Loading

இனிய கானம் செவிகளில் ஒலிக்க கண்ணுக்கு குளிர்ச்சியாக நிலாமகள் காட்சியளிக்க அந்த பேருந்து பயணம் ரம்மியமாக தான் சென்று கொண்டிருந்தது. சற்று நேரத்தில் அமர்ந்தபடியே தூயவன் உறங்கியும் விட்டான். பேருந்து மெது மெதுவாக வேகம் குறைக்கப்பட்டு ஒரு கடைக்கு அருகில் நிற்கப்பட்டது. மெதுவாக உறக்கம் கலைய கண்விழித்து பார்த்தவனின் எதிரில் பெண்ணவள் இல்லை. ஜன்னல் வழியே வெளியே எட்டிப்பார்க்க அவளோ கழிவறை நோக்கி செல்வது தூயவனின் கண்ணில் பட்டது. 

‘ஓ ரெஸ்ட்ரூம் போயிருக்காளா’ என்றபடி கைக் கால்களை நெளித்துவிட்டவனின் விழியில் திரை அணைக்கப்படாத அவளது அலைப்பேசி ஒளிர்ந்தது. 

‘என்ன மொபைலை கூட ஆஃப் பண்ணாம போயிட்டா.. அவளுக்கென்ன அவசரமோ பாவம்’ என்று நினைத்தவன் அதனை அணைக்கலாம் என்றெண்ணி எடுக்க தொடுதிரையில் அவனின் விரல் பட்டு அஜய் என்று பதியப்பட்டிருந்த ஒரு புலன உரையாடல் (whatsapp chat) திறந்துகொண்டது. 

‘அடக்கடவுளே தெரியாம ஓபன் பண்ணிட்டனே’ என்று பதறியவன் வெளிவர எத்தனிக்க அந்த உரையாடலுக்கு அனுப்பப்பட்டிருந்த உறங்கிக்கொண்டிருந்த தன்னுடன் ஆதினி எடுத்திருந்த சுயப்படத்தை(selfie) பார்த்தவனுக்கு புருவம் இடுங்கியது. 

‘என்ன இது.. இவ எதுக்கு என்கூட செல்பீ எடுத்தா.. அதுவும் எனக்கு தெரியாம.. அதை எதுக்கு இவனுக்கு அனுப்பிருக்கா.. யார் இவன்..’ என்று யோசித்தபடி ஜன்னலைப் பார்த்தவனுக்கு அவள் கழிவறை விட்டு வெளியே வருவது தெரிய அவசரமாக உரையாடலை ஆராய்ந்தான். 

பார்ட்டி பெரிய பணக்காரனா இருப்பான்னு நினைக்குறேன்.. இவனை மட்டும் வளைச்சுப்போட்டேன் லைஃப் முழுக்க நான் செட்டில் தான்..‘ என்ற ஒரு குறுஞ்செய்தியும்,

அவனை கரெக்ட் பண்ண தான் ட்ரை பண்ணிட்டு இருக்கேன்.. இப்போவே கொஞ்சம் என்னை நம்பி நார்மலா பேச ஸ்டார்ட் பண்ணிட்டான்.. எப்படியும் விடியுறதுக்குள்ள பயபுள்ள என்கிட்ட விழுந்துருவான்னு நினைக்குறேன்‘ என்ற குறுஞ்செய்தியும் அவ்வப்போது கண்ணில் பட்டுவிட தூயவனுக்கு அதிர்ச்சியில் புருவங்கள் உயர்ந்தது. இந்நேரம் அவள் பேருந்தினுள் ஏறி அவர்களது இருக்கைக்கு அருகில் வந்திருக்கக் கூடும் என யூகித்தவன் அலைப்பேசியை எடுத்த இடத்தில் வைத்துவிட்டு உறங்குவது போன்று நடித்தான். இருக்கையில் வந்து ஏறியவள் அவளின் இடத்தில் அமர்ந்துக் கொண்டாள்.

‘பாவி.. உன்ன போய் ஒருநிமிஷத்துல அப்பாவின்னு நெனச்சுட்டேனே டி.. அப்போ நீ பிளான் பண்ணி தான் எல்லாம் பண்ணிருக்க என்ன.. சரியான ஃபிராடு.. உன்னையெல்லாம் மனுஷியா மதிச்சு பேசுனது என் தப்பு தான்.. இனிமே நீ வாயத் திற.. அப்புறம் இருக்கு உனக்கு’ என மனதினுள் அர்ச்சித்தவன் தன்னிடம் உள்ள அவளது ஏர்ப்போடை அவளிடம் கொடுத்தான்.

