என் உயிர் – 7 🧬
செழியன் ஆங்காரித்து கொண்டிருந்தார். செழியனின் இம்மாற்றம் ஆதவ்விற்கே புதிது. அவன் ஆச்சர்யத்தோடு பார்க்க,
“உனக்கு பக்குவமும் அனுபவமும் வேணும்னு தான் நான் சொல்லுறேன். அதோடு, இவ்வளவு மதிப்பும் மரியாதையும் நான் சம்பாதிச்சது. அது யாரையும் கெடுத்து வாங்கல . அதுவே எனக்கு பெரிய பகடைக்காய். நீயும் அதே மாதிரி இருக்கனும்னு தான் ஆச படுறேன். வேகத்தை விட விவேகம் முக்கியம். அதனால, நீ முத வெற்றியை நோக்கி ஓடு. அது வரைக்கும் அப்பா நான் பாத்துக்கிறேன் . அதோட நான் இப்போ நடத்த போற ரிஸர்ச் ( ஆய்வு ) எனக்கு பெரிய வெற்றியை கொடுக்க போகுது. நான் அதுக்கு தான் அதிக நேரம் செலுத்தனும் . நான் கிளம்புறேன் “என்று கூறி ஆதவ்வின் தோளில் தட்டி கொடுத்து விட்டு சென்று விட்டார்.
ஆதவ் போகும் தனது தந்தையைக் கண்டு தனது கூலர்ஸை பல்லில் கடித்துக் கொண்டே வெற்றி புன்னகை வீசினான்.
🛖 சாலமேடு
கவியின் கண்கள் பனித்தது. தனது கழுத்தில் ஏறிய மாங்கல்யத்தைக் கண்டு , நிமிர்ந்து அருகில் இருப்பவனைக் கண்டாள் மங்கலாக தெரியும் அனுநிலவனை.
ஆனால், அவனோ அருகில் யாருமே இல்லாதவாறு ஐயர் கூறும் மந்திரங்களை முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டு கூறிக் கொண்டிருந்தான்.
அக்னியை வலம் வருவதற்கு இருவரும் எழுந்து நிற்க, பின்னால் நிற்கும் வயது நிறைந்த பாட்டி இருவரின் கைகளை சேர்த்தது. அவனை அறியாமல் அவனும், அவளை அறியாமல் அவளும் ஸ்பரிசம் பட்டவுடன் கைகளை இறுக்கிக் கொண்டனர்.
ஐயர் எதுவோ கூறிய பிறகே சட்டென்று இறுக்கத்தை தளர்த்தினர். ஏன் இவ்வாறு செய்தோம் என்று இருவருக்குமே புரியவில்லை . ஆனால், மனதிற்கு இதம் தருகின்றது என்று இருவருக்கும் புரியாமல் இல்லை.
தான் இன்னொருவனை மணப்பதற்கு மணவறையில் அமர்ந்து விட்டு, இவனின் கையை பிடிப்பது அபத்தம் என்பதை விட அனு நிலவன் தன்னை கீழ்தரமாக நினைப்பான் என்ற நினைப்பே கொன்றது. அத்தகைய யோசனையோடு இணைந்து இருந்த கையைப் பார்க்க, அதற்கு நேர்மாறாக நிலவன் அவளின் முகத்தை நன்கு கண்டான்.
விசேஷத்திற்கு விருந்தாளியாக வந்ததால் பெரிதாக பெண்னைக் கண்டுகொள்ளவில்லை. திருமணம் நின்ற பின், தன்னை அமர வைத்தும் பின்பும் பிற்காலம் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தான். இப்பொழுது தான் அவளை அருகில் நன்றாக கவனித்தான்.
கிராமத்து பைங்கிளியாக கண்ணுக்கு தென்பட்டாள். அதற்குள் ஐயர் பல சடங்குகளை செய்ய சொல்லி இறுதியாக சாப்பிடும் இடத்திற்கு வந்தமர்ந்தனர் .
நடந்த கலவரத்தினால் காலையில் இருந்து உண்ணதாதல் அனுவிற்கு பசி வயிற்றை கிள்ளியது. அதற்கு நேர்மாறாக கவிக்கு பசி அடங்கி இருந்தது. துக்கத்தினாலும், அதிர்ச்சினாலும் பசி இல்லை என்று அவள் நினைத்தாள். ஆனால், அவளுக்கு திருப்தியினால் வயிறு நிரம்பி உள்ளது என்று யார் சொல்லுவார் ?
