Loading

குறிச்சி குமரி – 1🏝️

பாலாறு ஒடிக் கொண்டிருக்கும்  இராய வேலூர் என்னும் வேலூர்  மாவட்டத்தில்  பிரசித்தி பெற்ற ஜலகண்டேசுவரர் கோவிலில் எண்ணற்ற சுற்றுலா பயணிகள் வருவதும் போவதுமாக இருந்தனர்.

அக்கோவிலின் வாசலில் உள்ள பூக்கடைகளில் இடதுபுறமாக நான்கு கடைகள் தள்ளி ஒரு சின்னக் பூ கடை இருந்தது.

அக்கடையின்  சுத்தமும், வாசனையும், வித்தியாசமான பூக்களும் பூத்துக் குலுங்கின. அதை அழகாக கோர்த்து மாலையாக்கி  விற்றுக் கொண்டிருந்தாள் முல்லை.

26 வயது மிக்க ஒரு இளம்பெண். எலுமிச்சை பழம் நிறத்தில் கண் மை தீட்டாமலே தனித்துவமாக எடுத்துக்காட்டும் கண்கள், சாயம் பூசாமலயே சிவந்த உதடு, இடை வரை தவழும் முடி கற்களை பின்னலிட்டிருப்பாள். நவீன காலத்திலும் தாவணி அணியும் இளயுவதி.   வீட்டிற்காக உழைப்பவள். இயல்பிலேயே அமைதியான சுபாவம் கொண்டவள்.

ஹார்ட்டிகல்சரில்(horticulture )முதுகலை பட்டதாரி. அவளுக்கு தோட்டக்கலையில் சிறு வயதிலிருந்தே மிகுந்த ஆர்வம் உண்டு. அதனால் அதற்கான படிப்பையே ஸ்காலர்ஷிப் மூலம் படித்தாள்.

அவள்  மாலைகளை விதவிதமாக கோர்ப்பதிலும் கைத்தேர்ந்தவள். அவளுக்கு எக்காலத்தில் எந்நிலத்தில் என்னென்ன பூ பூக்கும் என்பதும் தெரியும். இயற்கையிலேயே அவள் திறமைக்கு எட்டிய விஷயங்கள் இவை. அதனால் கல்லூரியில் சொல்லிக் தந்ததை வைத்தும், தனக்கு தெரிந்ததையும் சேர்த்து இன்று தன் வீட்டைச் சுற்றி புது வகையான செடிகள், கொடிகள் எல்லாம் நட்டு வைத்து பராமரித்து வருகிறாள்.

முல்லை இவ்வாறு மாலை கோர்ப்பதை அவர் அம்மா நாச்சியார்  விற்பார். இக்கடையை முதலில் பராமரித்தது இவர் அப்பா சங்கரன். ஆனால், மூன்று வருடங்களுக்கு முன்பு தவறியதால் இவர்கள் எடுத்து நடத்துகிறார்கள்.

சங்கரன் காலத்தில் கணிசமான வியாபாரம் தான் நடக்கும். ஆனால் , முல்லையின் கைப் பக்குவதில் சேமிப்பதற்கு ஒரு தொகை சேர்கிறது.

இன்று வெள்ளிக்கிழமை என்பதால் கூட்டம்  கொஞ்சம் கூடுதலாக வரும் என்பதால் எப்பொழுதும் திறக்கும் நேரத்தை  விட இன்று சீக்கிரமாகவே வந்து கடையை திறந்து மாலைகளை கோர்க்க ஆரம்பித்தாள் முல்லை.

எப்பொழுதும் போல் இன்றும் மாலைகளும், அர்ச்சனை தட்டுகளும் விற்று ஒரு கணிச தொகை கைகளுக்கு எட்டியது. நாச்சியாரும், முல்லையும் இரவு 9 மணி அளவில் கடையை மூடிவிட்டு வீட்டிற்கு இருவரும் சென்று கொண்டிருந்தனர்.

“ஏண்டி, இப்போ இந்த ரூபாயை வீட்டிற்கு கொண்டு போனால் உன் அண்ணி பறிச்சுறுவாளே? மாசம் 15 தேதி ஆச்சு இன்னும் வாடகை கொடுக்கல. ஏதோ நல்ல மனுஷன் எதுவும் கேட்காம இருக்கார் வீட்டு ஓனர். ” என்று புலம்பி கொண்டே வந்தார் நாச்சியார்.

