Loading

3 – காற்றிலாடும் காதல்கள் 

 

வெள்ளைச்சாமி வீட்டிற்குக் கீதனோடு வந்து சேர்ந்தான் இந்திரன். அவர்களை ஒரு பெண்ணை அழைத்து வரும்படி கூறியனுப்பினர் இரு தாத்தாக்களும். 

“யாரு தாத்தா வராங்க?” இந்திரன் கேட்டான். 

“என் மவன் பொண்ணு டா. பேரு மிருணாளினி. பத்திரமா கூட்டிட்டு வாங்க டா. பட்டணத்துல வளந்த புள்ள பாத்து நடந்துக்கங்க.”என வெள்ளைச்சாமி பெருமையுடன் கூறினார். 

“ஏன் தாத்தா உன் மவன் தான் பட்டணத்துக்கு எப்பவோ குடி போயிட்டாங்களே நீ ஏன் இன்னும் தென்னந்தோப்புல தனியா பூதமாட்டம் காவல் காக்கற?” இந்திரன் கேட்டான். 

கீதன் சிரிப்புடன் அவனையும் வெள்ளச்சாமி தாத்தாவையும் பார்த்துக் கொண்டே அனைவருக்கும் இளநீர் சீவிக் கொடுத்துக்கொண்டிருந்தான். 

“நான் இந்த தோப்புல இருக்கறதுல உனக்கு என்ன டா வலிக்குது?”

“நீ போயிட்டா இந்த தோப்ப நானே வச்சிக்கலாம்னுதான்” எனக் கூறவும் வெள்ளைச்சாமி தாத்தா அவன் மீது இளநீர் குடித்து முடித்த கூடை எறிந்தார். 

“தாத்தா.. கொஞ்சம் நான் கவனிக்காம இருந்திருந்தா இந்நேரம் என் தலை காணாம போயிருக்கும். இப்படியா எறிவ?” எனப் பக்கவாட்டில் குதித்தபின் கேட்டான். 

“என் தோப்பு மேலயே எப்பவும் கண்ணா திரியற நீ! முதுகெலும்ப உருவி புடுவேன் பாத்துக்க. இது என் பேத்திக்கு டா. உரிமக்காரி! யோசிச்சு உனக்கு இங்க வேலை குடுத்தா தான்”  

“அப்ப உன் பேத்திய கட்டிக்குடுத்துரு எனக்கு” என அவன் கூறியதும் அப்துல் தாத்தா அவன் முதுகில் ஒன்றுப் போட்டபடிக் கயிற்றுக் கட்டிலில் அமர்ந்து, “அவ உனக்கு தங்கச்சி முறை டா தம்பி.“ எனச் சிரிப்புடன் கூறினார். 

“ஆமா இப்படியே ஊருல இருக்க அத்தனை வயசு பொண்ணுங்களையும் எனக்கு அக்கா தங்கச்சின்னு சொல்லி சொல்லியே எனக்கு காலம் போகுது. இங்க பாருங்க இந்த வருஷம் நீங்க மூணு பெரும் ஒரு நல்ல பொம்பள புள்ளையா பாத்து எனக்கு கட்டி வச்சிருங்க. இல்லைன்னா பௌர்ணமி ராவுல வர்ற தேவலோக கன்னிய நான் கட்டிக்கிருவேன்” என அவன் கூறவும் அனைவரும் சிரிப்புடன் அவனை இரயில்நிலையம் செல்லும்படி அனுப்பிவைத்தனர். 

காலையில் இருந்து மனவாட்டத்தோடு இருந்த கீதனும் இப்போது சிரித்த முகமாக இந்திரனுடன் பேசியபடி இரயில் நிலையம் வந்திருந்தான். 

“டேய் கீதா.. அந்த புள்ள பேரு என்ன சொன்னாங்க? எந்த பொட்டில வருதாம்?” என நடைபாதை வந்ததும் கேட்டான் இந்திரன். 

“இந்து.. பேரு என்னமோ மிருணாளினின்னு  சொன்னாங்க. எந்த பொட்டின்னு தெர்ல டா. அத அந்த தாத்தா சொல்லவே இல்ல.”

