
கீதை 3
“எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றொருவருடையதாகிறது.! அப்படித் தான் அந்த ஆராவும் ஆதித்” என்ற மஹதியின் குரல் கேட்ட நொடியில் அவளை உதறி தள்ளிவிட்டுப் பஞ்சணையில் இருந்து எழுந்து நின்றவனின் முகம் கோபத்தைத் தத்தெடுத்தது.
“என்ன பார்க்கிற ஆதித்.? கீதையில கிருஷ்ணன் சொன்னது, அதை இந்த ஆதித் கிருஷ்ணாக்கு நினைவு படுத்துறேன்” நக்கல் தொனிக்கச் சொன்னவள் மெத்தையில் இருந்து இறங்கி அவன் நேரேதிரே நின்றாள் மஹதி.
“மஹதி.! நீ எதுக்கு என்னுடைய ரூம்க்கு வந்த.? ஃப்ர்ஸ்ட் நீ ஏன் க்ரிஷ்ன்னு கூப்பிட்ட.”
“அது தானே உன்னோட பேர் ஆதித்”
“க்ரிஷ்ன்னு கூப்பிட என்னோட ஆராக்கு மட்டும் தான் உரிமை இருக்கு”
“ஆரா.! ஆரா.! எப்போ பார்த்தாலும் அந்த ஆரா தானா உனக்கு, உன் பின்னாடியே அலையுற என்னைப் பார்க்கவே மாட்டியா.? நான் உன் கண்ணுக்கு தெரியவே மாட்டேனா ஆதித்.?”
“மஹதி.! உன்னோட பிடிவாதத்துக்கு நான் பலியாக முடியாது, உன்னால ஆனதை பார்த்துக்கோ”
“நீ ஆராவை பத்தியே பேசிட்டு இருக்கிறதை லாவண்யாகிட்ட சொல்லிடுவேன் ஆதித்”
“சொல்லிக்கோ” என்று அலட்சியமாய்ச் சொன்னவன் குளியலறைக்குள் புகுந்துக்கொண்டான்.
கண்களில் ஆத்திரம் பொங்க கீழே இறங்கி வந்தவள் முதலில் லாவண்யாவிடம் தான் முறையிட்டாள்.
“அண்ணி நீங்க கவலைப்படாதீங்க, நான் அண்ணாகிட்ட பேசுறேன்” என மஹதியை ஆறுதல் படுத்துக்கொண்டிருந்தாள் லாவண்யா.
“ஹேய் லாவண்யா.! காலேஜ் போகணும்ல வந்து கிளம்புடி” எனக் கத்தினார் யசோதா.
“ம்மா வரேன்ம்மா” எனச் சொன்னவள் மஹதி புறம் திரும்பி.
“ஆமா இன்னைக்கி எதோ நல்லா நாள்ன்னு சொன்னீங்க என்ன அண்ணி” என்று விசாரித்தாள் லாவண்யா.
“என்னோட பிறந்த நாள் லாவா” எனச் சொன்னவளின் முகத்தில் கோபம் குடிக்கொண்டிருந்தது.
“மேக்கப் கொஞ்சம் தூக்கலாக இருக்கும் போதே கேட்கணும்னு நினைச்சேன் இது தான் விசயமா, ம்மா இன்னைக்கி அண்ணிக்கு பர்த் டேவாம்” என அண்ணியிடம் துவங்கி அன்னையிடம் முடித்திருந்தாள் லாவண்யா.
“மஹதி உனக்குப் பிறந்தநாளா.?ஏன் சொல்லலைம்மா.?பிறந்த நாள் வாழ்த்துக்கள்டா” எனச் சொல்லி அவளைக் கட்டிக்கொண்டார் யசோதா.
“ஆதித்கிட்ட சொல்லிட்டு உங்ககிட்ட சொல்லலாம்ன்னு பார்த்தேன், ஆனால் ஆதித் அந்த ஆராவை பத்தி பேசி என்னைக் கஸ்டபடுத்துறார் அத்தை” எனக் குறைபட்டுக்கொண்டாள்.