“போகும் போதே அவர் கடையில் கொடுத்து விட்டு வீட்டுக்கு போவோம் அம்மா ” என்று அமைதியாக கூறினாள் முல்லை.

“அய்யய்யோ அவ்ளோ தூரம் நடக்க முடியாதடிம்மா. அதோடு படிக்கிற பிள்ளையை வேலை வாங்கிட்டு இருப்பா உன் அண்ணி. பாவம் உன் தங்கச்சிக்கு ஏதோ பரிட்சையாம். நான் போறேன். நீ கொடுத்துட்டு வா” என்று கூறி விட்டு அவள் கையில் உள்ள பைகளை எல்லாம் வாங்கிக் கொண்டு இல்லம் நோக்கி சென்று விட்டார்.

ஒனரின் கடை நோக்கி சென்றாள். தூரத்திலிருந்தே முல்லை வருவதை பார்த்த கருணாகரன் வெத்தலைப் போட்டு சிவந்திருந்த பல்லை காண்பித்தான்.

அவன் ஒரு 50 வயதுமிக்க மளிகை கடை வியாபாரி. சிறு கடை வைத்து உழைத்து ஒரு காலனியை கட்டி உள்ளான் .மனைவி இறந்து விட்டாள். பிள்ளைகளும் கிடையாது. தனியாக இருப்பவனுக்கு தேவைகள் அதிகமாக இருப்பதால் அந்த காலனியில் குடி வைத்திருக்கும் குடும்பத்தில் உள்ள இளவயது பெண்களிடம் வரை முறையின்றி  பழகுபவன்.அவனிடமிருந்து தன்னையும், தன் தங்கையையும் காப்பதே முல்லையுடைய தலையாய கடமையாகும்.

ஆனால், தனது அம்மாவிடம் கூற முடியாத குழ்நிலை. சங்கரன் உள்ளவரை  இவர்கள் சொந்தகாரர் ஒருவரின் வீட்டில் வாடகைக்கு இருந்தனர். அவர் இறந்தவுடன் அவர்கள் வெளியே அனுப்பி விட கைக்கு வரும் வருமானத்திற்கு ஏற்றவாறு உள்ள இக்காலனியில் ஒரு வீட்டில் முல்லை, அவள் அம்மா , தங்கை இருக்கிறனர். அடுத்த வீட்டில் அவளின் அண்ணன் அண்ணி தனிக் குடித்தனம் இருக்கின்றனர்.

முல்லையின் அண்ணன் செழியன் பேங்கில் கேசியராக வேலை பார்ப்பவன். அதனால் அவன் இந்த வீட்டிற்கும் செலவக்கு காசு கொடுப்பான். அதனால் முல்லையின் அண்ணி மஞ்சுளா  கடையின் வருமானத்தையும் வாங்கி மாதம் மாதம் செலவுக்கு கொடுப்பாள். “இரு வீட்டிற்கும் சேர்த்து ஒரு சமையல் தான் இருக்க வேண்டும் .என் மனைவி சமைக்க மாட்டாள் “என்று கூறிவிட்டான் செழியன்.

தனது தங்கைகளுக்கு பாதுகாப்பாகவும் இருக்க மாட்டான். அதனால், கருணாகரன் வாய்ப்புகளுக்கு எதிர்ப்பார்த்து கொண்டிருக்கிறான்.

முல்லை போல் அவள் தங்கை சென்மொழி அமைதியானவள். நிறத்தில் முல்லையை விட சிறிது குறைவு என்றாலும் அழகில் இவளை மிஞ்ச முடியாது. அளவாக முகவமைப்பைக் கொண்டவள். கொஞ்சம் வெகுளியும் அதிகம். இவர்கள் இருவரும் இவ்வாறு இருப்பதே மஞ்சுளாவிற்கு பொறாமை அதிகம். கருணாகரனுக்கு ஆர்வம் அதிகம்.

