
கோபத்தின் நிறத்தை கண்களில் நிரப்பிக் கொண்டு அதன் நெடியை சுவாசித்த படி தனியாக அமர்ந்திருந்தான் இளா.
திகுதிகுவென மேனி எரிய, அவனுக்குள் சீற்றப் புயல் கரை கடக்காமல் உள்ளுக்குள் சுழன்ற படியே இருந்தது.
இந்த நேரத்தில் யாரும் அவனை நெருங்கினால், அவர்களை வார்த்தைகளால் சுழற்றி தூக்கி எறிந்து விடுவான் போலும் அப்படியொரு கோபத்தில் சமையலறையின் பின் வழியே அமைக்கப்பட்டிருந்த சிறு தோட்டத்தில் கையில் அலைபேசியை வைத்து தொடையில் தட்டிய படி அமர்ந்திருந்த அவனால் சற்று முன் நடந்ததை ஜீரணிக்க முடியவில்லை.
‘சிறு பெண் எவ்வளவு துணிச்சல் இருந்தால் இப்படி ஒரு காரியம் செய்கிறாள். அவளுக்கு ஏது இத்தனை துணிச்சல்? பெண் என்பதையே மறந்து விட்டாளா? இல்லை காதல் , மோகம் அவளது அறிவை மழுங்கச் செய்கிறதா? காதல் என்ற பெயரில் அவள் நடந்துக் கொள்ளும் முறையை அவனால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.
அவனும் காதலிக்கிறான் தான், இவ்வாறு அல்லவே !!! அவள் செய்கையில் அவனால் காதலை குற்றம் சொல்லிட முடியுமா? வயது கோளாறில் செய்கிறாள்.
காதல் என்றால் என்ன என்று புரிய வைத்து தெளிய வைக்க வேண்டும். பெற்றவர்கள் பெரியவர்கள் என்று அவளுக்கு அறிவுரை சொல்லி அவளை மாற்ற வேண்டும். அப்படி சொல்ல ஆள் இல்லாமல் தான் அவள் இவ்வாறு நடந்துக் கொள்கிறாள்.
கட்டுக்கடங்காத கோபத்தின் மத்தியிலும் அவள் மீது சிறு கரிசனமும் உண்டானது அவனுக்கு. தாயின்றிப் பணக்காரத் தந்தைக்கு ஒரே மகளாகப் பாசத்தை முழுமையாக அனுபவித்திடாது வளர்ந்தவள் அவள்.
அவளைப் பார்த்துக் கொள்ள ஏராளமான ஆட்கள் உண்டு… எதை அவள் நினைத்தாலும் கையில் கொடுக்கும் தந்தை, ஆனால் அன்பை மட்டும் அலைபேசியிலே பகிர்ந்தார்.
அப்படியே வளர்ந்தவள், பெரியவள் ஆனதும். ஊரில் தனியாக இருக்கும் தன் அன்னையை அவளுக்கு துணையாக அழைத்து வந்தார் வெங்கடராமன். பேத்தி என்ன செய்தாலும் சரியென்று அவளுக்கு ஒத்து ஊதிக் கொண்டு, பேத்திக்கு இணையாகச் சேட்டைகளைச் செய்ய இவர்களுக்கு நடுவே மாட்டிக் கொண்டு இருப்பது இளா தான்.
வெங்கடராமன் வித்யா தம்பதியரின் ஒரே மகள் மித்ரா ! துபாயில் தொழில் செய்து அங்கே வசிக்கின்றனர் .
மித்ரா, சிறு வயதிலே அவளது தாயை இழந்திருக்க, அவளைப் பார்த்துக் கொள்வதெல்லாம் வேலையாட்கள் தான். அவள் வயதிற்கு வந்த பின் தான் வசந்தியை வெங்கட்ராமன் துபாய்க்கு அழைத்து வந்திருந்தார்.
வெங்கட்ராமன் வேலை விஷயமாக ஆறு மாத காலம் வெளியூர் சென்றிருக்க, மித்ரா, வசந்தி மட்டுமே துபாயில் இருக்கின்றனர்.
சிறு பெண் என்று அவன் காட்டிய பாசத்தால் ஈர்க்கப் பட்டு பின் அதுவே வயது கோளாறினால் காதலாக மாறியிருக்க, அவளைத் திருத்த வேண்டிய இடத்தில் இருக்கும் வசந்தியோ பேத்திக்கு ஒத்து ஊத ! வரம்பு மீறி மித்ரா, அவனை அடைய முயற்சி செய்ய நினைக்கிறாள். இளா அவளது தொல்லைகளை தாங்க முடியாமல் இந்தக் காதலால் விபரீதம் ஏதும் நேருமோ என்று பயத்துடன் அஞ்சிக் கொண்டிருக்கிறான்.
