Loading

அத்தியாயம் 24

அடுத்த அரைமணி நேரத்தில் அபியின் பெரிய வீட்டை அடைந்திருந்தனர் அனைவரும். வீட்டின் கேட்டைத் தாண்டி அவர்களது வாகனம் உள்ளே செல்ல, போர்டிகோவிலேயே சாரதா நின்றிருந்தார். 

சாரதாவைக் கண்டதும் முன்னால் அமர்ந்திருந்த சீதாவின் விழிகள் விரிந்தது. எப்படியும் விசயம் கேள்விப்பட்டு சாரதா வருவார் என்று தெரியும். ஆனால் அதிகாலையிலையே வந்து நிற்பார் என்று நினைக்கவில்லை.

சட்டென்று திரும்பி மகனைப் பார்த்தார். அவனோ முகத்தில் எவ்வித உணர்வுகளையும் காட்டாமல் வாகனத்தை அதற்கான இடத்தில் நிறுத்திவிட்டு பின்னால் அமர்ந்திருந்த ஆனந்தியிடம் “பசங்க இரண்டுப் பேரையும் வீட்டுக்குள்ளக் கூட்டிட்டுப் போ…” என்றான் அதட்டலாக..

அபியின் அதட்டல் வதுகையாளுக்கு அத்தனை கோபத்தைக் கொடுத்தது. ‘அதென்ன இவனோட பொண்டாட்டி மாதிரி அதட்டரான்…’ என நினைத்தவள் பல்லைக் கடித்தப்படி ஆடவனைப் பார்த்தாள். 

அவனோ காரிகையின் முறைப்பை பொருட்படுத்தாமல் இளையவர்கள் இருவரையும் பார்த்துக் கொள் என்பதைப் போல் கண் காட்ட பத்திக் கொண்டு வந்தது ஆனந்திக்கு. 

மறவோனின் பார்வைக்கு பதில் பார்வைப் பார்க்காது வாகனத்தை விட்டு கீழ் இறங்கினாள். அவளைத் தொடர்ந்து பிள்ளைகளும் இறங்க, அவர்களோடு இணைந்து நடந்தாள். 

வீட்டின் போர்டிக்கோவில் ஐம்பது வயது மதிப்புள்ள ஒரு பெண்மணி பெப்பர் அண்ட் சால்ட் லூக்கில் முகம் இறுக நின்றிருந்தார். அவரின் கண்களில் கோபமும், அலட்சியமும் தாண்டவமாடியது. அவரைக் கேள்வியாய் பார்த்தாள் ஆனந்தி. நுண்ணிடையாளின் கேள்விக்கு பதில் கூறும் விதமாக சிறுவர்கள் இருவருமே ‘அம்மாச்சி…’ எனக் கத்தியப்படி சாரதாவை நோக்கி ஓடினர்.

அவர்களின் ‘அம்மாச்சி…’ என்ற விளிப்பில் தான் அவர் யாரென்று தெரிந்தது ஆனந்திக்கு .

கண்கள் இரண்டும் தன்னிச்சையாக விரிந்து கொள்ள சாரதாவை பார்த்தாள். அபி, அனிதாவின் காதல் கதையைக் கேட்டதிலிருந்தே சாரதாவை பார்க்க வேண்டுமென்ற ஆவல் அவளுக்கு…

தற்போது அவரைக் கண்டதும் அதை முகத்தில் காட்டியபடி அவரை நோக்கி நடந்தாள். பிள்ளைகளுடன் பேசியபடி நின்றிருந்த சாரதா, ஆனந்தியை அழுத்தமாக ஒரு பார்வைப் பார்த்தார். அவரது பார்வையும் பிள்ளைகளை பிடித்திருந்த விதமும் தவறாகப் பட்டது இளையாளுக்கு. 

பாவையின் எண்ணம் சரியென்பதை போல இளையவர்கள் இருவரிடமும் “வாங்க போலாம்…” என்றார் சாரதா.