“நான் பேசுறேன்ம்மா அவன்கிட்ட நீ கவலைப்படாதே, முதலில் கோவிலுக்குப் போயிட்டு வா இன்றைக்கு ஈவினிங் பர்த்டே பார்ட்டி நம்ம பேலஸ்லையே அரேஞ்ச் பண்ணிக்கலாம்” எனப் புன்னகைத்த யசோதாவை கன்னம் தொட்டு கொஞ்சினாள் மஹதி.
“தேங்க்ஸ் அத்தை கோவிலுக்குப் போயிட்டு வர்ரேன்” எனச் சிட்டாய் பறந்திருந்தாள் .
சில விநாடிகளில் குளித்து முடித்துக் கீழே இறங்கி வந்தான் ஆதித்.
“ஆதித்.!” அழைத்த கோதண்டம் ஷார்ட்ஸிலிருந்து கோர்ட் சூட்டுக்கு மாறியிருந்தார் அவர் அலுவலகத்திற்குத் தயாராக இருப்பதைப் புரிந்த கொண்ட ஆதித் கிருஷ்ணா.
“டாட்.! இன்னைக்கு மீட்ங்கை நானே பார்த்துக்கிறேன், நீங்க வரவேண்டாம்” எனச் சொல்லி நகர முற்பட்ட போது.
“ஆதித் கண்ணா உனக்குப் பிடித்த பூரி பண்ண சொல்லிருக்கேன் சாப்பிட்டு போடா” அன்னையின் குரல் தடுத்தது.
“இல்லை மாம் இட்ஸ் ஆல்ரெடி லேட்” எனப் பதிலுரைத்தவன், மீண்டும் தந்தையைப் பார்த்து,
“டாட் நீங்க வர வேண்டாம்”
“ஏன் வரக்கூடாது.? நீ சொல்றதை தான் எல்லாரும் கேட்கணுமா நான் கேட்கமாட்டேன்டா” என அதிகாரமாய் அவர் கத்திக்கொண்டிருந்த போதே விக்னேஷ் அங்கு வந்து சேர்ந்திருந்தான்.
“பாஸ் டைம் ஆயிடுச்சு போகலாமா.?” அவன் பங்குக்கு அவன் வந்து நிற்க,
“டேய் விக்கி.! ஆதித் என்னை மீட்டிங் அட்டன் பண்ண வரக் கூடாதுன்னு சொல்றான் என்ன சங்கதி” எனக் கடுகடுத்தார் கோதண்டம்.
“அங்கிள்.! மீட்டிங்கல அரசியல் தலையீடு இருக்ககூடாதுன்னு பாஸ் நினைக்கிறார்”
“ஓ நான் மீட்டிங்ல கலந்துகிட்டால் அரசியல் தலையீடு வந்திடுமா.?”
“அங்கிள்.! இது கவர்மென்ட் டென்டர் பத்தின மீட்டிங், அதான் கொஞ்சம் சீக்ரெட்டா இருக்கணும்னு பாஸ் இந்த முடிவை எடுத்திருக்கிறார்” அவன் விவரித்த போது கோதண்டம் புஸூ புஸூவென மூச்சை விட்ட படி ஆதித்தை முறைக்க.
“ஜெகன் அங்கிள் மீட்டிங்கில் கலந்துக்கச் சொல்லிட்டாரு போல, அதான் கோபம் கொப்பளிக்குது” என நக்கலாய் பேசிய ஆதித் கிருஷ்ணாவை முறைத்துவிட்டு தன் அறைக்குள் சென்றார் கோதண்டம்.
ஏ.கே குழும நிறுவனத்தின் (A.K GROUP OF COMPANIES) நிர்வாகத்தைக் கடந்த ஐந்து வருடங்களாக நடத்தி வருபவன் ஆதித் கிருஷ்ணா தான்.
ஆனால் அதனுடைய ஆணி வேரை ஊன்றியது கோதண்டம் என்றாலும், தொடர்ந்து நஷ்டத்தில் போய்க்கொண்டிருந்த நிறுவனத்தை, லாபத்தின் உச்சத்தில் போய் நிறுத்தியிருந்தான் ஆதித் கிருஷ்ணா. கடின உழைப்பை காட்டிலும் அனைத்திற்கும் எளிதான தீர்வை கண்டறிந்து தீர்க்கமான முடிவை எடுப்பான். ஆதித் தன் ஆளுமைக்குள் நிறுவனத்தைக் கொண்டு வந்த பிறகு, கோதண்டத்தின் பேச்சை யாரும் கேட்பதாய் இல்லை, அவரின் தீர்வுகளும் சரியானதாக இருந்ததில்லை, யானைக்கும் அடி சறுக்கும் என்பதைப் போல் ஓய்ந்து போனார்.
