அதனைக் கேட்டுக் கொண்டிருந்த மீரா உண்மையிலேயே தன் கணவன் தவறான ஒருவனா? ஒரு பெண்ணின் கண்ணீருக்குக் காரணம் ஆகி விட்டானா? என உள்ளுக்குள் கதறினாள்.
சனாவின் குற்றச்சாட்டைக் கேட்டதும் பெண்ணியவாதிகள் சிலர் ஆவேசமடைந்து ரன்வீரை வசை மொழிகள் கூறி அவனிடம் வினாத் தொடுத்தனர்.
“RV… நீங்க இப்படி பண்ணுவீங்கன்னு நாங்க எதிர்ப்பார்க்கல. இப்போ சனாவுக்கான பதில் என்ன?”
“நிஜமாகவே சனா சொல்றது போல நீங்க உங்களுக்கு கல்யாணம் ஆனத மறைச்சி அவங்க கூட பழகினீங்களா?”
“உங்களுக்கு ஆல்ரெடி கல்யாணம் ஆகி இருந்தா எதுக்காக சனா கூட டேட்டிங் போனீங்க?”
“அந்தப் ஃபோட்டோஸுக்கான அர்த்தம் என்ன?”
“ரெண்டு பொண்ணுங்களோட வாழ்க்கையோட நீங்க விளையாடுனீங்களா?”
“வாட் அ சீப் பர்சனாலிட்டி?”
“படத்துல ஹீரோ… நிஜத்துல வில்லன்…”
“இப்போ கூட வாய் திறக்காம அமைதியா இருக்குற காரணம் என்ன?”
இவ்வாறு பலவாறு வசைமொழிகள்.
அனைவரும் பேசி முடியும் வரை அமைதி காத்த ரன்வீர் அனைவரும் அமைதி அடைந்ததும், “இப்போ நான் கொஞ்சம் பேசலாமா?” எனக் கேட்டான் அழுத்தமாக.
அவனின் கோபத்தில் சிவந்திருந்த கண்களைக் கண்டதும் அனைவரும் கப்சிப் என வாயை மூடிக் கொண்டனர்.
ரன்வீர் தேஜைப் பார்க்க, உடனே வெளியே சென்ற தேஜ் சற்று நேரத்தில் இருவரை இழுத்துக் கொண்டு வந்து அனைவரின் முன்னும் நிறுத்தினான்.
மீராவிடம் இப் பிரச்சினைக்கு இன்றே முடிவு கட்டுவதாகக் கூறி விட்டு வந்த ரன்வீர் முதல் வேளையாக தேஜைச் சென்று சந்தித்தான்.
அவனிடம் ஆதி முதல் அந்தம் வரை அனைத்தையும் கூறிய ரன்வீரை சில கணங்கள் அதிர்ச்சியாக நோக்கிய தேஜோ இவ்வளவு பெரிய விஷயத்தைத் தன்னிடமிருந்து மறைத்ததற்காக முதலில் கோபப்பட்டான்.
அதன் பின் ரன்வீரின் நிலையை உணர்ந்து அவனுக்கு உதவ முன் வந்தான் தேஜ்.
சினிமாத் துறையினுள் நுழைவதற்கு முன் தேஜ் தொழில்நுட்பக் கல்வி படித்து முடித்துப் பட்டம் வாங்கி இருந்தான்.
ஹேக்கிங் எல்லாம் தேஜுக்கு அத்துப்படி.
முதல் வேலையாக சினிமா கிசுகிசுக்களை வெளிவிடும் சேனலுக்குச் சென்று அச் சேனலுக்குப் பொறுப்பானவனிடம் இப் புகைப்படங்களை அனுப்பியது யார் எனக் கேட்டுப் பார்த்தனர்.
ஆனால் அவனோ எவ்வளவு கேட்டும் கூறாததால் இறுதியாக அடித்து மிரட்ட, யார் அனுப்பியது என்று தெரியாது என்றும் இப்படியான செய்திகளைச் சேகரிக்கவே தமக்கென தனியாக ஒரு வலைத்தளம் இருப்பதாகவும் அதனூடாகத் தான் அனுப்பப்பட்டிருந்ததாகக் கூறியவன் அடுத்து கூறிய செய்தியில் தான் நண்பர்கள் இருவரும் அதிர்ச்சியின் உச்சத்துக்குச் சென்றனர்.
