
“உன்ன எப்பி கூப்ட?” என்று சந்துரு கேட்க, “உனக்கு எப்படி தோனுதோ அப்படி கூப்பிடு” என்றாள் பைரவி.
சிறிது நேரம் யோசித்தவன், “உன் பேரு என்ன?” என்று கேட்டான்.
‘அப்பாவுக்கு ஏத்த மகன்’ என்று நினைத்துக் கொண்டு, “பைரவி” என்றாள்.
“பைய்யவி” என்று சந்துரு கூற, “ம்ஹூம் .. பைரவி” என்று சொல்லி கொடுத்தாள்.
அப்போதும் சந்துருவிற்கு வாயில் நுழையவில்லை.
“சரி அப்படியே கூப்பிடு” என்று கூறியவள், அவனை தூக்கிக் கொண்டு வெளியே வந்தாள்.
அலுவலகத்திற்கு கிளம்பி இருந்தாள். கைப்பையை எடுத்துக் கொண்டு சந்துருவுடன் வெளியே வர, சேகரன் அவளைப் பார்த்தார்.
மல்லிகா வேலையாட்களை அரட்டி உருட்டிக் கொண்டிருந்த சத்தம், ஹாலில் நிற்பவர்களுக்கும் கேட்டது.
“வேலைக்கு கிளம்பிட்டியாமா?” என்று சேகரன் கேட்க, “ஆமா மாமா” என்றாள்.
அவள் வேலை பார்க்கும் இடத்தை விசாரித்தவர், “எதுலமா போற?” என்று கேட்டார்.
“பஸ்ல” என்க, “எதுக்குமா? ரெண்டு பஸ் மாறி போயிட்டு வரனும்? வீட்டுல தான் நாலு கார் நிக்கிதே. அதுல ஒன்னுல போய்ட்டு வா” என்றார்.
“இல்ல வேணாம்” என்க, “ஏன்மா? கார்ல போய்ட்டு வந்தா எங்களுக்கும் நிம்மதியா இருக்கும்ல. பஸ்ல போறது தப்பு இல்ல. ஆனா, நீ வீட்டுக்கு வர்ர வரைக்கும், நாங்க பயந்துட்டு இருக்கனும். மணி கிட்ட சொல்லுறேன். நீ கார்ல தான் போற” என்று கூறியவர், டிரைவரை அழைக்க வெளியே சென்று விட்டார்.
பைரவிக்கு தயக்கமாக இருந்தது. காலையில் எழுந்ததுமே இதே வார்த்தையை தேவா கூறும் போது, “இத்தன நாள் இந்த கார் எனக்கு அவசியப்படல” என்று பட்டென கூறி விட்டாள்.
‘அதன் எதிரொலியாக தான், அன்னை முன் திட்டினானோ? என்ற யோசனை இன்னும் அவளுக்குள் ஓடுகிறது.
அப்படி இருக்க, இப்போது மாமனார் சொன்னதும் காரில் ஏறி விட்டால், என்ன நினைப்பான்?’ என்று தயங்கினாள்.
அவளது மறுப்பை காது கொடுத்துக் கேளாமல், சேகரன் அவளை காரில் அனுப்பி வைத்தார். சந்துருவிடம் விடை பெற்றுக் கொண்டவள், சேகரனிடம் சொல்லி விட்டு கிளம்பி விட்டாள். கணவனிடமோ மாமியாரிடமோ விடை பெற அவளுக்கு தோன்றவில்லை.
காரை ஓட்டி வந்தவர் அவளிடம் சகஜமாக பேசினார்.
“காலேஜ்க்கு லீவ் இல்லையாமா? ” என்று மணி கேட்க, “காலேஜ்ல படிக்குறவங்களுக்கு தான் லீவ். நான் அங்க போகல. அந்த காலேஜ நிர்வாகம் பண்ணுறாங்களே, அங்க கணக்கு வழக்கு எல்லாம் பார்க்குற இடம் இருக்கு. அதுல தான் எனக்கு வேலை” என்றாள்.
