Loading

அந்த அழகான காலை வேளையில்  தன் கனவு , ஆசை , லட்சியம் என அனைத்தும் ஒன்றாகி நிமிர்ந்து நிற்கும் கட்டிடத்தை கர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் துருவன்.

இன்னும் திறக்கப்படாத நிலையில் அவனது  கன்ஸ்டரக்ஷன் கம்பெனி பிரம்மாண்ட அலங்காரத்துடன் அந்த விழாவின் முக்கிய அங்கமாக நின்றது.

அதை திறக்க வீரமதியும் ராதாவும் முன்னே நின்றிருந்தனர். அவர்களை  சுற்றி அவர்களது குடும்பத்தாரும் துருவனின் நண்பர்களும் அவர்களது குடும்பத்தாரும் சில நண்பர்களும் அங்குப் பணிபுரிய காத்திருக்கும் அலுவலர்களும் ஜெஸியும் அவளது டீமும் கூடி இருந்தனர்.

நல்ல நேரத்தில் அலங்கரிக்கப்பட்ட கத்திரியை எடுத்து வீரமதியிடமும் ராதாவிடமும் கொடுத்தான் துருவன்.

அதனை வாங்கிக் கொண்டு இருவரும் மகனை மனதில்  ஆசிர்வதித்து அவன் மென்மேலும் வளர வேண்டும் என்று பிராத்தனையுடன் ரிப்பனை வெட்டி திறந்து வைத்து உள்ளே  சென்றனர். அவர்களை தொடர்ந்து அனைவரும் உள்ளே  வந்தனர்.

மகனின் கலைத்திறனைக் கண்டு வியந்து போனார் வீரமதி. கம்பெனியின் உள்தோற்றமும் வெளித் தோற்றமும் பார்ப்பவர்களையும் அங்கு வருபவர்களையும்  கவரும் வண்ணம்  அவன் அலங்கரித்த விதமும் அனைவரையும்  ஈர்க்க,  இளைய மகனை பற்றிய பயம்  அகன்றது வீரமதிக்கு.

சிறு அறையில் பூஜைக்கு வேண்டிய அனைத்தும் பொருட்களும் கடவுளின் புகைப்படமும் நேர்த்தியாக வைத்து ஐயர் பூஜைக்கு தயாராகிக் கொண்டிருக்க அனைவரும் அங்கு கூடினார்கள்.

வீரமதி , ராதா, ருத்ரன் துருவன் , நிக்கிதா, நிதின், லோகிதா , லோகித், அஜய், ரிஷி, வித்யாசாகர்,  அஜித் அவனை தொடர்ந்து அவர்களது குடும்பத்தாரும் , அலுவலக பணியாளர்கள் என வரிசையாக நின்றனர். அவர்களை தாண்டி கடைக் கோடியில்  ஜெஸியும் அவனது டீம் நின்றிருந்தனர்.

“இதுல ஐந்து  முகம் இருக்கு வீட்ல இருக்க, பெண்கள் , பெரியவா முக்கியமானவான்னு  ஓவ்வொருத்தரா வந்து ஏத்த சொல்லுங்கோ !”என்று துருவனை பார்த்து சொல்ல,

“துருவா ! நீயும் உன் பிரண்ட்ஸ் போய் ஏத்துங்க…”என்றார் வீரமதி.

“இல்லம்மா நீங்க, இராதாம்மா, அண்ணி, லோகிதா ஏத்துங்க… நீங்க தான் பெரியவா, பெண்கள், முக்கியமானவ !”என்று அவரை போல சொல்லிக் காட்ட, சிரித்துக் கொண்டே  வீரமதி முன் சென்று விளக்கின் ஒரு முகத்தை  ஏத்த, அவரை தொடர்ந்து ராதா, நிக்கிதா, லோகிதா வந்து ஏற்றினார்கள். இன்னும் ஒரு முக விளக்கு ஏற்றாமல் இருக்க, “இன்னும் ஒரு முக விளக்கு இருக்கு வேற யாரும் இருந்தால்  வந்து ஏத்த சொல்லுங்க…”என்றார் ஐயர்.

