

KKEN-14
இன்றைய விஷயத்தை ஏனோ அவர்கள் இருவருமே பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை. வித்யா இந்த விஷயத்தை அன்னையிடம் கூற வில்லை. வெற்றியிடம் சொன்னதும் அவளுக்கே இது ஒன்றுமில்லாத விஷயமாகிப் போனது. பிறகு எதற்கு அன்னையிடம் சொல்லி அவளையும் பயப்படுத்த வேண்டும்? அவள் கணவன் சொன்னது போலவே நெற்றியில் விபூதி இட்டுக் கொண்டு அன்னையின் மடியில் படுத்துக் கொண்டாள் .
“டேய் புருஷா நீ சொன்னது சரிதான்” மனதிற்குள் சிரித்துக் கொண்டாள். மனதை (மனம்) கவர்ந்தவனிடம் மனதை ஒப்படைத்த பிறகு அவன்தானே கணவன்.
இத்தனை வருடங்களாக பார்க்காத ஒரு பெண் எதற்காக அதிபனின் கண்களில் அடிக்கடி பட வேண்டும்?
அவர்களின் சந்திப்பு மீண்டும்.,மீண்டும்…..
வித்யா வெற்றியின் காதல் வெற்றிகரமாக தொடர்ந்து கொண்டு தான் இருந்தது.
காயத்ரி நேரம் பார்த்து கணவனிடம் பேச காத்துக் கொண்டிருக்கிறார்.
அதற்கு முன்பு வித்யா வாயைத் திறக்க வேண்டும். ஆனால் இப்போதெல்லாம் அவள் அதிகமாக பேசுவது இல்லை. புன்னகை முகமாக வலம் வந்து கொண்டிருக்கிறாள். முன்பே சொன்னது போல அழகானத் தோற்றத்தில் ஈடுபாடு வந்தது.
அன்று அவன் அணைத்து முத்தமிட்டதற்கு பிறகு அவளுக்கு அவன் மீது இன்னும் அதிகமாக உரிமை வந்தது போல இருந்தது.
“வெற்றி”
“சொல்லுங்க மேடம்”
தயங்கினாள்.
வெளியில் வெறித்தவள்,
“எனக்கு ஒரு கிஸ் வேணுண்டா”
“முடியாது” எத்தனை எளிதாக மறுத்து விட்டான்.
கைகள் உரசினாலும் உதடு உரச அவன் அனுமதிக்கவில்லை.
“அப்ப அன்னிக்கு மட்டும்?” வித்யாவுக்கு கோபத்தில் மூக்கு விடைத்தது.
“அன்னிக்கு ஏதோ நீங்க பயந்திருந்தீங்க. பேச்சு வாக்குல ஏதோ தெரியாம”
“பேச்சு வாக்குல ஏதோ தெரியாமையா? வா ! என்னோட பிரண்ட்க்கு
இன்ட்ரோ கொடுக்கறேன். பேச்சு வாக்குல தெரியாம அவளுக்கும் முத்தம் குடுக்கறியான்னு பாக்கறேன்.கரி சட்டி! கரி சட்டி!”
அவனுக்கு சிரிப்புத்தான் வந்தது.
அவனின் மறுப்பு அவளுக்கு அவமதிப்பாக இருந்தது. தன்னைத் தானே கேவலமாக உணர்ந்தாள். கண்களின் ஓரம் நீர் துளித்தது .
வண்டியை ஓரம் கட்டி விட்டு மெதுவாக அவளிடம் பேசினான்.
“மேடம்!”
பதில் இல்லை. மீண்டும் அழைத்தான்.
