Loading

 

 

 

 

 

மறுநாள் காலை ஆராதனா அலுவலகத்திற்கு கிளம்பி வீட்டை விட்டு வெளியே வர “ஆரா” என்று யுவன் அழைத்தான்.

 

“ஹாய்… என்ன?”

 

“வா ஒன்னா போகலாம்”

 

“நான் வரல ஃபேக்டரி க்கு”

 

“ஆபிஸ் தான் டி போறேன். வா” என்று கூறி அழைத்துச் சென்றான்.

 

“என்ன திடீர் னு ஒன்னா போகலாம் னு….?”

 

“அதுவா… இன்னைக்கு அபிஸியலா நம்ம கல்யாணத்த பத்தி எல்லாருக்கும் சொல்ல போறேன்”

 

“நிஜம்மாவா? ஏன்?”

 

“சும்மா”

 

“பொய்…”

 

“ம்ம்ம்….. இனி சங்கவி ஆபிஸ்க்கு வர கூடாது. அதுக்காக.”

 

“பாருடா… இந்த பதில் ஓகே.”

 

இருவரும் பேசிக்கொண்டே ஒன்றாக அலுவலகம் வந்து இறங்கினர். அந்த விசயமே அலுவலகம் முழுவதும் பரவி இருக்க யுவன் எல்லோரையும் அழைத்து திருமண விசயத்தை கூறி விட்டான். எல்லோரும் சந்தோசமாக வாழ்த்து தெரிவித்தனர். சிலர் யாமினியை பற்றி யோசித்தனர்.

 

“கல்யாணத்துக்கு போனஸ் உண்டா?” என்று சிலர் வினவ “இம்ரான் கொடுப்பான்” என்றான் யுவன்.

 

“ஏய்…” என்று இம்ரான் அலற “ஃப்ரண்ட் காக இத கூட செய்ய மாட்டியா?” என்று கேட்டான்.

 

இம்ரான் முறைக்க “சும்மா சொன்னேன். போனஸ் பத்தி இன்னொரு நாள் சொல்லுறேன். நீங்க வொர்க்க பாருங்க” என்று கூறி விட்டு ஆராதனாவுடன் சென்று விட்டான்.

 

*.*.*.*.*.*.

 

யாமினிக்கு மட்டுமல்ல சங்கவிக்கும் யுவன் இப்படி சொன்ன விசயம் சென்று சேர்ந்தது. யாமினிக்கு மனம் உடைந்து போனது. எப்படியும் இருவரும் திருமணம் செய்ய மாட்டார்கள் என்று நம்பி இருந்தாள். இந்த செய்தி அவள் மனதை பதம் பார்க்க அறைக்குள் அடைந்து கொண்டாள்.

 

சங்கவிக்கு தான் கோபம் கொழுந்து விட்டு எரிந்தது. அதை அணைத்தே தீர வேண்டும் என்ற முடிவுக்கு வந்தாள். ஆராதனாவின் மனதில் விசத்தை தூவியே ஆக வேண்டும். எதோ ஒன்றை செய்து ஆராதனாவையும் யுவனையும் பிரித்து விட்டால் பல கோடி மதிப்புள்ள சொத்துக்கு அதிபதியாகி விடலாம்.

 

குறுக்கு பத்தி வேலை செய்ய தீவிரமாக யோசிக்க ஆரம்பித்து விட்டாள்.

 

இது எதையும் அறியாத யுவனும் ஆராதனாவும் கல்யாண கனவில் மூழ்கி இருந்தனர். மதிய உணவிற்கு பிறகு ஆராதனா கைப்பையின் புதிய டிசைன்களை வரைய அமர்ந்தாள். அந்நேரம் யுவன் வந்து சேர்ந்தான்.

 

“என்ன இங்க வந்து உட்கார்ந்துட்ட?” என்று ஆராதனா கேட்க யுவனிடம் பதில் இல்லை. வரைவதை விட்டு விட்டு நிமிர்ந்து பார்த்தாள். கன்னத்தில் கை வைத்து அவளை ரசித்துக் கொண்டிருந்தான்.