“துருவா ! நீயே போய் ஏத்து, இல்ல உன் அண்ணனை ஏத்த சொல்லு !”ரிஷி அவன் காதை கடிக்க… ” இரு டா…!”என்று அவன் கண்கள் யாரையோ தேடின, அவன்  தேடுவதை கண்டு குழப்பத்துடன்  பார்த்தனர் அவனது குடும்பம்.

“யாரை தேடுற துருவா?” ராதா கேட்டிட, “சொல்றேன் ராதாம்மா !”என்று மீண்டும் தேட, ஒரு மூலையில் நின்றிருந்த ஜெஸி அவன் கண்ணில் சிக்கினாள்.

அவனுக்கு அவள் நின்றிருந்த இடம் கோபத்தை தந்தாலும் காட்டும் நேரம் இதுவல்லவே என்று எண்ணிக் கொண்டு, கூட்டத்தினுள் நுழைந்து, ஜெஸியின் இடத்திற்கு வந்தான்.

“இங்க ஏன் நிக்கற?”என்று அவள் அருகே வந்தான் துருவன்.

“நான் பாடிகார்ட் இங்க தான நிற்கணும்…!”

“நீ இவங்க எல்லாருக்கும் பாடிகார்ட் இல்ல. எனக்கு மட்டும் தான் பாடிகார்ட் சோ நீ என் பின்னாடி தான் நிற்கணும் எல்லார் பின்னாடியும் இல்ல..

மோரோவர் நீ எனக்கு இப்போ பாடிகார்ட் இல்ல பிரண்ட்… சோ பிரண்டா வந்து விளக்கை ஏத்து !”என்றான்.

“வாட் நானா ?இல்ல நீ வேற யாரையாவது ஏத்த சொல்லு !”என்று தயங்கினாள்.

ஐயர் “நாழியாகிறது சீக்கிரம் வாங்கோ !”என்று குரல் கொடுக்க,

“பாரு ! நேரம் ஆகுது சீக்கிரம் வா !”என்று பறந்தான்.

“நான் எதுக்கு துருவா?! அண்ட் நான்  ஒரு விதவை நான் எப்படி இந்த மாதிரி ஃப்ங்ஷன்ல முன்னாடி நிற்கறது? வேற யாரையாவது ஏத்த சொல்லு !”

“எனக்கு இந்த பஞ்சாங்கம், பிளா பிளா ஸ்டுபிட் திங்கஸ் சுத்தமா பிடிக்காது. உண்மையிலேயே நீ என்னை பிரண்டா  நினைச்சா, நான் நல்லா வரணும் நினைச்சா, வா ! இல்லைனா. உன் இஷ்டம் “என்றிட,  அதற்கு அவளால் எதுவும் சொல்ல முடியவில்லை அவனுடன் பின்னால் வந்தாள்.

அவளிடம் மெழுவர்த்தியை கொடுக்க, அவளும் வீரமதியையும் அவனது குடும்பத்தையும் தயக்கத்துடன் பார்த்து விட்டு விளக்கை ஏற்றினாள்.

முதலில் கைத்தட்டியது என்னவோ ரிஷி தான். அதன் பின் அனைவரும் கையை தட்ட, விளக்கை ஏற்றி விட்டு நகர இருந்தவளை தன்னுடன் நிறுத்தி வைத்தான்.

வீரமதிக்கும் மகனின் செயல் விசித்திரமாக இருந்தது.  அவளுடன் ஏட்டிக்கு போட்டியாக நிற்பவன் , இன்று அவளுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க காரணம் என்ன என்று அவர் யோசிக்க, குடும்பமும் அதே யோசனையில் தான் இருந்தது.

ருத்ரன் துருவன் காதை கடிக்க அருகே  வந்தான்.”என்னடா இது? ரெண்டு பேரும் ராசி ஆகிட்டீங்க போல !  அவளை பிடிக்காது சொன்ன, இப்போ என்ன  அவளை விளக்கு ஏத்த விட்டிருக்க என்ன டா என்ன?”