“ஆதித் அண்ணா.!” என்ற தங்கையின் அழைப்பில் புத்துணர்ச்சி பெற்றான் ஆதித் கிருஷ்ணா.
“லாவ் இன்னும் காலேஜ் கிளம்பலையா.?”
“இல்லை நான் போகமாட்டேன், நீ இன்னைக்கி என்னை ரொம்பவே ஹர்ட் பண்ணிட்ட” கோபம் போல் முகத்தை வைத்துக்கொண்டாள் லாவண்யா.
“இல்லையே லாவ் நான் இப்போ தான் ரூம்ல இருந்து வரேன்” என அவன் சொல்ல,
“மஹதி அண்ணியை ஏன் திட்டின.? அவங்க பாவம் அவங்களுக்கு இன்றைக்கி பர்த்டே உன்கிட்ட தான் ஃபர்ஸ்ட் சொல்லணும்னு உன் ரூம்க்கு வந்திருக்காங்க, ஆனால் நீ.” உதட்டை பிதிக்கி பாவம் போல் தன் அண்ணனை ஏறிட்டாள் லாவண்யா.
“லாவ் சில விசயங்களை என்னால உன்கிட்ட ஷேர் பண்ண முடியாது அப்படித் தான் இந்த மஹதி விசயமும்” என அவன் இடை நிறுத்திய போது,
“நீ அண்ணிக்கு பர்த்டே விஷ் பண்ணணும் ஈவ்னிங் பர்த்டே பார்ட்டி அரெஞ்ச் பண்ணணும், இதற்கெல்லாம் முன்னாடி அண்ணியை வெளிய கூட்டிட்டுப் போய்ச் சர்ப்ரைஸ் பண்ணணும், அப்போ தான் உன்னோட லாவ் காலேஜ் போவாள் , இல்லைன்னா காலேஜ் போகவே மாட்டேன்” என மறைமுகமாய் மிரட்டல் விடுத்த தங்கையின் கன்னம் தட்டி,
“அவ்வளவு தானே செஞ்சிடலாம், மீட்டிங் முடிச்சிட்டு வந்திடுறேன் உங்க அண்ணியை ரெடியாகச் சொல்லு, காலேஜ்க்குக் கன்ஃபார்மா போகணும், காட் இட்.”
லாவண்யா ஆதித் கிருஷ்ணாவிற்குப் பத்து வயது இருக்கும் போது பிறந்தவள் பத்து வயது வித்தியாசம் என்பதலோ என்னவோ அவளைக் குழந்தை போல் தான் நடத்துவான், அவளுக்குத் தன்னுடைய கஷ்டங்களைச் சொல்ல தயங்குவான்.
ஆராவின் விசயம் கூட அவளுக்கு முழுதாய்த் தெரியாது. விக்னேஷ் சொல்லி தான் அனைவருக்கும் தெரியும். தன் அண்ணனை ஒருத்தி வேண்டாம் என்று விட்டுச் சென்றிருக்கிறாள் என்பதே லாவண்யாவுக்கு ஆரா மீதான கோபம் உண்டாகக் காரணமாயிருந்தது, இதுவரை கண்ணில் கூடக் காணதவளை முழுவதுமாக வெறுத்திருந்தாள் லாவண்யா.
“அண்ணா நான் காலேஜ் போனதுக்கு அப்பறம் அண்ணியைக் கூட்டிட்டு போகாமல் இருந்திடக் கூடாது, என்கிட்ட ப்ராமிஸ் பண்ணு” எனச் சத்தியத்தை வாங்கிய பிறகு தான் கல்லூரிக்கு கிளம்பினாள், காலை உணவை கூட உண்ணாமல் அலுவலகத்திற்குக் கிளம்பியிருந்தான் ஆதித் விவேக்குடன்.
