வரமொன்று தருவாய்..
தவம் 02
பெண்ணவளுக்கு எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் மனதுக்குள் ஏதோ ஒன்று புரியாத உணர்வது பரவுவது போல்.
விழிகளில் மெல்லிய அலைப்புறுதல் தோன்றி மறைய ஒரு கட்டத்தில் பாதங்களை அப்படியே வேரூன்றி நிற்கவே வைத்து விட்டாள்,தரையில்.மனம் படபடவென்று அடித்துக் கொண்டது.
“பச்சோந்தி எதுக்கு நின்னுட்ட வாடி..யாராச்சும் பாக்கறதுக்கு முன்னாடி உள்ள போயிரனும்..” அருகே இருந்த சத்யா அவளை அவசரப்படுத்த அது செவியில் நுழைந்து சிந்தையில் கலந்தாலும் எதிர்வினை ஆற்றாமல் அப்படியே தரித்திருந்தாள்,அவள்.
“அடியேய் என்னடி ஆச்சு..?” சைந்தவி அவளின் தோளைப் பற்றி அழுத்திட திடுக்கிட்டு இயல்பாகியவளுக்கு இன்னுமே உள்ளத்தை உதைத்து தள்ளிய பதட்டம் மறைந்தபாடில்லை.
“என்னமோ மாதிரி இருக்கு மனசுக்கு..பேசாம திரும்ப போய்ரலாமா..?” முகத்தில் கலக்கமும் விழிகளில் அலைப்புறுதலும் தாங்கி கேட்டவளை பார்க்கையில் பாவமாய் இருந்தாலும் கோபமாய் வந்தது,சத்யாவுக்கு.
“என்னடி நெனச்சிகிட்டு இருக்கீங்க ரெண்டு பேரும்..நா அப்போவே வேணாம்னு தலப்பாடா அடிச்சி கிட்டேன்..அப்போலாம் போலாம் போலாம்னு சொல்லிட்டு இப்போ வந்து முடியாதுன்னு சொல்றீங்க..சரியான பச்சோந்தி ரெண்டும்..நிமிஷத்துக்கு நிமிஷத்துக்கு முடிவ மாத்திட்டு..” கடுப்பில் எரிந்து விழ பெண்ணவளுக்கும் அவன் சொல்வதில் இருந்த நியாயம் உரைக்கத் தான் செய்தது.
“சரி அப்போ வா போலாம்..” தலையை தொங்கப் போட்டுக் கொண்டு சொல்ல சத்யாவோ நெற்றியை முட்டிக் கொள்ள சுவர் தேடாதது தான் மிச்சம்.
“வந்து தொலங்க ரெண்டும்..” கடுப்பில் காய்ந்து விழுந்தவனோ முன்னே நடந்திட பின்னூடு அடியெடுத்து வைத்தவளின் விழிகளை அந்த அரண்மனையை அளவெடுத்தன.
அதன் பிரம்மாண்டமமும் வடிவமைக்கப்பட்டிருந்த விதமும் அவளுக்கு பிரமிப்பை தந்திட புணர் நிர்மாணம் செய்தால் இன்னுமே அழகாகித் தெரியும் என்கின்ற எண்ணம் தான் அவள் மனதில்.
“யார்ரா இந்த கலா ரசிகன்..?” அந்த அரண்மனையை நிர்மாணித்தவனை மனதுக்குள் பாராட்டிய படி அவள் மெதுவாய் நடக்கையில் வாசற்கதவை எட்டியிருந்தான்,சத்யா.
“அடியேய் ஆமக்கி டஃப் கொடுக்காம வந்து சேருங்க டி..” கத்தியவனுக்கு அந்த இடத்தில் நிலவிய சூழ்நிலையே பயத்தை பீறிடச் செய்தது.
ஆள் அரவமே இல்லாத இடத்தில் அமைந்திருந்த அரண்மனை தனி பயத்தை தந்தது என்றால் கரு மேகங்கள் சூழ புழுதிக் காற்றை கிளப்பிய வானிலை இன்னும் அதை அதிகப்படுத்திட,அந்த பயத்தின் வெளிப்பாடாய் தான் இந்த கோபம்.
