ஜாக்ஷியே காரை ஓட்ட, வீரா அமைதியாக வெளியே பார்த்துக் கொண்டு வந்தான்.
“நான் இத எதிர்பார்க்கல வீரபத்திரன்”
உடனே திரும்பி அவளை பார்த்தான்.
“எத?”
“ஓபனா சொல்லனும்னா, நீங்க நான் சொன்னத செய்வீங்கனு எனக்கு நம்பிக்கை இல்ல”
“ஏன்?” என்று கேட்டவனின் குரலில் சிரிப்பிருந்தது.
“சொன்னா அசிங்கமா இருக்கும். ஆனா நீங்க முடிச்சுட்டீங்க.. அதுனால சொல்லுறேன். நான் ஆறு வருசத்துக்கு முன்னாடி வேலைய ஆரம்பிச்சேன். அப்பவே எனக்கு நிறைய பேர் மேல சந்தேகம் வந்துச்சு. இன்னைக்கு தூக்குனமே, அந்த நாலு பேரும் சேர்த்து தான்”
வீரா தலையை மட்டும் ஆட்டினான்.
“ஆனா என்னால எதுவுமே கண்டு பிடிக்க முடியல. அண்ட் அப்போ மிஸ்டர் சிற்றம்பலம் வேற இருந்தார். அவர தாண்டி, இவங்கள எல்லாம் அப்ரோச் பண்ணுறதே கஷ்டம். என்னை ஒரு சின்ன பாப்பா ரேஜ்க்கு டிரீட் பண்ணுவாங்க”
கடைசி வார்த்தையில் அவள் பல்லைக்கடிக்க, “முதலாளி பொண்ணுங்குறதால அப்படி செஞ்சுருப்பாங்க” என்றான் சமாதானமாக.
“என்னவோ! எனக்கு எதுவுமே மாட்டல. உங்களுக்கு எல்லாம் கிடைச்சுருக்கு”
“ஏன்னு எனக்கு தெரியும்”
“ஏன்?”
“நீங்க பாஸோட பொண்ணு, பேத்தி. ஆனா நான்? ஒரு சாதாரண ஆளு. ஆஃபிஸ்க்குள்ள சாதாரண ஸ்டாஃப்க்குள்ள பேசுற புரணி, அந்த ஆஃபிஸ் ஜாகத்தையே சொல்லும். அப்படி தான் எனக்கு நிறைய விசயம் தெரிய வந்தது”
“ஓஹோ.. அப்ப என் கிட்ட பேசாதது எல்லாம் உங்க கிட்ட பேசிருக்காங்க”
“அதே தான்”
புரிந்தது போல் தலையாட்டியவள், உடனே திரும்பினாள்.
“அதான் பிரமோஷன் வேணாங்குறீங்களோ?”
“வேணாம்னு சொல்லல. நான் அத பத்தி யோசிக்கல அவ்வளவு தான்.”
“சரி யோசிங்க. திரும்பி வரும் போது சரியான பதில எதிர்பார்க்குறேன்”
வீரா ஒப்புக் கொண்டதும், காரை அவன் வீட்டின் முன்பு நிறுத்தினாள்.
“குட் நைட்” என்று விடை பெற்று இறங்கிச் சென்று விட்டான்.
*.*.*.*.*.*.
அடுத்த நாள், மொத்த அலுவலகத்திலும் வீராவைப்பற்றிய பேச்சு தான் ஓடிக் கொண்டிருந்தது.
“இப்படி உளவு பார்த்து போட்டுக் கொடுக்குற ஆளுனு தெரியாம போச்சே.. எதெல்லாம் போய் போட்டுக் கொடுத்தானோ?” என்று பலர் பதறிக் கொண்டிருந்தனர்.
அதுவும் ஜாக்ஷி வழக்கு போட்டிருப்பது, மேலும் பீதியை கிளப்பி விட்டது.
யாருடைய வேலை எப்போது பறிக்கப்படும் என்று தெரியாமல், பதறிக் கொண்டிருந்தனர். பெரிய தலைகள் போக, அவர்களுக்கு உதவிய அல்லக்கைகளை பாரபட்சம் பார்க்காமல் தூக்கி விட்டாள்.
அந்த வேலைக்கு புது ஆட்கள் எடுக்கப்படும் என்ற அறிவிப்பும் வந்தது. தவறே செய்யாதவர்கள் கூட இதைக்கண்டு பதறத்தான் செய்தனர். சிறு சிறு தவறுகளை செய்தவர்களுக்கு, வியர்த்து விட்டது.