வழக்கம் போல் உண்ணும் பொழுது நடக்கும் ஊட்டி கொள்ளும் நிகழ்ச்சி இங்கு நடக்கவில்லை இருவரின் மனநிலை கருதி . நிலவன் அமைதியாக அனைத்து பதார்த்தங்களை ருசித்து புசித்து கொண்டிருந்தான்.
கவி சாப்பாட்டை அளந்து கொண்டிருந்தாள். மற்ற அனைவரும் சாப்பிட வேண்டும் என்பதற்காக கொறித்து கொண்டிருந்தனர்.
அப்பொழுது படபடவென உள்ளே நுழைந்து அமர்ந்திருக்கும் கவியின் கையைப் பிடித்து இழுத்து எழவைத்து, “அப்போ என் பையன் கட்டுன தாலியை என்னடி பண்ணுறது ? ” என்று ஆங்காரித்தார் இந்திரா .
அவர் கையைப் பிடித்தவுடன் மறு கையை பிடித்துவிட்டான் நிலவன். அவரால் ஒரு கட்டத்திற்கு மேல் முடியாமல் கத்த, “அதுக்கு உன் பையன் இங்க இருக்கனும் “என்று வனஜா பாய்ந்து கொண்டு பேசினார்.
“அம்மா! அவனும் உன் பேரன் தான் மறந்துடாத ? ” விரல் நீட்டி இந்திரா பேச,
“அந்த ஒரு காரணத்துக்காக தான் வார்த்தையைப் பார்த்து பேசுறேன். மொத உன் புருஷனும் , பிள்ளையும் ஸ்டேஷன்ல என்ன லட்சணத்துல இருக்காங்கனு பாரு? அப்பறம் மத்தது பேசு ” என்று இருவரும் வாய்மொழி சண்டையிட்டு கொண்டிருக்க ,
நிலவன் பிடித்த கைகளைப் பார்த்து விட்டு, கண்களில் கண்ணீருடன் மங்கலான பார்வையில் நிமிர்ந்து நிலவனைக் கண்டாள். ஆனால், அவளின் சிந்தனை காலையில் மகிலனுடன் மணவறையில் அமர்ந்த தருணத்திற்கு சென்றது.
காலை ஆறு மணிக்கே மணப்பெண்னை தயார் செய்து குல தெய்வக்கோயிலுக்கு கூட்டிக் கொண்டு சென்று விட்டனர். மணப்பெண் செய்யும் சடங்குளை செய்து முடிக்க, மணமகனான மகிலன் கோவிலுக்கு சென்று மணப்பெண்ணை மணாளனாக கைப்பிடித்து மண்டபத்திற்கு கூட்டி வந்தான்.
ஒரு மணி நேரத்திற்குள் கூட்டம் கூடி விட்டது. திருமலை, பாரி, தீரன் மூவரும் மாறி மாறி சாப்பிடும் இடத்திற்கும், வருபவர்களை கவனித்து கொண்டும் இருந்தனர். பெண்கள் வரவேற்பறையிலும், மணவறையிலும் ஐயர் கேட்பதை எடுத்து கொடுத்து கொண்டும், வருபவர்களை கவனித்துக் கொண்டும் இருந்தனர்.
சில சம்பிரதாயங்கள் முடிந்து இறுதியாக கூரை புடவை கொடுத்து மாற்றி கொண்டு வர சொல்ல அளப்பரிய ஆனந்தத்தில் திக்குமுக்காடி கொண்டிருந்தாள்.
அவளுக்கு கூரை புடவையையே தீரன் விலையுயர்ந்ததாக மாமன் சீராக கொடுத்திருந்தான். அதோடு, அவள் அணியும் அனைத்து ஆபரணங்களும் தங்கத்தில் ஜொலித்துக் கொண்டிருந்தது. திருமலையின் பங்கிற்கு அவரும் இவ்வாறு செய்திருந்தார். அப்சரஸாக நடந்து வந்தவளை அனைவரும் வைத்த கண் வாங்காமல் பார்க்க, மகிலனுக்கு சொல்லவே தேவையில்லை மயங்கி விட்டான்.
