Loading

அத்தியாயம் – 7 

 

அன்று மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை. பப்புவிற்கும் விதுராவிற்கும் விடுமுறை. சில மாதங்களாக வெளியே செல்லவில்லை. சோம்பலாக வீட்டிற்குள் முடங்காது வெளியே சென்று வரும் நோக்கில் உலாவித் திரிந்தனர் இருவரும். 

 

“ஐயா வீட்டுலயே எவ்வளவு நாள் தான் இருப்பீங்க.‌.. வாங்க வெளிய போகலாம்” 

 

ஜாண்போஸை வெளியே அழைத்துக்கொண்டு செல்ல வந்து நின்றான் பப்பு. 

 

“இருக்கட்டும் தம்பி… டாக்டர் தான் பெட் ரெஸ்ட்ல இருக்க சொல்லீருக்காவளே… உங்களுக்கு இப்ப உடம்பு பரவா இல்லையா…”

 

 

“பேச்சை மாத்தாதீங்க… உங்களுக்கு ஒன்னும் இல்ல… கொஞ்சம் வெளிய வந்து காத்தாட இருங்க…” 

 

“அதான் ஐயா வேணாம்னு சொல்றாவளே தம்பி… நீங்க சத்தங்காட்டாம போறீகளா… அவக இப்ப தூங்குற நேரம் ஐயா, போயீ தூங்குங்க” என்று முட்டுக்கட்டையாக நின்றார் ஜாண்போஸின் காரியதரிசி. 

 

காரியதரிசியின் வார்த்தையில் சற்று சோர்ந்து விட்டான் பப்பு‌. இங்கு வந்தநாள் முதல் அவனும் பார்க்கிறான்தானே… அறையில் ஜாண்போஸூம் அவரும் மட்டுமே இருக்கையில் பப்புவைப் பற்றி புகழ்வதும் வெளியில் இருக்கும்போது பப்புவை ஏன் விதுராவையே நெருங்க விடாமல் இருக்கிறார். ஜாண்போஸைச் சுற்றி ஒரு கண்ணுக்குப் புலப்படாத திரையை உருவாக்கி வைத்திருப்பதாக ஒரு எண்ணம் இருக்கிறது. 

 

 

“இருங்க அண்ணே… ஐயா ஒரேடியா படுத்துட்டே இருந்தா உடம்பு சோம்பலுக்குப் பழகிடும் ‌… உடம்புல பலன் இல்லனு உங்களுக்கு ஒரு எண்ணம் உண்டாகிடும்… நானே பக்கத்துல ஒரு பார்க்குக்குத் தான் போறேன். என்கூட வாங்க” என்றவள், தனது கையில் மடிக்கணினியும் கொஞ்சம் கொறிக்கப் பொருட்களும் தண்ணீரும் எடுத்துக் கொண்டாள். 

மறுத்துப்பேச வந்த ஜாண்போசையும் கண்பார்வையில் அடக்கி விட்டாள். 

அவருக்கும் மகளுடன் வெளியில் சுற்றித்திரிந்து உலாவ கசக்குமா என்ன… 

 

பப்புவின் மகிழுந்தில் ஓட்டுநர் இருக்கையே விதுரா நிரப்பிக் கொள்ள, பப்பு முன் சீட்டில் அமர்ந்து கொண்டான். ஜாண்போஸ் பின்சீட்டில் ஒய்யாரமாக அமர்ந்து கொண்டார்.

 

தன் மகள் இப்படி தன்னை உரிமையாக அழைக்க மாட்டாளா? என ஏங்கின நாட்கள் எத்தனை எத்தனை… இன்று என் உடல்நலன் கவனித்து உரிமையாக பூங்காவிற்கெல்லாம் அழைத்துச் செல்கிறாள் என்ற நினைப்பே சர்க்கரையாக இனித்தது. 