“ஓஓ… அந்த காலேஜ் ரொம்ப பெரிய காலேஜ் இல்லமா. அங்க சேரனும்னு தான் என் மக சொல்லுது. பத்தாவது முடிச்சுடுச்சு. நல்ல மார்க் தான். அறிவியல் படினு டீச்சருக சொல்லுறாக. ஆனா இந்த புள்ள அக்கவுண்ட்ஸ் தான் படிப்பேன்னு அடம் பிடிக்குது” என்று அவரது குடும்ப பேச்சை கொட்ட ஆரம்பித்தார்.
“இதுல என்ன இருக்கு? அவளுக்கு பிடிச்சத படிக்க வைங்க. சயின்ஸ் படிச்சுட்டு, எத்தனை பேர் வேலை இல்லாம சுத்துறாங்க. பிடிச்சத படிச்சு, பிடிச்ச வேலைய செய்யட்டும்னு விடுங்க. அவளுக்கும் நிம்மதியா இருக்கும் உங்களுக்கும் நிறைவா இருக்கும்” என்றாள் பைரவி.
மணி சாலையில் கவனத்தை வைத்து இருந்தாலும், பைரவியுடன் பேசிக்கொண்டே வந்தார். சித்தியாக வந்திருப்பளின் குணம் எப்படியோ? என்று அவருக்கும் வருத்தம் இருந்தது. இப்போது அது விலகி விட, மனதில் மரியாதை வந்து அமர்ந்தது. மாலை எத்தனை மணிக்கு வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டு கிளம்பி விட்டார்.
பைரவி அலுவலகத்தில் நுழைந்து தன் இடத்தில் அமர்ந்து கொண்டாள்.
“ஹே பைரவி… என்ன திடீர்னு நாலு நாள் லீவ் போட்டுட்ட? உடம்புக்கு எதுவும் பிரச்சனையா?” என்று திரும்பி பார்க்காமல் கணினியில் கவனத்தை வைத்துக் கொண்டே கேட்டாள் பாரு… பார்வதி.
“அப்படிலாம் இல்ல பாரு” என்று பைரவி கூற, அவளை திரும்பி பார்த்தாள் பார்வதி. கழுத்தில் இருந்த தாலியை பார்த்து, அவளுக்குத் தூக்கி வாரி போட்டது.
“பைரவி…” என்று அதிர்ச்சியாக அழைக்க, பைரவி அவளை வெற்று பார்வை பார்த்தாள்.
“என்ன இது….? தாலி? எப்போ? ஏன்?” என்று அதிர்ச்சியில் வார்த்தை வராமல் திணறினாள் அவள்.
“நேத்து” என்று பைரவி ஒரு வார்த்தையில் முடித்தாள்.
“ஏன்…?” என்று கேட்க, அதே கேள்வியை பைரவியும் மனதிற்குள் கேட்டாள்.
‘ஏன்?’
பதிலே கிடைக்கவில்லை.
பைரவி எப்போதுமே அதிகம் பேச மாட்டாள். அமைதியாக தான் இருப்பாள். ஆனால், இன்றைய அமைதி பார்வதிக்கு உவப்பாக இல்லை. பைரவியை பார்த்த அத்தனை பேரும் அதிர்ந்தனர்.
“ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாமே..” என்று சிலர் நேரடியாகவே குறை பட்டுக் கொண்டனர்.
“போன் உடஞ்சுடுச்சு. நம்பர் ஞாபகம் இல்ல. அதான் சொல்ல முடியல” என்று கூறி வைத்தாள்.
உண்மையிலேயே அவளிடம் இப்போது கைபேசி இல்லை. அதில் சிலர் சமாதானம் அடைந்தனர். சிலர் தேவேந்திரனை பற்றி விசாரிக்க, அந்த கேள்விகளை பைரவி தவிர்த்தாள்.
அவனது பெயர் தெரியும். சொந்தமாக சில தொழில்கள் செய்ய வேண்டும் என்பது அவள் யூகம். அதற்கு மேல் எதைக் கேட்டாலும் தெரியாது. யாராவது எதையாவது கேட்டு பதில் தெரியவில்லை என்றால், அவளுக்கு தான் அசிங்கம். அதனால் நழுவிக் கொண்டாள்.
நான்கு நாட்கள் வேலையும் ஒன்றாய் சேர, நிமிர நேரம் கிடைக்கவில்லை. மதிய உணவு இடைவேளையின் போதும், அவசரமாக உணவை அள்ளி வாயில் போட்டுக் கொண்டு வேலை செய்தாள்.
