Loading

 

காலையில் ஜாக்ஷி எழுந்து பார்க்க, வீரா அருகில் இல்லை.

எழுந்து கீழே சென்றாள். வீரா சோபாவில் அமர்ந்து கைபேசியில் கவனத்தை வைத்திருந்தான். முன்னால் சென்று நின்று கொண்டாள்.

அவன் நிமிர்ந்து பார்க்க, அவளும் பார்த்து வைத்தாள்.

வீரா எதுவும் பேசாமல் குனிய, அவன் தலையை பிடித்து நிமிர்த்தினாள்.

“பேச மாட்டியோ?”

“எதுக்கு? நான் கன்ட்ரோல் பண்ணுறேன்னு சொல்லுறதுக்கா?”

“சும்மா ஒன்னும் சொல்லல. அதான் உண்மை”

“இருக்கட்டும். அப்படித்தான் பண்ணுவேன்”

“உனக்கு என்னை விட திமிர் ஓவர்டா”

“தாங்க்ஸ்”

பல்லைக்கடித்தவள், அவன் நெற்றியில் நங்கென முட்டி வைத்தாள்.

“ஆ..” என்று கத்தி அவசரமாக அவன் நெற்றியை தேய்க்க, அவளது நெற்றியையும் தேய்த்துக் கொண்டாள்.

“என்ன இது?”

“உன்னை லவ் பண்ணதுக்கு சுவத்துல முட்டிக்கனும்னு தோனுச்சு அதான்”

“அடிங்க.. வலிக்குது”

“வலிக்குதா? வலிக்கட்டும் நல்லா”

“உனக்கும் தான வலிக்குது?”

“ஆமா.. உன் தலை பாறை மாதிரியிருக்கு”

“லூசு”

சொல்லி முடித்த நொடி, மீண்டும் தலையில் முட்டியிருந்தாள்.

“அம்மா…! ஏய்..!”

அவன் வலியில் அலறினாலும், அவள் வலியை பல்லைக்கடித்து பொறுத்துக் கொண்டு தலையை தேய்த்தாள்.

“இனிமே என் கிட்ட திமிரா பேசுன…”

“இப்படி முட்டுவியா?”

“இல்ல.. உன் தலைய பிடிச்சு சுவத்துல முட்ட வச்சுடுவேன்”

“அடிப்பாவி!”

ஜாக்ஷி முறைத்துக் கொண்டு நின்றாள்.

“இப்ப ஏன் திரும்ப முறைக்கிற?”

“எனக்கு பசிக்குது”

“முதல்ல போய் குளி.”

“நான் என்ன பண்ணனும்னு நீ சொல்லாதனு சொல்லுறேன்ல?”

“அப்படி தான் சொல்லுவேன்‌. குளிச்சா தான் சாப்பாடு”

“என்னால குளிக்க முடியாது. எனக்கு சாப்பாடு தான் வேணும்” என்று அடம்பிடித்தாள்.

‘இவ சும்மா சரி வர மாட்டா’ என்று நினைத்தவன், மொத்தமாய் தூக்கிக் கொண்டு சென்றான்.

இருவரும் குளித்து முடித்து கீழே வர, ஆர்டர் கொடுத்த உணவு வந்து விட்டது.

சாப்பிட்டு முடித்ததும், “உன்னால லேட்டாகிடுச்சு எனக்கு” என்று வீராவை முறைத்தாள்.

“சொன்ன பேச்ச கேட்டு குளிச்சுருக்க வேண்டியது தான?”

“நீ டாமினேட் பண்ணுற.. இது டொமஸ்டிக் வயலன்ஸ்”

“ரியலி!”

“ஆமா இங்க பாரு. காயமாகி போச்சு”

“நீ பண்ணத நான் காட்டவா?”

“ஆணிய புடுங்க வேணாம். எனக்கு வேலை இருக்கு” என்றவள், முறைப்பு மாறாமலே சென்று விட்டாள்.

அவள் கிளம்பியதும் வாய் விட்டு சிரித்தான் வீரா.

“சண்டை போடுறாளாம் ஜக்கம்மா” என்று சிரித்து விட்டு, சுபத்ராவை பார்க்கச் சென்றான்.

அன்று காலை முழுவதும் வேலை இல்லை என்பதால், சுபத்ராவிற்கு தேவையானதை எல்லாம் வாங்கிக் கொண்டிருந்தனர்.