 

வாழ்க்கை தான் எத்தனை வித்தியாசமானது. நமது விருப்பம் நிறைவேற போராடினாலும் காலம் அதை தர நினைக்கும்போது தான் தருகிறது. 

 

வண்டி வேகமெடுத்து காந்தி மண்டபத்தை நோக்கி நகர்ந்தது. அடுத்த இருபது நிமிடங்களில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொள்ள நடுவழியிலேயே வண்டி நின்றது. 

 

“ மிஸ்டர்‌. குமார் வரல போல…” 

 

“ஆமா ஏன்னு தெரியல…” என்று விதுரா பதிலுரைத்தவாறு திரும்பிப் பார்க்க, அவளுக்கு எதிர்புறத்தில் வேந்தனின் கருப்பு நிற மகிழுந்து பளபளப்பாக நின்றது. 

 

“இல்லையே… அப்பாவோட பொண்டாட்டி போல விட்டு விலகாம சுத்துவாரே” என்று சற்று கடுப்புடன் ஆனால் ஜாண்போஸிற்குக் கேட்காதவண்ணம் பேசினான். 

 

வேந்தனின் வண்டியைக் கண்ணிமைக்காமல் பார்த்தபடியே

“அந்த மனுஷன் மேல உனக்கு என்னடா கடுப்பு…”

 

“சிலரு கூடவே இருந்து திடீர்னு விஷமா மாறிடுவாங்க… சொல்ல முடியாது. கொஞ்சம் கவனம் வேணும் விதுமா “ 

எதனாலோ பப்பு இந்த வார்த்தைகளைக் கூறினான். ஆனால் பின்னாளில் இதே வார்த்தை நிஜமாய் மாறப்போவதை இருவரும் அறியவில்லை. 

 

“என்னடா இப்படி எல்லாம் பேசுற… அவரு பல வருஷமா எங்க வீட்டுல அப்பாவுக்குத் துணையா இருக்குறாருடா…” என்றவளுக்கு மனம் பிசைவது போன்று இருந்தது. ஏனோ வேந்தனின் உடனிருப்பை அவள் மனம் வேண்டியது. 

 

இங்கு வேந்தனின் மகிழுந்திலோ 

‘எவன்டி உன்ன பெத்தான் பெத்தான் பெத்தான் பெத்தான் பெத்தான் பெத்தான்

கையில கெடச்ச செத்தான் செத்தான் செத்தான் செத்தான் செத்தான் செத்தான்’ பாட்டைப் போட்டு விட்டு எழில் சேட்டை செய்து கொண்டிருந்தான். 

 

வேந்தனுக்கோ, ‘ இந்தப் பேய் என்கூட இருக்குற வரை வெட்டிப்பையனா தான் என் வாழ்க்கை இருக்கும்போலவே…’ என நினைத்துக் கொண்டவன், எதேச்சையாக எதிர் சிக்னலில் பார்க்க, விதுரா அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தாள்‌. 

 

அவளை நோக்கி கண்ணடித்தவன் எழில்வாணன் அறியாதே ஒரு பறக்கும் முத்தத்தை இமைப்பொழுதில் பறக்க விட்டான். சட்டென அவனின் செய்கையில் அதுவரை உறைந்திருந்தவள், விழித்துக்கொண்டு என்ன செய்ய வேண்டும் என்று அறியாது இமை தாழ்த்திக் கொண்டாள். 

 

வேந்தன் புன்னகைப் பூக்கும் இதழ்கள் மீசையை திருகிவிடுவது போன்று திருகி மறைத்துக் கொண்டான். அப்படியே தனது அலைபேசி எடுத்து ஒரு எண்ணை எடுத்துப் பார்க்க, அதன் டிபியில் இரு கைகள் கோர்த்திருக்கும் படம் அழகாய் தெரிந்தது. 

