
சுழலி-18
அரண்மனை.
திடீரென்று தனது அறையில் தோன்றிய இராஜநாகத்தை பயம் அப்பிய விழிகளோடு பார்த்துக் கொண்டிருந்தாள் மஞ்சரி.
“வீரர்க…” மஞ்சரி சத்தமிடுவதற்குள் தனது உருவத்திற்கு மாறினான் செவ்வேலன்.
“தேவி, சப்தமிட்டு என்னைக் காட்டிக் கொடுத்துவிடாதீர்கள். நான்தான் செவ்வேலன்”
“நீரா? நீங்கள் எப்படி இராஜநாகமாய்?”
மஞ்சரியின் குழம்பிய விழிகள் செவ்வேலனிற்கும் குழப்பத்தை கொடுத்தது. ‘நீலா நம்மைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லையா?’ என்ற எண்ணம்தான் முதலில் தோன்றியது.
அப்போது உள்ளே வந்தாள் யட்சினி.
“நீலா, என்னைப் பற்றி நீ தேவியிடம் உண்மையை கூறவில்லையா?”
“என்ன உண்மை? என்ன கூறவேண்டும்?” என்றபடி ஒயிலாக நடந்து வந்தவள், நீலாவின் உருவத்திலிருந்து தனது உருவத்திற்கு மாறினாள்.
“யட்சினி?” செவ்வேலனின் உதடுகள் முணுமுணுத்தன.
“இங்கு என்னதான் நடக்கிறது? செவ்வேலன் அவர்களே, நீங்கள் எப்படி நாகமாய் உருவெடுத்தீர்கள்? நீலா எங்கே?” மஞ்சரியின் வினாவிற்கு பதிலளிக்காத செவ்வேலன், யட்சினியைத் தாக்க சென்றான்.
தனது மந்திர சக்தியால் செவ்வேலனைக் கட்டிய யட்சினி, “உண்மையை விளம்பும் வரை, ஓரடி நகர இயலாது. சில செய்திகளை அவரவர் வாயிலிருந்து வாங்கினால்தான் சுவாரஸ்யம் கூடும். அனைத்தும் நானே சொல்லிவிட்டால் சலித்துவிடாது. மஞ்சரி தேவி, இவன் சொல்லும் செய்திகளை கேட்டுக் கொள்ளுங்கள். பின், அவனை என்ன செய்யலாம் என்று யோசிக்கலாம்.” என்றாள். அவளின் பேச்சில் நய்யாண்டித்தனம் சற்று தூக்கலாகவே இருந்தது.
“யட்சினி, நீலாவிற்கு என்ன ஆனது? நீ அவள் உருவில்? அவள் எங்கே?” குழப்பத்தோடு கேட்டாள் மஞ்சரி.
“அனைத்தையும் சொல்கிறேன் தேவி. முதலில் விருந்தினரை உபசரிக்க வேண்டுமல்லவா?” என்றவள், செவ்வலனிடம் திரும்பினாள். “நீலா யார்? நீ யார்? இப்போது நீலா எங்கு சென்றிருக்கிறாள்? அனைத்தையும் ஒப்புவித்தால் உயிரோடு திரும்பலாம்” என்றாள்.
“உன் மிரட்டலுக்கு எல்லாம் அஞ்சிடுவேன் என்று எண்ணாதே. உன்னால் என்னைக் கொல்ல இயலாது என்பதை நான் அறிவேன். தேவநாகவேடர் குலத்தவனை பகைத்துக் கொள்ளாதே யட்சினி” சீறினான் செவ்வேலன்.
“என்னிடம் கூறுங்கள்? நீலா தற்போது எங்கே? என்னதான் நடக்கிறது? யட்சினி அவரை விடுவித்துவிடு.” தளர்ந்து அமர்ந்தாள் மஞ்சரி. நெஞ்சமெல்லாம் கலக்கமே நிறைந்திருந்தது. தன்னவனும், சகோதரனும் அனைத்து இன்னல்களையும் கடந்து வர வேண்டும் எண்ணித் தவித்திருந்தவள், தற்போது மசக்கையின் காரணமாக இன்னும் நலிவுற்றாள்.
மஞ்சரியின் சொல்படி, செவ்வேலனை விடுவித்தாள் யட்சினி. செவ்வேலனால் மஞ்சரியை அலட்சியம் செய்ய இயலவில்லை. தான் அறிந்ததை சொல்லலானான்.