“வீட்டுக்கும் எதாவது வாங்கனும்” என்றவன், அவளோடு சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்தான்.

பொருட்களை பார்த்துக் கொண்டிருக்க, “அண்ணா.. அங்க பாருங்களேன்.. முருகன்” என்று கை காட்டினாள்.

அவனும் எதோ வாங்கிக் கொண்டிருந்தான்.

“பேசனுமா?”

“நீங்களும் வாங்க”

“நீ போ. நான் இத பார்த்துக்கிறேன்” என்று அனுப்பி விட்டான்.

சுபத்ரா முருகனிடம் சென்றாள். முருகன் அவளை ஆச்சரியமாக பார்த்தான்.

“சுபத்ரா!”

“ஹாய் எப்படி இருக்கீங்க?”

“ஃபைன்.. நீங்க?” என்றவன், சட்டென அதிர்ந்து விழி விரிய பார்த்தான்.

“பேசுறீங்க?” என்று கேட்டவன், அவள் கழுத்தை பார்த்தான். இப்போது கட்டு எதுவும் இல்லை.

“பேச்சு வர்ரதுக்கு தான் ஆப்ரேஷன் பண்ணி இருந்தேன்.”

“ஓ… இப்ப நல்லா இருக்கா?”

“ம்ம்.. ஃபைன். உங்க அண்ணி பாப்பா நல்லா இருக்காங்களா?”

“நல்லா இருக்காங்க. நேத்து தான் வீட்டுக்கு வந்தாங்க. தனியாவா வந்தீங்க?”

“அங்க அண்ணா இருக்காங்க. வாங்களேன் அண்ணாவ காட்டுறேன்”

முருகன் ஒரு நொடிக்கு பிறகு, தலையசைத்து அவளோடு சென்றான்.

“அண்ணா”

வீரா திரும்பிப் பார்த்தான்.

“என் அண்ணா” என்று சுபத்ரா சந்தோசமாக அறிமுகப்படுத்த, இருவரும் கை கொடுத்து புன்னகைத்தனர்.

“உங்கள ஆர்ட்டிக்கல பார்த்தேன்.” என்று வீரா சொல்ல, “ஓ.. அது பழசாச்சே” என்றான் முருகன்.

“ஆமா.. ஆனா நல்லா இருந்தது. சுபி கூட லா படிக்க போறா” என்றதும், முருகன் சந்தோசமாக வாழ்த்தினான்.

“உங்க நம்பர் கிடைக்குமா? எனக்கு எதாவது டவுட்னா கேட்கலாம் தான?” என்று சுபத்ரா கேட்க, உடனே கொடுத்தான்.

“படிச்சு முடிச்சு வாங்க. கோர்ட்ல உங்கள எதிர்பார்ப்பேன்” என்று கூறி விட்டு, விடை பெற்றுக் கொண்டான்.

இருவரும் பாதியில் விட்ட வேலையை பார்த்து விட்டு, வீடு திரும்பினர்.

*.*.*.*.*.*.

ஜாக்ஷி வக்கீலை பார்க்க வந்திருக்க, அங்கு காதம்பரி தென்பட்டார்.

“இது இங்க என்ன செய்யுது?” என்று அருகே செல்ல, சொத்தை தனக்கே வாங்கிக் கொடுக்கும் படி பேரம் பேசிக் கொண்டிருந்தார் காதம்பரி.

‘சும்மா விட்டா இங்க வர வந்து நிப்பியா நீ?’ என்று நினைத்து அருகே சென்றாள்.

“என்ன வக்கீல் சார்.. எவ்வளவு கொடுப்பாங்களாம்? அஞ்சா? பத்தா? இல்ல அதுக்கும் மேலயே?” என்று கேட்டுக் கொண்டு வந்து நின்றாள்.

அவளை பார்த்து காதம்பரி ஒரு நொடி அதிர்ந்து பிறகு சுதாரித்தார்.

ஏனென்றால், லஞ்சம் கொடுக்க பேசிக் கொண்டிருந்தது அவள் காதில் விழுந்து விட்டதே.

“நிறைய மேடம். இருபத தாண்டுது”

“பரவாயில்லயே.. அவ்வளவு பணம் வச்சுருக்கியா காதம்பரி.. எனக்கு தெரிஞ்சு அசோக் கம்பெனியில ஃபண்ட்ட வித்ட்ரா பண்ண சொல்லிட்டேனே. இவ்வளவு பணம் எங்க இருந்து வந்துச்சு உனக்கு?”

