
09
அன்றைய நாள் மாலை விஷ்ணு தாமதமாக எழுந்ததால், அன்றைய நாளுக்கான சுற்றுப்பயணத்தை மொத்தமாகத் தடை செய்து, அடுத்த நாளுக்கு மாற்றியிருந்தனர்.
அதில் விஷ்ணுப்ரியாவுக்கு பெரும் சங்கடமாக இருந்தது… தன்னால் தானே இவையெல்லாம் என்ற குற்ற உணர்ச்சியோடே அந்த நாளை ஓட்டியவள், மறுநாள் விரைந்தெழுந்து புறப்பட்டிருந்தாள்.
அனைவருமாக சேர்ந்து புறப்பட, “எங்கங்க போறோம்?” என்று ப்ரீத்தி தன்னவனிடம் கேட்டிருந்தாள்.
காலையிலேயே, ‘இன்னிக்குப் போகப்போற இடம் உனக்கு ஒரு சர்பிரைஸ்’ என்று அவன் கூறியிருக்க, பலமுறை அவனிடம் எங்கே எங்கே என்று கேட்டு அழுத்துப் போனவள், தற்போது அவன் வண்டியில் பொதிகளை ஏற்றும்போது, ஆர்வத்தோடு கேட்டிருந்தாள்.
அவளது தோழிகளும் சட்டென நிமிர்ந்து பார்த்துவிட, ‘அய்யோ கடவுளே’ என்று நினைத்தவள், “அது.. எங்கதான் போறோம்னு எல்லாரையும் கேட்டேன்” என்றாள்.
‘இவ சமாளிக்கிறேன்னுதான் கூட கொஞ்சம் மாட்டிக்கிறா’ என்று நினைத்து சிரித்துக் கொண்ட சுடர், “போனபிறகு பாருங்க கேர்ள்ஸ்.. சர்பிரைஸ்” என்றான்.
அனைவரும் உற்சாக ‘மோடிற்கு’ சென்று ப்ரீத்தியை மறந்தனர்.
எப்போதும் போல் அனைவரும் வண்டியில் ஏறி அமர, வால்பாறை தேயிலைத் தோட்டத்தை அடைந்தனர்.
“வாவ்.. ரொம்ப அழகா இருக்கு சுடரண்ணா” என்று உற்சாகமாய் விஷ்ணு கூற,
“ஈவ்னிங் தான் ஸ்பெஷல் ட்ரீட்டே..” என்று கூறினான்.
தேயிலைத் தோட்டத்தில் நடந்து சென்றவர்களுக்கு அந்த இளங்காலை வேளையில் அத்தனை ரம்மியமாக இருந்தது.
மெல்ல மெல்ல வெய்யில் எட்டிப்பார்க்கத் துவங்கிய நேரமது…
குளிரோடு தனது கரங்களைத் தேய்த்துக் கொண்ட பெண்களில், “ரொம்ப நல்லா இருக்கு சுடரண்ணா” என்று பிரம்மா கூற,
“ஆமா சுடரண்ணா” என்று சுபி மற்றும் விஷ்ணு கோரஸ் போட்டனர்.
அவர்களைப் பார்த்து புன்னகைத்த சுடர், ப்ரீத்தியை நோக்க,
அவளும் மெல்லிய புன்னகையோடு தலையசைத்தாள்.
காலை ப்ரீத்தி பேச்சை மாற்றியதே சுபிக்ஷாவுக்கு வித்தியாசமாய் பட, தற்போது இந்த பார்வை பரிமாற்றமும் அவள் கண்ணில் பட்டது.
‘என்னமோ சரியில்லையே.. ரெண்டும் ஒரு மார்கமா தான் இருக்குதுங்க’ என்று நினைத்த சுபிக்ஷாவை உலுக்கிய பிரம்மா, “ஏ.. அங்க பாரு சுபி.. அந்த வியூ நல்லா இருக்கு” என்று இழுத்துச் சென்றாள்.
அவள் இழுப்புக்கு சுபி செல்ல, விஷ்ணுவும் அவர்களைத் தொடர்ந்தாள்.
