Loading

           சித்து செய்வதெல்லாம் பிடிக்காமல் சிந்து மகிழின் உதவியை நாட, அவளோ, “அவரு சரியாத்தான் பண்றாரு” எனவும், அனைவரும் அவளை பார்த்தனர். “என்ன அப்படி பார்க்கறீங்க. அபி இந்த முடிவை எடுக்கறத்துக்கு முன்னாடியே என்கிட்ட பேசிட்டாரு. எனக்கும் இதுல முழு சம்மதம்” என்றாள்.

“எல்லாத்தையும் எங்ககிட்ட கொடுத்துட்டு நீங்க எங்க போக போறீங்க.” என சந்துரு கேட்க, “ஓ இதையெல்லாம் கொடுத்தா எங்கையாவது போய்டனுமா? அப்ப உங்க கூட இருக்க கூடாதா? இது தெரியாம போச்சே. கேட்டியா வதனி. பரவால்ல. என் பொண்டாட்டி டாக்டராக்கும். அவ என்ன பார்த்துப்பா.” என்றான் சித்து.

“டேய் மச்சி. அவன் அப்படி சொல்லலடா. நீ முதல்ல விளையாடறதை நிறுத்து. இப்ப என்ன என் மாமியாருக்கு அந்த பெரிய வீட்டை விட்டு வர மனசில்லை. அதனால அதை அவங்களே வைச்சுக்கட்டும். மத்தபடி இதெல்லாம் உன் கண்ட்ரொல்லயே இருக்கட்டும். அதுதான் சரி” என்றான் கவின்.

“இல்லடா நான் எல்லாம் யோசிச்சுதான் பண்றேன். சொல்லப்போனா உங்க கல்யாணத்தப்ப இதை கிப்டா குடுக்கலாம்னு நினைச்சேன். ஆனா ஏன் அதுவரைக்கும் வெயிட் பண்ணனும். செய்யனும்னு நினைக்கறதை எப்ப பண்ணா என்ன?” என்றான் சித்து. “இது எல்லாத்துக்கும் நீங்கதான்ம்மா காரணம்” என சிந்து ஐயம்மாளை குற்றம் சாட்டினாள்.

“இதை முன்னாடியே பண்ணி இருந்தா நான் ஏன் சண்டை போட போறேன். இப்ப என்ன என் பேர்ல இருந்தா நீங்க யாரும் அங்க இருக்க கூடாதுன்னா சொல்றேன். இப்பவும் ஒன்னும் கெட்டு போகல. எல்லாரும் அதே வீட்ல இருக்கலாம்.

சந்துரு ஆபிஸ்லயே சித்து வேலை பார்க்கட்டும். எப்படியும் நீ இவனைத்தான் கட்டிக்க போற. வெளில கௌரவமா சொல்லிக்கலாம்ல” என ஐயம்மாள் பேசிக் கொண்டே போக அவரை நிறுத்தினாள் மகிழ்.

“கொஞ்சம் நிறுத்தறீங்களா?” என வேகமாக சத்தம் போட, ஐயம்மாள், “ஏய். என்ன என்னையவே சத்தம் போட்டு பேசற. உன் தகுதிக்கு” எனும்போதே, “இங்க இருக்கிற எல்லாரையும் விட நீங்கதான் தகுதில குறைஞ்சவங்க. என்ன பிரச்சனை உங்களுக்கு.

அபியை மட்டம் தட்டி நீங்க பேசிட்டா அவரு அப்படி ஆகிடுவாரா. உங்க மனசுல என்னதான் நினைச்சுட்டு இருக்கீங்க. அவரோட அருமை இங்க இருக்கிற எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கு. ஆனா உங்களுக்கு மட்டும் தெரியல. ஏன்னா எப்பவுமே நீங்க அவரை தெரிஞ்சுக்கவே நினைக்கல.

உடலளவுல கஷ்டப்படுத்தி காயப்படுத்தறது மட்டும் கொடுமை இல்ல. மனசளவுல தனிமையை உணர வைக்கிறது தான் அதை விட கொடுமை.

