
சுழலி-13.
இரண்டாம் நாள் – நனை
நள்ளிரவு நெருங்கிக் கொண்டிருந்தது.
“இங்க எங்க போய், நாங்க குளிக்கிறது? சிவலிங்கத்த எப்டி பிரதிஷ்டை செய்றது?” தனக்குத் தோன்றிய கேள்வியைக் கேட்டான் சொக்கன். சிவரஞ்சனுக்கும் அதே எண்ணம்தான்.
“அதற்குத்தான் ஊற்றுக்குவளை. அதைக் கொடு” என்று அன்புவிடமிருந்து வாங்கியவர், அதிலிருந்த நீரை இருவரின் தலையிலும் ஊற்றினார். உடல்முழுவதும் நீர் பரவிட, அவர்களையே அறியாமல் ஒரு புத்துணர்ச்சி வந்ததுபோன்ற உணர்வு.
அருகிலிருந்த களிமண்ணில் அந்த நீரை வைத்து உள்ளங்கையளவு சிவலிங்கத்தை உண்டாக்கினார். பின்,சிவனுக்குரிய மந்திரங்கள் சொல்லி முன்னே செய்ததுபோல் அவரை வணங்கித் தொழுதனர் அனைவரும். அனைவருக்கும் எப்படியாவது இங்கிருந்து செல்ல வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது. சொக்கனும், அங்கையும் யாழிற்கு எதுவும் ஆகிடக் கூடாது என்றுதான் துடித்தனர்.
….
யாழ் கண்களைத் திறந்தாள். அவளின் முன்னே இரண்டு பெரிய நாகங்கள் இருக்க, பயத்தில் கண்கள் இரண்டும் இருண்டது.
பயத்தில் அவளின் நா மேலண்ணத்தில் ஒட்டிக்கொண்டது. பேச்சே வரவில்லை யாழ்நிலாவிற்கு. அச்சத்தில் மேனி முழுவதும் வியர்த்து வழிந்தது.
“காளிங்கா! அவர்கள் சுரங்கத்தின் மையத்தை அடைந்துவிட்டனர். இன்னுமொரு நாள் பயணத்தில் கல்வராயன் மலையை அடைந்துவிடுவார்கள். அதற்குள் நாம் விரைந்து செல்ல வேண்டும். அவளை அழைத்துக் கொண்டு காவல் பரணிற்கு செல். அவர்களுக்குமுன் நாம் சென்றிருக்க வேண்டும்”
அனைத்தையும் அங்கதினி என்னும் நம் குட்டி இராஜநாகம் கேட்டுக்கொண்டிருக்க, சடுதியில் மரத்திலிருந்து தாவி அவர்கள்முன் தோன்றினாள்.
“அங்கதினி?” நீலாவின் பச்சை பளிங்கு கண்கள் மிளிர்ந்தது.
“என்னை இன்னும் நினைவு வைத்திருக்கிறீர்களே! அதிசயம்தான் அத்தையாரே!”
“இதெப்படி சாத்தியம்? காளிங்கா நீ மணிக்கொடியை கொன்றுவிட்டாய் என்றுதானே கூறினாய்?” கோபமாக காளிங்கன்பக்கம் திரும்பினாள்.
அவனுக்கும் இது அதிர்ச்சியாகத்தான் இருந்தது. அங்கதினி மணிக்கொடியின் கருவில் வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் அவளைக் கொல்ல காளிங்கனை அனுப்பினாள் நீலா. ஆனால், விதியின் செயலால், மணிக்கொடி என்று நினைத்து மற்றொரு இராஜநாகத்தை கொன்றுவிட்டான் காளிங்கன். அதையே மணிக்கொடியென்று நீலாவிடம் கூறி நம்பவைத்துவிட்டான். (மணிக்கொடி நாம் முதல் அத்தியாயத்தில் பார்த்த பெரிய இராஜநாகம் தான்.)
“நான் கொன்றுவிட்டேன் நீலா. எனக்கும் ஒன்றும் புரியவில்லை.” கிலிப்பிடித்துவிட்டது. நீலாவின் கனல் பார்வைக்கு ஆளானாள் உயிர் உடலில் மிஞ்சாது என்பது அவன் அறிந்ததே.
“அப்படியா மாமா அவர்களே? துணைவியின் சொல்லிற்கு அத்தனை மதிப்போ? உடன்பிறந்த தங்கையையே கொல்லத் துணியும் அருமையான தமையன்தான் நீங்கள். அது இருக்கட்டும்? இங்கு என்ன செய்துக் கொண்டிருக்கிறீர்கள்?”
