
தன் மாமியாருக்காக ஹார்லிக்ஸ் தயாரித்துக் கோப்பையில் நிரப்பிக் கொண்டு வந்து கொடுத்தாள் ஆரா.
அதைப் பெற்றுக் கொண்ட நீலவேணி,”இங்கே எல்லாம் சௌகரியமாக இருக்காம்மா? எப்படித்தான் நீ தனியாளாக வீட்டு வேலை எல்லாத்தையும் பாக்குறியோ? அபூர்வன் வேலைக்குப் போகும் போது வீட்டையேத் தலைகீழாக்கிட்டுப் போய்டுவானேம்மா?”என்றெல்லாம் அவளிடம் அனுசரணையுடன் விசாரித்தார்.
அதில் புன்னகைத்த ஆராவோ,”அந்த அளவுக்கு இன்னும் நிலைமை ஆகலை அத்தை. நான் வீட்டு வேலையை எல்லாம் சமாளிச்சுடுவேன். உங்கப் பையனும் சமத்து தான்”என்றவுடன் அவள் தன் கணவனை விட்டுக் கொடுக்கக் கூடாது என்று உண்மையை மறைக்கிறாளோ என்றெண்ணி அவளது முகத்தைக் கூர்ந்து நோக்கவும்,
அதில் தெரிந்த உண்மைத் தன்மையைக் கண்டதும் அவளது கூற்றைத் தானும் நம்பினார் நீலவேணி.
“ஆனால் இனிமேல் நீங்க ரெண்டு பேரும் தனியாக இருக்காதீங்க. நீங்க அங்கேயிருந்து வந்ததுக்கு அப்பறம் எனக்கும், உங்க மாமாவுக்கும் ரொம்பக் கஷ்டமாகப் போச்சு. குழந்தைங்கைள வெளியே அனுப்பிட்டு நாம மட்டும் என்ன நிம்மதியாகவா இருக்கப் போறோம்னு எனக்குச் சொல்லிப் புரிய வச்சதே அவர் தான்!”என்று மனம் உருகிப் பேசினார்.
“அச்சோ அத்தை! அதையெல்லாம் மறந்துடுங்க. அவர் வந்ததும் விஷயத்தைச் சொல்லி அங்கே கிளம்பிடுவோம்” என்றதுமே,
நீலவேணிக்கு மருமகளின் பேச்சினால் நம்பிக்கை உருவானது.
அபூர்வனை அவள் சம்மதிக்க வைத்து விடுவாள். அதற்குப் பிறகுத் தாங்கள் அனைவரும் ஒரே வீட்டில் சந்தோஷமாக, நிம்மதியாக வாழப் போகிறோம் என்று துள்ளிக் குதிக்காத குறையாக மனம் மகிழ்ந்தார்.
அதே நேரத்தில் மகனும், மருமகளும் வீட்டை விட்டு வெளியேறும் பொழுது தங்கள் மேல் கொண்ட நம்பிக்கை யாவும் தூள்தூளாகி விட்டது என்று கூறிவிட்டல்லவா வெளியேறி இருந்தான் அபூர்வன்.
அதை நினைத்துப் பார்க்கும் பொழுது இவருக்கு இப்போதும் வேதனைக் கூடித் தான் போகிறது.
“அத்தை! மதியம் என்னச் சாப்பாடு உங்களுக்குச் செய்யட்டும்னு சொன்னீங்கன்னா செய்ய ஆரம்பிச்சுடுவேன்?”என்ற மருமகளின் குரலைக் கேட்டதும் தான், அவர் தன் நினைவுகளில் இருந்து மீண்டு வந்து,
“எனக்குன்னு எதுவும் ஸ்பெஷல் ஆக வேண்டாம்மா! நீ எப்பவும் செய்றதையே சமைச்சுடு”என்றுரைத்து விட்டு,
“எனக்குக் கொஞ்சம் அசதியாக இருக்கு. நான் போய் தூங்கவா ஆரா?”எனக் கேட்டார் நீலவேணி.