அன்று முழுவதும் அவர்களது வாயில் அரைபட்டான் வீரா. ஆனால் அதைப்பற்றி அக்கறைபட அவனுக்கு நேரமில்லை.
காலையிலேயே ஊருக்கு கிளம்பிச் சென்று விட்டான். பாட்டியை பார்க்க.
வீடு சென்று உபசரிப்புகள் முடிந்து, அக்கம் பக்கத்தினரிடம் பேசி விட்டு அமர்ந்தான்.
லட்சுமி நிறைய கணக்குகளை வைத்திருக்க, அதை பார்த்துக் கொண்டிருந்தான்.
அவனருகே வந்து அமர்ந்தார் லட்சுமி.
“வீரா”
“ம்ம்”
நோட்டிலிருந்து தலையை நிமிர்த்தவில்லை.
“ஒரு நல்ல வரன் வந்துருக்குபா”
சட்டென நிமிர்ந்து பார்த்தான்.
“உனக்கு சரினா பேசட்டுமா?”
“என்ன திடீர்னு?”
“திடீர்னு தான் வரன் வரும். பிறந்ததுல இருந்தே பேசி வைக்க, உனக்கு என்ன அத்தை மகளுங்க மாமன் மகளுங்களா இருங்காளுங்க?”
வீரா புன்னகைத்து விட்டு, “கொஞ்ச நாள் போகட்டும் அப்பத்தா” என்றான்.
“இன்னும் எத்தனை நாளு? இப்பவே வயசு கூடிருச்சு. காலகாலத்துல பண்ணா தான உன் புள்ளை குட்டிகள நான் தூக்கி கொஞ்ச முடியும். வர்ர மருமகளுக்கும், எல்லாம் சொல்லி கொடுக்க முடியும். இதுக்கு மேல நான் தள்ளாடுற வயசுல பண்ணிக்கலாம்னு இருக்கியா?”
“கொஞ்ச நாள் தான் சொன்னேன். வருசகணக்கா சொல்லல.. அண்ட்.. நானே வந்து சொல்லுறேன் வெயிட் பண்ணுங்க”
“நீயே சொல்லுவியா? எப்படி? அப்பத்தா.. எனக்கு கல்யாணம் பண்ணி வைங்க அப்பத்தானு கேட்பியா?”
அவனுக்கு சிரிப்பு வந்தது. அப்படி அவன் கேட்க போவது இல்லை தான். ஆனால் இப்போது திருமணத்திற்கு சம்மதிக்கவும் முடியாதே.
“நல்ல பொண்ணு வீரா.. உனக்கு நிச்சயமா பிடிக்கும். என்ன நாளைக்கேவா கல்யாணம் பண்ணி வைக்க போறோம். பேச்சு எல்லாம் வந்து முடிய நாள் ஆகும்ல?”
‘இவர் விடமாட்டார் போலவே’ என்று நினைத்துக் கொண்டான்.
“பொண்ணு யாரு?”
“எல்லாம் உனக்கு தெரிஞ்சவ தான். நம்ம காமாட்சி மக”
“என்னது? அது படிக்கிற பிள்ளை.. என்னை அண்ணானு கூப்பிடும்.. அப்பத்தா.. என்ன பண்ணி வச்சுருக்கீங்க?”
அவன் அதிர்ந்து போய் கேட்க, லட்சுமி சிரித்து விட்டார்.
“விளையாடுறீங்களா? அத போய்..” என்று பேசிக் கொண்டே வந்தவன், அவரது சிரிப்பை பார்த்து விட்டு முறைக்க ஆரம்பித்தான்.
“அது பச்ச புள்ளை வீரா.. நான் சும்மா சொல்லி பார்த்தேன். அது பொண்ணில்ல”
“கிண்டல் பண்ண வேற ஆளா இல்ல? போங்க அங்குட்டு”
“ஆனா பொண்ணு உனக்கு நிஜம்மாவே தெரிஞ்சவ தான். உன் முதலாளி ஜாக்ஷி”
அவன் கையிலிருந்த பேனா கீழே விழுந்தது.
“மறுபடியும் கிண்டலா?”
“இல்ல வீரா.. அவ தான். அவ பாட்டி தான் இந்த பேச்சையே எடுத்தா. உங்க ரெண்டு பேரையும் பார்க்கும் போதெல்லாம், இதான் தோணுச்சாம். என் கிட்ட சொல்லி உன் கிட்ட பேச சொன்னா”
‘அவங்களா? ஏன்?’ என்று யோசனை வர, “ஜாக்ஷிக்கு தெரியுமா?” என்று கேட்டான்.
