
சமுத்திரா – 4:
“அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்..
இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்..
ஒரே வானிலே ஒரே மண்ணிலே..
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்..” என்று அறுபது வருடங்களுக்கு முன் வெளியான துள்ளல் நிறைந்த பாடல் ப்ரதீப்பின் அலைபேசியில் காற்றின் ஓசையுடன் போட்டிபோட்டப்படி ஒலித்துக் கொண்டிருந்தது. அந்த பாடலின் மெட்டுக்கேற்ப கால்கள் இரண்டையும் நீச்சல் குளத்தில் போட்டு ஆட்டிக் கொண்டிருந்தான் ப்ரதீப்.
சதுர வடிவில் கப்பலின் திறந்த வெளி மேல்தளத்தில் நீச்சல் குளம் இருந்தது. அதன் உள்ளே கால்களை விட்டு ரங்கா, விலோ ஒருபுறமும், சக்தி, ப்ரதீப் மற்றொரு புறமும் அமர்ந்திருந்தனர்.
அன்று பௌர்ணமி என்பதால் நிலவின் பிரகாசம் அளவுகதிகமாகவே இருந்தது. அதற்கு துணையாக நட்சத்திரங்களும் அதனின் இருப்பை ஆங்காங்கே மின்னி தெரிவித்துக் கொண்டிருந்தன.
அந்த முழுநிலவின் உதவியால் கடலிலும் அலைகள் தங்கமாக ஜொலித்தன. பௌர்ணமி தினமென்பதால் கடலலையும் அதனின் பங்கிற்கு சீறிக்கொண்டும் நுரைப்பொங்க துள்ளிக்கொண்டும் இருந்தன.
நிலவின் ஒளியுடன் போட்டி போடும் அளவிற்கு பல விளக்குகளின் வெளிச்சத்தில், நடுக்கடலில் மிதந்துக் கொண்டிருந்தது அவர்கள் சென்றுக் கொண்டிருந்த உல்லாச கப்பல். அதன் மேல்தளத்தின் கைப்பிடி வளைவின் பக்கத்தில் ஷிவன்யா நின்றுக் கொண்டிருந்தாள்.
அவள் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த கேமராவினால், இருள் வானில் தோன்றிய பூர்ண சந்திரனையும் அதனின் தோழிகளுமான நட்சத்திரங்களையும் படமெடுத்துக் கொண்டிருந்தாள்.
மற்றொரு புறம், உப்புக்காற்று முகத்தில் மோத தன்னிரு கைகளை கட்டிக்கொண்டு அதனை ஆழ்ந்து சுவாசித்து தன் நுரையீரலில் நிரப்பிக் கொடிருந்தான் அமரன். கட்டம் போட்ட சட்டை அணிந்து அதனை கைமுட்டிவரை மடக்கிவிட்டிருந்தவன் அதற்கு தகுந்தவாறு கருப்பு நிற கால்சாராய் அணிந்திருந்தான். ஈரத்தன்மை நிறைந்த உப்பு காற்று அவனின் கேசம் கலைத்து உடலை தழுவி செல்ல கண்மூடி அந்த தீண்டலை அனுபவித்து ரசித்தபடி நின்றுக் கொண்டிருந்தான்.
அமரன் பிறந்து வளர்ந்ததெல்லாம் கடற்கரையில் தான். ‘வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி’ என்ற பாடலை அமரனுக்கு ஏற்றவாறு மாற்றினால், “அலையோடு விளையாடி, கடலோடு உறவாடி” என்று பாடும் அளவிற்கு சிறுவயதிலிருந்தே கடல் மேல் பெரும் அவா கொண்டவன். தன் அப்பாவின் பேச்சையும் மீறி பலமுறை மீன்பிடிக்க சென்றுவிடுவான். அதனாலே அவனை கட்டுப்படுத்த, கட்டாயப்படுத்தி பெங்களூர் அனுப்பி படிக்க வைத்தார் அந்தோணி.
அமரனை பார்த்த விலோ, “இவன் என்னடா இப்படி நின்னுட்டு இருக்கான்..? டைட்டானிக் பட ஹீரோ ஜாக் மாதிரி..”