“அந்த ரூம்ல தூங்குங்க அத்தை. அங்கே உங்களுக்குக் கம்ஃபர்டபிளாக இருக்கும். ஏசி வேணும்னா சொல்லுங்கள். போட்டு விட்றேன். நான் சமைச்சுட்டு வந்து உங்களை எழுப்பி விட்றேன்”என்று அவரின் தேவை அறிந்து பேசினாள் ஆரா.
“சரிம்மா”என அவள் காட்டிய அறைக்குச் சென்றவரோ,
“தங்கமாட்டம் மருமகளை இப்படித் தகாத வார்த்தையைப் பேசி இருக்கேனே!”என்று, தான் உதிர்த்த வார்த்தைகளின் வீரியத்தை இப்போது தான் புரிந்து கொண்டார்.
“அபூர்வன் வரட்டும்! நான் பேசின எல்லாத்துக்கும் மொத்தமாகச் சேர்த்து வச்சு ரெண்டு பேர் கிட்டயும் மன்னிப்புக் கேட்டுடனும்”என்ற யோசனையில் இருந்தவரோ எப்போது உறங்கினார் என்று அவருக்கேத் தெரியவில்லை.
ஆனால் தன் மனம் பாரம் குறைந்ததால் நன்றாகத் தூங்கி விட்டிருந்தார் நீலவேணி.
அதே சமயம் இங்குச் சமையலறையில் தன் மாமியார் தனக்குப் பிடித்த உணவுகள் இது தான் என்று கூறாவிடினும் அவருடைய விருப்ப உணவுகளைச் செய்துச் சாப்பாட்டு மேசையில் அடுக்கி வைத்து விட்டு,
“ஆமாம், அத்தை மட்டும் தனியாக வந்துருக்காங்களே? மாமா ஏன் வரலைன்னு மட்டும் கேட்டியே? அவர் எப்படி இருக்கார்ன்னு ஒரு வார்த்தை அவங்ககிட்ட கேட்டியா ஆரா நீ?”என்று தனது தப்புக்குத் தானே தலையில் வலிக்காமல் கொட்டிக் கொண்டாள்.
மதிய உணவைச் சமைத்து விட்டதால் அத்தையை எழுப்பலாம் என்று
நீலவேணி உறங்கிக் கொண்டு இருக்கும் அறைக்குச் சென்றாள் ஆரா.
சரியாக அவள் வந்த நேரம் விழித்து விட்டிருந்தார் நீலவேணி.
அவளைப் பார்த்துப் புன்னகைத்தவர்,”ரொம்ப நாள் கழிச்சு நிம்மதியாகத் தூங்கினேன்மா”என்று மன நிறைவுடன் கூறினார்.
“சூப்பர் அத்தை. வாங்க சாப்பிடலாம்”என அவரை உணவு உட்கொள்ள அழைத்துச் சென்றாள்.
“அத்தை! நான் உங்க கிட்ட அப்போவே கேட்டேனே! மாமா ஏன் உங்க கூட வரலை? அவர் எப்படி இருக்கார்?”என்று அவரிடம் கேட்டுக் கொண்டே உணவைப் பரிமாறினாள்.
“அவரை நான் தான் வர வேண்டாம்னு சொல்லிட்டேன்மா. உங்களை நான் சமாதானம் செஞ்சிக் கூட்டிட்டு வரேன்னு சொன்னேன். அவரும் சரின்னுச் சொல்லி அனுப்பிட்டாரு”என்று அவள் பரிமாறிய உணவை ஆராய்ந்தார்.
வெள்ளைப் பூசணிப் போட்ட சாம்பார், சாதம், தயிர், கொத்தவரங்காய் வற்றலும் பொரித்து வைக்கப்பட்டு இருந்ததைப் பார்த்து மனம் நெகிழ்ந்து போனார் நீலவேணி.
அவை அனைத்தும் அவருக்குப் பிடித்ததாயிற்றே.
தன் மருமகளுக்கு தனக்குப் பிடித்த உணவு வகைகள் கூடத் தெரிந்து இருக்கிறதே!