“அதுவா, அம்மா, ராதாம்மா எல்லாரும் ,  எனக்கு நல்லது செய்றவங்க, என்னை இத்தனை நாள் பத்திரமா பார்த்து என்னை வளர்த்து நல்ல நிலமைக்கு கொண்டு வந்தவங்க அவங்க வரிசையில் ஜெஸிய வர வைக்க காரணம் அவங்க சின்ன வயசில என்னை பாதுக்காதது போல , இந்த வயசுல என்னை உயிரை கொடுத்து பாதுக்காக்குறா ! அதுக்கு தகுந்த  மரியாதை இப்போ நான் கொடுக்கிறேன் அவ்வளவு தான்”என்றான்.

“அவ்வளவு தானா?” சந்தேகமாக கேட்க, “அவ்வளவு தான்”என்று பல்லை கடித்துக் கொண்டு சொன்னதும் ருத்ரனின் வாய் கப் சிப் என்று மூடியது.

இதை கேட்டுக் கொண்டிருந்த ஜெஸிக்கு உள்ளுக்குள் பெருமிதமாக இருந்தது. ஐயர் பூஜையை ஆரம்பித்து, தீப ஆராதனை காட்டி முடித்து வைத்து விட்டு  அனைவருக்கும் காட்ட, அவர்களும் தொட்டு வணங்கி கொண்டனர்.

பூஜை முடிய அனைவருக்கும் ஜுஸ் வழங்கப் பட்டது, எடுத்து பருகினார்கள். ஜெஸியும் தான்.

அவள் அருகே வந்த தன்யா,”என்ன மேம் துருவ் சார் திருந்திட்டார் போல… உங்களை நிஜமாவே பிரண்டா தான் நினைக்கிறாரா ?”

“அவன் திறந்திட்டான் தான் எனக்கு தோணுது தன்யா ! அவன் கிட்ட நிறைய மாற்றங்கள் இருக்கு! இப்படியே இருந்தா சரி… அவன் என்ன செய்தாலும் எதிர் கொள்ள நாம தயாராதான இருக்கோம் பார்த்துக்கலாம் எது நடந்தாலும் !”என்றாள் சிரித்துக் கொண்டே,

முதலில் வீரமதியும் அவனது குடும்பத்தார்களை நண்பர்களின் குடும்பத்தார்களையும்  பந்தியில் அமர்த்தி கவனிக்க, பின் ஜெஸியையும் அவனது டீம்மையும் கவனிக்க, ஜெஸியை துருவன் கவனிக்கும் விதத்தை  நெருடலுடன் பார்த்திருந்தார் வீரமதி. அவருக்கு ஏனோ அவர்களது உறவு தவறாக பட்டது… முதல் முதலாக தான் எடுத்த முடிவு தவறானதா என்று யோசிக்க ஆரம்பித்தார் வீரமதி.

துருவன் செய்த செயலில் வீரமதிக்கு சிறு நெருடலும் வீட்டினருக்கு பெரும் குழப்பமும் ஏற்பட்டிருக்க, அதை அறியாத துருவனோ, அடுத்தடுத்து வந்த சில முக்கிய பிரமுகர்களை வரவேற்று கவனிக்க தொடங்கினான்.

வந்த வி. ஐ. பி களையும் வீரமதியையும்  அமர்த்தி விருந்து பரிமாறினார்கள் துருவனும் அவனது நண்பர்களும்… பின் தங்கள் குடும்பங்களை அமர்த்தி பரிமாற, அதில் ஜெஸி அவனது டீம்மையும் அமரச் சொன்னார்கள்…

அவர்கள் சற்று தயங்க…”ஹலோ எனக்கு பாடிகார்ட்ஸ் தான் நான் இல்லைன்னு  சொல்லல… அதுக்காக நீங்க வர்கர்ஸ் கூட உட்கார்ந்து சாப்பிடணும் இல்ல… நீங்களும் என் பேமிலி மேம்பர்ஸ் தான்… உட்கார்ந்து சாப்பிடுங்க ப்ளீஸ் “என்று இறஞ்சினான்.

அவர்கள் நால்வரும் ஜெஸியை பார்க்க, கண் அசைவில் அமர சொன்னாள். அவர்கள் அமர்ந்தாலும் சந்தேகத்துடன் பார்த்தனர் அவனை.