 

அருகில் இருந்த காகிதத்தை கசக்கி அவன் மீது எரிந்தாள். அப்போதும் அவன் அசையாமல் இருக்க தண்ணீரை எடுத்து ஊற்றுவது போல் பயம் காட்டினாள். அப்போதும் யுவன்‌ அசையவில்லை.

 

“ஊத்திடுவேன்னு பயமா இல்ல?” என்று கேட்க இடவலமாக தலையசைத்தான்.

 

“இப்போ எதுக்கு இங்க வந்து உட்கார்ந்து இருக்க?”

 

“போர் அடிச்சது”

 

“சோ…?”

 

“இன்ட்ரஸ்ட்டா எதாச்சும் பண்ணனும் னு தோனுச்சு”

 

“அதுக்கு?”

 

“உன்ன பார்க்க வந்தேன்”

 

“என்ன பார்த்தா போர் போயிடுமா?”

 

யுவன் மேலும் கீழும் தலையாட்ட ஆராதனாவிற்கு சிரிப்பதா முறைப்பதா என்று தெரிரவில்லை.

 

“லூசாகிட்டியா யுவா? போய் வேலைய பாரு”

 

“எனக்கு உன்ன பார்க்க தான் பிடிச்சு இருக்கு”

 

“அப்போ வேலை?”

 

“அத அப்புறம் பார்த்துக்கலாம்”

 

“நல்ல விபி… இரு அப்பா கிட்டயும் மாமா கிட்டயும் போட்டு கொடுக்குறேன்”

 

“நோ ப்ராப்ளம்”

 

அவன் போக மாட்டான் என்று புரிய ஆராதனா சிரித்துக் கொண்டாள்.

 

“நிஜம்மாவே வேலை இல்லையா?” – ஆராதனா

 

“இருக்கு. ஆனா உடனே பார்க்க எதுவும் இல்லை.”

 

“நீ ஏன் ஒரு பி.ஏ வச்சுக்க கூடாது?”

 

“முதல்ல ஒருத்தன் இருந்தான். பர்ஸனல் ப்ராப்ளம் னு வேலைய ரிசைன் பண்ணிட்டான். அடுத்து ரெண்டு பேர் வந்தாங்க. வேலைய தவிர எல்லாத்தையும் பார்த்தாங்க. சோ தூக்கிட்டேன்”

 

“ஓ… லவ்ஸா?”

 

“ம்ம்…”

 

“பாரேன்… உன்ன லவ் பண்ணுறவங்க லிஸ்ட் கூடிட்டே போகுது”

 

“உன் பின்னாடி சுத்துனவங்கள விடவா?”

 

“என் பின்னாடி சுத்தி யார பார்த்த நீ?”

 

“காலேஜ் ஸ்கூல்ல பலர் சுத்தி பார்த்து இருக்கேன்”

 

“ஸ்கூல் ஓகே. காலேஜ் பத்தி எப்படி தெரியும்? வேவு பார்த்தியா?”

 

“உன்ன அவ்வளவு தூரம் படிக்க அனுப்பிட்டு சும்மா இருப்போம் னு நினச்சியா?”

 

“என்னலாம் தெரியும்? சொல்லு கேட்போம்”

 

“நிறைய பேர் இருக்காங்களே யார சொல்றது? ம்ம்…. கேண்டீன்க்கு நீ காபி குடிக்க போகும் போது காபி காலி ஆயிடுச்சு னு  ஒருத்தன் அவன் வாங்குனத உனக்கு கொடுத்தான். நீ வேணாம் னு சொல்லிட்டு போயிட்ட. அவனும் உன் பின்னாடி சுத்துனவன் தான். ஜெராக்ஸ் எடுக்க போகும் போது உன்ன பார்த்ததும் வழி விட்டு உன்ன முதல்ல எடுக்க விட்டவன். நீ லைப்ரரில இருக்க எல்லா நேரமும் உன் முன்னாடி உட்கார்ந்து இருந்தவன். இப்படி பலர சொல்லலாம்”

 

“ஆனா ஒருத்தன கூட எனக்கு தெரியலையே?”

 

“அதுக்கு நீ உன் ஃப்ரண்ட் ரெண்டு பேருக்கு தான் நன்றி சொல்லனும்”

 

“ஏன்?”