“தெரியல. பேசுறேன்னு தான் சொன்னா. நீ என்ன சொல்லுற? ஜாக்ஷி கூடயே பழகி இருக்க. நல்ல தைரியமான பொண்ணு. அறிவும் அழகும் நிறைஞ்சவ. உனக்கு பொருத்தமா இருப்பா”
‘நான் அவளுக்கு பொருத்தமானு தான் யோசிக்கனும்’ என்று நினைத்தவன், “ஜாக்ஷி கோபப்படாம இருந்தா சரி” என்றான்.
“நீ என்ன சொல்லுற? அத சொல்லு”
“நான் சொல்லுறது இருக்கட்டும். ஜாக்ஷி என்ன முடிவுக்கு வர்ராங்கனு பார்க்கலாம். அப்புறம் நான் பதில் சொல்லுறேன்”
“ஜாக்ஷி சரினு சொல்லிட்டா?”
“சொல்லட்டும் அப்புறமா கேளுங்க. இப்ப இந்த பேச்ச விடுங்க” என்று விட்டான்.
அடுத்து இரண்டு நாட்கள் அங்கேயே இருந்து விட்டு கிளம்பிச் சென்று விட்டான்.
*.*.*.*.*.*.*.
பேச வேண்டும் என்று பாட்டி அழைத்ததும் வந்து அமர்ந்தவள், திருமண பேச்சை எதிர்பார்க்கவில்லை.
அதுவும் வீரபத்திரன்? நம்பவே முடியவில்லை.
“என்ன சொல்லுற ஜாக்ஷி?”
பாட்டி கேட்க, ஜாக்ஷியிடம் பதிலே இல்லை.
“திடீர்னு ஏன் இப்படி?”
“நல்ல பையனா இருக்கான். உனக்கு பொருத்தமா இருப்பான்னு தோனுச்சு. கேட்டு பார்க்குறதுல தப்பில்லையே?”
“அவன் கிட்டயும் பேசிட்டீங்களோ?”
“நான் பேசல. ஒரு வேலை லட்சுமி பேசிருக்கும். என்ன சொன்னான்னு எனக்கு தெரியல. உன் கிட்ட பேசிட்டு கேட்போம்னு விட்டேன்”
“எனக்கு சரி வரும்னு தோணல பாட்டி”
“ஏன்?”
“தெரியல. எதோ பிடிக்கல”
“வீராவ பிடிக்கலயா? பிடிக்கலனா கட்டாயப்படுத்தலாம் மாட்டேன்”
“ச்சே ச்சே.. வீரபத்திரன் ஜென்டில் மேன். அவர போய் ஏன் பிடிக்கலனு சொல்லுறேன். எனக்கு கல்யாணம் தான் பிடிக்கல”
“இது எதிர்பார்த்தது தான். என்ன உன்னை பெத்த ரெண்டு பேரும் உன்னை மாத்தி வச்சுருக்குங்களா?”
“கல்யாணத்துல என்ன பாட்டி இருக்கு? ஒரு குழந்தைய குடும்பத்துக்கு வாரிசா பெத்துக்கிறதுக்காக, கல்யாணம் பண்ணிக்கனும். மத்தபடி எதுவுமே இல்ல.”
“வாஸ்தவம் தான்”
“என்ன சட்டுனு ஒத்துக்கிட்டீங்க?”
“உண்மைய சொல்லுற. ஆனா பிள்ளைய பெத்தப்புறமும், வாழ்க்கை நீண்டு கிடக்கு. உன் அம்மா அப்பா வாழந்த வாழ்க்கை மாதிரி உலகத்துல எல்லாரும் வாழுறது இல்ல. உன் அம்மாவ ரொம்ப செல்லம் கொடுத்து கெடுத்தது உன் தாத்தா. அவள நாங்க சரியா வளர்க்காம விட்ட கஷ்டம், இன்னைக்கு உன் வரை வந்து நிக்குது. கல்யாணம் பண்ணியே ஆகனும்னு சொல்ல மாட்டேன் ஜாக்ஷி. ஆனா பண்ணா வாழ்க்கை அழகா இருக்கும். நமக்காக ஒரு உயிர் வாழுறது, நாம ஒருத்தருக்காக வாழுறது சுகம். அந்த சுகம் உனக்கு கிடைக்கனும்னு ஆசைப்படுறேன். அவ்வளவு தான்”
“பட் ஏன் வீரா?”
“உன் அப்பா விசயத்த வச்சு யோசிக்காத. வீரா உன் அப்பாவ விட பல மடங்கு உயர்ந்தவன். அவன விட யாராலயும் உன்னை பாதுகாப்பா பார்த்துக்க முடியாது. அன்பா கவனிக்க முடியாது. யோசிச்சு சொல்லு”
பாட்டி அதற்கு மேல் வேறு எதுவும் சொல்லாமல், வேலையை பற்றி பேசி விட்டு அனுப்பி விட்டார்.