ஏதோ உங்க நல்ல நேரம் நீங்க ரெண்டாவது கல்யாணம் பண்ணீக்கிட்டிங்க. யோசிச்சு பாருங்க. அபி இடத்துல சந்துரு இருந்து, உங்களை மாதிரி வேற ஒருத்தவங்க உங்க இடத்துல இருந்தா, நீங்க பண்ணதையெல்லாம் அவங்க பண்ணியிருந்தா, அப்பவும் அது சரின்னு சொல்லியிருப்பீங்களா?

இப்பக்கூட இதையெல்லாம் உங்ககிட்ட பேசறது வேஸ்ட்னு எனக்கு தெரியும். ஆனா எப்பதான் நீங்க பண்ண தப்பை உணர போறீங்கன்னு தெரியல. பணத்தால எந்த சந்தோஷத்தையும் வாங்க முடியாது. இந்த பணம் இல்லாமலாவது நிம்மதியா இருக்க முடியுமாங்கற எண்ணத்துல தான் அபி இதையெல்லாம் பண்றாரு.

இதுவரைக்கும் ஏதோ அம்மாவா போயிட்டீங்க. விட்டுக் கொடுக்க கூடாதுன்னு நினைச்சுட்டு இருந்தேன். ஆனா இனிமேல் உங்க மூணு பசங்களும் அச்சோ சாரி, உங்க ரெண்டு பசங்களும் கூட உங்க கூட வந்து இருக்க மாட்டாங்க. நீங்க அந்த பணத்தை வைச்சு வாழுங்க. இன்னும் வேணும்னாலும் தருவோம். யாரு சந்தோஷமா இருக்காங்கன்னு பார்க்கலாம்.” என்றாள் வேகமாக.

“கரெக்டா சொன்னீங்க அண்ணி. இதுக்குத்தானேம்மா ஆசைப்பட்டீங்க. இப்ப சந்தோஷம்தானே” என சந்துரு கூறவும், அனைவரையும் முறைத்துவிட்டு ஐயம்மாள் வெளியேறிவிட, கவின் வந்து, “அப்ப நீயும் அவங்க சொன்னதெல்லாம் யோசிச்சு தான் கம்பெனியை எங்க பேருக்கு மாத்தினியா?” எனக் கேட்டான்.

“டேய் அப்படி நினைச்சு நான் பண்ணலன்னு உனக்கே தெரியும். இப்படி எல்லாம் பேசினா திரும்ப வாங்கிடுவேனு ஏதாவது கற்பனை பண்ணிட்டு இருந்தா வீணா அடிதான் விழுகும்” என சித்து எகிற, “கண்டுபிடிச்சுட்டான் சிட்டு” என முனகியவன்,

“இல்ல மச்சி. அப்படி சொல்ல வரல. என்ன இருந்தாலும் நீ இருந்தா நான் கொஞ்சம் ஜாலியா இருப்பேன். எல்லாமே நானே பார்க்கனும்னா கஷ்டம்ல. அதான்” என கவின் இழுக்க,

“எப்படி ஸ்ரேயா மாதிரி இன்னும் ரெண்டு பேரு உன்ன லவ் பண்றேனு சுத்துவாங்க. நீயும் தாலி வாங்கிட்டு கோவிலுக்கு போய் திருத்துவ. அந்த மாதிரி ஜாலியா?” என சரியாக கோர்த்துவிட, உடனே சிந்து, “ஓ இதுக்குதான் நீ வேணாம்னு சொன்னீயா. பொறுப்பு எடுத்துக்க அவ்ளோ கஷ்டமா உனக்கு.

இப்ப நானே சொல்றேன். நான் படிச்சுட்டு வர்றதுக்குள்ள ஆபிஸ் மொத்தமும் உன் கண்ட்ரோல்ல வரனும். அண்ணாவை ப்ரீ பண்ணி விட்டுட்டு வேலையெல்லாம் நீயே பார்க்கிற. மன்த்லி ஒன்ஸ் வந்து செக் பண்ணீட்டு அக்கவுண்ட்ஸ் பார்த்துட்டு பிராபிட்டை எடுத்துக்கிட்டு அண்ணா வந்திடும். புரியுதா” என்றாள்.