அங்கதினியின் ஒவ்வொரு பேச்சும் நீலாவிற்கு கடும்கோபத்தை ஏற்படுத்தியது. நேரம்வேறு சென்றுக் கொண்டிருக்க, நடுவில் இவள்வேறு வந்து பேசிக்கொண்டிருக்கிறாள் என்றே அந்த கோபம். நீலா நினைத்தால் அங்கதினியை ஒரே பிடியில் உயிர்வதை செய்ய இயலும். ஆனால், அங்கதினியின் உயிர் செந்தூரனுக்கு சொந்தம். அதனை இவள் செய்தால், மற்றொரு சாபத்திற்கு ஆளாகிவிடுவாள் என்றே அமைதிகாத்தாள். அனைத்தும் அறிந்துதான் அங்கதினி தற்போது அவளை தாமதப்படுத்திக்கொண்டிருக்கிறாள்.
“வீணாகப் பேசி, உயிரை மாய்த்துக் கொள்ளாதே. சிறு பெண்ணாக இருக்கிறாய். மீண்டுமொரு பிறப்பு எடுத்து வந்திருக்கிறாய். இம்முறை, அத்தையிடமிருந்து எந்த சலுகையையும் எதிர்நோக்க முடியாது. நினைத்தேன் என்றால் இந்நிமிடம் நீ மாண்டிருப்பாய்”
“ஆனால், உங்களால்தான் நினைக்க முடியாதே என் அருமை அத்தையாரே! கண்முன்னே என் அன்னை, தந்தையை கொன்றுவிட்டு இந்த பிறப்பிலும் என் அன்னையை கொல்லத் துணிந்த உங்களை என்ன செய்யலாம்? ஆலயத்திலேயே என் பெற்றோர்களை சமாதியாக்கிவிட்டு நீங்கள் மட்டும் நடமாடினால் அது எவ்விதத்தில் நியாயமாகும்? இன்றும் நான் அதே அங்கதினிதான். ஆனால், இம்முறை என் கடமை தவறாமல் எனக்கிட்ட கட்டளையை செய்துமுடிப்பேன்.” என்று ஒரே தாவலில் நீலாவின் கழுத்தில் தாவினாள். நான்கடி அங்கதினிக்கு பன்னிரெண்டு அடி நீலாவை சமாளிப்பது பெரும்போராட்டாமாய் இருந்தது. இதில், வாசுகியின் படையும் வந்துவிட்டது.
இராஜநாகத்திற்கு உணவே மற்ற சிறு பாம்புகள்தான் என்பது இயற்கை. ஆனால், அனைத்தும் ஒன்றிணைந்தால் எதிரியாளியின் நிலை என்னவாகும் என்பதற்கு இதுவே சாட்சி. காளிங்கனும் நீலாவும் பெருத்த படையை சமாளிக்க சற்று தடுமாறினர்.
ஆனால், நீலா சாதாரணமவள் அல்லவே! தன் ஒட்டுமொத்த பலத்தையும் திரட்டி ஒரே புரட்டில் தன்னை சூழ்ந்திருக்கும் அனைத்து பாம்புகளையும் தூர வீசினாள். அங்கதினியும் மரத்தில் மோதி கீழே விழுந்தாள்.
“காளிங்கா! அந்த பெண்ணை அழைத்துக் கொண்டு உடனே காவல் பரண் செல்!”
அவளின் கட்டளைக்கிணங்கியவன், யாழிற்கு வசியமருந்துக் கொடுத்து குகையின் இன்னொரு வாயிலின் மூலம் காவல்பரண் என்னும் இடத்திற்கு விரைந்தான். அங்கிருந்து கல்வராயன் மலைக்கு செல்வது இன்னும் நேரம் குறைவு என்பதாலேயே அவ்வழியை தேர்ந்தெடுத்தாள் நீலா.
மற்ற பாம்புகளின் தாக்குதலுக்கு நீலா எதிர்தாக்குதல் நடத்திக் கொண்டிருக்க, அவளறியாவண்ணம் காளிங்கனை பின் தொடர்ந்தாள் அங்கதினி.
….
நள்ளிரவு.
இரண்டு ஓலைச்சுவடிகளும் ஒளி உமிழ்ந்து, பிணைந்து பின் அவரவர் கைகளில் வந்தடைந்தது.
அனைவரும் எந்த வழியாக இருக்கும் என்று குறிப்பைக் கேட்க கவனமாகினர்.
“நாற்றிசை நன்வழி நல்கிடுமா? அல்லது ஓர்வழி மட்டும் உபயம் அளித்திடுமா? சிவனின் காப்பு சிறந்தவழிக் காட்டும். சிற்றோடை ஒன்று ஓசையோடு செல்லும். வழியில் ஆயிரம் மாயைகள் தோன்றும். நான்கடியில் கிடைக்கும் சூலம் காக்கும். எடுத்தவுடன் கையில் மகரயாளித்தாக்கும். சேயோன் விளையாட்டில் தேடுங்கள் பலவும்”
“அறிவு இங்க வா. உன் கண்ணுக்கு எதாவது தெரியுதா?” என்றுக் கேட்டான் சிவரஞ்சன்.
“பாம்பு இருக்கு. அதான் தெரியுது. நீங்க எத கேட்குறீங்க?” மஞ்சரியை ஓரக்கண்ணால் கண்டவாறே சொன்னான்.
