Loading

இசை – 2

மயங்கி சரிந்த தளிரை தாங்கிய ஆத்ரேயன் “இவளோட?” என்று எரிச்சல் மிக பல்லை கடித்து தன் கோவத்தை அவனின் நண்பனான மதனின் மீது காட்டினான்.

“டேய் எருமை.. இப்ப நீ இங்க வரலனா அப்படியே உன்னைய தூக்கி தண்ணீல போட்டு சாவடிச்சுருவேன்” என்று அவன் இருந்த திசையை நோக்கி காட்டுக்கத்தலாக கத்தினான்.

குளிக்க நினைத்து நதியில் காலை  வைப்பதும் பின்பு கிடுகிடுவென நடுங்கி காலை பின்னோக்கி இழுப்பதுமாக இருந்த மதனின் செவிக்குருத்தை சரியாக தீண்டியது ஆத்ரேயனின் சொற்கள்.

“கருமம் கருமம்.. இந்த பன்னாடை கத்தறது மட்டும் எப்படிதான் கரெக்ட்டா எனக்கு கேட்குதோ? இப்ப என்ன கோவமோ?” என்று சலித்து போய் “நான் குளிக்கவே இல்ல போங்கடா” என்றவாறு பாறையில் கிடந்த துண்டை எடுத்து தோளில் போட்டு கொண்டு சத்தம் அவர்களிடம் வந்தான். 

சலிப்புடன் வந்த மதன் மயங்கி கிடந்த தளிரை கண்டதும் உண்மையிலே பதறி “அய்யோ என் தங்கச்சி.. அவளை என்னடா பண்ணி தொலைச்ச?” என்று நண்பனிடம் எகிற, முதலிலே உச்சக்கட்ட கடுப்பில் இருந்த ஆத்ரேயன் மதனின் வாயிலேயே ஒரு குத்து விட்டான்.

“அய்யோ.. அம்மாடி.. ஏன்டா ஏன்?” என்று தளிரை விட்டு விலகி அமர்ந்த மதன் வாயை மூடி கொள்ள, “என்னவரு மன்னவருனு அடிக்கடி புலம்பி நம்ம தலையை உருள வைக்கற இந்த லூசு இப்ப அவனை இங்க பார்த்தேனு சொல்லி எனக்கே மிளகாய் அறைக்க பார்க்கறா?” 

“அப்படியே செவுள்லயே ஒரு அப்பு விடலாம்னு இருந்த நேரம் அவளே மயங்கி விழுந்துட்டா.. ஒழுங்க என்னனு பாரு” என்று தளிரை அவன்மேல் சாய்த்தவன் தலையை உலுக்கியபடி அங்கிருந்து அகன்றான்.

“என்னது? அந்த மலைநாயை பார்த்துட்டாளா? அவன் மட்டும் என்கிட்ட சிக்கட்டும் அவன் குரல்வளையை கடிச்சு துப்பறேன்.. அடேய் உன்னால தான்டா நாங்க இவகிட்ட மாட்டிட்டு முழிக்கறோம்” என்று புலம்பியபடி தளிரின் கன்னத்தை மெதுவாக தட்டி எழுப்ப முயன்றான்.

அப்போதும் தளிரிடம் எவ்வித அசைவுமின்றி இருக்க, மதனுக்கு சிறு அச்சம் கவ்வியது.. “மச்சான் மச்சான்” என்று ஆத்ரேயனை அழைத்து ஓய்ந்தவன் பேசாமல் வீட்டிற்கே கிளம்பி விட்டால் என்ன? என்ற யோசனை எழுந்தது.

‘அதுதான் சரியும் கூட.. இப்போது அவளின் மனநிலையை விட அவளின் உயிர் தான் முக்கியம்’ என்று நினைத்து எழுந்த நேரம் சாவகாசமாக அவனிடம் வந்த ஆத்ரேயன் “எதுக்குடா நாய் மாதிரி கத்தற?” என்றான் அலட்சியமாக.

அவனின் அலட்சியத்தில் சினமிகுந்து “அந்த மலைநாயால தான்டா தளிர் இந்த நிலைமைல இருக்கா.. முதல்ல அவன் யாருனு கண்டுபிடிச்சு போட்டு தள்ளணும்” என்று கடிந்த மதன் “நம்ம தளிருக்கு ஏதாவது ஆகிருமோனு பயமா இருக்கு மச்சான்” என்றவன் கலங்கி நின்றான்.