அவரது பேச்சில் ஆனந்தியும் சீதாவும் அதிர்ந்து நின்றனர்…

அந்த அதிர்விலிருந்து முதலில் வெளி வந்தது என்னவோ சீதா தான். அவசரமாக சாரதாவை நெருங்கியவர் “அண்ணி எதுவா இருந்தாலும் பேசிக்கலாம். நீங்க கொஞ்சம் பொறுமையா இருங்க…” என்றார் சமாதான குரலில். சீதாவிற்கு சாரதாவின் முன் கோபம் தெரியும் என்பதால் தன்மையாகவே பேசினார்.  

ஆனால் சாரதாவோ சீதாவின் பேச்சைத் துளியும் காதில் வாங்கிக் கொள்ளாமல் பிள்ளைகளின் கைகளை இன்னும் இறுக்கமாக பிடித்தபடி முன்னே நடக்க, ஆனந்தியின் கண்கள் அவசரமாக அபியைத் தேடியது. 

அதற்குள் அபியும் அவ்விடம் வந்திருக்க “என் பிள்ளைகளை எங்க கூட்டிட்டு போறீங்க…” முகம் இறுக கேட்டான். 

“கடந்த மூனு வருசமா எங்க இருந்தாங்களோ அங்க தான்..” என்றார் காரம் குறையாமல்.

மாமியாரின் பேச்சில் அபியின் முகம் மேலும் இறுகியது. மூன்று வருடங்களாக பிள்ளைகளை விட்டு இருக்க காரணமே அவரின் வார்த்தைகள் தானே. அன்றைய வார்த்தைகள் இப்பொழுதும் காதில் கேட்டது அவனுக்கு…அன்றைய நாளின் தாக்கத்தை குறைக்க முடியாமல் ஒவ்வொரு விரலாக சொடக்கெடுத்தான்.

ஆடவனது இறுகிய முகத்தை ஏளனமாக பார்த்தவர் “சும்மாவே என் பேர பசங்களை நீ கண்டுக்க மாட்ட…இப்ப புதுசா கல்யாணம் வேற ஆயிருக்கு சொல்லவா வேணும். புது பொண்டாட்டி கூட கொஞ்சிக் கூத்தாடவே உனக்கு நேரம் சரியா இருக்கும். இனி, என் மகளோட பிள்ளைங்க உன் கண்ணுக்கு தெரிவாங்காளோ இல்லையோ?…” என்றார்.

அவரின் வார்த்தைகள் மறவோனை மேலும் சூடேற்றியது. அதே சமயம் பிள்ளைகளின் முன் இதனை பேச வேண்டுமா என்றிருந்தது அபிக்கு. கேசத்தை அழுத்திக் கோதிக் கொண்டே தன் மாமியாரை அழுத்தமாக பார்த்தான்.

அவனது பார்வையில் சாரதாவின் இதழ்கள் ஏளனமாக வளைய இளையவர்களிடம் திரும்பி 

“நம்ம போலாமா…” எனக் கேட்டவர் முன்னால் நடந்தார். 

“சரி கூட்டிட்டு போங்க… அதுக்கு அப்பறம் என் பிள்ளைகளை எப்படி என்கிட்ட கொண்டு வரணும்னு எனக்கு தெரியும்…” அழுத்தமாக கூறியவன் பெரியவளின் பதிலைத் கூடக் கேட்காது அங்கிருந்து நகர்ந்திருந்தான். 

அபியை முகம் இறுக பார்த்தார் சாரதா. இளையவர்களை அவனிடம் வைத்துக் கொள்ள எந்த எல்லைக்கும் போவான் என்று அறிந்தவர் அல்லவா… இருந்தும் ‘தான் இன்னும் உயிருடன் இருக்க பிள்ளைகளை சித்திக் கொடுமையை அனுபவியென்று விட்டு செல்வதா? என்ற எண்ணம் அவருக்கு. 

