Loading

தீயில் தென்றலாய் உறவிதுவோ!

“வணக்கம்! இன்றைய முக்கிய செய்திகள். நாகர்கோவிலை அடுத்த காளையம் தொகுதிக்கு கீழ் அமைந்திருக்கும் வெள்ளைப்பாளையம் என்ற நகராட்சிக்கு அருகில் உள்ளது கன்னிமனூர் கிராமம். கடந்த ஒரு மாதமாக, கன்னிமனூரை சேர்ந்த இளைஞர்கள், அவர்களின் ஊரை தனி நகராட்சியாக அறிவிக்க போராட்டம் நடத்தி வருகின்றனர். அதனைக் குறித்து இன்று சட்டசபையில் பேச்சு வார்த்தை தொடங்க உள்ளது. அதற்கான காரணம் என்ன, தற்போது அங்கு என்ன நிலவரம் என்பதை, சம்பவ இடத்தில் இருக்கும் நமது செய்தியாளர் நிர்மலாவிடம் கேட்கலாம்.” பெண் செய்திளார் இளஞ்சிவப்பு சாயம் பூசிய இதழ்களை ஈரப்படுத்திக்கொண்டு, எதிர்முனையில் பேசினார்.

“வணக்கம் நிர்மலா! இப்போது அங்கு என்ன மாதிரியான நிலவரம் உள்ளது நிர்மலா?”

“வணக்கம் சீதா. நான் இப்போது சட்டசபை வளாகத்திற்கு வெளியில் தான் நிற்கிறேன். ஆளுங்கட்சி அலுவலகம் முன்பு தான் கன்னிமனூர் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆகினும் அந்த கிராமத்தின் இளைஞர்கள் சிலர் இங்கும் காணப்படுகின்றனர். அவர்களின் கோரிக்கை என்னவென்றால், கன்னிமனூர் கிராமத்தை தனி நகராட்சியாக அறிவித்து, அங்கு மருத்துவமனை, பள்ளிக்கூடம், கல்லூரி என அனைத்து விதமான வசதிகளையும் செய்து தர வேண்டும் என்பது தான். கட்சி தலைவர்களும், காவலர்களுமே அவர்களை அடக்க இயலாமல் திணறுகிறார்கள்.” என்று கூறி முடித்தாள் நிர்மலா.

“நிர்மலா, திடீரென அந்த ஊர் மக்களுக்கு எதனால் இப்படி ஒரு எண்ணம் வந்தது என்று தெரியுமா?” என சீதா வினவ,

“அதனைக் குறித்து இப்போது கன்னிமனூர் ஊராட்சியில் வசிக்கும் இளைஞர் ஒருவர் பகிர்வார் சீதா” என்றபடி மைக்கை ஒரு இளைஞனை நோக்கி திருப்பினாள்.

சாயம் போன கைலியை அணிந்திருந்தவன், கரங்களில் ‘மாத்து மாத்து! எங்கூர நகராட்சியா மாத்து!’ என எழுதப்பட்ட அட்டை ஒன்று இருக்க, அந்த இளைஞன் பேசத் தொடங்கினான்.

“வணக்கமுங்க. என் பேரு மாரிமுத்து. எங்கூரு பல வருசமா எந்த ஒரு முன்னேத்தமும் இல்லாம தா மேடமு இருக்குது. ஆஸ்பத்திரிக்கோ, புள்ளைங்க படிப்புக்கோ, டவுனுக்கு பஸ்ஸு புடிக்கவோ நாங்க ஏழெட்டு கிலோ மீட்டர் நடந்து, வெள்ளைப்பாளையத்துக்கு தான் போவ வேண்டியதா இருக்கு. அங்கனயும் மேல் சாதிக்காரங்க, எங்கள மாதிரி கீழ் சாதிக்காரங்கள பள்ளிக்கூடத்துல கூட சேக்க மாட்டுறாங்க. பஸ்ஸுலயும் ஏற விடமாட்டுறாங்க. புள்ளத்தாச்சி புள்ளையை ஆஸ்பத்திரிக்குள்ள கூட விட மாட்டுறாங்க…! இதுக்கு ஒரு முடிவு தெரிஞ்சே ஆகனுங்க மேடமு…” என அங்கலாய்த்தான்.

