Loading

முடிவில்லா காதல் நீயே! – அத்தியாயம் 6

எந்த மாற்றமும் இல்லாமல் நாட்கள் எப்பொழுதும் போல கடந்து கொண்டே இருந்தது….

வருடத்தின் இரண்டாவது செமஸ்டர் தேர்வு நடந்து கொண்டு இருந்தது. கயலும் திவ்யாவும் கல்லூரி வளாகத்தில் அமர்ந்து படித்து கொண்டு இருந்தனர். கயல் திவ்யாவிடம், “எங்கடி இந்த சிவாவ காணோம்… இன்னும் கொஞ்ச நேரத்தில எக்ஸாம் ஸ்டார்ட் ஆயிடும்…. அவனை ஆளையே காணோம்…. உன்கிட்ட எதாவது சொல்லிட்டு போனானா…. இல்ல ஸ்னாக்ஸ் வாங்க அவனை கேன்டீன் போக சொன்னியா…” என்று கேட்க திவ்யாவிடம் இருந்து பதில் தான் வரவில்லை.

“என்னடி… நான் கேட்டுட்டே இருக்க நீ எதுவும் சொல்லாம இருக்க…” என்று கோவப்பட… நிமிர்ந்து பார்த்த திவ்யாவின் கண்களில் முழுவதும் கண்ணீர்… கயல் பதட்டத்தோடு, “திவி என்னடி என்னாச்சு, நான் என்ன சொல்லிட்டேன்னு இப்படி அழகுற…. சிவா எதாவது சொன்னானா…. ரெண்டு பெரும் சண்டை போட்டீங்களா… ஏதாவது ஹர்ட் பண்ணிட்டானா சொல்லு டி… எனக்கு ஒரே பதட்டமா இருக்கு என்னாச்சு சொல்லு…” என்று விடாமல் கேட்டு கொண்டு இருந்தாள்.

திவ்யாவிடம் பதில் தான் இல்லை. கயலுக்கும் பொறுமை பறந்து கொண்டு இருந்தது கூட நேரமும் தான். கயல், “சரி… இப்போ எதுவும் பேச வேண்டாம்.. வா எக்ஸாம் முடியட்டும்… பொறுமையா பேசலாம். நீயும் எதையும் யோசிக்காத… என்ன நடந்தாலும் பாத்துக்கலாம்… உன்கூட நான் எப்பவும் இருப்பேன்… கவலைப்படாம போய் எக்ஸாம் எழுது…” என்று ஆறுதல் சொல்லி அவளை அனுப்பிவிட்டாள்.

கயலும் சிவாவை தேடி கொண்டே அவளுக்கான எக்ஸாம் ஹால்-இல் நுழைந்தாள். சிவா அங்கு தான் முகத்தில் எந்த உணர்வுகளையும் காட்டாமல் அமர்ந்து இருந்தான். உடனே கயல் அவனிடம், ‘சிவா எங்கடா போன. உன்னைய எங்க எல்லாம் தேடுறது. எப்பவும் நம்ம ஸ்பாட்க்கு போய்ட்டு தான இங்க வருவோம்… நீ ஏன் அங்க வராம எக்ஸாம் ஹால்க்கு வந்துட்ட… திவி கிட்ட கேட்டாலும் ஏதும் சொல்லல என்னாச்சு டா ரெண்டு பேருக்கும்…” என்று பேசி கொண்டு இருக்கும் போதே ஆசிரியர் வந்து விட்டதால் எக்ஸாம் முடித்துவிட்டு பேசி கொள்ளலாம் என நினைத்து இவளும் விட்டு விட்டாள்.

பல போராட்டங்களுக்கு பிறகு…. அனைவருக்கும் எக்ஸாம் முடிந்தது. அவர்களின் மீட்டிங் ஸ்பாட்க்கும் வந்தாள் கயல். ஆனால் அங்கே திவ்யா மட்டும் தான் இருந்தாள். கயலுக்கு குழப்பம் இருந்தாலும் எதுவும் சொல்லாமல் திவ்யாவின் அருகில் அமர்ந்தாள். திவ்யா ஏதும் பேசாமல் இருந்தாள். கயலும் கேட்கவில்லை. அவளே சொல்லட்டும் என்று அமைதி காத்தாள்.

