என் உயிர் – 6 🧬
வீட்டில் நடந்த கலவரத்தை பற்றிக் கேட்டும் அவனின் முகத்தில் எந்தவொரு சலனமும் இல்லாதது தீரனுக்கு பதற்றம் ஏற்பட்டது.
அவரின் காதுகளில் “எனக்கு அத்தான் தான் வேணும் . ஏன் புருஞ்சிக்க மாட்டேங்கிறங்க ? ” எதிரொலித்து கொண்டே இருந்தது .
ஏற்கனவே அவன் வராதது சிறு சந்தேகம் ஏற்பட்டது. இப்பொழுது அவனின் முக மாற்றம் மனதிற்குள் பிரளயம் உண்டாக்கியது. அவர் யோசனையுடன் இந்திரா மற்றும் மகிலன் உரையாடலை கண்டு கொண்டிருப்பது இந்திரா கவனித்து விட்டு தீரனின் காதுகளில் விழுவது போன்று “ஏன்டா எல்லா கஷ்டத்தையும் மனசில வச்சுக்குற? எதுவா இருந்தாலும் வார்த்தையிலையோ முகத்திலையோ காமிச்சுறு. அதுதான் ராசா உடம்புக்கு நல்லது “
அதனை கவனித்த திருமலை “ஏன்ம்மா இந்திரா இப்படி சொல்லுற? அவன் என்ன மாதிரி எதையும் காமிசுக்க மாட்டான். இதுல என்ன இருக்கு? “
“இல்ல மாமா ! என் அப்பா அம்மா விட எனக்கு நல்லது நடக்கனும்னு நினைக்கிறது நீங்க தான். நீங்க எது சொன்னாலும் ஆயிரம் காரணம் இருக்கும். நான் எப்பவும் உங்க மேல வருத்தமோ கோபமோ பட மாட்டேன். முடிஞ்சளவு உங்களையும் அந்த நிலைமைக்கு கொண்டு வராத அளவு வச்சுக்குவேன் மாமா ! ” மகிலன் முதன் முறையாக இவ்வளவு பேசியது அனைவருக்கும் ஒவ்வொரு மனநிலையை உண்டு பண்ணியது.
பெற்ற தாய் தகப்பனை விட தன்னை பெரிதாக நினைப்பது திருமலைக்கு ஆனந்தமாகவும் , மாமா வளர்ப்பு தப்பாகாது என்ற நம்பிக்கையில் ஒரு திருப்தி பிறந்தது தீரனுக்கு, அண்ணனை குளிர வைத்து விட்டான் என்று ஒரு பக்கம் சந்தோஷம் இருந்தாலும், தகப்பனை விட கூடுதல் அன்பு இருக்கிறது என்று கூறியதால் தனது கணவன் என்ன கூறுவாரோ என்ற பதை பதைப்பும் ஒரு பக்கம் இருந்தது இந்திராவிற்கு . அனைவரையும் விட பாரிக்கு தீயில் ஊற்றிய எண்ணெய் போல் கனன்று கொண்டிருந்தார்.
அனைவரும் தன்னை அவமானம் படுத்துவது போல் இருந்தது. தீரன், திருமலை இப்பொழுது மகிலனும். திருமணம் முடியட்டும் பின்பு பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்து கொண்டார் .
பின்பு அனைத்து உபசரிப்புகளும் முடிந்து வரும் புதன்கிழமையில் நிச்சயம் செய்து, அடுத்து வாரம் வெள்ளிக்கிழமை திருமணம் கண்டிப்பாக வைக்க வேண்டும் என்று கூறி விட்டார் பாரி.
இதற்கு மேல் அவரிடம் பேசினால் வில்லங்கம் என்று சரி என்று கூறிவிட்டு, அப்படியே பந்தல், மண்டபம், சாப்பாடு என்று பேச சென்று விட்டனர் தீரன் மற்றும் திருமலை.
இச்செய்தியை பற்றி வனஜா மற்றும் கவியிடம் கூறுவதற்கு வீட்டிற்கு சென்று விட்டார் கண்மணி .