சூடு செய்த பாலை மித்ராவின் அறைக்கு எடுத்துச் சென்றான் இளா. அவனை அறைக்கு வர வழைக்கவே பஞ்சு கொண்டு வந்த பாலை மறுத்துவிட்டு கோபமாகச் செல்வது போல அறைக்குள் வந்தாள் மித்ரா.
நிச்சயம் பாலை எடுத்துக் கொண்டு அவன் அறைக்கு வருவானென்று அவளுக்கு தெரியும். வசந்தி அவனைக் கட்டாயம் அனுப்பி வைப்பார். அவர்களது திட்டமும் அது தானே !!!
அவனும் கதவைத் தட்டிக் கொண்டு அறை வாயிலில் நின்றான். அவன் வருகைக்காக
கதவைத் திறந்து தான் வைத்திருந்தாள்.
“எஸ் கம் இன் !”என்ற குரல் வந்ததும் கண்களை மூடி தன்னைச் சமன் செய்து உள்ளே நுழைந்தவன் அவள் நின்ற கோலத்தைக் கண்டு ஆடிப் போனான்.
மார்பிலிருந்து முட்டி வரைப் பெரியத் துண்டைக் கட்டிக் கொண்டு அவனை மயக்க நின்றாள். எல்லா ஆண்களும் பெண்ணை கண்டு மயங்கி விடுபவர்கள் அல்ல ! அவனை அவள் தப்புக் கணக்குப் போட்டு விட்டாள்.
அவளை ஒரு பொருட்டாக மதிக்காமல் பாலை மேசையில் வைத்து விட்டுச் செல்ல இருந்தவனை வேகமாகப் பின்னிருந்து கட்டிக் கொண்டு ஐ லவ் யூ இளா!!! “என்றாள் குழைவாக,
நெஞ்சில் இருந்த அவளது கைகளை விலகி அவள் பக்கம் திரும்பியவன் விட்ட அறையில் மெத்தையில் விழுந்தாள்.
கன்னத்தில் கை வைத்து கலங்கிய கண்களுடன் அவனை ஏறெடுத்துப் பார்த்தாள்.
அரக்கனாக அவள் கண்களுக்குத் தெரிந்தான். பக்கத்திலிருந்த போர்வையை அவள் மீது போர்த்தி விட்டு அவளிடம் குனிந்தவன்,
” நல்ல மாட்டுக்கு ஒரு சூடு!! அது மாதிரி உனக்கு இந்த அறை! இதுக்கு மேலே இது மாதிரி பண்ணிட்டு இருந்த, பொண்ணுனு பார்க்க மாட்டேன் சாவடி அடிச்சிப் புதைச்சிட்டு போயிட்டே இருப்பேன். படிக்கிற வயசுல கண்டதையும் பார்த்து கெட்டு எப்படி வந்து நிக்கிற பாரு !!! காதல்னு உடம்ப காட்டிட்டு வந்து நின்னால் காதல் வராது காமம் தான் வரும். அதுவும் கொஞ்ச காலத்துக்கு தான்… எது காதல்? எது காமம்? தெரியாத வயசுல இருக்க நீ !! உனக்கு என் மேலே வந்தது காதல் இல்ல ஈர்ப்பு ! அது அந்த வயசுல வர்றது தான். அதை ஓரந்தள்ளிட்டு படிக்கற வேலய பார் . உன்னைப் பன்னிரண்டு வயசுல இருந்து பார்த்துட்டு இருக்கேன்… இப்பவும் உன்னை அப்படி தான் பாக்கிறேன். என் பார்வை எப்பவும் மாறாது உன் எண்ணத்தை மாத்திக்க !”என்று அறிவுரை வழங்கி விட்டுச் செல்ல,
அதெல்லாம் அவள் மண்டையில் ஏறினால் தானே ! தன் காதலை ஏற்காது தன்னை அடித்து விட்டு போனதை எண்ணி அவமானமாக உணர்ந்தவள், அவனைப் பழி வாங்க, அவனை தன் வழிக்கு இழுக்க கங்கணம் கட்டிக் கொண்டாள்.