“நான் மேடம் தான் இல்ல. நீ கரெக்ட்டா லிமிட்ல தான் இருக்க. எனக்குத்தான் என்னென்னவோ. எவ்ளோ சொன்னாலும் இந்த பாழா போன மனசு கேக்க மாட்டேங்குது. தானே வந்து ஐ லவ் யூ சொல்லறா. முத்தம் கேக்கறா. சீ இது இவ்ளோதானேங்கற இளக்காரம் தானே? எத்தனையோ பசங்க என்ன சுத்தி சுத்தி வந்துருக்காங்க. இப்ப இல்ல. ஸ்கூல் டேஸ்லேயே. யாரையும் ஏறெடுத்து பாக்காத இந்த கண்ணு ஒருத்தனை மட்டும் பார்த்துச்சு. எப்ப பார்த்தாலும் அக்கா, தங்கச்சி, பாப்பா இப்டியே பேசுவான். ஒரு வேளை அந்த பெண்களுக்கு நடுவுல நானும் வந்து சேர்ந்துக்கனுன்னு ஆசை வந்துடுச்சோ என்னவோ? என்னை ஒருத்தன் பார்த்துக்கணும். கண்ணுக்குள்ள வச்சு கவனிக்கணும். காதலிக்கணும். நீதாண்டி அழகின்னு வாயில பல்லு போன கிழவி ஆனதுக்கு அப்புறம் சொல்லணும். கண்ணாடி போட்டதும் அப்புறமும் என்னோட கண்ணுல அவனோட கண்ண பாக்கணும். இதுக்குத்தான் உன் பின்னாடியே அலையறேன். மத்தபடி நான் எதுக்கும் அலையல . அவளின் வார்த்தைகளின் வீரியம் அவளுக்கு புரிந்ததோ என்னவோ? அவனுக்குப் புரிந்தது.
சட்டென இறங்கி வந்து அவள் கேட்ட முத்தத்தை அவள் கன்னங்களில் வாரி வழங்கினான்.
“நீ அலையல டீ . நான்தான் அலையறேன். உனக்கு பின்னாடியே அலையறேன். பயமா இருக்குடி. நம்ம வயசு அப்படி. உன்னோட வசதி அப்டி. புரிஞ்சுக்கடி”
“அதெல்லாம் எங்க வீட்டுல ஓகே சொல்லிடுவாங்க . என்னோட மாம், டாட் லவ் மேரேஜ் தான். அவங்கள ஒத்துக்க வைக்கறது ரொம்ப ஈஸி. பட் ஒரே ஒரு கண்டிஷன் இருக்கு. வாழ்க்கைல உழைக்க தயாரா இருக்கணும். அது இருந்தா எங்க அப்பா ஈஸியா பொண்ணு குடுத்துடுவாரு.”
“உங்க அம்மா அப்பா உங்க கல்யாணத்தை எத்தனை சிறப்பா செய்யணுன்னு நினச்சுருப்பாங்க? பொண்ணு பணக்கார வீட்டு மருமகளா இருக்கனுன்னு நினைச்சுருப்பாங்க? என்னோட செல்லக் குட்டி மஹாராணி மாதிரி பெரிய பங்களாவுல படி இறங்கி வந்தா எவ்ளோ அழகா இருக்கும்?”
“ப்ச்! அதெல்லாம் ஒரு மேட்டரே இல்ல வெற்றி. பணமா வாழ்க்கை ?”
“எங்க மலரக்காவையே சரியான எடத்துல கல்யாணம் பண்ணாமத்தான் இன்னிக்கு அது இவ்ளோ கஷ்டப்படுது . நீங்களும் இந்த ஏழையை பண்ணிக்கிட்டு எதுக்குங்க கஷ்டப்படணும்?”
“உங்க அக்கா கஷ்டப்படறதுக்குக் காரணம் அவங்க புருஷன் சரி இல்ல. ஆனா என்னோட புருஷன் அப்படியில்ல. என்னை உள்ளங்கையில் வச்சு தாங்குவாரு.”
“என்னால முடியுமா? பயமா இருக்குடி” அவள் முகத்தை பார்த்து, கண்களை பார்த்துக் கூறினான்.
அவன் கைகளை எடுத்து தன் கன்னங்களில் வைத்துக் கொண்டாள்.
“உன்னால முடியலைன்னா யாராலையுமே என்ன சந்தோசமா வச்சுக்க முடியாதுடா.”
அவள் குரலில் அத்தனை காதல். அத்தனை மென்மை . அத்தனை நம்பிக்கை. அவன் மீது அவளுக்கு இருக்கும் நம்பிக்கை அவன் மீது அவனுக்கே இல்லாதது.