 

“அவங்கள காதலுக்கு தூது போக சொல்லுவானுங்க. உடனே… அய்யயோ ஆரா கிட்ட என்னால திட்டு வாங்க முடியாது பா னு அலறி ஓடிருங்க”

 

“ஹா ஹா… ஆக்சுவலி என் கிட்ட ஒரு பொண்ணு வந்து சொன்னா. நான் அவள திட்டிட்டேன். அதுனால பூஜாவும் கீர்த்தனாவும் அலறி இருப்பாங்க”

 

“எப்போ?”

 

“பர்ஸ்ட் இயர்ல. ஹாஸ்டல் ல”

 

“ஓ… இது எனக்கு தெரியல. ஆனா காலேஜ்ல நடந்த எல்லாம் தெரியும்”

 

“அதெல்லாம் உனக்கு எப்படிடா தெரியும்?”

 

“அங்க ஒரு ப்ரொபஸர எனக்கு தெரியும்”

 

“என்னது? அவரா உனக்கு இத சொன்னாரு?”

 

“இல்ல. ஒரு அட்டண்டரயும் தெரியும். வாட்ச்மேன கூட தெரியும்”

 

“இதெல்லாம் காலேஜ்க்கு தெரிஞ்சா என்ன ஆகும் தெரியுமா?”

 

“அவங்களுக்கும் தெரியும். என்ன போல பலர் இந்த வேலைய பார்த்துருப்பாங்க போல”

 

“காலேஜுமா?”

 

“ம்ம். ப்ராப்பர் ரீசன் சொல்லிட்டா ஒன்னும் சொல்ல மாட்ராங்க”

 

“அடப்பாவிங்களா?? என்னோட ஃப்ரீடம்ல தலையிட்டு இருக்க நீ”

 

“இல்ல. உன் பாதுகாப்பு தான் முக்கியம். மத்தபடி உன்னோட எல்லா விசயத்திலயும் நான் தலையிட்டது கிடையாது”

 

“இதுவே அதிகம் தான்.” என்று ஆராதனா முறைக்க யுவன் சிரித்தான்.

 

“அப்போ உனக்கு ப்ரப்போஸ் பண்ண விசயமும் தெரியும்?” என்று கேட்டதும் யுவன் மேலும் சிரித்தான்.

 

“எல்லாம் தெரிஞ்சுட்டே தெரியாத மாதிரி நடிச்சுருக்க… ஃப்ராடு” என்றவள் அங்கிருந்த காகிதங்களை ஒவ்வொன்றாக கசக்கி அவன் மீது எறிந்தாள்.

 

“குப்பையாக்காத ஆரா…”

 

“என்ன ஏமாத்திட்ட நீ”

 

“அப்படிலாம் எதுவும் இல்ல. பட் அவங்க கிட்ட சொன்ன போல நமக்கு கல்யாணம் நடக்க போகுது இல்ல?”

 

“எந்த நேரம் சொன்னேன்னு தெரியல.”

 

“எல்லாம் நல்ல நேரம் தான். இல்லனா அப்படியே நடக்குமா?”

 

ஆரா‌ உதட்டை சுழிக்க யுவன் மீண்டும் அவளை ரசிக்க ஆரம்பித்து விட்டான்.

 

*.*.*.*.*.

 

வீட்டில் இருவரின் நிச்சயதார்த்திற்கு நாள் குறித்து விட்டனர். அதை யுவன் தன் நண்பர்களுக்கு தெரிவிக்க எல்லோரும் ஒன்றாக சந்திக்க ஏற்பாடு செய்தனர். ஞாயிறு எல்லோருக்கும் விடுமுறை என்பதால் அன்று சந்திக்க முடிவு செய்தனர்.

 

வாரம் முழுவதும் யுவனும் ஆராவும் தங்களது காதல் உலகில் மிதந்தனர். ஞாயிற்றுக்கிழமை யுவன் தன் நண்பர்களை பார்க்க கிளம்பிச் சென்றான்.

 

பாதி தூரம் போய்க் கொண்டிருக்கும் போது சங்கவி சாலையில் நின்று கையை காட்டினாள். யுவன் யோசனையுடன் பைக்கை நிறுத்தினான்.

 

“என்ன இங்க நிக்கிற?”

