
நினைவுகள்- 13
அன்று
” ஹேய் பர்த்டே பேபி! எதுக்கு அழற? கண்ணுல தண்ணி நிக்குது பாரு.”
” நான் அழல அனு. கண்ணு வேர்த்துருச்சு.” என்று கண் சிமிட்டி ராதிகா சிரிக்க.
” இதோடா… என்னோட சேர்ந்த ஒரு வாரத்திலேயே நல்லா பேசக் கத்துக்கிட்ட.” என்று அனுவும் சேர்ந்து நகைத்தாள்.
நாட்கள் விரைந்தோட, இருவருடைய நட்பும் இறுகியது.
இன்னும் அனுவின் வீட்டில், யார் யார் இருக்கிறார்கள் என்று ராதிகாவிற்குத் தெரியாது. அனுவின் வீட்டிலிருந்து, ஃபோன் கால் வந்தால், ராதிகா அவளுக்கு தனிமைக் கொடுத்து விட்டு வெளியே சென்று விடுவாள்.
ஆனால் ராதிகாவின் பெற்றோர் அழைக்கும் போது, அனன்யா வெளியே செல்ல மாட்டாள். ஓரிரு வார்த்தை அவர்களிடம் பேசி விட்டு, அங்கேயே அமர்ந்து வேறு வேலை செய்ய ஆரம்பித்து விடுவாள்.
ஏனெனில் அப்படி வெளியே போக வேண்டுமென்றால் அடிக்கடி போற மாதிரி இருக்கும்.
ராதிகாவின் அம்மா, தூங்குவார்களா என்றுக் கூட தெரியாது. ராதிகா வேலையை விட்டு வந்த உடனே ஃபோன் வந்துவிடும். காலையில் எழுந்தவுடன் ஒரு முறை, அப்புறம் இவர்கள் கல்லூரிக்கு கிளம்புவதற்கு முன்பு ஒரு முறை, என்று இதேப் போல் அடிக்கடி ஃபோன் வந்து கொண்டே இருக்கும்.
ராதிகாவும் சலிக்காமல் பேசுவாள். அதைப் பற்றி ராதிகாவிடம் அனன்யா வினவ, அவள் முகம் மாறி விட்டது. அதற்குப் பிறகு அவளும் கேட்டதில்லை. ராதிகாவும் எதுவும் சொல்லவில்லை.
அவர்களுக்கு படிப்பும் அவ்வளவு கடினமாக இல்லை. ஜாலியாகவே போய்க் கொண்டிருந்தது.
அன்று காலேஜில் இருந்து இருவரும் நடந்து வந்துக் கொண்டிருக்க. அனு தான் ஆரம்பித்தாள்.
” ஏய் ராது. நானும் வெளில போகலாம்னு ஆறு மாசமா சொல்லிட்டு இருக்கேன். இந்த வாரம், அடுத்த வாரம் என்று தள்ளிப்போட்டுட்டே இருக்க. என்னோட வெளியே வருவியா? இல்லையா?” என்று குறைபட.
” அடியே போன வாரம் தானே, உங்க ஃபேமிலியோட போயிட்டு வந்த. அப்புறம் என்னடி.”
“அது…” என அனு ஏதோக் கூற வர…
“என்ன அது போன வாரம்… இது இந்த வாரம்… என்று சொல்லப் போறீயா?” என்று ராதிகா கிண்டலடிக்க.
“அது வேறன்னு சொல்ல வந்தேன். உன்னோட போகணும்னு ஆசையா இருக்கு டி. அதுவும் அந்த இடம் செம்ம அழகு. போற வழியெல்லாம் இயற்கை அழகு கொஞ்சுது தெரியுமா. அருவில நல்லா ஆட்டம் போடலாம். போன தடவை சேஞ்ச் பண்ண வேற ட்ரெஸ் எடுத்துட்டு போகாதால குளிக்கலை.” என பாவமாகக் கூற.
” ஓகே… இந்த சண்டே உனக்காக நீ சொன்ன இடத்துக்கு நம்ம போகலாம் சரியா. அதுக்காக இப்படி கேவலமாக ஆக்ட் பண்ணாதே சகிக்கலை.” என அனுவை வாரினாள் ராதிகா.