“இந்த நாலு வழில எதுல போகணும்னு சிவன்காப்பு தான் சொல்லும்னு போட்டு இருக்கு. நீ தான் பாத்து சொல்லணும்”
“எனக்கொன்னும் தெரியல.” அவனுக்கு ஆயாசமாக இருந்தது. எப்படியாவது சென்றுவிடலாம் என்று பார்த்தால், பூதம்போல் ஒவ்வொன்றாகக் கிளம்பிக் கொண்டிருந்தது.
“மனதை நிலைப்படுத்து. நீ எண்ணுவது கண்ணிற்கு அகப்படும் அறிவு” சித்தர் சொல்லுக்கு அவனால் மறுப்பேதும் சொல்ல இயலவில்லை.
அமைதியாக கண்களை மூடி மனதை ஒருநிலைப்படுத்தினான்.
சிவரஞ்சனின் சுவடி ஒளிர்ந்தது. அதனைக் கையில் எடுத்தவன், குறிப்பைப் படித்தான்.
“மெய்யில் சிவப்புமச்சம் தாங்கிய,
கன்னிமகள் ஒருத்தி,
கைகளை இருத்தி,
ஓடையோடு ஓசையெழுப்பிட,
உள்ளிருந்து வருமாம்
உள்ளகன்ற வால்.
யாளியின் திறனும்
யாக்கையின் மேனியும்
யாவருக்கும் அஞ்சாமல்
மோதிடும் தருணம்,
யாளி ஒளி வழிநடத்தும்
முகை உருவாகும்”
இப்போது அனைத்தும் அனைவருக்கும் விளக்காமலே புரிந்தது.
“ஆனா, என்னோட உடம்புல சிவப்பு மச்சம் எங்கயும் இல்லையே” உறுதியாக சொன்னாள் அங்கையற்கண்ணி.
அனைவரும் இது என்னடா சோதனை என்பது போல் இருக்க, சிவரஞ்சன் யோசனையோடு ஆருத்ராவைப் பார்த்தான்.
அவளும் சட்டென்று சிவரஞ்சனைப் பார்த்தவள் ‘வேண்டாம்’ என்பதுபோல் தலையசைத்தாள்.
“ஆரு, நமக்கு வேற வழியில்ல. உன்னோட கழுத்துல சிவப்பு மச்சம் இருக்குதான?”
அப்போதுதான் பிறைக்கும் அது நினைவு வந்தது. “ஆமா, ஆரு? நீதான் இத செய்யணும்”
“இல்ல பிறை. நோவே. கண்டிப்பா என்னால முடியாது. அதுல என்னன்னமோ சொல்லுது. யாளின்னா பெருசா இருக்கும்னு நான் கேள்விப்பட்டு இருக்கேன். இவனும் எனக்கு போட்டோலாம் காட்டியிருக்கான். கண்டிப்பா என்னால முடியாது” மறுத்தாள் ஆரு.
“ஆனால், இதை உன்னைத்தவிர வேறு யாராலும் செய்ய இயலாது. நாம் செய்யும் ஒவ்வொரு காரியமும் காரணத்தோடுதான் இருக்கிறது. அனைவரும் விரைந்து செயல்படுங்கள். தாமதிக்கும் சிறுதுளி நிமிடமும் அனைவரின் உயிர்க்கும் ஆபத்து நேரிடலாம்” என்றார் சித்தர்.
ஆரு பெரிய மூச்சொன்று இழுத்துவிட்டு, அந்த நீரோடைக்குள் கையை விட்டாள். அதற்குள் அறிவு அந்த நீரோடையின்மேல் காப்பினை காட்டிட, சிறு வெளிச்சம் ஒன்று இடதுப்பக்க இருக்கும் வழியினை சுட்டிக் காட்டியது. ஓடையும் ஓசையோடு அங்குதான் பாய்ந்துக் கொண்டிருந்தது.
ஆருவின் கைகளுக்கு அது அகப்பட்டது. ஆம், கைப்பிடி உள்பக்கமாய் சற்று வளைந்திருந்தாலும் கம்பீரமாய் மிளிர்ந்தது மரகத வாள். அதனை இலாவகமாகப் பிடித்தாள் ஆரு. ஒருநிமிடம் அவள் யாரோவாக மாறிப்போனாள்.
அத்தனை பெரிய வாளை, அசாதாரணமாக கையிலேந்தியிருந்தாள் ஆருத்ரா. அனைவரும் அவளோடு அறிவைப் பின்தொடர, அறிவின் கால்களுக்கு ஏதோ அகப்பட்டது.
வேடனான வேலவனின் வேல்தான் அது. குன்றின் அருகில் கிடைத்த சிறிய வேலினை விட, இது சற்று பெரியதாக இருந்தது. அதுவரை அந்த குகையில் கேட்டுக் கொண்டிருந்த வினோதமான சப்தம், இந்நொடி கேட்கவில்லை. ஏதோ ஒரு அமைதி நிலவியதுபோல் உணர்வு. அந்த அமைதியும் பயத்தைதான் ஏற்படுத்தியது.
