
அத்தியாயம் – 27
சகா சொன்ன பதிலை கேட்டு மூவரும் அதிர்ச்சி அடைந்ததை விட சிற்பி தான் ஒரு நிமிடம் அப்படியே அதிர்ச்சியாகி நின்றாள்.நிரஞ்சன் அவசரமாக “என்ன சொல்ற சகா?பேசும் போது ஒழுங்கா கவனமா பேசு அவளை பிடிச்சு இருக்குன்னா லவ்” என்று அவன் ஆரம்பிக்கும் முன்னே அதைத் தடுத்த சகா “ஏ…ஏன் பிடிச்சிருக்குன்னா காதல் மட்டும் தான் காரணமா இருக்க முடியுமா என்ன? ஒரு தோ…தோழியா? நம்ம குடும்பத்துல ஒருத்தரா பிடிக்கதா என்ன?” என்று அவன் கேட்கவும் தான் நால்வருக்கும் அப்படியே அடைத்துப் போய் நின்ற மூச்சு சீராக வந்தது.
அவனோ “சி…சிப்பி என் பெஸ்ட் ப்ரெண்ட் இந்த பத்து நாளா அவளை தேடினேன். நீ…நீங்களும் என்னை மாதிரி தான் பீல் பண்ணிங்களான்னு தெரிஞ்சுக்கத் தான் கேட்டேன்” என்று சொன்னான்.
நிரஞ்சன் மேலும் பேச்சை வளர்க்க விடாமல் இருப்பதற்காக “சரி இதோடு இதை நிறுத்திக்கலாம் முதல்ல அவளை உட்கார வைங்க” என்றதும் நால்வரும் வரவேற்பறைக்குச் சென்றனர்.
நிரஞ்சன் அவர்கள் பேசுவதை கேட்பதற்காக வேகமாக துணிகளை மாற்றிக் கொண்டு வந்தான்.
பொதுவான விசாரிப்புக்கு பின் சிற்பியின் அருகில் உட்கார்ந்த காந்தன் அவளது முதுகைப் பார்த்து “எந்த வலியும் இல்லை தானே”என்று கவலையும் அக்கறையுமாகக் கேட்டான்.
“எல்லாம் சரியாகிடுச்சு காந்தன்.கவலைப்படாதீங்க எத்தனை தடவைத் தான் கேட்பீங்க” என்று அவனை சமாதானம் செய்தாள்.
இவர்களின் கூட்டத்தில் நிரஞ்சனும் வந்து சேர்ந்துக் கொண்டான்.இதைப் பார்த்த பார்த்தி “என்ன இன்னைக்கு நீயும் இங்கு வந்து உட்கார்ந்திருக்கே?” என்று கேட்டான்.
“ஏன் நான் வரக்கூடாதா?” என்று நிரஞ்சன் அப்படிக் கேட்கவும் பார்த்தியால் பதில் சொல்ல முடியவில்லை.
நிரஞ்சன் “இன்னைக்கு சிற்பி வந்ததுனால நாம சின்னதா ஒரு இன்வைட் பார்ட்டி வைக்கலாம்” என்றதும் எல்லோருக்கும் அது பிடித்திருந்தது.அதனால் எல்லோரும் சரியென்று ஒத்துக் கொண்டனர்.
சிற்பிக்கு நிரஞ்சனின் மாற்றம் இன்னும் நன்றாகவேத் தெரிய ஆரம்பித்தது.அதுவும் அவள் மேல் அவன் அதிக அக்கறை எடுத்துக் கொள்வது அவளுக்கே தெரியாமல் பிடித்து இருந்தது.
நிரஞ்சன் சிற்பியிடம் “பெங்களூரை சுத்திப் பார்த்து இருக்கியா?” என்று கேட்டான்.
அவளோ “இல்லை இத்தனை நாளாக வேலைக்கே டைம் சரியா இருந்துச்சு அதனால எங்கேயும் போகலை” என்றாள்.
உடனே காந்தன் “சரி நாளைக்கு நாம எல்லோருமா சுத்திப் பார்க்கிறதுக்கு போகலாம்” என்று முடிவெடுத்தனர்.அவர்களின் முடிவு சிற்பிக்கும் மகிழ்ச்சியாக இருந்தது.
உடனே காந்தன் “வேண்டாம் இப்போத் தானே சிற்பிக்கு உடல்நிலை தேறி இருக்கு. இதுல அடுத்து உடனே நாம வெளியே சுத்தப் போனால் ரொம்ப ஹெவியாகி திரும்ப வலி வந்துச்சுன்னா என்ன செய்ய? எப்படியும் அடுத்த மாசம் நாம வேற மாநிலத்துக்கு போறோம். அப்போ இதைப் பார்த்துக்கலாம்” என்றான்.
