Loading

தீர்ந்திடாத தாகம் நீ

அத்தியாயம் -1

“அன்புள்ள என்னவனுக்கு,

அனுதினமும் உன் நினைவுகளோடு நான் உரையாடிக் கொண்டிருக்கும் உன்னவள் எழுதுவது. இன்று பேருந்தில் பயணம் செய்துக் கொண்டிருக்கையில் வெகுநேரமாக ஒரு ஜோடிக் கண்கள் என்னை நோட்டமிட்டுக் கொண்டிருந்தன. கண்டும் காணாதது போல் சன்னலோரம் கவனத்தைப் பதித்து அமைதியாகப் பயணத்தை ரசித்தேன். பணிபுரியும் இடம் வந்தவுடன் இறங்கி செல்ல எத்தனித்த என்முன் ரோஜா பூங்கொத்தோடு நின்றான் ஒருத்தன். என்னைக் காதலிக்கின்றானாம். சற்று நேரம் அவனை கூர்ந்து நோக்கினேன். எந்தவித வேதியியல் மாற்றமும் நிகழவில்லை, என்னுள். ‘விருப்பமில்லை’ என்று சொல்லிவிட்டு சென்று விட்டேன். இவனைப் போல் நீயும் என்றாவது என்னிடம் வந்து சேர்வாயென காத்துக் கொண்டிருக்கிறேன். அடுத்து வரும்   நினைவுகளோடு தகவல் சொல்ல வருகிறேன். – இதழ்.”

தன் நாட்குறிப்பை மூடிவிட்டு நிமிர்ந்தாள் இதழினி. அழகிய தமிழை எழுதுபவளுக்கு வர்ணனை அவசியமற்றது. தன் முன் புத்தகங்கள் அடுக்கப்பட்டு இருக்க, அதன் பின்னே இருந்து மெல்லிய குறட்டை சத்தம் கேட்டது. மெதுவாக புத்தகங்களை விலக்கிவிட்டு பார்க்க, அவளின் ஆருயிர் நண்பன் பிரவீன்தான் அதிமுக்கிய வேலையான உறக்கத்தை மேற்கொண்டிருந்தான்.

தன் கையில் வைத்திருந்த நாட்குறிப்பிலேயே அவனின் தலையில் ஒரு அடி வைத்தாள் இதழினி. “ஆவ்வ், என்ன எரும உன் வருங்காலத்துக்கு இன்பர்மேசன் கொடுத்து முடிச்சிட்டியா?” என்றபடியே சோம்பல் முறித்தான்.

“என்கிட்ட நல்லா அடி வாங்க போறடா. எத்தன தடவ சொல்லி இருக்கேன், லைப்ரரிக்கு வந்தா தூங்காதன்னு.”

“நான் என்ன பன்றது.? வந்த உடனே, அப்டி ஒரு தூக்கம் கண்ண சொழட்டுது. அதுவும் கரெக்ட்டா சாப்ட்ட உடனே கூட்டிட்டு வந்துடுற. நான் என்ன செய்ய?” என்றபடி மீண்டும் சோம்பல் முறித்தான்.

அவனை அழைத்தது தன் தவறுதான் என்று உணர்ந்தவள், “சரி வா போலாம்.” என்றபடி எழுந்தாள் இதழ்.

“எரும…” என்று இழுத்தான் பிரவீன்.

பல்லைக் கடித்துக்கொண்டு, “மறுபடியும் என்னடா?” என்று கண்கள் இடுங்க கேட்டாள் இதழ்.

“ஒரு டீ குடிச்சிட்டு போலாமே.” என்றபடி அவன் அசடு வழிய, விதியே என்று நொந்துக் கொண்டவள், அலுவலகத்தில் இருந்த உணவகத்தில் இரு தேநீர் சொல்லிவிட்டு அமர்ந்தனர் இருவரும்.

“எரும எனக்கொரு டவுட்டு?”

“என்ன, நீ ஏன் இன்னும் கமிட் ஆகலன்னா?”

“உன்கூட சேர்ந்தா அது நடக்காதுன்னு எனக்கு நல்லாவே தெரியும். என் டவுட் அது இல்ல.”

“வேற என்ன டவுட்டுடா நாயே, சொல்லித்தொல.”

“நம்ம டீம்ல வந்து இருக்க புது வரவ பத்தி நீ என்ன நினைக்குற?”

“புது வரவா? யாரது?”

“அடிப்பாவி, அப்போ நீ டைரி எழுதிட்டு இருக்கப்போ நான் பேசுனது எதுவுமே நீ கவனிக்கலயா?”

