Loading

காதலொன்று கண்டேன்!

 

தேடல் 25

 

(I)

 

அதே எண்ணத்துடன் அவள் வந்திட,அங்கு அவளுக்கு முன்னே தரித்திருந்த பையனைக் கண்டதும் தூக்கி வாரிப் போட்டது.

 

யாழவளிடம் உரைத்திட,வேக நடையுடன் வெளிப்படுகையில் பையன் கண்டிருக்க,அவளின் நடையே அவனுக்கு சந்தேகத்தை உண்டு பண்ணியிருந்தது.

 

“சஞ்சய்கு அடிச்சத நீங்க பாத்தீங்களா என்ன..?” உறுதியாக தெரியாத விடத்தில்,அவன் சந்தேகமாக வினவிட,பயத்தில் ஆமோதிப்பாய் தலையசைத்து வைத்தாள்,அவள்.

 

அவளுக்கு தெரிந்து விட்டது என்றதும்,பையனுக்கும் ஐயோவென்றானது.யாருக்கும் தெரியாமல் அவன் பொக்கிஷப்படுத்தியிருந்த காதல்,தோழியிடம் அழகாய் சிக்குண்டிருந்தது.

 

“அப்போ யாழ் கிட்ட சொல்றத்கு தான் இந்த ஓட்டம்..?” அவன் கேட்டிட,அவளின் உறை நிலையே கூறிற்று உண்மை நிலவரத்தை.

 

“உங்க ஃப்ரெண்ட நா லவ் பண்றேன் தான்..அதுக்காக அவங்க கிட்ட போய் இதெல்லாம் சொல்லி கிட்டு இருக்காதீங்க..யோசிச்சு யோசிச்சு மண்டய கொழப்பிப்பாங்க..” யாழவளை சரியாக கணித்து அவன் சொல்ல,அவளுமே வியந்து விட்டாள்.

 

“நா ஒரு நல்ல வேலக்கி வந்து கண்டிப்பா அவங்கள பொண்ணு கேட்டு கல்யாணம் பண்ணிப்பேன்..டோன்ட் வொர்ரி..அது வர இத ரகசியமா வச்சுக்கோங்க..யாழோட ஃப்ரெண்டுன்னா எனக்கு தங்கச்சி தான..அண்ணனா கேக்கறேன் நான்..”

 

“……………………”

 

“என்னோட லவ் யாழ எந்த விதத்துலயும் டிஸ்டர்ப் பண்ணி அவங்க படிப்ப கெடுக்க கூடாதுன்னு நெனக்கிறேன் நான்..அதான் அவங்க கிட்ட கூட எதுவும் சொல்லல..ஹோப் யூ வில் அன்டர்ஸ்டான்ட்..”

 

சுருக்கமாய் அவனின் மனதை எடுத்துரைத்து விட்டு,அவன் கிளம்பி விட,அவளுக்குத் தான் மனம் பிசைந்தது.

 

காதல் தெரிந்து விட்டாலும்,அதை யாழவளிடம் கூறாததிலும் காதலையே கண்டாள்,அவள்.

 

“என்ன இப்டி சொல்லிட்டு போறாரு..?” யோசிக்காமல் இருந்திட முடியவில்லை.தோழியடம் உரைப்பதாய் இருந்த தீர்மானம்,உரைப்பதா என்கின்ற குழப்பத்துக்கு மாறியிருக்க,விடுவிடுவென கிளம்பியிருந்தாள்,தோழியை பார்த்திட.

 

“உன்ன யாராச்சும் லவ் பண்ணா என்ன பண்ணுவ..?” மித்ராவின் கேள்வியில்,அருந்திய நீர் புரையேறிட,நெஞ்சைப் பிடித்துக் கொண்டு இருமினாள்,யாழவள்.

 

“எதுக்கு இப்டி கேக்கற..?”

 

“சும்மா சொல்லு டி..”

 

“நம்மளுக்கு நிம்மதி இருக்காது டி..எப்டியும் வீட்ல பாக்கறவன தான் நா கட்டுவேன்..அப்டி இருக்குறப்போ இன்னொருத்தருக்கு நம்ம ஃபீல் இருக்குறங்குது எனக்கு கம்ஃபர்டபுளா இருக்க விடாது..”