சித்து, “எவ்ளோ விவரமா பிராபிட் பத்தியெல்லாம் பேசறா பாரேன்” என வதனியின் காதைக் கடிக்க, “அப்பப்பா. மழை பேஞ்சு ஓஞ்ச மாதிரி இருக்கு. எல்லாரும் கொஞ்ச நேரம் பேசாம உட்காருங்க. நான் போய் டீ போட்டு எடுத்துட்டு வரேன்” என்றபடி மீனாட்சி உள்ளே செல்ல, கூடவே செல்ல முயன்ற மகிழை இழுத்துக் கொண்டான் சித்து.

ஆதித்யா அகலிடம், “ஆமா. எப்பவும் நீங்க எல்லாம் இப்படிதான் ஏதாவது பண்ணீட்டே இருப்பீங்களா இல்ல” என ஆரம்பிக்க, அவளோ, “நாங்க எல்லாம் இப்படித்தான். உங்களுக்கு பிடிக்கலன்னா போய்ட்டே இருங்க” என சூடாக கூறவும், “இல்லமா. எனக்கு இப்படி இருந்தா தான் பிடிக்கும்னு சொல்ல வந்தேன்” என்றான் வேகமாக.

அதை இசை கேட்டுவிட, அகல் அந்தப் பக்கம் சென்றதும், “அகல் அக்காவுக்கு போய் நீங்க இப்படி பயப்பட வேண்டியதே இல்லண்ணா. அவங்க ஒரு டம்மி பீஸூ” என ஆதியிடம் மெதுவாக கூற, “அதுதான் எனக்கே தெரியுமே. என்ன இப்ப கொஞ்சம் கோபமா இருக்காளா. அதான் கொஞ்சம் நம்ப வழிக்கு வர வரைக்கும் இதெல்லாம் பண்ணிதானே ஆகனும்” என்றான் அலுப்பாக.

திடீரென “அவ்ளோ அலுத்துக்கிட்டு யாரும் இங்க இருக்க வேண்டாம்” என அகலின் குரல் கேட்க, “இப்படி கோர்த்து விட்டுட்டியே தங்கச்சி” என்றபடி மறுபடி அகலின் பின்னால் ஓடினான் ஆதித்யா. சந்துரு அதற்கு பிறகு எதுவும் பேசாமல் அமைதியாகவே இருக்க, அவனை கண்ட இசை என்ன நினைத்தாளோ அவளாகவே வந்து பேசினாள்.

“இப்ப ஏன் நீங்க டல்லா இருக்கீங்க சார். மாம்ஸ் மட்டும்தான் கஷ்டப்படனுமா என்ன. இப்ப இருக்கறதை விட கம்பெனியை நல்லா கொண்டு போங்க. அப்பறம் கொஞ்ச நாளைக்கு அப்பறமா எல்லாரும் ஒன்னா இருந்தா போகுது. இதுக்கு ஏன் இப்படி எல்லாரும் கவலைப்படறீங்க” என்றாள் இசை.

“தெரியல மகி. ஏனோ மனசுக்கு கஷ்டமா இருக்கு. எந்த தப்பும் பண்ணாம அண்ணா நிம்மதி இல்லாம இருக்கோன்னு தோணுது. ஆனா நீ சொல்றதும் சரிதான். கொஞ்ச நாளைக்கு இந்த பிரஷர் எல்லாம் இல்லாம இருக்கட்டும்.” என்றவன், “தேங்க்ஸ்” என புன்னகைத்து விட்டு, “உங்களோட சப்போர்ட்டும் வேணும்” என்றான்.

“நான் வேலையை ரிசைன் பண்ணலாம்னு இருக்கேன்” என சிரித்தபடியே இசை கூற, அவனும் அதிராமல் “நான் ஏற்கனவே யோசிச்சேன்” என்றான் சிரித்தபடி. “அப்படீன்னா. புரியலயே” என இசை கூற, “ஆமா வேலையை ரிசைன் பண்ணாதானே எம்.டியா ஜாயின் பண்ண முடியும்” என கண்ணடித்தான்.

“ஓ அப்படி வேற ஒரு எண்ணம் இருக்கோ. ரொம்ப கனவு காணாதீங்க. கொஞ்சம் நார்மலா பேசிட கூடாதே. இன்னும் உங்க மேல அதே கோபம் இருக்கு” என்றாள் இசை விரைப்பாக. “உனக்கு உண்மையிலேயே என்ன கோபம் மகி. நான் உன்ன லவ் பண்றேனு சொன்னதா. இல்ல அதை எல்லார் முன்னாடியும் சொன்னதா?” எனக் கேட்டான் சந்துரு.