கீழே இறங்கி வந்தவனிடம் ” என்னடா என் பேத்திப் பாலை குடிச்சிட்டாளா?”என்றவரை அவனிருக்கும் கோபத்தில் கொன்று போட்டாலும் ஆச்சர்யம் இல்லை.
“நீயெல்லாம் பெரிய மனுஷி !!! இதுல உன்னைத் துணைக்கு ஊர்ல இருந்து கூட்டிட்டு வந்த அந்தப் பெரிய மனுஷன் சொல்லணும் ! நீ பார்க்கிற வேலைக்குப் பெயர் என்ன தெரியுமா? உன் வயசுக்காகப் பார்க்கிறேன்… இல்ல வகுந்திருப்பேன். பொறுப்பானப் பாட்டியா உன் பேத்திக்கு அறிவுரைச் சொல்லு ! கண்டத்தையும் சொல்லி அவ வாழ்க்கைய அழிச்சிடாத !”என்று நகர்ந்தவனை,
“என் பேத்தி, கிடைக்க குடுத்து வச்சிருக்கணும். சமையக்காரன் பார்க்காம காதலிக்கறா உன்னை. என் பேத்தி மனசு யாருக்குடா வரும்…”என எகத்தாளம் பேச,”அடிங்கு…”என பூஜாடியை தூக்கி அடிக்கச் செல்லப் பயத்தில் பின் வாங்கினார்.
“மண்டைய ஒடச்சிடுவேன் ! நான் சமையல்காரன் உனக்கும் உன் பேத்திக்கும் தெரியும்ல அப்புறம் என்ன மயித்துக்கு காதல்னு வந்து நிக்குறா அவ ! நீயும் அதுக்கு சப்போர்ட்டு! பெரிய மனுஷியா அவளுக்கு சொல்லிப் புரிய வை ! என்னை தொந்தரவு செய்யாதீங்க ! “என்று கத்தி விட்டு விறுவிறுவென சமையலறையைத் தாண்டி தோட்டத்திற்கு வந்து விட்டான் இள நந்தன்.
இருபத்தி ஒன்பது வயதுடைய வாலிபன். தாய் தந்தையின்றி தாய் மாமன் பாராமரிப்பில் வளர்ந்தவன், அவரால் நாடு கடத்தப் பட்டான். துபாய் அமீரகத்தில் ஒரு தமிழ் குடும்பத்திற்கு சமையல்காரனாக வேலைச் செய்கிறான்.
ஹோட்டல் மேனேஜ்மென்ட்டில் கேட்டரிங் கோர்ஸ் மூன்று ஆண்டுகள் படித்த கையோடு துபாய்க்கு வந்தவன் தான். ஒரே வீட்டில் தான் காண்ட்ராக்ட்டில் பல வருடங்களாக வேலைச் செய்கிறான் .
அவனது காண்ட்ராக்ட்டில் குறிப்பிட்ட காலம் தான், இன்னும் மூன்று மாதத்தில் முடிவடைய போகிறது.
ஐந்து வருடங்களாக சொந்தங்கள் இல்லாமல் இந்தியாவிற்குச் செல்ல விருப்பம் இல்லாதவனுக்கு இப்போது விருப்பம் வந்தது. காரணம் அவனது அன்னம்மா தான்.
இரண்டு ஆண்டு நட்பாக தொடர்ந்த உறவை காதலாகப் பார்க்கிறான்.
குறுஞ்செய்தியிலும் அவ்வபோது அழைத்து பேசுவதிலும் அவள் அவனிடம் நட்பை மட்டும் வளர்க்க
அவளிடம் பகிராமல்.. அதனோடு காதலையும் சேர்த்து வளர்க்கிறான்
இந்தியாவில் தான் இனி தன் வாழ்க்கை என்ற தீர்மானத்திற்கு வந்துவிட்டான். போதாத குறையாக காதல் என்று பிதற்றிக் கொண்டிருக்கும் மித்ராவிடம் இருந்து விடுதலை கிடக்க , இந்தியாவிற்குச் செல்ல முடிவாக இருக்கிறான்.
அவனது அலைபேசி அலறியது. சலிப்புடன் திரையை பார்த்தான். அவனது அன்னம்மா தான். கோபமெல்லாம் காணாமல் போய் முகம் கனிந்தது. வேகமாக அவளது அழைப்பை எடுத்துப் பேசாமல் அமைதியாக இருந்தான் .