அறிவு குனிந்து அந்த வேலை ஆராய்ந்துக் கொண்டிருக்க, அவனுக்கு அருகில் யாரோ மூச்சு விடும் சப்தம்.
அனைவரும் ஒரடி பின்னே எடுத்து வைத்திருந்தனர். அன்பு எச்சிலை விழுங்கியபடி பேசினான். “அ… அறிவு…. நிமிந்து பாருடா” அறிவு மெதுவாக தன் தலையை நிமிர்த்திப் பார்க்க, பெரிய மகரயாளி தன் கூரிய பற்களால் அவனையே வெறித்துக் கொண்டிருந்தது. அங்கு அறிவு மற்றும் ஆருத்ராவை தவிர்த்து வேறுயாரும் அதன் கண்களுக்கு தெரியவில்லை.
தன் பெரிய கால்களை மேலே தூக்கி அறிவை மிதிக்க வர, அதன் இடதுப்பக்கமாய் உருண்டு விழுந்தான் அறிவு.
“ஆரு, என்ன வேடிக்க பாத்துட்டு இருக்க? போ! போய் அவன காப்பாத்து”
“என்ன? நானா? டேய், எத்தா பெருசு இருக்கு பாத்தீயா? சத்தியமா என்னால முடியாது. நான் போக மாட்டேன்”
அவள் மரகத வாளினை இப்படி அப்படி ஆட்டியாட்டி பேச, யாளி தற்போது ஆருத்ராவை நெருங்கியது.
சட்டென்று குனிந்து அதன் வால் பக்கம் சென்றவள், பக்க சுவற்றில் கால் வைத்து, அதன் தலையில் அமர்ந்தாள்.
நிமிடத்தில் நடந்த இந்த நிகழ்வையும் அவளின் கையிலிருந்த வாளினையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தாள் ஆரு.
“ஏய், அப்படிதான். உடனே அத கொன்னுடு” கத்தினான் அன்பு.
அவளோ யாளின் தலையில் அமர்ந்துக் கொண்டு பேந்தபேந்த விழித்துக் கொண்டிருந்தாள்.
அந்த யாளியோ ஒருபக்கம் நிற்க இயலாமல் ஆருத்ராவை கீழே தள்ள முயன்றுக் கொண்டிருந்தது.
அவள் வாளினை இறுக்கிப் பிடிக்க, வாளின் முனையோ யாளியின் தலையை பதம் பார்த்தது.
பெருத்த சத்தத்துடன் அந்த மகர யாளி கீழே விழுந்தது. அதன் உடலிலிருந்து நரம்புகள் ஒன்றிணைந்து பெரிய சங்கிலி ஒன்று உருவாகி அது அப்படியே ஆருத்ராவின் கைகளில் விழுந்தது. சற்று நேரத்திலேயே அது அவளின் உடலோடு ஒன்றிப் போனது.
“என்னடா இப்போ நடந்துச்சு?” அதிர்ச்சி விலகாமல் கேட்டாள் ஆருத்ரா.
“வந்த, வாள எடுத்த யாளிய போட்டுத்தள்ளிட்ட. இப்போ ஒரு சங்கிலி ஒன்னு வந்துச்சே. அது அப்படியே உன் உடம்புல ஒட்டிக்கிச்சு” என்றான் அன்பு.
அவள் மற்றவர்களை அப்படியா என்பதுபோல் பார்க்க, புன்னகையோடு அவளருகில் வந்த சித்தர், “சில விசயங்கள் நம் ஜீவான்மாவோடு கலந்திருக்கும். அதனை யாராலும் எதனாலும் மாற்ற இயலாது. இந்த சங்கிலி தக்க சமயத்தில் உனக்கு உதவும்.” என்றார்.
யாளியின் உடலிலிருந்து ஒரு ஒளிவெள்ளம் ஊற்றெடுக்க, அதுவே சரியான பாதைக்கு வழிக்காட்டியது.
இப்படியே அடுத்த நாளும் தொடங்கியது.
மூன்றாம் நாள் – முகை
யாளியின் உடலிலிருந்து வெளிப்பட்ட ஒளிக்கீற்றினைக் கொண்டு, வழியினைத் தொடர்ந்தனர்.
மீண்டும் நீண்டதொரு பயணம். சாலை மார்க்கமாக சென்றால் அறிவு சொன்னதுபோல் இந்நேரம் சென்றிருக்கலாம்தான். ஆனால், எதுஎது எங்கெங்கு கிடைக்குமோ, அதுஅது அங்கங்குதான் கிடைக்கும் என்பது தான் விதி. இது பயணத்திற்கு மட்டுமல்ல, பலரது வாழ்க்கைக்கும் தான் என்பதை தற்போது உணர்ந்திருந்தனர் அனைவரும்.
ஒளியின் முடிவில் பெருத்த உடலோடு ஒரு மலைப்பாம்பு இருந்தது. அதனையொட்டி சில குட்டிகளும் இருக்க, அனைவரும் அப்படியே நின்றனர்.