“அவன் அப்படித்தான். கேட்டா கடல், காத்து, இயற்கைன்னு ஏதாவது கதை சொல்லுவான். அதுக்காக டைட்டானிக் ஜாக் அளவுக்கெல்லாம் அவனுக்கு சீன் இல்லை..” என்று தண்ணீரில் காலை ஆட்டிக்கொண்டிருந்த பிரதீப் ஷிவன்யாயை பார்த்துவிட்டு, “அவ பேசவே மாட்டாளா விலோ..? தனியாவே இருக்கா? அவங்க வீட்லயும் இப்படி தான் இருப்பாளோ..?” ஷிவன்யாயை பற்றி தெரிந்துக்கொள்ள ஆவலுடன் தலையை திருப்பி விலோவிடம் வினவினான்.
அவனின் கேள்வியில் அனைவருமே ஷிவன்யாவை பார்த்தனர். வெண்ணிற சட்டை, நீல நிற ஜீன்ஸ் அணிந்திருந்தவள் அந்த நிலவொளியில் ஓவியம் போல் மிளிர்ந்தாள். காற்றில் கேசம் பறக்க அதனை கோதிய படியே புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தாள்.
ஷிவன்யாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு, “யார்கிட்டயுமே அவசியமில்லாம பேச மாட்டா ப்ரதீப். நானுமே அவகிட்ட போராடி தான் ஃபிரண்ட் ஆனேன். அவ வளர்ந்தது எல்லாமே ஒரு இல்லத்தில் தான். படிப்பு முடிஞ்சதும் அங்க இருந்து வெளியே வந்துட்டா. இப்ப எங்க வீட்டு மாடில தான் குடியிருக்கா” என அவளின் தோழியை பற்றி கூறினாள். அதை கேட்டுக்கொண்டிருந்த ப்ரதீப் அமைதியாக தலையசைத்தான்.
ரங்கா, “நானும் பார்த்துட்டே தான் டா இருக்கேன். நீ எதுக்கு அவளை பத்தியே கேட்குற?” என்றான் புருவ சுழிப்புடன்.
அதற்கு கண்ணடித்த ப்ரதீப், “சும்மா தெரிஞ்சிக்க தான் டா..” என்று சிரிப்புடன் சொல்ல, சக்தி அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு திரும்பினான்.
ரங்கா, “நீ தெரிஞ்சி ஒன்னும் கிழிக்க வேண்டாம்” என்று செய்கையால் வாயை மூடுமாறு செய்கை செய்தான்.
“எப்பா உன்னோட தங்கச்சியை ஒன்னும் பண்ணிட மாட்டேன் டா.. ரொம்ப பண்ணாத” என ப்ரதீப் அலுத்துக்கொண்டான்.
அவ்வளவு நேரம் கடலின் உப்புக்காற்றில் நின்று இரவின் அழகை ரசித்துவிட்டு அவர்களின் பேச்சை கேட்டபடியே வந்து ப்ரதீப்பின் அருகில் அமர்ந்தான் அமரன். அதோடு அவனின் கையில் உள்ள வெள்ளி காப்பை ஏற்றிக்கொண்டே, “அவனுக்கு மட்டுமில்லை இனி உனக்குமே அவ தங்கச்சி தான்” மிரட்டும் தொனியில் ப்ரதீப்பிடம் கூறினான்.
“இப்படி பார்க்கிற பொண்ணுங்க எல்லாரையும் எனக்கு தங்கச்சி ஆக்குனா நானெப்ப தான் கமிட் ஆகுறது..?” என்று நொந்துக்கொண்ட ப்ரதீப், “இப்படி காட்டான் மாதிரி ரெண்டு அண்ணனுங்க இருக்க பொண்ணு எனக்கும் வேண்டாம்” என முறுக்கிக் கொண்டான்.
“நீ வேணும்னு சொன்னாலும் உனக்கு கிடைக்காது..” என்று விலோ கிண்டலடிக்க அனைவரும் சிரித்துவிட்டனர். அதற்கு அவளை முறைத்து வைத்தான் ப்ரதீப்.
“சரி சொல்லு ப்ரதீப்.. உன்னோட டீம்ல புதுசா ஜூனியர்ஸ் வரபோராங்க.. நான் கமிட் ஆக போறேன்னு சவால் விட்ட? அது என்னாச்சு?” என்று நக்கல் குரலில் ரங்கா கேட்டான்.