“என்ன மேடம், ஒருவேளை உட்கார வச்சி சோறு போட்டு அசிங்க படுத்துவானோ !”என்று ஶ்ரீ ஜெஸியிடம் சொல்ல,

“ப்ச் ஶ்ரீ! என்ன இது? அவன் மாறிட்டான் ஶ்ரீ, அவன் அப்படி பண்ண மாட்டான். அப்படி உனக்கு நம்பிக்கை இல்லைனாலும் அவங்க பக்கத்துல இருக்கும் போது அதை அவங்க முன்னாடி வெளிப்படையா காட்டக் கூடாது. அப்புறம் வித்தியாசம் ஒன்னும் இல்லாம போயிடும்…!”என்று அறிவுரை சொல்ல “சாரி மேம்”என்றான்.

ஶ்ரீ நினைத்ததற்கு மாறாக அவர்களை பார்த்து பார்த்து கவனித்தான் துருவன். வீட்டினரே இவன் நம் துருவனா என்ற பார்த்தனர்.

அனைவரிடம் கேட்டு கேட்டு பரிமாறினாலும்,

அவனது பார்வை எல்லாம் ஜெஸியின் மீது தான் இருந்தது.

“அசோக் ! இந்த பன் அல்லவா நல்லா இருக்குல்ல இன்னும் கொஞ்சம் கேட்போமா?”என தன்யா  கேட்க,

“ம்.. வேணும்… இரு நான் கூப்பிட்றேன் ” என யாரை அழைக்கலாம் என்று பார்த்துக் கொண்டவன் ரிஷியை கண்டதும் ‘ ரிஷி ‘ என்று அழைக்க அவன் காதில் விழ வில்லை.

மீண்டும் மீண்டும் அழைக்க, யார் காதிலும் விழாது போக, “இருடா” என்ற தன்யா “ரிஷி ப்ரோ !”என கத்த, வேகமாக அவன் அருகே வந்தான்.

“ப்ரோ கொஞ்சம் பன் அல்லவா எடுத்துட்டு வரீங்களா எங்க ரெண்டு பேருக்கும் ? ” என்று தன் பக்கத்திலிருந்த அசோக்கை காட்டி சொல்ல, வேகமாக சென்று பன் அல்லவா வை எடுத்து வந்தவன் அசோக்கிற்கு மட்டும் வைத்து விட்டு சென்றான்.

அவளோ குழப்பத்துடன் பார்த்து விட்டு “ரிஷி ப்ரோ எனக்கும் வைங்க !”என்று கத்த, அவனோ கண்டுக்கவே இல்லை…

‘என்ன டா இது?’ என இருந்தது அவளுக்கு… ரிஷியோ அவளை முறைத்து விட்டு மற்றவர்களை கவனிக்க சென்றான்.

தன்யாவை தவிர மற்ற அனைவரும் ரிஷியின் எண்ணம் புரிய நமட்டுச் சிரிப்புடன் அமர்ந்திருந்தனர்.

“இப்போ எதுக்கு சிரிக்கிறீங்க எல்லாரும்…?”

“உன்னை போல ஒரு ட்யூப் லைட் நாங்க பார்த்ததே இல்லை தன்யா !”என ஶ்ரீ சொல்லி சிரிக்க,

“என்ன நான் ட்யூப்லைட்டா? அவன் வச்சிட்டு போகாததுக்கு நான் என்ன ட்யூப் லைட் ஆ இருக்கேன்?”

“அவன் ஏன் உனக்கு வைக்காம போனான் உனக்கு புரிஞ்சதா? இல்லையா தன்யா?”

“இல்ல…”என்று இரண்டு பக்கமும் தலையை ஆட்ட, “அப்போ நீ ட்யூப் லைட் தான்”என்று அசோக் சொல்ல, “மேம்…!”என்று சிணுங்கினாள்.