 

“சஞ்சய் விஷயத்தால நா எவ்ளோ டென்ஷன் ஆனன்னு உனக்கு தெர்யும்ல..அப்டி இருக்குறப்போ லவ்வுன்னா நீயே யோசிச்சு பாரு..அப்போலாம் சரியா லெக்சர்ஸ்ல கூட கான்சன்ட்ரேட் பண்ண முடியாது..இது லவ்னா..அழுதுருவேன் தாயே..”

 

அவள் பேசியது, மொத்தமும் பையனின் வார்த்தைகளுடன் ஒருங்கிணைந்து இருக்க,வியந்து போய் நின்றாள்,அவனின் புரிதலையும் கணித்தலையும் எண்ணி.

 

“நீ எதுக்கு இதயெல்லாம் கேட்டுட்டு இருக்க..?”

 

“ஒன்னுல்ல சும்மா தான் டி கேட்டேன்..” சமாளித்தவளுக்கு,பையனின் வார்த்தைகளை மீறி சொல்லவும் மனமில்லை.

 

●●●●●●●

 

காதல் அழகு!

ஒருதலைக் காதல் இன்னும் அழகு!

சொல்லாத ஒருதலைக் காதல் மட்டும் பேரழகு!

 

சொல்லாத காதல் வெல்வதில்லை என்பார்கள்.வெல்லாமல் போனாலும்,அந்த சொல்லாத காதலின் அழகுக்கு ஈடு இணையிருப்பதில்லை.

 

எத்தனை பேரால் சொல்லாமல் காதல் செய்திட முடியுமாம்..?

 

உள்ளுக்குள் முட்டித் தள்ளும்,உணர்வுகள் கொட்டி விட தவித்தாலும்,விழிகளில் கூட அதை காட்டி விடாமல்..

அகம் நிரப்பும் அதீதங்கள் இதழ் வழி உதிர்ந்திட முனைய,மௌனத்தின் வழியே கூட அதை சிதற விடாமல்..

இதயம் முழுவதும் ஆயிரமாயிரம் இருப்புக்கள் இருந்து தொலைத்து இழுத்திட முயல,உணர்வுகளின் மேலீட்டில் தன்னிலை மறந்து பிதற்றி விடாமல்..

விதிகள் மீறி விலகல் கேட்டுக் கூட,இல்லாத வரைமுறைகளை அவளுக்கென உண்டு பண்ணி,நேசத்துளிகளில் மிச்ச சொச்சத்தையும் உணர்த்திடாமல்..

அழுத்தி வைத்திருக்கும் நேசமது நெஞ்சில் நிரம்பி மூச்சடைக்க வைப்பினும்,அவளுக்கே அவளுக்காக எதுவும் இல்லாததுல் மறைத்து நின்று,துளியும் பிரதி பலித்திடாமல்..

 

எத்தனை பேரால் காதல் செய்திட முடியுமாம்..?

 

அவன் காதலித்தான்.சொல்லாமல் காதலித்தான்.அவளின்றி அவனில்லை எனும் அளவு சொல்லாமல் காதலித்தான்.காதலித்து தன்னை முழுதாக தொலைத்திருந்தான்,பையன்.

 

அவனாலுமே,இத்தனை இத்தனை ஆழமாய் காதலித்திட முடியும் என்று அவனுக்கு உணர்த்தி விட்டவளுக்கு,சத்தியமாய் அவனின் காதல் பற்றி எதுவும் தெரியாது.

 

அவ்வப்போது அவளைக் காண்கையில்,அவனைக் கேளாமல் விழிகள் சுழன்று பார்வை அவளை வருடினாலும்,அவள் பார்வையில் ஒரு போதும் அது விழுந்ததில்லை.

இனம் புரியா உணர்வுகள் ஆட் கொண்டு,அவளிடம் காதலை மொழியச் சொல்லி மனம் கத்தித் தீர்த்தாலும்,அவளுக்கென மறைத்து அவன் படும் தவிப்பை அவள் அறிந்ததில்லை.

