
இது ஹார்மோன் செய்யும் வேலை என ஒப்புக்கொள்ள அவள் முட்டாள் இல்லை. புரியாத வயதிலும் அவன் பிரிவு அவளுக்கு மனதை இறுக்கி பிடித்தது. கடினமான பள்ளித் தேர்வுகள் சமயத்தில் அவன் முகம் பார்த்ததும் புத்தகம் பூக்கள் பூத்து புது உலகம் காட்டியது.
அத்தனை நாட்களாக பூபெய்தாத பெண்மை அவன் வீட்டில்,அவன் கைகள் பட்டவுடன் மலர்ந்தது. அவள் அணிந்த முதல் தாவணி அவன் வாங்கியது… இன்னும் எத்தனை உணர்வுகுவியல்!
ரங்கனுக்கு சென்னை வந்த பிறகும் கூட அவளது நினைவுகள் அவனை எந்த விஷயங்களிலும் ஈடுபட விடாமல் தவிக்க செய்தது. அவனுக்கு இந்த உணர்வு புதிதல்ல. அவன் காதலிக்கும், அவன் மனதில் எப்பொழுதும் பாவாடை தாவணியுடன் சிரிக்கும் ஒரே பெண் இவள் தான். இன்று நேற்றல்ல… அவன் விடலைப்பருவத்தில் அரும்பு மீசை வளர தொடங்கும் பொழுதே சாதுர்யாவின் உருவத்தை மனதில் பச்சை குத்தி கொண்டு விட்டான். என்னதான் மனது அவள் சிறு பெண் பள்ளிக்கூடம் படித்துக் கொண்டிருக்கிறாள். தானும் சிறுவன்தான் என்றெல்லாம் நினைத்தால்கூட வேறு எந்தப் பெண்ணின் முகமும் அவனுக்குள் பதியவில்லை.
மாலதி ஏதேதோ காரணங்கள் சொன்னபோது கூட அவன் கட்டப்பட்டிருந்தது தன் காதல் அவர்கள் இருவர் வாழ்க்கையில் விளையாடி விட கூடாது என்னும் எண்ணத்தில் தான்.புரியா வயதில் வந்த அந்த காதல், அவளுக்கு தன்னை புரியா விட்டால் என்ன செய்வது எனும் யோசனை, பெரியவர்களுக்கு முக்கியமாக அப்பாவுக்கு தெரிந்தால் எனும் பயம் என்று எத்தனையோ…
‘என்று’ அவன் கைகளில் அவள் பூத்தாளோ , அந்த நொடியே முடிவு செய்துவிட்டான் யாரும் அருகில் இல்லை என்றால் கூட அவளை தேவதை போல காப்பேன் என்று. பெரிய பெண்ணாகி அவள் முதன்முதலில் அணியும் ஆடை தான் வாங்கிக் கொடுப்பதாக இருக்க வேண்டும் என்று தான் அவசர அவசரமாக கடைக்கு சென்றான். அவளுக்கு அணிவிக்கவே நகைகள் வாங்கினான். அவளை காதலியாக அல்ல. மனையாளாக நினைக்க தொடங்கி பல மாதங்கள் ஆகிறது.பெண்ணும் புரிந்து கொண்டாள். மாலதி மாமியை நினைத்துதான் அவனுக்கு யோசனை. ஆனால், அதற்காகவெல்லாம் பெண்ணவளை விட்டுக்கொடுக்க முடியாது.அதற்கு முதலில் படித்து முடித்தாக வேணும். என்னை மறுக்க அவர்களுக்கு காரணங்களும் வாய்ப்புகளும் தரக்கூடாது. மாமிக்கு மட்டும் இல்லை. என் அப்பாவும் பெண்ணை மறுக்க காரணம் இருக்கக்கூடாது பெண்ணே!என்று மனதில் நிச்சயம் செய்தவன் தெளிவுடன் ஸ்ரீ ரங்கம் சென்றான்.
தான் நினைப்பதை அவளுக்கும் புரிய வைக்கும் அவசரம் அவனுக்குள்.