அவன் சொன்னதைக் கேட்டு நிரஞ்சனுக்கும் அதுவே சரியென்று பட்டது.அவள் மீது அவன் அக்கறையாக யோசித்த விதம் நிரஞ்சனை இன்னும் கொஞ்சம் யோசிக்க வைத்தது.
சிற்பிகாவின் மேல் அவன் பிரியத்தை மட்டும் வைத்திருந்தால் பத்தாது.அவள் மேல் உண்மையான அக்கறை தனக்கு வேண்டும் என்று மும்மூரமாக யோசித்துக் கொண்டிருந்தான் நிரஞ்சன்.
காந்தன் சொல்வதே மூவருக்கும் சரியென்று பட்டது.அதனால் தற்சமயம் வீட்டிலேயே எளிமையாக அவளுக்கு பிடித்த உணவை வாங்கி சாப்பிடலாம் என்று முடிவெடுத்தனர்.
முதலில் வெளியே செல்லலாம் என்று அவர்கள் சொன்னதும் சிற்பியின் முகம் புன்னகையில் நிறைந்து இருந்தது.காந்தன் வேண்டாம்னு காரணம் சொன்னதும் அவள் முகமே மாறிப் போனது.இதை கவனித்த நிரஞ்சன் “சிற்பியிடம் நிச்சயமா நாம எல்லோரும் வெளியே சுத்திப் பார்க்க போகலாம்.இப்போ மட்டும் வேண்டாம். எல்லாம் உன்னுடைய நல்லதுக்காகத் தான்” என்றான்.
அவளும் சரியென்று ஒத்துக் கொண்டாள்.நால்வரும் அவளை நன்றாக கவனித்துக் கொண்டனர்.அன்றைய பொழுது அப்படியே செல்ல அவளை அழைத்துச் செல்வதற்கு செழியன் வந்து தன்னுடன் வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.
நிரஞ்சனுக்கு இன்றைக்கு காலையில் நடந்ததே நினைவுக்கு வந்தது.அவன் பேசுவதை அவள் எல்லோரையும் போலவே பொதுவாக நினைத்திருப்பாளோ? என்று யோசித்துக் கொண்டு இருந்தவன் உடனே அவளுக்கு குறுஞ்செய்தி அனுப்பினான்.
“வீட்டுக்கு நல்ல படியா போயிட்டியா?” என்று அனுப்பியதற்கு “வந்துட்டேன்” என்று பதில் அனுப்பினாள்.
உடனே சிற்பியின் கைப்பேசியில் அழைத்து பேச ஆரம்பித்தான்.“நான் ஒன்னு கேட்பேன் எனக்காக செய்ய முடியுமா?” என்று கேட்டான்.உடனே சிற்பி “சொல்லுங்க” என்று சொன்னாள்.
அவளிடம் “எனக்காக பாட முடியுமா?” என்று கேட்டதும் முதலில் தயங்கியவள் பின்னர் அவனுக்காக பாட ஆரம்பித்தாள்.சில நேரங்களில் நமக்கு பிடித்த விஷயங்ளை இன்னொருவர் நம்மிடம் செய்யச் சொல்வதின் மூலம் நிறைவேறும்.அது போல தான் இப்போது சிற்பியின் நிலைமையும் அப்படித்தான்.
நிரஞ்சனின் செவிகளை தன் குரலால் இனியையாக்கிக் கொண்டிருந்தாள் சிற்பி.
“இப்போதாவது சொல்லு சிற்பி பாட்டு ரொம்ப பிடிக்கும் தானே” என்று கேட்டதற்கு
“ம்ம்… ரொம்ப பிடிக்கும் சின்ன வயசுல இருந்து பாடக் கத்துக்கிட்டேன் எல்லா விதமான டைப்பிலும் பாடுவேன். அப்பாவுக்கும் என்னோட குரலை அடிக்கடி கேட்டுகிட்டே இருக்கனும் நான் என்னைஅ அடிக்கடி பாடச் சொல்லி கேட்பாரு.படிப்பை விட அதிகமா எனக்கு பிடிச்சதே இசை தான். ஆனால் என்னச் செய்ய? எது ரொம்ப விருப்பமோ அது சம்பந்தப்பட்ட வேலையை பார்க்கிறேன்” என்று அவள் வேலைக்கு வந்ததற்கான காரணத்தைச் நிரஞ்சனிடம் சொன்னாள்.