 

“சாப்பிங் வந்தேன். கார் திடீர் னு ஸ்டார்ட் ஆக மாட்டிது. என்ன வீட்டுல ட்ராப் பண்ணிடுறியா?”

 

யுவன் நெற்றியை சுருக்கினான். காராக இருந்தால் அவளை பின்னால் அமர வைத்து விடலாம். பைக்கில் அவன் யாரையும் அமர விட மாட்டான் என்று தெரிந்தும் கேட்கிறாளே. எப்படி மறுப்பது என்று யோசித்தான்.

 

“என்ன யுவா? விட்டுறியா”

 

“சாப்பிங் னு சொன்ன? கையில எதுவும் இல்லையே?”

 

“ஹான்.. அது கார்ல இருக்கு. ட்ரைவர் வந்து எடுக்கும் போது எடுத்துக்கலாம் னு விட்டுட்டேன். நாம போகலாமா?”

 

யுவனுக்கு எதுவும் சரியில்லை என்று தோன்ற மறுக்க என்ன செய்வது என்று யோசித்தான். அந்நேரம் அவன் கண்ணில் ஆராதனா பட்டாள்.

 

உடனே “சாரி.. எனக்கு வேற வேலை இருக்கு. நான் வேற பக்கம் போறேன்” என்றவன் சத்தமாக “ஆரா” என்று அழைத்தான். கைப்பையில் எதையோ தேடிக் கொண்டிருந்த ஆரா யுவனை பார்த்ததும் வேகமாக அவனிடம் ஓடி வந்தாள்.

 

“எ…” என்று அவள் வாயை திறக்கும் முன் “கிளம்பு லேட்டாகுது.. நாங்க கிளம்புறோம் பை” என்று ஆராவிடம் ஆரம்பித்து சங்கவியிடம் முடித்தான்.

 

என்ன சொல்கிறான் என்று முழித்த ஆரா பக்கத்திலிருந்த சங்கவி முறைப்பதை கவனித்தாள். உடனே புரிந்து விட “பை சங்கவி” என்று கூறி விட்டு யுவன் பின்னால் ஏறி அமர்ந்து கொண்டாள்.

 

“நீ எதாவது கேப் பிடிச்சு போயிக்கோ சங்கவி.” என்று கூறி விட்டு உடனே கிளம்பி விட்டான்.

 

சங்கவி கோபத்தில் பல்லை கடித்து தரையில் காலை உதைத்தாள். சற்று நேரத்திற்கு முன்பு யுவன் பைக்கில் அவளுக்கு முன்னால் சென்று கொண்டிருந்தான். அதை கவனித்த சங்கவிக்கு ஆராதனா சொன்னது நியாபகம் வந்தது.

 

“பைக்குல பின்னாடி உட்காருற உரிமை எனக்கு மட்டும் தான் இருக்கு” என்று அவள் சொன்னது நியாபகம் வர “அப்படியா? இன்னைக்கு அவன் கூட நான் போறேன். நீ என்ன பண்ணிடுவ னு  பார்க்குறேன் டி” என்று சபதம் எடுத்துக் கொண்டாள்.

 

யுவனை தாண்டி காரில் வேகமாக சென்றவள் ஒரு மாலில் காரை நிறுத்தி விட்டு முன்னால் வந்து நின்று கொண்டாள். நினைத்தது போல் பேசி காரியத்தை சாதிக்கப் போகும் நேரம் ஆராதனா வந்து சொதப்பி விட்டாள்.

 

“ச்சே… எல்லாத்துலையும் இவ வந்து தொலச்சுடுறா” என்று பல்லை கடித்தவள் காரை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு சென்று விட்டாள்.

 

மாலில் இருந்து நகர்ந்ததும் “டேய் யுவா” என்று ஆராதனா கத்தினாள்.

 

“ஏன்டி கத்துற?”

 

“இல்ல ஹெல்மேட் போட்ருக்கியே. கேட்காது னு தான்”

 

“கேட்குது சொல்லு”

 

“என்னவாம் அவளுக்கு?”

 

“அவ வீட்டுல ட்ராப் பண்ணனுமாம்”

 

“பைக்ல?”

 

“ம்ம்”

 

“நினைப்பு தான்.. ஏன் அவ இம்போர்ட்டட் காருக்கு என்னாச்சாம்?”