 

‘இவ்வளவையும் வச்சுக்கிட்டு கள்ளி என்னமா நடிக்குறா… கொஞ்சம் குறுகுறுனு பாத்தாலே தலை தானா குனிஞ்சுடும். ஆனா வேலுநாச்சியார் சுக்கு அக்கா மாதிரி சீன் போடுற… இருக்கட்டும்… பாத்துக்குறேன்’ எனத் தனக்குள் நினைத்துக் கொண்டவன், தன் அலைபேசியில் இருந்து ஒரு கவிதையைத் தட்டி விட்டான்‌. 

 

விதுராவின் அலைபேசியில் செய்தி வந்ததற்கான, இல்லை அவனிடம் இருந்து செய்தி வந்ததற்கான தனிப்பட்ட ஒலியெழுப்ப, அவளது அலைபேசியை எடுத்துப் பார்த்தான் பப்பு. 

 

“இமைப் பொழுதில் எனில் 

நுழைந்தாய் மணவாட்டியே

நினைவுகளை எனில் மழுங்கடித்தாய் 

உன்னோடு பலதூரம் சென்றிட 

வாழ்நாள் முழுதும் உன்னோடு – என்

பயணம் தொடர்ந்திட விரும்புகிறேன் 

அழைத்துச் செல்வாயோ 

உன்னோடு என்னையும் – 

இமைப்பொழுதும் உனை மறவாதே 

ஒரு வாழ்க்கை வாழ்ந்தால் நலமே!

வாழ்வோமா… ?” 

 

“யாரு இது… தன்னை ஒரு கவிதை மேதைனு நினைச்சுட்டு எழுதினாங்களோ… இப்படி ஒஸ்டா இருக்கு” என்று விட்டு அலைபேசியை எடுத்த இடத்தில் வைத்தான். 

 

விதுராவோ யார் அது என்ற ஆசையில் திறந்து பார்த்தவர்களுக்கு கடுப்பாகிப் போனது. 

 

“குரங்கு… ஒரு கவிதை கூட சொந்தமா எழுத தெரியல , கேவலம் என் கவிதையை எடுத்து எனக்கே காதலா அனுப்புறான் சுத்த வேஸ்ட்’ என்று மனதில் புலம்பியவள மறுபுறம் பப்புவையும் கடுப்பில் திட்ட மறக்கவில்லை. அவளது கவிதையை வெறும் மட்டமென கலாய்த்து விட்டு கோபம்தான்.

 

“சும்மா இருடா பன்னி… யாரோ கஷ்டப்பட்டு எழுதுன கவிதைய எவனோ தூக்கி அனுப்புறான். எழுதுனவனுக்குத் தான் அதோட வலி தெரியும் “ என்று மூஞ்சியைத் தூக்கிக் கொண்டாள். 

 

அவளை ஒருமாதிரியாகப் பார்த்த பப்பு, “கவிதைக்காக ஃபீல் பண்ணுனது போதும்… சிக்னல்ல கலர் சேஞ்ச் பண்ணியாச்சு. மூடிட்டு வண்டிய கிளம்பு” என்றிட, அவனுக்கு ஒழுங்கு காட்டி வண்டியைக் கிளப்பினாள். 

 

 

வண்டியைக் கிளப்பி வேகமெடுத்து காந்தி மண்டபத்தைத் தாண்டிச் செல்ல, 

“ஏய் குரங்கு காந்தி மண்டபத்தைத் தாண்டிப் போற பாரு” என்று பப்பு கூற, அவளோ, 

 

“காந்தி மண்டபத்துக்கு எல்லாம் பூமர் அங்கிள்ஸ் தான் போவாங்க… வா நாம கல்வி கண் திறந்த காமராஜர் மண்டபத்துக்கு போகலாம்” என்றவள் வண்டியை நிறுத்தியது என்னவோ காமராஜர் மண்டபத்தில்தான். 