“என்னாச்சு பாட்டு கேட்கலையா” என அவள் கேட்க,

‘நீ ஏற்கனவே பாடுன பாட்டே போதும்’ என மனதினுள் நினைத்தவன் முறைத்தபடி,

“இல்ல போதும்.. தூங்க போறேன்” என்று கூறிவிட்டு தனது உடைமைகளைத் தன்னோடு சேர்த்து பத்திரப்படுத்தியவன் அவளை ஒருமுறை ஏறயிறங்க பார்த்துவிட்டு, இல்லை முறைத்துவிட்டு உறங்க ஆரம்பித்தான்.  அவன் பார்வையில் ஒரு கணம் யோசித்தவள் பிறகு திரும்பிக் கொண்டாள்.

அதிகாலை ஆறு மணியளவில் உறக்கம் கலைந்து கண் விழித்தவன் தன் உடலில் போர்வை போர்த்தியிருக்க அதனைக் கண்டவனின் புருவங்கள் முதலில் இடுங்கி பின் எதிரில் உறங்கிக் கொண்டிருப்பவளின் முகத்தை பார்த்து உயர்ந்தது.

‘ஓ இவ செஞ்ச வேலையா.. இதெல்லாம் செஞ்சா நான் மயங்கிருவேனா.. உன்னை என்ன பண்றேன்னு பாரு..’ என்று மனதில் நினைத்தவன்,

“ஹெலோ.. ஹெலோ எக்ஸ்க்யூஸ்மீ..” என்று தனது தண்ணீர் பாட்டிலின் உதவி கொண்டு அவளை எழுப்பினான். லேசாக விழிப்பு தட்டவும் அரைக்கண்களை மட்டும் திறந்தபடி யோசனையாக பார்க்க அவனோ,

“என்ன நெனச்சுட்டு இருக்க.. உன் மனசுல” என சற்று காட்டமாக கத்த,

‘என்னாச்சு இவனுக்கு’ என்றபடி முழுதாய் உறக்கம் கலைந்து நிமிர்ந்து அமர்ந்தவள்,

“என்னாச்சு.. திடீர்னு ஏன் இப்படி ஹார்ஷா பேசுரீங்க” என்க,

“ஏன் கேட்க மாட்ட நீ.. என்ன காரியம் செஞ்ச நீ..” எனவும்,

‘ஒருவேளை அதுவா இருக்குமோ.. போச்சு தெரிஞ்சுடுச்சா’ என்றெண்ணிக் கொண்டிருக்க அவனோ,

‘விஷயம் தெரிஞ்சுடுச்சோன்னு திருதிருன்னு முழிக்குறா பாரு ஃபிராடு’ என்றவனுக்கு நினைக்க நினைக்க ஆத்திரம் பெருகியது.

“ஹே உன்னை தான கேட்குறேன்..” என்று மீண்டும் கத்த,

“ஹெலோ.. என்னன்னு சொல்லாம சும்மா மொட்டையா கத்தினா நான் என்னன்னு நெனைக்குறது..” என்று சாதாரணமாக கேட்க அவனோ,

‘அதானே.. செஞ்ச விஷயம் ஒண்ணா ரெண்டா நியாபகம் இருக்குறதுக்கு’ என்று நினைத்தவன்,

“யாரை கேட்டு எனக்கு போர்வை எல்லாம் போர்த்திவிட்ட” என்று முறைத்தப்படி கேட்க,

‘அடப்பாவி.. இதுக்கு தான் குதிச்சியா..’ என்று ஆசுவாசமடைந்தவள்,

“யோவ்.. லூசா நீ.. நீ குளிரில நடுங்குன.. பார்க்க பாவமா இருந்துச்சேன்னு போர்த்தி விட்டா .. ரொம்ப தான் பண்ற..”

“நான் உன்கிட்ட கேட்டேனா.. சும்மா வந்து இதெல்லாம் செஞ்சி மயக்க பார்க்குரியா என்னை..”

“இவரு பெரிய மன்மதன்.. மயக்க வேற செய்றாங்க.. ஹே உனக்கு அவ்ளோ சீன் இல்ல.. போயும் போயும் உனக்கு பாவம் பார்த்தேன் பாரு என்னை சொல்லணும்.. கொடு என் பெட்ஷீட்டை.. சரியான சைக்கோ” என்றவள் அவனிடம் போர்வையை இருந்து பிடுங்க அவனோ,

“ஹே யார பார்த்து சைக்கோங்குற.. நீ தான் ஃபிராடு..”