“இது என்னடா, இத்தா பெருசு இருக்கு?” வாயைப் பிளந்தான் அன்பு. அது சிலைபோல் ஆடாமல் அசையாமல்தான் இருந்தது. ஆனால், நிச்சயம் ஒருவரை விழுங்கும் என்பது பார்த்தவுடன் தெரிந்தது.
“இது ஆசியவகை மலைப்பாம்புதான். ஆனா, இவ்ளோ பெருசு வளர வாய்ப்பு இல்ல. அநேகமா இந்த சுரங்கம் ரொம்ப வருசத்துக்கு முன்னாடி உருவாகியிருந்துச்சுன்னா உள்ளேயே இருக்க வாய்ப்பு இருக்கு. இது நெருக்குனா, உடனே மூச்சு நின்னுடும். அந்தளவுக்கு அதோட பிடி இறுக்கமா இருக்கும்” அங்கை விவரத்தை சொன்னாள்.
“அட நீ வேற ஏன் அங்கை? இருக்குற பயத்துல இப்போ இந்த விவரம்லாம் தேவையா?” ஆயாசமாக இருந்தது ஆருத்ராவிற்கு.
“இதுவும் முன்னாடி இருந்த மாதிரி ஏதாவது வில்லங்கம் புடிச்சு கேட்குமோ?” அன்பு சொல்லி வாயை மூடவில்லை, அந்த பாம்பு நெளிந்து தெளிந்தது.
“பல வருடங்களாக மானுடர்களின் வருகைக்குக் காத்துக் கொண்டிருக்கிறேன். நான் எனது பிள்ளைகளைக் காண வேண்டும். அதற்கு உங்களின் உதவி எனக்கு வேண்டும்”
“ரைட்ரா. இப்போ இது என்ன டாஸ்க்கு வச்சி இருக்கோ?” என்று புலம்பியவன் அங்கையின் முறைப்பில் அமைதியானான் பேரன்பு.
“என்ன செய்யணும்?” கேட்டான் சிவரஞ்சன்.
“நான், இந்த பெருத்த உடலை அசைக்க இயலாது நீண்ட நெடுங்காலமாய் ஒரே இடத்தில் இருக்கின்றேன். செந்தூரனைத் தடுக்க செல்லும்போது, அவனின் ஏவல்கள் மூலம் என்னைக் கட்டிவைத்துவிட்டான். கட்டுகளை அவிழ்க்க முயலும்போது, மந்திரத்தின் வாசகம் பிழையானதால், எனக்கிந்த நிலை. உன் கையில் இருக்கும் சுவடியின் இறுதிப்பக்கத்தை நீ எனக்கு தாரைவார்க்க வேண்டும். அதில் எனக்கான மாற்றுவழி இருக்கிறது. எனது சாபம் நீங்கினால் நீங்கள் கேட்டதை நான் தந்தருள்வேன்.” என்றது.
“அது கொடுத்துட்டா, அடுத்து நம்மளால சரியான வழில போக முடியாது. இல்ல ரஞ்சன் நாம வேற வழி யோசிக்கலாம்” முதன்முறையாக அவனிடம் பேசினாள் அங்கை.
அதில் மலர்ந்தாலும், அவன் மனமோ வேறுவிதமா திட்டமிட்டது. சித்தரையும் சொக்கனையும் திரும்பிப் பார்த்தான். அவர்கள் ஏதும் பேசவில்லை. அதிலேயே அவன் புரிந்துக்கொண்டான், தனது முடிவினை அவர்கள் எப்படியேனும் ஏற்றுக்கொள்வார்கள் என்று.
நீண்ட பெருமூச்சொன்றை விட்டவன், “சரி, நான் இந்த சுவடிகள்ல உனக்கு தாரைவார்க்குறேன். வாக்கு மாறாமா நான் என்ன கேட்டாலும் நீ தரணும்” மீண்டுமொருமுறை உறுதிப்படுத்திக்கொண்டான்.
“வாக்கு தருகிறேன். நீ என்னக் கேட்டாலும் நான் உனக்கு அதை நல்குவேன்” என்றது அந்த மலைப்பாம்பு.
ஊற்றுக்குவளை நீரால் சுவடிகளை சுத்தம்செய்து, அதனை மலைப்பாம்பின் அருகில் வைத்தான் சிவரஞ்சன்.
திடீரென்று அதில் ஏற்பட்ட ஒளிக்கீற்று பாம்பின் உடல்முழுதும் பரவியது. இதுவரை எந்தவித அசைவில்லாமல் இருந்தது, சட்டென்று தனது பழைய நிலைக்கு மாறியது.
தன்முன் ஆளுயுரத்திற்கு நின்றதை கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். அதன் வால் சுவடிகளை இறுகிப் பிடித்திருந்தது. ஆக, உபாயம் சுவடிகளில் இருக்கும் மந்திரமல்ல, சுவடிதான் என்ற யூகம் மெய்யாகிவிட்டது.