“தேவி, முதலில் என்னை நீங்கள் பொறுத்தருள வேண்டுகிறேன். நான் கல்வராயன் மலையை சேர்ந்த தேவநாகவேடர் குலத்தவன். நினைத்த நேரத்தில் இராஜநாகமாய் எங்களால் உருவெடுக்க இயலும். என் சகோதரிதான் நீலா. அவளின் பதினாறாம் பிராயத்தில் பொதிய மலைக்காட்டிற்கு வந்த பொழுது ஒரு மானுடன் மேல் காதல் கொண்டு, அவனை பின் தொடர்கையில், சித்தமுனியின் தவத்தை கலைத்ததனால், அவரிடம் இனி நிரந்தரமாய் மனிதஉருவிலேயே இருக்கும்படி சாபம் பெற்றுவிட்டாள். மனித உருவிலேயே இருப்பவளை எம் குலமக்கள் ஏற்கமாட்டார்கள் என்பதை அறிந்த என் தந்தை, அவளை இங்கு அழைத்துவந்து தங்கள் தந்தையிடம் ஒப்படைத்தார். அன்றிலிருந்து இன்று வரை உங்களின் தோழியாக உடனிருக்கிறாள்.”
இத்தனை வருடங்கள் நம்மோடு இருந்தவள் ஒரு தேவநாகவேடர் குலத்தவளா? என்ற செய்தியே மஞ்சரிக்கு அதிர்வை தந்தது. இன்னும் அவன் கூறப்போகும் அனைத்தையும் கேட்டால் இவளின் நிலை என்னவாகும் என்று எண்ணினாள் யட்சினி.
“அவளை உடனிருந்து பாதுகாக்கவே நானும் வீரர்கள் படையில் இணைந்தேன். என் திறமையைக் கண்டு சிற்றரசர் செந்தூரர்தான் ஒற்றர்படையில் இணைத்தார். அதற்கு நீலாவும் உதவி புரிந்தாள். ஆனால், சில காலமாக நீலாவின் நடவடிக்கையில் மாற்றத்தை நான் கண்டேன். அவளை பின்தொடர்கையில்தான் நான் உண்மைகளையும் கண்டுகொண்டேன். அவள் காதல்வயப்பட்டது, இளவரசர் காளிங்கன்மேல்தான். பின்னிரவில் இருவரும் கூடிக்களித்திட, நீலாவின் சாபமும் காளிங்கனுக்கு சென்றுவிட்டது. அப்போதுதான், காளிங்கனின் தாத்தா கொங்கிளக்கேசர் உயிரோடு இருப்பதாய் தகவல் வந்தது. அத்தகவலை நான் அரசரிடம் கூற விழையும் நேரம் நீலா தடுத்துவிட்டாள். அவளின் திட்டமே வேறாக இருந்தது. நாட்டு மக்களின் நிலைக்காக செந்தூரரும் அரசப்பெருமானும் பொதியமலைக்கு செல்லும் போது, காளிங்கனோடு படைகள் திரட்டி அங்கு சென்று சித்தமுனியின் கலச நீரை பருக எண்ணினாள். அவரின் தவப்பலனாய் பிரம்மனிடம் பெற்ற இந்த கலச நீரை அவரால் சாபம் பெற்றவர்கள் வேள்வி நடத்தி பருகினால், உடனே அச்சாபம் நீங்கி விமோச்சனம் பெறுவார்கள். அதை நிறைவேற்றவே காளிங்கனும் நீலாவும் கொங்கிளக்கேசரின் படைகளோடு பொதியமலைக்கு செல்வதாய் இருந்தனர். பின், நான் என் தந்தை அவளின் விமோச்சனத்திற்காக படும் இன்னல்களை எடுத்து கூறியும், நாட்டு மக்களின் நிலையை கூறியும், செல்லவிடாமல் தடுத்துவிட்டேன்.
நாட்டை சுற்றியும், இந்த ஆட்சியை பிடிக்கவும் பல சதி திட்டங்கள் நடந்து கொண்டிருப்பதை செந்தூரர் அறிவார். நான் அறிந்த அனைத்தையும் அவரிடம் சொல்லிவிட்டேன். அதனால், அவர் உங்களுக்கு காவலாய் என்னை ஆலயப்பணிகள் இடங்களை கவனிக்கும்படி உத்தரவிட்டுதான் சென்றார்.”
செவ்வேலன் சொல்லும் அனைத்தும் மஞ்சரியால் ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. ஏற்றுக்கொள்ளாமலும் இருக்க முடியவில்லை. தன் தோழியனவள் சுயநலத்தோடு செய்ததையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை பாவையாள்.
மஞ்சரியின் எண்ணங்கள் இப்படியிருக்க, யட்சினியின் எண்ணங்கள் வேறாய் இருந்தது.
“இன்று நீங்கள் அரண்மனைக்கு வந்தபிறகு சிலர் ஆலயத்தின் பின்புறம் பேசிக்கொண்டிருந்ததை நான் கேட்டேன். அரசர் செம்பியன் ஆலயப்பணிகளை வேண்டுமென்றே தாமதித்துக் கொண்டிருக்கிறார். ஆனால், அவரைத் தவிர்த்து, இன்னும் யாரோ, ஆலயத்தில் ஒரு கொலை செய்ய திட்டமிட்டுக் கொண்டிருந்தனர். பேராபத்து சூழ உள்ளது இளவரசி. அதனை தங்களிடம் மொழியவே நான் இங்கு வந்தேன். ஆனால், வந்த பின் தான் புரிகிறது, நீலா அனைவரையும் ஏமாற்றிவிட்டு பொதியில் சென்றிருக்கிறாள் என்று. என் தங்கையே நாட்டின் இன்னலுக்கு காரணமாகிவிட்டாள் இளவரசி.” அவனின் குரல் குமுறலோடு வந்தது.