வேலை நேரம் முடிந்து கிளம்ப, அவள் எதிரில் ஒருவன் வந்து நின்றான். யாரென்று தெரிந்ததால், ஒரு பெருமுச்சோடு நிமிர்ந்து பார்த்தாள்.
ஒரு நொடி அவளை ஆழ்ந்து பார்த்தவன், “ஏன்?” என்றான்.
அதே ஏன்? பார்வதி கேட்ட கேள்வியில் அதிர்ச்சி அதிகம். ஆனால், இவனது கேள்வியில் தவிப்பும் வேதனையுமே அதிகம்.
“இந்த கேள்வி இப்போ தேவையில்லாதது சார். நான் இன்னொருத்துருக்கு மனைவியானது ஆனது தான். இனி எதையும் கேட்க வேணாம்” என்று கூறியவள், அவனைத் தாண்டி நடக்க ஆரம்பித்தாள்.
மனம் கூப்பாடு போட்டது.
‘இவனால் தானே… இவனால் தானே இத்தனையும்!’
ஒரே நொடியில், “உன்னால் தான்” என்று அவள் கை காட்டி விடுவாள்.
ஆனால், அது அவனை வாழ்நாள் முழுவதும் ஊசியாய் குத்தும். உண்மையில் அவன் மட்டும் காரணம் இல்லையே. அவளது அண்ணியும் தானே காரணம். அவனை மட்டும் காரணமாக காட்ட, அவளுக்கு மனம் வரவில்லை. நடந்து முடிந்த விசயத்திற்கு, காரணம் யார் என்று யோசித்து என்ன ஆக போகிறது?
சோர்வாக வந்து காரில் ஏறிவளை பார்த்த மணியும் எதுவும் பேசவில்லை. மணமேடையில் கூட நினைத்தாள்.
‘இவன்… இவன் மட்டும் தன் வாழ்க்கையில் வரவில்லை என்றால், இப்படி விருப்பமே இல்லாமல் ஒருவனுக்கு இரண்டாம் தாரமாக மணம் முடிக்க வேண்டிய அவசியம் அவளுக்கு இல்லையே.’
மனம் ரணமாக, கண்ணை மூடி சாய்ந்து கொண்டாள். பேருந்தில் சென்று இருந்தால், இது போல ஓய்வு அவளுக்குக் கிடைத்து இருக்காது. அடித்துப் பிடித்து ஏறி, நின்று கொண்டு செல்ல வேண்டும் சில நேரம்.
தன் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்றால், ஒரே பேருந்து தான். இங்கு, இரண்டு பேருந்து மாற வேண்டுமே. இதையெல்லாம் யோசித்து தான் மாமா காரில் போக வற்புறுத்தினாரோ?
இன்னொரு ஜீவனும் அதை தான் சொல்லியது என்று மனம் எடுத்து கொடுத்தாலும், மூளை அதை கடுகளவும் மதிக்காமல் நிராகரித்தது.
மனம், காலையில் நடந்ததை அசை போட ஆரம்பித்தது. பைரவி எழுந்து குளித்து விட்டு வரும் போது, தேவா குளிக்க தயாராகி இருந்தான். பைரவியை பார்த்து விட்டு சற்று நிதானித்தவன், “ஆபிஸ்க்கு எதுல போற?” என்று கேட்டான்.
“பஸ்ல” என்று பைரவி பதில் சொல்ல, “இங்க இருந்து போறது வரது ரொம்ப கஷ்டம். கார்ல போ” என்று அவன் அக்கறையாக தான் சொன்னான்.
நம் நாயகிக்கு தான் அந்த அக்கறை பிடிக்கவே இல்லை.
“வேணாம்” என்று மறுக்க, “ஏன்?” என்றான்.
“இத்தன நாள் இந்த கார் எனக்கு அவசியப்படல” என்று பட்டென கூறினாள்.
‘உன் கார் ஒன்றும் எனக்கு தேவையில்லை’ என்று முகத்திலறைந்தார் போன்று கூறுபவளை, தேவா முறைத்துபீ பார்த்தான்.
விறுவிறுவென சென்று குளியலறையில் புகுந்து, கதவை அடைத்துக் கொண்டான். அவனது கோபம் பைரவிக்கு புரிந்த போதும், கண்டு கொள்ளாமல் விட்டு விட்டாள்.