அனு போகணும் என்று ஆசைப்பட்ட இடம் பூடா வாட்டர் ஃபால்ஸ் அண்ட் ரெசார்ட். அது ஹீல்ஸ் ஸ்டேஷன். இவர்கள் இருக்கும் இடத்திலிருந்து ஒன்றரை மணி நேர பஸ் பயணம்.
காலையில் நேரத்தோடு எழுந்து ராதிகாவும், அனுவும் அறையில் இருந்த இண்டேக்சன் ஸ்டவில் இலகுவான சமையல் செய்து எடுத்துக் கொண்டனர். அங்கு உணவு அவ்வளவாக இருக்காது.
அங்கு செல்லும் வழியில் நிறைய வ்யூவ்பாய்ன்ட் இருக்க… அங்கெல்லாம் நின்று இருவரும் ஃபோட்டோ எடுத்துக் கொண்டனர். ஹார்ஸ்ரைடிங்கு வர மாட்டேன் என்ற ராதிகாவை வற்புறுத்தி அழைத்துச் சென்றாள் அனன்யா.
இறுதியாக அங்கிருந்த அருவிக்கு செல்ல. ஒத்தையடி பாதையாக வழி இருக்க. ஒருவர் பின் ஒருவராக நடந்துச் சென்றனர். அனு, ராதிகாவின் கையைப் பிடித்துக் கொண்டே சென்றாள்.
ராதிகாவிற்கு இதையெல்லாம் ரசிப்பதற்கு இரண்டு கண்கள் போதவில்லை. கரடு முரடான பாதையில் கூட கவனம் வைக்காமல், தோழியின் கைப்பிடி தந்த தைரியத்தில், அருகில் சலசலவென ஓடிக்கொண்டிருந்த ஓடையை ரசித்துக் கொண்டு வந்தாள்.
ஹோ…. என்ற அருவி சத்தத்தில், மனதில் உற்சாக ஊற்று பெருக்கெடுத்தது. இருவரும் நன்றாக ஆட்டம் போட்டனர். ஒரு வழியாக குளித்து முடித்து விட்டு ரெஸ்ட் ரூமிற்குச் சென்று டிரஸ் சேஞ்ச் செய்துக் கொண்டு வந்தவர்கள், எடுத்து வந்திருந்த உணவினை சாப்பிடத் தொடங்கினர்.
இனிய சூழலில் மனம் மயங்கி இருக்க, அதில் அபஸ்சுவரம் போல் ராதிகாவின் ஃபோன் அடித்தது. அதை பார்த்ததும் முகம் இறுக அமைதியாக இருந்தாள் ராதிகா.
தன் அம்மாவிடம் சொல்லாமல் வந்த தன்னுடைய மடத்தனத்தை நினைத்து ராதிகா நொந்துக் கொண்டிருக்க…
மீண்டும், மீண்டும் அழைப்பு வந்து கொண்டே இருந்தது. பெருமூச்சு விட்டுக் கொண்டே எடுத்தாள்.
” ஹலோ மா… எப்படி இருக்கீங்க? நான் நல்லா இருக்கேன்.” என.
” ஏன் டா… இவ்வளவு நேரமா ஃபோன் எடுக்கலை. இன்னைக்கு லீவாச்சே ஹாஸ்டலில் தானே இருப்ப? என்று ஃபோன் பண்ணேன்.” என்றவாறே சுந்தரி சுற்றுப்புறத்தை பார்த்தவர், யோசனையாக ராதிகாவைப் பார்த்து பேச்சை நிறுத்த.
” அதும்மா… அனு ரொம்ப நாளா அவுட்டிங் போகணும்னு சொல்லிக் கிட்டே இருந்தா. அதான் இன்னைக்கு வெளியே வந்து இருக்கோம்.” என்று ராதிகா கூற
” என் கிட்ட சொல்லி இருக்கலாமே. சரி டா… என்ன தலையெல்லாம் விரிச்சுப் போட்டுருக்க. தண்ணில ஆடுனீயா. ஜாக்கிரதை டா. அனுப் பொண்ணையும் கேட்டேன் சொல்லு.”என்று அரை மணி நேரம் அறிவுரை கூறி விட்டு தான் ஃபோனை வைத்தார்.
