்தாள். 

“அட விடும்மா அவளுக்கு கொடுப்பனை இல்லை அவ்வளவு தான்” என்று சண்முகம்,  தங்கைக்கு ஆறுதல் அளித்தான்.

வீட்டிற்கு வந்ததும் முதல் வேலையாக  கதிர்வேலனுக்குக் கொடுக்கப்படும் மதிய உணவில்  மந்திரவாதி கொடுத்த மருந்தைக் கலந்து வைத்தாள் நர்த்தனா. 

‘இந்த தாயத்தை எப்படிக் கட்ட வைக்கிறது…  அந்த மனுசன் சாமி கும்பிட மட்டும் தான் போவாரு அவ்வளவு தான் ஒரு தடவை மாமா தந்த  கயிற்றைக் கூட கட்ட மாட்டேன்னுட்டாரே … ! இதை மட்டும் எப்படி கட்டுவாரு … ஏதாவது யோசி நர்த்தனா…  இல்ல அந்த ப்ரீத்தி  முந்திப்பாளே ‘ என்று
 நகங்களைக் கடித்துத் துப்பிய வண்ணம் நடந்து கொண்டிருந்தாள். 

சட்டென்று யோசனை தோன்றியவளாய்.,” ஹான்  அதைச் செய்தால் சரியா இருக்கும்..  சபாஷ் நர்த்தனா… நீ போட்ட ப்ளான் என்றைக்குச் 
சொதப்பி இருக்கு “என்று தனக்கு தானே பாராட்டிக் கொண்டவள்,  தான் நினைத்ததை நிறைவேற்ற 
சென்றாள். 

கதிரவன் தன் தாய் பரிசளித்த வெள்ளி அரைஞாண் கயிறு அறுந்து விட்டதால் அதனைச் சரி செய்யக் கொடுத்திருந்தான்.

அதனை தன் தம்பியைத் தான் வாங்கி வரச் சொல்லி இருந்தான். அதில் தான் தாயத்தைக் கட்டி விடலாம் என்று திட்டம் போட்டு அறைக்குள் சென்றாள். 

ரமேஷ்  தலை வாரிக் கொண்டிருக்க… நர்த்தனா உள்ளே நுழைந்தவள்,” ஏங்க உங்க அண்ணன் அரைஞாண் கயிறு சரி செய்யச் சொல்லி இருந்தாரே செஞ்சு வாங்கிட்டு 
வந்தீங்களா…?” என்று கேட்க, 

‘இவ இவ்வளவு அக்கறைப் பட மாட்டாளே !!, அதுவும் அண்ணன் விஷயத்தில் இவ அக்கறை 
படுகிறாளா ஏதோ தப்பா இருக்கே …’மனதில் நினைத்தவன்,”சரி பண்ணிட்டேன் 
நரு….  இதோ குடுக்கப் போறேன்…”  என்றவன் அவளை ஆழ்ந்து பார்த்தான். 

“ஓஓஓ சரி சரி…  சரி நீங்க ரெடியாகுங்க.. நான் என் வேலையைப் பார்க்கிறேன்” என்றபடி அலமாரியைத் திறந்தாள்.

‘என்னவோப் பண்றா ஆனால் 
என்னப் பண்றானு தான் தெரியலை…  ‘ இம்முறையும் மனதில் தான் பேசினான்… வாயைத் திறந்து பேசினால்  வாங்கிக் கட்டிக் கொள்வது யார் ? என்ற எண்ணம் தான் 

ரமேஷ் குளியலறைக்குள் புகுந்த அடுத்த நிமிடம் அந்த அரைஞாண் கயிற்றை எடுத்து 
தாயத்தைக் கோர்த்து விட்டு இருந்தாள். 