மெல்ல ஊர்ந்து சென்று, தனது குட்டிகளைப் பார்த்தது. அதன்மேலும் சுவடியின் ஒளிபட, உயிர் இறக்கும் தருவாயில் இருக்கும் குட்டிகள் பிழைத்து தாயின் மடிசேர்ந்தன.
“இரக்கம் என்னும் தயாள குணமுடையவனே! ஈசனின் அருள் பரிபூரணமாய் கிட்டட்டும். உருவத்தில் பெருத்தவளாய் இருந்தாலும், உள்ளத்தில் நானும் தாய்தான் என்பதை உணர்ந்து, எனக்கு நீ செய்த இந்த உதவியை என் சந்ததிகள் வரை உனக்கு கடமையாற்றும் என்று உனக்கு வாக்கு மொழிகிறேன். கேள், உனக்கு என்ன வேண்டும்?”
“நீங்க கேட்ட உதவிய நான் செஞ்சிட்டேன். இப்போ எனக்கு அந்த சுவடி திரும்ப வேணும். அதுதான் இப்போ எங்களுக்கு இருக்குற ஒரே வழிக்காட்டி”
“நீ புத்திசாலிதான். பொன்னோ, பொருளோ, அல்லது செந்தூரனை அழிக்க உதவியோ நீ நாடாமல் விட்டதைப்பிடிக்க எண்ணும் எண்ணமே வெற்றிக்கு வழிவகுக்கும். இதை நீ வைத்துக் கொள். ஊற்றுக்குவளையின் நீரால் என் பாவங்கள் விலகியது. அதற்கு கைம்மாறாக இந்த குவளையை நீ வைத்துக்கொள். இது உனக்கானது. செந்தூரனின் சக்தியை கட்டிவைக்கும் ஆற்றல் இதிலிருக்கும் மூலிகை நன்னீருக்கு உண்டு. என்றும் ஈசன் துணைபுரிவான்” என்றுவிட்டு, தனது குட்டிகளோடு அவ்விடம் விட்டு அகன்றது.
மூன்றாம் நாள் துவங்க இன்னும் சில மணித்துளிகளே இருக்க, உடலைத் தூய்மை செய்துக்கொண்டு நள்ளிரவிற்கு காத்திருந்தனர்.
சொக்கன் சுவடியில் இருந்ததை வாசித்தான். “மனத்தில் இருக்கும் குழப்பம் தகர்ந்து, மந்தி உருவம் பதித்த கல்லில் மத்திமமாய் இருக்கும் சிறு வழியொன்று அகக்கண்ணில் அகப்படும். அப்பனும் பிள்ளையும் ஒன்றாய் திறக்க, தேவியவளின் பாதம் பணியலாம். விடையை அறிந்து வினையை எதிர்த்தால், விதியை மதியால் வெல்லலாம்”
அனைவரும் குழப்பத்தில்தான் இருந்தனர். அப்பன், பிள்ளை யார் என்றே அந்த குழப்பம்.
சிவரஞ்சனின் சுவடி ஒளிவீசியது.
“உண்மை வெளிப்படுத்த தயக்கம் கொள்ளாது,
உடனடியாய் தீர்வு காணும் நேரமிது.
பாதை திறந்ததும், படைகள் விலகும்.
பெரும்படைகள் சூழும்!
காவல்பரணை காக்கும் படைகள்,
காரிகையின் உடன் செல்லும்.
மாற்றுவழியில் பாதம் பதித்தால்,
மண்ணடியில் தோன்றும் மந்திரமாலை”
இந்தமுறை சட்டென்று வரிகளை யாராலும் புரிந்துக் கொள்ள முடியவில்லை. என்ன உண்மை, யார் சொல்ல வேண்டும் என்று ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருந்தனர்.
சிறிது நேரம் சித்தரும் தியானத்தில் அமர்ந்தார். பின், மனம் அமைதியாக கண்களை திறந்தவர், “சிவரஞ்சா, அங்கை. இங்கே வாருங்கள். நான் சொல்ல போகும் செய்தி, அதிர்ச்சியாகத்தான் இருக்கும். ஆனால், காலமறிந்து நீங்கள் செயல்பட வேண்டும். நான் பிரபஞ்சன்”
அவர் சொன்னதைக் கேட்டவுடன் அனைவருக்கும் பேரதிர்ச்சி. அங்கையையும், சிவரஞ்சனும் திகைப்பிலிருந்து வெளிவரவில்லை. அதன்பின் அவர், விபத்திற்கு பிறகு நடந்த நிகழ்வுகளை விளக்கிட, அங்கை கதறிவிட்டாள். சிவரஞ்சனுக்கோ மொழி மறந்தநிலை.
