Loading

மகளிடம் அன்னைக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் ரங்கனிடம் அதிகம் நம்பிக்கை உண்டு.தான் சொல்வதை புரிந்துகொண்டு நகர்ந்து கொள்வான் அவன் என்று நன்றாக தெரிந்தவள் சாதுர்யாவின் அன்னை. மருமகனிடம் அவருக்கு முழு நம்பிக்கை சாதுர்யாவுக்கோ ரங்கனின் ஒதுக்கம் ஒப்புக்கொள்ள முடியாததாய் திணறுகிறாள். அவளுக்கு புரியவில்லை, ‘எதற்காக தன்னிடம் அவன் அதிகம் பேசுவதுகூட இல்லை?’

நடன அரங்கேற்ற நிகழ்ச்சி நடக்கும் பொழுது, ரங்கனால் வர முடியவில்லை சரி, அதற்கு பிறகும் அவன் ஏன் அலைபேசி வழியே தன்னை அழைக்கவில்லை? ஒரு வாழ்த்து சொல்வதில் அவன் என்ன குறைக்கிறான்?

அரங்கேற்றம் முடிந்து ஒரு மாதத்தில் சதுவுக்கும் கூட பரீட்சைகள் ஆரம்பிக்க, அப்பொழுதும் அவளால் சரியாக படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. அவளுக்கென்று இருக்கும் ஒரே நண்பன் அவன். அவனை பார்த்து ஏறத் தாழ இரண்டு வருஷங்கள் ஆகிறது. இந்த விடுமுறைக்காவது

ஸ்ரீ ரங்கம் செல்ல அம்மா அனுமதி கொடுப்பார்களா எனும் கேள்வி மட்டுமே அவளின் கவனம் குறைய போதுமானதாக இருந்தது. எட்டாம் வகுப்பு படிக்கும் குழந்தை அவள்.  விடுமுறைக்காக தாத்தா வீடு செல்லுதலும், இஷ்டம் போல ஊர் சுற்றுவதும், படிக்க எழுத என்று எந்த தொல்லைகளும் இன்றி விடுமுறையை முழு விடுமுறையாக கழிக்க தான் அவளது விருப்பம் இருக்கும். 

ஆனால் இந்த காலத்தில் விடுமுறையும் சரி பள்ளி நாட்களும் சரி ஒரே மாதிரி தான் போகிறது. இடைவிடாத பள்ளி வகுப்புகளும், அதைத் தாண்டி பல்வேறு வகுப்புகளுமாக சிறார்களின் குழந்தை தன்மை எங்கோ காணாமல் போய் விடுகிறது. அதற்கு சாதுர்யாவும்

விதிவிலக்கல்ல.

தாத்தா தாமோதரன் வழக்கம் போல் இவள் பரீட்சை சமயம் தில்லி வந்து விட, இவளின் நச்சரிப்பு அதிகம் ஆகிவிட்டது.

  “தாத்தா ப்ளீஸ், அப்பா   அம்மா கிட்ட சொல்லி என்னை உங்க கூட கூட்டி போங்க…இங்க ஒரே போர் அடிக்குது. குளத்துல குளிக்கணும் போல இருக்கு. காவிரியில் நீச்சல் அடிக்கணும் போல இருக்கு. எனக்கு இங்க இருக்க வேணாம் தாத்தா என்னய ரெண்டு மாசத்துக்கு ஸ்ரீரங்கம் கூட்டிட்டு போங்க… என்று கண்களில் ஆரம்பித்தது அழுகையில் முடித்தாள்.

அவரோ… ம்ம்ம் சரி சது, நீ ஒழுங்கா எக்ஸாம் எழுதி முடி. அப்புறம் அப்பா கிட்ட பேசலாம் என்றுவிட்டு மௌனியானார்.

சாதுர்யாவின் அம்மா மனதில் என்ன இருக்கிறது என்று அவருக்கு புரியவில்லை.

சாதுர்யாவை பார்த்தால் பாவமாகத்தான் இருக்கிறது.

ஆனால் சாதுர்யாவின் அம்மாவோ,  குழந்தையை தன் பெற்றோரிடம் கூட அனுப்புவதில்லை. கோழி தன் முட்டையை அடை காக்குமா போலே தன் கண் பார்வையில் வைத்திருக்க விழைகிறாள்.