“தன்யா ! இப்போ அவனை வெறும் ரிஷினு மட்டும் சொல்லி கூப்பிடு!”என்ற ஜெஸியை குழப்பமாக பார்த்து விட்டு

“ரிஷி, ப்ளீஸ் எனக்கு கொஞ்சம் பன் அல்லவா வைங்களேன் ” என்க , அடுத்த நொடியே முகம் மலர அவள் முன்னே வந்து இலையில்  கொஞ்சம் அதிகமாகவே வைத்தான்.

“போதும் போதும் கையை வைத்து மறைத்தவள்,

“தேங்க்ஸ்”என்று அவள் ஒரு வாய் வைப்பதையும் பார்த்து அங்கே நின்றான்.

அவனிடம் “அப்ப கூப்பிட்டப்போ கண்டுக்காம போனீங்க ! இப்போ மட்டும் என்ன அள்ளி வைக்கிறீங்க என்னவாம்?”என்றாள்.

“அதுக்கு காரணம், என் பேரு ரிஷி ! ரிஷி ப்ரோ இல்லை…”என்று விளக்கமாக சொன்னான்.

“ஏன் நான் உங்களை ப்ரோன்னு கூப்பிட கூடாதா?”

“கூடாது ! நீங்க மட்டும் என்னை ப்ரோ கூப்பிட கூடாது.இங்க இருக்க என்னை தவிர,  மத்த எல்லாரையும் நீங்க ப்ரோன்னு கூப்பிட்டுக்கலாம் இங்க இருக்க உங்களை தவிர எல்லாரும் எனக்கு பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ் தான்…”என்று சொல்லி விட்டு நகன்றவனை விழிகள் விரிய பார்த்தாள் தன்யா

“வாவ் ! இத விட சிம்பிளா , அழகா எப்படி புரோபோஸ் பண்ண முடியும் தன்யா ? கையின்ட்டா பொலைட் சொல்லிட்டு போயிட்டான்…  முடிவு உன் கையில தான்”என்றாள் ஜெஸி.

அவளுக்கு ஒரு பக்கமும் வெட்கமும் இன்னொரு பக்கம் குழப்பமாகவும் இருந்தது.சட்டென அவனிடமிருந்து இப்படி ஒரு விஷயத்தை அவள் எதிர்பார்க்கவே இல்லை… ஓரிரு வார்த்தைகள் அவனோடு பேசி இருக்கிறாள் அவ்வளவு தான். அவனைப் பற்றி எதுவும் தெரியாமல் என்ன செய்வது? என்ன சொல்வது? என்று யோசிக்க,

“ஜஸ்ட் ரிலெக்ஸ் ! அவன் புரோபோஸ் தான் பண்ணிருக்கான்.. உடனே பதில் சொல்ல  சொல்லல… நிதானமா யோசி ! அவன் கூட பிரண்டா பழகிட்டு உனக்கு அவன் சரியானவனான்னு மேற்கொண்டு யோசித்து முடிவு எடு ! இல்லையா நண்பர்களா இருங்க… தெட்ஸ் ஆல்” என்றாள்.

இவளுக்கும் ஜெஸி சொல்வது சரியென பட, குழப்பம் பாதியாக குறைய, முகம் தெளிய” தேங்க்ஸ் மேடம்”என்றாள். மற்றவர்கள் அவளை ஓட்டி எடுத்தனர்.

வந்தவர்களும் அலுவலகத்தில் பணிபுரிய இருப்பவர்களையும் கிளம்ப சொல்லி விட்டான். துருவனும் அவனது நண்பர்களும் மட்டும் இருந்தனர், அவர்களது குடும்பத்தையும் அனுப்பி வைத்தனர்.

ஜெஸியையும் அவனது டீமையும் கிளம்பச் சொல்ல, ரவியையும் அசோக்கையும் அவனுடன் இருந்து வீட்டில் விட்டு போகச் சொன்னாள்… துருவன் அவளது அக்கறையில் மேலும் மயங்கினான்.