“டேய் மச்சான்! நாம படிக்கிறப்ப நாற்பது பேர் ஒரு க்ளாஸ்ல இருந்தா ஆறேழு பேர் தான கமிட் ஆகிருப்பாங்க.. இப்பலாம் ஆறேழு பேர் தான் டா சிங்களா இருக்காங்க. இதுல நான் எங்க போய் எனக்கானவளை தேட..” என்று பெருமூச்சுடன் முடித்தான்.
அதுவரை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த ஷிவன்யாயும் அவர்களின் பக்கம் வந்து விலோவின் அருகில் அமர்ந்தாள்.
“ஏன் டா பொண்ணு பொண்ணுன்னு அலையுற?” என்ற ரங்காவின் கேள்விக்கு,
“இந்த மனித பிறவி.. பெண் அன்பினில் அடங்கிடும்..” என்று பாடிக்கொண்டே மல்லாக்க படுத்து தலைக்கு கீழ் கைகளைவைத்தப்படி வானை வெறித்தான் ப்ரதீப்.
“பார்த்து டா. பொண்ணோட அன்புல அடங்குறதுக்கு பதிலா மொத்தமா அடக்கம் பண்ணிட போறாங்க..” என்ற அமரனின் பேச்சில்,
“நீ வாயை மூடு” என்ற ப்ரதீப், “ஆமா சிரிப்பு போலீஸ்க்கு எப்படி லீவு கிடைச்சுது?” என்றான் ரங்காவை பார்த்து.
“நான் ஒரு இன்ஸ்பெக்டர். என்னை பார்த்து சிரிப்பு போலீஸ்னு சொல்லுற? இனி கேஸ்ல யாரும் மாட்டாம இருந்தா உன்னைய புடிச்சி உள்ள வெச்சிடுறேன்” என்றான் ரங்கா.
“சரி விடு. அப்பறம் எப்ப பேச்சிலர் பார்ட்டி கொடுக்க போற..? உனக்கு அடுத்து சக்தி கொடுக்க ரெடியா இருக்கான்” என்று ப்ரதீப் கூற,
“அப்படியா சக்தி..? எப்ப கல்யாணம்? என்கிட்டே சொல்லவே இல்லை” என்று விலோ கேட்க,
“எனக்கே தெரியாது! இந்த தடியன் தான் உளறுறான்” என்று கடுப்புடன் சக்தி சொல்ல,
“நீ உன்னோட அத்தை பொண்ணை கல்யாணம் பண்ணிக்க போறதா அந்த நியூஸ் பேப்பர்ல போட்டாங்களே..!” என்று சக்தி கடந்தவாரம் சக்தியை பற்றி வந்த கிசுகிசுப்பை கூறினான்.
“இந்த ரிப்போர்ட்டர்ஸுக்கு தான் உருப்படியா செய்ய வேலை எதுவும் இல்லாம கண்டதையும் கிறுக்குவாங்க. நீ அதை நம்பி எங்கிட்டயே கேட்குற..” என்ற சக்தி ஓரக்கண்ணால் ஷிவன்யாவை பார்த்துவிட்டு கூறினான். ஷிவன்யா, அவன் சொல்வது காதில் விழுந்தாலும் எந்த எதிர்வினையும் ஆற்றாமல் அவளின் கேமராவை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
சக்தி வேண்டுமென்றே தான் ஷிவன்யாவை வம்பிழுகிறான் என்று புரிந்துக்கொண்டார்கள் விலோ, ரங்கா, அமர் மூவரும். விலோ சக்தியை விழிகளால் பேசாதே என்று சொல்ல அதற்குமேல் சக்தி எதுவும் பேசாமல் அமைதியானான்.
“ச்சா ட்ரீட் மிஸ் ஆகிடுச்சே..” என்று ப்ரதீப் ஏமாற்றமாய் சொன்னான்.
ரங்கா, “சக்தி” என்று சக்திவேலை மெதுவாக அழைத்து சமிக்ஞை செய்தான். சக்தி சிரித்துக்கொண்டே ப்ரதீப்பின் கையில் இருந்த ஃபோனை பறித்த மறுநொடி அவனை நீச்சல் குளத்தில் தள்ளிவிட்டிருந்தான் அமரன்.