“என்னடி பண்ற… ?” கணவனின் குரலில் திடுக்கிட்டு பின் இயல்பானவள்… 

“இந்த கொடியைக் கொண்டு போய் கொடுங்க. உங்க அண்ணன் எதாவது கேட்டா…  நீங்க ரொம்ப இளைச்சுட்டிங்க
 அதனால கொடி மூணு சுத்து 
வந்திடுச்சு னு சொல்லி ஒரு சுத்தை ஆசாரி வெட்டி எடுத்து விட்டு அதை உருக்கி சின்ன தாயத்தா பண்ணிட்டாரு னு 
சொல்லுங்க.. நானும் அம்மா வாங்கித் தந்த வெள்ளியில் பண்ணினது ஆச்சேனு  மறுக்காம 
வாங்கிட்டு வந்தேன்னு சொல்லுங்க சரியா இப்போ நான் என்ன சொன்னேனோ அதை வார்த்தை மாறாம அவர் கிட்டச் 
சொல்லி இதைக் கட்ட வைக்கனும்
 புரியுதா இல்லைன்னா நான் சொத்து பிரிக்கச் சொல்லி சண்டை போடுவேன் உங்க அப்பா ஒத்துக்க மாட்டாரு அப்புறம் என் பையனைத் தூக்கிட்டு என் அம்மா வீட்டிற்கு போய்கிட்டே இருப்பேன் “என்று சொன்னவளை  மலைப்பாகப் பார்த்தான் ரமேஷ். 

அப்படியே நின்றிருந்தவனை ஒரு உலுக்கு உலுக்கினாள்.

“இடிச்சப் புளி மாதிரி இருக்காம சீக்கிரம் 
எடுத்துட்டுப் போங்க” என்று அதட்டியவள் சாவகாசமாக வெளியேறினாள். 

‘எங்க அப்பா அப்பவே சொன்னாரு… இவ 
வேண்டாம் னு…  ஒரு நிமிஷம் அவர் பேச்சைக் கேட்டு இருந்திருக்கலாம்… ‘ என்று மனதில் புலம்பியவன் ,மனைவி சொல்லே மந்திரம் என்பது போல அரைஞாண் கயிறுடன் அண்ணன்
 அறைக்குச் சென்றான். 

மனைவி சொன்னது போலவே ஒரு வார்த்தை மாறாமல் உரைத்தவன் அண்ணனை அரைஞாண் கயிற்றைக் கட்ட வைத்து விட்டே வெளியேறினான் ரமேஷ். 

கதிர்வேலன் நாற்காலியில் அமர காலை உணவைக் கொண்டு வந்து வைத்தார் சமையல்கார பெண் சித்ரா. 

“அண்ணா… இன்றைக்குப் பொங்கல் தான் பண்ணேன் கொஞ்சம் 
அட்ஜஸ்ட் பண்ணிக்கங்க மாவு அரைக்க முடியலைத் ..தீர்ந்ததை 
கவனிக்கலை” எனச் சொல்லவும்,

”  அட பரவாயில்லை மா  நானே உன்னைப் பொங்கல் 
வைக்கச் சொல்லலாம் னு இருந்தேன் நீயே வச்சுட்ட “என வேலைக்கார பெண் கூட சங்கடப்படக் கூடாது என்று சமாதானம் செய்தான் கதிர்வேலன். 

அந்த பெண் புன்னகைத்தபடி சாம்பாரை ஊற்றினாள். 

“மதியத்திற்கு என்ன அண்ணா கொடுத்து விடட்டும்…?”

“இன்றைக்குக் கிருத்திகை மா நீ சாம்பார் வச்சு  வறுவலுக்கான காய் என்ன இருக்கோ அதைச் செய்து கொடுத்து விடு போதும்” என்றவன் உண்டு முடித்து அலுவலகம் செல்ல தயார் ஆகச் சென்றான். 

“இப்படி ஒரு  முதலாளி இருந்தால்
 வேலை செய்றவங்க வருத்தமே பட வேண்டாம்…  இவருக்கு ஒரு மகராசி கழுத்தை நீட்ட மாட்டேங்கிறாளே “என நிஜமான  வருத்தத்துடன் சமைக்கச் சென்றாள் சமையல் செய்யும் பெண்.  