மதனின் கூற்றை செவியில் வாங்காமல் தளிரை நெருங்கிய ஆத்ரேயன் “ஹேய் தளிர் எந்திரி” என்று படபடவென்று அவளின் கன்னத்தை தட்டினான்.. “டேய் டேய் ஏன்டா இப்படி அவளை அடிக்கற?” என்று மதன் பதறி தளிரை தன்பக்கம் இழுக்க முயன்றான். 

அவனை கேவலமாக ஒரு பார்வை பார்த்த ஆத்ரேயன் அவனை கண்டு கொள்ளாமல் பளாரென்று தளிரின் கன்னத்தில் விட்டான் பாருங்க ஒரு அறை! சத்தத்தை கேட்ட மதனுக்கு சர்வமும் ஒடுங்கி போக, அடிவாங்கிய தளிரோ மெதுவாக விழிப்பாவைகளுக்கு இயக்கத்தை குடுக்க முயன்று அதில் வெற்றியும் கண்டு முகத்தை சுருக்கியபடி எழுந்தமர்ந்தாள்.

மதனை பார்த்ததும் “அண்ணா என் மன்னவர்.. மன்னவரை பார்த்துட்டேன்.. அவரும் இங்க தான் இருக்காங்க.. அவங்ககிட்ட என்னைய கூட்டிட்டு போங்க” என்று தளிர் கண்ணீரை உகுக்க, “அந்த மலைநாய் எங்க இருக்கானு தெரிலயே” என்று நொந்தவாறு பெருமூச்செறிந்தான்.

நண்பனின் கனல் பார்வை தன்னை பொசுக்குவதை உணர்ந்து “அய்யோ இவன் அதுக்குமேல” என்று அவனின்புறம் பார்வையை திருப்பாமலே “சரிமா சரி.. உன் மன்னவர்கிட்ட கூட்டிட்டு போறேன்.. நீ அழுகாதமா” என்று சிறுகுழந்தையை சமாதானப்படுத்துவது போல் அவளை சாந்தப்படுத்தினான்.

“இதுக்கு தான் இவளை எங்கையும் கூட்டிட்டு போக வேணாம்னு சொன்னேன்.. அதைய யாராவது காதுல வாங்குனீங்களா? இங்க அவ எவனை பார்த்தானு தெரில… இதுல அவனை வேற கண்டுப்பிடிச்சு இவளை கூட்டிட்டு போகணுமா?” என்று கோபக்கனலை கக்கியவனை பாவமாக பார்த்தான் மதன்.

பாராபட்சம் பார்க்காமல் வருணை மொத்தி ஓய்ந்த வேதா “ப்ச் அந்த பொண்ணு பாவம்டா.. நீ ரொம்ப கலாய்க்காத.. உனக்கு கலாய்க்க ஆள் வேணும்னா என்கூட பிறந்த பிசாசை எடுத்துக்க.. யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க” என்றான் குறும்புடன்.

“எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் மச்சு.. அங்க ஹாசினி உன்னைய உருகி உருகி லவ் பண்ணுது நீ என்னடானா இப்ப பார்த்த பேய் அம்மாக்கு சப்போர்ட்டு பண்ற?” – வருண் 

“டேய்.. நான் ஹாசுவை லவ் பண்றேனு எப்பவாவது உன்கிட்ட சொன்னனா? அவ மேல எப்பவும் எனக்கு லவ் வராதுடா.. சொன்னா புரிஞ்சுக்கணும் அதைய விட்டுட்டு சின்னப்புள்ள மாதிரி அடம்பிடிச்சா கடுப்புதான் ஆகும்” – வேதா

“இருந்தாலும்… அவ பாவம் மச்சு” – வருண் 

“அப்ப நானு? அவளுக்கு என்மேல காதல் வந்தா எனக்கும் வரணுமா என்ன? சொல்ற அளவுக்கு சொல்லி பார்த்துட்டேன் இதுக்குமேல கேட்கலனா நான் எதுவும் பண்ண முடியாது” என்று காட்டமாக கூறிய வேதா விறுவிறுவென நடந்தான்.