“ஓகே டேக் கேர்”என்று  சொல்லி விட்டு நடக்க,  அவளுடன் மற்ற இருவரும் நடந்தனர். தன்யா கஷ்பட்டு நிமிர்ந்து ரிஷியை நாணத்துடன் பார்த்தாள். அவனோ கண்ணடித்து விட்டு மேலும் அவளை சிவக்க வைக்க வேகமாக வெளியே சென்று விட, ஶ்ரீயும், பின்னால் சென்றிட,  துருவன் ஜெஸியை மட்டும் தன் அழைப்பால் நிற்க வைத்தான்.

“அம்மா பெர்த் டே  ஃபங்ஷகனுக்கு டெனிய கட்டாயம் கூட்டிட்டு வரணும். இட்ஸ் மை ஆடர் “என்றான்.

“உத்தரவு மகாராஜா !”என்று வாயில் கைவைத்து சொன்னாள். அவனும் பெரிதாய் சிரித்தான்.

“ஸ்ஸ்…”என்று நெற்றியில் கை வைத்தவளை கண்டு புருவம் சுருக்கி “மறந்துட்டேன் ” என்றவள், தான் கைப்பையிலிருந்து ஒரு கிப்ட்டை எடுத்தாள். “உனக்கு கொடுக்கணும் நினைச்சேன் மறந்துட்டேன்”என்றாள்.

“எதுக்கு இது?” என்று வாய்  சொன்னாலும் கைகள் வேகமாக கிஃப்ட்டை பிரித்தன. “நீ புதுசா பிஸ்னஸ் ஸ்டாரட் பண்ண போற, அதுக்காக ஒரு சின்ன எங்கரேஜ் !”என்றாள்.

அவனும் மொத்தமாக பிரிக்க அதில் “வர்க் ஹார்ட் ஹெட் சக்சஸ் “என்று பொறிக்கப்பட்ட பிளாட்டினம் காப்பு அதனுள் இருக்க, கண்களை அகல விரித்தான்…

எத்தனை முறை பணத்தை வைத்து அவளை இழிவாக பேசிருக்கிறான் அதற்கு எல்லாம் செருப்படி போல இருந்தது இந்த பரிசு. அவள் அப்படி நினைத்து கொடுக்க வில்லை என்றாலும். இவன் அவ்வாறு நினைத்துக் கொண்டு தன் தவறை உணர்ந்து தன்னை மாற்றிக் கொண்டான்.

“தேங்க்ஸ் ஜெஸி” என்றான் புன்னகையுடன். அவளும் அதே புன்னகையை அவனிடம் பிரதிபலித்து விட்டு சென்றாள்.

இருவருக்கிடையே நட்பு என்னும் பாலம் பலமாகிக் கொண்டே நீண்டது.

****

வீரமதியின் பிறந்த நாள் அழைப்பிதலை வைத்துக் கொண்டு நின்ற ஜெஸி, எட்வர்ட்டிடம் தனது  திட்டத்தை சொல்ல, அவனும் யோசித்த திட்டத்தை அவள் வாய் மொழியாக சொல்ல மலர்வுடன் சரியென தலையை ஆட்டி  அதற்கான ஏற்பாடுகள் செய்ய ஆரம்பித்தான்.

அதே நேரம் அழைப்பிதழை வன்மத்துடம் பார்த்திருந்த மிலாலுக்கு மேலும் இன்னொரு செய்தியாக, வீரமதியின் மகன் தான் துருவன் என தெரிய வர, அவருக்கு அதிர்ச்சி என்றால் இவளுக்கு சந்தோசம் தன்னை அவமான படுத்தியவரின் இல்லத்தின் மருமகளானால் என்று யோசித்து கற்பனையும் செய்து பார்த்தாள்.

மிலாலிடம் தன் திட்டத்தை சொல்ல, தனக்காக, தன் மனைவி தன்னை அவமதித்த அந்த வீரமதியை பழிவாங்க துடிப்பத்தைக் கண்டு மகிழ்ச்சியில் தள்ளாடி போனார். அவளை இழுத்து  அணைத்து முத்தங்கள் இட்டு அவளை ஆட் கொள்ள, வேண்டா வெறுப்பா அவருடன் இணைந்தாலும் அவரை ஒரு ஆயுதமாக வைத்துக் கொண்டு துருவனை அடைய திட்டங்களை போட்டாள்.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்