கல்லூரி சென்றிருந்த பெண்ணுக்குள் ரங்கத்தான் தவிர ஒன்றும் புரியவில்லை. அவன் அவளிடம் சொல்லிக் கொள்ளாமல் சென்னை சென்றது மனச்சோர்வில் அவளை அழுத்தியது. அவன் வெளிநாடு சென்றபின் எப்படி சமாளிப்பேன் என்று தன்னையே கேட்டுக்கோண்டாள்.அத்தான் ஒப்புக்கொள்ள மறுத்தால் மாற்று வழி செல்வேன் என்ற தீர்மானம் அபத்தமாய் தோன்றியது. அவனின்றி நானா என மறுக தொடங்கிவிட்டாள்.
இவள் வருவதற்கு முன்பே பாட்டி வீட்டுக்கு வந்து விட்ட ரங்கன் தன் மன நிலையை மெல்ல பெரியவர்களுக்கு புரிய வைக்க முயன்றான். அவனுக்கு தான் செய்வது தவறாக இருந்தால் எனும் எண்ணம்.
அவன் சொல்ல சொல்ல பாட்டியும் தாத்தாவும் அர்த்தம் பொதிந்த புன்னகை பூத்தார்கள். இவ்வளவு தூரம் அவள் மீது ரங்கன் நேசம் வைத்திருக்கிறான் என்று தெரியாவிட்டாலும், அவர்கள் மனதிற்குள் ஒரு ஊகம் இருக்கத்தான் செய்தது.
பேரனை நினைத்து இருவரும் சிரித்துக் கொண்டார்கள். அவன் மனநிலை தெரிந்துதான் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கலாம் என்று முடிவு செய்திருந்தார்கள் வீட்டுப் பெரியவர்கள்.
இவர்கள் இருவரும் ஒரு வார்த்தை சொல்லிவிட்டால் மாலதிக்கும் வெங்கடேசனுக்கும் மறுப்பதற்கு வழி கிடையாது.
தன் மனது செல்லும் பாதை சரியா தவறா என்று குழப்பத்தில் தவித்துக் கொண்டிருந்தான் ரங்கன்.
நா உங்க பாட்டிய கல்யாணம் செஞ்சுட்டு கொஞ்ச நாள் அவ அவங்கம்மா வீட்ல இருந்தா… அப்போ என் மனசு ஏதோ இழந்தா மாதிரி இருக்கும். அவ இங்க வந்த பிறகு அவளை பிரிய விட்டதில்ல. மூணு பிரசவமும் இங்க தான். நா டிரான்ஸ்பெர் ஆகி வெளியூர் போகும்போது கூடவே கூட்டிகிட்டு சுத்துவேன். அவளும் அலுத்தது இல்ல… என்று அவர் சொல்ல சொல்ல அவனுக்குள் ஏதோ நெகிழ்ந்தது.
‘நா யு.எஸ் போயிட்டு வர வரைக்கும் அவளை பத்திரமா பாத்துக்கோங்க பாட்டி’என்றவனின் கண்கள் கலங்க,’அவ என்க பேத்தி டா ‘என்று சிரித்தார் தாமோதரன்.
கல்லூரி முடிந்து வீடு வந்தவளை வீட்டின் அருகிருக்கும் காவிரி கரைக்கு அழைத்து சென்றான் ரங்கன். அவன் மீது கோவம் கொண்டிருக்கும் பாவை அவன் சொல்வதை புரிந்து கொள்வாளா?
***************************************************************************************
சங்கரன் சற்று ஒதுங்கி செல்வதை முதலில் புரிந்து கொள்ளாத ரத்னாவின் மனது நிதானமாய் அவனை கணக்கிட்டது. திருமணம் முடிந்து இங்கே வந்த பத்து நாட்களில் கல்லூரி
திறக்கப்பட, அங்கு பேசும் மலையாளம் அவளுக்கு புரிப்படவில்லை. வீட்டில் தாய்மொழி பேசப்பட்டாலும் அதில் தமிழ் மொழியின் ஆதிக்கம் அதிகம். சங்கரன் பேசும் மலையாளம் இவர்கள் வீட்டில் பேசுவது போல் இருக்கும். அது இவளுக்காகத்தான் என்பது இப்போது புரிந்தது.