 

பார் என கட்டளையிடும் மனதுக்கும் வேண்டாம் என மறுப்பு சொல்லும் புத்திக்கும் இடையில் அவனின் மாட்டிக் கொண்டு திணறும் நொடிகள் அவள் அறிந்தது இல்லை.

ஆக்கங்களின் மேலீட்டில்,தவறியேனும் உண்டாகிடும் அண்மையில் அவன் பேச்சிழந்து நிற்பதை இதுவரை அவள் கண்டதில்லை.

 

அன்றும் அப்படித் தான்.

தோழனொருவனின் வீட்டுக்குச் செல்ல கல்லூரி முடிந்து பேரூந்தில் ஏறிக் கொள்ள,அவனின் நேரம் போலும்,அவளுக்கு பக்கத்து இருக்கையில் அமர வேண்டிய கட்டாயம்.

 

உணராக் காதல் அவனை ஒரு வழி செய்திருக்க,உணர்ந்த பின் அது இன்னும் அது ஆழமாய்த் தாக்கிற்று.

 

இதயத் துடிப்பு வேகங் கொள்ள,முத்து முத்தாய் வியர்வைத் துளிகள் அரும்பிட,அதீதத்தின் அதீத பதட்டத்தில் வலது நெஞ்சம் இறுக்கிப் பிடித்துக் கொள்ள பயந்து போனான்.

 

பாவையவளோ,தவறி ஒரு முறை நொடிப் பார்வையை அவனிடம் வீச,உள்ளுக்குள் திக்கென்றது.அதுவும்,திருப்பத்தில் பேரூந்து நகர்கையில்,வளைந்து சென்று அவள் தோற்பட்டையுடன் அவனின் தோற்பட்டை மோத,அவ்வளவு தான்,மாண்டே விட்டான்,காதல் கொண்டவன்.

 

இருவிழி தீண்டலே,அவனை மென்று தின்னும்.இதில் தவறுதலான மோதல்,கொன்று புதைத்தே விட்டது,அவனை.

 

“சாரி..” காற்றாய் வார்த்தைகள் வர,நெஞ்சாங்கூடு படபடவென அடித்துக் கொள்ள,கழுத்தை நிறைத்த வியர்வைத் துளிகளை நடுங்கும் விரல்கள் தாங்கிய கர்சீஃபால் ஒற்றி எடுத்தவாறு,விலகியவனோ,அத்தனை ஆழமாய் சுவாசித்தான்.

 

சுவாசமும் பேச்சும் ஒருமிக்க,அவனிடம் பழி தீர்த்திட,பெரிது பெரிதாய் சீரின்றி சுவாசித்தவனுக்கு சத்தியமாய் பேச்சு வரவில்லை.அந்த கனவு வேறு நினைவில் வந்து இம்சித்து தொலைத்தது.

 

அவளின் அண்மையில் இருந்து எழுந்து நின்றிருப்பான்.ஆட்கள் நிரம்பிய பேரூந்து அதற்கும் வழிவிடவில்லை.

 

தாள முடியா தவிப்பு உயிரை முட்டி மோதி வீழ்த்திட,இருக்கையில் மேல் கம்பியை இரு கைகளாலும் இறுக்கிப் பிடித்து அதில் சாய்த்துக் கொண்டிருந்த சமயம் வந்தார்,நடத்துனர்.

 

அவனிடம் பயணச் சீட்டுக்கு தர விபரம் கேட்டிட,இங்கு அவனுக்கு வார்த்தைகள் வரவில்லை,அத்தனை எளிதில்.

 

பாவியவளின் அண்மை பாடாய்ப்படுத்த நா குழறி வாய் தந்தி அடித்தது.மூச்சு வாங்கியவனின் குரல்வளையில் இருந்து காற்று மட்டுமே வர,விழி பிதுங்கியது,பையனுக்கு.எச்சில் கூட்டி விழுங்க,ஏறியிறங்கிற்று தொண்டைக்குழி,சந்தத்துடன்.

 

கோயில் என்று கைகளால் சைகை செய்திட,அவனால் பேச முடியாது என பரிதாபப்பப்ட்டு அவனிறங்க வேண்டிய இடத்தை ஊகித்து அவர் கேட்டுக் கொண்டே,பயணச் சீட்டு வழங்கியது பையனுமே அறிந்திருந்தான்.என்ன செய்வது இனி..?