நேற்றைய செய்தியை கேட்டதிலிருந்தே ஆனந்தியின் மீது துளியும் நன்மதிப்பு இல்லை சாரதாவிற்கு. அதனாலயே என்ன வந்தாலும் ஒரு கைப் பார்த்துக் கொள்வோம் என்று நினைத்தார்.

அக்கணம் “குட்டிமா, தம்பிக்கு உடம்பு சரியில்லைல அவனை ரூமுக்கு கூட்டிட்டு போ…” குந்தவியிடம் கூறினார் சீதா.  

சீதாவின் குரலில் இதுவரை பெரியவர்களின் முகத்தையே புரிந்தும் புரியாமல் வேடிக்கைப் பார்த்தபடி நின்ற குந்தவி பக்கவாட்டில் நின்ற சாரதாவையும், எதிரில் நின்ற சீதாவையும் மாறி மாறி பார்த்துவிட்டு ஆனந்தியை பார்த்தாள்.  

இத்தனை நேரம் நடப்பதை அமைதியாக பார்த்தபடி நின்றிருந்த ஆனந்தி இளையவளின் குழப்பம் நிறைந்த பார்வையில் தன்னிலைக்கு வந்தாள். சின்னவளின் பார்வையில் தெரிந்த குழப்பமும், யோசனையும் சாரதாவின் அழுத்தமான பார்வையும் மீறி ஆனந்தியை சின்னவளிடம் நெருங்க வைத்தது.

நேராக பிள்ளையிடம் சென்றவள் “என்னடா?…” என்று இளையவளின் கேசத்தைக் கோதிவிட்டு சோழாவிடம் திரும்பி “தம்பி, டிரஸ் எல்லாம் ஒரே டேர்ட்டியா இருக்கு நம்ம போயி டிரஸ் செஞ்ச் பண்ணலாமா?…” எனக் கேட்டாள் மெல்லிய குரலில். 

சற்றே யோசித்தவன் சரியென்று தலையாட்டி ஆனந்தியின் கையை பற்றினான். அச்சமயம் சாரதாவின் கைகள் தன்னாலயே பிள்ளைகளின் கைகளை விட்டது.  

சாரதா பிள்ளைகளின் கைகளை விட்டதும் நிமிர்ந்து பெரியவளை ஒரு பார்வைப் பார்த்தவள் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு வீட்டினுள் நுழைந்தாள்.

சாரதாவின் பார்வை முழுவதும் இளையவர்களின் கையைப் பற்றியபடி வீட்டினுள் அழைத்து செல்லும் ஆனந்தியின் மீது தான் விழுந்தது…

சொல்லப்போனால் நேற்று இரவு ஊடங்களில் பிரபல தொழிதிபரின் மறுபக்கம் என்று இருவரின் புகைப்படத்தை பலவாறு பலக் கோணத்தில் காட்டி இருந்தார்கள். அக்கணத்தில் இருந்தே ஆனந்தியை சாரதாவிற்கு பிடிக்கவில்லை… 

‘யோகியனுக்கு இருட்டுல என்ன வேலை…’ என்பதைப் போல் தான் நினைத்தார். 

சற்று முன் வரையிலுமே அந்த எண்ணம் தான் மனதில் ஓடியது… ஆனால் தற்பொழுது அவள் பிள்ளைகளிடம் பேசிய விதம், நடந்து கொண்ட முறை, பிள்ளைகள் இருவரும் அவளிடம் ஒட்டிக் கொண்டதென்று அனைத்தும் அவள் மேல் அவர் வைத்திருந்த எண்ணத்தை கொஞ்சமே மாற்றியது.