***********************
அந்தி சாய்ந்திருந்த வேளையில் ஆதவன் ஓய்வெடுக்க விரைந்துக்கொண்டிருந்தான், தன் கதிர்களைப் பரப்பிச் சிவந்திருந்த கீழ்வானத்தினை ரசித்தபடி அந்த உயர் ரகக் காரினுள் அமர்ந்திருந்தாள் மஹதி. அவனுடைய ஜாக்குவார் அந்தச் சாலையில் சீறிப் பாய்ந்துக்கொண்டிருந்தது.
ஓஎம்ஆர் எனச் சொல்லப்படும் பழைய மஹாபலிபுரம் சாலையில் வாகன நெருக்கடியில் கொஞ்சமாகக் கொஞ்சமாகக் கருஞ்சிறுத்தையின் வேகத்தைக் குறைத்தான் ஆதித் கிருஷ்ணா.
“ஏன் பேபி ஸ்லோ பண்ணிட்ட.?” குழைந்தபடி கேட்ட அவளின் குரலில், அவளை எரித்துவிடுவது போல் பார்த்தான் ஆதித்.
“மஹதி.! லாவண்யா சொன்னாளேன்ற ஒரே காரணத்துக்காக மட்டும் தான் இப்போ நீ இந்தக் கார்க்குள்ள இருக்க, இல்லைனா இந்த இடத்தில் உட்காருர தகுதி உனக்கு இல்லவே இல்லை” என முடித்தவனின் பார்வை சாலையில் தான் இருந்தது.
“ஆதித்.! நான் கோடியில் புரள்றவ, இந்த மாதிரி ஜாக்குவார் ஆயிரம் கூட வாங்குவேன், இதுல உட்கார்ந்து போற தகுதி எனக்கு இல்லைன்னா வேற யாருக்கு இருந்திட போகுது”
“ஹா ஹா ஹா குட் ஜோக் மஹதி” எனச் சிரித்தவனின் இதழ் இகழ்ச்சியாய் வளைந்தது.
“வாட் இதுல என்ன ஜோக் இருக்கு ஆதித்.? நான் உன்னை விட ஒரு படி மேலே தான், அறிவுலையும் சரி பணத்துலையும் சரி” எனப் பெருமையடித்துக் கொண்டவளை தங்கைக்காகப் பொறுத்துக் கொண்டான். என்ன சொன்னாலும் தங்கையிடம் முறையிட்டு வீட்டில் கலவரத்தை ஏற்படுத்தும் மஹதியின் மீது அளவில்லா கோபம் அவனுக்குள் இருக்கத் தான் செய்கிறது.
படிக்கும் பெண்ணிடம் தேவையில்லாத பேச்சுகளைப் பேசி அவளின் நிம்மதியை குலைத்து விடுகிறாள் இந்த அரக்கி.
“இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசின, பிருந்தாவனம் பேலஸ்க்கு திரும்பிடும் ஓகேவா.?” மிரட்டலாய் அவன் சொல்ல,
“ஹே ஆதித், டுடே இஸ் மை டே, மை பர்த்டே. சோ கொஞ்சம் பொறுமையா இரு”
“உனக்கு ப்ர்தடேனா நான் பொறுமையா இருக்கணுமா.? என்கிட்ட இருந்து எந்த அளவுக்கு விலகி இருக்கியோ அது தான் உனக்கு நல்லது மஹதி, என்கிட்ட ஒட்டிக்கணும் நினைக்காதே, மறுபடியும் மறுபடியும் சொல்றேன் நோ யுவர் லிமிட்ஸ்” அவன் தெளிவாய்ச் சொன்னான்.
“ஏய் ஆதித்.! நமக்குள்ள எதுக்கு லிமிட்ஸ் , எல்லாமே அனலிமிடட் தான், காதலாக இருந்தாலும், எதுவாக இருந்தாலும்”
“புல் ஷிட்” எனக் கோபமாய்ச் சொன்னவனின் கோப அளவை கியரில் காட்டிக்கொண்டிருந்தான்.
“கோபத்தை என்கிட்ட காட்டு ஆதித்” எனப் புன்னகை முகம் காட்டியவளை பார்த்து கடுகடுத்தவன்.