“நான் டைரி எழுதிக்கிட்டு இருந்தப்போ நீ தூங்கிட்டு தான இருந்த? எப்போ பேசுன?”

“சுத்தம்…” என்று தன் இரு கைகளையும் தலைக்குமேல் வைத்தவன், “ஆண்டவா, இந்த முழு பைத்தியத்துக்கிட்ட இருந்து என்னை காப்பாத்து.” என்று வேண்டிக்கொண்டான்.

“அத இன்னொரு பைத்தியம் சொல்லக் கூடாது. என்ன சொன்னன்னு இன்னொரு தடவ சொல்லு.”

சரியாக தேநீரும் அவர்களின் மேஜையில் வைக்கப்பட, குடித்துக் கொண்டே சொன்னான் பிரவீன்.

“நேத்து நம்ம டீம்முக்கு புதுசா ஒரு பொண்ணு வந்துச்சு உனக்கு தெரியுமா? சாரி நீ தான் நேத்து லீவ் ஆச்சே. செம பொண்ணுடி அவ. என்ன ஒரு அழகு, என்ன ஒரு அடக்கம். பொண்ணுன்னா அப்டி இருக்கணும்.”

‘எங்கயோ இடிக்குதே…’ என்று சிந்தித்தவள், “வெய்ட், வெய்ட்… டேய், நேத்து நீயும்தான லீவு. உனக்கு மட்டும் எப்டி இன்பர்மேசன் வந்துச்சு?”

“அதுக்குலாம் க்ரைன் வேணும் மேன். க்ரைன்” என்று தன் தலையை தட்டி சொன்னான்.

“அது இருக்குறவன்தான் பேசணும். சரி நீ மேல சொல்லு.”

அவனும் மேலே பார்த்து, “அதுக்குலாம் க்ரைன் வேணும் மேன், க்ரைன்” என்றிட, கடுப்பின் உச்சத்திற்கு சென்றாள் இதழ்.

“கடுப்பேத்தாதடா. இப்போ அந்த பொண்ணுக்கு என்ன?”

“அந்த பொண்ணுதான் இப்போ நம்ம டீம்ல ஜுனியர்.”

“சரி, அதுக்கு இப்போ என்ன?”

“இத்தன வருசமா கூட இருக்கல்ல, உன் ப்ரெண்ட்டு கமிட் ஆகணும்னு உனக்கு என்னமே இல்லயா இதழ்.”

பட்டென்று பதில் வந்தது “இல்ல” என்று.

“அப்போ இத்தன வருசமா கூட இருந்தது எல்லாம் நடிப்பா, அத்தனயும் நடிப்பா இதழ்” என்று வராத கண்ணீரை வர வைக்க, “அடச்சீ அசிங்கமா நடிக்காத. இப்போ என்ன அந்த பொண்ண கரெக்ட் பண்ண ஒரு ஐடியா வேணும் அதானே.?”

“என் அருமைத் தோழியே, அதே தான்.”

“நீ என்னை எந்த வேலை பாக்க சொல்றன்னு தெரியுதாடா?”

“அதெல்லாம் நீ தப்பா நினைக்கக் கூடாது. நாலு லவ்வ சேத்து வச்சா தான், உன்னோட ஃப்யூச்சர்ல லவ் செட் ஆகும்.”

“முதல்ல நான் அந்த பொண்ண பாக்குறேன். அப்ரோம் அவ உனக்கு செட் ஆவாளா மாட்டாளான்னு முடிவு பண்ணிட்டு ஐடியா தரேன்.”

“நன்றிகள்” என்றபடியே இருவரும் எழுந்து, தத்தமது இருக்கைக்கு சென்றனர்.

“ஹே, இதழ் வந்துட்டா” என்றபடியே அவளின் குழு அவளைச் சூழ்ந்தது.

“ஏன் இதழ், நேத்து வரல?” என்று குழைந்தபடியே ஒருவன் இழுக்க, “வீட்ல அலைன்ஸ் பாக்குறாங்க. அதுனால கோவிலுக்கு போய் இருந்தோம். அதான் வரல அறிவு. அத விடுங்க, நம்ம டீம்முக்கு புதுசா யாரோ வந்து இருக்காங்களாம். எங்க?”

“இதழ், அந்த பொண்ண மனோஜ் கூப்டு இருக்கான்.” என்றுதான் சொல்லப்பட்டது, புயலென ப்ராஜெக்ட் மேனேஜர் என்ற அறையில் நுழைந்தாள் இதழ். அவள் நினைத்ததுபோலதான் நடந்து இருக்க வேண்டும் என்பதற்கு சாட்சியாக, பூந்தொட்டிகள் கீழே விழுந்து உடைந்திருக்க, அவள் நினைத்ததற்கு மாறாக, மனோஜ் கால்களுக்கிடையில் கையை வைத்து கீழே விழுந்து கிடந்தான். கையில் சிறு கத்தியுடன், அவன் முன் அடக்கப்பட்ட கோபத்தோடு நின்றிருந்தாள் திகழினி.