முதலில் சற்றே அழுகை எட்டி பார்த்தாலும், வேறு வழி இல்லை. இனி இங்கு தான் என்று தேற்றிக்கொண்டாள். என் பெற்றோர் தமிழகம் வந்த போது அவர்களும் இப்படித்தான் பாவித்திருப்பார்கள் என யோசித்தாள்.
இப்போதெல்லாம் சங்கரன் வெளியூர் செல்வதில்லை. இரவுக்குள் வீடு திரும்பியும் விடுகிறான். சிறு பெண், இனி என் வாழ்நாள் முழுவதும் என் பொறுப்பு என்ற எண்ணம் அவனுள்.தன்னை முழு குடும்பஸ்தனாய் உணர்ந்தான்.
ரத்னாவுக்கு முப்பது நாட்களில் மலையாளம் புத்தகம் வாங்கிக்கொடுத்து தன்னால் முடிந்த நேரத்தில் கற்றுக்கொடுத்தான். முதலில் தமிழகம் சேர்ந்தவள், திருமணம் முடித்தவள் என்று நட்புகள் கிடைக்க கஷ்டம். பிறகு இவளின் அறிவுகூர்மை, எளிமை கண்டு சரியாகிவிட்டது.
ரத்னா இப்போது த்ரிசூர்வாசியாகிவிட்டாள். நடுவில் அம்மாவும் சாந்தாவும் அலைபேசியில் அழைப்பார்கள். நடுவில் உமா பற்றிய பேச்சின் பொழுது குருபரன் மாப்பிள்ளை இப்போதெல்லாம் சரியாகி விட்டார். உமாவை விட்டு நகர்வதில்லை. ஆனால், உமா ஏனோ இங்கு வருவதில்லை. பணம் வந்த பிறகு மாறிவிட்டது அவள் மனம் என்றாள் பாறுக்குட்டி. குரு வாராவிட்டாலும் உமா வரலாமே என்றது பெற்றவள் மனம்.
இரண்டு பெண்கள் திருமணம் முடிந்தபிறகு தங்கள் பெண்ணாக இங்கே வரவில்லை என்பது அவளை அவ்வாறு யோசிக்க வைக்கிறது.
ரத்னா இது போன்ற தருணங்களில் எதுவும் சொல்வதில்லை.
திருமணம் முடிந்த பெண்ணாக தோழியர் இவளிடம் அந்தரங்கம் பேச, நிஜமாகவே அதுபற்றி ஒன்றும் புரியாமல் நோக்கினாள் ரத்னா. ஆனால், அவளுக்குள் ஏதோ எதிர்பார்ப்பு. சங்கரன் மறந்தும் இவளை தொடுவதில்லை. திடீர்னு அத்தானுக்கு தன்னை பிடிக்காமல் போனதென்ன என்று ஏங்கினாள் ரத்னா.
இரவு இருவர் தனித்தனி பாய்தான்.
இரண்டோர் முறை அவனை தொட முயற்சி செய்தவளுக்கு அவன் இடம் அளித்தானில்லை. அவனது இந்த நடவடிக்கைகள் அவளுக்குள் ஏதேதோ குழப்பங்களை அவளுக்குள் விதைத்தது என்னவோ நிஜம்.
ஏறக்குறைய ஒரு வருடம் இவற்றை பொறுத்து கொண்டவளுக்கு பிறகு பொறுமை இல்லை. அவனிடம் வாய்விட்டு கேட்டே விட்டாள்.
“ உங்களுக்கு நான் தொடுவது பிடிக்கலையா, இல்ல இவனை கல்யாணம் பண்ணிட்டு வந்துட்டேன் என்று யோசிக்கிறீங்களா? கல்யாணத்துக்கு முன்னாடி நீங்க காட்டின காதல் இப்போ உங்களுக்கு என் மீது இல்லைனு எனக்கு தோணுது… “என்று ஏதேதோ சொன்னவளுக்கு நிஜமாக தான் எதிர்பார்ப்பதை வாய்விட்டு சொல்லுவதற்கு வெட்கம் தடுத்தது.