உள்ளே நுழைந்த பொழுது வாசனை மூக்கை துளைத்தது கண்மணிக்கு. பின்னால் , எதுவோ சத்தம் கேட்டு திரும்ப , செல்வி மூக்கை உறிஞ்சி வாசனையை உள்வாங்கி கொண்டே வந்தாள். அவளின் செய்கை சிரிப்பு வந்தாலும் அவளை அழைத்துக் கொண்டு அடுப்பறைக்கு நுழைந்தார் .
செல்வி ஆவென்று வாயைத் திறக்க, அதற்கு முன்பே கவி வாயை திறந்து கொண்டு பார்த்துக் கொண்டிருந்தாள். கண்மணி கல்யாணம் செய்து பதினெட்டு வருடங்கள் ஆகிவிட்டது எனக்கு தெரியாதததா என்பது போல் பவ்யமாக வனஜாவிடம் சென்று “அத்தை என்ன உதவி செய்யட்டும் “
“அந்த வெங்காயம்லாம் நறுக்கி கொடு என்று கூறி சில பல வேலைகளை கொடுத்து செய்ய சொல்லி விட்டு, வேகவேகமாக சமையல் செய்து கொண்டிருந்தார்.
திரும்பி பார்த்தவர் “இந்தாடி செல்வி போய் மருதாணி பறிச்சுட்டு வா ” என்று கூற, செல்வி இடுப்பில் கை வைத்து முறைத்தாள் .
“என்ன முறைப்பு? கரண்டி வச்சே கடவாப் பல்ல எடுத்திருவேன். போ! உன் சிநேகிதி கண்ணாலத்துக்கு இது கூட பாக்க மாட்டியா? “
“என்னது கல்யாணமா? “ஒரு சேர செல்வி மற்றும் கவி கேட்டனர். செல்வி அதிர்ச்சியாகவும் , கவி சந்தோஷமாக கேட்டாள் தனது அன்னையைப் பார்த்து.
ஆம் என்று தலையாட்டியதோடு தனது மாமியார் கூறும் வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தார்.
செல்வி எடுத்துக் கொடுத்த மருதாணியை மையலாகவும், நன்கு சிவப்பாகவும் பிடிப்பதற்கு தேவையான அனைத்து பொருட்களையும் போட்டு அரைத்து தனது பேத்திக்கு தானே ஆசை ஆசையாக போட்டார்.
அவரது கண்களில் விழுந்த தண்ணீர் செல்வி மற்றும் கவியை கொஞ்சம் அசைத்து பார்த்தது. செல்வி தான் துடித்துக் கொண்டு வர “ஒன்னுமில்லை டி விடு”
“ஒன்னுமில்லாம தான் அழுகுறீயா கெழவி “
செல்வியைப் பார்த்து சிரித்தவர் ” எதுக்குடி உனக்கு துடிக்குது நான் அழுதா ? “
“அது வேற துறை…… நீ எதுக்கு அழுகுற ? “
“இவ தாத்தா இறக்கிறது முன்னாடி வரைக்கும் என் சொந்தம்லாம் அப்படி வச்சு இருந்துச்சு. அவரு போனப் அப்புறம் இந்தா இதே மாதிரி நீயும் அவளும் தான் என்கிட்ட உட்காந்து என் நலத்தை விசாரிக்கிறவங்க. இப்போ கூட நான் ஒரு விதவை மொத முறையா விசேஷத்துக்கு மருதாணி வைக்காதனு என் மக கூட சொல்லிடும் ஆனா என் மருமக சொல்லாது. இது தான் என் வளர்ப்புக்கும் அவ வளர்ப்புக்கும் வித்தியாசம் .அவ நல்லா இருக்கணும். அதான் நானே ஒதுங்கிறது. ஆனா டி, உன் கண்ணாலத்தையும் பாத்துட்டு கண் மூடனும் ” மனமுருகி கூறினார் வனஜா.