பொறுமையாக நடந்துகொண்டிருந்த ப்ரீத்தியும் நகர எத்தனிக்க, அவள் கரம் பற்றி நிறுத்தியிருந்தான் சுடர். திடுக்கிட்டுப்போய் அவள் நோக்க,
“ஷ்ஷ்..” என்றான்.
“ப்ச்.. விடுங்க.. அவங்க திரும்பிப் பார்த்துடப்போறாங்க..” என்று ப்ரீத்தி பதற,
“நீதான் கத்தி அவங்களைக் கூப்பிட்டுடுவ போல” என்றான்.
“ப்ச்..” என்று அவள் கூற,
“ஒரே ஒரு ஃபோட்டோடி.. எவ்ளோ அழகா இருக்கு பாரு இந்த இடம்” என்று கெஞ்சலாய் கேட்டான்.
ஆசை தான் அவளுக்கும்.. ஆனால் ஏனோ பயம் தடா போட்டுத் தடுத்தது.
“ப்ளீஸ்..” என்று அவன் கெஞ்ச, முன்னே சென்ற தோழிகளை ஒரு பார்வை பார்த்துக் கொண்டவள், “சரி.. சீக்கிரம்” என்றாள்.
“ஹப்பா.. கராரான காதலிதான்” என்று நினைத்துக் கொண்டவன், தனது அலைபேசியை எடுத்து அவள் தோளில் கரம் வைக்க,
“ம்ம்..” என்று விழிகள் விரிய அவன் கரம் பார்த்தாள்.
“என்ன ப்ரீத்தி? இடுப்புலயா கை வச்சேன்?” என்று சுடர் கேட்க,
இன்னும் விழி விரித்தவள், “வைப்பீங்க வைப்பீங்க..” என்று கோபமாய் கூறினாள்.
“வைப்பேனே” என்று அவளை இடையோடு அணைத்துக் கொண்டு அவன் புகைப்படம் எடுக்க,
அரண்டுபோய் அவனைப் பார்த்தவள், பட்டென்று அவன் கரம் தட்டிவிட்டு நகர்ந்து நின்றாள்.
முகத்தின் சிவப்பு நாணத்தாலா? கோபத்தாலா என்பதை அவள் மட்டுமே அறிவாள்.
“என்ன பண்றீங்க? இதெல்லாம் எனக்குப் பிடிக்கலை சொல்லிட்டேன்” என்ற அவளது கோபம் அவனுக்கு சிரிப்பைத் தான் கொடுத்தது.
“சும்மா விளையாடினேன் ப்ரீத்தி” என்று அவன் சரண்டர் ஆக,
“ஃபோட்டோவும் வேணாம் ஒரு மண்ணும் வேணாம். இருக்க இடம் கொடுத்தா படுக்கப் பாய் கேட்டாபாங்களாம்” என்று முதல் பாதியை சத்தமாய் கூறி, இரண்டாம் பாதியை முனுமுனுத்தபடி நடந்து சென்றாள்.
பின் எப்போதும் போல் தோழிகள் நால்வரும் வகைதொகையாய் புகைப்படம் எடுக்க,
சுடர், “சாரி ப்ரீத்தி.. சும்மா ஜாலிக்குத்தான்.. சாரி” என்று நேரம் கிடைக்கும்போதெல்லாம் ப்ரீத்தியிடம் மன்னிப்பு வேண்டிக் கொண்டே இருந்தான்.
அனைவரும் தேயிலைத் தோட்டத்தை சுற்றிப் பார்த்துவிட்டு மீண்டும் வண்டியில் ஏற,
சுபிக்ஷா தனது அலைபேசியில் புகைப்படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“ஹே ப்ரீத்தி.. இங்க பாரேன்.. இந்த ஃபோட்டோ அழகா இருக்குல்ல?” என்று அவள் ப்ரீத்தியிடம் கேட்க, வேண்டா வெறுப்பாக வாங்கிப் பார்த்தவள் விழிகள் ஏகத்துக்கும் விரிந்தது.