இப் புகைப்படங்கள் கிடைத்து சில மணி நேரங்களில் அவர்களைத் தேடி வந்த சனா இப் புகைப்படங்களுடன் போட வேண்டிய செய்தியைக் கூறி பெரிய பணத்தொகை ஒன்றையும் வழங்கி விட்டுச் சென்றிருந்தாள்.
அதனைக் கேட்டதும் ரன்வீரின் உள்ளம் கொதித்தது.
எவ்வளவு பெரிய துரோகம்… ஏமாற்றம்…
அதன் பின் தான் காயத்ரி சனாவை அவன் மணமுடிப்பதற்கு மறுப்பு தெரிவித்ததன் காரணம் புரிந்தது.
சனாவின் மனதை நோகடிக்கக் கூடாது என்று பல முறை தன்னவளின் மனதை உடைத்துள்ளானே.
அதெல்லாம் நினைத்து தன் மீதே ரன்வீருக்கு வெறுப்பாக இருந்தது.
கலங்கி நின்றவனை தேஜ் தான் சமாதானப்படுத்தினான்.
அப் புகைப்படங்கள் அனுப்பப்பட்டிருந்த ஐபி அட்ரஸ் மூலம் ஹேக் செய்து தான் சனா நியமித்திருந்த புகைப்படக்காரனைக் கண்டு பிடித்தனர் நண்பர்கள் இருவரும்.
அங்கும் சனா தான் அனைத்துக்கும் காரணம் என்பதை அறிந்து ஆவேசமுற்ற ரன்வீர் அவளை நேரம் பார்த்துப் பழி வாங்கக் காத்திருந்தான்.
பழி வாங்கியும் விட்டான்.
சனாவின் ஆட்கள் இருவருமே சனாவின் முகத்திரையைக் கிழிக்கவும் இப்போது அனைத்து ஆதாரங்களும் சனாவுக்கு எதிராகக் கிளம்பின.
“ரொம்ப சீப்பான முறைல என் பெயரைக் கெடுக்கவே இப்படி எல்லாம் பண்ண மிஸ் சனா மேல என்னால போலீஸ் கம்ப்ளைன் கொடுக்க முடியும். ஆனா நான் அப்படிப் பண்ண மாட்டேன். இனிமே அவங்களுக்கும் எனக்கும் எந்த விதமான சம்பந்தமும் இருக்கக் கூடாது என நினைக்கிறேன்.” என்றான் ரன்வீர் சனாவை முறைத்தபடி.
சனாவால் தலை காட்டவே முடியவில்லை.
வேகமாக அங்கிருந்து வெளியேறினாள் அவள்.
‘தன் கணவன் தனக்கு துரோகம் செய்யவில்லை என மீராவின் மனம் சமாதானப்பட்டாலும் அப் புகைப்படங்கள் வேண்டும் என்றே தவறான கோணத்தில் எடுக்கப்பட்டு இருந்தாலும் இருவரும் ஒன்றாக இருந்தது எல்லாமே உண்மை தானே. இதெல்லாம் தாண்டி சனாவுடன் அவனுக்கு எந்த உறவும் இல்லாமல் இருந்தாலும் தன்னுடனும் உடல் தேவை தவிர்த்து வேறு எந்த உறவும் அவனுக்கு இல்லையே. இதற்கு மேலும் சுயம் தொலைத்து அவனுடன் இருக்க வேண்டுமா?’ எனத் தன்னையே கேட்டுக் கொண்ட மீராவோ தன் முடிவை இப்போதும் மாற்றிக் கொள்ளவில்லை.
மீரா மெதுவாக ரன்வீரை விட்டு விலகி நிற்க, “காய்ஸ்… இன்னொரு அனவுன்ஸ்மன்ட் இருக்கு.” என்றான் ரன்வீர் செய்தியாளர்களிடம்.
அனைவரும் என்னவோ ஏதோ எனப் பார்த்திருக்க, “திஸ் வில் பீ மை லாஸ்ட் ஃபில்ம்.” என்றான் புன்னகையுடன்.
அதனைக் கேட்டு மீரா உட்பட அனைவருமே அதிர்ந்தனர்.