ஆனால், அதே நேரம் வேறு இரு கண்களும் அவளை மொய்த்துக் கொண்டிருந்தது. அவன் வேறு யாரும் இல்லை நிலவன் தான். அவனின் இளமை பண்புகள் வெளியில் எட்டிப் பார்த்து அவளை கண் குளிர சைட்டு அடித்துக் கொண்டிருந்தான் . ஆனால் கண்ணியம் இல்லாமல். அது அவனுக்கே ஆச்சர்யம் தான்.
டெல்லியில் வளர்ந்தவனுக்கு டேட்டிங்க் என்பது சாதாரணம். அதோடு அங்கு பார்த்த பீனிக்ஸை கண்களால் களவாடியதோடு , நேரடியாக உறவாடவும் செய்திருக்கிறான் அதுவும் அளவாக .
அதே சிந்தனையுடன் இங்கு பார்த்த பைங்கிளியையும் கண்களால் பருகினான். யாரும் அறியாமல் கூலர்ஸ் அணிந்து கொண்டு செய்ததை கண்டுகொண்ட தீரன் முறைக்க, அமைதியாக கண்டும் காணாதது போல் திரும்பி கொண்டான்.
ஓரக்கண்ணால் தனது மாமனை ரசித்தாள் கவி. மெருகேற்றிய உடம்பில் பட்டு சட்டை மற்றும் வேஷ்டி இழைந்தோடியது. அதில் அவன் புஜங்கள் எடுப்பாக வெளியில் எட்டிப் பார்த்து .
தலையை வாரி சீவி, நெற்றியில் குங்குமம் இட்டு , தாடியை வழித்து கிளின் சேவ் செய்திருந்தான். கழுத்தின் கீழ், அழகு எலும்பு என்று கூறும் காறை எலும்பில் ஏறி இறங்கி மின்னியது மெல்லிய சங்கிலி .
ஒரு பட்டனை திறந்து விட்டு அவனின் எடுப்பான நெஞ்சம் இன்னும் அழகாக தென்பட்டது. கைகளை அசைத்து அசைத்து ஐயர் கூறும் மந்திரங்களை கூற , பார்க்கவே ரம்மியமாக இருந்தது.
இன்னும் சிறு நேரத்தில் அவனின் மனைவி என்கின்ற கனவோடு அவனின் அருகில் அமர்ந்தாள். அதே ஆசையோடு ஐயர் கூறும் மந்திரங்களை கூறிக் கொண்டே தனது அத்தானை திரும்பி காண முயன்றாள்.
ஆனால், அதே சமயம் வெட்கமும் வர தலை குனிந்து ஓரக்கண்ணால் மங்கலாக பார்த்துக் கொண்டாள். இறுதியாக “கெட்டி மேளம் கெட்டி மேளம் “என்ற சத்தத்தில் அனைத்தையும் மறந்து பயம் தொற்றிக் கொண்டது.
நிமிர்ந்து கண்கள் கலங்க திருமாங்கல்யத்தை பார்ப்பதற்குள் அதை மகிலன் வாங்கி அவளின் கழுத்தில் பூட்டினான். கண்கள் இறுக்கி தன்னை ஆசுவாசப்படுத்தி நிமிர நினைக்கும் முன், எதுவோ தனது கழுத்தை இறுக்குவது போல் இருந்தது.
கண் திறந்து பார்க்க ஒரு கையால் தாலியை பிடித்துக் கொண்டு மகிலன் எழ, அதில் தடுமாறிய கவியை பின்னிருந்தவர்கள் பிடித்துக் கொள்ள, ஒரு முடிச்சு மட்டும் இட்ட தாலி விழவா வேண்டாமா என்கின்ற யோசனையில் நிற்க, ஒரு ரெளடி கும்பல் அவனை தரதரவென இழுத்து சென்றது.
அனைவரும் ஸ்தம்பித்து நிற்க, பாரியும் இந்திராவும் பின்னால் செல்ல, வாசலில் நின்று எதுவோ அவர்கள் மகிலனிடம் கூற, சட்டென்று திரும்பி தனது அன்னையை பார்த்துக் கொண்டே மாலையை கழற்றி எறிந்து விட்டு சென்று விட்டான்.
மழை ஓய்ந்தது போல் அனைவரும் நிற்க, அடுத்த நிமிடம் போலீஸ் ஜீப் உள்ளே நுழைந்தது. அவர்கள் உள்ளே நுழைவதற்குள் இந்திரா துடித்துக் கொண்டு தனது மகனை கடத்தி சென்றதாக கூற, “தப்பித்து விட்டானா ” என்று கூறிய இன்ஸ்பெக்டர் அவர்களுக்குள் பேசி பாரியை இழுத்து சென்று விட்டனர்.