இது தான் கதிர்வேலன் மற்றவர்கள் தன்னால் வருந்திடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பான்…  இப்படி இருந்தாலும் தலையில் மிளகாய் அரைத்து விடுவார்கள் என்பதை உணர வேண்டுமே அவன். 

அலுவலகம் சென்றவன் தனது வேலையைக் கவனிக்க மதியம் ஆகி இருந்தது. 

பின்னர் மடிக்கணினியில்  மார்க்கெட்டில் வந்திருக்கும் புதிய பொருட்களைப் பற்றிப்  பார்த்துக் கொண்டிருக்க, மணிமேகலை அனுமதி கேட்டு உள்ளே வந்தார். 

“ஹான் வாங்க மிஸ். மேகா என்ன திடீர் என்று பார்க்கனும் னு சொல்லி இருந்தீங்க…? 
அப்புறம் காஃபி ,டீ, ஜூஸ்,எனிதிங் எல்ஸ்” என்று கேட்கவும்

மணிமேகலை புன்னகைத்தபடி , “நான் மூணையும் ஒண்ணா  குடிக்கிறது இல்லை மிஸ்டர். கதிர்வேலன்…  ஜஸ்ட் உங்க கிட்டப் போட்ட அக்ரிமென்ட் படி அமவுண்ட் செட்டில் பண்ண வந்திருக்கேன்…” என்றார்.

“ஹலோ நானும் உங்களுக்கு மூன்றையும் தருகிறேன் என்று சொல்லவில்லையே ஏதாவது ஒரு பானத்தை குடிக்கிறிங்களானு கேட்டேன்…  நான் ஜூஸ் சொல்லிடுறேன்” என்று இன்டர்காமில் அழைத்து ஜூஸை வரவழைத்தவன் விஷயத்திற்கு வந்தான்.

“ஆமாம் பணத்தை நீங்க என் அக்கவுண்ட்ல போட்டு இருக்கலாமே… ஏன் நேரில்…  செக் தந்திருந்தா கூட நாங்க அக்ஸப்ட் பண்ணிப்போமே… !” குழப்பமாகக் கேட்டான். 

“ஹான் அப்படி பேங்கில் போட்டா 
உங்களை சைட் அடிக்க முடியாதே  அதான்சார்” என்று நக்கலடித்தாள் .

கதிர்வேலன் அதிர்ந்து அவளைப் பார்த்தான்.

மணிமேகலை சிரித்தபடியே ” எந்த ரீசனும் இல்ல சார்… ஜேபி கையில் கேஷ்  வச்சிருந்தான் நான் இதை பேங்கில் போட்டு,  அதன் பிறகு பேங்க் மூலமாக உங்களுக்கு ட்ரான்சேக்ஷன் பண்ணி ,அப்புறம் அதற்கு ஒரு சர்வீஸ் சார்ஜ் கொடுத்து, எதுக்கு இதெல்லாம் னு தான் நேராக் கொண்டு வந்தேன், உங்களுக்கு 
அப்ஜெக்ஷன் இருந்தா சொல்லுங்க காதை சுத்தி மூக்கை தொடுவது போல பேங்கில் போட்டு உங்களுக்கு டிரான்ஸ்பர்  பண்ணிடுறேன்” என்று  நீளமாக பேச மணிமேகலையின் பாவனை அவனை ரசிக்க வைத்தது. 

“ஹலோ நான் என்ன கதையா சொல்லுறேன் பே னு பார்க்குறீங்க …?” என்று சொடக்கிட்டாள். 

சட்டென்று தோளைக் குலுக்கியவன் .,”ஹே அதெல்லாம் இல்ல ஒரே வார்த்தையில் கையில் கேஷ் இருந்தது கொண்டு வந்தேன் னு சொல்லி இருக்கலாம் அதை விட்டுட்டு நீட்டி முழக்கி பேசுனிங்களா அதான் பார்த்தேன்” என்றான் நமட்டுச் சிரிப்புடன்

அதற்குள் மதிய உணவு வந்து விட்டது என்று டிரைவர் கொடுத்து விட்டுச் 
சென்றார். 