“சரிதான்.. எந்த பொட்டி எந்த பொண்ணுன்னு தெரியாம எப்புடி கண்டுபிடிக்கறது?”

“பேர சொல்லி கூப்பிடுவோம் மாப்ள. அந்த பேரு எல்லாம் அதிகம் யாரும் வைக்க மாட்டாங்க. வா“

“ஆமா டா. இது என்னடா பேரு மிருதங்கம் மாதிரில்ல வாய்ல வருது. அதுவும் மிருதங்கம் மாதிரி இருக்குமோ?”

“டேய் உனக்கு அது தங்கச்சியாம் டா. பாத்து பேசு”

“என்னத்த பாத்து என்னத்த பேசறது? ஊருல முக்கால் வாசி புள்ளைக எனக்கு அக்கா தங்கச்சி முறையாகுது. மிச்சம் மீதி வீட்ல பொண்ணுங்களே இல்ல. எல்லாம்பொதிமாடு கணக்கா ஆம்பள பசங்கள தான் பெத்துவிட்டு இருக்காங்க. சரி ஊருக்கு புதுசா ஏதாவது பொண்ணுங்க வருதான்னு பாத்தா அதுவும் வரது இல்ல. இப்படியே போனா நான் எப்ப கல்யாணம் பண்ணி புள்ளைங்கள பெத்து என் நெலத்துல வேலை பாக்க விடறது?” என அவன் பாட்டிற்கு பேசிக்கொண்டே ஒரு ரயில் பெட்டியின் வாசலில் சென்று நின்றான். 

“ஏண்டா உனக்கு நெலத்துல வேலை பாக்க புள்ள பெத்து குடுக்கவா பொண்ண தேடற?”கீதன் முறைத்தபடிக் கேட்டான். 

“ஆமா. பின்ன குடும்பத்த பெருக்க வேணாமா? புதுசு புதுசா வியாதி எல்லாம் வருதுல்ல. நம்ம நாட்டு சனத்தொகை கொறஞ்ஜிட கூடாதுல்ல.”

“சரி தான்.. ஆமா இந்து உனக்கு ஏது நிலம்?”

”வர்ற பொண்ணுகிட்ட அவ அப்பன் வீட்ல வாங்கிட்டு வர சொல்ல வேண்டியது தான்.”

“உன்ன நானே கல்யாணம் பண்ண விடமாட்டேன் டா. இப்படியாடா நெனைப்பு வச்சி சுத்திக்கிட்டு இருக்க நீ?”

“ஏம்மா மிருதங்கம்.. “

“டேய் மிருணாளினி டா..”

“என் வாய்ல வர்றது தான் பேரு. ஆமா நீ ஏண்டா எனக்கு வில்லன் ஆகணும்ன்னு பாக்கற?”

“பின்ன நீ உழச்சி நெலத்த வாங்கியிருந்தா கூட நீ சொன்னத ஒரு பேச்சுக்கு ஒத்துக்கிட்டு இருப்பேன். இல்லாத நெலத்த உழுவ உனக்கு பத்து புள்ளை பெத்துகுடுக்க பொண்ணு கேட்ட பாரு. அதுவும் அந்த நிலமும் அந்த பொண்ணே கொண்டு வரணுமா? உனக்கு எல்லாம் இந்த ஜென்மத்துல நானே கல்யாணம் நடக்க விடமாட்டேன் டா.“ ஒரு நொடி நிதானித்து “மிருணாளினி.. எங்க இருக்கீங்க?”என அழைத்தான். 

இருவரும் மாறி மாறி பேசியபடி இடையிடையே மிருதங்கம், மிருணாளினி என அழைத்துக் கொண்டிருந்தனர். 

அவர்கள் இருவரும் இரயில்நிலைய நடைப்பாதையில் நுழையும் போதே இருவிழிகள்ஸ்வாரசியத்துடன் பின்தொடரத் தொடங்கியது. அவர்கள் வந்ததில் இருந்து மேற்கொண்ட சம்பாஷனைகள் அனைத்தும் கேட்டுக்கொண்டே அவர்களைப் பின்தொடர்ந்த விழிகள் அவர்கள் ஒரு இடத்தில் அமரவும் அவர்கள் அருகே சென்று நின்றது. 