மஞ்சரி யோசனையில் ஆழ்ந்தாள். இச்சமயம், புத்திசாலித்தனமாக இருத்தல் அவசியம். செவ்வேலன் சொல்வதுபோல் ஆலயத்தில் அசம்பாவிதம் நிகழ்ந்துவிட்டால், மக்களின் மனதில் இருக்கும் மிச்சமீதி நம்பிக்கையும் பொய்த்துப்போய் விடும். வேள்வி நிகழ்த்த முடியாது. குடமுழுக்கு எதுவும் செய்ய இயலாது. அதிருப்தி அதிகமாகிவிடும் என்று எண்ணியவள் தீர்க்கமான முடிவு ஒன்றை எடுத்தாள்.
“யட்சினி, கலகங்கள் தீரும்வரை நீ நீலாவின் உருவிலேயே இரு. செவ்வேலன் அவர்களே, இந்நொடி முதல் நீங்கள் என் மெய்க்காப்பளன். உடனே தளபதியை வரச் சொல்லுங்கள். யாரங்கே! அரசியாரை நான் காணவேண்டும். உடனடியாக அவசரகால சபையை கூட்டுங்கள்.” என்று உத்தரவிட்டவள், கம்பீரமாக புறப்பட்டாள்.
‘அன்பரே, சில முடிவுகளை எடுக்க நான் கடமைப்பட்டுள்ளேன். நீங்களும் சகோதரரும் இங்கு வருவதற்குள் நாட்டின் நிலையை நான் சீர்ப்படுத்திவிடுவேன். விரைந்து கரம் சேருங்கள். உங்களை எண்ணியே நான் காத்துக்கொண்டிருக்கிறேன்’ மனத்தில் செந்தூரனை நினைத்தே அனைத்து காரியங்களையும் செய்தாள்.
அவைக் கூட்டப்பட்டது. நாடு முழுக்க வேள்வியும், குடமுழுக்கும் செய்ய வேண்டியிருப்பதால், அனைத்து சிற்றரசர்களும் அரண்மனையில்தான் இருந்தனர்.
கோதையைக் கண்ட மஞ்சரி, நடந்தவற்றை விளக்கி, இனி எடுக்கப்போகும் நடடவடிக்கையையும் விவரித்தாள். கோதையும் இதற்கு உடன்பட, நடவடிக்கைகள் ஆணையாக உத்தரவிடப்பட்டது.
“நாட்டின் நிலையை மாற்ற முயற்சிகள் நடந்துக் கொண்டிருக்கிறது. ஆலயத்தில் இன்று அசம்பாவிதம் நடக்கப் போகிறதாய் எனது ஆஸ்தான ஒற்றரிடமிருந்து தகவல் வந்திருக்கிறது. ஆகவே, சில முக்கிய நடவடிக்கைகளை நான் எடுக்கலாம் என்றிருக்கிறேன். அதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.”
“நடவடிக்கைகளை முதலில் கூறுங்கள் இளவரசி. அதிலிருக்கும் சாதக பாதகங்களை எண்ணி முடிவெடுத்துக் கொள்ளலாம்” என்றார் செம்பியன்.
அனைவர் முன்னிலையிலும் மஞ்சரியை அவமதிப்பாய் பேசினார். அது அங்கிருந்த சிலருக்கு எள்ளலாகவும், சிலருக்கு கோபமாகவும் அமைந்தது.
“தளபதியாரே! உடனே காவல்களை அதிகப்படுத்துங்கள். சந்தேகிக்கும்படி யாராக இருந்தாலும் மறுபேச்சிற்கு இடமின்றி சிறையில் அடையுங்கள். வேள்வி இப்போதே தொடங்க வேண்டும். நள்ளிரவிலிருந்தே ஈசனுக்கு நாதங்கள் ஒலிக்க வேண்டும். இன்றிலிருந்து மூன்றாம் நாள் அனைத்து ஆலயங்களிலும் குடமுழுக்கு நிகழ்ந்திருக்க வேண்டும். அந்த பொறுப்பை நான் நீலாவிற்கு அளிக்கிறேன். முதன்மை அமைச்சரே, நாட்டின் எல்லைகளில் காவலை பலப்படுத்த ஆணையிடுங்கள். ஆயிரம் வீரர்களை கல்வராயன் மலைக்கு சகோதரனுக்கு துணையாக அனுப்பி விடுங்கள். பொதியில் மலையை நோக்கி ஐநூறு வீரர்களை அனுப்பிவிடுங்கள். அனைத்தும் உடனே நிகழ வேண்டும்.