“இரு டா ஆம்ப்யூலன்ஸ் வர்ரோம்..சரியான அவசரத்துக்கு பொறந்தவன்..சுடு தண்ணிய கால்ல கொட்டி கிட்ட மாதிரியே சுத்துவான்” சைந்தவி கத்திக் கொண்டு முன்னேற பெண்ணவளின் நடையிலும் அவளுக்கு இணையான வேகம்.
இரு கதவுகளை கொண்ட வாசல் அங்கு அமையப் பெற்றிருக்க ஒரு கதவு இல்லை.காற்றின் வீரியத்துக்கு தாக்கு பிடிக்க முடியாமல் கழன்று போயிருக்கும் போலும்.வாயிலுக்கு சற்றுத் தள்ளி கீழே விழுந்திருந்தது,ஒற்றைக் கதவு.
ஒட்டடையும் தூசும் நிறைந்திருக்க கர்சீஃபால் மூக்கை மறைத்துக் கொண்டு மூவரும் உள்ளே செல்ல உட்பகுதியோ அவர்கள் நினைத்ததை விட அதிகமாகவே மாசாகிப் போயிருந்தது.
“என்னடா இது..இவ்ளோ தூசும் குப்பயுமா இருக்கு..? இதுல எப்புர்ரா அந்த செவப்பு மாணிக்கத்த பத்தி எழுதி இருக்குற புக்க கண்டு பிடிக்கிறது..?” நெற்றியைத் தடவிய படி யோசித்த பெண்ணவளுக்கு இதழ் பிதுக்கலை பதிலாகத் தந்தனர்,மற்றைய இருவரும்.
“என்னடா பண்றது இப்போ..?” ஆதங்கத்துடன் வினவியவளுக்கு மனதில் உருவெடுத்த பதட்டம் குறைந்தாற் போல் தெரியவில்லை.
“என்னாச்சுடி உனக்கு..? மொகத்த உம்முன்னு வச்சிட்டு இருக்க..? சரியாப் பாத்தா உங்க ரெண்டு பேரயும் இழுத்துட்டு வந்ததுக்கு நா தான் அப்டி இருக்கனும்” அவளின் மீதான அக்கறையில் சிறு கோபத்துடன் கூறிட பெண்ணவளின் முகத்தில் சலனமில்லை.
“சத்து அப்டிலாம் சொல்லாதடா..உன்னால எப்டியும் ரெண்டு பேர இழுத்துட்டு வர முடியாது..அதுவும் இல்லாம எங்க ரெண்டு பேரயும் இழுத்துட்டு வந்தா அது மகா தப்புடா..” ஏதோ யோசனை வந்தவளாய் சைந்தவி அப்பாவியாய் கூறிட சத்யாவுக்கு மலையில் இருந்து குதித்தி விடும் எண்ணம் தான்.
“வாய்ல வசம்ப வச்சு தேக்க..இவ ஒருத்தி எத சொன்னாலும் வேற மீனிங்கே எடுத்துக்க வேண்டியது..பைத்தியக்காரி..எனக்குன்னு ரெண்டு பைத்தியம் தங்கச்சியா வந்து பொறந்திருக்கு..” கடுகடுத்தவனுக்கு ஏன் இவர்களை அழைத்து வந்தோம் என்று ஆகி விட்டது.
“கடுப்பேத்தாம வாங்க..இன்னிக்கி நைட்குள்ள நாம கெளம்பிரனும்..” அறிவுறுத்தியவாறு அந்த விஸ்தாரமான இடத்தை அலசிட பெண்ணவளின் பார்வையோ அங்கு ஓரமாய் கருநிற துணியொன்றால் மறைக்கப்பட்டிருந்த இடத்தை தழுவிற்று.
உள்ளுக்குள் மனம் பிசைந்திட பெண்ணவளின் பாதங்கள் அந்த இடத்தை நோக்கி நகர்ந்திட சுற்றும் முற்றும் எதையோ தேடிக் கொண்டிருந்த சத்யாவுக்கு அவளின் செயலில் தலை வலி வராதது மட்டும் தான் குறை.
“அடியேய் எங்க போற நீ..? சைந்து இங்க வாடி இவ எதுக்கு டி அங்க போறா..?” சத்யாவின் கத்தல் குரலில் குனிந்து ஏதோ சிறு பொருளை ஆராய்ந்து கொண்டிருந்த சைந்தவியும் நிமிர்ந்தெழ அவளுக்குமே பெண்ணவளின் செயல் அதிர்வு தான்.