 

அவள் அண்மையில் அவரின் நினைப்பு என்னவென்று யோசிக்கும் அளவு நிதானமாகவா இருந்திடுவான் பையனும்..?

 

ஆட்கள் குறைந்தால் எழுந்து கொள்ளும் தீர்மானத்தில் தான் அவள் பக்கத்தில் அமர்ந்து இருந்ததே.அவனின் நேரம் போலும்,அவள் இறங்குமிடம் வரை ஆட்கள் குறையவில்லை.

 

அண்மையில் இருந்து படுத்திய பாடு போதாதென்று,இறங்கும் பொழுது அவன் புன்னகையொன்றை சிதற விட்டு,அவனை சிதறடிக்க,அவன் நிலை சொல்லவும் வேண்டுமா..?

 

முன்னிலையும் தன்னிலையும் நினைவின்றி போக,அவன் இயல்பாக எடுத்த அவகாசம் வழமையை விட அதிகம் தான்.

 

உள்ளுக்குள் அவன் பத்திரப்படுத்தி வைத்த நேசம்,அவனை பதட்டப்படுத்தி,பாடாய் படுத்தி,படுத்தி எடுத்த சந்தர்ப்பங்கள் ஏராளம்,இந்த சொற்ப நாட்களில்.

 

இதோ அதோவென,அவர்களின் படிப்பும் முடிவடைய நாளை கல்லூரியின் இறுதி நாள்.

 

இறுதி வருட மாணவர்கள் அனைவரின் முகத்திலும் வருத்தம் தெரிய,சிற்றுண்டிச்சாலையில் இரு கைகளாலும் தலையை தாங்கியவாறு அமர்ந்து இருந்தான்,பையன்.

 

சமீப நாட்களாய் மனதை ஏதோ ஒன்று அழுத்தி அடைத்திருப்பது அவனுக்கு புரியாமல் இல்லை.மனமே பாரமான உணர்வு.

 

இனி அவளை நினைப்பது போல் காண முடியாது என்கின்ற எண்ணம் தான்,வரிக்க முடியா இவ்வுணர்வின் அடித்தளம் என்றாலும்,அதையும் தாண்டி ஏதேதோ,விவரிக்க இயலாததாய்.

 

வெளியூர் சென்று தனக்கென வேலையைத் தேடிக் கொண்டு,அவள் வீட்டில் பெண் கேட்கும் நினைப்பு மனதில் இருந்தாலும்,மனதில் ஒரு தவிப்பு.

 

எப்படியும் வேலை தேடி வீடு கட்டி என அவன் ஒரு நிலைக்கு வந்திட,மூன்று வருடங்களாவது எடுக்கும்.அதன் பின்னர் தான்,அவள் வீட்டில் சென்று பேச வேண்டும்.

 

மூன்று வருடங்கள் என்று அவன் தன்னைத் தேற்றிக் கொண்டாலும்,அதை நினைக்கையில் மனம் தவித்தது.

 

இடைப்பட்ட நாட்களில் அவளுக்கு திருமணம் பேச முற்பட்டாலும்,அதிதி மூலம் அதை தெரிந்து கொள்ளும் வழியும் செய்ததாயிற்று.ஆயினும்,மனதில் ஒரு தவிப்பு.

 

முகத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டவனுக்கு,சத்தியமாய் அவனின் உணர்வுகளை வாய் விட்டு சொல்ல முடியாது.

 

அவன் வானெங்கும் இருள் சூழ்ந்த மனநிலை.அவளை இனி பார்த்திடாது எப்படி நாட்களை கடத்தப் போகிறோம் என்று நினைக்கையிலேயே,மூச்சு வாங்கியது.

 

பாதச் சத்தம் கேட்டு விழிகளை நிமிர்த்திட,இதழோரம் சிறு புன்னகை.அவனின் அவள் தான்.

 

அவள் அவனைப் பார்த்திடாதிருக்க,அவன் பார்வை அவளை விட்டு அகலவில்லை.சட்டென அவள் திரும்ப,பட்டென அவனின் பார்வையும் திரும்பிற்று.