தலைவாரி அலுவலகம் தயாராக, சந்துரு எழுந்து விட்டான். அவன் முகத்தை கழுவி உடை மாற்றி, வெளியே அழைத்து வந்தாள். இருவரும் சாப்பிட அமர, மல்லிகா ஆரம்பித்தார்.
“இதென்ன வீட்டுல மொத ஆளா உட்கார்ந்து பொம்பளைங்க சாப்பிடுற பழக்கம்? அப்படி என்ன அவசரம் கொட்டிக்க?” என்று மல்லிகா கேட்க, பைரவி வாயைத் திறக்கவில்லை.
சேகரன் அப்போது வீட்டில் இல்லை. காலை காபி குடித்ததும், நடந்து விட்டு வருவது அவரது வழக்கம். அதனால், இன்னும் வீட்டுக்கு வரவில்லை.
“நீ யார் என்னை கேட்க?” என்ற ரீதியில் பைரவி அமர்ந்து இருந்தாள்.
“காதுல என்ன வச்சு அடச்சு இருக்க? கேட்குறவள பார்த்தா இழிச்சவாச்சியா தெரியுதா?” என்று கேட்டு வைத்தார் மல்லிகா.
“ப்ச்… ஆபிஸ் போகனும். அதான் சாப்பிடுறேன்” என்று பட்டும் படாமல் பைரவி சொல்ல, “ஓஹோ… இந்த மேடம் சம்பாதிச்சு போட்டு தான் நாங்க வாழனுமா? உனக்கு எதுக்கு வேலை? அதெல்லாம் ஒன்னும் வேணாம். வீட்டுல இரு” என்று கூறினார்.
அது தான் முடிவு என்பது போல அவர் கூறியதில், பைரவிக்கு சுறுசுறுவென ஏறியது.
“என் வேலை அது. அதை விடச்சொல்ல உங்களுக்கு உரிமை இல்ல” என்று காரமாக கூறிவிட்டாள்.
அதற்குத் தான், மகனைக் கூப்பிட்டு பஞ்சாயத்து வைத்தார். அவர் பஞ்சாயத்தை ஆரம்பித்தப் பின் சேகரன் வந்து நின்றதால், அவரால் ஒன்றும் செய்ய முடியாமல் போனது. முதல் நாள் இரவே, மல்லிகாவின் மனதை பைரவி நன்றாக புரிந்து கொண்டாள்.
இரவு, புதிதாக திருமணமானவர்களுக்கு தனிமை கொடுக்கவென, சேகரன் சந்துருவை தங்களது அறைக்கு தூக்கிச் செல்ல, “அதெல்லாம் வேணாம். சந்து அவன் அப்பா இல்லாம இருக்க மாட்டான். நடுவுல எழுந்து அழுதா, நம்மலால சமாளிக்க முடியாது. எப்பவும் போல தேவா ரூம்லயே தூங்கட்டும்” என்று கூறி விட்டார் மல்லிகா.
அவரது மனதை, அந்த நிமிடம் பைரவி தெளிவாக படித்து விட்டாள்.
‘போகும் வரை போகட்டும் பார்க்கலாம்’ என்று நினைத்துக் கொண்டு, சந்துருவை தங்களது அறைக்கு தூக்கி வந்து விட்டாள். காலையில், திரும்பவும் அவரது குணத்தை படிக்க நேர்ந்தது.
‘இங்கு வந்து இரண்டு நாட்கள் முழுதாக கடக்கவில்லை. அதற்குள் இத்தனை போராட்டமா?’ அன்னையிடம் பேச வேண்டும் என்று மனம் எதிர்பார்த்தது. ஆனால், அதை செய்யவில்லை.
வீடு வந்ததும் இறங்கி உள்ளே சென்றாள். சந்துரு, “பைய்யவி” என்று கத்திக் கொண்டே ஓடி வந்தான். குனிந்து அவனை தூக்கிக் கொள்ள, பைரவியின் கன்னத்தில் முத்தமிட்டான். பதிலுக்கு முத்தமிடும் போதே, அவளது கலைப்பு இருந்த இடம் தெரியாமல் ஓடிப் போனது.