ஆனால், மனைவி எதிர்பார்ப்பது என்ன என்பது அவள் கணவனுக்கு நன்றாகவே புரிந்தது. இதில் வெட்கப்பட ஒன்றுமில்லை. சாதாரண கணவன்-மனைவிக்குள் இருக்கும் உறவு தான் அது. இது பற்றி தன் மனைவியிடம் முதலிலேயே பேசி இருக்க வேண்டுமோ என்ற தயக்கம் இப்போது சங்கரனுக்குள் வந்துவிட்டது. அவர் கேட்கும் அளவிற்கு விட்டு வைத்தது தவறு. இனி தான் என்ன சொன்னாலும் எடுபடாது என்பதுவும் புரிந்தது.
ஆனாலும், மனைவியிடம் இது பற்றி பேசாமல் ஒருதலைப்பட்சமாக தான் மட்டுமாக முடிவு எடுத்தது தவறு என்பதனையும் சங்கரன் உணர்ந்தே இருந்தான்.
லேசாக தொண்டையை கனைத்துக் கொண்டு மனதை வருடும் மெல்லிய குரலில் பேச ஆரம்பித்தான். எப்பொழுதுமே அவன் அப்படித்தான்! அவன் பேசுவது ஆழமானதாக இருக்கும். லேசில் கோபம் வராது. இப்பொழுதும் அவன் குரலில் தேனுண்ட வண்டாக மயங்கிக் கிடந்தாள் ரத்னா.
” கவனி ரத்னா,இப்ப நீ ரொம்பவும் சின்ன பொண்ணு. இது உனக்கு படிக்கிற வயசு. இந்த நேரத்தில் வேற உணர்ச்சிகளுக்கு இடம் கொடுத்தா படிப்பில் உனக்கு புத்தி குறைஞ்சிரும். நான் வெறும் பத்தாவது வகுப்பு தான். அதான் உன்னை தொல்லை செய்ய எனக்கு இஷ்டம் இல்ல…அத்தோட கரு தங்கினா அப்புறம் படிக்க ஒண்ணு பிடிக்காது, இல்லனா உடம்புக்கு முடியாது. பார்த்துக்கவும் இப்போதைக்கு யாரும் நமக்கு இல்லை. அதுதான், இந்த மூணு வருஷம் முடிஞ்சா உனக்கும் கொஞ்சம் பக்குவம் வந்துடும். படிப்பு முடிச்சுருவ… நம்ம உறவுகளும் சேர்ந்துரும்னு ஒரு நம்பிக்கை” என்று நீளமாக பேசியவனை ஏதோ பொருட்காட்சியில் இருக்கும் பொருளைப் பார்ப்பதுபோல் பார்த்தாள் ரத்னா. ‘இவ்வளவு நல்லவனா டா நீ’ எனும் அர்த்தம் கொண்ட பார்வை அது. சங்கடமாக உணர்ந்த சங்கரன் தலை முடியை லேசாக கோதிக் கொண்டான். திடீரென்று தான் ஏதோ முட்டாள்தனமாக முடிவெடுத்துவிட்டாற் போல மனதில் ஒரு பதட்டம்.
ரத்னா மனதில் தனக்காக இவ்வளவு யோசிக்கிறார், இது காதலின்றி வேறில்லை என்ற தீர்மானம் வலுப்பெற, கூடவே கோபம் தலைக்கேற “மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடாதீங்க அத்தான். கல்யாணமான கணவன் மனைவிக்குள்ள இதுவும் ரொம்ப முக்கியம் தான்! இது வெறும் உடல் தேவை மட்டும் இல்ல அத்தான். ஒருத்தருக்கு ஒருத்தர் நான் இருப்பேன்ங்குற தைரியத்தையும், பரஸ்பரம் அன்பையும் நம்பிக்கையும் கூட்டுற கூடிய விஷயம் இது. வாய் மொழியை விட உடல் மொழி ரொம்ப பவர்ஃபுல்.குழந்தை பிறப்பைத் தள்ளிப் போட ஆயிரம் வழி இருக்கு. இதையெல்லாம் ஆம்பள உங்களுக்கு நான் சொல்லித் தர வேணாம்.”