நிலையை உணர்ந்தவன், “நாம இப்போ இந்த கதவ திறக்கலாம். அதுக்கு அப்புறம் எப்டியாவது காவல்பரண் தாண்டி போகணும். அதுக்கு அப்புறம் வள்ளி வழிகாட்டுவாங்கன்னு நம்புறேன்” என்றான் சிவரஞ்சன். அவனின் இந்த பதில் ஒருநிமிடம் சித்தரை ஆச்சர்யத்திற்குள்ளாக்கியது.
பிறையோ ஆதரவாக சிவரஞ்சனை அணைத்துக்கொண்டான். பின், குறிப்பில் சொல்லப்பட்டதுபோல், அனைவரும் பெரிய பாறையை கண்டறிந்து, அந்த குரங்கு அச்சில் சித்தரும் சிவரஞ்சனும் இணைந்து கையை வைக்க, மீண்டுமொரு பெருத்த சத்தத்துடன் பாதை தெரிந்தது.
கல்வராயன் மலையின் காட்டில் அனைவரும் காலடி எடுத்து வைத்தனர்.
….
காளிங்கன், யாழ்நிலாவை அழைத்துக் கொண்டு காவல்பரணை அடைந்திருந்தான். அங்கதினிக்கு புரிந்துபோனது, இனி நம்மால் அவளை பின்தொடர்வதை தவிர்த்து வேறெதுவும் செய்ய இயலாது என்று. ஆகவே, மஞ்சரியின் உத்தரவின்பேரில் நிலாவை கண்ணுக்குள்ளேயே வைத்துக் கொண்டாள். சிறிது நேரத்தில் அங்கு வந்துசேர்ந்தாள் நீலா.
“காளிங்கா, படைகளை ஒன்று திரட்டு. அனைவரும் கல்வராயன் மலைக்கு வந்துவிட்டனர். செந்தூரனின் உடலைக் கண்டறிவதற்குள் அனைவரையும் நம் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். இல்லையேல், அந்த வள்ளி முந்திக்கொள்வாள். இவள் செந்தூரனை அடையும்வரை, வசியத்திலேயே வைத்திரு” என்று அனைத்துக் கட்டளைகளையும் விதித்தவள், தன் பச்சை பளிங்கு கண்களை உருட்டினாள்.
அவளின் உத்தரவின்படி, காளிங்கனின் படை திரண்டுவிட்டது. அனைத்தும் கருநாகங்கள்.
“சுரங்கக் கோவிலிலிருந்து வெளிவரும் ஒருவரும் வனத்திற்குள் காலடி எடுத்து வைக்கக் கூடாது. இடையில் யார் வந்தாலும், அவரின் உயிரும் நஞ்சாகட்டும். புறப்படுங்கள்” என்றான் காளிங்கன்.
அங்கதினிக்கு உள்ளம் பதைபதைத்து விட்டது. இங்கு யாழைக் காப்பதா, இல்லை, அங்கு தன் குலத்தையும் சேர்த்துகாக்க போராடிக் கொண்டிருப்பவர்களுக்கு உதவுவதா? என்று மனம் இருபக்கமும் தவித்தது.
அப்போது அங்கதினி எதிர்பாராமல் ஒன்று நடந்தது. யாழ் கண்விழித்தாள். காளிங்கன் படை திரட்டுவதில் குறியாய் இருக்க, நீலாவோ செந்தூரனுக்கு தேவையான விசயங்களை திரட்டுவதில் திண்ணமாய் இருந்தாள்.
யாழின் கையில் சொக்கன் கொடுத்த மூலிகை இருந்தது. அதனை யாரும் அறியாவண்ணம் வாயில் போட்டவள், மருந்தின் வீரியத்திலும் தன்னவனின் எண்ணத்திலும் மீண்டெழுந்தாள் யாழ்நிலா.
சுற்றும்முற்றும் பார்த்தவள், அருகில் யாரும் இல்லாதது அறிந்து, மெதுவாக அங்கிருந்து நகர்ந்தாள். இது அங்கதினியே எதிர்பார்க்காத ஒன்றுதான். திடமான மனதும், காதல் கொண்டவனின்மீது நம்பிக்கையும் இருந்தால், இந்த பெண்கள்தான் எத்தனை பெரிய செயலையும் எளிதில் செய்துவிடுகின்றனர்.
யாழ், காவல்பரணை விட்டு மெல்ல கீழிறங்க, அவள்முன் வந்தாள் அங்கதினி.
யாழிற்கு அங்கதினி பற்றி தெரியாததால் பயந்துதான் போனாள்.
“பயப்படவேண்டாம். நான் உன்னைக் காத்திடவே உடனிருக்கிறேன். மஞ்சரியம்மாதான் என்னை அனுப்பி வைத்தார். வா, என்னோடு. அவர்கள் மீண்டும் வருவதற்குள் நாம் இங்கிருந்து செல்ல வேண்டும்” என்றாள் அங்கதினி.
மஞ்சரி என்ற பெயரைக் கேட்டவுடன் அரை நம்பிக்கைக்கு வந்தவள், தற்போது அந்த இடத்தைவிட்டு வெளியேற வேறு வழியும் இல்லாததால் அங்கதினியை தொடர்ந்தாள்.