அதில் துடித்த இந்திரா வார்த்தைகளை தாறுமாறாக பேச, பெண் போலீஸ் இல்லாமல் இந்திராவையும் அழைத்து சென்று விட்டனர்.
அந்நிமிடமே கண்மணி சடாரென்று நெஞ்சை பிடித்துக் கொண்டு அமர, திருமலை மற்றும் தீரன் பாய்ந்துக் கொண்டு அவரை மருத்துவமனையில் சொந்தங்களை சேர்க்க சொல்லி அனுப்பி விட்டு, தீரன் திரும்பி கவியை காண்பித்தார் திருமலையிடம்.
அவள் உடைந்து போனது மட்டுமல்லாமல் பிரம்மை பிடித்து இருப்பது போல் இருந்தாள். அவளை தொட சென்ற திருமலையை இழுத்து தீரனின் கையில் வைத்து வனஜா அர்த்தப் பார்வை வீசினார்.
தீரன் நிலவனை நிமிர்ந்து கூட பார்க்காமல் “நானும் என் பையனும் இதுக்கு சம்மதிக்கிறோம் ” என்று கூறிய அடுத்த நொடி நிலவன் எழுந்து மணவறையில் கவியின் அருகில் அமர்ந்து விட்டான். மெச்சுதலாக அனைவரும் அவனைப் பார்த்தனர். வனஜா ஒரு படி மேலே சென்று அவரின் தோளில் தட்டி கண்மணியின் சார்பாக முன்நின்றார்.
கவியோ நிமிர்ந்து தனது பாட்டியைக் கண் கலங்கி காண, கைப்பிடித்துக் கொண்டு அருகில் அமர்ந்து விட்டார்.
அனைவரின் அனுதாபத்தில்
மணமகளாக அமர்ந்திருந்த கவியின் கழுத்தில் ஏறியது மாங்கல்யம். நிமிர்ந்து அருகில் இருப்பவனைக் கண்டாள் மங்கலாக தெரியும் அனுநிலவனை.
கட்டிய பின் ஒரு பார்வை பார்த்தான் தனது தகப்பனை. தீரனுக்கு தான் வயிறு கலங்கியது நிலவனின் செயலில்.
அவனின் பார்வையின் நினைவில் கவி வேறு விதமாகவும், தீரன் வேறு விதமாகவும் இருக்க, அதனை கலைக்கும் விதமாக ” உங்க பையன் தான் மூணு முடிச்சு போடுறதுக்கு முன்னாடி மாலையைவே கழட்டி கொடுத்துட்டு போய்ட்டாரே “
வேறு யாருமில்லை நிலவன் தான் பாயாசத்தை கையில் சப்பிக் கொண்டே கேட்டான்.
“நீ யாருடா கேள்வி கேட்கிறது ” இந்திரா பொங்க,
அசால்ட்டாக எழுந்து “நீ யாருடி என் பொண்டாடியை கேள்வி கேட்கிறது ? “
அனைவரும் ஸ்தம்பித்து நிற்க, கைதட்டும் சத்தத்தில் அனைவரும் திரும்பி பார்க்க, ஏளன சிரிப்புடன் தனது கூலர்ஸ்ஸை கண்ணில் மாட்டிக் கொண்டு “சாப்பிட்டியா செல்லம்….. போலாமா “என்று கூறி கவியின் தோளில் கைப் போட்டு அழைத்து கொண்டு சென்றான்.
வனஜா கைத்தட்டி கொண்டே முன்னே வந்தவர் நாலைந்து தாளை அவளின் முன்னேயே கிழித்து அவளின் முகத்தில் விட்டெறிந்தார்.
“டார்லிங் ….. நானும் வரேன் ” என்று கூறி வனஜாவும் கூலர்ஸ்ஸை மாட்டிக் கொண்டு நடந்தார்.
அக்காகிதங்களை எடுத்து பார்க்க முயன்ற பொழுது அங்கிருந்து வந்தவன் ஒருவன் கூறிய செய்தியில் அடித்து பிடித்து மருத்துவமனைக்கு அனைவரும் சென்றனர் .
“சின்ன வயசு …. இப்போ தான் கல்யாணம் ஆகிருக்கு…. ஏன் இப்படி …… “
கீர்த்தி ☘️