“நீங்க நினைக்கிறளவுக்கு எதுவும் நடக்காது அண்ணி, ஆனந்தி அப்படியான பொண்ணு இல்லை… நீங்க தைரியமா இருக்கலாம். அதையும் மீறி ஏதாவது தப்பா நடக்க நான் விடுவானா அண்ணி. நான் என் பேர பசங்களை பார்த்துக்க மாட்டேனா? ஆனால் எனக்கோ, இல்லை உங்களுக்கோ ஆனந்தி அப்படியான சூழ்நிலையை தர மாட்டாள் அண்ணி…” சாரதாவின் பார்வையை தொடர்ந்தப்படி கூறினார் சீதா. 

சீதாவின் குரலில் இருந்த நம்பிக்கை சாரதாவின் மனதை சற்றே மட்டுப் படுத்தியது. கண்களை இறுக மூடித் திறந்தவர் அதற்கு மேல் அவ்விடத்தில் நிற்க பிடிக்காமல் வாசலை நோக்கி நடந்தார். 

“அண்ணி, ஒரு இரண்டு நாளைக்கு இருந்துட்டு போகலாம் தானே…” அவர் செல்கிறாரே என்ற படபடப்பில் கேட்டார் சீதா. 

“என் புள்ளை இறந்ததும் இந்த வீட்டுல இருக்கிற உரிமை போயிடுச்சு அண்ணி. நான் என் பேரன், பேத்திக்காக மட்டும் தான் இங்க வந்தேன்…” என்றவர் வேக நடையோடு அவ்விடத்தை விட்டு சென்றிருந்தார்.. 

*******

இங்கு தன் அறைக்குள் நுழைந்தவனின் மனம் முழுவதும் ரணமாய் வலித்தது.

சுவரில் சித்திரமாய் சிரித்துக் கொண்டிருந்த மனைவியின் வதனத்தை கைகள் நடுங்க வருடினான். அவனையும் மீறி கண்களிலிருந்து ஒரு சொட்டு நீர் கிழே விழுந்தது. மனம் அத்தனைப் பாரமாய் இருந்தது. நடந்த அனைத்தும் கெட்ட கனவாக இருக்க கூடாதா என்று நினைத்தான். 

நடந்த எதுவும் கனவல்ல என்பது போல் மறவோனின் கண்களில் வழிந்த கண்ணீரின் சூடும்,ஈரமும், உணர்த்தியது. கண்களை அழுந்த துடைத்து விட்டு மீண்டும் மனைவியின் புகைப்படத்தை வருட போக, ஆனந்தியின் உருவம் அதில்…

சட்டென கைகளை இழுத்து கொண்டவன் பின்னால் திரும்பி கோபமாக பார்த்தான். தீடிர் திருமணத்தின் விளைவா? இல்லை, அன்னையின் மீதிருந்த கோபத்தின் விளைவா? இல்லை சாரதா பேசிய பேச்சின் விளைவா? ஏதோ ஒன்று அவன் கண்களை இரத்த நிறத்தில் காட்டியது… 

“பிளடி பிச்…நீ எதுக்கு இங்க வந்த…” என்ற வார்த்தையுடனே ஆனந்தியை நெருங்கினான் அபி… 

“அபியின் பிச்…” என்ற வார்த்தையில் முன்பிருந்த கோபம் தலைத்தூக்க, ஆடவன் அவளை நெருங்கிய அடுத்த கணம் இடியாய் இறங்கியது அவள் அடித்த அடி… 

நிமிடம் திகைத்து விழித்தவன் “ஏய்…” என்று மங்கையின் கழுத்தை பற்றினான். அவளை கொன்று புதைத்து விடும் வேகம் அவனுள். ஒருவார்த்தை அவளிடம் பேசவில்லை ஆனால் கைகளின் இறுக்கம் கூடிக் கொண்டே இருந்தது.. 