வீட்டிற்கு வந்த ஆடவர்களுக்கு கூட ஆட்டம் கண்டது. திருமலை பெருமூச்சு விட்டுக் கொண்டு உள்ளே வர, தீரனை கண்டு கண்மணி ” என் யூகம் என்றும் தவறாகது “என்று அர்த்தப் பார்வை வீசிவிட்டு சென்று விட்டார்.
தன் தங்கையும், தங்கை பிள்ளையும் நன்றாக தான் இருக்கிறார்கள் என்று எதுவோ ஒன்று உள் மனதில் கூறி மனத்திருப்தியை உண்டாக்கியது.
இவ்வாறு பேசி மகிழ்ந்து வேலைகளையும் கவனித்துக் கொண்டு நாட்கள் நகர நிச்சயம் நாள் வந்தது.
கவிக்கு அளப்பரியா ஆனந்தமாக இருந்தது. தனது மாமனிற்கே மனைவியாக போகிறோம். அதுவும் இன்று நிச்சயம் முடிந்தால் பாதி திருமணம் முடிந்தது போன்றும் இனிமேல் ஆங்கிலத்தில் கூறும் சொல் போல் ஃபியான்சி என்றும் வெளியில் தனது நட்பு வட்டாரத்திற்கு கூறலாம் என்று மனதிற்குள் கோட்டை கட்டிக் கொண்டிருந்தாள்.
அதுவே அவளின் கூடதல் அழகைக் கூட்டியது. கிராமத்து பைங்கிளி போல் இருப்பவளான கவிக்கு , மாநிற கலருக்கு எடுப்பான நீல நிறத்தில் பட்டு உடுத்தி, உறுத்தாத மேக் அப் அணிந்து, தலையை சீவி மல்லிகை பூவை தளர விட்டிருந்தவளை காண காண மனதிற்கு நிம்மதி பிறந்தது தீரன், திருமலை மற்றும் வனஜாவிற்கு .
கண்மணி சுற்று வேலைகளை கவனித்தாலும் தனது கண்ணின் மணியான தனது மகளை கண் குளிர ரசித்து கொண்டிருந்தார்.
உள்ளே வந்த மகிலன் அனைவருக்கும் வணக்கம் வைத்து விட்டு அமர, அவனின் அருகில் வெட்கத்தை முகத்தில் பூசிக் கொண்டு வந்தமர்ந்தாள் கவி.
தீரன் இவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தார். அனைவருமே பார்த்தனர் ஆனால் தீரனின் பார்வையில் வித்தியாசம் இருந்தது.
கவி நடந்து வருவதிலிருந்து அமரும் வரை அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் மகிலன். சேலை கட்டியிருப்பதால் அவள் அமருவதற்கு உதவினான். அனைவரும் வருங்கால மனைவியை பார்க்கிறான் அதனின் அக்கறை தான் என்று நினைத்தனர்.
தீரனும் அக்கறை தான் என்று நினைத்தார் ஆனால், அதில் காதல் தெரியவில்லை. கவியின் கண்களில் உள்ள ஒரு ஒளி மகிலனிடம் தெரியவில்லை. தனக்கு தான் அப்படி தோன்றுகிறதோ என்று நினைத்துக் குழம்ப , அவரை யோசிக்க விடாமல் திருமலை அழைத்துச் சென்று தாம்பூலம் மாற்றி அடுத்த வாரம் வைக்க வேண்டிய திருமணத்தை நாளை மறு நாள் வைக்க வேண்டும் என்று அனைவர் முன்பும் வேண்டுகோள் வைத்தார் பாரி.
அனைவரும் திடுகிட்டனர். ” ஏன் அத்தான் எதுக்கு அவசரம் ? நம்ம முன்னாடி பேசுற மாதிரியே வைக்க வேண்டியது தான ? ” என்று உள்ளே போன குரலில் கேட்டார் திருமலை.
என்றும் பேசாத வனஜா கூட தனது மாப்பிள்ளையிடம் கேட்பது போல் தனது மகளை கேட்டார் எதற்கு அவசரம் என்று.