அவனை அமைதி படுத்திவிட்டு, கேமரா முன் திரும்பிய நிர்மலா, “தற்போது மாரிமுத்து மூலமாக பிரச்சனையின் அளவு புரிகிறது சீதா. அது மட்டுமல்லாமல், இன்று கட்சி தலைவர்கள் கூடி இந்த போராட்டத்தின் உட்பொருளை உணர்ந்து, இவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதா வேண்டாமா என்ற தீவிர வாக்குவாதத்தில் உள்ளனர். அதுமட்டுமல்லாது, இவர்களின் போராட்டத்தை ஆரம்பத்திலிருந்தே ஆதரித்து வந்த காளையம் தொகுதி எம். எல். ஏ. ஜிஷ்ணு தர்மன், தற்போது தான் சட்டசபைக்கு வந்திறங்கி இருக்கிறார்.

ஆளுங்கட்சியை பொருத்தவரையில், அமைச்சருக்கு வலது கையான ஜிஷ்ணு தர்மனால் எடுக்கப்படும் முடிவு சரியானதாக இருக்கும் என்று அமைச்சர்களும், கன்னிமனூர் மக்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர் சீதா. கூடிய விரைவில் இது குறித்து நல்லதொரு முடிவை அரசாங்கம் எடுக்கும் என நம்பப்படுகிறது.” என்று பேசிக்கொண்டே சென்றவள், ஜிஷ்ணு தர்மனின் வெள்ளை நிற ஆடி காரை பார்த்து விட்டு, வேகமாக அவனருகில் சென்றிட, கேமராவும் உடன் சென்றது.

வெள்ளை வேஷ்டி, சாம்பல் நிற சட்டையில் காரை விட்டு இறங்கியவன், நெடு நெடுவென வளர்ந்திருந்தான். திருத்தமாக சிகையை வெட்டி இருந்தவன், அது அசையாதது போன்று ‘ஜெல்’ தடவி இருப்பான் போலும். அதுவும் தலைவனின் கட்டளைக்கு இணங்க, நெற்றியில் படராமல் அடக்கமாக இருந்தது.

ஆனால், சிகைக்கு இருக்கும் அடக்கமும் பணிவும் தனக்கு இல்லை என்ற ரீதியில், குளிர் கண்ணாடியை, அழுத்த விழிகளை மறைத்து அணிந்தவன், “சார்…” என நிர்மலா பேச வந்ததில், ஆள் காட்டி விரலை நீட்டி அங்கேயே நிற்கும் படி எச்சரித்து விட்டு, புயலாக அலுவலகத்தினுள் நுழைந்தான்.

தொலைக்காட்சி அவனின் ஒவ்வொரு அசைவையும் ஒளிபரப்பிக் கொண்டிருக்க, அதனை பார்த்த வசுந்தரா முகம் சுளித்தாள்.

“என்னப்பா இது? இவங்களுக்குலாம் என்ன ஆச்சு? அதெப்படி ஒரு கிராமத்தை உடனே நகராட்சியா அறிவிப்பாங்க. சுத்த நான்சென்ஸ் ஆ இருக்கு!” என்றவள் தொலைக்காட்சி சத்தத்தை முற்றிலும் குறைத்தாள்.

வெள்ளைப்பாளையம் நகராட்சியின் முக்கிய பிரமுகரும், ஜாதித் தலைவருமான ராஜசேகர் “இந்த பயலுக… போலீசுட்ட தர்ம அடி வாங்கிட்டு தான் வரப்போறானுங்க. என்ன தான் கீழ் சாதி பயலுகளா இருந்தாலும், நம்ம ஊருல எல்லா வசதியையும் அனுபவிக்க இடம் குடுத்தோம்ல. அதான் சாதி புத்திய காட்டுறானுங்க.” என்று பல்லைக்கடித்தார்.

வசுந்தரா அதனை தவிர்த்து, “ப்பா. எனக்கு ஒரு விஷயம் புரியவே இல்ல. கன்னிமனூர் கிராமத்தோட பின் பகுதி முழுக்க, மலைகள் தான் இருக்கு. அந்த ஊர் மக்கள் வெளியூர் போகனும்ன்னா கூட நம்ம ஊர் வழியா தான் வந்தாகனும். கன்னிமனூர்க்கு இன்னும் பக்கத்துல தான் காட்டூர் இருந்தாலும் அந்த ஊருக்கு நேரடியா போக பாதை இல்ல.