 

அவனுக்கு பக்கத்தில் இருந்த மேசையில் அமர்ந்து உண்ணப் பார்த்தவளோ,அலைபேசி ஒலித்தில் உணவை வைத்து விட்டு வெளியேறிப் போக,யாரும் அறியாமல் மேசையில் இருந்த சிறு பர்ஸை கவர்ந்து கொண்டான்,கள்வன்.

 

அதுவும் ஒரு நோக்கத்திற்காக தான்.

திறந்ததுமே,அதன் முகப்பில் அவளின் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் இருக்க,அதன் பின்னே மடிக்கப்பட்ட, சிறு கவர் இருக்க,அதில் அதே போன்று நான்கு புகைப்படங்கள்.

 

தோழியிடம் ஒரு முறை காட்டிச் சொன்னது அவனுக்கு நினைவில் இருக்க,தன்னைக் களவாடியிருப்பவளின் புகைப்படத்தை,அன்றே களவாட திட்டம் தீட்டியிருந்தான்,கள்வன்.

 

கவரில் இருந்த புகைப்படத்தில் ஒன்றை எடுத்தவனுக்கு,எப்படியும் காணாதது தெரிந்தால்,பதறுவாள் என்று நினைக்கையில் சின்னப் புன்னகையும்.

 

தன் பர்ஸில் இருந்த தாயுமானவரின் புகைப்படத்தின் அருகே அவளின் புகைப்படத்தையும் பத்திரப்படுத்தியவனின் பார்வை நெகிழ்வுடன் தழுவிற்று,இருவரின் நிழலையும்.

 

யாரினது கருத்தையும் கவராது தன் பணியை முடித்தவனோ,நல்லவனாய் முன்பிருந்த இடத்தில் வந்தமர,அவளோ மெல்லிய சப்தத்துடன் பாடிக் கொண்டே வந்தாள்,உள்ளே.

 

“ஒரு பார்வை பார்த்து நான் நின்றால்,

சிறு பூவாக நீ மலர்வாயே…

ஒரு வார்த்தை இங்கு நான் சொன்னால்,

வலி போகும் என் அன்பே அன்பே…” அத்தனை இரகசியமாய் அவள் இதழசைத்திட,இவன் விழிகளில் இரசனை கொட்டி,அதன் ஈரம் இதயத்தையும் நனைத்துச் சென்றது.

 

“பார்க்கவும் மாட்டா..சொல்லவும் மாட்டா..பாட்டு மட்டுப் பாடி நம்மள படுத்தி எடுப்பா..” உள்ளுக்குள் கருவியவனுக்கு,தன்னை நினைத்து சிரிப்பும் கூட.

 

அப்படியே,அவன் தலை சாய்த்துக் கொள்ள,அவன் இதழ்களும் இசைவுடன் அசைந்தது,அவளுக்கு மறுமொழி கூறி.

 

“ஒரு பார்வை.. பார்த்து நீ நின்றால்,

சிறு பூவாக நான் மலர்வேனே..

ஒரு வார்த்தை இங்கு நீ சொன்னால்,

வலி போகும் என் அன்பே அன்பே…” அவன் மெதுவாய் தனக்குள்,அவளுக்கான காதலையும் சேர்த்து,அவளுக்கு கேட்டாலும் பரவாயில்லை என்று சிறு ஓசையுடன் பாடிட,அது செவியில் விழுந்தவளின் கரம் ஒரு கணம் வேலை நிறுத்தம் செய்தது.

 

அவள் திரும்பும் கணம்,அவனோ பாடலை நிறுத்தி அலைபேசியில் மூழ்கிட,தனிச்சையாய் பாடியிருப்பான் என நினைத்தவாறு,மேலும் யோசித்திடவில்லை.

 

அன்றிரவு வீ்ட்டுக்கு வந்த பின்னரும் பையனின் மனம் அமைதியடையவில்லை.அவனில் இருந்த வித்தியாசம்,தாயுமானவரையும் கலக்கப்படுத்திற்று.

 

“நா வேணுன்னா போய் அவங்க அப்பா கிட்ட பேசவாப்பா..?”