தன் உடல் தேவையை வாய்விட்டு கூறுவதால் ஆணோ பெண்ணோ தரம் இறங்கி விடுவது இல்லை. சொல்லாமல் மனதிற்குள் குடைவது உறவை சிக்கலாகிவிடும்.
அவள் பேச்சில், தனது தேவை என்ன என்பதையும், மனதளவிலும் உடல் அளவிலும் தான் தயாராக இருப்பதையும் தெளிவாக சொல்லிவிட்டாள். அவள் மனதிலோ தனக்காக தன் கணவன் மூன்று நெடிய வருஷங்கள் பிரம்மசரியம் கடைபிடிப்பது கூடாது எனும் தீர்மானம்!
ஒருவருக்கு ஒருவராய் ஆனபின் உடல் விலகியிருப்பது அவசியம் இல்லை தான்! சில சமயங்களில் இதுபோன்ற விலகல்கள் தேவையில்லாத சந்தேகத்தையும் குடும்பத்தில் குழப்பத்தையும் விளைவிக்க கூடும்.
ரத்னா சொல்வது சரிதான், திருமணம் செய்து கொண்ட பின்னர் உடல் தேவையை தீர்த்துக் கொள்வதில் தவறென்ன?
தாம்பத்திய உறவுக்கும் அவள் படிப்பதற்கும் என்ன சம்பந்தம்?
அவளுக்காக யோசித்த அவள் கணவன், மனைவி சொல்வதில் உள்ள ஞாயம் புரிந்தவனாக, வயதிற்கே உண்டான தேவை முன்னே நிற்க ‘ ‘நான் மெடிக்கல் ஷாப் போயிட்டு வரேன் ரத்னா’ ‘என்றான்.
வெள்ளிக்கிழமை, பௌர்ணமி நிலவு சாட்சியாக முதன்முறை கணவன் தீண்ட அந்த பெண்ணின் மலர் மலர்ந்தது. முதன் முதலாக பெண் சுகம் என்ன என்று அந்த ஆண் மனைவியிடம் கற்றுக்கொண்டான். நிறைய தடுமாற்றங்கள். புரியாத அழகிய தவறுகள். அர்த்தம் இல்லா பிதற்றல்கள், அழகிய சங்கமம்!
பூங்குவளையில், ஒரு மலர் மஞ்சத்தில் கசங்கி, கணவனின் கைத்தேர்ந்த மன்மத கூர் அம்புகளால் கிழிப்பட்டு, சோர்ந்து உறக்கம். அது ‘உறக்கமா’ இல்லை ‘மயக்கமா’என்று தெரியவில்லை. அவளை விட்டு அகலாத இரவுகள். மாதம் மூன்று நாட்கள்தான் அந்த மங்கைக்கு விடுப்பு…அவள் உமா.
உமாவின் நாட்கள் கடந்த ஒரு வருடமாக இப்படித்தான் சென்று கொண்டிருக்கிறது. ஒரு நாளும் இடை விடா கணவன்.தன்னைப் பெற்றவளை பாதுகாப்பது முதல் கொண்டு செய்ய வேண்டிய கடமைகளிலிருந்து தன்னை என்றும் விலக விடாமல் தன் மனதில் மேற்கொண்ட சத்தியத்தை இன்று வரை காப்பாற்றி வருகிறாள் அவள். எத்தனையோ பெண்களை காப்பாற்றுவதற்காக தன்னையே களபலி கொடுத்த பின்னும் அவளுக்கான கடமைகள் ஓய்வதாய் இல்லை.
காலையில் எழுந்தவுடன் உடல் தொய்ந்து விழுந்தாலும் கூட தனது அன்றாட வழக்கங்களை மாற்றிக்கொள்ளவில்லை. கொஞ்சநேரம் உடற்பயிற்சி நடைப்பயிற்சி மாமியாருடன் சேர்ந்து அவர் கற்றுத் தரும் நிர்வாகப்பயிற்சி, இரவு நேரம் முழுவதும் கணவனுக்கு மட்டுமாய். இவளின் அழகும் மிளிர்வும் கூடக்கூட குருபரன் இவளை இவளுக்குள் தேடும் நேரமும் அதிகரித்துக் கொண்டே சென்றது.
