Loading

சமுத்திரா – 6:

பலத்த இடியின் ஓசையை கேட்ட அனைவருக்கும் ஒருநொடி திக்கென்று இருந்தது. இதுவரை மழையில் கடற்பயணம் மேற்கொள்ளாத ஆடவர்களுக்குமே மனதில் சிறு கிலி பிடித்தது.

காலையிலிருந்து மனதின் சஞ்சலத்தில் உழன்றுக் கொண்டிருந்த சக்தி, “மழை வந்தா நம்ம ட்ராவலுக்கு எந்த தடையும் வராது தான அமர்..?” என சந்தேகத்துடன் வினவினான்.

ரங்காவும் யோசனையுடன், “இப்படி இடி, மின்னல்ன்னு இருக்கே. கண்டிப்பா மழை வர வாய்ப்பிருக்கு தான்.” என்றான்.

மழையில் கப்பலை செலுத்துவது எவ்வளவு கடினம் என்று அனுபவத்தால் உணர்ந்திருந்த அமர், “அதான் நானும் யோசிக்கிறேன். காலைல இருந்தே வெயில் தான் இருந்தது. இப்ப தான் மழை வர மாதிரி இருக்கு..” என்றவன் கையில் இருந்த கடிகாரத்தில் மணியை பார்த்துவிட்டு, “நாம இன்னும் ரெண்டு மணி நேரத்துல பாண்டிச்சேரி போய்டுவோம். மழை வந்தாலும் நமக்கு எந்த பிரச்சனை இல்லை.” என்றான். அவன் சொன்னதை கேட்ட சக்தியும், ரங்காவும் நிம்மதி அடைந்தனர்.

அவர்களின் நிம்மதி பறிப்போவது மட்டுமில்லாமல் அவர்களின் பயணமே தடைப்பட போவதை அறியாமல் மூவரும் பேசிக் கொண்டிருந்தனர்.

அந்த “சமுத்திரா” பெட்டியை சுற்றி விலோ, ஷிவன்யா, ப்ரதீப் மூவரும் அமர்ந்திருந்தனர்.

விலோவின் அருகில் இருந்த ப்ரதீப், “அந்த பெயரை படிச்சது போதும். அதுல என்ன இருக்குன்னு பார்க்கலாம். சீக்கிரமா திற விலோ.” என்று அவளை அவசரப்படுத்தினான்.

பெயர் படித்ததற்கே விலோச்சனாவிற்கு உடலெல்லாம் சிலிர்த்து அடங்கியது. மேலும் அந்த பெட்டியின் மேல் வாள், மீன், கப்பல், கொள்ளைக்காரன் போன்ற படங்கள் அச்சிடப்பட்டிருந்ததையே திகிலுடன் பார்த்துக் கொண்டிருந்தவள், “உனக்கு எதுவும் வித்தியாசமா தோணலையா ப்ரதீப்..? ஷிவ் உனக்கு?” என்று இருவரையும் கேட்டுவிட்டு அந்த அறையையும் அவர்கள் அனைவரையும் ஒருமுறை சுற்றி பார்த்தாள்.

ப்ரதீப்பிற்கும் இடியின் ஓசை பகீரென்று தான் இருந்தது. இருந்தாலும் அதனை வெளி காட்டாமல், “எனக்கு எதுவும் தோணலயே விலோ. நீ இந்த பெட்டியை எடுத்துட்டு வந்த, அதுக்குமேல சமுத்திரான்னு எழுதிருக்கு. அதை வாசிச்சிட்டு நீ பேபேன்னு பேக்கு மாதிரி முழிச்சிட்டு இருக்க..” என்றான் சிரிப்புடன்.

“அப்ப அந்த பயங்கரமான இடி?” என்று விலோவின் கேள்விக்கு,

“உனக்கு கிறுக்கு தான் பிடிச்சிருக்கு விலோ. ரிசார்ட் உள்ள வரப்ப கால் ஸ்லிப் ஆனதுக்கே அவ்வளவு பேசுன. இப்ப இந்த இடிக்கும் இவ்வளவு யோசிக்கிற..” என்ற ஷிவன்யா பேசிக்கொண்டே அவளிடமிருந்து பெட்டியை வாங்கி திறக்க முயன்றாள்.