தாம் ஒரு நாளாவது அவளுக்குப் பிடித்ததைச் சமைத்துக் கொடுத்து இருக்கிறோமா? என்று அவரது மனசாட்சி அவரைக் கேள்விக் கேட்டுக் குத்திக் கிழித்தது.
திடீரென்று அமைதியாகி விட்டு உணவில் கவனம் செலுத்துபவரைப் பார்த்து என்னவென்று யோசித்தாள் ஆரா.
அவர் இன்னும் குற்ற உணர்வில் இருந்து வெளி வரவில்லை என்பதைக் கண்டறிந்தவள்,
அவரது தோள்களில் கையை வைத்து,”அத்தை! நாங்க யாரு? உங்கப் பசங்க! எங்க மேல உங்களுக்கு இல்லாத உரிமையா? எதையும் யோசிக்காமல் சாப்பிடுங்கள்”என்று மாமியாரை அமைதிப்படுத்தி உண்ண வைத்தாள்.
அதே சமயம் தானும் அவருடன் சேர்ந்து உணவுண்டு முடித்து விட்டிருந்தாள் ஆரா.
அவர் உண்டு முடித்ததும் பழைய விஷயங்களை ஞாபகப்படுத்தி உள்ளத்தை வருத்திக் கொள்ளாமல் ஓய்வெடுக்குமாறு அனுப்பி வைத்து விட்டுத் தன் கணவன் அபூர்வனிற்குச் செல்பேசி அழைப்பு விடுத்தாள்.
அதை ஏற்றுக் காதில் வைத்து,”என்ன ஆரா?”எனப் நிதானமாகப் பேசினான் அபூர்வன்.
அவனிடம் எப்போதும் இருக்கும் இந்த நிதானம் ஆராவிற்கு ரொம்பப் பிடிக்கும்.
“ஏங்க! அத்தை வந்திருக்காங்க”என்று விஷயத்தைக் கூறினாள்.
தன் தாய் தங்களுடைய வீட்டிற்கு வந்துள்ளாரா? என வியந்து விட்டு,”என்னாச்சும்மா? அவங்க எதுவும் உன்னை ஹர்ட் பண்றா மாதிரி பேசிட்டாங்களா?” என்று தன் மனைவியைத் தன்னுடைய அன்னை அன்று போல், இன்றும் காயப்படுத்தி விட்டாரோ என்றப் பதைபதைப்புடன் அவளிடம் விசாரித்தான்.
“இல்லங்க. அவங்க ரொம்ப ஸ்வீட் ஆகப் பேசினாங்க. உங்க கிட்டேயும் பேசி உங்களைக் கன்வின்ஸ் செஞ்சி அதுக்கப்புறம் நாம எல்லாரும் அந்த வீட்டில் ஒன்னாக இருக்கலாம்னு சொன்னாங்க. நேரமே வந்துட்டாங்க. நான் தான் நீங்க ஃப்ரீயாக இருக்கிற டைமில் கால் பண்ணிச் சொல்லலாம்னு இப்போ சொன்னேன்”என்று அவனது அன்னைத் தன்னை வார்த்தைகளைக் கொண்டுக் காயப்படுத்தவில்லை என்பதைக் கணவனிடம் தெளிவாகக் கூறினாள் ஆரா.
“அப்போ சரி. அப்பாவும் வந்து இருக்காரா?”என்று கேட்டான்.
“இல்லங்க. அத்தை தான் வேணாம்னு சொல்லிட்டாங்களாம். அவங்க மன்னிப்பு கேட்டுக் கூப்பிட்டு வரேன்னுச் சொல்லிட்டாங்களாம் மாமாகிட்ட”எனக் கூறியவள்,
“உங்களுக்கு எப்போ வேலை முடியுது?”எனக் கணவனுக்குச் சீக்கிரம் வேலை முடிந்தால் விரைவாகவே வீட்டிற்கு வந்து விடுவான் அல்லவா?
அதுவும் இல்லாமல் தன் மாமியாருக்கும் தன் மகனிடம் பேச நிறைய விஷயங்கள் இருக்குமே! அதனால் தான் அவனிடம் அவ்வாறு கேட்டிருந்தாள்.