இப்போ, கொஞ்ச நாளா நம்ம ஊருக்கும் கன்னியமனூருக்கும் கைகலப்பு வேற ஆகிட்டு இருக்கு. இப்படியே போச்சுன்னா அவங்களோட வாழ்வாதாரம் என்ன ஆகும்? என்ன தைரியத்தில இப்படி அகல கால் வைக்கிறாங்க…?” எனக் கேட்டவள், சிவப்பு சாயம் பூசப்பட்ட நகங்கள் கொண்டு நெற்றியை நீவி விட்டாள்.

ராஜசேகரோ, “ம்மா… இவனுங்க என்ன தைரியத்தில ஆடுறானுங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும். எல்லாம் அந்த வேற சாதிப் பய தர்மாவால தான். அவனுக்கு நம்ம ஊரு சார்பா ஒத்த ஓட்டு கூட விழுகல. ஆனா, சுத்தி இருக்குற ஊர்ல எல்லாம் அவனுக்கு செல்வாக்கு இருக்கு.

எதை எதையோ பேசி எல்லாரையும் கைக்குள்ள போட்டு வைச்சுருக்கான். அவனும் அவனுக்கு இருக்குற திமிரும். வெள்ளப்பாளையத்துல இருக்குற வசதி சுத்தி இருக்குற பதினாறு கிராமத்துக்கும் இல்ல. நம்ம ஊருல பேக்டரி கட்டி, பாலம் போட மனு குடுத்தேன். அத கிணத்துல போட்ட கல்லு மாதிரி அவன் பிரிச்சு கூட பாக்கல. ஆனா, இப்ப அந்த ஈத்தர பிடிச்ச ஊர, ஏதோ அமெரிக்காவா மாத்த போற மாதிரி அவனுங்களை ஆட வைக்கிறான்… நம்ம சாதி பயலுங்க, அவனுங்க ஊர்ல போய் வேல பாக்கணுமா…? வசும்மா அப்படி மட்டும் இவன் எதையாவது செஞ்சான், சாதி தலைவரா நான் எடுக்குற முடிவு ரொம்ப மோசமா இருக்கும்…” என்று சினம் பெருக எச்சரித்தார்.

அவரைக் கையை கட்டிக்கொண்டு பார்த்த வசுந்தரா, டேபிளின் மீதிருந்த நீர் குவளையை எடுத்து கொடுத்து, “முதல்ல குடிங்க!” என்றாள் அதட்டலாக.

அவரும் அதனை வாங்கி ‘மடக் மடக்’ என குடிக்க,

அவளோ “மிஸ்டர். ஜாதி தலைவர் ராஜசேகர். என்கிட்ட அப்பாவா பேசுனீங்கன்னா நானும் மகளா பேசுவேன். ஜாதிக்கு முக்கியத்துவம் தர்ற ஜாதித்தலைவர் மாதிரி பேசுனா, நானும் வக்கீலா பேச வேண்டியது வரும். என்ன மேல்ஜாதி கீழ்ஜாதி? எல்லாரும் மனுசங்க தான. இத்தன வருஷமா கன்னிமனூருக்கும் நம்ம ஊருக்கும் ஒரு சின்ன சண்டையோ, மனஸ்தாபமோ வந்தது கூட இல்ல. ஆனா, இப்போ என்ன ஆச்சு? திடீர்ன்னு ஏன் இந்த ஈகோ?” எனக் கேட்டாள் முறைப்பாக.

அவள் பேசியதைக் கேட்டு, தலையில் நறுக்கென கொட்டிய அவளின் தாய் மரகதம், “ஏன்டி! எம்புட்டு தைரியம் இருந்தா அப்பாவை பேர் சொல்லி கூப்டுவ. நாலு எழுத்து படிக்க வைச்சா தலைக்கணம் வந்துடுமோ…” என திட்ட, அவள் அதனை கண்டுகொள்ளவே இல்லை.

ராஜசேகர் தான், “விடு மரகதம். நானும் என் மகளும் பேசிட்டு இருக்கறப்ப நீ ஏன் இடைல வர்ற…?” என்று அவரிடம் எகிற,

“உங்களுக்காக பேசுனேன்ல எனக்கு இதுவும் வேணும் இன்னுமும் வேணும். இந்தாங்க ரெண்டு பேரும் காபியை குடிச்சுட்டு, என்னமும் பேசுங்க!” என்று சலித்து விட்டு, நகர்ந்தார்.