“பாவிகளா..” என்று அலறிக்கொண்டே பத்தடி ஆழத்தில் இருந்த நீச்சல் குளத்தின் அடிவரை சென்று வந்தான்.
“ஓவரா பேசுனா இப்படி தான்” – ரங்கா
ப்ரதீப் முகத்தில் இருந்த நீரை வழித்தப்படி, “என்னோட அலெக்சா..” என்று அலறினான்.
“அவ சக்தி கைல தான் பத்திரமா இருக்கா” என்ற அமரன் சிரிப்புடன், “இந்த நாய் அந்த அலெக்சா கிட்டலாம் கடலை போடுறான் டா.” என்றான்.
“ஆள் இல்லாத சிங்கிள்ஸ்க்கு அலெக்சா தான் டா ஆளு என் வென்று” என்றவன் தண்ணீரை அனைவரின் மேலும் தெளிக்க, “எருமை எருமை” என்று அவனை திட்டிக்கொண்டே அனைவரும் எழுந்துவிட்டனர்.
“ரொம்ப குளிருது! நான் உள்ள போறேன்” என்று ப்ரதீப் சென்றுவிட்டான். ப்ரதீப்பின் கைபேசியை அமரனிடம் கொடுத்த சக்தி நகர்ந்துவிட்டான்.
“இங்க சிக்னல் கிடைக்காதா விலோ. எடிட்டர்க்கு ஒரு ஃபோன் பண்ணனும்” என்று ஷிவன்யா கேட்க,
“கடல்ல சிக்னல் கிடைக்காது ஷிவ். வைஃபை இருக்கு. அதை யூஸ் பண்ணிக்கோ” என்ற அமர் அவளுக்கு உதவினான். அவளும் ஃபோனை வாங்கிக்கொண்டு நகர பார்க்க,
“இங்க வேணாம் எல்லாரும் உள்ள போகலாம்” என்று அமரன் சொன்னான்.
அந்த ரம்மியமான சூழலை ரசித்தபடியே “ஹே! இங்க சூப்பரா இருக்கு. இன்னும் கொஞ்ச நேரம் இருக்கலாமே..” என்று விலோ கேட்க,
“நோ விலோ! காலைல வரலாம். மணி எட்டாகிடுச்சி. இன்னைக்கு பௌர்ணமி வேற.. அலையோட வேகம் அதிகமா இருக்கும். நாம உள்ள போய்டலாம்.” என்ற அமர் தொலைவில் அலைபேசியில் பேசிக்கொண்டிருந்த சக்தியையும் அழைத்தான்.
அவனின் அவசரத்தை கவனித்த விலோ, “ஏன்? இதுக்கு மேல இங்க இருந்தா என்னாகும்..?” என்ற பதட்டம் நிறைந்த குரலில் கேட்டாள்.
“அடியே! ஒன்னும் ஆகாது. அலை வேகமா வந்து கப்பல்ல மோதும். அந்த வேகத்துல மேல நிக்கிற நாம டைவடிச்சி கீழ கடல்ல விழுந்துட கூடாதுன்னு முன்னேச்சரிக்கையா சொல்லுறான். வேற ஒன்னும் இல்லை.” என்று அவளின் பதட்டத்தை குறைத்தான் ரங்கா.
யாராவது தெரியாமல் தவறி விழுந்தாலும், சட்டென்று போட்டை பைக், கார் போல் திருப்பிக்கொண்டு தேட முடியாது. அதிலும் மையிருட்டாக இருக்கும் கடலில் விழுந்தவர்களை எளிதில் கண்டுக்கொள்ளவும் முடியாது என்பதால் கடலில் இரவில் செல்ல இவ்வளவு கட்டுப்பாடுகள் உள்ளன.
அவ்வளவு நேரம் ரசனைக்குரியதாகவும் ரம்மியமாகவும் இருந்த கடலலைகள் இப்பொழுது அவர்களை அச்சுறுத்துவது போல் இருந்தன. அமர் சொன்னது போல் பௌர்ணமி அலைகள் பெரிதாக வர துவங்க, அதனை பார்த்த பெண்கள் இருவரும் சற்று மிரண்டு விட்டனர்.
பின் அனைவரையும் அழைத்துக்கொண்டு உள்ளே சென்றுவிட்டான் அமரன்.
– சமுத்திரா வருவாள்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
+1
+1