வித்யாவிடம் பேசிவிட்டு வெற்றி தன் இடத்தில வந்து அமர்ந்து வண்டியை எடுத்தான்.
“அது சரி, எப்ப என்ன உங்க வீட்டுல அறிமுகப் படுத்த போற? நீ சொல்லி சொல்லி உங்க மலர் அக்காவை பாக்கணும் போல ஆசையா இருக்குடா.”
“நம்ம விஷயம் எங்க வீட்டுல தெரிஞ்சுது அவ்வளவுதான். எங்க அப்பா அடிக்கற அடில பெல்ட்டு பிஞ்சுடும்.”
“அப்போ அந்த இச்சு இச்சு எல்லாம்? ஏய் ஜாலியா மஜா பண்ணிட்டு விட்டுட்டு ஓடிடலான்னு நினைக்கிறியா?” விளையாட்டு போலவே கேட்டாள் .
“அப்பிடி எல்லாம் இல்ல மேடம். கொஞ்ச நாள் ஆகட்டும். நேரம் பார்த்து நானே சொல்லறேன்.”
“இங்க பாருடா! இந்த மாதிரி காதல் அது இதுன்னு சுத்தி டைம் வேஸ்ட் பண்ணாம பரீட்சைக்கு ஒழுங்கா படிச்சு பாஸ் பண்ணற வழிய பாரு.”
அலட்சியமாக ஒரு லுக் விட்டான்.
“என்ன லுக்?”
“எனக்கு சொல்லறதை மேடம் கொஞ்சம் கடைபிடிச்சா நல்ல இருக்கும்.”
“டேய் ! சொல்ல மறந்துட்டேன் பாரு. எனக்கு நாளைக்கு இன்டென்ஷிப் இன்டெர்வியூ இருக்குடா.”
“எத்தனை மாசம்?”
“த்ரீ மந்த்ஸ். நம்ம வர்க் நல்லா இருந்தா அவங்களே வேலைக்கு எடுத்துப்பாங்க. எக்ஸாம் முடிச்சுட்டு நாம் சேர்ந்துக்கணும்.”
“ஓ!”
“நான் காலேஜ் டாபர் தானே. இன்டெர் வியூ பெரிசா கஷ்டமா இருக்காதுன்னு நினைக்கிறேன்.”
“உங்களுக்கு என்ன மேடம்? நீங்க எது தொட்டாலும் டாப் தான்.”
“ஏய் அது என்ன எப்ப பார்த்தாலும் மேடம் மேடம்னு? வித்யா சொல்லு. இல்ல அப்பா சொன்ன மாதிரி இல்ல விது சொல்லு. அதுவும் இல்லன்னா கண்ணே, மணியே ஏதாவது நிக் நேம் வை.”
“நீங்க எனக்கு எப்பவுமே மேடம் தான் மேடம்”
“சரிடா கரி சட்டி”
“கரி சட்டியா ?”
“ஆமா நீ என்ன மேடம் சொன்னா நான் உன்ன கரி சட்டின்னுதாண்டா சொல்லுவேன்”
“பேரு நல்லாத்தான் இருக்கு. ஆனா நான் ஒன்னும் அவ்ளோ கருப்பு இல்லையே மேடம்.”
“அதை நான் சொல்லணும். என்ன பாரு. பௌணர்மி நிலா மாதிரி இருக்கேன். உன்ன பாரு. கண்ணாடில பார்த்தா மூஞ்சியே தெரியாது.”
அவள் சொன்னது உண்மைதான். அவள் நிலா தான் . ஆனால் அவன் ஒன்னும் கரிச்சட்டி இல்லை. மாசில்லாத அந்த குழந்தை பேசுவதையே கேட்டுக் கொண்டும், ரசித்துக் கொண்டும், வந்தான். அவன் ஒரு வார்த்தை சொன்னால் பதிலுக்கு பத்து வார்த்தைகளாவது பேசி விடுவாள் வித்யா. அவன் அமைதியாக இருக்கும் நேரம் இவள் நூறு வார்த்தை பேசுவாள் விடாமல் பேசிக் கொண்டே இருக்கும் அந்த அழகான உதட்டை கடித்து விடும் எண்ணம் அவனைப் பாடாய் படுத்தியது.