“ஹான் மேகா என்னோடு லஞ்ச்சிற்கு ஜாய்ன் பண்றீங்களா … இஃப் யூ  டோன்ட் மைன்” எனத் தயங்க,

மணிமேகலையோ இயல்பாக.,”அட இதில் என்ன இஃப் யூ டோன்ட் 
மைன் வேண்டி இருக்கிறது நான் ஜாயின் பண்ணிக்கிறேன் நோ ப்ராப்ளம் பட் உங்களுக்கு மட்டும் தான் கொடுத்து விட்டு இருப்பாங்க…  ஸோ “என்று இழுத்தாள்.

“அதனால் பரவாயில்லை  ஷேர் பண்ணிக்கலாம்” என்றான் கதிர்வேலன். 

அந்த உணவு அவனுக்கும் அவன் தந்தைக்கும் சேர்த்துக்  கொடுக்கப்பட்டது…  தன் தந்தை வந்தால்  என்ன சொல்வது என்று உள்ளூர குழப்பம் இல்லாமல் இல்லை அவனுக்கு.

நல்ல வேளையாக ஆபத்பாந்தவனாய் அவனது தந்தை வந்து விட்டார். 

“வாம்மா எப்படி இருக்க… ??” என்றார் புன்னகை முகத்துடன்

“நல்லா  இருக்கேன் சார் நீங்க எப்படி இருக்கீங்க …?” என்று சம்பிரதாயமாக வினவினாள். 

“நல்லா இருக்கேன் மா…  கதிரை பார்க்க வந்தியா…  !! நீங்க பேசிட்டு இருங்கம்மா எனக்கு முக்கியமான வேலை இருக்கு
 கதிர் நான்,  அது வந்து என் ஃப்ரெண்டு ஒருத்தன்  வந்திருக்கான் நான் அவன் கூட லஞ்ச் முடிச்சுக்கிறேன் சரியா… அம்மாடி  நீ சாப்பிட்டு போம்மா” என்று விட்டு அங்கிருந்து அகன்றார். 

தன் மகனுக்குத் தன்னை வெளியே சாப்பிடும்படி சொல்லும் சங்கடத்தைக் கூட தர விரும்பவில்லை அவர்  …கதிர்வேலனும் புரிந்து கொண்டு புன்னகைத்தார். 

இருவரும் மதிய உணவைச் சாப்பிட  இங்கே நர்த்தனாவோ, நகங்கள் எல்லாம்தேவை இல்லாத
 பொருளாகக் கடித்துத்
 துப்பிக் கொண்டிருந்தாள். 

‘சாப்பிட்டு இருப்பாரா மருந்து உடனே வேலை செஞ்சிடுமா…  இல்லை தாமதம் ஆகுமா… ‘என்று குழம்பிக் கொண்டிருக்க ப்ரீத்தி வந்து அவளை மேலும்கீழும் பார்த்துக் 
கொண்டிருந்தாள். 

பாவம் நர்த்தனா அறியவில்லை இந்த  மதிய உணவு இருவரைப் 
பிரிக்க முடியாத பந்தத்தில் இணைத்து விட்டது என்று. 

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

ஜேபி கண்கள் முழுவதும் பக்தி பரவசத்துடன் அமர்ந்திருந்தான். எதிரில் இருந்த மந்திரவாதியோ, மந்திரத்தை  ஜபித்தபடி இருக்க அவர் கண் விழிக்கும் நேரத்திற்காகக் 
காத்திருந்தான் ஜேபி. 