” ஹலோ “என்றாள். அந்தக் குரல் மொத்த அவனது உடல் சூட்டை தணித்து அவனுள் சீதளத்தைப் பரப்பியது . பதிலுக்கு எதுவும் சொல்லாமல் அவள் குரலை உள்வாங்கிக் கொண்டிருந்தான்.
மீண்டும்” ஹலோ ” என்றாள்.
இந்த முறை அவனிடம் ‘ ம் ‘ என்ற பதில் மட்டுமே வர,
“கோபமா???” என்றாள்.
அவ்வளவு தான், அவன் இருக்கும் நிலையில் அப்படியென்றால் என்ன என்றிருப்பான். ஆனாலும் அவளிடம் கோபத்தை காட்டுகிறானாம்.
” நான் யார் மேடம் உங்களுக்கு? நான் எதுக்கு உங்க மேலே கோபப்படனும்? “என்று தன் கடுப்பை மறைத்து நக்கலுடன் வினவினான்.
“நாலு நாள் பேசாததால சாருக்கு நான் யாருன்றது கூட மறந்து போச்சி. நான் யாருனு சொல்லட்டுமா? கொஞ்சம் ஞாபகம் வருதா பாருங்களே ” என அவன் வார்த்தையை அவனுக்கே திருப்பி விட்டாள்.
புதிதாக பேசும் மழலையின் பேச்சை ரசித்து கேட்கும் தகப்பனைப் போல அவள் பேச்சை ரசனையுடன் கேட்டுக் கொண்டிருந்தான்.. மொத்த கோபத்தையும் பனித் துளியை அள்ளி பருகும் பகலவனை போல ஒற்றை வார்த்தையில் அவனது மொத்த கோபத்தையும் இல்லாமல் செய்து விட்டாளே!!! இனி எங்கே கோபப்படுவது…? அவனுக்குள் இருக்கும் கொஞ்ச ஈகோவும் லேசாக விழித்துக் கொண்டது போல கோபமாக இருப்பதாக காட்டிக் கொண்டிருக்கிறான்.
“கொன்னுடுவேன்! இதெல்லாம் என் வசனம்! நான் கேக்க வேண்டியது…!”என்று பற்களை அரைக்க, இவளுக்கு நன்றாகவே கேட்டது.
“சரி சரி பல்லெல்லாம் அரைச்சி பொடியாக்கிடாத ! பல்லு இல்லாத பொக்கை வாயனுக்கு எவளும் அமையமாட்டா பார்த்துக்க “என வம்பிழுக்க,
“எனக்கு எவளும் அமைய வேணாம்?”என முறுக்கி கொண்டவன் ‘உள்ளுக்குள் நீ தான் வேண்டும் ‘ என்று சொல்லியும் கொண்டான்.
“எவளும் வேணாம்ன்னா சார் தனியாவா இருக்கப் போறீங்க?”
“அது தான் எனக்கு பிரச்சனை இல்லையே? இப்பவும் நான் தனியா தானே இருக்கேன். எனக்கு யார் இருக்கா? என்னை பத்தி அக்கறை பட, என்னை பத்தி நினைக்க யார் இருக்கா? நான் அனாதை தானே !!! “என விழிகள் கலங்கிட, குரல் தழுதழுக்கச் சொன்னான். கேட்ட இவளுக்கும் மனம் பாரமானது
“இப்படிலாம் பேசாத டா !”அவளது குரலும் கமற.
“நான் பேசலைனாலும் அது தானே உண்மை. என்னை பத்தி நினைக்க கூட ஆள் இல்லை. அவங்கவங்களுக்கு அவங்க வேலையும் நெருங்கி சொந்தங்களும் தான் முக்கியம் இந்த அனாதையோட நியாபகலாம் ஏன் வரப் போகுது? விடுங்க நான் ஜஸ்ட் ஆன்லைன் பிரண்ட் ! அவ்வளவு முக்கியமானவன் நான் இல்ல தானே ! இருக்கட்டும், இதுக்கு விளக்கம் குடுத்து சமாளிக்க வேணாம்… உண்மை என்னனு எனக்கே தெரியுமே!!”
“ரொம்ப பேசாத என்ன? நேரத்துக்கு தூக்கம் இல்ல… கல்யாண வேலை கேட்டரிங் வேலை ரெண்டு பக்கமும் வேலை இழுக்க. இதுல சுத்தி சொந்தம், அக்கறைன்ற பேருல மனச நோகடிச்சது தான் மிச்சம்.