‘யாருக்காக இல்லை என்றாலும், இதோ இந்த பிஞ்சுக்காக அவள் இந்த வாழ்க்கையை ஏற்க தான் வேண்டும்’ என்று நினைத்துக் கொண்டாள்.
அவனை விட்டு விட்டு உடை மாற்றி வந்தவள், அவனோடு ஐக்கியமாகிப் போனாள்.
இரவு, அவனை உறங்க வைத்த பின் தேவா அறைக்கு வந்தான்.
“பைரவி… உன் கிட்ட கொஞ்சம் பேசனும்” என்றான்.
புருவம் சுருக்கி யோசித்த போதும், “சொல்லுங்க” என்றாள்.
“அம்மா கிட்ட நிறைய பேச்சு வச்சுக்காத…” என்று தேவா கூற, பைரவி ஆச்சரியமாக அவனைப் பார்த்தாள்.
முதல் முறையாக அந்த கண்களில் உணர்ச்சி காட்டப்படுகிறது. அதை அவன் கவனிக்க தவறினான்.
‘அம்மா கிட்ட இப்ப்ப்…….படி பேசாதனு சொன்னா ஒரு நியாயம் இருக்கு. இதென்ன அவங்க கிட்ட பேசவே பேசாதங்குறான்’ என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.
“அவங்க இப்படித் தான். எதையுமே சாதாரண விசயமா எடுத்துக்க மாட்டாங்க. நீ எதுக்கு உரிமை இல்லனு சொன்னனு எனக்குத் தெரியாது. ஆனா, அவங்க அத பெரிய விசயமா எடுத்து… பார்த்தல இப்படி பிரச்சனையாக்கிடுவாங்க. எல்லாம் கொஞ்ச நாள் தான். இங்க இருந்து போற வரை. அது வரை இப்படி பிரச்சனை வர்ரத முடிஞ்ச அளவு தடுத்துடு”
“உங்கம்மா செய்யுறது தப்புனு தோனலையா?”
“தப்பு தான். ஆனா, அவங்க கேரக்டரே அதான். அவங்க வீட்டுல அவங்க தான் முதல் பொண்ணு. எதுவா இருந்தாலும் விட்டு கொடுனு சொல்லிடுவாங்களாம். சின்னவங்களுக்கு போக தான் பெரியவங்களுக்குனு சொல்லி, ரொம்ப காம்ப்ரமைஸ் பண்ணி வாழ்ந்து இருக்காங்க. அதான் கல்யாணத்துக்கு அப்புறம், எல்லாமே அவங்க தலைமைல இருக்கனும்னு நினைச்சுட்டாங்க. அப்பா அவங்கள புரிஞ்சுகிட்டு பொறுத்துப் போயிடுவார். நான் பழகிக் கிட்டேன். மத்தவங்க எதாவது சொன்னா, பிரச்சனையாக்கிடுவாங்க. நானும் அப்பாவும் சொன்னா அழுதுடுறாங்க.”
மல்லிகாவின் நிலைமை பைரவிக்கு தெளிவாகப் புரிந்தது. ஆனால், தேவாவின் மேல் அவளுக்கு இருந்த கோபம் அப்படியே தான் இருந்தது. அதனால்,
“ஒரு வார்த்தை என்ன நடந்ததுனு என் கிட்ட காலையில கேட்ருக்கலாமே?” என்று கேட்டே விட்டாள்.
குரலில் கோபம் எட்டிப் பார்க்கத் தான் செய்தது.
“கேட்ருக்கலாம் தான்…” என்று இழுத்தவன் ஒரு பெரு மூச்சு விட்டு, “ஒரு நாள் உன் ஆசைய நிறைவேத்தி வைக்குறேன்” என்று கூறி முடித்தான்.
கையில் சில கோப்புகளை எடுத்துக் கொண்டு தேவா பால்கனி சென்று விட, அவன் சொன்னதை அசை போட்டுக் கொண்டே பைரவி படுத்து இருந்தாள்.
‘ஆசைய நிறைவேத்துறேன்னா…? அந்த அம்மா முன்னாடி என்ன நடந்ததுனு விசாரிக்குறேன்னு சொல்லுறானா? விசாரிப்பானா?’ என்று அவள் யோசித்துக் கொண்டே இருந்தாள்.
அவள் ஆசை நிறைவேறும் நாளும் வந்தது.
தொடரும்.