“மஹதி.! ட்ரை டூ அன்ர்ஸ்டண்ட், என் லைஃபை விட்டு நீ போயிடு, நீ என்ன ட்ரை செஞ்சாலும் என்னோட ஆராவா ஆகிட முடியாது”
“யா.! யுவர் கரெக்ட் ஆதித். நான் வேற தான் வெறும் லட்டரை மட்டும் கொடுத்திட்டு உன்னை விட்டு ஓடி போகமாட்டேன், உன்னை உருகி காதலிச்சிட்டு அவளை மாதிரி ஓடி போக நான் என்ன முட்டாளா.? நான் எப்போதும் ஆராவா ஆகமாட்டேன், உன்னை ஏமாத்திட்டு ஓடி போகமாட்டேன்”
“ஷட் அப் யுவர் ப்ளடி மௌத் மஹதி”
“என்னை வச்சிக்கிட்டே ஆரா புகழ் பாடிக்கிட்டு இருக்க ஆதித். அவ உன்னை வேண்டாம்ன்னு தூக்கி போட்டுட்டு போயிட்டாள். உன் முகம் பார்த்து கூடச் சொல்லிக்காமல் ஜஸ்ட் ஒரு லட்டரில் உன்ன தூக்கி போட்டுட்டு போயிட்டா, நான் தான் அந்த மீரா மாதிரி இந்தக் கிருஷ்ணனோட காதலுக்கு ஏங்கி தவிச்சிகிட்டு இருக்கேன். ஆரா அவ வாழ்க்கையை எவன் கூடத் தொடங்கியிருக்காளோ”
“மஹதி.! ஆரா என்னோட உயிர், என்னை விட்டுட்டு போனாலும் அவ என்னோட உயிர் தான்”
“உனக்கு ஆரா பைத்தியம் பிடிச்சிடுச்சு ஆதித். அதான் இப்படிப் பேசுற, என்ன தான் லாவண்யாக்காக நீ வர ஒத்துக்கிட்டாலும் அவளைப் பத்தியே பேசுறது, என்னை ஹர்ட் பண்ணும்னு உனக்குத் தோணலையா.?”
“ஏற்கனவே என் மனசுல வேற ஒருத்தி இருக்கான்னு தெரிஞ்சும், உன்னோட காரியத்தைச் சாதிக்கிறதுக்காக எந்த எல்லைக்கும் போற சேடிஸ்ட் கிட்ட எப்படிப் பேசணுமோ அப்படித் தான் பேசிட்டு இருக்கேன் மஹதி. நீ என்ன நேர்மையான வழியிலையா எங்க வீட்டுகுள்ள நுழைஞ்ச.? வந்த வழியை மறக்க கூடாது மஹதி” என அவன் சொன்ன வார்த்தையில் அவளால் மறுவார்த்தை பேச இயலவில்லை. அதை ஆதித் குத்திக் காட்டியவுடன், வார்த்தைகள் கிடைக்காமல் சிக்கி தவித்தாள் மஹதி.
“புற வாசல் வழியைப் பயன்படுத்தி வந்த உனக்கே இவ்வளவு திமிரா மஹதி. என்னோட ஆரா நேரடியாய் என் இதயத்துக்குள்ள நுழைஞ்சு என்னோட இதயத் துடிப்போடு இணைந்துவிட்டாள். அவளைப் பத்தி தப்பா பேசுற தகுதி உனக்கில்லை, அவ என்னை விட்டு போயிருக்கலாம் ஆனால் அவளோட நினைவுகள் எனக்குள்ள தினமும் இசைந்துகிட்டு தான் இருக்கு, காதல்னா என்னன்னே தெரியாத உன்னால என்னோட ஃபீலிங்ஸை புரிஞ்சுக்க முடியாது மஹதி.” என அவன் பேசி கொண்டு வந்த போதே
சோழிங்கநல்லூரின் சிக்னல் விளக்கு சிவப்பு நிறம் காட்டி நிற்க சொல்ல, ஆர்பாட்டம் இன்றி அமைதியாய் நின்றது கருஞ்சிறுத்தை.