இவ்வளவு நேரம் இருந்த மகிழ்ச்சி மறைந்து விட்டது.
அனன்யா தான் அவளை சமாதானப்படுத்த, ” ஏன் ராது ஆன்ட்டி இப்படி பிஹேவ் பண்றாங்க? இது அப்நார்மலா தெரியுது. எப்பவுமே இப்படித் தானா? ஐ கான்ட் டைஜஸ்ட். ஆனால் நீ ரொம்ப பொறுமைசாலி.” என.
எங்கேயோ பார்வையை பதித்தபடி ராதிகா, ” அனு! முன்னெல்லாம் அவங்க இப்படி இல்ல. எல்லோரையும் போலத் தான் இருந்தாங்க. இரண்டு வருஷத்துக்கு முன்பு எங்க வீடு எப்படி இருக்கும் தெரியுமா? கலகலன்னு இருக்கும்.
நானும், எங்க அக்காவும் சேர்ந்துட்டா வீடே ரணகளமாயிடும். “
“என்ன ராது சொல்லுற? உனக்கு அக்கா இருக்காங்களா! எங்க இருக்காங்க? அவங்களைப் பத்தின பேச்சே இது வரைக்கும் வரலையே.” என அதிர்ச்சியாக அனு வினவினாள்.
“என்ன ராது சொல்ற? உனக்கு அக்கா இருக்காங்களா?” என்று வினவிய அனு அதிர்ச்சியில் உறைந்து நிற்க.
ராதிகாவோ அவளைப் பார்த்து “இருந்தாங்க. பட் நவ் ஷீ இஸ் நோ மோர்.” என்றாள்.
“ஓ… சாரி டி.”
” ப்ச் இப்ப எதுக்கு சாரியெல்லாம். எங்க தலையெழுத்து.” என்று சொல்லி விட்டு அமைதியானாள் ராதிகா.
இன்று…
விஸ்வரூபனிடம் இப்படி ஒரு ஆக்ரோஷத்தை ராதிகா எதிர்ப்பார்க்கவே இல்லை.
ஆளே மாறிப் போயிருந்தான். அதுவும் தஞ்சாவூர்ல பார்த்ததை விட மெலிந்து, கண்ணெல்லாம் சிவக்க ருத்ரமூர்த்தியாக நின்றிருந்தான்.
ஒரு நொடி தான் இதையெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தாள்.
அடுத்த நொடி, அடி வாங்கிக் கொண்டிருந்த ஆதியிடம் வேகமாகச் சென்றாள்.
அவர்கள் இருவருக்கும் நடுவில் வந்து நின்று ஆதியை தாங்கிப் பிடிக்க…
யாருடா இந்த பொண்ணு என எரிச்சலுடன் பார்த்தவன், அங்கு ராதிகாவைப் பார்த்ததும், அவனது கை, தன்னாலே கீழே இறஙகியது.
கண்கள் கலங்கித் தவித்த ராதிகாவைப் பார்த்தவன், அடிக்க முடியாத ஆத்திரத்தை அருகில் இருந்த கிளாஸில் காண்பித்து விட்டு, அவ்விடத்திலிருந்து வெளியேறினான்.
செல்லும் அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் ராதிகா.வேறு இரு விழிகளும் அங்கு நடந்ததை சிரித்துக் கொண்டே கவனித்தது.
கோபத்துடன் செல்லும் விஸ்வரூபனைப் பார்த்து மிரண்டவள், அவன் சென்றதும் ஆதியைப் பார்த்தாள் ராதிகா.
விஸ்வரூபன் அடித்ததில் லேசாக ரத்தம் வந்திருந்தது.
அங்கு இருந்த டிஷ்யூ பேப்பரை எடுத்துத் துடைத்து விட்டவள்,” ஏன் ஆதி. என்ன ஆச்சு? உங்களுக்கும், அவருக்கும் என்ன பிரச்சனை.” என்றாள் தவிப்பாக.