அவள் சொன்ன படியே முதலில் போனில் சில அடிப்படை கேள்விகளை மட்டும் கேட்டவர்கள். திருப்தியானதில் நேரிலேயே வரச் சொன்னார்கள் . வேலையில் சேர்ந்துக் கொண்டாள் . அவளைக் கொண்டு வந்து விட்டவன் மலை போல இருந்த அந்த பத்து மாடி கட்டிடத்தின் உயரத்தை பார்த்ததும் “மலைத்தேன் இதுவென மலைத்தேன்” கண்ணதாசன் வரிகள் தான் நினைவுக்கு வந்தது .
“ஏன் மேடம்! இவ்ளோ பெரிய கம்பெனியா? உங்களால சமாளிக்க முடியுமா?”
“கம்பனி எவ்ளோ பெரிசா இருந்தா என்ன? நான் உக்கார போகறது ஒரு சீட்டுல தானே? இந்த கம்பெனில சேர எங்க காலேஜுலேயே எத்தனை போட்டி தெரியுமா. என்னோட சேர்த்து மொத்தம் பத்து பேரு சேர்ந்திருக்கோம். கம்பனி பெரிசு ஆக ஆக நாம இன்னும் நிறையா கத்துக்கலாம். ஒரு வேளை நம்ம வேலை நல்லா இருந்து இங்கையே வேலைக்கு சேர்ந்தா ஸ்டார்டிங் சாலரியே லகரத்துல வரும்”
அவள் சொன்னதில் அவன் பிரமித்து தான் போனான். இப்படியெல்லாம் விஷயங்கள் உண்டு என்பது தெரியவேத் தெரியாதே.
வண்டியை நிறுத்தியதும் இறங்கிக் கொண்டாள் .
இறங்கி நடக்க தொடங்கியவளிடம்,
“தியா ! ஆல் தி பெஸ்ட்!”
முழு மனதுடன் மகிழ்ச்சியாக அவனுக்கு நன்றிக் கூறினாள் .
“ஏ ஸ்கொயர்!” என்னும் பெயர் பலகையை ஒரு முறை பார்த்து விட்டு கிளம்பினான். ‘பிள்ளையாரப்பா நீங்கதான் மேடத்துக்கு கூடவே இருக்கணும்.’
மனதிற்குள் வேண்டிக் கொண்டான். வாங்க நாமளும் அவளுக்காக வேண்டிக் கொள்ளும் நேரம் வந்து விட்டது.
நீங்கள் நினைத்தது சரியே. அது அதிபன் அருணாசலத்தின் தலைமை அலுவலகம்தான். ஆனால் வித்யா வேலை செய்யப் போவது அவனுக்கு கீழ் அல்ல.
வேலையில் சேர்ந்த பெண்கள் அனைவருமே தங்களை நிரூபிக்க நிறைய வேலை செய்ய வேண்டி இருந்தது. உடல் உழைப்பு இல்லை என்றாலும் மூளைக்கு வேலை நிறையவே இருந்தது .
காலையில் புது பூ போல கிளம்பி வருபவள் மாலை அல்லது இரவில் சோர்ந்து தான் வருவாள். அவளை தினமும் திரும்ப அழைத்து வரும்போது பழச்சாறு வாங்கித் தருவதை வழக்கமாகிக் கொண்டான் அவளின் கரிச்சட்டி . அவன் வாங்கித் தருவதை குடித்ததும்தான் அவளுக்கு முகமே சற்று தெளிவடையும்.
குடித்து முடித்து அவள் கப்பில் சற்று மீதம் வைத்தே கொடுப்பாள். அது அவனுக்காக. அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அவனுக்கு அது அவள் எச்சில் அல்ல. அமுதம். அவன் அதை ரசித்து குடிப்பதை பார்க்கவே அவளுக்கு ரொம்பப் பிடிக்கும். அன்னை போல அவன் தலை கலைத்து ரசிப்பாள். நாட்கள் ஓடியது.
வாழ்க்கை அப்படியே நகர்ந்து விடுமா?
காதல் வரும்..