எதிர் கேள்வி கேட்காமல் அவள் சொல்வதை எல்லாம் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தான்.தன் மன ஏக்கங்களை எல்லாம் அவனிடம் தான் சொல்லிக் கொண்டிருந்தாள்.
ரொம்ப நாட்களுக்கு பிறகு அவளுடைய மன பாராங்களை எல்லாம்இறக்கி வைத்தது போல் இருந்தது.
சிற்பி “நான் பேசுனதையே திரும்ப திரும்ப சொல்லி உங்களுக்கு போர்ரிங்கா இருக்கா?” என்று கேட்டாள்.
அதற்கு மறுபக்கம் மெல்லிதாக சிரித்தவன்
“ஏழு ,எட்டு வருஷத்துக்கு முன்னாடி என்னைப் பார்த்த மாதிரியே பீல் ஆகுது.ஏன்னா இந்த இசையின் மீது தீராக் காதல்.அதை என்னால ஒழுங்கா கொண்டு போக முடியலை.ஆனால் இப்போ அப்படி இல்லை அதற்கான வழியை நான் கண்டுபிடிச்சிட்டேன்,உனக்கான வழியையும் நான் சீக்கிரமா கண்டுபிடிக்கிறேன்” என்றான்.
இதைக் கேட்டு அப்படியே உறைந்து போனாள் சிற்பி.
“எ..என்ன சொல்லுறீங்க நிரஞ்சன் சார் அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் நீங்க கேட்கவும் தான் சொன்னேன் மற்றபடி ஒன்றுமில்லை” என்று பதறினாள்.
அதைக் கேட்டு நிரஞ்சன் “இப்போத் தானே வழியை கண்டுபிடிக்கிறேன்னு சொன்னேன். அதுக்கு எப்படியும் இரண்டு வருஷமாகும் அதனால அவசரப்பட்டு பதற்றப்படாதே” என்றான்.
அவன் சொன்ன பதிலைக் கேட்டு கொஞ்சம் ஆசுவாசமானவள் “ஒரு செகண்ட் என்னை பயமுறுத்திட்டீங்க சார்” என்றாள்.
அவள் அழைக்கும் விதத்தைப் பார்த்து முகத்தை சுளித்தபடி “இப்போ என்னை என்னன்னு சொன்னே?”
“சார்னு சொன்னேன்”
“ஏன் என்னை மட்டும் அப்படி அழைக்கிறே? மத்தவங்களை மட்டும் பெயரை சொல்லி கூப்பிடுறேல்ல”
அதற்கு சிற்பி “நீங்க தானே அப்படி சொல்லச் சொன்னீங்க இப்போ என்னன்னா ஏன் இப்படி கூப்பிடீறேன்னு கேட்கிறீங்க?” என்று அவனிடமே கேட்டாள்.
அவனோ “இப்போ நல்ல பழக ஆரம்பிச்சுட்டோம்ல அதான் சொன்னேன்”என்று கொஞ்சம் தயங்கியபடி சொன்னான்.
இவளும் சரியென்று ஒத்துக் கொள்ள திரும்பவும் பயிற்சி,பாடல்கள் என்று நாட்கள் வேகமாக செல்ல ஆரம்பித்தது.
நிரஞ்சனிடம் நல்ல பழக ஆரம்பித்தாள் சிற்பி.இத்தனை நாட்களாக இருந்த ஒதுக்கத்தை விடுத்து கொஞ்சம் கொஞ்சமாக நன்றாக பேச ஆரம்பித்தார்கள்.
அவளுக்காக அவன் ஒவ்வொன்றையும் பார்த்து செய்ய ஆரம்பித்தான்.சாப்பிடும் பொழுது அவளுக்கு இருமல் வந்தால் தன் பக்கம் இருக்கும் தண்ணீரை எடுத்து அவள் பக்கமாக வைப்பான்.
வெளியே சென்று இருக்கும் போது தங்களை சுற்றியே அவளை இருக்கும் படி பார்த்துக் கொள்வான்.இப்படி அவன் அவளை அக்கறையாய் பார்த்துக் கொள்வதை மற்ற மூவரும் கவனிக்கத் தான் செய்தனர்.
அவர்களை பொறுத்த வரை அன்றைக்கு நடந்த விஷயத்தினால் அவன் சிற்பியை நல்லவிதமாக நடத்துவதாக நினைத்துக் கொண்டனர்.