கல்வராயன் மலையில் இருக்கும் தேவநாகவேடர்குல தலைவரை சந்திக்க ஏற்பாடு செய்யுங்கள். மலைவாசி மக்களையும், வனவாசி மக்களையும் உடனடியாக நாட்டின் எல்லைகளில் கருப்பரை ஆவகானம் செய்ய உத்தரவிடுங்கள். இவையனைத்தும் அரசியார் கூறிய நடவடிக்கைகள். அதனை சிரமேற்கொண்டு இளவரசி நான் செய்ய சித்தமாக இருக்கிறேன். நாட்டின் நலன் கருதி அனைவரும் இதற்கு ஒத்துழைத்தே ஆக வேண்டும். சபை களையட்டும். நாளைய விடியல் நமக்கானதாய் அமையும்.” என்று உத்தரவிட்டவள், தனது அறைக்கு சென்றாள்.
அவளின் இந்த முடிவுகள் எதற்கென்று யாரும் கேட்கவும் இல்லை. அவளின் சொல்லிற்கு தலையை ஆட்டியே ஆக வேண்டும் என்ற எண்ணம்தான் அனைவரிடத்திலும். செம்பியன் மட்டுமல்ல இன்னொருவரும் ஆடித்தான் போனார் மஞ்சரியின் இந்த மாற்றத்தில்.
அவளின் பின்னே வந்த யட்சினி, “தேவி, உடனடியாக நாம் ஆலயத்திற்கு செல்ல வேண்டும். இளவரசி வருகிறார் என்று தெரிந்தால் மக்களும் கூடிவிடுவர். உடனடியாக வேள்வியை நிகழ்த்த வேண்டும்”
“நானும் அதைத்தான் எண்ணினேன் யட்சினி. வேலா, உடனடியாக உன் துணைவியாரை அழைத்துக் கொண்டு வா.”
“உத்தரவு இளவரசி.”
“தேவி, அவர்கள் எதற்கு?” புரியாமல் வினவினாள் யட்சினி.
“யட்சினி, உன்னால் இவ்வேள்வியில் நிற்க இயலாது. கடும் மந்திரங்கள் உச்சாடானம் செய்யப்படும். அது உன் உருவத்தை வெளிக்கொண்டுவிடும். ஆகவே, நீ நாட்டின் எல்லைக்காவலில் துணையாய் இரு. யாரும் நாட்டிற்குள் நுழைந்திடாவண்ணம் காவலை பலப்படுத்து. நானும், அரசியாரும் துணைவர்கள் இல்லாமல் வேள்வியில் பங்கு கொள்ள இயலாது. தன் சகோதரி தவறு செய்தாலும், நாட்டின் நலனுக்காக நம்மோடு இருக்கும் செவ்வேலனை நான் முழுமையாக நம்புகிறேன். ஆகவே, அவர்தாம் அவரின் துணைவியாரோடு வேள்வியில் அமரப்போகிறார். இதை எதிர்க்க பலரும் வருவார்கள். அவர்களை நான் சமாளித்துக் கொள்கிறேன். என்னவரும் என் சகோதரனும் நலமாக வந்திடமட்டுமே நான் கடவுளை வேண்டிக்கொண்டிருக்கிறேன். இனி, நொடியும் தாமதிக்க நான் விரும்பவில்லை. உடனே புறப்படு.”
இத்தனை இன்னல்களிலும் தன் நலனைப் பற்றி எண்ணிய மஞ்சரியை கண்டு யட்சினியின் கண்கள் கலங்கின. தன்னால் இது செய்ய இயலாது என்று செந்தூரனிடம் கூட உரைக்கும் யட்சினியால், வேள்வி நேரம் உடனிருக்க இயலாது என்று மஞ்சரியிடம் உரைக்க முடியவில்லை. ஆனால், அதனை மஞ்சரி கூறாமல் புரிந்துக்கொண்டதை எண்ணி யட்சினிக்கு ஆனந்தமாய் அமைந்தது.
“நான் சொல்லாமலேயே என் நிலையை புரிந்துக்கொண்டீர்கள் தேவி. இன்னுமொரு பிறவி எனக்கு மானிடராய் வாய்க்கப்பெற்றால், உமக்கு தோழியாக, உம்மைக் காக்கும் கேடயமாக நான் இருக்க வேண்டும். ஒருவேளை செந்தூரன் என்னை அடிமையிலிருந்து விடுவித்தாலும் நான் என்றும் உன் சொல்லுக்கு கட்டுப்படுவேன் தேவி. இது எம்பெருமான் மீது ஆணை. நீ எத்தனை பிறவி கொண்டாலும், உனக்கு என்றும் நான் துணையாக இருப்பேன் தேவி.” என்றவள் அவளைக் கட்டியணைத்தாள்.