மகனே அமைதியாய் இருக்கும் பொழுது தான் எப்படி பேச முடியும்? பெற்றவளுக்கு இல்லாத உரிமை என்ன? தான் இதில் எல்லாம் தலையிட முடியாது. அவரும் லக்ஷ்மியும் வேண்டுமானால் இங்கு வந்து தங்கலாம். உறவினர் வருகையை ஆவலுடன் வரவேற்கும் மனம் மருமகளுடையது. இதுவரை எந்த உறவினரிடமோ, மைத்துனன்- மைத்துனன் மனைவி, நாத்தனார் என்று யாரிடமும் முகம் திருப்புதல் அவளிடம் இல்லை. அப்படிப்பட்டவளை தவறாக நினைக்கவும், மாமனார் என்ற உறவை வைத்து கேள்விகள் கேட்கவும் அவருக்கு உடன்பாடு இருக்கிறது. 

அவள் இவ்வாறு நடந்து கொள்ள ஏதாவது காரணம் இருக்கலாம். அவள் மாறாக  நடக்காத வரை  வரை சரிதான் என்று தன்னுள்ளே யோசித்துக் கொண்டிருந்தார் தாமு.

ஆனால், இவற்றை பற்றி சிறுமிக்கு எவ்வாறு புரிய வைப்பது?

இப்போதைக்கு பிரச்சனையை தள்ளி வைப்பது என்று முடிவு செய்து அமைதியாய் இருந்தார்.

சாதூர்யாவோ பள்ளி வகுப்புகளை விட விடுமுறை வகுப்புகளை எண்ணி உள்ளுக்குள் மருகிக் கொண்டிருந்தாள். அவளுக்கு இந்த வகுப்புகளின் மேல் உள்ளூர கோபம். விடுமுறை விடுமுறையாக இல்லாமல் கொடுமையாக இருக்கிறது என்று புலம்பினாள் தாத்தாவிடம்.

ஆனால் அவள் எதிர்பார்த்தபடியே, இந்த வருட விடுமுறைக்கும் அவள் அம்மா, அவளை ஸ்ரீரங்கம் அனுப்ப வில்லை. மாறாக லக்ஷ்மி தான் வழக்கம் போல் ஒரு மாதம் போல் வந்து தங்கிவிட்டு சென்றார். பிறகு சாதுர்யாவின் தாய்வழிப் பாட்டி தாத்தா ஒரு மாதம் வந்து தங்கி விட்டுச் சென்றார்கள். அவர்களுக்கும் ஏன் கடந்த சில வருடங்களாக மகள் இவ்வாறு நடந்து கொள்கிறாள் என்பது குழப்பம்தான்.

 உண்மையில், வெங்கடேசன் கையெழுத்திட்டு இருந்து ஒரு கோப்பின் மூலம், ஒரு தொழிலதிபரின் பகையை சம்பாதித்துக் கொண்டிருக்கிறார். அவர்களிடமிருந்து பலவிதமான அச்சுறுத்தல்கள் வர, தன் பெண்ணை வெளியூருக்கு தனியாக தங்கள் துணையின்றி அனுப்புவதற்கும், நீண்ட நாட்கள் தங்க வைப்பதற்கும் 

சாதுர்யாவின் அப்பா அம்மா இருவருக்குமே தயக்கம். நிர்வாக சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால், வெளியில் சொல்ல வேண்டாம் என்று வெங்கடேசன் கேட்டுக் கொண்டதால் அவரது மனைவி இவ்வாறு வாயை திறக்காமல் நடந்து கொள்கிறாள்.

மூன்று வருஷங்களாக போராட்டம். ஆளும் கட்சி துணையுடன் இப்போது தான் சரியாகி வருகிறது.

இங்கோ, திருச்சியில்  ரங்கன் நல்ல மதிப்பெண்களுடன் பள்ளி இறுதி ஆண்டு தேறி விட்டதால் அவனை சென்னையில் உள்ள கல்லூரி எதற்காவது அனுப்பலாமா, இல்லை திருச்சியிலேயே படிக்க வைக்கலாமா என்ற குழப்பத்தில் இருந்தார் ரங்கனின் அப்பா.

ரங்கன் முடிவாக சொல்லிவிட்டான்… சென்னையில் உள்ள ஒரு பிரபல கல்லூரியில் பி காம் மாலை நேர கல்லூரியில் சேர்ந்து கொண்டு, பகலில் பட்டய கணக்காளர் வகுப்புகளுக்கும் செல்லப் போவதாக. ஓரளவாவது கணக்கு வழக்கு தெரிந்தால்தான் மேற்கொண்டு தொழிலை நன்றாக நடத்த முடியும் என்பது அவன் யோசனை. கொஞ்சம் தயங்கினாலும் அவன் யோசனையை வீட்டில் ஏற்றுக்கொள்ள, எந்தவித காரணத்தையும் சொல்லிக்கொண்டு காதல் வலையில் சிக்கக் கூடாது என்று ரேணு அவனிடம் சத்தியம் வாங்கிக் கொள்ள,”சித்தப்பா விவகாரம் தெரிஞ்ச பிறகும் நான் காதலிப்பேன்னு நினைச்சிங்களா மா”என்றவன் மனக்கண்ணில் அவனையும் அறியாமல் ஒரு பெண் வந்து நின்றாள். 