திவ்யாவும் மனதை திட படுத்தி கொண்டு சொன்னால் “நான் சிவாவை லவ் பண்றேன்” என.

கயலுக்கு இது பெரும் அதிர்ச்சியாக இருந்தது. கண்கள் கூட இமைக்க மறந்து தன் தோழியை தான் பார்த்து கொண்டு இருந்தாள்.

*****************************************************************

ஆதி மற்றும் கார்த்தியின் நட்பும் வாழ்க்கையும் எந்த வித இடையூறும் இல்லாமல் கடந்து கொண்டு இருந்தது. தொழிலிலும் ஆதி முன்னேறி கொண்டு இருந்தான். தனது கம்பெனியின் கிளைகளை பல்வேறு இடங்களில் தொடங்குவதற்கான வேலையாய் அலைந்து கொண்டு இருந்தான். கார்த்தியின் துணையால் எல்லாம் சுலபமாகவும் நேர்த்தியாகவும் செய்யபட்டது.

ஆதி அவன் வேலையில் பிஸியாக இருக்க இங்கே சீதா ஆதிக்கு மும்முரமாக பெண் தேடி கொண்டு இருந்தார். தரகரை வர சொல்லி அவரிடம் தன் வருங்கால மருமகள் எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்று பட்டியலிட்டு கொண்டு இருந்தார். அதை வெங்கட்டும் வெண்பாவும் சிரிப்புடன் பார்த்து கொண்டு இருந்தனர்.

தரகர் சென்றதும் வெண்பா வாய் விட்டே சிரித்து விட்டாள். சீதா முறைக்கவும், சிரிப்பை கஷ்டபட்டு அடக்கி கொண்டு இருக்க, சிரித்து கொண்டு இருந்த வெங்கட்டும், சிரிப்பை நிறுத்தி விட்டு “பட்டு இப்போ எதுக்கு நடக்காத காரியத்தை நீ இப்படி கஷ்டப்பட்டு பண்ற. அதான் உன் அருமை புத்திரன் சொல்லிட்டானே…” என்க சீதாவிற்கு ஆதி அன்று சொன்னது தான் கண்முன்னே படமாக ஓடியது…

ஆதி கம்பெனி பொறுப்பை ஏற்று நடத்தி பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு அதில் வெற்றியும் கண்டு அதை தன் அன்னையிடம் சொன்னான். சீதாவிற்கும் மிகவும் மகிழ்ச்சி. அவனுக்கு வாழ்த்துக்களை சொல்லிவிட்டு உடனே, “அப்புறம் என்ன கண்ணா… அம்மா உனக்கு பொண்ணு பாக்குறேன் சீக்கிரமே. அடுத்து கல்யாணம் தான் சரியா…” என்று தன் ஆசையும் சேர்த்து சொன்னார்… அதற்கு ஆதி, “மாம், நான் லவ் பண்ணி தான் கல்யாணம் பண்ணுவேன்… எனக்கு பிடித்த மாதிரி ஒரு பொண்ண பார்த்து உயிருக்கு உயிரா லவ் பண்ணி உங்கள மாதிரி மாறாத காதலுடன் கடைசி வரைக்கும் நாங்களும் இருக்கனும்னு நான் நினைக்குறேன். நீங்க என்ன மாம் அசிங்கமா பொண்ணு பாக்குறேன்னு சொல்றிங்க…. அதெல்லாம் வேண்டாம்… நானே பாத்துக்குறேன். இனிமேல் இத பத்தி பேச வேண்டாம் மாம்…” என அன்பு கட்டளையுடன் முதலும் முடிவுமாய் சொல்லிவிட்டு சென்று விட்டான்.