புன்னகைப் புரிந்த மஞ்சரி, “என்னவர் நான் எடுக்கும் முடிவுகளில் சம்மதிப்பார் என்ற நம்பிக்கையோடு மேலும் ஒரு முடிவை எடுத்துள்ளேன் யட்சினி”
யட்சினி புரியாமல் பார்க்க, “என்று இருவரின் உதிரமும் உடலும் ஒன்று கலந்ததோ, அன்றிலிருந்து எமது வாக்கும் ஒன்றே. இந்நொடி நானும் என்னவரும் உன்னை அடிமையிலிருந்து விடுவிக்குறோம். நாட்டின் நிலை சீராகும் வரை நீ என்னோடு உடனிருக்க வேண்டும். விரைவில் சாபம் நீங்கப் பெற்று நீ தேவலோகம் அடைய நானும் இறைவனை பிரார்த்திக்கிறேன் யட்சினி” என்றாள்.
யட்சினி புளகாங்கிதம் அடைந்தாள். அவளுக்கு வார்த்தைகள் நாவிலிருந்து வரவில்லை. அனைத்தையும் அறிந்துக் கொள்ளும் யட்சினி, இந்த இடத்தில் ஆனந்த அதிர்ச்சியில் வரும் இன்னல்களை அறியாது போனாள், அல்லது அறிந்தும் சொல்லாது போனாளோ?
பொதிய மலை.
கொங்கிளக்கேசர் செந்தூரனின் கட்டுக்குள் இருந்தார். அவரின் மனதில் எப்படியாவது தப்பித்து செல்ல வேண்டும் என்றுதான் இருந்தது. அப்போது அகோரிகள் சொன்னதுதான் நினைவிலாடியது.
‘கேசரே! சிறு பிழை நிகழ்ந்தாலும் செந்தூரன் கை ஓங்கிவிடும். ஆகவே, ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைக்க வேண்டும். சித்தமுனியின் கலசநீர் எங்கள் கைகளில் கிடைத்தால் அதன் மூலம் நீங்கள் கொங்கு நாட்டை மட்டுமல்ல, இந்த உலகையே ஆளலாம். அதனை எப்படியாவது கைப்பற்றிடுங்கள். இதில் ஏதாவது தவறு நடக்கும் பட்சத்தில், இன்னுமொரு உபாயத்தை சொல்கிறோம். செந்தூரனின் விதிக்கணக்கின்படி, முழுநிலவு தொடங்கி உச்சமடையும் சமயம் அவனின் புண்ணிய பலன்கள் அவனைவிட்டு சென்றிருக்கும். சிவன்காப்பும் உடனிருக்காது. எப்படியாது அவனை ஒரு நிமிடம் சுயமிழக்க செய்து நாங்கள் சொல்லும் இம்மந்திரத்தை ஓதிடுங்கள். பின், அவனின் உடல் ஏவலின் வசிப்பிடம். அதன்பிறகு யார் நினைத்தாலும் செந்தூரன் நமது கட்டுக்குள்தான். அவன் உடலும் உயிரும் நமக்கு அவசியம். அவனின் கட்டுக்குள் இருக்கும் யட்சிணியும் நம் கைவசம்’
‘அகோரிகள் கூற்றின்படி எப்படியாது அந்த கலசநீரை கைப்பற்றிட வேண்டும். அதற்குமுன் செந்தூரனை நிலைகுலைய செய்ய வேண்டும்’ என்று எண்ணிய கேசர் அதற்கான நேரத்திற்காக காத்துக்கொண்டிருந்தான்.
செந்தூரன் “நீலா, உடனடியாக அனைவரும் புறப்படுங்கள். இருட்டுவதற்குள் கோட்டைக்குள் சென்றிருக்க வேண்டும். பயணம் தயாராகட்டும். காளிங்கா, நீ கல்வராயன் மலைக்கு வஞ்சனுக்கு துணையாகச் செல். மன்னரை எந்த ஆபத்தும் நெருங்காமல் பார்த்துக் கொள்” என்று வேலைகளை முடுக்கிவிட்டவன், இதன்பின் சமாளித்துவிடலாம் என்றே எண்ணியிருந்தான்.
மனிதனின் மனக்கணக்கு அனைத்தும் நிறைவேறிவிடுமா என்ன?
அனைவரும் புறப்பட தயாராக, முழுநிலவு நேரம் துவங்க ஆரம்பித்தது. அந்நாள்படி மதியத்திலிருந்து முழுநிலவு நேரம் என்று முன்னரே அகோரிகள் கேசருக்கு அறிவுறுத்தியிருந்தார்கள். அந்த சமயம் வந்ததும்தான் செந்தூரன் பலமிழப்பான். விதியின் விளையாட்டு ஆரம்பம் ஆகியது. நீலாவால் ஏவல் சக்திகளை இனம்காண இயலவில்லை. அவள் ஒரு கட்டுக்குள் இருந்தாள். ஆகவே, கமண்டல நீரை வைத்திருக்கும் செந்தூரனை பல அருவங்கள் சுற்றி வந்தன. சிவன் காப்பு இல்லாததும், தன்னுடைய புண்ணிய பலன்களை அவன் மக்களுக்காக தாரை வார்த்ததும் அருவங்களை அவன் காண இயலா சூழ்நிலையை உருவாக்கியிருந்தன. இதில், சித்தமுனியின் பேச்சைமீறி நீரை கேசருக்கு கொடுத்தது பெரிய இன்னல்களுக்கு வழிவகுத்து இருக்கிறது. அதற்கு நாமே காரணகர்த்தாவாக இருக்கப் போகிறோம் என்று அறியாது பயணத்தை தொடர்ந்தான் செந்தூரன்.