” ஒன்னும் இல்ல ராதிகா. எங்க ரெண்டு பேருக்கு இடையில ஒரு சின்ன இஷ்யூ தான். அது அப்படி ஒன்னும் பெரிய விஷயம் இல்லை. சோ யூ டோன்ட் வொர்ரி. ” என்றவாறு, தான் அடிபட்டதற்காக கவலையுடன் இருக்கும் ராதிகாவை பார்த்து புன்னகைத்தான்.
” சரி வர்றீயா. உனக்கும் வேலைக்கு டைம் ஆயிடுச்சு தானே. உன்னை விட்டுட்டு கிளம்புறேன்.” என்று கூறியவன், அவனது காரை நோக்கி சென்றான்.
“இல்லை ஆதி. பக்கத்துல தானே நான் நடந்துப் போய்க்கிறேன். நீ பார்த்து போ. டேக் கேர்.” என்று ஆதியை அனுப்பி வைத்தவள், பெருமூச்சு விட்டுக் கொண்டாள். ‘விஸ்வா… ஆளே மாறி விட்டார்.’ என்று மனதிற்குள் எண்ணியவாறே, வேலைக்குச் சென்றாள்.
அங்கு ஆதியோ, அடி வாங்கியதைக் கூட நினைத்து, கோபப்படாமல் புன்னகையுடன் காரை ஓட்டிக்கொண்டு சென்றான்.
சற்று முன் நடந்ததை நினைத்துப் பார்த்தான். தான் அமைதியாக உட்கார்ந்து இருக்கும் போது வந்து பேசிய விஸ்வரூபனின் வார்த்தைகள் காதுக்குள் மீண்டும் ஒலித்தது.
‘ “ஹலோ மிஸ்டர். ஆதவன். உங்களுக்கு என்ன வேணும்? உங்களுடைய சகவாசமே வேண்டாம் என்று தானே நாங்கள் ஒதுங்கிப் போகிறோம். எதுக்கு எங்களை வந்து தொந்தரவு பண்ணுறீங்க?”
“நானும் அதையேத் தான் சொல்லுறேன் அண்ணா. எங்களுக்கு சொந்தமானதைக் குடுத்துட்டா, நான் ஏன் உங்கக் கிட்ட சகவாசம் வச்சுக்கப் போறேன்.” என்று நக்கலாக வினவ.
” ஏய்… தேவையில்லாதத பேசாத?” என அழுத்தமான குரலில் விஸ்வரூபன் கூற.
” நான் பாட்டுக்கும் என் கேர்ள் ஃப்ரெண்டோட அவுட்டிங் வந்தேன். நீங்களா தானே அண்ணா வந்து பேசுனீங்க.” என ஆதி கூற.
” டேய் அண்ணான்னு கூப்பிடாதே. எரிச்சலா வருது. நீ எதுக்கு எங்க காலேஜ்ல வந்து சேர்ந்த? ஒழுங்கா காலேஜ் விட்டு ஓடிடு.”
” அண்ணான்னு சொல்லக் கூடாதா ஓகே. எனக்கும் அதுல விருப்பமில்லை. ஜஸ்ட் மரியாதைக்காகத் தான் சொன்னேன். நான் சும்மா ஒன்னும் அந்த காலேஜ்ல சேரலை. சீட்டுக்காக எவ்வளவு டொனேஷன் குடுத்துருக்கேன் தெரியுமா.” என.
” நீ குடுத்ததை விட டபுள் மடங்கு பணம் தரேன். எங்க காலேஜ் விட்டு போயிடு.” என்றான் விஸ்வரூபன்.
“என்ன சாரே… சும்மா, சும்மா எங்க காலேஜ் என்று சொல்லுறீங்க. அது உங்க காலேஜ் மட்டுமில்லை. எங்க அத்தை காலேஜும் கூட…” என்று ஆதி சொல்லிக் கூட முடிக்கவில்லை, “ஏய் அப்படி சொல்லாதே.” என்று கர்ஜித்தான் விஸ்வரூபன்.
“ஏன் சொல்லக்கூடாது. எனக்கும் அவங்க அத்தை தான். அந்த உறவை மாத்த முடியாது.” என…
அடுத்து விஸ்வரூபன் ஓங்கி ஒரு அறை விட்டான். ‘ அதை நினைத்தவனின் முகத்தில் ஒரு புன்னகை வந்தமர்ந்தது.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
1
+1
+1