“வேணாம் ஷிவ். அதை திறக்காத” என விலோ தடுக்க,

ப்ரதீப், “இடி இடிச்சதும் பயந்திட்டியா விலோ..” என அவளை கிண்டல் செய்தவன், “இதை திறக்க முடியல..” என்ற ஷிவன்யாவிடமிருந்து பெட்டியை வாங்கி திறக்க முயற்சித்தான்.

“ஒருவேளை இதுக்குள்ள பேய் எதாவது இருக்குமோ..?” என்று ஷிவன்யா விலோவை பார்த்து பயமுறுத்தினாள்.

“ஹான்! இருக்கும் இருக்கும். நீங்க ரெண்டு பேர் தான் பக்கத்துல இருக்கீங்க. இதுக்கு மேல எதுக்கு தனியா அது வேற வரணும்?” என்ற ப்ரதீப் பேசிக்கொண்டே, பெட்டியை சிரத்தையெடுத்து திறந்துவிட்டான். பல வருடங்களாய் திறக்கப்படமால் இருந்த பெட்டி என்பதால் ‘க்ரீச் க்ரீச்’ என்ற சத்தத்துடன் திறந்துக் கொண்டது.

விலோவிற்கு மனதில் பயமும் பதட்டமும் இருந்தாலும் ‘அப்படி என்ன தான் உள்ள இருக்கிறது?’ என்பதை அறியும் ஆவலும் சரிசமமாக இருந்தது. எனவே, ப்ரதீப் மற்றும் ஷிவன்யாவுடன் சேர்ந்து அவளும் அந்த பெட்டியை எட்டி பார்த்தாள்.

மரப்பெட்டியை இரண்டாக திறந்ததும் இடப்பக்கம் சில குறிப்புகள் எழுதியிருந்தது. வலபக்கத்தில் ஒரு வரைப்படமும் அதற்கு கீழ் பல வண்ணங்களில் சிறு சிறு கப்பல்களும் இருந்தன. அதனுடன் சிவப்பு நிறத்தில் ஒரு பகடையும் அடைக்கப்பட்டு இருந்தது.

அதனை பார்த்துவிட்டு அங்கிருந்த குறிப்புகளை பார்க்க தொடங்கினர் மூவரும்.

“முக்காலங்களையும் உணர்ந்திருக்கும் சமுத்திரத்தின் மாய உலகிற்கு உங்களை வரவேற்கிறேன்.

அதிர்ச்சிகள், ஆச்சரியங்கள், மர்மங்கள், மாயங்கள் என அனைத்தும் நிறைந்த சாகச விளையாட்டான “சமுத்திரா”வை விளையாட நீங்கள் தயாரா?

சமுத்திராவின் இலக்கை நோக்கிய பயணத்தில் பதினைந்து குமிழ்களை கடந்து எல்லையை அடைய வேண்டும். எல்லையை அடைந்த பின், அவர் ‘சமுத்திரா’ என்கிற மந்திர வார்த்தையை உச்சரித்து நிறைவு செய்ய வேண்டும். 

அப்படி நிறைவு செய்யும் பட்சத்தில், இவ்விளையாட்டினால் ஏற்பட்ட மாற்றங்கள், பாதிப்புகள் என அனைத்தும் மாயமாய் மறைந்து இயல்பு நிலைக்கு திரும்பிவிடும்.

ஒருவேளை நீங்கள் விளையாட்டை தொடராமல் பாதியிலே நிறுத்தினாலோ? அல்லது உங்களால் விளையாட்டை முடிக்க முடியாமல் போனாலோ? இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்பாமல் அப்படியே தொடரும் தொடர்கதையாகிவிடும்..

இவ்விளையாட்டை விளையாடி முடிவை காண உங்களுக்கு வாழ்த்துக்கள்!!!”

என்று அச்சிடப்பட்டிருந்த குறிப்பை வாசித்து முடித்த மூவரும் அங்கிருந்த வரைப்படத்தை பார்த்தனர்.

அந்த குறிப்பில் சொல்லபட்டதை போல் அந்த விளையாட்டு பெட்டியின் வலப்புறத்தில் ஒரு வரைபடம் இருந்தது. அதில் பதினைந்து குமிழ்கள் இருந்தன. ஒவ்வொரு குமிழுக்கும் முறையே 1, 2 என்று வரிசையாக எழுதப்பட்டு கடைசியாக 15வது குமிழிற்கு மட்டும் “சமுத்திராவின் இலக்கு” என்று பதியப்பட்டிருந்தது.