அவள்…

மின்னல் என இரண்டு வருடங்கள் ஓடி விட, சாதுர்யா விடுமுறைகளை டெல்லியிலேயே பழகிக்கொண்டாள்.  ஸ்ரீரங்கமும் காவிரியும் அவளிடம் இருந்து எவ்வளவோ தூரத்தில். நடுவில் ஒரு முறை அவள் அப்பா மாற்றலாகி உத்தரப் பிரதேசம் என்று விட பத்தாம் வகுப்பு எட்டிக் கொண்டிருக்கும் மகளை அலைக்கழிக்க விருப்பமின்றி தாயும் மகளும் அங்கேயே தங்குவது என முடிவாகியது. 

அச்சுறுத்தல்களும் மறைய இப்பொழுது  சாதுர்யாவின் அம்மா அடுத்த வருஷம் பத்தாம் வகுப்பு என்பதால் ஒன்பதாம் வகுப்பு விடுமுறைக்கும் அவளை எங்கும் செல்ல அனுமதிக்கவில்லை. அதற்கு இன்னொரு காரணமும் உண்டு. அது சாதுர்யா இன்னும் பூபெய்த வில்லை. அந்நிகழ்வு எப்போது வேண்டுமானாலும் நிகழலாம். அந்த சமயங்களில் தான் அவளுடன் இருக்க வேண்டும். அதேசமயம் இந்த நிகழ்வு தன் வீட்டில் நிகழவேண்டும். 

இது போன்ற எண்ணங்கள் தான் சாதுர்யாவை தன்னுடனேயே இருக்க வைக்க சொன்னது.விடுமுறை நேரங்களில் பள்ளி சிறப்பு வகுப்புகள் நடத்த புத்தகப் பையை தூக்கிக்கொண்டு அவள் பயணம் தொடர்ந்தது. இந்த இரண்டு வருடங்களும் அவளைக் கேட்டால் நரகம் என்று தான் சொல்லுவாள். ஆனால் இந்த இரு வருடங்களிலும் அவள் அம்மா எதிர்பார்க்கும்  அந்த நிகழ்வு நிகழவே இல்லை.

 பெண்ணை இதற்கான பெண் மருத்துவரிடம் கூட்டிச் சென்று, தேவையான டெஸ்ட் எடுத்தபொழுது சாதுர்யாவுக்கு உடல் பிரச்சனை ஏதுமில்லை. என்று ஒரு சில சத்து மருந்துகளை மட்டும் எழுதிக் கொடுத்தார் மருத்துவர்.சில பெண்கள் பூக்க தாமதம் ஆவது இயற்கை என்று முடித்து விட்டார் மருத்துவர்.

ஒருவழியாக பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும்போது அவள் சோர்ந்து போக, ஜுரம் வேறு படுத்த, சாதுர்யாவின் அம்மா, தன் நாத்தனார் ரேணுவுக்கு அழைத்து, ரங்கனை விடுப்பெடுத்துக் கொண்டு வரமுடியுமா என்று கேட்கச் சொல்ல, அடுத்த மூன்றாவது நாள் ரங்கன் தில்லியில். அவனுக்கு இரண்டாம் வருட தேர்வுகள் இன்னும் ஒரு மாதத்தில் 

ஆரம்பமாக இருக்கிறது. 

அதனால் பத்து நாள் விடுமுறை எடுத்துக் கொண்டு இங்கு வந்து படிக்கலாம் என்று புத்தகங்களை எடுத்துக் கொண்டு வந்துவிட்டான்.

 ரங்கனை பார்த்த அதிர்ச்சியில் முதலில் வாய் பிளந்த சாதுர்யா, அவனிடம் பேசுவதற்கு வெகுவாக யோசித்தாள். பாட்டி வீட்டில் அவர்களுடன் சேர்ந்துகொண்டு விளையாடிய ரங்கன் அல்ல இவன். ஆறடிக்கும் கூடுதலான உயரத்துடன், ஆளை அசரடிக்கும் கம்பீரத்துடன், சாதுர்யாவுக்கு உள்ளூர அவனைப் பார்த்தால் நடுக்கம்தான்.போதாத குறைக்கு அவளுக்கு தேர்வு நேரத்து ரிவிஷனுக்கு அவன் அவளது பாட புத்தகங்களுடன் அருகில் அமர ‘இவன் இன்னும் திருந்தலையா ‘என்று மனதில் திட்டிக்கொண்டே பெண் அமர, அவளை புரிந்து கொண்டவன் விடாகண்டன் ஆகிப் போனான்.

