
பொறுமை!
புயலே அடித்தாலும் ஆடாமல் அசையாமல் உணர்வுகளை வெளி காட்டாமல் நிற்கும் ஆலமரத்தை போன்றது அது.
ஆனால் இசையரசியோ சிறிய காற்றுக்கே தலையாட்டும் வாழை மரம் போன்றவள்.
இசையரசிக்கு இயல்பிலேயே பொறுமை கொஞ்சம் குறைவு.
அவள் கொண்ட பொறுமை பறந்து போக, வேகமாக மாடிப்படியில் இருந்து கீழே இறங்கி வந்தவள் அங்கு சூழந்து இருந்த கூட்டத்தை சலிப்பாய் பார்த்தாள்.
“எல்லாரும் நின்னு வேடிக்கை பார்க்க இங்கே என்ன கூத்தா நடக்குது… போய் அவங்க அவங்க வேலையை பாருங்க!” என்றாள் கோபமாக.
அவள் பேச்சில் கூட்டம் கலைய இப்போது அங்கே வம்சியும் இசை மட்டுமே.
அடர் சிகப்பில் பூ போட்ட சட்டை போட்டு இருந்த வம்சியோ இரண்டு பட்டன்களை கழற்றிவிட்டு இருந்தான்.
கழுத்தில் பாயும் புலி டாலர் கனமாக தொங்கியது.
கண்களில் கனல் பார்வை. உதட்டில் ஏளமான வளைவு. புருவத்தில் சின்னதாய் ஒரு வெட்டு என
பார்ப்பதற்கு அக்மார்க் ரவுடியாக தெரிந்தான்.
அடர் மஞ்சள் நிறத்தில் பட்டு சேலை இவளை தழுவி இருக்க கழுத்தில் குட்டி மகாலட்சுமி டாலர்.
கண்களில் இழைந்து இருந்தது மழை வானத்தின் நிறம் கொண்ட மை.
பெரிய சிவப்பு நிற பொட்டு என பார்ப்பதற்கு லட்சுமி காடட்சமாய் இருந்தாள் இவள்.
இருவரின் பார்வையும் ஒன்றுக்கு ஒன்று நேர்க்கோட்டில் வெட்டி கொள்ள கையை கட்டி கொண்டு அவனை முறைத்துப் பார்த்தாள்.
“என்ன மிரட்ட வந்து இருக்கீங்களா… இதுக்கு எல்லாம் இசையரசி அடி பணிய மாட்டா” என்றவளின் குரலிலோ அத்தனை அழுத்தம்.
தனக்கு எதிரே நேருக்கு நேர் நின்று பேசும் இசையை கண்டு கோபத்தில் கழுத்தை தேய்த்தான்.
இதுவரை அவன் மற்றவர்களை மிரட்டி தான் பழக்கம்.
ஆனால் முதன்முறையாய் அவனை ஒருத்தி மிரட்டுகின்றாள்.
ஒருபக்கம் கோபம் வந்தாலும் மறுபுறம் அவனை மீறி அவள் தைரியத்தை கண்டு சபாஷ் சொன்னது உள் மனது.
“என் ஸ்டூடன்ட்ஸ் லாம் வெயிட் பண்ணிட்டு இருக்காங்க… சீக்கிரமா என்னை மிரட்டிட்டு போங்க” என கேஷீவல் ஆக அவள் சொல்ல இவனுக்குள் கனன்று கொண்டு இருந்த கோபத்தீக்கு பெட்ரோல் ஊற்றுவது போல ஆகியது.
“என்ன டி திமிரா?”
“ஆமா… இப்போ அதுக்கு என்னன்ற”
என்று அவள் பதிலுக்கு பதில் பேச இவனுக்கு பிபி எகிறியது.
தன்னை முயன்று அடக்கியவன் “என்னை பாட்டு கிளாஸ்லே சேர்த்துகிற” என்றான் கட்டளையாக.
“முடியாதுனா என்ன பண்ணுவ”
“நீ அப்படி சொல்ல மாட்ட… அதுக்கு சின்னதா ஒரு சாம்பிள் காட்டுறேன்” என்றவன் அவள் வீட்டின் வாசலை திறந்து கொண்டு உள்ளே போனான்.
முகப்பில் வைக்கப்பட்டு இருந்த பூந்தொட்டியை வரிசையாக காலில் மிதிக்க பாவம் அந்த பூக்கள் இந்த ராட்சசன் கையில் மிதிப்பட்டு இறந்து போனது.
ஆசை ஆசையாக வளர்த்த அந்த பூச்செடிகளை அந்த மிருகம் அழிப்பதை தாங்காமல் அவன் சட்டையை பிடித்து இழுத்த தடுக்க முயன்றாள்.
ஆனால் அந்த முரடனோ ஆஜானுபாவாக இருக்க அவளால் அவன் கால் நகத்தை கூட நகர்த்த முடியவில்லை.
தன் கோபத்தின் அளவை ஒன்றும் அறியாத செடியின் மீது காண்பித்தவன் திரும்பி அவளைப் பார்த்தான்.
“இப்போ சொல்லு… என்னை உன் பாட்டு கிளாஸ்லே சேர்த்துப்ப தானே” என்று கேட்க “முடியாது” என்று ஸ்திரமாய் தலையாட்டினாள் அவள்.
“ஓகே அப்போ உனக்கு இந்த டெமோ பத்தாது போல. இரு”என்றவன் தடதடவென மாடிப்படிகளில் ஏறினான்.
அந்த இடத்தின் நடுவே வைக்கப்பட்டு இருந்த நடராஜரின் சிலையை கண்டவன் அதன் அருகே சென்றான்.
அடுத்து நடக்க போகும் விபரீதத்தை முன்பே உணர்ந்தவள் “வேண்டாம் எடுக்காதே” என்று சொல்லி முடிப்பதற்குள் எடுத்து முடித்து இருந்தான் அவன்.
அந்த நடராஜர் சிலை இசைக்கு அவள் அப்பா தந்த பரிசு…
அவர் இறந்து வருடங்கள் பல கடந்தாலும் இதுநாள் வரை பொக்கிஷமாய் பாதுகாத்து வந்து இருந்தாள்.
ஆனால் இப்போது அந்த சிலை தன் முன்னாலேயே உடைய போகிறது என்பதை மனம் ஏற்று கொள்ளவே இல்லை.
“இப்போ சொல்லு என்னை பாட்டு கிளாஸ்லே சேர்த்துப்ப தானே” என்றவன் கேட்க உடைய துடித்த கண்ணீரை கீழே விழாமல் கட்டுப்படுத்தியவள் “சரி சேர்ந்துக்க… ஆனால் என் டார்ச்சர் தாங்காம நீயே ஒரு வாரத்துலே ஓடிடுவ பாரு” என்றாள் நெஞ்சை நிமிர்த்தி.
“யாரு யாரோட டார்ச்சர் தாங்காம ஓடிப் போறாங்கனு பார்க்கலாம் டீச்சர்… இன்னும் ஒரே வாரத்துலே உன் பாட்டு கிளாஸை மூட வைக்கிறேன்” என்றான் கண்களில் கனலை தேக்கி.
இதில் யாருடைய சபதம் நிறைவேறப் போகின்றது என்று பொறுத்து இருந்து பார்ப்போம்.