சட்டெனக் கண் விழித்தவர், விழிகளில்  அமைதி ததும்ப ஜீவனைப் பார்த்து விட்டு,” மகனே உனது வேண்டுகோள் விரைவில் நிறைவேறப் போகிறது உன் தந்தையின் ஆன்மா உன்னைச் சந்திக்க விருப்பம் கொண்டு விட்டது… மீண்டும் அவர் உனக்குக் கிடைக்கப் போகிறார் ஆனால் வேறு ஒரு உடலோடு… நீ அந்த மனிதனை இனம் கண்டு கொள்ள வேண்டும் அவரை எந்த வித மனக்கிலேசமும் இல்லாமல் தந்தையாக ஏற்றுக் கொள்ள வேண்டும்” என்றார். 

“நிச்சயம் சாமி என் அப்பா எனக்குத் திரும்பக் 
கிடைத்தால் போதும்… ஆனால் அது என் அப்பா தான் னு எப்படிக் கண்டு பிடிக்கிறது அதை மட்டும் சொல்லுங்கள்…  யாராவது ஏமாற்றி விட்டால்… “என்று தயங்கினான் ஜேபி. 

“மகனே உனது தந்தை வேறொரு உடலில் பிரவேசிக்கப் போகிறார் என்று கூறியவன் , அந்த மனிதன் யார் என்று கூற மாட்டேனா…  ? உன் தந்தை என்பதற்கான அத்தனை அறிகுறிகளும் அந்த மனிதனுக்கு இருக்கும் அவரைப் பற்றி அவர் சொல்ல வேண்டியது இல்லை நீயே இனம் காணுவாய்” என்றார். 

ஜேபி முகம் மலர்ந்தான். 

 மந்திரவாதிக்குத் தர வேண்டிய தட்சிணையை எடுத்து வைத்தான். 

“மகனே அந்த மனிதனை நான் கண்டறிய வேண்டும் அல்லவா அதற்காக ஒரு பூஜை செய்ய வேண்டும் இது ஒரு மகா யாகம்… அதற்கான செலவினங்களும் 
அதிகம்” என்று சொல்ல ,

“எவ்வளவு செலவு ஆனாலும் பரவாயில்லை சாமி…  நீங்க சொல்லுங்க நான் கொடுத்து விடுகிறேன் என் அப்பா வந்தால் எனக்குப் போதும்” என்று முந்திக் கொண்டு கூறினான் ஜேபி. 

“மிக்க மகிழ்ச்சி மகனே…  ஒரு லட்ச ரூபாயை எமது சீடனிடத்தில் கொடுத்து விடு உடனேயே யாகத்தைத் துவங்கி விடுகிறேன் உன் தந்தையின் ஆன்மா அவ்வுடலில் புகுந்து உனக்குத் தந்தையாக இருக்கும்” என்றார்.

ஜேபி விடைபெற்றுக் கொண்டான். 

வேதாந்திடம் விஷயத்தைக் கூறி ஒரு லட்சம் வேண்டும் என்று சொல்ல அவனோ எரிமலையாகப் 
பொங்கினான். 

“ஜீவா நீ என்ன பைத்தியமா… ?  ஒரு லட்சம் அதுவும் சாமியாருக்கு… ஏற்கனவே அவர் சொன்னதால ஒரு 
பேயைக் கூட வச்சிருக்கிறது 
பத்தலையா மறுபடியும்  ரிஸ்க் எடுக்க போறீயா…!!  தேவை இல்லாத வேலைப் பண்ற ஜீவா 
எனக்கு இது சுத்தமா 
பிடிக்கலை” என்றான் எரிச்சலாக. 

“இதோப் பாரு வேதா நீயே சொல்ற…!!  ஒருஆவி நம்ம கூட வந்திடுச்சுனு 
அப்போ அப்பா வர மாட்டாரா…!! கண்டிப்பாக வருவார் எனக்கு நம்பிக்கை இருக்கு…  ப்ளீஸ் டா நீ இதுல மட்டும் தலையிடாதே “என்றான் கெஞ்சுதலாக. 

“இதற்கு மேலும் இதைப் பற்றிப் பேச எனக்கு விருப்பம் இல்லை இது உன் பணம், நீ செலவு பண்ற , நான் எடுத்துத் தரேன் “என்று கிளம்பி விட்டான் வேதாந்த். 