“டேய்.. டேய்.. அதுக்கு ஏன்டா என்னைய தனியா விட்டுட்டு போற?” என்று அச்சத்தில் வருணும் அவன்பின்னே ஓடினான். முகத்தை தூக்கி வைத்து கொண்டே இருவரும் பெண்களிடம் வர, பிறையின் முகத்தில் தெரிந்த ரவுத்திரத்தில் வேதா அரண்டு போய் ஹாசினியிடம் என்னவென்று பார்வையால் வினவினான்.

“ஆண்ட்டி லைன்ல இருக்காங்க” என்றவாறு பிறையின் அலைப்பேசியை வேதாவிடம் நீட்டிட, “எங்க போனாலும் விட மாட்டாங்க போல” என்று நினைத்தவாறு போனை வாங்கி “அம்மா உனக்கு எத்தனை தடவை சொன்னாலும் புரியதா? பிறைக்கு அவனை பிடிக்கல சோ கல்யாணத்தை நிறுத்துங்க இல்லனா கடைசில அவமானப்படறது நீங்களா தான் இருப்பீங்க” என்று எச்சரிக்கையை விடுத்தான்.

ஆனால் மறுமுனையில் இருந்த இவர்களை பெற்ற அன்னையான காந்தாரி “அப்போ எங்களைய பொணமா தான் நீங்க பார்ப்பீங்க..” என்று எப்போதும் கூறும் வார்த்தையை கூறி வேதாவை மௌனமாக்கினார். தம்பியின் பேச்சு தடைப்பட்டதுமே தாய் என்ன கூறி இருப்பார் என்று புரிந்து கொண்ட பிறை விரக்தி சிரிப்பை சிந்தி “வர்றேனு சொல்லுடா” என்றாள் சுருதியே இல்லாமல்.

“வந்து தொலையறோம்” என்றவனுக்கு சினம் தலைக்கேற, “ஏன் பிறை உண்மையாவே இவங்கதான் நம்மளைய பெத்தாங்களா? கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம அவங்க பிடிவாதம் மட்டும் நடக்கணும்னு நினைக்கறாங்க” என்று வெறுப்பின் உச்சத்தில் காய்ந்தான்.

இதை காதில் வாங்காமல் “நான் கொஞ்ச நேரம் தனியா நடந்துட்டு வர்றேன்..” என்றவள் மனஅமைதியை தேடி பயணித்தாள். அவளின் பின்னே செல்ல போன ஹாசினியை வேண்டாமென்று வேதா தடுத்து “அவளே வந்துருவா” என்றான் தூரத்தில் நடந்து செல்லும் பிறையை பார்த்தவாறு.

தன்னை அறியாமல் மனதிலேறிய பாரத்தில் உலகை மறந்து நடந்து சென்ற பிறை நீர் வீழ்ச்சியை கடந்திருந்தாள். கால் போன போக்கில் நடந்த பிறையின் நிலையை கலைத்தது “தேவியே” என்று எங்கிருந்தோ வந்த குரல் ஒன்று!

அதில் தான் சமநிலை அடைந்து தான் எங்கிருக்கிறோம் என்பதை அறிய சுற்றியும் பார்த்து “ஷிட் இவ்ளோ தூரம் வந்துட்டோம்.. என்னைய காணாம வேதா பயந்துருவான்” என்று வாய்விட்டே தன்னை கடிந்து கொண்டபடி திரும்பிய பிறையை “வந்து விட்டீர்களா தேவியே” என்று வந்த குரல் தடுத்து நிறுத்தியது.

‘யாருடா அது?’ என்ற ரீதியில் இதழை சுழித்து பார்வையை திசையெங்கும் படர விட்டவள் “என்ன யாரையும் காணோம்? ஒருவேளை நமக்கு தான் ஏதாவது ஆகிருச்சோ?” என்று தீவிரமான யோசித்து “முதல்ல இங்கிருந்து போவோம்” என்று நகர முற்பட்டாள்.

“தேவியே தாங்கள் எங்களை கண்டும் காணாததுமாக செல்வது எங்களின் மனதை வருத்துகிறது.. அது போகட்டும் தேவியே! தங்களின் தேவரும் இங்குதான் உள்ளார்.. அவரை நீங்கள் காணவில்லையா?”