சுத்தி எல்லாரும் இருக்க என்னால பேச கூட முடியல ! பொய் சொல்லி உன்னை சமாளிக்க விருப்பமில்லை ! இது தான் உண்மை. உன்னை போல தனியா இருக்கிறது நல்லது தோணுது !”என்று அவள் பட்ட கஷ்டங்களைப் பகிரக் கொஞ்ச கோபமும் இல்லாமல் போனது.
” அக்கறை ! சக்கரைனு வராதபடி நறுக்குன்னு நாலு வார்த்தை பேசி விட வேண்டியது தானே !!”
“ம்… புத்துல இருக்கே ஈசல் அவங்க, கத்திரிச்சி விட முடியாது வந்துட்டே இருப்பாங்க கேட்டுட்டே இருப்பாங்க…! நாம தான் ஒதுங்கிப் போகணும்…” என்றவள்
” சாரிடா ! என்னால பேச முடியல தான், அதுக்காக அனாதை சொல்லாத ! நீ அங்க இருக்கிறதால தான இந்த பேச்சலாம் வாயில வருது ! நீ இந்தியாவிற்கு வா ! உனக்கு என் கேட்ரிங்ல வேலை போட்டு கொடுத்து, உனக்கு கல்யாணமும் பண்ணி வைக்கிறேன்… அப்ப நீ அனாதைனு சொல்ல மாட்டேல!”என்றாள். இவனுக்கு சிரிப்பு வர அடக்கிக் கொண்டான்.
“நான் உனக்கு ஆறுதலுக்கு சொல்லல்ல ! உண்மையா சொல்றேன் இங்க வந்திடு “என்றாள் . அவனை இன்னொரு விபுவாக தான் பார்க்கிறாள்.
“ம் எனக்கும் இங்க இருக்க பிடிக்கல ஜனனி ! எப்படியாவது இந்தியா வந்திடனும் தோணுது !!”என விரக்தியில் சொல்ல,
“என்னாச்சி? உன் குரலே சரியில்லையே”என்றாள் சரியாக கணித்து, பெருமூச்சை விட்டபடி அனைத்தையும் சொல்ல, முகம் சுளித்தாலும் அவனை நினைத்து மனம் நெகிழ்ந்தது.
“அவ்வளவு நல்லவனா நீ?” என ஆச்சரியத்துடன் கேட்டாள்.
“உனக்கு தெரியாதா? இதுவரைக்கும் உன் கிட்ட தப்பா பேசி இருக்கேனா? இல்ல சந்தர்ப்பம் வந்தா இவனும் சராசரி ஆம்பளை தான். இவனுக்கு இன்னும் சந்தர்ப்பம் அமையல நினைச்சிட்டு இருக்கியா?” என்று கேட்க,
“லூசு !! உன்னை சராசரி ஆம்பள நான் நினைக்கல ! அப்படி நினைச்சிருந்தா ! உன்கிட்ட ஒரு வருஷமா பேசிட்டு இருக்க மாட்டேன். இந்நேரம் பிளாக் லிஸ்ட்ல இருந்திருப்ப !”என்று விளக்கம் கொடுக்க, அவனுக்கோ ‘ ஆனா என் காதலைச் சொன்னா, அங்க தான் இருந்திருப்பேன் ‘ என்றெண்ணி கொண்டு எச்சிலை விழுங்கினான்.
“சரி விடு ! “என்றான். அவளும் அமைதியாக இருக்க, “இப்போ நான் என்ன பண்ண போறேன் தெரியல ஜனனி? ஆனா இங்க என்னால இருக்க முடியல இந்தியா வரணும் “என்றான் முடிவாக
“உன் காண்ட்ராக்ட் தான் மூணு மாசத்துல முடிய போகுது சொன்னீல ! அதுக்கு மேலே வேணாம் சொல்லிட்டு வந்திடு !”