“ஏதோ கேம் மாதிரி இருக்கு. அதுவும் அந்த குறிப்புகள் ரொம்ப பயங்கரமா இருக்கு” என விலோ சொல்லிக்கொண்டே அதனை கலக்கத்துடன் பார்த்தாள்.

ப்ரதீப், “நீ ஜுமாஞ்சி, ஜத்துரா படம் பாத்திருக்கியா விலோ? அதுலயும் இப்படி தான கேம் வரும்”

விலோ அதிர்ச்சியுடன், “அப்ப அதுல வர மாதிரி இதுலயும் ஏதாவது வில்லங்கம் வரும்னு சொல்லுறியா?”

ப்ரதீப் விலோவை பார்த்து உதட்டை பிதுக்கி, “தெரியலையே..” என்றான்.

அதுவரை அவர்களின் பேச்சினை கேட்டுக்கொண்டிருந்த ஷிவன்யா, “சினிமாக்காரங்க ஆயிரம் கட்டுகதைய வைத்துதான் படம் எடுப்பாங்க. அதெல்லாமா நம்புறீங்க? அண்ட் அந்த ரெண்டு படமும் புக்கை தழுவி தான் எடுக்கப்பட்டது. எல்லாமே மனுஷங்களோட கற்பனை தான்.” தீர்க்கமான குரலில் ஷிவன்யா கூறினாள்.

“இப்பலாம் அந்த மாதிரி போர்ட் கேம்ஸ் அமேசான்லயே நிறைய கிடைக்குது. அதை அடிப்படையா வெச்சி நிறைய கேம்ஸ் எப்பவோ வந்துடுச்சி விலோ.” என்று விளக்கவும் செய்தாள் ஷிவன்யா.

“நிஜமா வா சொல்லுற ஷிவ்? அப்ப இதுனால ஒன்னும் ஆகாதா..” என்றவளுக்கு அமேசானை திறந்து அதில் இருந்த விளையாட்டினை காட்டினாள். ப்ரதீப்பும் அதனை வாங்கி பார்த்தான்.

“இருந்தாலும் இப்ப நம்மகிட்ட இருக்க விளையாட்டு அதுல இல்லையே..” என்ற விலோ, “நாம இதை மூடி வெச்சிடலாம்.” என்றாள்.

ப்ரதீப், “நீ தான கேம் விளையாடலாம்னு ரொம்ப நேரமா கூப்பிட்ட? இதையே விளையாடலாம்.” விளையாட்டு வினையாக போவதை அறியாமல் அவன் கூறினான்.

“இதுவா..? முடியவே முடியாது. நீயும் தான அந்த க்ளூஸை படிச்ச..? நிச்சயமா எதாவது இருக்கும். இது வேண்டாம்.” என்று கூறி விலோ அதனை மூட முயல,

ஷிவன்யா ஆர்வத்துடன், “லெட்ஸ் ப்லே விலோ. அப்படி ஒன்னும் இதுல இருக்காது. நான் தான் சொல்றனே..” என விலோவை பார்த்து அழைத்தாள்.

“நோ ஷிவ். எதுவும் இல்லனாலும் பரவாயில்லை. நாம இத விளையாட வேண்டாம்.” என்று உறுதியுடன் மறுத்தாள்.

“சரி சும்மா அந்த டைஸை பார்த்துட்டு வெச்சிடுறேன். பார்க்கவே சிவப்பு கலர்ல அழகாயிருக்கு!” என்ற ஷிவன்யா அந்த பெட்டியில் இருந்த பகடையை எடுத்து பார்க்க, “பார்த்துட்டு வெச்சிடனும்” கண்டிப்பான குரலில் விலோ கூறினாள்.

மடிக்கணினியில் வேலை பார்த்தாலும் இவர்களையும் ஒரு பார்வை பார்த்த சக்திக்கு அவர்கள் அமர்ந்து பேசுவது மட்டுமே தெரிந்தது.

ப்ரதீப், “பார்த்துக்கிட்டே இருந்தா எப்படி? அத கொடு நான் உருட்டிவிடுறேன்..” என ஷிவன்யாவின் கையில் இருந்த பகடையை பறிக்க வந்தான்.