 

“ரிப்பேராம்”

 

“இத அங்கயே சொல்லி இருந்தா கலாய்ச்சு இருப்பேன்ல”

 

“ஏன்?”

 

“அந்த கார வச்சு அவ காட்டுன பிலீம் இருக்கே… இது எங்கப்பா எனக்காக ஸ்பெஷலா வர வச்ச இம்போர்ட்டட் கார். என் பர்த்டே கிஃப்ட் னு ஓவர் பேச்சு. அதுவும் என் கார பார்த்துட்டே பேசுனா பாரு… நாலு அப்பு விடலாமா னு தோனுச்சு”

 

“விட்ருக்க வேண்டியது தான?” என்று கேட்டுக்கொண்டே யுவன் பைக்கை வளைத்து திருப்பினான்.

 

“பக்கத்துல ஆளு இல்லனா கண்டிப்பா கலவரமாகி இருக்கும். அடுத்தவங்க முன்னாடி அசிங்க படுத்த வேணாம் னு விட்டுட்டேன்”

 

பைக்கை ஐஸ்கிரீம் பார்லர் முன்னால் நிறுத்தியவன் ஆராவை இறங்க சொல்லி தானும் இறங்கினான்.

 

“அவள சும்மாவா விட்ட?”

 

“இல்ல ஒரு கேள்வி தான் கேட்டேன்.. வாவ் இது இம்போர்ட்டட் காரா? ஆமா இது வானத்துல பறக்குமா? இல்ல தண்ணில மிதக்குமா? னு கேட்டேன். அதுக்கு அவ ஒரு பார்வை பார்த்தா பாரு”

 

யுவன் பக்கென சிரித்துவிட ஆராவும் சேர்ந்து சிரித்தாள்.

 

“பக்கத்துல இருந்தவங்க சிரிச்சதுக்கு என்ன முறைச்சா.. எந்த காரா இருந்தாலும் நடு ரோட்டுல தான் ஓடும்.. ரிப்பேர் ஆனா நடுத்தெருவுல நின்னு தான் ஆகனும் னு சொல்லிட்டு கிளம்பிட்டேன்”

 

“சூப்பர் டி செல்லம்” என்று யுவன் ஹைஃபை கொடுக்க இருவரும் சிரித்து விட்டு உள்ளே நுழைந்தனர்.

 

“ஆமா இங்க எதுக்கு கூட்டிட்டு வந்த ?” – ஆராதனா.

 

“என் ஃப்ரண்ட்ஸ் எல்லாம் என்கேஜ்மெண்ட்க்கு ட்ரீட் கேட்டுச்சுங்க. சரி எதாவது ஒரு இடத்த ஃபிக்ஸ் பண்ணுங்க னு சொன்னேன். இத தான் பண்ணி இருக்குங்க”

 

“அதுக்கு ஏன் டா நான்?”

 

“எல்லாம் ஸ்கூல் ஃப்ரண்ட்ஸ் தான். உனக்கு தெரிஞ்ச ஆளுங்க தான் வா”

 

உள்ளே சென்று பார்க்க எல்லோரும் வந்து இருந்தனர். ஆராதனாவை பார்த்து விட்டு “ஹோ…” என்று எல்லாரும் கத்த ஆராதனா சிரித்தாள்.

 

“இப்ப எதுக்கு இப்படி சத்தம் போடுறீங்க?”

 

“ஸ்கூல்ல இவன் கூட எவ்வளவு சண்டை போடுவ… இப்போ கல்யாணம் னு சொல்லிட்டு வந்து நிக்கிறியே?”

 

“ஹேய்… அது சின்ன வயசு. அப்போ அடிச்சுக்கனும்…”

 

“இப்போ?”

 

“சமாதானமா போய்ட வேண்டியது தான்”

 

“என்னமா சமாளிக்குறா பாரு… ஆனா யுவன் உன்ன பத்தி ரொம்ப அக்கறை படுவான்” – இம்ரான்.

 

“அது எனக்கே தெரியும். சரி வந்த வேலைய பாருங்க. ஆர்டர் கொடுங்க” என்று பேச்சை திசை திருப்பி விட்டாள்.

 

தொடரும்

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
10
+1
1
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்