“என்ன சொன்ன?”

“சாக்க குறை.. நான் தான் பண்ணேன். இன்னேரம் அடுத்த பிரச்சனை ஆரம்பிச்சுருக்கனுமே? அத பார்க்காம நீ இங்க வந்து பேரம் பேசிட்டு இருக்க?”

“எல்லாம் நீ பண்ணுற வேலையாடி?”

“நான் தான். என்ன செய்வ?” என்று தெனாவெட்டாக கேட்டு வைத்தாள்.

“எவ்வளவு திமிருடி உனக்கு? உன் கோபத்துக்கு எதுக்குடி பிஸ்னஸ்ல கை வைக்கிற?”

“நீ என் சொத்துல கை வைக்கலாம். நான் உன் பிஸ்னஸ்ல வைக்க கூடாதா?”

“அது என் சொத்துடி. என் சொத்த நீ பறிச்சுட்டு உன் சொத்துனு சொல்லுவியா?”

“அடேங்கப்பா.. உன் சொத்தா? முடிஞ்சா வாங்கிப்பாரு. இப்ப இடத்த காலி பண்ணு. லஞ்சம் கொடுக்குற மூஞ்சிய பாரு. முதல்ல அவ்வளவு பணத்த ரெடி பண்ண முடியுமானு பாரு. அப்புறமா வந்து கொடுக்கலாம்.”

“வாங்குறேன்டி.. வாங்கி காட்டுறேன். உனக்கு இவ்வளவு இருந்தா உன்னை பெத்த எனக்கு எவ்வளவு இருக்கும்?”

“போய் வேலைய பாரு” என்று ஜாக்ஷி திரும்ப, “ஏன்டி.. அந்த வேலைக்காரன் எங்க? எப்ப பாரு உன் கூட ஒட்டிக்கிட்டே இருப்பான். இப்ப காணோம்? ஆமா அவன கல்யாணம் பண்ணிக்க போறியா? இல்ல உங்கப்பன் மாதிரி வச்சுக்க போறியா?” என்று கேட்டு வைத்தார்.

ஜாக்ஷிக்கு சுள்ளென ஏறியது கோபம். காதம்பரிக்கு மனம் கொக்கரித்தது. அவளை நல்ல முறையில் அடிக்க முடியாவிட்டால் என்ன? இதை வைத்து காயப்படுத்தலாம் என்ற சந்தோசம் காதம்பரிக்கு.

ஜாக்ஷி மூச்சை இழுத்து விட்டு விட்டு, திரும்பி காதம்பரியை மேலும் கீழும் பார்த்தாள்.

“நீ என்ன நினைக்கிற? உன்னை மாதிரி வினய் உருவானப்புறம், அதை கலைக்கவே முடியாதுனு டாக்டர் சொன்னப்புறம், அசோக் உன் கால்ல விழுந்து கேட்டதுக்கு அப்புறம், வேண்டா வெறுப்பா கல்யாணம் பண்ணியே. அதே மாதிரி எதாவது நடந்துடும்னு பயமா? கவலையே படாத. உன்னை மாதிரியோ அந்த சிற்றம்பலம் மாதிரியோ நான் கிடையாது. அந்தாளு துரோகி. நீ பாவி. பெத்த மகள கருவுல கொல்ல நினைச்ச பாவி. உன்னை போலலாம் நான் இருக்க மாட்டேன்”

‘இது எப்படி இவளுக்குத் தெரியும்?’ என்று அதிர்ந்து போனார் காதம்பரி.

இது எல்லாம் ஜாக்ஷியின் சிறு வயதில் நடந்தது. இப்போது எப்படி இதை கண்டு பிடித்தாள்?

“என்ன? முழிக்கிற? ஓஓஓ… உன் வண்டவாளம் ஊருக்கு தெரியாதுனு நினைப்பா? எனக்கு தெரியும். இன்னும் நிறைய தெரியும். சொன்னா உனக்கு அசிங்கமா இருக்கும். உன் பர்ஸ்னல்னு இது வரை நான் அதுல தலையிடல. என் பர்ஸ்னல்ல நீ தலையிட்டனு வை.. மிஸ்டர் அசோக் கிட்ட போய் சொல்லுவேன்.”