அவன் பார்வை இலக்கின்றி எங்கங்கோ சென்று கொண்டிருந்தது, இறுதியாய் அங்குச் சாலையைக் கடப்பவர்களைப் பார்க்க துவங்கியது. இடை தாண்டிய கார்குழலோடு கருப்பு நிற சுடிதார் அணிந்திருந்த பெண்ணோ தன்னுடைய கிட்டார் (GUITAR) பேக்கை தோளில் மாட்டியபடி சாலையைக் கடந்துக்கொண்டிருந்த புயல் பெண்ணின் மீது அவனுடைய பார்வை நிலைக்குத்தி நின்றது.
“க்ரிஷ் சோழிங்கநல்லூர் சிக்னலை க்ராஸ் பண்ணிகிட்டு இருக்கேன் கிட்டார் க்ளாஸூக்கு வேற டைம் ஆகுது, இன்னும் கொஞ்ச தூரம் நடக்கணும், அது வரைக்கும் பேசுறியா ப்ளீஸ்” ஆராவின் கெஞ்சலான குரல் அவனுடைய செவியின் அருகில் ஒலித்த போது, ட்ராபிக் சிக்னல் பச்சை நிறத்திற்கு மாறியதை கூடக் கவனித்தில் கொள்ளாது தடதடவெனக் காரை திறந்துக்கொண்டு இறங்கினான்.
“ஹே ஆதித் என்ன பண்ணுற க்ரீன் சிக்னல் போட்டுட்டான் பாரு, எங்கே போற” பதட்டமாக ஒலித்த மஹதியின் குரல் அவன் செவிகளில் விழவே இல்லை.
சாலையைக் கடந்து நடைபாதையில் நடந்து சென்ற பெண்ணைத் தேடி விழிகள் அலைமோதியது, காரை இயக்க தெரியாத மஹதியோ திணறி போனாள்.
பின்னால் வரிசைக்கட்டி நின்ற கார்கள் ஹாரனை தாறுமாறாய் ஒலிக்க விட்ட பயத்தில் கிடுகிடுத்து போன மஹதியின் கால்கள் நடுங்க ஆரம்பித்தது. அவளின் பணத்திமிரோ, அவளின் அறிவு திமிரோ இங்குச் செல்லுபடியாகவில்லை, ஆயிரம் ஜாக்குவாரை வாங்க நினைத்தவளால் ஒரு ஜாக்குவாரைக் கூட இயக்க முடியாமல் திணறி போனாள்.
காரின் கதவை திறந்து வெளியே வந்தவள் யாரிடமாவது உதவி கேட்கலாம் என்று நினைத்த போது, வரிசை கட்டி நின்றுக்கொண்டிருந்த வாகன ஒட்டிகளிடம் இருந்து நாரசமான வசைகளைக் கேட்டுக்கொண்டிருந்தவளின் விழிகள் மருண்டு விழித்தது.
ஆதித் கிருஷ்ணாவோ வேக எட்டுகளை வைத்து அந்தக் கிட்டார் பெண்ணைத் தேடியபடி நடைபாதையில் விரைந்தான். கால்கள் தானாய் நடைப்போட்டது, அந்தப் பெண்ணின் கூந்தல் அவன் கண்களில் பட்டுவிட, அவள் கூந்தலில் மாட்டியிருந்த பட்டர்ஃப்ளை கிளிப் அவன் கண்களில் பட்ட நொடியில் அவனின் வேகம் மேலும் கூடியது.
“க்ரிஷ்.! ரெங்கநாதன் ஸ்டரீட் வந்திருக்கேன், பட்டர்ஃபளை கிளிப் வாங்க போறேன் நல்லா இருக்கா பார்த்து சொல்லு” மீண்டும் ஆராவின் குரல் அவன் இம்சிக்க, விரைந்து ஓட்டம் எடுத்தான்.
காற்றிலும் அவள் குரலே.!
மூச்சிலும் அவளின் சுகந்தம்.!
பேச்சிலும் அவளின் நினைவே.!
காதலில் கரைந்த நாட்களை
நினைத்து வருந்தும் கலியுக கிருஷ்ணனை.!
இந்த ஆரா விட்டுச் சென்றது
ஏனோ.?
என்றும் ஆராவின் நினைவில்
ஆதித் கிருஷ்ணா.!