“நீங்க லவ் பண்றதுதான் பிடிக்கல. நான் உங்களை நல்ல ஃப்ரண்டா நினைச்சேன். ஆனா நீங்க அந்த எண்ணத்துல பழகல. அதை விட வீட்ல இருக்கறவங்க என் மேல எவ்ளோ நம்பிக்கை வைச்சிருந்தா உங்க கூட பழக விட்டு இருப்பாங்க. இப்ப அதை எல்லாம் உடைச்சிட்ட மாதிரி இருக்கு” என்றாள் இசை.

“சரி. அப்ப கடைசி வரை கல்யாணமே பண்ணிக்க மாட்டீயா” என சந்துரு கேட்க, “கண்டிப்பா பண்ணீப்பேன். வீட்ல சொல்ற மாப்பிள்ளையை” என்றாள் இசை. “அப்ப காதலிக்க வேண்டாமா?” என சந்துரு கேட்க, இசை, “கல்யாணத்துக்கு அப்பறமா காதலிப்பேன்” எனவும், “ஒருவேளை காதல் வரலன்னா” என இழுத்தான் சந்துரு.

“அது எப்படி வராம போகும். கண்டிப்பா வரும்.” என உறுதியாக கூற, “நீ தேவை இல்லாம ரிஸ்க் எடுக்கற மகி. என்னை உனக்கு பிடிக்கலனாலும் பரவால்ல. நல்ல பையனா பார்த்து லவ் பண்ணி கல்யாணம் பண்ணீக்கோ” என அறிவுரை கூறினான் சந்துரு.

“பரவால்ல. ஊர்ல பாதி பேருக்கு மேல எதைப்பத்தியும் தெரியாமத்தான் கல்யாணம் நடக்குது. அவங்க எல்லாம் சந்தோஷமா தானே இருக்காங்க. அது மாதிரி இருந்துட்டு போறேன். எல்லாத்துக்கும் மேல எங்கப்பாம்மா நல்ல மாப்பிள்ளையை தான் பார்ப்பாங்க. நீங்க ரொம்ப கவலைப்படாதீங்க” என்றுவிட்டு அங்கிருந்து நகன்றாள் இசை.

அதைக் கண்டவன் இதழ்களில் ஒரு மர்ம சிரிப்பு உதிக்க, அதைப் பார்த்து,  “நீ பண்றதெல்லாம் பார்த்தா எனக்கு என்னவோ உன் டெத் கன்பார்ம்னு தோணுதுண்ணா” என்றாள் சிந்து. “தெரியாத பேயை விட தெரிஞ்ச பிசாசு மேல்தானே. எப்படின்னாலும் இவதான் உன் அண்ணி. அதை யாராலயும் மாத்த முடியாது.” என்றான் சந்துரு.

அதன்பிறகு சற்று நேரம் கழித்து ஆதித்யா அகலை தன்னோடு அழைத்து செல்வதாக கூற, அனைவரும் அகலை பார்த்தனர். அவளது முடிவு என்பது போல. அவளோ, “நான் போய்ட்டு வரேன்ம்மா” என அவர்களிடம் விடைபெற்று கிளம்ப, ஆதியோ மனதுக்குள் துள்ளி குதித்தான்.

அங்கு வீட்டுக்கு சென்றதும், உள்ளே சென்று சுற்றி பார்த்தவள், ஒரு அறையில் இருந்த ஆதியின் பொருட்களை எல்லாம் வெளியில் கொண்டு வந்து வைத்தாள்.

ஆதி என்னவென்று பார்க்க, “நான் தனியா தங்கறதா சொன்னா அம்மா விட மாட்டாங்க. அதனாலதான் உன்கூட வந்தேன். இனி அந்த ரூம் உன்னது. இந்த ரூம் என்னது. நான் பொறுமையா யோசிச்சு முடிவை சொல்ற வரை என்ன டிஸ்டர்ப் பண்ண கூடாது. சொல்லிட்டேன்” என்ற அகல், அறைக்கதவை சாற்றிக் கொள்ள ஆதியோ திகைத்து நின்றான்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
2
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்