“மிஸ்டர். பகவத் கீதன்..“ எனத் தயக்கத்தோடு ஒலித்தன ஒரு பெண்ணின் குரல். 

“எஸ்..” என திரும்பியவன் கண்கள் அப்படியே நிலைக்குத்தி நின்றுவிட்டது. 

“ஏம்மா நீ தான் மிருதங்கமா?” என இந்திரன் கேட்டதும் அவள் அவனை முறைத்து, “மிருணாளினி” எனக் கூறினாள். 

”சரி இருக்கட்டும் ரெண்டும் ஒண்ணு போல தானே வருது. அவளோதானா உன் பொட்டி படுக்கை எல்லாம். ஏதும் உள்ளாரா இருக்கா?” என இந்திரன் கேட்டான். 

 

“இடியட். அங்க வச்சிருக்கேன் எடுத்து வண்டில வை. ஒரு பேர ஒழுங்கா சொல்ல முடியல இதுல இவருக்கு விவசாய நெலத்தோட பொண்ணு வேற வேணுமாம்.“ என அவள் கூறவும் இந்திரன் கோபம் கொண்டு அவளிடம் சண்டைக்கு நின்றான். 

“மிஸ். மிருணாளினி.. அவன் சும்மா விளையாட்டுக்கு சொன்னான். வெல்கம் டூ விண்ணூர்காரப்பட்டினம். இந்து பையெல்லாம் எடுத்துக்க”  எனக் கூறி அவளது கையில் இருந்த சிறிய பையை அவன் வாங்கிக்கொண்டு கார் இருக்குமிடம் சென்றான். 

இந்திரன் அவள் சொன்ன இடத்தைப் பார்க்க அங்கே 5 பெரிய டிராலி நின்றிருந்தது. இரண்டு இரண்டாக இந்திரன் அனைத்தையும் எடுத்து வந்து வண்டியில் வைக்கும் வரையிலும் இருவரும் சிரித்துச் சிரித்துப் பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்துக் கடுப்பாகி,“டேய் கீதா.. நான் ஒருத்தனே எத்தனய தூக்கிட்டு வர்றது? வந்து ரெண்டு பொட்டிய தூக்கிட்டு வந்து வை டா” எனக் கத்தினான். 

“அவரு எதுக்கு வரணும்? நீ தானே என் தாத்தான் தோப்ப ஆட்டைய போட பிளான் போடற? போய் எல்லாத்தையும் எடுத்துட்டு வந்து வை..“

“ஏன் புள்ள மிருதங்கம்.. உன்னைய பட்டணத்துல இருந்து வெரட்டி விட்டுட்டாங்களா? இத்தனைய தூக்கிட்டு வந்திருக்க?“

“மிருணான்னு கூப்பிடு மேன்..“

“என் வாய்ல வர்றத தான் கூப்பிட முடியும்.  உனக்கு நான் அண்ணன் முறை தெறிஞ்சிக்க.  வந்து ஒரு பொட்டிய தூக்கு வா.“

“அண்ணன் தானே நீ?தங்கச்சி பொட்டிய கூட நீ தூக்கமாட்டியா?“

மிருணாளினி இந்திரனுடன் சரிக்குச் சரியாக வாயாடிக்கொண்டிருப்பதைக் கீதன் இரசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தான். 

“டேய் கீதா..“

“கீதன்-ன்னு சொல்லு மேன்..”

“நான் கீதான்னு தான் கூப்பிடுவேன். என்ன நீ எதுக்கெடுத்தாலும் என்கிட்ட சண்டைக்கு நிக்கற? பொம்பள புள்ளையா அடக்க ஒடுக்கமா இருக்க சொல்லி தரலியா உங்க வூட்ல?”

 

“அடக்கம் ஒடுக்கம் உனக்கும் வேணுமா இல்லயா? புதுசா வந்த பொண்ணுகிட்ட இப்படி தான் பேசிட்டு இருப்பியா? உன் வீட்ல உனக்கு எதுவும் சொல்லி தரலியா?” என அவள் கேட்டதும் இந்திரன் அமைதியாகிவிட்டான். 