இவர்களின் சம்பாஷணைகளைக் 
கேட்டபடி  நின்றிருந்தாள்
தேவான்ஷி. 

“நீ என்ன பார்த்துட்டு இருக்க… அன்னைக்கு மட்டும் நான் என்
அப்பா சமாதியில் பூஜை செய்து இருந்தா இன்றைக்கு என் அப்பா உன் இடத்தில் இருந்து இருப்பார்… எல்லாம் ஒரு நிமிஷத்தில் தலை கீழாக மாறிடுச்சு “என்று அலுத்துக் கொண்டான். 

தேவான்ஷியோ அமைதியாக ,” அப்படி உங்கள் அப்பா வந்திருந்தால் நீங்க என்ன செய்து இருப்பீங்க ?” என்று கேட்டாள் தேவான்ஷி. 

“என்னப் பண்ணி இருப்பேனா அவர் சொன்ன மாதிரியே கல்யாணம் செய்து இருந்திருப்பேன்… அவர் ஆசைப்பட்ட அத்தனை விஷயங்களையும் செய்து கொடுத்திருப்பேன்…  அவரை நான் ரொம்ப கஷ்டப்படுத்தி விட்டேன் தேவா…  அவர் எவ்வளவு கஷ்டப்பட்டு எங்களை வளர்த்து இருப்பாரு நான் கொஞ்சங் கூட மதிக்காம என் போக்கிற்கு இருந்துட்டேன்… எங்களைப் பெத்தவ விட்டுட்டு ஓடிப் போனாலும் அதை மனதில் ஏத்திக்காம நாங்க தான் உலகம் என்று வாழ்ந்தவரை உதாசீனம் செய்துட்டேன் … அத்தனைக்கும் பரிகாரம் செய்யப் போகிறேன்…  அதற்கு அவர் திரும்பி வரவேண்டும் வருவார்… சாமி வரவழைத்து விடுவார் “என்றான் உற்சாகம் பொங்கும் குரலில்.

“அப்பான்னா அப்படி தான் இருப்பாங்க… எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தன் பசங்க தான் உலகம் என்று நினைப்பாங்க… என் அப்பாவுக்கு நான் என்றால் மிகவும் பிடிக்கும் அவ்வளவு சந்தோஷமா எங்களைப் பார்த்துக் கொண்டார்” என்று சிலாகித்தாள் தேவான்ஷி.

தேவான்ஷியைப் பார்த்தபடி நின்றிருந்தான் ஜேபி.

இவள் மட்டும் ஆவியாக இல்லாமல் இருந்திருந்தால் இந்நேரம் என்று தன் மனம் போன போக்கை அறியாமல் ரசித்துக் கொண்டிருந்தான் ஜேபி.

நாட்கள் நகர்ந்திட ,தேவான்ஷியின் சேட்டைகளை ரசித்தவன் அவளைப் பற்றி சாமியாரிடம் கூற வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் சுற்றிக் கொண்டிருக்க மந்திரவாதி மகாயாகத்தை துவங்கி விட்டதாகவும் பணத்தை அனுப்பி வைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

வேதாந்த் பணத்தை எடுக்க சென்றவன் வங்கியில் இருந்து அவ்வளவு பணத்தை எடுக்க இயலவில்லை என்று கைவிரித்தான்.

“உடனே பணத்தை தந்தால் தான் யாகத்தை ஆரம்பிக்க முடியும் னு சாமி சொன்னாரு டா இப்ப என்ன பண்றது …?”என்று தவித்தான் ஜேபி.

“மச்சான் நான் என்ன செய்ய திடீர் என்று ஐநூறு ரூபாய் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் எல்லாம் செல்லாது என்று அறிவிச்சுட்டாங்க… மொத்தமா பணம் எடுக்க முடியலை…  ” என்று வேதாந்த் சொல்ல ஜேபிக்கு எப்படியாவது தன் தந்தையைத் திரும்ப கொண்டு வந்து விட வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

ஒரு அறையில் ஐநூறு ரூபாய் ,ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் ,குவிந்து இருந்தன.