வசுந்தராவின் இதழ்கள் புன்னகையில் விரிய, ராஜசேகரும் மெல்ல சிரித்து விட்டு,

“வசும்மா. நம்ம ஊர பொறுத்தவரை ஜாதி பேரை சொல்லி கலவரம் உண்டு பண்ணுற ஆள் யாரும் கிடையாது. நம்ம சாதி மூலமா எல்லா சாதிக்காரனுங்களும் நல்லா வாழ்ந்தாங்கன்னு தான் இப்ப வர பேர் வாங்கிட்டு இருக்கோம். ஆனா, எல்லாத்துக்கும் ஒரு எல்லை இருக்கு. அதை கன்னிமனூர்க்காரனுங்களும், அந்த எம் எம் ஏ தர்மனும் மீறுனா, நமக்கும் சூடு சொரணை இருக்குன்னு நம்ம காட்டி தான் ஆகணும்…” என அவர் பேசும்போதே, வசுந்தரா ஏதோ சொல்ல வர, அவளை பேச விடாமல், “ஆனா, உங்கிட்ட கேட்காம எதுவும் செய்ய மாட்டேன். போதுமா…” என்றார்.

அதில் மெல்ல புன்னகைத்தவள், “கொஞ்சம் பொறுமையா இருங்கப்பா. எப்படியும் இவன், அந்த ஊருக்கு எந்த நல்லதும் செய்ய மாட்டான். சும்மா நல்லது செய்ற மாதிரியும், கன்னிமனூர் மக்கள் அவனை நம்புறதுக்காகவும் சீன் போடுறான். நீங்க வேணும்னா பாருங்க. இப்போ கட்சி மீட்டிங் முடிஞ்சு வெளிய வந்து, ‘உங்க ஊருக்காக, ஸ்கூலு கட்டுறேன், பாலம் போடுறேன், ஆஸ்பத்திரி கட்டுறேன். ஆனா இதெல்லாம் எலக்ஷன் முடிஞ்சு ஒன்னு ஒன்னா செய்றேன்’னு சொல்லி சமாளிப்பான். அதை நம்பி இவங்களும் போராட்டத்தை கை விட்டுடுவாங்க. இன்னும் ஆறு மாசத்துல வர்ற எலக்சன்லயும் சார் ஜெயிக்கணும்ல.” என்றாள் இளக்காரமாக.

சற்றே சிந்தித்த ராஜசேகர், “அப்டியாம்மா சொல்ற? இதான் நடக்குமா?” எனக் கேட்டிட,

“ப்பா, இதுவரை என்னோட கெஸ்ஸிங் எப்போவும் தப்பானது இல்ல. அதுனால தான, எனக்கு நம்பர் ஒன் யங் க்ரைம் வக்கீல்ன்னு அங்கீகாரம் குடுத்து இருக்காங்க…” என்றபடி புருவத்தை உயர்த்தி உறுதியாகக் கூறினாள்.

அவள் கூறிய தோரணையில் தந்தையும் மகளும் நகைக்க, அந்நேரம் மீண்டும் செய்தியாளரின் முகம் தொலைக்காட்சியில் மின்னியது. உடனே, சத்தத்தை அதிகமாக வைத்தவள், விடை தெரிந்த ஏளனத்தோடு அதனை கவனித்தாள்.

“வணக்கம். சற்று முன் வெளியான செய்திகள். கன்னிமனூர் கிராமத்தை நகராட்சியாக அறிவிக்கும் பொருட்டு, அந்த கிராம மக்கள் போராட்டம் செய்ததை அடுத்து, இன்று கட்சி தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது.

அதன் வெளிப்பாடாக, கன்னிமனூர் கிராமத்தை நகராட்சியாக அறிவித்து, அங்கு அனைத்து விதமான வசதிகளையும் செய்யும்படி அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் நீலகண்டன், தற்போது அதனை குறித்து சட்டசபையில் பேசி, மற்ற எம். எல். ஏக்களின் பெரும் ஆதரவோடு அச்சட்டத்தை இயற்ற முன்வந்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர்கள் இந்த முயற்சியை முறியடிக்க, சட்டசபையில் கடும் வாக்குவாதம் மேற்கொள்ள, இறுதியில் எம். எல். ஏ ஜிஷ்ணு தர்மன், அவரின் பேச்சுத் திறமையால் சட்டசபையை அமைதியாக்கி, இறுதி வரை, இச்சட்டத்தை இயற்றவேண்டும் என்று உறுதியாக அனைவரையும் வலியுறுத்தினார். அதன் மூலம், அமைச்சர் நீலகண்டன் தற்போது, செய்தியாளர்களை சந்திந்து பேசி உள்ளார். அந்த காணொளி இப்போது உங்களுக்காக…” எனப் பேசிய செய்தியாளப் பெண்மணிக்கு பதிலாக, அமைச்சர் நீலகண்டனின் முகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