 

“இல்லப்பா இப்போ வேணாம்..மொதல்ல நல்ல வேல தேடனும்..அப்றம் வீடு கட்டனும்..அதுக்கப்றம் போய் பொண்ணு கேக்கலாம்..அவங்கப்பாவா இருந்தாலும் பொண்ண கட்டிக் கொடுக்க இது இது இருக்கனும்னு எதிர் பாப்பாங்கல..”

 

“அதுக்குள்ள அந்த பொண்ணுக்கு கல்யாணம் பேசிட்டாங்கன்னா..?”

 

“அதிதி அவங்க பக்கத்து வீடு தான் பா..யாழோட சொந்தமும் கூட..எப்டின்னாலும் அதிதிகு தெரிய வரும்ல..அப்போ கண்டிப்பா எனக்கும் சொல்றேன்னு சொல்லி இருக்காங்க..பயப்டாதபா நீ..”

 

“பேசாம இந்த ஊர்லயே இருந்துடலாம் அப்பு..”

 

“அப்பா பயப்டாத..இங்க இருந்தா அவ்ளோ சீக்ரம் வேலயெல்லாம் கெடச்சிராது..அதுல்லாம இங்க வச்சு உனக்கு ட்ரீட்மண்டும் பாக்க முடியாது..மூனு வருஷம் தான்..மூனே வருஷம் தான்..பட்டுன்னு முடிஞ்சிரும்..அப்றம் எல்லாத்தயும் பாத்துக்கலாம்..”

 

“நீ மனசு வச்சா இது எல்லாத்தயும் மாத்தி உடனே போய் பொண்ணு கேட்டுர்லாம் அப்பு..” தவிப்பாய்,அவர் சொல்ல அவனுக்கு கோபம் வந்தாலும்,இருந்த சோர்வில் வெளிப்படுத்தவில்லை.

 

“பய்படாத பா..”அவரைத் தேற்றி விட்டாலும்,அவன் இயல்பாக இல்லை.

 

வழமைக்கு மாறாய் சத்யாவும்,அவனுடன் தங்க வந்திருக்க,தாயுமானவரின் வேலை தான் எனப் புரிய,ஆயாசப் பெருமூச்சு விட்டுக் கொண்டான்,பையன்.

 

இரவு நேர குளிர்மை தேகத்தை தழுவ,முற்றத்திற்கு வந்து நின்ற பையனை அழைத்துக் கொண்டு அவ்விடம் வந்து சேர்ந்தான்,சத்யா.

 

“ஆரி..”

 

“என்னடா..?”

 

“எனக்கும் நீ போய் தங்கச்சி கிட்ட விருப்பத்த சொல்றது தான் சரின்னு தோணுது..”

 

“ஏன்டா பயப்பட்ற..? யாழ் பத்தி எனக்கு நல்லா தெர்யும்..சின்ன விஷயத்துக்கும் பட்டுன்னு டென்ஷன் ஆகற பொண்ணு..நா லவ் பண்றேன்னு..அந்த இன்டென்ஷன் இருந்து இருக்குன்னி தெரிஞ்சா அவங்களால நார்மலா இருக்க முடியாது டா..படிக்கிற பொண்ணு..படிச்சு முடிக்கட்டும்..அதுக்கற்பம் தாராளமா விருப்பத்த சொல்லி கல்யாணம் பண்ணலாம்..”

 

“இல்ல மச்சி..நீ இன்னும் வேல இல்ல அது இதுன்னு யோசிக்கிறதா அப்பா சொன்னாரு..பேசாம உங்க தாத்தா..” என்று அவன் இழுக்க,பையனின் பார்வையில் அமைதியானான்,தோழன்.

 

“உனக்குத் தெர்யும் தான சத்யா எல்லாம்..அப்றமும் ஏன்..?” கேட்ட கேள்வியில்,தோழனிடம் மௌனம்.

 

“என்ன பெத்தது வேணும்னா அவங்க ரெண்டு பேருமா இருக்கலாம்..ஆனா வளத்தது எல்லாம் அப்பா தான்..அதுவும் அவர் என் அம்மாவோட தம்பின்னு கூட எனக்கு தெரிஞ்சது விவரம் புரியுர வயசுல தான்..”