ஒருநாள் நால்வரையும் அடுத்த போட்டியில் கலந்துக் கொள்வதற்காக புதிய உடைகள் எடுப்பதற்காக அவர்களின் ஸ்பான்ஸர்களுடைய கடைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கே இவர்களோடு சிற்பியும் வந்திருந்தாள்.எல்லோரும் அவர்களுக்கான உடைகளை தேர்வு செய்துக் கொண்டிருந்தனர்.இதில் சஹாவும் பார்த்தியும் ஒவ்வொரு உடையாக உடுத்தி வந்து சிற்பியிடம் அந்த உடை தங்களுக்கு எப்படி இருக்கிறது என்று கருத்துக் கேட்கிறோம் என்று அவளைப் போட்டு படுத்திக் கொண்டு இருந்தனர்.
சிற்பிகாவின் கண்களோ அங்கே இருந்த பெண்களுக்கான உடையில் இருந்தது.இதை கவனித்த நிரஞ்சன் சிற்பியிடம் “சிற்பி இங்கே வா” என்று அவளை அழைத்தான்.
இவளும் “சொல்லுங்க நிரஞ்சன்” என்று அவனருகில் போய் நின்றுக் கொண்டாள்.தனக்கான சில உடைகளை எடுத்தவன் “இதுல எனக்கு எது நல்லா இருக்கும்னு சொல்லு” என்று அவனுக்கு தெரியும் இருந்தாலும் அவளிடம் கேட்டான்.
அவன் கேட்டதைப் பார்த்து சிற்பி “நிரஞ்சன் என்னை விட உங்களுக்கு தான் இப்போ இருக்கிற நியூ பேஷன்ஸ் பத்தி தெரியும் நீங்க ஏன் என்கிட்ட கேட்குறீங்க?” என்று நேராக அவனிடமே கேட்டாள்.
அவள் சொன்னதைக் கேட்டு சிரித்தவன் “அவனுங்களுக்கு ஒரு ஆலோசனை கொடுப்பே? ஆனால் எனக்கு தரமாட்டே அதானே?” என்றதும் அவளோ வேகமாக “அப்படி எல்லாம் இல்லை” என்று அவன் எடுத்து வைத்திருந்திலிருந்து ஒரு சட்டையும் பேண்ட்டையும் எடுத்து “இதை டிரை பண்ணுங்க நல்லா இருக்கும்” என்றாள்.
அவனும் சரியென்று உடைமாற்றும் அறைக்கு சென்றான்.சிற்பியோ நிரஞ்சன் இருந்த இடத்திற்கு அருகில் பெண்களுக்கான பிரிவில் இவள் சில தனக்கான துணிகளை எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அப்போது பின்னால் அமைதியாக நின்றபடி நிரஞ்சன் அவளை பார்த்துக் கொண்டிருந்தான்.இதை சிற்பி கவனிக்கவில்லை.
அதில் ஒரு மேற்கத்திய உடையை எடுத்து தன் மேல் வைத்து எதிரே இருந்த கண்ணாடியில் பார்த்தாள்.அதைப் பார்த்தவள் விலையை பார்த்து இருந்த இடத்தில் வைக்கச் செல்லும் போது நிரஞ்சன் “சிற்பி இந்த டிரெஸ் உனக்கு ரொம்ப அழகா இருக்கு” என்றான்.
உடனே சிற்பி “நான் எனக்காக பார்க்கலை சும்மா எடுத்து பார்த்தேன்” என்று வேகமாக வைத்தாள்.நிரஞ்சனோ அதை எடுத்து “சிற்பி இந்த டிரெஸ் போட்டு பாரு உனக்கு ரொம்ப அழகா இருக்கும்” என்றான்.
அவளோ “எனக்கு எதுவும் வேண்டாம்” என்று மறுத்தவளை கட்டாயப்படுத்தி சில உடைகளை கைகளில் கொடுத்தவன் “ப்ளீஸ் சும்மா டிரை பண்ணு போய் போட்டு வா” என்று அவளை உடை மாற்றும் அறைக்கு அனுப்பினான்.சிற்பியும் வேறு வழியில்லாமல் அவன் கொடுத்த துணிகளை போட்டு விட்டு வெளியே வந்தவள் கொஞ்சம் நாணத்தோடு நின்றாள்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
2
+1
+1
⬅ Prev Episode
உதிராத மலராய் நானிருப்பேன் அத்தியாயம் -26
Next Episode ➡
உதிராத மலராய் நானிருப்பேன் அத்தியாயம் -28
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


அருமையான பதிவு 👏
மனமார்ந்த நன்றிகள்