கூட்டத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட, “டோன்ட் ஃபீல் காய்ஸ். இனிமே வர புதுமுகங்களுக்கு இதே போல உங்க சப்போர்ட்ட கொடுங்க. சினிமா மேல சின்ன வயசுல இருந்தே எனக்கு ஒரு க்ரஷ் இருந்தது. அதுக்காகத் தான் நான் நடிக்க வந்தேன். என் ஆசை தீர நடிச்சது மட்டும் இல்லாம சினிமாவுல ஜெய்க்கவும் செஞ்சேன். இப்போ எனக்கு ஒரு ப்ரேக் தேவைப்படுது. இத்தனை நாளா என் ஃபேன்ஸுக்கு ஹீரோவா இருந்தேன். இனிமே என் மனைவிக்கு மட்டும் ஹீரோவா இருக்க நினைக்கிறேன்.” என்றான் ரன்வீர் மீராவைக் காதலுடன் நோக்கியபடி.
அதனைக் கேட்டு கூட்டத்தில் விசில் பறந்தது.
ரன்வீரின் பேச்சில் சரி என்றால் மீராவுக்கு மகிழ்ச்சி தான் ஏற்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் அவளின் மனமோ மரத்துப் போய் இருந்தது.
அதனால் வரவழைக்கப்பட்ட புன்னகையுடன் நின்றிருந்தாள்.
ப்ரஸ் மீட் முடிந்ததும் வெளியே வந்த மகனை அணைத்துக் கொண்ட காயத்ரி, “இப்போ தான் கண்ணா எனக்கு சந்தோஷமா இருக்கு. என் வளர்ப்பு தப்பாப் போகல.” என்றார் பெருமையாக.
ஸ்ரீனிவாஸனும் ரன்வீரின் தோளில் தட்டிக் கொடுத்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
“அப்புறம் மச்சீ… எப்போ கல்யாண ட்ரீட்?” எனக் கேட்டான் தேஜ் கிண்டலாக.
அவனை அணைத்து விடுவித்த ரன்வீர், “ட்ரீட் தானே. வெச்சிட்டாப் போச்சு. தேங்க்ஸ் டா மச்சான். உன்னால தான் இதெல்லாம் சாத்தியம் ஆனது.” என்றான் மன நிறைவுடன்.
“விடுடா விடுடா… ஃப்ரெண்ட்ஸுக்குள்ள என்ன தேங்க்ஸ் சாரி எல்லாம்? அப்புறம் தங்கச்சி… இனிமே இவன் எந்தப் பொண்ணப் பத்தியாவது பேசினா என் கிட்ட சொல்லுங்க. நான் அவன உண்டு இல்லன்னு பண்ணுறேன்.” என தேஜ் மீராவிடம் கூறவும் கண்களை எட்டாத ஒரு புன்னகையை வழங்கினாள் மீரா.
அனைத்தும் நல்லபடியாக முடிந்தது என அனைவரும் நினைத்திருக்க, “அத்தை… ரொம்ப நேரம் ஆகிடுச்சு. என்னை என் வீட்டுல கொண்டு போய் விடுறீங்களா?” என என் இல் ஒரு அழுத்தத்தைக் கொடுத்து மீரா கூறவும் அனைவருமே அதிர்ந்தனர்.
காயத்ரி ஏதோ கூற முயல, பார்வையால் அவரை அடக்கிய ரன்வீர், “அம்மா… நீங்க அப்பா கூட வீட்டுக்கு கிளம்புங்க. நான் மீராவ கூட்டிப் போய் விடுறேன்.” எனக் கூறவும் அவர்களும் சரி எனத் தலையசைத்து விட்டு அங்கிருந்து கிளம்பினர்.
ரன்வீர் அவ்வாறு கூறவும், ‘ஆமா… எங்கடா என்ன அனுப்பி வைப்போம்னு இருந்து இருப்பார். அப்போ தானே இங்க வேற பொண்ணு கூட குஜாலா இருக்கலாம்.’ அதற்கும் தவறாக அர்த்தம் கொண்டாள் மீரா.
இருந்த குழப்பங்களில் மீராவிற்கு இன்னும் கடவுச்சீட்டு எடுக்காததால் இருவரும் மீராவின் ஊர் வரை வண்டியில் தான் கிளம்ப வேண்டி இருந்தது.
ரன்வீர் மௌனமாக வண்டியை ஓட்ட, மீராவோ காய்ச்சலுக்கு உட்கொண்ட மருந்தின் வீரியத்தால் ஆழ்ந்து உறங்கி இருந்தாள்.
தூக்கத்தில் மீராவின் தலை ஜன்னல் பக்கம் சாய, அவளின் உறக்கம் கலையாதவாறு மீராவைத் தன் தோளில் சாய்த்துக் கொண்டான் ரன்வீர்.