சுடர் அவளை இடையோடு அணைத்துக் கொண்டு, புகைப்படம் எடுக்க, அவள் அதிர்வாய் அவனைப் பார்க்கும் காட்சி அத்திரையில் படமாய்…
அதைக் கண்டு அதிர்ந்து போனவள், “சு.. சுபி..” என்று தடுமாற,
“ஆமா சுபி. எவ்ளோ நல்லா வந்திருக்கு பாரு. சுடரண்ணா நீயும் பாரேன்” என்று முன்புறம், வண்டியை ஓட்டிக் கொண்டிருந்த விஷ்ணுவுக்கு அருகிலிருந்த இருக்கையில் அமர்ந்திருந்த சுடரிடம் அவள் காட்ட, சுடரும் அதிர்ந்தே போனான்.
“என்ன சுடரண்ணா? குவாலிட்டி பக்காவா?” என்று விஷ்ணு வண்டியை ஓட்டியபடி கேட்க,
“வி..விஷ்ணு..” என்று சுடரும் வார்த்தைகளை மென்று விழுங்கி, ப்ரீத்தியைப் பார்த்தான்.
அவள் முகத்தில் அச்சமும் நாணமும் தாண்டவமாடியது.
“என்ன சுடரண்ணா? பேச்சையே காணும்?” என்று பிரம்மாவும்,
“என்ன ப்ரீத்தி? பேய் அறைஞ்ச மாதிரி இருக்க?” என்று சுபியும் கேட்க,
“அ..அது சுபி.. நான்.. அது..” என்று வெகுவாக தடுமாறினாள்.
மதிய உணவு உண்பதற்காக உணவகத்தை அவர்கள் அடைந்திட, விஷ்ணு வாகனம் தரிக்குமிடத்தில் வண்டியை நிறுத்திவிட்டு இருவரையும் மாறி மாறி பார்த்தாள்.
“அட என்னய்யா? யாராவது ஒருத்தர் பேசுங்க” என்று விஷ்ணு கன்னத்தில் கை வைத்தபடி கூற,
“நானும் ப்ரீத்தியும் விரும்புறோம்” என்று சுடர் கூறினான்.
சட்டென்று அவனை ப்ரீத்தி நிமிர்ந்து பார்க்க,
“எத்தனை மாசமா இது?” என்று பிரம்மா கேட்டாள்.
ப்ரீத்தியை ஆழ்ந்து பார்த்தவன், “ஏழு வருஷமா” என்றதும் பெண்கள் மூவருமே அதிர்ந்தனர்.
“அடப்பாவி.. ஏழு வருஷமாவா? அடியே.. பத்தாங்கிளாஸ் தானே படிச்ச அப்ப?” என்று சுபி கேட்க,
“நாங்க சொல்லிக்கலை எங்க விருப்பத்தை” என்று தன்னவளுக்குப் பரிந்து கொண்டு சுடர் கூறினான்.
“அப்ப சொல்லி எத்தனை வருஷம்?” என்று விஷ்ணு கேட்க,
ப்ரீத்திக்கு என்னவோபோல் ஆனது.
அவள் சட்டென்று எழுந்து வெளியே சென்றுவிட, “ஏ ப்ரீத்தி” என்று சுபி கத்தி அழைத்து, “என்ன அண்ணா? எதுக்கு அவ கோச்சுட்டுப் போறா?” என்று கேட்டாள்.
“நாங்க இன்னும் சொல்லிக்கலை சுபி” என்று சுடர் கூற,
“இன்னுமா?” என்று மூவருமே அதிர்ந்தனர்.
“இந்த கேள்வியால வர்ற எம்பேரெஸ்மென்ட் வேணாம்னு தான் அவ எழுந்துபோனா. ப்ளீஸ் இதைப் பத்தி யாரும் அவகிட்டப் பேசாதீங்க. நாங்க விரும்புறோம்.. அவ்ளோதான்” என்ற சுடரும் எழுந்து ப்ரீத்தியைத் தேடிச் செல்ல,
“என்னடி இவ?” என்று பிரம்மா ஆச்சரியமாய் கேட்டாள்.