“என்னாச்சு இவளுக்கு..?” யோசனையுடன் பெண்ணவளை வேகமாய் நெருங்கி கரத்தைப் பற்றி இருந்தாள்,அக்காவானவள்.
“அடியேய் என்னடி பண்ற..? எதுக்கு இப்போ அங்க போற..?” அக்காக்காரியின் கடுகடு கேள்வியில் கலைந்த பெண்ணவளின் சுட்டு விரலோ அந்த கறுப்புத் துணியை நோக்கி நீள அவளுக்குத் தான் எதுவும் புரியவில்லை.
“என்னடி..? எதுக்கு அங்க கைய காட்டிட்டு நிக்கற..?”
“இல்ல அங்க என்னமோ இருக்கு..” பாவமாய் பெண்ணவள் சொல்ல,”இவளுக்கு பைத்தியமா..?” எனும் ரீதியின் அவளை மொய்த்தது,உடன் பிறவா சகோதரங்களின் பார்வை.
“என்னடி மை கிய் தடவி பாக்கறியா..? நாம இப்போ தான இங்க வந்தோம்..அப்றம் எப்டி அங்க ஏதோ இருக்குன்னு சொல்ற..?”
“இல்ல சத்துமாவு அங்க என்னமோ இருக்கு..” அழுகுரலில் முணகியவளோ பாதங்களை எட்டு வைத்தாள்,சைந்தவியின் கைப்பிடியில் இருந்த கரத்தை உருவிக் கொண்டு.
“எ..” என்று கத்திய படி அவளைப் பிடிக்கப் பார்த்திட்டவளின் கரத்தைப் பற்றி அடக்கினான்,சத்யா.அவனுக்கோ பெண்ணவள் என்ன செய்திடப் போகிறாள் என்பதை பார்த்திடும் எண்ணம் தான் உருப்பெற்று வலுவடைந்தது,இந்த நொடி.
தன்னை இருவர் திகைப்புடன் விழிகளால் உரசுவதைக் கூட அறியாமல் அவள் பாதங்கள் தன்னிச்சையாய் கறுப்பு நிறத் துணியால் மறைக்கப்பட்டிருந்த இடத்தை நோக்கி நகர்ந்திட ஏனோ அவளுக்கும் அந்த கறுப்பு நிறத் துணியால் உண்டாகிய திரைக்கும் இடையே நான்கடி தூரம் இருக்கையில் பெண்ணவளின் பாதங்கள் தரையில் வேரூன்றி நின்றன.
ஆழமாய் நெடுமூச்செறிந்தவளோ தடதடக்கும் இதயத்துடன் அந்த கறுப்பு நிற துணியின் கீழ் விளிம்பைப் பற்றி இழுத்திட அவளுக்கு சிரமம் கொடுக்காமலே அதன் மேல் முனை பூராகவும் தொடுக்கப்பட்டிருந்த நீண்ட ஆதாரம் சடசடவென்று சரிந்து விழ அதற்கு பயந்து ஈரடி பின்னே அவள் நகரவும் கருநிற திரை முழுவதும் மறைந்து போகவும் சரியாய் இருந்தது.
அதிர்வுடன் மூவரும் விழி விரித்து நிற்கும் முன்னே சடுதியாய் மையம் கொண்ட சிறு புயல் புழுதியையும் தூசையும் கிளப்பிக் கொண்டு இடம் மாற பேரிரைச்சலால் சூழப்பட்டது,அவ்விடம்.
“என்னடா இது..?” கிளம்பிய தூசால் நொந்து போய் முகத்தொ கர்சீஃபால் மூடிக் கொண்டு சத்ய புலம்பிட சைந்தவியின் நிலையும் அதே தான்.
பெண்ணவளோ வதனத்துக்கு தடுப்பாய் கரங்களை வைத்து ஓரவிழிகளால் சுற்றம் அலச எதிர்பாரா விதமாய் அவள் வதனமுரசி வீழ்ந்து தோளோடு வந்து ஒட்டிக் கொண்டு நெஞ்சில் விரிந்து நின்றது,சிறு துணியொன்று.
தன் மேல் மோதிய துணியை வியப்பை சுமந்த விழிகளால் நோக்கி அதை அவள் விரல் கொண்டு பற்றி கரத்தில் எடுத்துக் கொண்டது தான் தாமதம்,சட்டென இயல்பாகிற்று சூழ்நிலை.