இப்போதெல்லாம் தனக்குள் இருக்கும் மொத்த சக்தியும் உறிஞ்சி எடுக்கப்படுவதாக உணர்கிறாள் உமா. தனிமையில் வரும் கண்ணீர் இன்னும் நிற்கவில்லை.
“என்னை ஏன் இப்படிப்பட்ட காமுகனுக்கு திருமணம் செய்து கொடுத்திருக்கிறீர்கள்” என்று மனதில் தன் பெற்றோரையும் அவள் கேட்காத நாளே இல்லை. ஆனால் விடை தருவார் யார்? அவளுக்குள் ஆயாசமும் சலிப்பும். மற்ற பெண்களின் வாழ்க்கை போல் தன் வாழ்க்கையை தன்னால் அமைத்துக் கொள்ள முடியாது. திருமணத்திற்கு முன் அவளுக்கும் கல்யாணம் குழந்தை குடும்பம் என்று நீண்ட வரிசை கனவுகள் இருந்தது. இப்போதோ இருபதுநான்கு மணி நேரமும் கணவனை எப்படி தன் கட்டுப்பாட்டில் தக்க வைத்துக்கொள்வது என்று யோசனை ஆகிவிட்டது.
திருமணம் அன்று அவன் தன் அன்னையை பார்த்த பார்வையை இன்று நினைத்தால் கூட உமாவின் உடல் கூசுகிறது.அசல் துஷ்சாசனன் பார்வையது
.இதிலிருந்து அவனுக்கு வயது வித்தியாசம், உறவு முறை இவை எல்லாம் ஒரு பொருட்டல்ல என்பதை தெள்ளதெளிவாய் தெரிந்து கொண்டாள் உமா.
பேருந்தில் யாராவது இடித்தாலே பொறுக்கி என்ற திட்டும் நாட்கள் போய், அவனுடனேயே குடித்தனம் செய்ய வேண்டிய நிர்பந்தம் வரும் என்று அவள் என்னாளும் நினைத்திருக்கவில்லை.
அன்னபூரணிக்கு தன் மருமகளின் நிலை புரிகிறது தான். ஆனால் அவரைப் பொறுத்தவரை மகன் வெளியில் சென்று இவ்வாறான விஷயங்களில் ஈடுபடாமல் (ஊர் மேயாமல்?) தன் மனைவியுடன் மட்டும் தன் அந்தரங்க விஷயங்களை முடித்துக் கொள்வது வரை அன்னப்பபூரணிக்கு திருப்திதான். அதனாலேயே மருமகளை அவள் ஒரு வார்த்தை சொல்வதில்லை. ஒரு பெண்ணாக தன் மருமகள் மீது அன்னபூரணிக்கு பரிதாபம் உண்டுதான். மறுப்பதற்கில்லை.
ஆனால் அருணாச்சலம் -அன்னபுரணி அவர்கள் இருவரின் விருப்பு வெறுப்பு எல்லாமே குருபரனின் வாழ்க்கை சார்ந்தது மட்டுமே! இன்று கால மாற்றத்தால் குருவின் செயல் குற்றமாக நம் கண்களுக்கு தெரிந்தாலும் இப்போதும் நான்கு குழந்தைகள் பெறும் பெண்கள் உண்டு. ஐம்பது வருஷங்களுக்கு முன்பெல்லாம் பதினாறு குழந்தைகள் பெற்று திண்டாடிய பெண்கள் நிலை? எத்தனை வீடுகளில் மாமியாருக்கு வீட்டு மருமகள் பிரசவம் பார்த்திருப்பாள்?
‘’கணவனின் ஆசைப்படி, அவர் மனம் கோணாமல் நடந்து கொள்’’என்பது மட்டுமே அறிவுரை. எனில் பெண்ணவளின் மனம், மெய் ?
இப்போதும் உமா இந்த வாழ்க்கை பிடிக்கவில்லை என்று வர முடியுமா? பெண்கள் பலரது நிலை அப்படித்தான் இருக்கிறது.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
+1
+1