“ப்ச்… பிரம்மா. அண்ணாதான் தெளிவா சொல்லுறான்ல? இதுபத்தி எதுவும் கேட்க வேண்டாம். இப்ப நம்ம கேட்டதே தப்போனு தோணுது எனக்கு. அவங்களுக்குள்ள என்னவோ அது அவங்க பெர்சனல். இதை பத்தி அவங்களா பேசுற வரை நாம கேட்க வேணாம்” என்று விஷ்ணு கூற,
மற்றவர்களும் சிறு தலையசைப்பைக் கொடுத்தனர்.
அங்கு கண்கள் கலங்க நின்றிருந்த ப்ரீத்தியிடம், “ப்ச்.. ப்ரீத்தி.. இதுல அழ என்ன இருக்கு?” என்று சுடர் கேட்க,
“ஏழு வருஷமாச்சு. எனக்கு இன்னும் சொல்ல முடியலைல? உ..உங்கள கஷ்டப்படுத்துறேன்ல?” என்று கேட்டாள்.
“ப்ரீத்தி..” என்று அவன் அழைக்க,
“சாரிங்க..” என்று கூறினாள்.
அவளை நோக்கி லேசாய் குனிந்து, அவள் கன்னம் பற்றியவன், “சொன்னாதான் புரியனும்னு இல்லடி. இந்த ப்ரீத்தியோட சின்னச் சின்ன அசைவுகளைக்கூட இந்த சுடரால புரிஞ்சுக்க முடியும். சுடரால மட்டுமே தான் புரிஞ்சுக்க முடியும்” என்று கூறி, கண்ணீரைத் துடைத்துவிட்டான்.
அவனையே அவள் வியப்பாய் பார்க்க,
தங்கைகள் வருவதைக் கண்டவன், “அழுது அவங்கள சங்கடப்படுத்தாதடாமா” என்று அவளை விடுவித்தவன், உணவகம் உள்ளே சென்றான்.
உணவுப் பொழுது அமைதியாய் கடக்க,
மீண்டும் பயணம் தொடர்ந்தது.
“ப்ரீத்தி.. சுடரண்ணா.. சாரி” என்று சுபிக்ஷா கூற,
“எதுக்குடா?” என்று சுடர் கேட்டான்.
“என்ன சொன்னாலும் இது உங்க பர்சனல்… நாங்க டிஸ்டர்ப் பண்ணியிருக்கக்கூடாது” என்று பிரம்மா கூற,
“அப்படியெல்லாம் இல்லைடா. எப்படியிருந்தாலும் என்னிக்கோ ஒருநாள் தெரியப்போறது தானே? அது இன்னிக்கே தெரிஞ்சதா இருக்கட்டும்” என்று சுடர் கூறினான்.
பெண்கள் ப்ரீத்தியை நோக்க, தன் கவலை மறைத்து புன்னகைத்தவள், இடவலமாய் தலையசைத்து அவர்களை அணைத்துக் கொண்டாள்.
“சரி சுடரண்ணா.. இப்போதாவது சொல்லு.. எங்க போறோம்?” என்று சுபி கேட்க,
“மௌன்டெயின் ஜூப் ரைட்” என்று உற்சாகமாய் கூறினான்.
“ஹே.. சுடரண்ணா.. நிஜமாவா? நாங்க லாஸ்ட் டைம் போக இருந்தும் ரொம்ப மழையா இருந்ததுன்னு போக முடியல” என்று பிரம்மா கூற,
“ம்ம்.. அதான் ப்ளான் பண்ணேன். மூணுலருந்து ஆறுமணிக்குள்ள போனா வியூ ரொம்ப நல்லா இருக்கும். அதான்.. அதுக்கு முன்ன ஃபாரெஸ்ட் ஆபிஸர்ஸ்கிட்ட பர்மிஷன் வாங்கணும். ஆல்ரெடி புக் பண்ணிட்டேன். சோ அவங்க அந்த ப்ராஸஸ்லதான் இருப்பாங்க. நாமளும் போய் ஜாயின் பண்ணிட்டு, அங்கருந்து ஜீப் ரைட்ல போறோம். ரிட்டர்ன் வந்து எல்லாம் பேக் பண்ணிட்டு, நைட் டின்னர் முடிச்சுட்டு கிளம்புறோம்” என்று சுடர் கூறினான்.