“என்ன… என்ன சொல்லுவ? என்னடி சொல்லுவ?”

திக்கித்திணறி கோபமாகவே கேட்டார்.

“ம்ம்.. நீ ஒன்னும் காதம்பரிக்கு ரெண்டாவது இல்ல. நாலாவதுனு”

அதிர்ச்சியில் தொண்டைக்குழி ஏறி இறங்கியது காதம்பரிக்கு.

“ஆனா ஒன்னு.. நீயும் ஜகஜால கேடி தான். எவனயோ லவ் பண்ணி, சிற்றம்பலம் வீட்டோட மாப்பிள்ளையா வந்துடுவான்னு தாத்தா சொன்னதுக்காக, அவன கழட்டி விட்டுட்டு தான வந்த? அது போதாதுனு சிற்றம்பலம் போனதும் வேற ஒருத்தன். அவன் நல்ல நேரம், சீக்கிரமே தப்பிச்சுட்டான். அசோக் மாட்டிக்கிட்டார். வினய் மட்டும் இல்லனா, அசோக்கும் தப்பிச்சுருப்பாரு”

“ஏய்.. என்ன இஷ்டத்துக்கு பேசிட்டு இருக்க? கண்ட கண்ட கதை எல்லாம் சொன்னா? அப்படியே பயந்துடுவேன்னு நினைப்பா?”

“அது உன் கவலை. ஒழுங்கா உன் வேலைய மட்டும் பாரு. தேவையில்லாம என்னை பத்தியும் என் லவ்வர பத்தியும் பேசுன… உன் வாழ்க்கைக்கு உலை வச்சுட்டு போயிடுவேன். யோசிச்சு பாரு. இந்த வயசுல உன்னை பத்தி அசோக்குக்கு தெரிஞ்சா அவர் உன்னை என்ன நினைப்பாரு? அசிங்கமா இருக்காது?”

கேவலமாக பார்த்து விட்டு அவள் சென்று விட, வக்கீலும் சென்று விட்டார். காதம்பரிக்கு வியர்த்து விட்டது.

அசோக்கின் முன்னால் மனைவியை பற்றிப்பேசினால் கூட, காதம்பரிக்கு கோபம் வரும். வீட்டில் கூட எந்த படங்களையும் அவர் வைக்க விட வில்லை. கேட்டால், சிற்றம்பலத்தை காதம்பரி மனதார கணவனாக ஏற்கவே இல்லை. அசோக் மட்டும் தான் ஒரே ஒருவர் என்று சொல்லி வைத்திருந்தார்.

இந்த கதையெல்லாம் தெரிந்தால், அவரது மரியாதை? அடுத்த நொடி அசோக்கின் முன்னால் மனைவியின் புகைப்படம் வீட்டுக்கே வந்து விடும். திக்கென்ற மனதோடு வீடு சென்று சேர்ந்தார்.

அது போதாது என்று, ஜாக்ஷி அசோக் நிறுவனம் செய்து மூடி மறைத்த பழைய குற்றங்களை தோண்ட ஆரம்பித்து இருந்தாள்.

காதம்பரியை முழுதாக அடித்து ஓய்ந்தால் ஒழிய, அவளால் நிம்மதியாக வாழவே முடியாது.

வீராவுடனும் சண்டை வந்து விடும். அவளால் அப்படி அவனிடம் பேசாமல் இருக்க முடியவில்லை. அதை விட காதம்பரியை முழுதாக ஒதுக்கி விட்டால், ஜாக்ஷி அதிகமாக கோபப்பட மாட்டாள். வீராவும் அவளிடம் கோபம் கொள்ள மாட்டான்.

இதை யாருக்கும் சொல்லாமல், தெரியாமலே முடித்து விட நினைத்து வேலையை ஆரம்பித்து விட்டாள்.

தொடரும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
30
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. ஜாக்ஷி களத்தில் இறங்கி விட்டாள்

    2. எப்படியாப்பட்ட குதிரைக்கும் கடிவாளம்ன்னு ஒண்ணு இருக்கும். ஸோ.. ஜாக்ஷி என்கிற குதிரைக்கும், வீரா என்கிற கடிவாளம் தான் பர்ஃபெக்ட்.

      😀😀😀
      CRVS (or) CRVS 2797