“சாயந்தரம் ஒரு மணி நேரம் பர்மிஷன் போட்டுட்டு வரேன்மா. நீ அம்மாகிட்ட சொல்லிடு. நான் நாலு மணிக்கு அங்கே இருப்பேன்”என்றுரைத்து விட்டு அழைப்பைத் துண்டித்தான் அபூர்வன்.
தன் மனைவிஎப்படியும் தன் தாயைச் சாப்பிட வைத்து இருப்பாள் என்று அவனுக்குத் தெரியும்.
அதனால் தான் அவர் சாப்பிட்டாரா? அவளிடம் என விசாரிக்கவில்லை அவன்.
உடனே மாமியாரிடம் வந்தவள்,”அவர் நாலு மணிக்கு வந்துடுவாராம் அத்தை. நீங்க அது வரைக்கும் டிவியில் ஏதாவது பாக்குறீங்களா? இந்த நேரத்துக்கு நீங்கப் பாக்குற சீரியல் போடுவாங்க தானே அத்தை?”என்று கேட்டுக் கொண்டே தொலைக்காட்சிப் பெட்டியை உயிர்ப்பித்தாள் ஆரா.
“போடுவாங்கம்மா. ஹாங்! அந்தச் சேனல் வை”என அவர் விரும்பிப் பார்க்கும் நெடுந்தொஞரை ஒளிபரப்புச் செய்யும் சேனலை வைக்கச் சொல்லி விட்டு அதைப் பார்க்கத் தொடங்கி விட்டார் நீலவேணி.
அதே சமயம் சமையலறையில் இருந்தவாறே தானும் உணவுப் பாத்திரங்களைக் கழுவிச் சுத்தம் செய்து கொண்டே அத்தைப் பார்த்துக் கொண்டு இருக்கும் தொடரில் வரும் வசனங்களைக் கேட்டாள்.
அதில் ஒரு கட்டத்தில் சிரித்து விட்டாள் ஆரா. அதனைக் கவனித்த நீலவேணியும் சிரித்துக் கொண்டார்.
“இந்தச் சீரியலோட கதை என்ன அத்தை? இதில் வர்றக் கேரக்டர்ஸ் ஒவ்வொன்னும் வேற லெவல்ல இருக்கு?”என்று புன்னகைத்துக் கொண்டே கேட்டாள்.
“நான் அவ்வளவு சீரியஸாகப் பார்க்க மாட்டேன்மா. உன்னையும் பாக்க விட்டதில்லையே? இந்தச் சீரியலைப் பார்க்கிற நேரத்தில் உங்கிட்ட அப்பப்போ பேசி இருந்தாலாவது நல்லா இருந்து இருக்கும்”என்று தொடக்கப் புள்ளியிலேயே வந்து நின்றார்.
“அதனால் என்ன அத்தை? இனிமேல் பேசிடுவோம். உங்ககிட்ட பேசிச், சிரிக்கனும்னு எனக்கும் ரொம்ப ஆசை அத்தை. இனிமேல் தினமும் நாம எவ்வளவு நேரம் வேணும்னாலும் பேசுவோம்” என்று கூறி அவரை உற்சாகப்படுத்தினாள் ஆரா.
“சூப்பர்மா”என்ற நீலவேணிக்கும் மருமகளின் உற்சாகம் தொற்றிக் கொண்டது.
தான் அவரிடம் கூறியதை அப்போதே நிறைவேற்றும் வகையில் அவரது அருகில் வந்து அமர்ந்து பேச ஆரம்பித்து விட்டாள் ஆரா.
தாங்கள் இருவரும் மாமியார், மருமகளாக மட்டும் இல்லாமல் நல்ல தோழிகளாக மாறும் அளவிற்கு அவர்கள் அன்றே அனைத்தையும் பேசி முடித்து விட வேண்டும் என்ற முடிவோடு இருப்பவர்கள் போல் வெகு நேரம் பேசிக் கொண்டு இருந்தனர்.