கருணாகரனிடம்  இந்த மாத வாடகையை கொடுக்க “ஏன் பாப்பா, நீங்களே சிரமம்படுகிறீர்கள். ஏன் அவசரம்? நான் அம்மாவிடம் சொல்லுகிறேன்”என்று கூறி அவளின் கன்னம் தொட்டு கையைப் பிடித்துக் கொண்டு கூறினான்.

நாசுக்காக அவரின் பிடியிலிருந்து ஒரு அடி   விலகி  “பரவாயில்லை அய்யா” என்று கூறி ரூபாயை நீட்டினாள்.

வருமானம் முக்கியம் என்பதால்  அதற்கு மேல் அவன் வற்புறுத்தாமல்  ரூபாயை வாங்கும் சாக்கில்  அவள் கையை இழுத்து பிடித்து தொட்டு தடவி தான் விட்டான் அவளை.

வாங்கிக்கொண்ட மறு நிமிடம் வந்த கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டு விறுவிறுவென்று திரும்பி நடந்தாள்.

முன்னால் இருக்கும் கண்ணாடி வழியில் பார்த்த முல்லைக்கு குமட்டிக் கொண்டு வந்தது . கருணாகரன் அவளைத் தொட்டதினால் வந்த ஆனந்தத்தில் அவன் கைகளுக்கு அவனே முத்தமிட்டு , அதை நாவால் சுவைத்து மகிழ்ந்து கொண்டான். 

இதைப் பார்த்த பொழுது அடக்கி வைத்த கண்ணீர் வெளி வந்தது. அவனை கொன்று விடும் வெறியும் வந்தது. திரும்பிய சமயம் அவள் கைப்பேசிக்கு அழைப்பு வந்தது. அதைப் பார்த்த முல்லைக்கு தனது எண்ணத்தை நினைத்து அதிர்ந்து விட்டாள்.

நின்ற அழைப்பு மீண்டும் உயிர் பெற, அழைத்த அம்மாவிடம் அட்டெண்ட் செய்து வந்துக் கொண்டிருப்பதாக கூறி விட்டு வீட்டிற்கு விரைந்தாள்.

காலனியில் காலை வைத்தவுடன் காதில் விழுந்தது எங்கே அந்த ஓடுகாலி? ஊர் சுத்த போய்ட்டாளா? என்ற மஞ்சுளாவின் கத்தலே.

மனமும் உடலும் சோர்வடைந்து விட்டது. ஆனால், போனவுடன் வீட்டு வேலைகள் செய்ய வேண்டும் என்று நினைக்கும் பொழுதே  அழுத்தம் ஆதிகமாகுவது போல் இருந்தது. பெருமூச்சுடன் உள்ளே நுழைந்தாள்.

கருணாகரன் காலனியில் மொத்தம் 12 குடிகள். காலனிக்கு பொதுவாக வெளியில் கதவு இருக்கும். அதைத் திறந்து உள்ளே சென்றால் இடது பக்கம் கீழே மூன்று வீடு மேலே மூன்று வீடு என்று இருக்கும். அதே போல் வலதுப்பக்கமும் ஆறு வீடு இருக்கும். இக்காலனியின் பின்பக்கத்தில் மொத்த அகலத்தையும் சேர்த்து ஒரே வீடாக கட்டி அதனுள் கருணாகரன் இருக்கிறார்.

முதல் இரண்டு வீடும் கொஞ்சம் பெரிது. ஒரு ஹால், ஒரு கிட்சன்,இரண்டு படுக்கையறை கொண்டது. இறுதியாக இருக்கும் வீடு சிறிது. இதில் ஒரு படுக்கையறை தான் இருக்கும்.

வலது புறத்தில் உள்ள இரண்டாம் வீட்டில் மஞ்சுளாவும், கடைசி வீட்டில் முல்லையும் இருக்கிறார்கள்.

முல்லை வீட்டு வாசலில் மஞ்சுளா கத்த சென்மொழி அழுது கொண்டிருக்க நாச்சியார் கைகளை பிசைந்து கொண்டிருந்தார்.

இந்நிகழ்ச்சியை அனைவரும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அதை காணும் பொழுதே அவமானமாக இருந்தது.

அண்ணியின் சத்தத்தை குறைக்கும் பொருட்டு வேகமாக அவள் முன் நின்றால்  தன் அன்னையையும் தங்கையையும் காப்பாற்றுவதற்காக.