மாயோனின் கைகள் தந்த இறுக்கம் மங்கையின் நயனங்களில் கண்ணீரைக் கொடுத்தது… பட்டென ஒரு சொட்டு நீர் அபியின் கைகளில் பட்டுத் தெறித்தது. ஆனந்தியின் கண்ணீர் அவனை சுட்டதோ என்னவோ பட்டென அவளை விட்டவன் “என்னை, பிளான் பண்ணி கல்யாணம் செஞ்சதுக்கு நீயும், உன் குடும்பமும் கண்டிப்பா அனுபவிப்பீங்க…” என்றவன் அங்கிருந்து நகர இருமலுடன் அவளின் குரல்… 

“பிளான் பண்ணி கல்யாணம் பண்ணிக்கற அளவுக்கு நீங்க ஒன்னும் புது ஆள் இல்லை. ஆல்ரெடி ஒருத்தியோட நகமும், சதையுமா இருந்தவர் தான் நீங்க…அப்படியான உங்களை நான் கல்யாணம் பண்ண நினைப்பேனா?..” என்றதும் வெடுக்கென திரும்பி ஆனந்தியை பார்த்தான். 

“என்ன பாக்குறிங்க? நான் சொல்றது புரியலையா? நல்லா கேட்டுக்கோங்க இந்த கல்யாணம்,இந்த தாலி இதை கட்டின நீங்கன்னு எதுவுமே எனக்கு பிடிக்கலை. உங்களை மாதிரி செகண்ட் ஹேண்டடை கல்யாணம் பண்ணிக்க நான் ஒன்னும் காத்துக்கிட்டு கிடைக்கலை. சொல்லப்போனால் நீங்க தொட்டு தாலி கட்டும் போது ஏதோ சேறு என் மேல தெரிச்ச மாதிரி அருவருப்பா தான் இருந்தது…” என்று மூச்சு வாங்கி கத்தினாள் ஆனந்தி… 

அவளது சேறு என்ற வார்த்தை அபிக்கு அத்தனைக் கோபத்தை கொடுத்தது

“ஏய் யாரை பத்திப் பேசுறன்னு நியாபகம் வைச்சிக்கிட்டு பேசுடி…” அவன் கையே ஓங்கிக்கெண்டு முன்னால் வர.. அவன் கையை அனவசியமாக தட்டி விட்டவள் “என்ன எரியுதா உண்மையை தான் சொல்றான்…” என்றாள் இன்னும் மலையிறங்காமல்

“இப்படி முன் கோபியா, முன்னாடி இருக்கறவங்க என்ன சொல்வராங்கன்னு கூட புரிஞ்சுக்காம கண்டப்படி பேசுற உங்களையெல்லாம் எந்த பொண்ணும் விரும்ப மாட்டா….” கத்தியவள் மறவோனின் அனல் பார்வையை துளியும் கண்டுகொள்ளாமல்

“எதிர்ல இருக்கிற ஆளை மதிச்சி பேச தெரியல, இவனுக்கெல்லாம் இரண்டாம் கல்யாணம் பண்ணலன்னு யார் அழுதாங்க… இவனைக் கட்டிக்க தவம் இருந்தா மாதிரி பேசுறான். இதுல இவனை கல்யாணம் பண்ண பிளான் பண்ணோம் வேற சொல்றான்…” என அபிக்கு கேட்கும் அளவிற்கு முனகல் அவளிடத்தில்.

கேசத்தை அழுத்தி கோதி கொண்டவணுக்கு அத்தனை கோபம்.. அவளின் வார்த்தைகள் ரீங்காரம் போல் காதில் கேட்டுக் கொண்டே இருந்தது. 

‘நீ தொட்டு தாலி கட்டும் போது ஏதோ சேறு என் மேல தெரிச்ச மாதிரி அருவருப்பா தான் இருந்தது…’ என்ற வார்த்தைகள் மீண்டும் மீண்டும் கேட்டது.. நொடி பொழுதெனும் அவ்விடத்தில் இருந்தால் ஏதாவது அவளை செய்து விடுவோம் என எண்ணியவனாய் அவ்வறையை விட்டு வெளியேறினான்..

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 18

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
17
+1
1
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்