 

அவளை பின்தொடர்ந்து வந்த வேந்தனும் வண்டியை காமராஜர் மண்டபத்திற்கு கிளப்பிச் செல்ல பாட்டு பாடும் குஷியில் இருந்த எழில் காந்தி மண்டபம் தாண்டி செல்வதை கவனிக்கவில்லை. 

 

காமராஜர் மண்டபத்தின் வாயில் பகுதியில் எழிலை இறக்கி விட்டவன் வாகனத்தை உரிய இடத்தில் நிறுத்த விரைந்தான் எப்படியும் விதுரா அங்கு தான் இருப்பாள் என்ற எண்ணத்தில். ஆனால் விதுரா இருந்த இடமோ வேறு. 

பப்புவிடம் வண்டியை நிறுத்தி வைக்கக் கூறிவிட்டு தந்தையுடன் மண்டபத்திற்குள் நுழைந்தாள். 

 

“ஐயா இதுல உக்காந்துக்கோங்க. நானு இந்த திட்டுல உக்காந்துக்குறேன். எனக்குக் கொஞ்சம் எடிட்டிங் வேலை இருக்கு… உங்களுக்கு இந்த பேக்ல புக்ஸ் இருக்கு… எல்லாமே சூப்பர் புக்ஸ் ப்பா வாசிச்சுக்கோங்க” என்றவள் மடிக்கணினியைத் திறந்து தனது வேலையைச் செய்யத் தொடங்கினாள். 

 

தந்தையின் கரம் பிடித்து வண்டியில் ஏறி அவரின் முதுகுக்குப் பின்னே இருச்சக்கர வாகனத்தில் உலா வந்த மகள் இன்று நான்கு சக்கர வாகனத்தில் ‘பயப்படாதீங்க ப்பா’ என்ற அவளின் குரலுக்குத் தலையசைத்து அவளின் வண்டி ஓட்டும் திறனில் நம்பிக்கையோடு பயணிக்கிறார் தந்தையவர். 

 

புத்தகத்தைத் திறந்து தந்தையின் விரல் செல்லும் இடம் கவனித்து குரல் கேட்டு வாசித்துப் பழகியவள், இன்று தந்தைக்கு புத்தகங்களை முன்மொழிகிறாள். 

 

காலங்களின் கரத்தில் பெரியவர் சிறியவராயும் சிறியவர் பெரியவராகவும் மாறுகின்றனர். 

 

தூரத்தில் ஒரு மரப் பலகையில் அமர்ந்து மடிக்கணினியை லாவகமாகக் கையாளும் மடந்தையவளைக் கண்டான் வேந்தன். கால்கள் பரபரக்க, அவனோடு வந்த எழிலை மறந்து மனதின் அலைபாய்ச்சலுக்கு ஏதுவாக அவனது கால்களும் நடக்க, மரப் பலகையின் ஓரத்தில் வந்து நின்றான். 

 

மகளின் பொருளைக் கையாளும் லாவகத்தில் பெருமையாகப் பார்த்திருந்த ஜாண்போஸ் எதேச்சையாக நிமிர, வேந்தனைக் கண்டார். அவனது முகத்தில் உள்ள பிரகாசிப்பிலும் அவனது கண்களில் பெருகி வழியும் காதல் வெள்ளத்திலும் ஒரு நிமிடம் ஊற, வயதில் தன்னைக் கண்டதைப் போல உணர்ந்தார். 

ஆனாலும் தன் மகளை ஒருவன் பார்க்கும் பார்வையில் இயல்பான தகப்பனுக்கே உரிய பயமும் பாதுகாப்பு உணர்வும் எழும்பிட

 

 “யாரு தம்பி நீங்க… என்ன வேணும் உங்களுக்கு “ என்று சற்று சத்தமாகக் கேட்க, தலை நிமிர்ந்து பார்த்தாள் விதுரா. 