முழுநிலவு தொடங்கியது. “செந்தூரா! என்னை அடைத்துவிட்டால் எல்லாம் நின்றுவிடும் என்று நினைத்தாயா? உன்னைப்போல் திட்டமிடாமல் நான் காரியத்தில் இறங்கமாட்டேனடா. சிறுபிள்ளைப்போல் இருக்கும் ஒரு நாகவசியக்காப்பை வைத்துக்கொண்டு ஆட்டம் ஆடாதே. நீ கோட்டைக்குள் செல்லும்முன் அங்கு செம்பியன் அரியணை ஏறியிருப்பான் செந்தூரா” என்று இடிஇடியென நகைத்தான் கடுங்கோ கொங்கிளக்கேசர்.
இதனைக் கேட்டதும் ஒரு நிமிடம் செந்தூரன் சுயமிழந்துதான் போனான். அதற்குள் கேசர் மந்திரத்தை மனத்திற்குள் சொல்ல, ஒரு ஏவல் செந்தூரனின் தலைமேல் சுற்றியது. செந்தூரனின் கண் மட்டும் ஒருநொடி மேலே பார்த்துவிட்டால் அந்த ஏவல் அவனின் உடலுக்குள் புகுந்துவிடும்.
ஒரு நிமிடம் தடுமாறிய செந்தூரன் சட்டென்று சுதாரித்துக்கொண்டவன், கேசரின் கழுத்தை பிடித்து, “அடேய், கிழட்டு நரியே! அரியணை என்பது அவ்வளவு எளிதான இருக்கையென்று நினைத்தாயோ! என் தந்தையை சூழ்ச்சியால் கொன்ற குள்ளநரிக் கூட்டமே. என் கண்முன்னே களிற்றிற்கு நெடியேற்படுத்தும் மூலிகையைக் கொடுத்து என் தாய் மிதிப்பட்டு இறப்பதை காண வைத்த நயவஞ்சக நாய்களே, எப்போதடா இவன் மாய்வான், நாட்டை ஆளலாம் என்று கள்ளர் கூட்டத்தை ஏவிவிட்டு மக்களின் வயிற்றில் அடித்த மாபாவிகளே! நீங்கள் என்ன செய்திருந்தாலும் அங்கு என்னவள் அதை முறியடித்திருப்பாள். தீதும் நன்றும் பிறரால் வராது. அவரவர் செயலுக்கு அவரவர் கூலி பெறுவார். இனி நீ செய்த செயலுக்கு என் மகனின் காலால் மிதிப்பட்டு மீளாமரணம் எய்துவாயடா.” என்று ஆடித்தீர்த்தான்.
அவனின் பிடியால் கழுத்து நரம்புகள் இறுக, மந்திரம் முழுமையடையாமல் நிற்கிறது. ஏவலாலும் செந்தூரனின் உடலுக்குள் இறங்க முடியவில்லை. அது மேலேயே அவனை சுற்றியே வட்டமடித்துக் கொண்டிருக்கிறது. அதனோடு இன்னும் பல அருவங்கள் கமண்டல நீரை களவாட கண்ணி வைத்து காத்துக்கிடக்கின்றன.
நாம் சற்று கொங்கு நாட்டு நிலவரத்தைப் பார்த்துவிட்டு வரலாம்.
….
அரண்மனை
நள்ளிரவு நேரத்தில் கூட கொங்கு நாடு ஒளிவீசிக் கொண்டிருந்தது. எங்கும் மந்திர உச்சாடானங்கள். வேள்விகள் துவங்க இருக்கின்றன. மஞ்சரி ஆலயப்பணிகளில் இருக்க, யட்சிணியோ செவ்வேலன் சொன்னதை மனத்தில் உருப்போட்டுக் கொண்டிருந்தாள்.
‘சித்தமுனியின் கமண்டல நீரை வேள்வி முடித்து பருகினால், அவரால் பெற்ற சாபத்திற்கு விமோச்சனம் கிடைக்கும்’ இது ஒன்றே அவளின் மனத்தில் தற்போது ஓடிக்கொண்டிருந்தது.