இரைச்சலும் இத்தனை நேரம் ஆட்டுவித்துக் கொண்டிருந்த காற்றும் இருப்பிடம் தெரியாமல் காணாது போயிருக்க அகலாமல் தன்னில் சேர்ந்திருந்த துணியை ஆராய்தலுடன் பார்த்தவளோ விழி நிமிர்த்தி சத்யாவைப் பார்த்திட அண்ணன்காரனோ குழம்பிப் போய் நின்றிருந்தான்,வெகுவாய்.
“என்னடா நடக்குது இங்க..?”
“என்ன கேட்டா என்னடி சொல்றது..நா உங்க கூட தான இருக்கேன்..” கடுப்படித்தவனுக்கு மனம் நிலையில்லாமல் தவித்தது என்னவோ உண்மை.
திரையால் மறைக்கப்பட்டிருந்த இடத்தை அலசிக அவ்விடம் முழுக்க பழமை வாய்ந்த ஆபரணங்களும் சின்னச் சின்ன சிற்பங்களும்.மூவருமே அவ்விடத்தில் அப்படி ஒன்றை எதிர்பார்த்திருக்கவில்லை என்பதை பறைசாற்றிட அவர்களின் முகபாவனைகளே போதுமானதாய்.
பெண்ணவளோ அந்த துணியை தோளில் போட்டுக் கொண்டு அவ்விடத்தினுள் நுழைந்து சுற்றும் முற்றும் தேட அவள் பார்வையில் விழுந்தது என்னவோ ஒரு பக்கத்தில் மட்டும் விரிசல் வந்து கொஞ்சம் நொருங்கிப் போயிருந்த அந்த நிலைக்கண்ணாடியும் அதன் அருகே இருந்த சிற்பமும் தான்.
பக்கவாட்டாய் தெரிந்த அவற்றின் முன்னே சென்று நின்றவளுக்கு ஆளுயரத்தில் இருந்த அந்த ஆண் சிற்பத்தைக் கண்டதும் என்னவானதென்றே தெரியவில்லை.
மயிர்க்கால்கள் எல்லாம் குத்திட்டு நிற்க தேகம் முழுவதும் சிலிர்த்தடங்கிட உயிரில் ஒரு சந்தோஷப் பரபரப்பு தொற்றிக் கொண்டது போல்.ஆம்,உயிரில் தான்.உயிரின் ஓர விளிம்பில் தொற்றிக் கொண்ட பரபரப்பு வாழ்நாள் முழுக்க போதுமென்பது போல்.
உள்ளுக்குள் ஏதோ ஆகிற்று;ஜீவனுக்குள் இந்த ஜென்மத்தில் அவள் கண்டிரா உணர்வுகள் அலைமோதிற்று;மெதுமெதுவாய் வார்த்தைகளில் வரிக்க முடியா இதமொன்றை மனம் உணர்ந்திற்று;விழிகளில் அந்த சிற்பத்தின் விழலிருவம் மட்டும் நிறைந்திற்று.
இமைக்க மறந்து போய் நின்றவளின் இதயத்தில் இனம் புரியா இதமது இடம் கொள்ள இதழ்களில் அழகாய் தொக்கி நின்றது,இள முறுவல்.
ஏனோ அந்த சிற்பத்தைக் கண்டதும் அவளுக்கும் உருப்பெற்ற உணர்வை உரைத்திட முடியாவிடினும் அது இதயத்தின் ஆழம் தொட்டது உண்மை.ஆழம் தொட்டு ஆயிரம் நுண்பூகம்பங்களை பிரசவித்தது இன்னும் உண்மை.
உடைவாள் இடையில் சொருகியிருக்க அதை கரத்தை குவித்து ஒற்றைக் கையால் அதன் முனையைப் பற்றியவாறு மறுகரமோ நீண்ட வஸ்திரத்தை சுழற்றிப் பிடித்திருக்குமாறு காற்றில் சிகை சிலிர்த்து அசைய தேகம் தழுவியிருந்த துகில் நிலத்தை தொடுவது போல் முறுக்க மீசையும் திடகாத்திரமான உடற் கட்டுடன் செதுக்கப்பட்டிருந்த அந்த ஆண்மகனின் சிற்பம் அவளை மொத்தமாய் கவர்ந்து தன் புறம் கட்டியிழுத்திருந்தது.