அதை நினைத்து யோசனையில் இருந்த சீதாவை வெங்கட்-ன் அழைப்பு தான் நிகழ்காலத்திற்கு அழைத்து வந்தது. “உன் பையன் தான் தெளிவா சொல்லிட்டானே… அதுக்கு அப்புறம் எதுக்கு இப்படி பண்ற பட்டு… அவன் விருப்பப்படியே பண்ணட்டும்…” என தன் ஆசை பொண்டாட்டியிடம் கேட்க, அதற்கு சீதா, “அட போங்க… அவனும் ஏதுவும் பண்ண மாட்டான். எப்போ கேட்டாலும், அப்படி ஒரு பொண்ண நான் இதுவரைக்கும் பார்க்கவே இல்லை அப்படினு சொல்றான்… வயசு அதிகம் ஆகிட்டே போகுதுல. அவன் எப்போ பொண்ண பாக்குறது… எப்போ லவ் பண்ணி எப்போ கல்யாணம் பண்றது… அவனுக்கு கொடுத்த வாய்ப்பு, நேரம் எல்லாம் போதும்… இனிமேலே நான் சொல்றத தான் உங்க பையன் கேக்கணும் அவ்ளோதான்…” என்று கறாராக பேச வெங்கட், “என்னமோ பண்ணுங்க நீயாச்சு உன் மகன் ஆச்சு என்னைய விட்ருங்க நான் எந்த பஞ்சாயத்துக்கும் வரமாட்டேன்…” என ஜகா வாங்கி விட்டார்.

சீதாவிற்கு மகனை நினைத்து சிறிது கலக்கம் இருந்தாலும், தன் மகன் தன் பேச்சை கேட்பான் என்ற ஒரு குருட்டு நம்பிக்கையில் எதுவாக இருந்தாலும் பார்த்து கொள்ளலாம் என்று யோசித்து ஒரு முடிவுக்கு வந்து விட்டார். திடீரென சீதாவின் தோளில் ஒரு கை விழுந்தது. திரும்பி பார்த்தால் வெண்பா நின்று கொண்டு இருந்தாள். சீதா, “என்னடி நீயும் எதாவது சொல்லணுமா சொல்லு” என கேட்க, “மீ… எதுக்கு அண்ணாக்கு பொண்ணு பாத்து டைம் வேஸ்ட் பண்ற. அவன்தான் வேண்டாம்னு சொல்லிட்டானே. விட்று மீ… பாவம் அண்ணா… அப்படியும் உனக்கு பேரன், பேத்தி எல்லாம் பாக்கணும்-னு ஆசை இருந்தா எனக்கு மாப்பிள்ளை பாரு மீ… நான் நீ என்ன சொன்னாலும் கேட்பேன்…. நம்ம அதர்வா மாதிரி சுமாரா இருந்தா கூட போதும் மீ. எனக்கு ஓகே தான்… இதெல்லாம் எனக்காக இல்ல மீ… உனக்காக மட்டும் தான். உன் ஆசையை நிறைவேத்தி வைக்க வேண்டியது என் கடமை இல்லையா…” என்று வராத கண்ணீரை துடைத்து கொண்டே ஓர கண்ணால் தாயை பார்க்க அந்த தாய் துடைப்பத்தை தேடி கொண்டு இருந்தார்.

ஆத்தி!…. இன்னும் பயிற்சி வேண்டுமோ… என நினைத்து சீதாவின் கையில் மாட்டாமல் ஓட்டம் பிடித்து மறைந்து விட்டாள்… சீதா, “முளைச்சு மூணு இலை விடலை. கழுதைக்கு பேச்சை பாரு.. எங்க போனாலும் இங்க தான வரணும் வாடி பாத்துக்குறேன்…” என்று திட்டி விட்டு சென்று விட்டார். வெண்பா ஒரு அறையில் இருந்து லேசாக தலையை மட்டும் நீட்டி எட்டி பார்த்து விட்டு, ‘அப்பாடா கிரேட் எஸ்கேப்…. சரி விடு டி வெண்பா… பெட்டர் லக் நெஸ்ட் டைம்…’ என தட்டி கொடுத்து கொண்டாள்… (அடி பாவி)

காதல் தொடரும்.
மீயாழ் நிலா

தங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கபடுகிறது.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
11
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. Sangusakkara vedi

      Dhivya yen alukura siva no sollitana… Avoid panna thn meeting spot ku varalaya…. Pavam dhivi… Parava ilaye adhi love Meg thn pannuvannu irukan…. Kayal innum meet pannave ilaye… Epo meet panna porannum teriyalaye .. super ud sis….