“யாஹூ..” என்று பெண்கள் கத்த, சுபிக்ஷா ‘ஃபாரெஸ்ட் ஆபிஸர்’ என்ற வார்த்தைகளிலேயே அமைதியாகிப் போனாள்.
‘இதோ இப்ப முடிஞ்சா அவரைப் பார்க்கலாம். அப்புறம் பார்க்க வாய்ப்பே இல்ல.. பிறகு எந்த தைரியத்தில் என்கிட்ட அவர் பதிலைக் கேட்கவே இல்லை?’ என்ற கேள்விதான் இப்போது வரை அவளை வண்டாய் குடைகிறது…
இன்னும் சில மணி நேரத்தில் நிகழப்போகும் அதிர்வால் மீண்டும் அவன் உதவியை நாடிப்போய் நிற்கப் போகின்றோம் என்பதை அவள் தான் பாவம் அறிந்திருக்கவில்லை.
அனைவரும் வனத்துறை நிலையத்தினை அடைய, அங்கே அவர்கள் செல்லவிருக்கும் வாகனத்தின் ஓட்டுனர், வனத்துறை பாதுகாவலரான கருப்பசாமியிடம் பேசிக் கொண்டிருந்தார்.
“உங்களுக்கு தெரியும் அண்ணா ரூல்ஸ் எல்லாம். இப்ப ரீசென்டா அந்த சைட் ரொம்ப பிரச்சினையாகுது. ஜாக்கிரதை. அந்த ஏரியா பக்கம் மட்டும் போக வேண்டாம்” என்று கருப்பசாமி கூறிக் கொண்டிருக்க,
இவர்கள் ஐவரும் வந்தனர்.
“ஹாய் சார்.. நாம அடிக்கடி மீட் பண்ணிக்கிறோம்ல?” என்று சுடர் தன் கரம் நீட்ட,
அவனை எதிர்பாராத கருப்பு, அவனோடு கைக்குலுக்கி விட்டு, அவனுக்குப் பின்னே சுபியைத் தேடினான்.
அவன் விஷ்ணுவைத் தேடுவதாய் நினைத்துக் கொண்ட சுடர், “விஷ்ணு நல்லாருக்கா சார்” என்று கூறினான்.
அதற்கு பதிலாய் சிறு புன்னகையை கொடுத்தவன் முன் சுபிக்ஷா வந்து நிற்க,
அவன் உள்மனம் குத்தாட்டம் போட்டது.
“ஹாவ் எ சேஃப் சஃபாரி. டிரைவர் அண்ணா சொல்ற போல நடந்துக்கிட்டு பாதுகாப்பா போயிட்டு பாதுகாப்பா வாங்க. எதுவும் ஹெல்ப்னா தயங்காம என்னைக் கூப்பிடுங்க” என்று கருப்பு கூற,
“தேங்க்ஸ் சார்” என்று சுடர் கூறினான்.
சுபி அவனை நிமிர்ந்து பார்க்க, அவன் பார்வை நொடிக்கும் குறைவாய் அவள் பார்வையோடு மோதி, புவி கடந்து மண்டலம் கடந்து பால்வெளியைக் கடந்து மீண்டது… அந்த இன்பம் ஒன்றே போதும் என்பதாய் அவன் கண்களில் ஒரு திருப்தி புன்னகை தோன்ற, சுபிக்ஷா தடுமாறித்தான் போனாள்.
“ஓகே சார்.. நாங்க வரோம்” என்று ஐவரும் புறப்பட,
அடுத்த ஒரு மணிநேரத்தில் சுடரிடமிருந்து, “சார்.. மலைவாழ் பகுதியைச் சேர்ந்த யாரோ விஷ்ணுவை அந்தக் காட்டுக்குள்ள தூக்கிட்டுப் போயிட்டாங்க” என்ற பதட்டமான செய்தி கிடைத்து, பதறிக் கொண்டு ஓடினான்.