நள்ளிரவு வேலையில் தான் இருவரும் மீராவின் வீட்டை அடைந்தனர்.
உறக்கத்தில் இருந்தவளின் கன்னம் தட்டிப் பேசினான் ரன்வீர்.
கஷ்டப்பட்டு இமைகளைப் பிரித்த மீரா ரன்வீரின் தோளில் தான் சாய்ந்து கொண்டிருப்பது கண்டு அவசரமாக விலகி அமர்ந்தாள்.
அதில் ரன்வீரின் மனம் வாடினாலும் தன்னவளின் நிலை உணர்ந்து பொறுமை காத்தான்.
திடீரென சொல்லாமல் கொள்ளாமல் இரவோடு இரவாக மகளும் மருமகனும் வந்து நிற்கவும் மீராவின் பெற்றோர் பதற, “இந்தப் பக்கம் ஒரு வேலையா வந்தோம் அத்தை. அதான் அப்படியே உங்கள பார்த்துட்டு போக வந்தோம். சாரி இந்த நேரம் பார்த்து உங்க தூக்கத்த டிஸ்டர்ப் பண்ணிட்டோம்.” என அழகாக சமாளித்தான் ரன்வீர்.
முதல் தடவை தம்பதி சகிதம் வீட்டுக்கு வரும் மகளை அவளின் தாய் ஆரத்தி சுற்றி வரவேற்றார்.
மீராவோ தன் முடிவுக்கும் இங்கு நடப்பதற்கும் சம்பந்தமே இல்லாதிருப்பதை உணர்ந்து விரக்தியாகப் புன்னகைத்தாள்.
“சாப்பிட்டீங்களா ரெண்டு பேரும்?” எனக் கேட்ட தாயிடம், “ஆமா ம்மா. ரெண்டு க்ளாஸ் பால் மட்டும் கொடுங்க.” என்றாள் மீரா.
“சரி நான் கொண்டு வந்து தரேன். நீ மாப்பிள்ளைய ரூமுக்கு கூட்டிட்டுப் போ. பாவம் ரொம்ப தூரம் வண்டி ஓட்டிட்டு வந்தது டயர்டா இருக்கும்.” என்ற தாயிடம் சரி எனத் தலையசைத்த மீரா ரன்வீரை ஒரு பார்வை பார்த்து விட்டு தன் அறையை நோக்கிச் சென்றாள்.
ரன்வீரின் அறையுடன் ஒப்பிடும்போது மீராவின் அறை மிகவும் சிறியதாகத் தான் இருந்தது.
அவனின் ஜிம் அறையே இதை விடப் பெரிதாக இருக்கும்.
ரன்வீர் தன்னவளின் அறையை ஆசையுடன் சுற்றிப் பார்க்க, “உங்க ரூம் அளவுக்கெல்லாம் என் ரூம் இல்ல தான். இன்னைக்கு ஒரு நாள் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க. எப்படியும் நாளைக்கு கிளம்பத் தானே போறீங்க. இது தான் பாத்ரூம். இங்க ஹாட் வாட்டர்லாம் இருக்காது. வேணும்னா சொல்லுங்க. சூடு பண்ணிக் கொண்டு வரேன்.” என்று விட்டு வெளியேறிய மீராவின் முதுகைக் குறும்புச் சிரிப்புடன் பார்த்தான் ரன்வீர்.
சற்று நேரத்தில் மீண்டும் உள்ளே வந்த மீரா ரன்வீருக்கு ஒரு குவளையில் பால் கொண்டு வந்திருக்க, அதற்குள் ரன்வீர் குளித்து உடை மாற்றிக்கொண்டு வந்திருந்தான்.
மீரா நீட்டிய பால் குவளையை வாங்கிய ரன்வீர், “என்ன அவ்வளவு தானா?” எனக் கேட்டான்.
அவனைக் குழப்பமாக ஏறிட்ட மீரா, “வேற என்ன?” எனக் கேட்க, “அதான் இந்தக் கால்ல விழுற சடங்கு எல்லாம் இல்லையா?” எனக் கேட்டான் ரன்வீர் ஒரு மாதிரிக் குரலில்.
ரன்வீர் எதனைக் குறிப்பிடுகிறான் என்பதை உணர்ந்த மீரா அவனை வெட்டவா குத்தவா எனப் பார்த்தாள்.