“மொத்தமா  இருநூறு கோடி இருக்கு… இதை மட்டும் நீங்க மாத்தி கொடுத்துட்டீங்க உங்களுக்கு மொத்தமா ஐம்பது கோடி கிடைக்கும் “என்று அந்த முக்கிய மந்திரி சொல்ல பேங்க் மேனேஜர் விழிகளை அகல விரித்தார்.

“உங்களுக்கு நம்பிக்கை இல்லையா சார்…  நாங்க அரசியல் வாதிகள் தான் ,ஆனா பண விஷயத்தில் சரியா இருப்போம் சொன்னபடி உங்களுக்கு கிடைக்க வேண்டிய பணத்தை தந்திடுவோம்…  யோசிக்காதீங்க சார் “என்று ஆசைக் காட்டினார் அந்த முக்கிய பிரமுகர்.

“நீங்க சொல்றது போல மாத்தி தரேன் சார்… ஆனா எனக்கு நூறு கோடி வேண்டும்” என்றார்.

“நூறு கோடியா… பாதிக்கு பாதி கேட்டா எப்படி சார்… “தயங்கினார் பிரமுகர்.

“சார்… இந்தப் பணத்திற்காக நான் என்ன தியாகம் செய்து இருக்கேன் னு தெரிஞ்சா நீங்க இப்படி பேச மாட்டீங்க உங்களுக்கு என்னை விட்டா வேறு வழியும் கிடையாது….  பேசாம ஒத்துக்கங்க இல்லை இன்னும் ஒரு வாரத்தில் இந்தப் பணம் எல்லாம் வெறும் காகிதம் ஆகிடும் “என்று சொல்ல பிரமுகர் வேறு வழியின்றி சம்மதம் தெரிவித்தார்.

டீலிங் பேசி முடித்து விட்டு வீட்டிற்கு வந்தவர் ,தன் மனைவியை அழைத்தார்.

“நாம எதுக்காக காத்திருந்தோமோ அது நடக்கப் போகுது போய் ஸ்வீட் பண்ணு….”என்று ஆர்ப்பரிக்க அவரது மனைவியும் குதூகலத்துடன் சமையலறைக்குள் புகுந்தார்.

“தலைவரே அவர் நூறு கோடி கேட்கிறார்…. மொத்தமா பாதிக்குப் பாதி எப்படி தலைவரே தர முடியும் “என்று பிரமுகர் கேட்க

“யோவ் அவன் கேட்டா உடனே தூக்கி கொடுத்து விடுவோமா? , நீ வேறய்யா பணத்தை மட்டும் மாத்தி தரட்டும்…  அப்புறம் குடும்பத்தோட போட்டுத் தள்ளிடலாம்… புரியுதா…!!”  என்றார் கணீர் குரலில்.

“புரிஞ்சுது தலைவரே…  நான் பார்த்துக்கிறேன்” என்றார் பிரமுகர்.

“சாமி இதே மாதிரி செஞ்சுடலாம் தானே… !!” என்று தலைவர் கேட்டதும் அந்த மந்திரவாதி புன்னகைத்தார்.

“யாமிருக்க பயமேன் சரி நான் கேட்டது தயார் தானே..!” என்று கேட்கவும் தலைவர் குறும்பாக புன்னகைத்து ,”உங்க சரக்கு உள்ளே தான் இருக்கு போங்க “என்று கதவைத் திறந்து விட்டார்.  அங்கே இருபது வயதில் ஒரு இளநங்கை அறைகுறை ஆடையுடன் அமர்ந்திருந்தாள்.

…… தொடரும்.

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
7
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    3 Comments

    1. Archana

      மூடநம்பிக்கையாலே எத்தனை பேரு இப்படி காசை கொடுத்து ஏமாறாங்க😶😶😶😶