…..
அனைவரும் சுரங்கத்தை வெளியே வந்ததும், எதிர்ப்பட்டாள் வள்ளி. யாரும் எதுவும் பேசவில்லை.
“கையில இருக்குற பொருள எல்லாம் பத்திரமா வச்சுக்கோங்க அல்லாரும். இங்கருந்து காட்டுக்கோவிலுக்குள்ள போய்ட்டா, அதுங்களால அங்க வர முடியாது. நாம அடுத்த வேலைய செஞ்சிடலாம். வெரசா என் பின்னாடி வாங்க”
அவளின் நடைக்கு இவர்களால் ஈடுகொடுக்க முடியவில்லை. சித்தர் மட்டுமே அவளுக்கு இணையாய் நடந்தார்.
“எல்லாம் திட்டத்தோட நடக்குற மாதிரி இருக்கு. ஆனா, அதுலாம் என்ன திட்டம்னு தான் எனக்கு புரியல” புலம்பினாள் ஆரு.
“நாங்க மட்டும் தெரிஞ்சிக்கிட்டு போறோம் பாரு. சொக்கன், சிவா, அந்த சித்தர் தவிர வேற யாருக்கும் என்னன்னு முழுசா தெரியல. இதுல, இப்போ நமக்கு பாதுகாப்புக்குன்னு இருந்த பாம்பு படையும் காணோம். ஆனா, பெருசா ஏதோ நடக்கப் போகுதுன்னு மட்டும் தெரியுது” பேசிக்கொண்டே தொடர்ந்தான் அறிவு.
“ஆமா, நானும் ரொம்ப நேரமா உன்ன கவனிக்குறேன். ஏன், அடிக்கடி திரும்பிப் பாத்துட்டே வர?”
மீண்டும் திரும்பிப் பார்த்தான், மஞ்சள் முகம் புன்னகையில் விரிய பாந்தமாய் நடந்து வந்துக் கொண்டிருந்தாள் மஞ்சரி.
“நான் என்னன்னு சொன்னா நம்பவா போற?”
“இப்போ நடக்குற விசயம்லாம் பாத்தும் நான் நம்பலன்னா எப்டி. சொல்லு, நம்பித்தான் ஆகணும்”
“நம்ம பின்னாடி ரொம்ப நேரமா ஒரு ஆவி வந்துட்டு இருக்கு. அநேகமா அது மஞ்சரியா இருக்குமோன்னு சந்தேகமா இருக்கு.”
“அடேய், என்னடா சொல்ற? எப்போல இருந்து?” பயத்துடன் கேட்டாள் ஆரு.
“மலை உச்சில இருக்கப்போல இருந்து தான். அது ரொம்ப நேரமா நம்ம கூட தான் வருது. ஆனா, எப்பப்பாரு சிரிச்சிக்கிட்டே இருக்கு. அதான் லைட்டா அல்லு விடுது” என்றான் மீண்டும் திரும்பிப் பார்த்து. அவளின் புன்னகை இன்னும் அகலமாய் விரிந்தது.
ஆருத்ராவும் இரண்டு முறை திரும்பிப் பார்த்தாள். ஆனால், அவளின் கண்களுக்கு ஒன்றும் புலப்படவில்லை. அறிவு பொய் சொல்கிறானோ என்று கூடத் தோன்றியது. ஆனால், அவனின் காப்பிற்கு தான் அருவம் தெரியும் என்பதால் அவனின் கைகளைப் பற்றியபடியே நடந்தாள்.
அவனும் ஏதும் பேசாது கையைப் பிடித்தபடி நடக்க, அதனைக் கண்ட அன்பு விழித்தான்.
“இங்க என்ன படமா ஓடுது? முன்னாடி பாத்து நடடா.” அவன் தலையில் தட்டினான் அறிவு.
“இங்க நம்மள சுத்தி நடக்குற விசயம் என்ன? இவனுங்க பன்ற அலும்பல் என்ன? அவன்அவன் உசுரோட வீடு போய் சேருவானான்னு இங்க தெரியல. இதுல எப்டிதான் கரெக்ட் பன்றானுங்களோ? அந்த அங்கை, பாத்த உடனே ப்ரபோஸ் பண்ணவன்கிட்ட விழுந்துட்டா. சொக்கன் பய, வந்ததும் அந்த யாழ் புள்ள கிட்ட ரூட் விட்டான். தோ, இப்போ இந்த அறிவும் ஆருவோட கைய பிடிச்சிட்டு வரான். இவனுங்க ஏதோ ஜாலியா டிரிப்புக்கு வந்தவனுங்க மாதிரி சுத்துறானுங்க. எனக்கு மட்டும் தவளக்கிட்ட கோத்து விட்டு வேடிக்க பாருங்க” புலம்பித்தள்ளினான் அன்பு.
சுரங்கத்தின் வாயிலில் வெகுநேரமாக காத்துக் கிடந்தன காளிங்கனின் படைகள்.
தொடரும்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
1
+1
+1