சாதுர்யாவின் அம்மாவுக்கு நிம்மதியாக இருந்தது. இந்த விடுப்புக்கு அவளை ஸ்ரீ ரங்கம் அனுப்பிவிட்டு தான் இரண்டு மாதம் கணவருடன் இருக்க முடிவு செய்து கொண்டாள். மகளின் ஏக்கம் புரிகிறது. நிலைமை பற்றி எவ்வாறு மகளுக்கு புரிய வைக்க முடியும்?

ரங்கனின் பத்து நாட்கள் விடுமுறை இருபது நாட்கள் ஆயின.

தன் உடன் இருந்த ரங்கனை அவன் தங்கியிருந்த இருபது நாட்களில், நன்றாக உணர்ந்து கொண்டாள்  சாதுர்யா. இவன் தனது தோழன் தான்… எதுவுமே மாறவில்லை என்று புரிந்துகொண்டவளுக்கோ, ரங்கன் மீது கோவமும் ஆத்திரமும் மிக அது அழுகையை வெளிப்பட்டது. 

அவனிடம் சண்டையிட்டாள் தன்னுடன் ஏன் தொடர்ந்து அலைபேசியில் பேசுவது இல்லை என்று. எனக்கு உடம்பு சரியில்லைன்னு வர தெரியுது. நீயாவது லீவுக்கு இங்கே வந்து இருக்கலாம் இல்ல… என்று அவனை உலுக்கினாள். அவன் எதற்கும் அசரவில்லை.

நீ சின்ன குழந்தை மாதிரி இல்லாம கொஞ்சமாவது வளரணும் சாது. அதுக்கு நம்ம எந்த விதத்திலும் தடையாக இருக்கக் கூடாதுன்னு யோசிச்சேன். என்ன பார்த்தா நீ என்னுடையே இருக்கணும்னு அடம்பிடிப்ப. என்கூட வரேன்னு அழுவே என்று பூசி மெழுகினான். ஆண் காரணங்கள் அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

நிஜத்தில் அவனுக்கும் காரணங்கள் எதுவும் தெரியாது. அவனை வா என்று இதுவரை மாமா வீட்டில் அழைக்கவில்லை. அதனால் அவன் வரவில்லை. இதையெல்லாம் சாதுர்யாவிடம் சொல்ல அவனுக்கு விருப்பம் இல்லை.

அவனது தேர்வுகள் ஆரம்பிக்க இன்னும் பத்து நாட்கள் இருக்க அவன் சென்னை கிளம்பி விட்டான். அவன் கிளம்பும் முன் அழுது அமர்க்களம் செய்து,தான் இன்னும் குழந்தைதான் என்று நிரூபித்தாள் பெண்.

அவனுக்கும் வருத்தம் நெஞ்சை அடைக்க, நான் பரீட்சை முடிஞ்ச உடனே வயலூர் போயிடுவேன் சாது. உன்னால முடியும்னா நீ கெளம்பி வா என்று சொல்லிவிட்டு விமானம் ஏறினான் ரங்கன்.

முன்பு போல் அவனுடன் விளையாட முடியாது. அவன் பெரியவன் ஆகிவிட்டான். நான்தான் இன்னும் சின்ன பொண்ணாகவே  இருக்கிறேன் என்று நினைத்துக் கொண்டாள். ஒரு மனதிற்கு ஒரு சம்மந்த சம்மந்தம் இல்லாமல் அவள் தன் அம்மாவுடன் மருத்துவரைக் காணச் சென்றதும், அவள் அம்மாவின் வருத்தமுமாக நினைவுகள் வந்து போயின. இது எவ்வளவு பெரிய பிரச்சனையா என்று மனதளவில் சோர்ந்து போனாள் சாதுர்யா.

 எல்லாம் நிஜத்தில் பிரச்சினைகளே அல்ல, அவளுக்கு நிறைய வரிசைகட்டி காத்திருக்கிறது. அத்தனையையும் அவள் வென்றாக வேண்டும்.

 இன்னும் ஒரு வாரத்தில் சாதுர்யா ஸ்ரீ ரங்கம் செல்கிறாள்.

நானும் அவளுடன் வந்து உங்களை சந்திக்கிறேன்.

சுகீ.

Click on a star to rate it!

Rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்