தங்களது பேச்சிற்கு இடையிலேயே தன் கணவர் நாச்சிமுத்துவிற்குச் செல்பேசியில் அழைத்து ஆராவிடம் பேச வைத்தவரோ,
அபூர்வன் வந்ததும் அவனிடமும் பேசி அங்கு அழைத்து வந்து விடுவேன் என்றும் கூறி விட்டார் நீலவேணி.
அதைக் கேட்டதும் நாச்சிமுத்துவிற்கும் ஆனந்தமாக இருந்தது.
அந்த அழைப்பை வைத்து விட்டு மகனையும், மருமகளையும் வரவேற்கத் தயாராக இருந்தார்.
அதற்குப் பிறகு, ஆராவும், நீலவேணியும் நான்கு மணி வரைப் பேசிச் சிரித்துக் கொண்டு இருந்தனர்.
அப்போது சுவற்றில் மாட்டி இருந்த கடிகாரத்தைப் பார்த்தவள்,”அத்தை! மணி நாலு ஆகிருச்சு. அவர் வந்துடுவாரு”என நீலவேணிக்கு ஞாபகப்படுத்தினாள்.
உடனே அவரும் தன் மகனின் வரவை ஆவலாக எதிர்பார்த்துக் காத்திருக்கலானார்.
அவரை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் சரியாக நான்கு ஆகி ஐந்து நிமிடங்களில் வீட்டிற்கு வந்து சேர்ந்திருந்தான் ஆபூர்வன்.
அவனைக் கண்டதும் நீலவேணிக்குக் கண்களில் தானாக கண்ணீர்த் துளிர்த்தது.
அதைக் கண்ட அபூர்வனின் கண்களும் கலங்கத் தயாராகின.
“அம்மா!”என்ற வார்த்தையைத் தவிர்த்து வேறு வார்த்தை அவனிடத்தில் இருந்து வரவில்லை.
தன் கனை அணைத்துக் கண்ணீர் உகுக்கத் தொடங்கி விட்டார் நீலவேணி.
ஆராவிற்கு இவர்களைப் பார்த்து ஆனந்தப் பொறாமையாய் இருந்தது. அவளும் உணர்ச்சி வசத்தால் கண்ணீர் சிந்தினாள்.
“சாரி அபூர்வா!”என்று மகனிடம் மனமுவந்து மன்னிப்பு வேண்டினார் நீலவேணி.
“என்னம்மா நீங்க? மன்னிப்பு எல்லாம் கேட்டுக்கிட்டு ஆசீர்வாதம் மட்டும் பண்ணுங்க போதும்” என்று அவருடைய கால்களில் விழுந்தனர் அபூர்வனும், ஆராவும்.
உடனே நெகிழ்ந்து போய் இன்று போல் என்றும் அவர்கள் இவ்வாறான மன ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்று இருவரையும் வாழ்த்தி எழுப்பி விட்டு,
“உள்ளே வந்து உட்காருப்பா. ஆராம்மா! நீயும் உக்காரும்மா. நான் காஃபி போட்றேன். குடிங்க. நான் இதையெல்லாம் உங்களுக்குச் செய்து கொடுத்து ரொம்ப நாளாச்சுல்ல? அதனால் இன்னைக்குச் சூடாகப் பஜ்ஜிக், காஃபியோட வர்றேன். ஆரா! நீ இங்கயே இரும்மா”என்று தங்கள் மூவருக்கும் சேர்த்துக் காஃபியையும், சிற்றுண்டியையும் தயாரிப்பதற்காகச் சமையலறைக்குச் சென்றார் நீலவேணி.
அதே நேரத்தில்,”என்னங்க…! அத்தை”என்று தொடங்கியவள், அவர் தங்களது வீட்டிற்கு வந்த நேரத்தில் இருந்து இப்போது வரைக்கும் தன்னிடம் கூறியதை ஒரு வார்த்தை விடாமல் தன் கணவனிடம் ஒப்புவித்து முடித்திருந்தாள் ஆரா.
– தொடரும்