‘நிச்சயமாக, கமண்டல நீர் செந்தூரன்தான் அவன்வசம் வைத்திருப்பான். அங்கு என்ன நிலவரம் என்று தெரியவில்லை. நீலாவும் அந்த நீருக்காகத்தான் சென்றிருக்க வேண்டும். கேசர் உயிரோடு இருக்கிறார் என்றால், காளிங்கனும் உடனிணைந்து ஏதோ சதி செய்கிறான். வேள்வி நேரம் என்னால் ஆலயத்திற்குள் செல்ல இயலாது. இந்நேரம் செவ்வேலன் அவனின் மனைவியை அழைத்துக் கொண்டு வந்திருப்பான். அனைத்தும் நல்விதமாக முடிந்ததும், செந்தூரனிடமிருந்து கமண்டல நீரை பெற வேண்டும். என்னப்பனே! உன் விளையாட்டில் என்னையும் ஒரு பாவையாக மாற்றிவிட்டாய். பொதியில் நடப்பதை தற்போது என்னால் உணரவும் இயலவில்லை. எதுவானாலும் செந்தூரனுக்கு துணையாக இருங்கள்’ அவனுக்காக வேண்டியவள், அரண்மனையை கண்காணிக்க பறந்தாள்.
அரண்மனைக்கு வெளியே காற்றோடு காற்றாக மிதந்து ஒவ்வொரு அறையாக நோட்டமிட்டவாறு சென்றுக் கொண்டிருந்தாள் யட்சினி. பெரும்பாலான அறைகளில் யாரும் இல்லை. காவல் வீரர்கள் மட்டுமே இருந்தனர்.
முதன்மையமைச்சர் அறையில் விளக்கின் வெளிச்சம் அதிகமாக இருந்ததைக் கவனித்தவள் அவ்விடம் சென்றாள். ‘இவர் வேள்விக்கு செல்லாமல் இங்கு என்ன செய்துக் கொண்டிருக்கிறார்?’ என்ற கேள்வி எழாமல் இல்லை.
காற்றாக அந்த அறைக்குள் நுழைந்தவள், மறைவிடத்தில் தன்னை மறைத்துக் கொண்டாள்.
முதன்மையமைச்சர் கோபமாக உள்ளே வர, செம்பியனும் இன்னும் சில சிற்றரசர்களும் பின்னோடே வந்தனர்.
“அமைச்சரே!” செம்பியன் ஆரம்பிக்கும் முன்னரே, முதன்மையமைச்சர் மாரிவெண்கோ வார்த்தைகளை கடித்துத் துப்பினார்.
“ஏதும் பேசாதே செம்பியா? செய்யும் ஒரு காரியமாவது சரியாக செய்கிறாயா? உன்னிடம் கொடுத்த வேலை என்ன? எப்படி மஞ்சரியின் செவிக்கு திட்டம் தெரியவந்தது. கேசராவது செந்தூரனை கைது செய்து அழைத்து வருவாரா? அல்ல?” கேள்வியாய் செம்பியனை நோக்கினார்.
“நிச்சயம் தந்தை செந்தூரனை கைது செய்து அழைத்து வருவார் அமைச்சரே! வஞ்சன்?”
“வஞ்சனைக் கொல்ல கல்வராயன் மலைக்கு ஆட்களை அனுப்பியுள்ளேன். நாளை அவனின் உடல்தான் கொங்கு நாட்டை வந்தடையும். ஆள ஆளில்லாத இந்த சேர நாடு முழுவதும் இனி நம் கைவசம்.” இடிஇடியென சிரித்தான் மாரிவெண்கோ.
‘ஆக, கள்ளர்கள் துணையாடு பொருட்கள் சூறையாடப்படவில்லை, இந்த துரோகிகள்தான் அதனை நிகழ்த்தியுள்ளனர். பிறந்த பொன்னாட்டை சூறையாடுவது, தாயின் கருவறையை கலைப்பதற்கு சமானாம் என்பதை மறந்து துரோகம் இழைத்துள்ளனர். நிச்சயம் இது செந்தூரனிற்கு தெரிந்திருக்கும். இப்போது நான் என்ன செய்வது? வேள்வி நிகழ்வதால் என்னால் அரண்மனையை விட்டு எங்கும் செல்ல இயலாது. என் மந்திரங்களும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பின் நீடிக்காது. வேறு எந்த உருவத்தையும் என்னால் தற்சமயம் எடுக்க இயலாது. இவர்களின் முகத்திரையை கிழித்தால்தான் மஞ்சரிக்கு உண்மை புரிபடும். கடவுளே, ஏதேனும் வழியைக் காட்டு’ மனத்திற்குள் மருகிக்கொண்டிருந்தாள் யட்சினி.
யட்சினி என்ன செய்து நடக்கவிருக்கும் விபரீதத்தை தடுக்கப் போகிறாள்?
….
கல்வராயன் மலை.
வஞ்சன் இன்னும் சிறிது நேரத்தில் கல்வராயன் மலை உச்சியை அடைந்து விடுவான். அங்கிருந்து நிமிட தூரத்தில் வனக்காடு வந்துவிடும். வனக்காட்டில் தான் சித்தமுனி சொன்ன இடம் இருக்கிறது.