“உங்கள் இருவரின் வரவுக்காக தான் இத்தனை வருடங்கள் தவமாய் தவமிருக்கிறோம்.. விரைவில் இருவரும் கரம் கோர்த்து அந்த துரோகியை அழித்து தங்களுக்காக உயிரை துறந்த அம்பிகையின் மணவாளனையும் அவளையும் ஒன்றிணைக்க விரும்புகிறோம்” என்று அவ்விடத்தையே ஆக்கிரமித்து ஒழித்த குரலில் திடுக்கிட்ட பிறைக்கு லேசாக பயம் எழுந்தது.

நிற்காமல் ஓடியவள் தான் தன்னை தொடர்ந்து வந்த “தேவியே! தேவியே!” என்ற குரலை செவிமடுத்தும் கேட்காமல் தலைத்தெறிக்க ஓடி வந்தவள் மனிதர்களை கண்டதும் படக்கென்று நின்று சாதாரணமாக வருவதை போல் வந்தாள். 

முன்னெச்சரிக்கையாக தன் பின்னால் அக்குரல் வருகிறதா? என்பதையும் சோதித்தவாறே! இவள் பயத்தில் ஓடி வந்ததை மட்டும் வருண் பார்த்திருந்தால் அவ்வளவுதான் இன்னும் பத்து வருடங்கள் கழித்து கூட இதை கூறி அவளின் மானத்தை வாங்குவதையே தலையாய கடமையாக கொண்டிருப்பான்.. பிறையின் நல்ல நேரம் இவள் வந்ததை யாரும் கவனிக்கவில்லை.

“சீக்கிரம் இந்த இடத்தை காலி பண்ணிட்டு ஊரை பார்த்து ஓடணும்.. அங்க தான் வச்சு செய்யறாங்கனு பார்த்தா இங்கையுமா? இப்ப நம்மகூட பேசுனது பேயா? மனுசனா? ஒண்ணுமே புரியலயே” என்று வெகுவாக குழம்பி இருந்தாள் பிறை.

தளிரால் கொழுந்து விட்டு எரிந்த தீயை அணைக்க ஆத்ரேயனும் அவ்விடத்தை விட்டு வேறுபக்கம் சென்றிருந்தான். “இவளுக்கு என்னதான் ஆச்சுனு இப்ப வரைக்கும் புரியல.. யாரு அந்த மன்னவரு.. எங்களுக்கு தெரியாம காதலிக்கறவளும் இல்லயே இவ” என்ற பலவாறான குழப்பத்தை தாங்கி இருந்தது ஆடவனின் மனது.

“தேவரே அம்பிகை கூறுவது முற்றிலும் உண்மை.. அவளின் மணவாளனை அவள் கண்டு விட்டாள்.. தங்களின் சகோதரனும் நட்புக்கு இலக்கணமாகவும் திகழ்ந்த வேந்தன் அவர்களும் இங்குதான் உள்ளார்.. இருவரையும் சேர்த்து வைப்பதாக சபதம் எடுத்த நீங்களே சினமிகுந்தால் அம்பிகை எவ்வாறு தாங்குவாள்?” என்று திடீரென்று ஒலித்த கூற்றில் ஒரு வினாடி ஆத்ரேயனின் இதயம் நின்று துடித்தது.

யாரென்று சுற்றியும் தேடியவனின் விழிகளில் கண்ணுக்கு எட்டும் தூரம் வரைக்கும் எவரும் அகப்படாமல் போக, “எவன்டா அது? தைரியம் இருந்தா முன்னாடி வந்து பேசுடா.. எவ அந்த அம்பிகை.. என் சரித்திரத்துல எவரையும் சேர்த்து வெச்சதா வரலாறே இல்ல” என்று கெத்தை விடாமல் பதில்மொழியை உரைத்தான்.

இதற்கு எந்த எதிர்வினையும் வராதிருக்க, “ச்சை இது ஒரு காடுனு இங்கதான் வரணும்னு அந்த பன்னாடை அடம்பிடிச்சு கூட்டிட்டு வந்துச்சு.. மவனே இருடா வந்து உன்னைய கைமா பண்றேன்” என்றான் கடுப்பு மிகுதியில்.