உடனே மறு பக்கம் திரும்பி பாலைக் குடித்து முடித்தவன் க்ளாஸை மீராவிடம் நீட்டவும் அதனை வாங்கி வைத்தவள், “நீங்க பெட்ல படுத்துக்கோங்க. நான் கீழ படுத்துக்குறேன்.” என்ற மீரா தரையில் போர்வையை விரித்தாள்.
“அதான் கட்டில்ல இவ்வளவு இடம் இருக்கே.” என்ற ரன்வீரிடம், “அவசியம் இல்லங்க. எதுக்கு சும்மா ஒரு நாளைக்காக நீங்க என்ன சகிச்சிக்கணும்? நான் தரைலயே படுத்துக்குறேன்.” என்றாள் மீரா.
“என்னவோ நாம ரெண்டு பேரும் இதுவரை ஒன்னாவே படுத்தது இல்ல போல பேசுற.” என்றான் ரன்வீர் பட்டென்று.
அவன் சும்மா இருந்தாலும் அவனின் வாய் சும்மா இருக்கவில்லை.
பதிலேதும் கூறாது அவனை சில நொடிகள் வெறித்துப் பார்த்த மீரா தரையில் போர்வையை விரித்துப் படுத்துக் கொண்டாள்.
இதற்கு மேலும் மீராவை சீண்ட வேண்டாம் என்ற எண்ணத்தில் ரன்வீரும் அமைதியாகச் சென்று படுத்துக் கொண்டான்.
அன்றைய நாளின் களைப்பில் இருவருமே படுத்ததும் உறங்கி விட்டனர்.
மறுநாள் ரன்வீர் நேரம் சென்று கண் விழிக்கும் போது மீரா அறையில் இருக்கவில்லை.
காலைக்கடன்களை முடித்துக் கொண்டு வெளியே வந்தவனைக் கண்டு கொண்ட மீரா அவனை அழைத்துச் சென்று உணவைப் பரிமாறினாள்.
கிராமத்துக் கைவண்ணம் உணவில் தெரிய ரசித்து ருசித்து உண்டான் ரன்வீர்.
அவனுக்கு உணவைப் பரிமாறும் சாக்கில் ரன்வீரின் காதருகே குனிந்த மீரா, “எத்தனை மணிக்குக் கிளம்புறீங்க?” எனக் கேட்டாள் முணுமுணுப்பாக.
‘என்னைத் துரத்தி விடுறதுலயே குறியா இருக்கா.’ என மனதில் தன்னவளை அர்ச்சித்த ரன்வீர் அவளுக்குப் பதிலளிக்க முன்னே மீராவை சொக்கலிங்கம் அழைத்திருந்தார்.
“மீராம்மா… உன் ஃப்ரெண்ட்ஸ் வந்து இருக்காங்க பாரு. நானும் அம்மாவும் அறுவடை நடக்குற இடத்துக்கு போய்ட்டு வரோம்.” எனச் சொக்கலிங்கம் அழைக்கவும் பல மாதங்கள் கழித்து தோழிகளைக் காணும் ஆவலில் ஆர்வமாகச் சென்றாள் மீரா.
அவர்களுக்குக் கூட இப்போது தான் மீராவின் திருமண விடயம் தெரிந்திருந்தது.
இரு குடும்பங்களும் மட்டும் கலந்துகொண்டு நடந்த திருமணம் என்பதால் மீராவிற்கு திருமணம் முடிந்து விட்டது என்பதை அறிந்திருந்த அவளது தோழிகளுக்கு அவள் ரன்வீரைத் திருமணம் செய்திருப்பது தெரியாமல் போனது.
தொலைக்காட்சியில் ரன்வீரின் ப்ரஸ் மீட்டைப் பார்த்த பின் தான் அவர்கள் உண்மை அறிந்தனர்.
மீரா ஊருக்கு வந்திருப்பதை அறிந்த மறு நிமிடமே அவளது தோழிகள் கும்பலாக மீராவை சந்திக்க வந்திருந்தனர்.
ஆனால் அவர்களின் முக்கிய நோக்கம் மீராவை சந்திப்பது அல்ல.
பிரபல நடிகன் ரன்வீரைச் சந்தித்து அவனுடன் புகைப்படம் எடுப்பதே ஆகும்.
“ஹேய் வாங்க டி. பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு.” என்ற மீராவின் குரலில் இருந்த மகிழ்ச்சியை இன்று தான் பார்க்கிறான் ரன்வீர்.
அவன் வீட்டில் இருந்த போது மீரா இவ்வளவு மகிழ்ச்சியாக இருந்து பார்த்ததில்லை ரன்வீர்.