 

“………………..”

 

“பெத்தவங்க ரெண்டு பேருக்கும் மிஸ்அன்டர்ஸ்டான்டிங்..பிரிஞ்சுட்டாங்க..அவரு ஏதோ ட்யூமரோ கேன்ஸரோனு எறந்துட்டாரு..ஆனா பிரியுறப்போ நா அவருக்கு தேவலனு சொல்லிட்டு தான் போனாராம்..இவங்க இன்னொரு கல்யாணம் பண்ணி கிட்டு என்னயே மறந்துட்டு இருக்காங்க..இதெல்லாம் எனக்கு கொஞ்சம் கூட தெரியாம இருந்தது,அப்பாவால தான்..”

 

“………………….”

 

“இப்போ திடுதிப்புன்னு வந்து,பெத்தவரோட சொத்து என் பேர்ல இருக்கு ஏத்துக்கோன்னு சொல்றதுல எந்த விதத்துல நியாயம்..? அவங்க குடும்பத்துக்கு ஆம்பள வாரிசு இல்லங்குறதுக்காக நா தான் பலியாடா..? அந்த சொத்த ஏத்துகிட்டேன்னா காலம் முழுக்க அவங்களுக்கு பணிஞ்சு போவேன்..அவங்க உரிம கொண்டாடலாமுங்குற நெனப்பு அவங்களுக்கு..” கோபம் தெறித்தது,அவன் வார்த்தைகளில்.

 

“அப்பா என்ன தான் சொன்னாலும் என்னால அவங்க சொத்த ஏத்துக்க முடியாது..அந்த மனுஷனோட எதுவும் எனக்கு வேணாங்குற முடிவுல தான் நா இருக்கேன்..விட்டா அவங்க பிஸ்னஸ் மொத்தத்தயும் என் தலைல கட்டி பாத்துக்க சொல்லுவாங்க அவங்க..” எகிறியவனுக்கு,ஆத்திரம் அடங்க மறுத்தது.

 

●●●●●●●●●

 

(II)

 

தமக்கையின் வினாவில் ஒரு நிமிடம் அதிர்ந்தாலும்,அவளுக்கு காட்டாமல் சுதாரித்து நின்றான்,டாக்டர்.

 

“ஏன்கா இப்டிலாம் கேக்கற..? என்னாச்சு உனக்கு..?”

 

“சித்து இப்டி சிரிச்சு பேசி மழுப்பி சமாளிக்கலாம்னு நெனக்காத..தென்றலோட ஃப்ரெண்ட பாக்க போறோம்னு சொல்லி தான் கூட்டிட்டு வந்த அது ஓகே..ஆனா நீங்க ரெண்டு பேரும் நார்மலா இல்ல..ஏதோ ஒரு விஷயத்த மறக்கிறீங்க..”

 

“அப்டிலாம் இல்லக்கா..நீ என்னன்னு இப்போ இப்டி கேக்கற..?”

 

“சித்து பொய் சொல்லாதடா..” அதட்டியவளின் விழிகளில் பெரும் கலக்கம்.

 

“அக்கா சும்மா யோசிக்காத..எங்க ரெண்டு பேருக்கும் எடைல எந்த ப்ராப்ளமும் இல்ல..” அவன் அவளிடம் எடுத்துக் கூற,அரை மனதாய் ஏற்றவளுக்கு சந்தேகம் தீரவில்லை.

 

எல்லாம் சில மணி நேரம் தான்.அடுத்த நடந்ததில்,டாக்டரின் கன்னத்தை பதம் பார்த்திருந்தது,தமக்கையின் கரம்.

 

காதல் தேடும்.

 

2025.04.25

Click on a star to rate it!

Rating 4.7 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
2
+1
0
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. நீ தான் தென்றலுக்காக நல்லா அடி வாங்க போற டாக்டர் சித்து .. ஆர்யா உன்னோட காதல் ரொம்ப அழகானது .. உணர்வு பூர்வமா இருக்கு .. ஆனா இப்படி அவ கிட்ட சொல்லாம போனா எப்படி ..