“ஏய்..” என்று ஷிவன்யா உணரும் முன் ப்ரதீப்பின் கைப்பட்டு ஷிவன்யாயின் கரத்தில் இருந்த பகடை விழ, மூவரும் அதிர்ச்சியுடன் அதனை பார்த்தனர். கீழே விழுந்த பகடை சில முறை உருண்டுவிட்டு மூன்று என்ற எண்ணில் நின்றது.

“ஏதுக்கு ப்ரதீப் இப்படி பண்ண? இதனால என்னென்ன வருமோ?” பீதியுடன் பகடையை பார்த்த விலோ நிமிர்ந்து ப்ரதீப்பை பார்த்து திட்ட தொடங்கினாள்.

“ஹே விலோ! சும்மா உன்னை மிரட்டலாம்னு தான், நான் அந்த டைஸை அவகிட்ட இருந்து வாங்க பார்த்த..” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே,

அந்த பெட்டியினுள் சிறிதாக இருந்த நீலநிற கப்பல் தானாக நகர்ந்து, இரண்டு கட்டங்களை தாண்டி மூன்றாம் எண்ணில் சென்று நின்றது. மூவரும் வெறித்த பார்வையுடன் அதனை பார்த்தனர். ‘அந்த குட்டி கப்பல் எப்படி தானாகவே நகர்ந்துச்சு?’ என்று யோசித்துக் கொண்டே சுற்றியும் பார்த்தனர். அந்த பெட்டியில் நீர் குமிழ் போல் இருந்த வட்டத்தில் மாயமாக எழுத்துக்கள் தோன்ற தொடங்கியது!

“சமுத்திர உலகத்தின் வழிகாட்டி உங்களை வரவேற்க காத்து கொண்டிருக்கிறான்..!”

அதனை படித்த மூவருக்கும் திக்கென்று இருந்தது. ஒருவரின் முகத்தை மற்றவர் பார்த்துவிட்டு அந்த அறையையும் சுற்றியும் பார்த்துக் கொண்டனர்.

அவர்கள் இருந்த அறையின் வலப்புறத்தில் இருந்த கதவு லேசாக திறக்கப்பட, பயந்து போன விலோ ஷிவன்யாவை ஒட்டி அமர்ந்துக்கொண்டாள்.

சில நிமிடங்கள் கடந்தும் எதுவும் அங்கு விசித்திரமாகவோ வித்யாசமாகவோ தோன்றவில்லை. எனவே, “ச்ச காத்துக்கு கதவு ஆடிருக்கு..” என்ற விலோ ஆசுவாசமாக, ஷிவன்யாவும் ப்ரதீப்பும் அவளை பார்த்து சிரித்தனர்.

ஷிவன்யா, “நான் தான் சொன்னனே! எல்லாமே கற்பனை தான். இதெல்லாம் சும்மா. எனக்கு தெரிஞ்சு இதுல பேட்டரி இருக்கும். அதான் அந்த க்ளுஸ் வருது போல..” என்று அந்த பெட்டியை தூக்கி அடியினில் பார்த்தாள். ஆனால் அங்கு பேட்டரி இருப்பத்தற்கான எந்த ஆதாரமும் இல்லை.

விலோ சந்தேகத்துடன், “நீ மூன்று போட்டதும் எப்படி அந்த நீல நிற கப்பல் சரியா நகர்ந்தது?”

சரியான கேள்வி தானே? அவள் மூன்று போடாமல் வேறொரு எண் போட்டிருந்தாலும் அந்த கப்பல் நகர்ந்திருக்க வாய்ப்பிருக்கு தானே! அது எப்படி என்ற கேள்விக்கு தான் ஷிவன்யா இடம் பதிலில்லை. அவர்கள் அனைவரையும் சுற்றி மீளமுடியாத மாயவலை பின்ன தொடங்கியதை அவர்கள் தான் அறியவில்லை!

ஷிவன்யாவுக்கு அடுத்து அந்த பகடையை யாரும் உருட்டவில்லை. அந்த கப்பல் எப்படி தானாகவே நகர்ந்தது என்று தான் மூவரும் சிந்தித்துக் கொண்டிருந்தனர்.

“நாம மறுபடி ட்ரை பண்ணி பார்க்கலாம். இந்த முறையும் கப்பல் தானாகவே நகருதானு செக் பண்ணி பார்க்கலாமா?” என்று விலோ ஆலோசனையாக இருவரிடமும் கேட்டாள்.

– சமுத்திரா வருவாள்

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்