“நீ ரொம்ப ஓவரா பேசுற சொல்லிட்டேன்.. ச்சைக் நல்லதுக்கே காலம் இல்ல.. உனக்கு நல்லது செஞ்சதுக்கு சிவனேன்னு இருந்துருக்கலாம்..”

“நீ சிவனேன்னு இருந்துருந்தா நான் ஏன் இதெல்லாம் செய்ய போறேன்..” என்று கூறிக்கொண்டிருக்க அதற்குள் பேருந்து நடத்துனர்,

“தாம்பரம் எல்லாம் வாங்க” என்று குரல் கொடுக்க அப்பொழுது தான் ஜன்னல் வெளியே பார்த்தவள்,

‘அடக்கடவுளே.. அதுக்குள்ள தாம்பரம் வந்துட்டா.. இது தெரியாம இந்த ஆளுகிட்ட சண்டை போட்டுட்டு இருக்கேன்’ என்று தன்னை நொந்தவள் விறுவிறுவென தனது உடைமைகளை எடுத்து வைக்க அதனைக் கண்டவனோ,

“பயந்து ஒடுறா பாரு.. மறுபடியும் என் மூஞ்சில முழிச்சுராத அப்புறம் அவ்ளோ தான்” என்று கத்த அவளோ,.

“ஹே போடா டேய்.. உனக்கெல்லாம் கல்யாணமே ஆகாது டா.. அப்படியே ஆனாலும் சேடிஸ்டான பொண்டாட்டி தான் கிடைப்பா..” என்று சாபம் விட்டபடி செல்ல எத்தனிக்க அதில் கோபம் கொப்பளிக்க பார்த்தவனோ,

“ஹே உன்னை பத்தின ஒரு விஷயம் என்கிட்ட இருக்கு.. உன்ன ஒருத்தன் கல்யாணம் பண்ண போறான்னு தெரிஞ்சாலே அவன்கிட்ட உன்ன பத்தி சொல்லி ஓட வச்சுருவேன்..” என்று கூறியவனின் சொற்கள் காதில் விழுக,

‘இவன் என்ன சொல்றான்’ என்றபடி ஒரு கணம் மனதில் பயம் எழுந்தாலும் செல்லும் அவசரத்தில் அவனுக்கு பதிலடி கொடுக்காமல் முறைத்தபடி மட்டும் சென்றுவிட்டாள் பெண்ணவள்.

அவள் சென்றதும் பெருமூச்சுவிட்டவன்,.

‘இப்போ தான் நிம்மதியா இருக்கு.. நல்லவேளை தப்பிச்சேன்.. இவ ஃபிராடுன்னு அப்போவே தெரிஞ்சுட்டு.. என் நேரம் இப்படி எல்லாம் ஆகணும்னு இருக்கு.. ச்சைக்.. இனிமேல் என்ன ஆனாலும் பஸ்லயே வரக்கூடாது..’ என்று நினைத்து மனதினுள் பொறுமிக் கொண்டிருக்க அதற்குள் அவன் இறங்க வேண்டிய இடம் வந்துவிட இறங்கி சென்றுவிட்டான்.

இவ்வாறாக நடந்ததை தூயவன் கூறிமுடிக்க கேட்டுக்கொண்டிருந்த மூவருக்கும் அதிர்ச்சியும் குழப்பமும். சமரோ,

“டேய் மச்சான் அன்னைக்கு தூங்கிட்டு இருக்கும் போது கனவு ஏதும் கண்டியா..” என்று கேட்க தூயவனோ,

“கனவா.. இல்லையே.. ஏன் கேட்குற”

“இல்ல எனக்கென்னமோ ஆதினி அப்படி மெசேஜ் பண்ணதெல்லாம் உன் கனவுல வந்துருக்குமோன்னு டவுட்டு” எனவும் தூயவனிடம் இருந்து கோபக்கனல் வீச தொடங்கியது.