ஜாக்ஷி, போகும் வழியெல்லாம் வீராவை பற்றியே யோசித்தாள். அவளுக்கு அவனை பிடிக்கும் தான். முதல் நாள் அவனோடு காரில் ஒன்றாக போகும் போது, அவன் அவளது பசியறிந்து சாப்பிட அழைத்துச் சென்றதை, அவளால் மறக்கவே முடியாது. பாட்டியை தவிர யாருமே அவள் மீது பெரிதாக அக்கறை பட்டது கிடையாது.
அவளிடம் இருக்கும் பணத்திற்காக வட்டமிட்டவர்கள், அக்கறை இருப்பது போல் நடிக்கத்தான் செய்தனர். ஆனால் வீரா வேறு வகை. சாப்பிட்டு பணத்தையும் கொடுத்து விட்டுத்தான் கிளம்பினான்.
பழகும் ஆண்களின் பார்வைகளை, அவள் நன்றாக அறிவாள். அதில் வீராவிற்கு நூறு மதிப்பெண் கொடுக்கலாம். அவளை ஒரு நொடியும் எச்சரிக்கையடைச் செய்தது இல்லை.
அறிவாளி, புத்திசாலி, கண்ணியமானவன், நல்ல ஆண்மகன், எல்லாமே அவனை பற்றி நல்லதாக தான் இருந்தது.
கோபமும் கூட சட்டென வந்து விடுகிறது அவனுக்கு. வினய்யின் கையைப்பிடித்து முறுக்கினானே. அலுவலகத்திலும், வேலை செய்வர்களிடம் கோபப்பட்டு திட்டி இருக்கிறான்.
எல்லாமே சரி தான். ஆனால் திருமணம்? அதை நினைத்தால் தான் தொண்டை கசந்தது.
அவளது அம்மா அப்பாவின் விவாகரத்தை பற்றிப்பேசி, அவளை குத்திக் கிழிக்காத ஆட்களே இல்லை. அப்போதெல்லாம், ‘நானெல்லாம் கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்’ என்று நினைத்துக் கொள்வாள்.
அது சிறு வயது தான். வளர வளர முதிர்ச்சி வந்தது தான். பெற்றோர்களின் தவறுக்கு, திருமணம் காரணமில்லை என்று புரிந்தது தான். அவரவர் தவறு, தண்டனை மட்டும் அவளுக்கு! என்று புரிந்தது.
ஆனால் திருமணத்தின் மீது ஆசையும் வரவில்லை. என்ன பெரிய திருமண வாழ்வு? என்று சலிப்பு தான் வந்தது. அவளது நண்பர்கள் திருமணத்தை ஆசையாக செய்து கொள்வதும், அடுத்த ஒரு வருடத்தில் புலம்புவதையும் பார்த்து சலித்து விட்டாள். பல விவாகரத்துகளையும் பார்த்து விட்டாள்.
திருமணம் என்றாலே சலிப்பு தான் வந்தது. இனிமேலும் திருமணம் செய்து கொள்ள வேண்டுமா? என்ற நிலைக்கு எப்போதோ வந்து விட்டாள்.
பாட்டியும் திருமணத்தை பற்றி பேசாமல் இருக்கவும், நன்றாக தான் இருந்தது. இன்று தான் வீராவை பற்றி பேசுகிறார்.
இதற்கு என்ன சொல்வது? வீராவிடம் பேசிப்பார்க்கலாமா? அது தான் சரி என்று யோசனையுடன், வீட்டை நோக்கிச் சென்றாள்.
தொடரும்.
வீராவாவது பரவாயில்லை, கல்யாணம் சொன்னவுடனே பொண்ணு யாரு, என்னன்னு கேட்குறான். ஆனா, இந்த ஜாசஷி எருமை மாட்டு மேல மழை பெய்ஞ்ச மாதிரி ஒரு ரீயாக்சனும் இல்லாம இருக்காளே… அடேய் வீரா ரொம்ப கஷ்டம்டா உன் பாடு.
எதுக்கும் ஒருத்தடவை நல்லா யோசிச்சிக்க.. இதே பெட்ரோமாக்ஸ் லைட் தான் வேணுமா உனக்கு. அப்புறம்
உன் இஷ்டம், உன் கஷ்டம்.
😀😀😀
CRVS (or) CRVS 2797
வீரா ஜாக்ஷி பாட்டி இருவர் செம