‘இறைவா! எப்படியோ கல்வராயன் மலைக்கு வந்துவிட்டேன். இன்னும் சற்று நேரத்தில் வனக்காட்டை அடைந்து விடலாம். இந்நேரம் செந்தூரன் அரண்மனைக்கு சென்றிருப்பானா? இல்லை, வழியில் ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்து இருக்குமா? காளிங்கன் படைகள் எதற்கு நம்மை சுற்றி வளைக்க வேண்டும்? விரைந்து சித்தர் குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல வேண்டும். அங்கிருந்து எப்படியாவது மக்களை நாடி அரண்மனைக்கு சேதி அனுப்பிட வேண்டும்’ என்று எண்ணியவன் பரிதியை விரைவாக செலுத்தினான்.
அப்போது வஞ்சன் அணிந்திருந்த சிவன்காப்பு பிரகாசமாக ஒளிர்ந்தது. ஒளியின் திசையை கவனிக்க, பெரிய கருநாகம் ஒன்று அவனை பின்தொடர்ந்து வந்துக் கொண்டிருப்பதை கண்டான்.
“செந்தூரன் சொன்னதுபோல் ஆபத்தை இது நமக்கு உணர்த்தி விட்டது. சிவப்பா! விரைந்து செல். ம்ம்” என்று குதிரையின் பிடியில் அழுத்தம் கொடுத்திட, சீறிப்பாய்ந்தது அவனின் சிவப்பன்.
அதனின் வேகத்திற்கு ஈடுகொடுத்தது போல் காளிங்கனும் வேகமாக ஊர்ந்து சென்றான். சிவனின் காப்பு மீண்டும் ஒளிர்ந்திட, வஞ்சனின் கண்களுக்கு காளிங்கனின் உருவம் தெளிவாக தெரிந்தது.
‘காளிங்கனா? அவன் எப்படி கருநாகமாக? இவனால் செந்தூரனிற்கு ஏதேனும் நிகழ்ந்து இருக்குமோ? கடவுளே! ஏதும் நிகழ்ந்து விடக் கூடாது. செந்தூரனிற்கு பதில் என் உயிரை எடுத்துக் கொள்ளுங்கள். அவன் என் தங்கையோடு வாழ வேண்டும்.’ எந்த நேரம் வஞ்சன் வேண்டினானோ, உண்மையில் அவன் உயிர்தான் போகப்போகிறது என்பதை அறிய மறந்து போனான்.
இன்னும் சற்றுத் தொலைவில் வனக்காடு வந்துவிடும். குதிரை விரைந்து செல்ல, நடுவில் தடுக்கிய பெரிய கல்லால் குதிரை தடுமாறி விழுந்தது. வஞ்சன் தவறி விழுந்து வனக்காட்டிற்குள் புகுந்தான்.
வனக்காடு, வனதேவதை ஆட்சி செய்யும் இந்த வனத்தில் எந்த மாயமந்திர சக்திகளுக்கும் இடமில்லை. இயற்கை ஒன்றே தெய்வம். இறையே இயற்கை. இதுவரை இங்கு ஒரு துளி இரத்தம்கூட சிந்தாது இந்த வனத்தை காத்து வருகிறாள் வனதேவதை. அங்குள்ள மக்களும் வேடுவத்தலைவன் முருகனை வணங்கி உயிர்வதை செய்யாது வாழ்ந்து வருகின்றனர். முக்கிய குறிப்பு, தேவநாகவேடர் குலமும் இங்குதான் வசித்து வருகிறார்கள்.
‘அந்தோ, வஞ்சனிற்கு என்னவாயிற்று?’ என்று எண்ணியபடியே காளிங்கன் வனக்காட்டிற்குள் நுழைகிறான். இதுவரை செந்தூரனின் நாகவசியக் காப்பிற்கு கட்டுப்பட்டு இருந்தவனின் எண்ணங்கள் சிதறியது. மனித உருவும் அவனால் எடுக்க இயலாது. நாகமாக இருந்தாலும், காளிங்கனின் எண்ணவலைகள் தற்போது சரியாக அவனின் எண்ணங்களை பிரதிபலித்தன.
‘நான், எப்படி இங்கே?’ என்று ஒருநிமிடம் தடுமாறியவன், “அடேய் வஞ்சா! சிக்கினாயா? உன் முடிவு என் கையில் என்பதுதான் விதி. இனி நீ நாடு திரும்பிட இயலாது. ஆட்சியும் அரசும் இனி எங்கள் கையில்.” என்று கொக்கரித்தவன், விரைந்து சென்று வஞ்சனை தீண்டினான். வஞ்சனின் ஒரு துளி இரத்தம் வனக்காட்டில் சிந்தி சிதறியது.
தொடரும்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
1
+1
+1