‘அயோ முறைக்குறானே’ என்று எச்சில் விழுங்கிய சமர்,

“இல்ல மச்சான்.. ஆதினிய பார்த்தா அப்படிப்பட்ட பொண்ணு மாதிரி தெரியல.. அதான்..” என்று இழுக்க,

“அது தான் டா அவ நடிப்பே.. எவ்ளோ அழகா உங்களை கூட நம்ப வச்சிருக்கா.. அதுவும் பார்த்த ரெண்டு நாளுல..” என்க மாதவியோ,

“டேய் தூயவா.. நீ பேசாம அவகிட்டயே நேரடியா இதை பத்தி பேசிடு… எனக்கும் சமர் சொன்ன மாதிரி அவளை தப்பா நினைக்க தோணல..” என்க மாதவனும்,

“ஆமா டா… மாது சொல்ற மாதிரி.. அவகிட்டயே டைரக்ட்டா கேட்குறது பெட்டர்.. இல்லனா நாங்க கேட்டு சொல்றோம்..” என்று ஒரு அண்ணனாக கேட்க தூயவனோ,

“கொஞ்சம் வாய மூடுறீங்களா மூணு பேரும்.. அப்படி என்ன என்மேல இல்லாத நம்பிக்கை அவமேல உங்களுக்கு.. சரி அப்படியே இருக்கட்டும்… உங்களுக்கு கூடிய சீக்கிரம் நான் ப்ரூவ் பண்ணி காட்டுறேன்.. நானா சொல்றவரைக்கும் யாரும் இதைப்பத்தி அவகிட்ட கேட்கவோ சொல்லவோ கூடாது.. மீறி சொன்னீங்கன்னு தெரிஞ்சது.. அதோட நமக்குள்ள எல்லாம் முடிஞ்சது சொல்லிட்டேன்..” என்று அனல் தெறிக்க பேசியவன் விறுவிறுவென வீட்டிற்குள் சென்றுவிட்டான். மாதவியோ,

“என்னடா இவன்.. இப்படி பேசிட்டு போறான்.. யாரை நம்புறதுன்னே தெரியலயே..” என்க சமரோ,

“ஆமா டி.. இவன் காரணமில்லாம இவ்ளோ கோபம் படவும் மாட்டான்.. அதே சமயம் ஆதினிய அவன் சொன்ன மாதிரி இமேஜின் பண்ணவும் முடியல..” என்றான் குழம்பியபடி. மாதவனோ,

“சரி பொறுத்திருந்து பார்ப்போம்.. எல்லா பிரச்சனையும் என்னால தான்.. அவனை இப்படி பார்க்கவே கஷ்டமா இருக்கு..”

“இல்ல மாதவ்.. நானும் தான் காரணம்.. ஆனா ஒண்ணு.. தயவு செஞ்சி என்ன ஆனாலும் ஆதினிக்கிட்ட இதை பத்தி பேசிறாதீங்க.. இவன் சொன்னதை மீறி நாம செஞ்சா அப்புறம் அவ்ளோ தான்.. பொறுமையா தான் டீல் பண்ணனும் இதை.. கொஞ்சம் கொஞ்சமா அவன்கிட்ட பேசி அவனை வச்சே பேச வைப்போம்” என்க சமரும் மாதவனும் ஆமோதித்தனர்.

இவர்களை எச்சரித்து விட்டு அறைக்கு சென்ற தூயவனோ அறை வாசலுக்கு வந்த பின் தான் உணர்ந்தான். இவள் அறைக்குள் இருப்பதனால் எரிச்சல்பட்டு தான் வெளியில் சென்றோமென.

“அயோ கடவுளே.. எல்லாம் என் நேரம்.. பொதுவா கல்யாணம் பண்ணிட்டு வந்த பொண்ணுங்க தான் புது இடத்துல எங்க எப்படி தங்கன்னு முழிச்சுட்டு இருப்பாங்க.. இங்க என் ரூமுக்குள்ள போகவே நான் யோசிக்க வேண்டியிருக்கு.. ச்சைக் கருமம்” என்று சத்தமாக புலம்பியபடி அறை வாசலில் தூயவன் அல்லாடிக் கொண்டிருக்க ஆதினியின் செவியில் அவனது புலம்பல்கள் நன்றாகவே விழுந்தது. வேண்டுமென்றே அவனை வெறுப்பேற்ற எண்ணியவள்,

“சார் ரொம்ப நேரமா என் பர்மிஷன்காக வெளிய நிக்குறீங்க போல.. சும்மா உள்ள வாங்க சார்.. நான் உங்களை ரெஸ்ட்ரிக்ட் எல்லாம் பண்ணமாட்டேன்..” என்று அவனுள் எரிகின்ற தீயில் நெய் மட்டுமில்லாமல் மண்ணெண்ணெயும் சேர்த்து ஊற்ற,

“யாரு ரூமுக்கு யாரு டி பர்மிஷன் கொடுக்குறது..” என்றபடி அவளது கைகளை சிறைசெய்து சுவற்றில் சாய்த்தவனின் கண்கள் அவளது கண்களை நேராக பார்க்க அதிலோ கோபம் மட்டுமே கொப்பளித்தது.