அவருக்கு பின் ஜிஷ்ணு தர்மன் நிற்க, நீலகண்டன், “கன்னிமனூர் கிராமத்தை நகராட்சியாக அறிவிக்க, அனைவரும் ஒரு மனதோடு முடிவெடுத்துள்ளோம். இன்னும் சில தினங்களில் சட்டப்படி, அறிவிக்கப்படும்.” என்று ஒவ்வொரு வார்த்தையாக நிறுத்தி நிறுத்தி பேசியவர்,

“நான் அவசரமாக கிளம்ப வேண்டியுள்ளதால், அதனை குறித்து, எம்.எல்.ஏ தர்மன் அறிக்கையை தொடர்வார்…” எனப் பேசிக்கொண்டே வேகமாக காரில் ஏறி அமர்ந்தார். அவர் காரில் ஏறும் வரை, அவருடனே சென்ற ஜிஷ்ணு தர்மன், கதவை திறந்து, அவரை வழியனுப்பி விட்டு, மீடியாவின் புறம் திரும்பினான்.

“சார்… கன்னிமனூர் கிராமத்தை நகராட்சியா அறிவிக்க எப்படி எல்லாரும் ஒத்துக்கிட்டாங்க. அதுவும் இவ்ளோ சின்ன டைம் கேப்ல…” என்று ஒரு பெண்மணி கேள்வி கேட்க தொடங்க, ஜிஷ்ணு கணீர் குரலில், “எப்படி ஒத்துக்கிட்டாங்கன்னு கேட்குறீங்களா? இல்ல ஏன் ஒத்துக்கிட்டாங்கன்னு கேக்குறீங்களா?” என ஒரு புருவத்தை உயர்த்தினான்.

“இல்ல சார். ஒரு அடிப்படை வசதி கூட இல்லாத கிராமத்தை நகராட்சியா அறிவிக்க வேண்டிய அவசியம் என்ன வந்துச்சு…” என்று அவள் முடிக்க கூட இல்லை, போட்டிருந்த கண்ணாடியை கழட்டி சட்டையில் துடைத்த படியே, “இப்போ நீங்க காலைல சாப்பிட வேண்டிய அவசியம் ஏன் வந்துச்சுன்னு நான் கேட்டா என்ன பதில் சொல்லுவீங்க மிஸ்? ம்ம்?” சற்றே திமிராக வெளிவந்தது அவன் பதில்.

மற்றொருவன், “சார்… இப்போ நகராட்சியா அறிவிச்ச கன்னிமனூர் கிராமத்துக்கு என்ன எல்லாம் செய்யப் போறீங்க?” என வினவ,

“நகராட்சியில என்னல்லாம் இருக்குமோ அதெல்லாம் தான் செய்யப்போறோம். கூடிய சீக்கிரம் அத பத்தின அறிவிப்பும் வரும்…” என்றவன் அதற்கு மேல் பதிலளிக்க முடியாது என்ற ரீதியில் அவனின் காரை நோக்கி நடக்க, அவனை பின் தொடர்ந்த செய்தியாளர்கள், “ஒரு நிமிஷம் சார்… இன்னும் ஆறு மாசத்துல எலக்ஷன் இருக்குறனால, மக்கள் போராட்டத்தை ஆதரிச்சு கண் துடைப்புக்காக ஆதரவு அளிக்கிறீங்கன்னு எதிர்க்கட்சி எம்.எல்.ஏ தினகரன் பேட்டியில சொல்லி இருக்காரு. எலக்ஷன்ல ஜெயிக்கிறதுக்காக தான் இதை மெனக்கெட்டு செய்றீங்களா. இதனை பத்தின உங்க கருத்து என்ன சார்…” மற்றொருவன் மைக்கை அவன் முன் நீட்ட,

அவனோ கார் கதவை திறந்த படி, அசட்டையாக “ஆமா, எலக்ஷன்ல ஜெயிக்கணும்ன்னு தான் செய்றேன். ஏன் அதுல உங்களுக்கு எதுவும் ப்ராப்ளமா?” விழி சுருக்கி ஒரு நொடி எக்ஸ்ரே பார்வை பார்த்தவன், விருட்டென காரில் ஏறி பறந்து விட்டான்.