 

“நான் விதுராவோட ஃப்ரெண்ட்ங்க ப்பா… அவள தூரத்துல பார்த்தேன். அதான் வந்தேன். ஆனா நான் உங்கள பாத்துருக்கேன். ஆனா எங்கேனு தான் தெரியல” என்றிட

 

“உருட்டாதடா டேய்” என்று குனிந்தவாறு கூறினாள் விதுரா. 

 

அவளைச் சின்னதாய் முறைத்தவன், குழப்பமாக நோக்கி விட்டுத் திரும்ப திரும்ப எழில்வாணன் மூக்கில் இருந்து புகை வராத குறையாக நின்றிருந்தான் கோபத்தில். 

 

‘அய்யய்யோ’ எனத் தன் தலையில் தானே தட்டிக் கொண்டவன், “இவன் என் தம்பி என்று அவருக்குக் காட்டியபடி எழிலிடம் ‘ஈஈஈ’யெனப் பல்லைக் காட்ட, முகம் திருப்பிக் கொண்டான். 

 

அவனைக் கண்களால் கெஞ்சி சமாதானம் செய்தவன் திரும்பிப் பார்க்க, விதுராவோ அதிர்ச்சியில் பிடியில் ஆடாது அசையாது அமர்ந்திருந்தாள். 

அவள் நிலை அப்படி இருக்க, அவள் தந்தையோ பார்க்க கூடாததைப் பார்த்ததுபோல முழித்துக் கொண்டு முகமெல்லாம் வியர்த்து வழிந்தோடி நின்றிருந்தார். 

 

“ஹாய் நான் எழில்வாணன். ஹே நீ விதுரா தானே. நான் எழில் . உனக்கு ஞாபகம் இருக்கா… இடைல எல்லாம் டச் விட்டுப் போச்சு ‌… “ என்று முகம் சுருக்கிக் கூறிட, விதுராவின் முகத்தில் கோபத்தின் கனல் ஆரம்ப நிலையில் இருந்தது. 

 

“ஹ்ம்ம்… சிலரால நான் நிறைய விஷயங்கள வாழ்க்கைல கத்துக்கிட்டேன். அதுல ஒரு பெர்சன் நீ. உன்ன நான் மறப்பேனா… “ என்று சற்றே நக்கலா விதுரா சிரிக்க, அவளின் பதில் உணர்ந்து எழிலனின் முகத்தில் இருந்த மகிழ்ச்சியின் சாயல் கொஞ்சம் கொஞ்சமாக மறைய ஆரம்பித்தது‌.

 

“ஹேவ் அ நைஸ் டே” என்று கூறி புன்னகைத்தவன் அவ்விடம் விட்டு நகர்ந்தான். 

 

“இப்ப வரை நீ பண்ணுன தப்பை உணரவே இல்ல … நீ குறைந்தபட்சம் மன்னிப்பு கூட கேட்கல. ஆனாலும் நாங்க இறங்கி வந்தோம். நீ அதே திமிர்த்தனம் காட்டுற“ என்று கோபமுகம் காட்டி அந்த இடத்தை விட்டுக் கடந்து சென்றான். 

 

அன்றைய தினம் எப்படி தொடங்கியதோ ஆனால் முடிவு மனபாரத்துடனே முடிந்தது‌. 

 

மற்றவரைக் கூறித் திரிகிறோம். ஆனால் அவரவர் மனதில் தாங்களே சிறந்தவர்கள். எத்தகைய சிறந்தவரும் மற்றொருவர் மனதில் தவறானவரே என்பது காலம் நமக்குக் கற்றுத் தரும் பாடம்… 

 

ஆனால் இதில் யாரும் கவனிக்கத் தவறியது ஜாண்போஸின் அதிர்ச்சி முகமும் இதில் எதிலும் பங்கு பெறாமல் ஒதுங்கி நின்று யாவற்றையும் கவனித்த பப்புவையும் தான். அவர்கள் மனக்கணக்கு என்னவோ..‌. அதை அறிந்தவன் இறைவன் ஒருவனே ஆவான்.

 

தொடரும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
4
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்