அதுவும் நேர்த்தியாய் குடையபபட்டிருந்த இரு கூரிய விழிகளும் முறுக்கும மீசையும் அவளை அத்தனை இரசிக்க வைத்தன.பெண்ணவளின் விழிகள் இரசனையில் பெருங்கடலாய் மாறியிருந்தன,ஒற்றை சிற்பத்தால்.
“என்ன இவ சிரிச்சிட்டே இவ செலய பாக்கறா..?பைத்தியம் புடிச்சிருச்சா இவளுக்கு..?” பின்னே நின்றிருந்த அவளை விட உயரமானவனுக்கு சிற்பமும் சிற்பத்தை ஒட்டியிருந்த நிலைக்கண்ணாடியில் தெரிந்த பெண்ணவளின் விம்பமும் அருகருகே தெரிய அவளின் இரசனையைக் கண்டு தலையில் அடித்துக் கொண்டான்,அவன்.
“எத்தன தடவ தான் நானும் சொல்றது..சரித்திர கத வாசிக்காத..சரித்திர கத வாசிக்காதன்னு..சரித்திரம் வாசிச்சிட்டு நேரங்கெட்ட நேரத்துல தர்த்திரம் பண்ணுவாளே..சாமீ” முணுமுணுத்தவவனோ தங்கையை பிடித்துலுக்க தன்னிலை மீண்டு மீண்டு மலங்க மலங்க விழித்தாள்,அவள்.
“என்னடி அங்கயே பாத்துட்டு இருக்க..?”
“ஆமாடி நானும் இவ்ளோ நேரம் பாத்துட்டு இருக்கேன்..நீ என்னன்னா அந்த செலயவே ரொம்ப நேரம் பாத்துட்டு இருக்க..காத்து கருப்பு அடிச்சிருச்சாடி..வந்ததுல இருந்து இப்டி வித்யாசமா நடந்துக்குற..?” பதறிக் கொண்டு அவளின் தாடையைப் பற்றி அங்குமிங்கும் ஆராய்ந்த சைந்தவியை பாவமாய் பார்த்தாள்,பெண்ணவள்.
“எ..எனக்கு அந்த செலய பாக்கும் போது என்னமோ ஆகுது..” நெஞ்சைத் தடவிக் கொண்டு கூறியவளின் வார்த்தைகளில் புரேயேறி நெஞ்சைப் பிடித்துக் கொண்டி இருமியவனுக்கு மயக்கம் வராத குறை தான்.
“ஏய் என்னடி ஒளர்ர..?” வெடுக்கென்று காய்ந்தாள்,சைந்தவி.
“இல்ல சைந்து நெஜமா தான் எனக்கு அந்த செலய பாக்கும் போது..ம்ஹும் ம்ஹும் செலயா இருக்குற அந்த மனுஷன பாக்கும் போது என்னமோ பண்ணுது டி..” அடிவயிற்றில் பட்டாம் பூச்சி பறப்பது போல் தோன்றிட வயிற்றைத் தடவிக் கொண்டு அவள் மொழிந்திட,”முத்திடுச்சு” என முணுமுணுத்துக் கொண்டன,சத்யாவின் இதழ்கள்.
“அதுக்கு ஏன் டி வயித்த பிடிக்கிற..?” நாடி தட்டி அந்த நிலையிலும் சைந்தவி வினவிட பெண்ணவளுக்கோ பதில் சொல்லத் தெரியவில்லை.
“தெரில டி வயித்துக்குள்ள ஒரு மாதிரி இருக்கு…வாந்தி வருமோன்னு தோணுது “
“ஒரு மாதிரின்னா..”
“ஒரு மாதிரி தான்..ஏதோ பறக்குற மாதிரி..”
“கரப்பான் பூச்சியா..? பட்டாம் பூச்சியா..?”
“ஆமா இப்போ இது தான முக்கியம்..பைத்தியமே அவ தான் செலயப் பாத்து ஒளர்ரான்னா நீயும் பெனாத்திகிட்டு இருக்க..மெண்டல்களா..உங்க ரெண்டு பேரயும் கூட்டிட்டு வந்த என்ன செருப்பால அடிக்கனும்..” சத்யா கத்தும் போதே அவ்விடத்தை இருள் நிரப்பிற்று.
வரம் கிட்டும்.
🖋️அதி..!
2024.10.06