‘ஒரு கேள்விக்கு ஒழுங்கா பதில் சொல்றானா…’ என செய்தியாளர்கள் வாய்க்குள்ளேயே முணுமுணுத்து விட்டு, அடுத்த ஆளை பேட்டி எடுக்க நகர, இங்கோ வசுந்தரா அதிர்ச்சியின் உச்சத்தில் இருந்தாள்.

ராஜசேகரோ, கடும் கோபத்தில் கொதிக்க, “பார்த்தியா வசு. என்னமோ அவன் சமாளிப்பான்னு சொன்ன… இப்போ என்னன்னா இப்படி பண்ணி வைச்சுருக்கான்!” என்று மூச்சிரைத்தார்.

அவளுக்கும் அதே எண்ணம் தான். சற்றே எரிச்சலும் கூட. தான் ஒன்று நினைக்க, இவன் விஷயத்தில் தன்னுடைய கணிப்பு பொய்யாகி விட்டதே… என்ற கடுப்பு ஒருபுறம்.

“அப்பா… அரசியல்வாதி ஆதாயம் இல்லாம எதுவுமே பண்ணமாட்டான். இதுல கண்டிப்பா ஏதோ தப்பு இருக்கு.” என அரையிறுதியிட்டு உரைத்தவள், ‘இதை நான் கண்டுபிடிக்கல, நான் வக்கீல் வசுந்தரா இல்லடா.’ என மனதினுள் கறுவிக் கொண்டாள். அங்கோ காரில் பயணம் செய்திருந்த ஜிஷ்ணுவின் இதழ்கள் ஏளனத்துடன் வளைந்தது.

“ஜீ… நீங்க நினைச்ச மாதிரியே எல்லாத்தையும் நடத்திட்டீங்க. வாழ்த்துகள் ஜீ…” என்றான் ஜிஷ்ணுவின் ஆஸ்தான பி. ஏ. கௌரவ்.

கால் மேல் கால் போட்டு அமர்ந்த ஜிஷ்ணுவோ, “ச்சு ச்சு ச்சு…” என தலையை மறுப்பாக ஆட்டி, “இன்னும் நான் நினைச்சத நடத்த ஆரம்பிக்கவே இல்லையே!” என கேலி நகை புரிந்தவன், ஏதோ சிந்தித்தவாறு, “ம்ம்ம்ம்… அந்த வக்கீலு பேரு என்ன?” என்று கேட்டபடி நெற்றியை நீவினான்.

“வசுந்தரா சார்…” கௌரவ் மறுநொடி ஆர்வமாக உரைக்க, அவனை ஒரு மாதிரியாக பார்த்தவன், “அவள் மேல ஒரு கண்ணு இருக்கட்டும். நமக்கு எதிரா ஏதாவது செய்றான்னு தெரிஞ்சாலே அடுத்த நிமிஷம் அவ என் முன்னாடி நிக்கணும்! காட் இட்?” என உத்தரவிட்டான், மனதிலோ, ‘இனிமே நீ அடிக்கடி என் முன்னாடி வர வேண்டியது இருக்கும்டி…’ எனக் கறுவிக் கொண்டான்.

தென்றல் வீசும்…
டின்பீர்

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
5
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. Janu Croos

      ஏன்மா வசுந்தரா…ஜிஷ்ணு நல்லது தானே பண்றான். நீ ஏன்மா அவன் மேல இவ்வளவு காண்டா இருக்க? பத்தாக்குறைக்கு அவனும் நீ என்ன பண்ணுவனு எதிர்பார்த்து இருக்க மாதிரி தானே இருக்கு. உங்க ரெண்டு பேருக்கும் அப்போ ஒத்து வராதா? அப்படி என்ன பிரச்சினை உங்க ரெண்டு பேருக்குள்ள?

    2. Archana

      இவனும் சாதாரண அரசியல்வாதி மாறி இருக்க போறானா🤔 இவங்க ரெண்டு பேர் குள்ள முன்னாடியே ஏதாவது பிராப்ளம் இருக்குமா🤔🤔🤔அடுத்த எபிக்கு வெயிட்டிங்😇😇