ஒருபுறம் பிறை தன் நண்பர்களுடன் விருப்பமில்லாத திருமணத்திற்காக கிளம்பி இருக்க, மறுபுறம் மதனை ஒருவழியாக்கிய ஆத்ரேயனும் தளிரை கட்டாயப்படுத்தி கிளம்ப ஆயத்தமாக்கி இருந்தான்.

தங்கள் தேவன், தேவியை தடுக்கும் வழியறியாது அமைதியாக ஓடி கொண்டிருந்த நதி, அவர்கள் செல்வதை உணர்ந்து “நில்லுங்கள் தேவன் தேவியே” என்றவாறு சீற்றத்துடன் எழுந்தது. அதில் என்ன கண்டார்களோ ஆத்ரேயன் உறுத்து விழித்து பார்த்தானென்றால் பிறையோ “என் அழகியே!” என்று முணுமுணுத்தவாறு அப்படியே மண்ணில் சரிந்தாள்.

நதியின் ஆக்ரோஷமான சீற்றத்தை கண்டு அங்கிருந்தவர்கள் பதறி கத்த, “நம்ம அவ்வளவுதானா?” என்று அச்சத்தில் உறைந்த மதன் தளிரின் கரங்களை இறுக்கி பிடித்தான். 

வருணும் “அடேய் நான் சிங்கிளாவே சாக போறேன்டா.. மச்சு சாகறப்பவும் ஒண்ணாவே சாவோம்” என்று வேதாவின் கையை விடாமல் பிடித்து கொள்ள, “சாகறப்பவும் சொல்றேன் வேதா உன்மேல நான் வெச்ச காதல் உண்மை.. லவ் யூ டா” என்றவாறு ஹாசினியும் வேதாவின் மறுகையை பிடித்து கொண்டான்.

இவ்வளவுக்கும் வேதாவிடம் எவ்வித அசைவும் காணப்படவில்லை.. உயரே எழுந்த நதி நீரையே வெறித்து பார்த்தவனுக்கு இளம்பாவை ஒருத்தி வாளால் தன் கழுத்தை அறுத்து கொண்டு விழும் காட்சியே தென்பட, அதை கண்டுதான் தன்னிலையை இழந்திருந்தான்.

தளிரின் விழிகளிலும் அவளின் மன்னவர் சாகும் நொடியே காட்சியாக தெரிய, “மன்னவரே! இதைய காணதான் எம்மை மட்டும் விட்டு சென்றீர்களா?” என்று தலையில் அடித்து கொண்டு கதறினாள்.

இதுதான் தங்களின் கடைசி நிமிடமோ? என்ற அச்சத்தில் மனிதர்கள் கத்த தொடங்க, அச்சத்தத்தை மட்டுமின்றி அவர்களையும் தனக்குள் இழுத்து கொண்டு அடங்கியது அந்நீர் வீழ்ச்சி.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
5
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    6 Comments

    1. Archana

      என்னடா இது யார் அந்த பீஸூ வேதாவே சச்சக் பண்ணி போட்டு தள்ளினது😳😳😳

    2. Janu Croos

      இந்தாமா ஹாசினி அவனுக்காக காலாகலமா ஒருத்தி வெயிட் பண்ணிட்டு இருக்காள்….இதுல நீயும் அவன டாவடிக்குறேன்னு சொன்னா அவன் என்ன பண்ணுவான்…இவ்வளவு காலமா நீ அவன் கூடவே இருந்திருக்க லவ் பண்றதுனா அவன் எப்பவோ லவ் பண்ணி இருப்பான்…ஆனா திடீர்னு கண்ணுமுன்னாடி வந்து நின்ன தளிர் மேல வந்த ஒரு உணர்வு கூட உன் மேல வரல மா…புரிஞ்சுக்கோ…
      டேய்…பெத்த பொண்ணுக்கு புடிக்காத கல்யாணத்தை பண்ணக வைக்க ஏன்டா இவ்வளவு துடிக்குறீங்க…
      இந்தாப்பா நதி…நதினா பொறுமையா இருக்கனும்…இப்படியா ஆத்திரப்படுறது…
      என்னனென்ன மர்மம் எல்லாம் காத்திருக்குனு தெரியலயே….

      1. Multishot vedi
        Author

        Athana vedha vea pavam.. avanukaga rendu ponnuga adichuka poratha matum varun parthan thukkula thongiruvan😂😂😂😂😂