அதற்கு மேல் ஒரு வார்த்தை கூட அவளிடம் பேசவில்லை. அவளைத் தோப்பில் இறக்கிவிட்டு விட்டு வண்டியைக் கீதனிடம் கொடுத்துவிட்டு தன் இல்லம் சென்றுவிட்டான். 

அவன் அமைதியாகச் செல்வதுக் கண்டு,“என்னாச்சி உங்க இந்து அமைதியாகிட்டாரு?”என கீதனிடம் கேட்டாள். 

“அவன் வீட்டப்பத்தி நீ பேசினல்ல அதான் அமைதியாகிட்டான். அவன் குடும்பத்துல எல்லாரும் அவன் சின்ன பையனா இருக்கும்போதே இறந்துட்டாங்க. அவன் தனியா தான் இருக்கான்.”  எனக் கீதன் கூறியதும் அவளுக்கு மனம் கனமாகிப் போனது. 

“சாரி கீதன், நான் விளையாட்டுக்கு தான் அப்படி கேட்டேன். எனக்கு இப்படின்னு தெரியாது”  மனம் வருந்தி மன்னிப்புக் கேட்டாள். 

“அவனே காலைல சரியாகி உன்கிட்ட பேச வருவான் மிரு.. கவலைப்படாத.. நான் கெளம்பறேன். ஏதாவது தேவைன்னா எனக்கு கால் பண்ணு. இதான் என் நம்பர்” என ஒரு சீட்டில் எழுதிக் கொடுத்துவிட்டுச் சென்றான். 

“கீதன்.. ரொம்ப நன்றி. அருமையான வரவேற்பு குடுத்ததுக்கு. ஃபிரண்ட்ஸ்?”எனக் கைநீட்டினாள். 

“உன்ன வெறும் பிரெண்டா எல்லாம் என்னால பாக்க முடியாது மிரு. பி மை க்ரஷ். அது நாளைக்கு காதலாவும் மாறலாம். குட் நைட்” எனக் கூறி அவன் சென்றதில் அவள் அசையாது நின்றாள். 

“கிராக்க இருப்பானுங்க போல எல்லாரும்” எனத் தனக்குத் தானே பேசியபடி உள்ளே சென்றாள். 

“என்னம்மா மிருணா நம்ம ஊரு எப்படி இருக்கு?” எனக் கேட்டபடி வெள்ளைச்சாமி தாத்தா உள்ளே அவளிடம் வந்தார். 

“எல்லாருமே ஒரு டைப்பா தான் இருப்பாங்க போலவே தாத்தா” எனச் சொல்லி இரயில் நிலையத்தில் நடந்ததைக் கூறினாள். கீதன் செல்லும்போது கூறியதை மட்டும் மறைத்துவிட்டது கன்னியின் மனமும், புத்தியும்.

“ஹாஹாஹா.. இப்ப தானே கண்ணு நீ வந்திருக்க. போக போக நீயே எல்லாத்தயும் புரிஞ்சிப்ப. இங்க இருக்கறவங்க எல்லாரும் தேவருங்களுக்கு  கட்டுப்பட்டு இன்னமும் வாழறாங்க. பட்டணத்த மாதிரி இல்ல. நீ வந்து சாப்பிடு. எனக்கு மதியம் செஞ்சத வச்சிக்குவேன். இப்ப நீ  வந்திருக்கறதால ராத்திரிக்கும் சமைக்க சொன்னேன்” எனப் பேசியபடித் தட்டுகளை எடுத்துவைத்தார். 

மனைவி மண்ணுலகை விட்டுச் சென்றபின் அவரே அவரின் வேலைகளைச் செய்யப் பழகிக் கொண்டார். பேத்தி வந்து அவருடன் தங்குகிறேன் என்று கூறியதும் அவரின் தனிமை சிறிது காலம் விலகிச் சென்றிடும் என்ற ஆவல் அவரது செயல்களில் நன்றாக மிருணாவினால் உணர முடிந்தது. 

அவளும் தானே உள்ளே இருக்கும் வேதனையைக் கடக்க இங்கே வந்திருக்கிறாள். இருவரின் வேதனையும் அவர்களைக் கடந்து சென்றிடுமா?  

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்