“அங்க பாரு டி RV… ஐயோ எனக்கு என் கண்ணையே நம்ப முடியல. நம்ம ஊர்ல நம்ம கண் முன்னாடி RV இருக்காரு.”
“ஆமா டி. இன்னைக்கு அவரோட சேர்ந்து ஃபோட்டோ எடுத்தே ஆகணும்.” எனத் தோழிகள் மீராவைக் கண்டு கொள்ளாது ரன்வீரில் பார்வையைப் பதித்தபடி தமக்குள் கிசுகிசுத்துக் கொண்டிருந்தனர்.
அவர்களின் தலையில் தட்டி தன் பக்கம் அவர்களது கவனத்தைத் திருப்பிய மீரா, “ஹேய்… என்னைப் பார்க்க வந்துட்டு அங்க என்ன பார்க்குறீங்க?” எனக் கேட்டாள் கோபமாக.
மனைவியின் செல்லக் கோபத்தைத் தள்ளி இருந்து ரசித்துப் பார்த்தான் ரன்வீர்.
“அடப் போடி… யாரு உன்ன பார்க்க வந்தது? நாங்க RV ய பார்த்துட்டு போகலாம்னு வந்தோம். ஃப்ரெண்ட்ஸ் கிட்ட உண்மைய மறைச்சிட்டு பேச்சைப் பாரு.” என்ற சௌமியாவின் கவனம் மீண்டும் ரன்வீரின் பக்கம் போனது.
“ஆமா… பொல்லாத RV… ஊர் உலகத்துல இல்லாத நடிகர்.” என நக்கலாகக் கூறிய மீராவுக்கு தோழிகளின் பார்வை தன்னவன் மீது ஆர்வமாகப் படிவதைக் கண்டு கடுப்பைக் கிளப்பியது.
“நீயா பேசியது? என் அன்பே நீயா பேசியது?” என ராகமாக இழுத்த சௌமியா, “முன்னாடி எல்லாம் எங்க காதால ரத்தம் வர அளவுக்கு என் RV என் RV னு உளறிட்டு இருப்ப. இப்போ உன்னோட ஆதர்ச நாயகனுக்கே பொண்டாட்டி ஆகிட்டு இப்படி சொல்ற.” என்றவளின் வாயை அவசரமாகப் பொத்தினாள் மீரா.
‘ஓஹோ… இப்படி ஒரு மேட்டர் வேற இருக்கா. செம்ம இன்ட்ரெஸ்டிங்கா இருக்கும் போலயே. அவ ஃப்ரெண்ட்ஸ் வாயாலயே எல்லா உண்மையையும் தெரிஞ்சிக்கலாம்.’ என நினைத்த ரன்வீர் கையைக் கழுவிக்கொண்டு அவர்களை நோக்கிச் சென்றான்.
“ஏய் சௌமி மானத்த வாங்காதே டி.” என மீரா கெஞ்சியதைக் கண்டு கொள்ளாது தம்மை நோக்கி வந்த ரன்வீரையே வாயைப் பிளந்து பார்த்தனர் அவர்கள்.
“ஹாய் காய்ஸ். கென் ஐ ஜாய்ன் வித் யூ?” என வசீகரப் புன்னகையுடன் கேட்டவனின் கோரிக்கையை மறுக்கவா போகிறார்கள்?
“ஷியூர் சார்… வந்து உட்காருங்க.” என்றாள் சௌமியா வாயெல்லாம் பல்லாக.
அவர்களுக்கு முன் இருந்த இருக்கையில் அமர்ந்த ரன்வீர் மீராவையும் இழுத்து தனக்கு அருகில் அமர்த்திக் கொண்டான்.
“அடடா… என்ன லவ்வு? என்ன லவ்வு?” என்றவாறு மீராவின் தோழிகள் அவர்களது நெருக்கத்தைப் பார்த்து வெட்கப்பட்டு முகத்தைத் திருப்ப, வெட்கம் கொள்ள வேண்டியவளோ ரன்வீரை வெட்டவா குத்தவா எனப் பார்த்தாள்.
“சார் உங்க கூட ஒரு ஃபோட்டோ எடுக்கலாமா?” என ஒருத்தி ஆவலாகக் கேட்கவும், “வை நாட்?” என உடனே சம்மதித்த ரன்வீர், “ஆனா ஒரு கன்டிஷன் இருக்கு.” என்றான் மீராவைப் பார்த்து விஷமமாகப் புன்னகைத்தபடி.