“ம்… ஆனா மூணு மாசத்துல எதுவும் நடந்திட்டா, அவ காதலை நான் ஏத்துக்கலன்னு என்னை மாட்டிவிட நினைச்சா ! அவளோ தான் என் உயிரே போயிடும் ஜனனி ! என் பொணம் கூட மிஞ்சாது “என்றான் பயத்தில்
“பச் ! என்ன பேசற நீ? அப்படியெல்லாம் எதுவும் நடக்காது. உனக்கு பயமா இருந்தா ! மித்ரா அப்பா கிட்ட எல்லா உண்மையை சொல்லிடு ! அவ உன்னை பத்தி தவறா சொல்லறது முன்ன நீ முந்திக்கிறது நல்லது எனக்கு தோணுது. அதே நேரம் அவ கிட்ட கோபத்தை காட்டாத ! அதுவே அவளை தூண்டி விடும்… கொஞ்சம் பொறுமையா இரு!”என அறிவுரை வழங்கி அவனுக்கு தைரியம் கொடுத்தாலும் இவளுக்குள்ளும் பயமிருக்க தான் செய்தது. அவசரமாக அவனுக்காக
ஒரு குட்டிப் பிராத்தனை செய்தாள் .
” சரி இருக்கேன். கல்யாணம் நல்ல படிய முடிஞ்சதா? உன் கேட்டரிங் சாப்பாடு எப்படி இருந்தது? வந்தவங்க ரிவ்யூஸ் என்ன?” எனக் கேட்டதும் தாமதிக்காமல் அனைத்தையும் குதூகலத்துடன் சொன்னாள். தனது வயதை மறந்து சிறுபிள்ளைத் தகப்பனிடம் ஒப்பிப்பது போல ஒப்பித்தாள். அவனுக்குள்ளும் அவளது மகிழ்ச்சி தொற்றிக்கொண்டது.
“ம்… குட் ! இன்னும் நிறைய கல்யாண ஆடர்கள் கிடைக்கும் ஜனனி மா !என் கல்யாணத்துக்கு உன் கேட்ரிங் ஆடர் தான் இப்பவே ஃபிக்ஸ் பண்ணிட்டேன் அப்புறம் எனக்கு நீ டேட் இல்ல சொல்லக் கூடாது !”என்றான் கட்டளையாக,
“அதுக்கு முதல்ல நீங்க இந்தியா வரோனும் அப்புறம் பொண்ணா பாக்கனும் கல்யாணம் பேசனோனும்…”என அவனை கேலி செய்ய, இவன் வழிந்தான்.
“செஃப்பே! உண்மையா உனக்கு அந்த பொண்ணை அப்படி பார்த்ததும் பீலிங் வர்லையா? நீ அவ்வளவு நல்லவனா? இல்ல இதுல வீக்கா?”எனக் ரகசியம் கேட்பது போல கேட்க, இவனுக்கு கோபம் சுர்ரென்று வந்தது.
“அடியே அன்னம்மா ! என்ன என்னை கலாய்க்கிறீயா? எல்லா பொண்ணுங்களை எப்படி பார்த்தாலும் எனக்கு பீலிங் வராது எனக்காக பொறந்த என்னவளை சும்மா பார்த்தாலே பீலிங் வரும்… அவ கிட்ட மட்டும் நான் கெட்டவனாவும் இருப்பேன்”என்று மறைமுமாக சொல்ல இவளுக்குப் புரிந்தது.
“இப்படி பட்ட நல்லவனுக்கு ஏத்த பொண்ணுங்க எங்க இருக்காளோ ?”என பெருமூச்சை விட, அவள் காற்றை தனக்குள் வாங்கிக் கொண்டவன் ‘ அது நீ தாண்டி அன்னம்மா ‘ உள்ளுக்குள் சொல்லிக் கொண்டான்.
மேலும் வேறு சில விஷயங்களை பேசி வைத்து விட்டனர். சூடாக இருந்தவனின் மனநிலையை பேச்சால் மாற்றி விட்டாள்.
முறுவலுடன் உள்ளே வந்தவன், வேகமாக வேலைகள் செய்து சுழல ! பஞ்சுவிற்கு நிம்மதியாக இருந்தது.
பஞ்சுவை கொஞ்சிய படியே குதூகலமாக மதிய சமையலை முடித்து சாப்பிட்டு உறங்கியவன், மீண்டும் இரவு சமையலை எளிமையாக முடித்து விட்டு அவளிடம் நிறைய பேச வேண்டும் என்று எண்ணியிருக்க,
அவனது
எண்ணத்தில் மண்ணள்ளி போடும் விதமாக இரவில் ஒரு கூட்டத்தை கூட்டி , அவர்களுக்கு விருந்து சமைக்க சொல்லி கட்டளையிட்டு இருந்தாள் மித்ரா ! அவள் கொடுத்த மெனுவை கண்டு ஆடித்தான் போனான் நம் காதல் நாயகன் . .
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
2
+1
1
+1