“பொண்டாட்டி ஆயிட்டேன்னு தான இப்படி என்மேல உரிமையோட உரசிட்டு நிக்குற” என்றவள் அவனை விட திமிராக அவன் கண்களை நோக்க அவனோ,

“ஹே.. ச்சீ.. உன்னையெல்லாம் மனுஷியா கூட நான் மதிக்க மாட்டேன்.. இதுல பொண்டாட்டின்னு வேற நான் உரிமை எடுத்துக்கணுமா..” என்றவனின் பேச்சில் ஏகமாய் ஏளனம் கொட்டிக் கிடந்தது. ஏனோ அக்கணம் பெண்ணின் மனதில் சிறு வலி அவளறியாமல் உண்டானதை உணர்ந்தவள்,

“நியாயப்படி உன்மேல கோபமா இருக்க வேண்டியது நானு.. உன்னை மாதிரி ஒரு சைக்கோவை கட்டுனதுக்கு நான் தான் கடுப்பாகனும்.. ஆனா சம்மந்தமே இல்லாம எல்லத்தையும் தலைக்கீழா நீ பண்ணிட்டு கிடக்க.. நீ என்ன டா என்னை பொண்டாட்டியா ஏத்துக்குறது.. அதுக்கு முதல்ல நான் உன்னை புருஷனா ஏத்துக்கிட்டா தான..”

“உன்னை மாதிரி ஃபிராடுக்கிட்ட சைக்கோ மாதிரி தான் டி நடந்துக்கணும்.. சைக்கோ என்ன பண்ணுவான்னு இனிமே நீ தெரிஞ்சுப்ப”

“இங்க பாரு.. உனக்கு அவ்ளோ தான் லிமிட் சொல்லிட்டேன்.. சும்மா சும்மா நீ என்னை ஃபிராடுன்னு சொல்ற.. ஏதோ உன் சொத்தை எல்லாத்தயும் ஆட்டையை போட்ட மாதிரி பேசுற..” எனவும்,

‘அதானே டி உன் பிளானே..’ என்றபடி மனதில் நினைத்தவன் இப்பொழுது அதைக் கூறினால் சுதாரித்துவிடுவாள். பின்பு சமர், மாதவன், மற்றும் மாதவியிடம் இவளது முகத்திரையைக் கிழிக்க முடியாமல் போய்விடும் என்று எண்ணியவன் மீண்டும் ஏளனமாக சிரித்தபடி மட்டும் நிற்க அதற்கு மேல் அவனது உடல் கணத்தை தாங்க முடியாமல் அவனை கரம் கொண்டு தள்ள அந்நேரம் ஆதினியின் காலில் அணிந்திருந்த கொலுசு தூயவனது கால் சட்டையின் விளிம்பில் சிக்கி அவன் தடுமாற பிடிமானம் இல்லாமல் அவளோடு சேர்ந்து மெத்தையில் விழுந்தான் தூயவன். என்ன நிகழ்ந்தது என யூகிக்கும் முன்னரே இவர்கள் மெத்தையில் கிடக்க இருவரின் இதயமும் ஒருகணம் அதிர்ந்து அடங்கியது இருவரும் அறியாத ஒன்று.

அதே நேரம் கோபமாக சென்ற தூயவன் ஆதினியிடம் கடினமாக ஏதும் நடந்து கொள்வானோ என்றஞ்சி சமர், மாதவன் மற்றும் மாதவி அவனை தடுக்க எண்ணி அவனறைக்கு வந்து நிற்கவும் இவர்கள் இருவரும் மெத்தையில் ஒருவர்மேல் ஒருவர் இருக்கும் காட்சியைக் காணவும் சரியாக இருந்தது. வந்த வேகத்தில் மூவரும்,

“அடப்பாவி” என்ற ரீதியில் அதிர்ந்து பார்க்க தூயவனும் இதை எதிர்பார்க்காமல் அவர்களை அதிர்ந்து பார்த்தான். முதலில் சுதாரித்த மாதவியோ மற்ற இருவரின் கண்களையும் பொத்தி தலையில் கொட்டியபடி இழுத்து சென்றுவிட்டாள்.

 

தொடரும் அதிர்வுகள்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
11
+1
1
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்