மீரா உட்பட அவளது தோழிகள் பட்டாளம் அவனைக் குழப்பமாக நோக்க, “இப்போ நான் வர முன்னாடி நீங்க எல்லாரும் ஏதோ பேசிட்டு இருந்தீங்களே மீரா என்னோட பெரிய ஃபேன்னு. அந்தக் கதைய என் கிட்ட ஷேர் பண்ணிக்கணும்.” என ரன்வீர் கேட்கவும் மீரா தோழிகளைப் பார்த்து வேண்டாம் என சைகை செய்ய, “ச்சே… இவ்வளவு தான் மேட்டரா? ஜுஜுபி. அதை நான் சொல்றேன்.” என்றாள் சௌமியா.
‘அடப் பாதகத்தி. ஒரு ஃபோட்டோவுக்காக ஃப்ரெண்ட விட்டுக் கொடுத்துட்டியே.’ என சௌமியாவை மனதில் அர்ச்சித்தாள் மீரா.
“உங்க முதல் படம் ரிலீஸ் ஆனதுல இருந்தே இவ உங்க பெரிய ஃபேன் சார். எப்பப்பாரு RV RV னு உளறி எங்க காதால இரத்தம் வர வைப்பா. உங்களக் கல்யாணம் பண்ணிக்கப் போறது போல எல்லாம் கனவு கண்டிருக்கா.” எனக் கூறிச் சிரிக்க, அதனை ஆவலோடு கேட்டான் ரன்வீர்.
மீராவோ வெட்கத்தில் முகத்தை மூடிக்கொள்ள, “உங்களுக்கு இன்னொரு பக்கா மேட்டர் தெரியுமா சார்? இங்க பக்கத்துல வாங்க சொல்றேன்.” என்றாள் சௌமியா மெல்லிய குரலில்.
அடுத்து என்ன கூறப் போகிறாளோ என மீரா சலிப்போடு பார்க்க, “மும்பைல ஒரு பெரிய அவார்ட் ஷோ நடந்துச்சுல்ல. உங்களுக்கு கூட பெஸ்ட் ஹீரோ இன் ஆல் கேட்டகரி அவார்ட் கிடைச்சிச்சே.” என சௌமியா ஆரம்பிக்கவும் அதிர்ச்சியில் கண்களை அகல விரித்த மீரா சொல்ல வேண்டாம் என சௌமியாவிடம் கண் சைகை காட்டினாள்.
அதனை அவள் கண்டு கொண்டால் தானே.
ஆனால் ரன்வீர் கவனித்து விட்டான்.
அன்று அவார்ட் ஷோவை விட மறக்க முடியாத வேறு ஒரு நிகழ்வும் நடந்ததால் ரன்வீர் மீராவின் தடுமாற்றத்தைக் குழப்பமாக நோக்கினான்.
“அன்னைக்கு நாங்க எல்லாரும் வீட்டுல பொய் சொல்லிட்டு மும்பை வந்திருந்தோம். எப்போவும் இந்த ஊருக்குள்ளே இருந்து சரியான போர் அடிச்சிச்சு. சோ அந்த ரெண்டு நாளும் மும்பைய நல்லா சுத்திப் பார்த்துட்டு இஷ்டம் போல எங்களுக்கு வேண்டியது எல்லாம் பண்ணோம்.” என்று நிறுத்தினாள் சௌமியா.
சட்டென எழுந்து கொண்ட மீரா, “சௌமி… நாங்க குளத்துக்குப் போய் ரொம்ப நாள் ஆச்சுல்ல. இப்போ போலாமா எல்லாரும்?” எனப் பேச்சை மாற்றப் பார்த்தாள்.
மீராவின் முகத்தில் இருந்த பதட்டத்தையும் அவளது தடுமாற்றத்தையும் அவதானித்த ரன்வீருக்கு குழப்பமாக இருந்தது.
“இவ ஒருத்தி. இப்போ அது ரொம்ப முக்கியம். நீங்க கேளுங்க சார் கதைய. அப்புறமா எங்களுக்கு கொஞ்சமா சரக்கடிச்சுப் பார்க்க ஆசை வந்து ஒரு பெரிய பாருக்கு போனோம். அங்க நானும் இவளும் மட்டும் ஒரு சேலேன்ஜுக்காக அளவுக்கு அதிகமா குடிச்சி மட்டையாகிட்டோம்.” எனக் கூறிச் சிரித்தாள் சௌமியா.