அவள் வந்தவுடன் மஞ்சுளா அவளின் கண்களில் ஏதோ இருப்பதாக அவளுக்கு பல நாட்களாக தோன்றி கொண்டிருக்கிறது. அது அவளுக்கு கிலி உண்டாக்குவதால் யாரிடமும் கூறவில்லை தன் கணவரிடம் கூட.

இன்று அவன் முன்னால் வரவும் அதிர்ந்து  மஞ்சுளா இரு அடி பின்வாங்கினாள். ஆனால், முல்லை”அண்ணி என்னாச்சு? ஏன் சத்தம் போடுறீங்க? ” என்று மெதுவாக கேட்டாள்.

ஆனால் மஞ்சுளாவிற்கு அவள் பார்வை பயத்தை ஏற்படுத்தியது. இருந்தும் தன்னை சமன் செய்து  அவளிடம்  “எங்க போன? ஏன் இவ்ளோ நேரம் ? உங்க அண்ணன் ஊரில் இல்லைனா அக்கா தங்கச்சியும் வெளிய ஊர் சுத்த போயிடுவிங்களா?”எகிறினாள் மஞ்சளா.

திரும்பி தன் தங்கையை பார்க்க, “அக்கா நாளைக்கு எக்ஸாம். நோட்ஸ் வாங்க போனேன். அதுவும் பக்கத்து தெருவிலிருக்கும் என் தோழி அமிர்தா கிட்டத்தான் வாங்க போனேன்” என்று விளக்கம் கொடுத்தாள்.

“ஆமாம் . இவள் சொல்ற கதையலாம் உண்மைனு நம்பத்தான் எங்க அம்மா அப்பா காது குத்திருக்காங்க? அவக் கதைக்கு அப்புறம் போவோம். நீ ஏன் லேட்டு? உங்க அம்மாவே முன்னாடி வந்துட்டாங்க அதுவும் இந்தக் கால வச்சுக்கிட்டு …? “மஞ்சுளா கூறி முடிப்பதிற்குள்

“அண்ணி, இப்போ உங்களுக்கு என்ன வேணும் ? ரூபாய் தானா?இந்த வாரத்தில்  வந்த வருமானத்தை வாடகை மீதி கொடுக்கமால் இருந்தத கொடுத்துட்டேன். நைட்டுக்கு சமைக்கணும் தானா? நான் அரை மணி நேரத்தில் சமைச்சு கொண்டு வரேன். வேற என்ன வேணும்? “முல்லை கடுமையாக கூறினாள்.

முல்லையின் தீர்க்கமான பார்வை இன்னும் நெருடலாக இருந்தது  மஞ்சுளாவிற்கு, இருந்தும் சமாளிக்கும் விதமாக “ம்ம்ம் …. அவ்ளோதான். அடுத்த வாரம் மொத்த காசும் எனக்கு வரணும். இந்த வாரம் தரவில்லை இல்லையா? ” என்று கூறி உள்ளே நுழையும் பொழுது வீட்டினுள்ளே இருந்து வெளியே வந்தான்  செழியன்.

அனைத்தையும்  கேட்டுக் கொண்டு அமைதியாக இருப்பவனை புழுவைப் போல் பார்த்து விட்டு அம்மா,  தங்கையை  அழைத்துக் கொண்டு அவள் வீட்டுக்கு சென்று விட்டாள்.

காலையில் இருந்து உட்காராமல் செய்த பலன் உடல் சோர்வு கொடுத்தது. தங்கை படிப்பதாலும். அம்மாவிற்கு கால் வலியினாலும் , உடல் அலுப்பு போக குளித்து விட்டு  சமையல் அறைக்குள் நுழைந்தாள். உதவிக்கு வந்த நாச்சியார் அம்மாவையும், சென்மொழியையும் 
தடுத்து விட்டு அவளே செய்து முடித்தாள்.

அண்ணி வீட்டிற்கும் கொடுத்து விட்டு. இவர்களும் உண்டு விட்டு மீதி வேலைகளை முடித்து கண் அயர்ந்த பொழுது கதவு தட்டும் சத்தம் கேட்டது.

கீர்த்தி☘️

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0
  • Select

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்