பாரி கூறும் முன்பு, மகிலன் ” இல்ல மாமா ! நான் தான் சொன்னேன். நான் அடுத்த வாரம் ஊருக்கு போகனும். வேலையிடத்தல கூப்பிட்டாங்க . அதான் “
” அப்போ , போய்ட்டு வா ராசா ! அதுக்கு அடுத்த வாரம் கூட கண்ணாலம் வச்சுக்கலாம் “வனஜா தனது பேரனிடம் கேட்டார்.
“ஏன் அத்தை உங்களுக்கு இப்போ என்ன பிரச்சனை ? “
பாரி வாய் திறந்தால் பிரச்சனையில் தான் முடியும் என்று முன்பே அறிந்ததால் கவிக்கு பயம் தொற்றிக் கொண்டது. அதனால், தனது மாமாவைக் கண்டு கண்களால் இறைஞ்சினாள்.
அதற்கு மேல் தீரனால் ஒன்றும் செய்ய இயலவில்லை. திருமலையைத் தாண்டி பாரி நீட்டும் தாம்பூலத்தை வாங்கினார் . ” மாப்பிள்ளை ” திருமலை தடுமாறி கொண்டு கேட்க, கண்மணியின் கண்கள் கலங்க, வனஜா “ஏன்ப்பா ? ” என்று கேட்டார் .
“பாத்துக்கலாம் அத்தை “என்று கூறிவிட்டு சொந்தங்களை அங்கேயே திருமணத்திற்கு அழைத்தனர் . மதிய உணவு சாப்பிடும் வேளையில் செல்வி, கண்மணியை கல்யாண பட்டு வாங்க டவுனிற்கு தனது மகனுடன் அனுப்பி வைத்தார் தீரன்.
சாப்பாடிற்க்கும் பேசிவிட்டு கொடுக்கும் சீர் சீதனங்களையும் அன்று இரவே சரி பார்த்து விட்டு தான் கண் அயர்ந்தனர். மறுநாளும் வேலை விறுவிறுப்பாக நடந்தது. பந்தல் போட்டு, சொந்தங்கள் வந்தவுடன் வீடு களை கட்டியது. வனஜா இம்மியும் தனது பேத்தியை விட்டு விலகாமல் அவளுடனேயே இருந்தார்.
கல்யாண நாளும் வந்தது. மணமகனும் மணமகளும் அமர்ந்திருந்தனர். அனைவரின் கண்களும் கலங்கி இருந்தது.
மணமகளாக அமர்ந்திருந்த கவியின் கண்கள் பனித்தது. தனது கழுத்தில் ஏறிய மாங்கல்யத்தைக் கண்டு , நிமிர்ந்து அருகில் இருப்பவனைக் கண்டாள் மங்கலாக தெரியும் அனுநிலவனை.
❤️❤️❤️❤️❤️
தனது தகப்பனா தன்னை அறைந்தது என்று அதிர்ந்து பார்த்தான் ஆதவ் .
“ஆதவ் உனக்கு இப்போ கிடைக்கிற பேரு நீயா சம்பாதிச்சது இல்லை. நீ என் மகன்ங்கிறதால தான் . நீ எப்படியும் போ . என் பேரையும் ஏன் சேர்த்து கெடுக்கிற ? யூஸ்லெஸ் இடியட் . ஏதாச்சும் பண்ணி முன்னேறு. ஒன்னும் தெரியாத முட்டாளா இருக்கிற ? ராகவேந்தர் எவ்வளவு பெரிய ஆள் தெரியுமா? அவரை பகைச்சுகனும்னு நினைக்கிற ? “
“டேடி…… “
கையை நீட்டி நிறுத்தியவர் ” உன்னை மாதிரி என் கோபத்தை அப்போவே காட்டி இருந்தால் நான் எப்பவோ தோத்து போயிருப்பேன். சிங்கம் மாறி பதுங்கி தூக்கனும் இடியட் ” என்று கண்கள் சிவக்க கூறியவரை அதிர்ந்து பார்த்தான் ஆதவ்.
கீர்த்தி ☘️