எங்கு அனைத்தையும் உளறி வைத்து விடுவாளோ எனப் பயந்து மீரா கைகளைப் பிசைய, எல்லாமே ரன்வீரின் பார்வையில் விழுந்தன.
“ஆமா பெரிய வீர சாகசம் பண்ணிட்டாங்கன்னு இதுல பெருமை வேற.” எனச் சௌமியாவைக் கலாய்த்த ஒருத்தி, “இதுங்க ரெண்டு பேரும் குடிச்சிட்டுப் போட்டக் கூத்துல எங்க தலை தான் உருண்டது. அதுவும் உங்கப் பொண்டாட்டி இருக்காளே. திடீர்னு காணாம போய்ட்டா. ரொம்ப நேரமா தேடியும் இவள எங்கேயும் காணோம். கால் பண்ணாலும் ஃபோன தூக்கல. எங்களுக்கு செம்ம டென்ஷன். நாங்க மும்பைக்கு புதுசு வேற. என்ன பண்ணுறதுன்னே தெரியாம முழிச்சிட்டு இருந்தோம். சரியா ரெண்டு மணித்தியாலத்துக்கு அப்புறம் ஒரு வழியா எங்க கால அட்டன்ட் பண்ணி பேசினா. சரி எங்க தான் போய் தெலைஞ்சான்னு பார்த்தா அழகா VIP ஏரியால இருந்து ஆடி அசைஞ்சி வரா. கேட்டா வாஷ் ரூம் போனாளாம். ரெண்டு மணி நேரமாவா ஒருத்தி வாஷ்ரூம்ல இருப்பா? ஆனா அன்னைக்கு என்னாச்சுன்னே தெரியல. வீடு வந்து சேரும் வரை இவ பேயறைஞ்சது போல முகத்த வெச்சிட்டு இருந்தா.” என்று விட்டுச் சிரித்தாள்.
அதனைக் கேட்ட ரன்வீரின் முகத்தில் அதிர்ச்சியின் ரேகைகள்.
எல்லாப் புள்ளிகளையும் இணைத்துப் பார்க்கும் போது அவனின் இத்தனை மாதங்களான கேள்விகளுக்கு விடை கிடைத்தது.
முகத்தில் பல கேள்விகளைத் தேக்கி வைத்து ரன்வீர் மீராவின் முகத்தை நோக்க, அவளோ ரன்வீரின் விழிகளைச் சந்திக்க முடியாமல் தடுமாறி நின்றாள்.
அதன் பின் ரன்வீர் தோழிகள் பட்டாளத்துடன் புகைப்படம் எடுத்து விட்டு அங்கிருந்து எழுந்து அறைக்குள் நுழைந்தான்.
மீராவுக்குத் தான் ரன்வீருக்கு அனைத்தும் நினைவு வந்து விட்டதோ எனப் பதட்டமாக இருந்தது.
அனைவரும் கிளம்பிச் சென்றதும் தயங்கித் தயங்கி அறைக்குள் நுழைந்தவளை ஏறிட்டு வெறித்துப் பார்த்தான் ரன்வீர்.
அவனின் பார்வை முழுவதும் அவளின் உதட்டில் இருந்த மச்சத்தில் தான் பதிந்து இருந்தது.
மீராவின் உதட்டில் இருந்த மச்சத்தைப் பார்க்கும் போதெல்லாம் அவனுக்கு அந்த முகமறியாப் பெண்ணின் நினைவு வந்ததன் காரணத்தை பல முறை யோசித்துக் குழம்பி உள்ளான் ரன்வீர்.
ஆனால் அதன் விடையாக தன் மனைவி இருப்பாள் என்பதைத் தான் அவன் உணராமல் போனான்.
அடிமேல் அடி வைத்து மீராவை நெருங்கிய ரன்வீர், “சோ அந்தப் பொண்ணு நீ தான் இல்லையா?” என அழுத்தமாகக் கேட்டவனைப் பார்த்து பயத்தில் எச்சில் கூட்டி விழுங்கினாள் மீரா.
“அன்னைக்கு நைட் பார்ல… என் கூட இருந்தது நீ தான்… ஏம் ஐ ரைட்?” என ரன்வீர் கேட்கவும் அவனின் விழிகளைச் சந்திக்க முடியாது பார்வையைத் திருப்பினாள் மீரா.
Unmaiya therinji kittan