‘ஆத்தாடி, இந்த புள்ள எனக்கு மேல இருக்கும் போலயே.’

“ஏன்டா, நீ பெரிய **** மாதிரி பேசுற? நீ மேனஜர்னா, வேலைக்கு வர எல்லாரும் உன் இஷ்டப்படி இருக்கணுமா என்ன? இதுதான் கடைசி இன்னொரு தடவ எந்த பொண்ணு மேலயாவது கை வைக்க நினச்ச, உன் பொண்டாட்டி மேலயே உன்னால கை வைக்க முடியாதபடி செஞ்சிடுவேன். ஜாக்கிரத.” என்றபடி வெளியே வர, அதிர்ச்சியாக நின்றிருந்தாள் இதழ்.

‘ஏய், இத நம்ம லிஸ்ட்லயே இல்லயேபா’ என்று திகழினியைத்தான் வைத்தக் கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“எக்ஸ்க்யூஸ்மி மேடம்” என்ற திகழின் அழைப்பில்தான் சுயத்திற்கு வந்தாள் இதழ்.

தன்னிச்சையாக அவள் வழிவிட, எதுவும் சொல்லாமல் தன் இருக்கைக்கு சென்று விட்டாள் திகழினி. முன்னே சென்ற திகழினியே வந்துவிட, இன்னும் நம் குழுத் தலைவியைக் காணாமல் அவளைத் தேடி வந்தனர் பிரவீனும் மகிழாழியும்.

“ஏய், எரும. எப்டி என் செலக்சன்? நீ ஏன் இங்க புடிச்சு வச்ச புள்ளையார் மாதிரி நிக்குற.?” என்று அவளை விலக்கிவிட்டு உள்ளே எட்டிப் பார்த்தவன் அதிர்ந்தான்.

“ஏய், மறுபடியும் எதுக்குடி அவன அடிச்ச? ஏதாவது செஞ்சானா?”

“அய்யய்யோ!” என்றபடி மகிழாழியும் கத்த, அவளின் வாயைப் பொத்தியவன், “இதழ்… அடியே!” என்றதில்தான் சுயத்தை அடைந்தாள் இதழினி.

“பிரவீனு…”

“நான் பிரவீன்தான். நீ எதுக்கு மறுபடியும் அந்த சொட்டையன அடிச்ச? ஆல்ரெடி உன்னை எப்டி வேலைய விட்டு தூக்குறதுன்னு குறியா இருக்கான். மறுபடியும் எதுக்கு அவன்கிட்டயே வம்புக்கு போற?” என்று கடிந்தான் அவளை.

அவனை கடுப்பாக முறைத்தவள், “ஏது, அந்த நாயை நான் மறுபடியும் அடிக்கப் போறேனா? ஆல்ரெடி அடிச்சதுக்கே ரெண்டு வாரம் மெடிக்கல் லீவ் போட்டான். புதுப் பொண்ணு அங்க போய் இருக்காளே, என்ன ஆச்சுன்னு பாக்க வந்தா, அவ என்னடான்னா இவன பந்தாடிட்டு இருக்காடா.”

கேட்டவர்களுக்கோ இரு விதமான மனநிலை. மகிழாழி உள்ளுக்குள் போட்ட குத்தாட்டம் வெளியே வரை கேட்க, பிரவீனுக்கோ இது என்ன புது சோதனை என்றேதான் தோன்றியது.

“என்னடி சொல்ற நிஜமாவா? ஹப்பா, இனிமே நீ இல்லன்னா கூட எப்டியாவது திகழ்ல வச்சு சமாளிக்கலாம்

“மகி, நீ கொஞ்சம் சும்மா இரு. நிஜமா அவதான் அடிச்சாளா இதழ்?”

“நான் என்ன பொய்யா சொல்றேன். காவலன் படத்துல வர மாதிரி, கராத்தே பழகி இருப்பா போல. என்னா அடி.”

“என் ஆளு எவ்ளோ தைரியமா இருக்கா?”

“தம்பி பிரவீனு, பெட்ரமாஸ் லைட்டே தான் வேணுமா?”

“அப்கோர்ஸ் யா.”

‘உனக்கு இனி சங்கு தான்டி’ என்று நினைத்தவாறே தங்களது இருக்கைக்கு சென்றனர். மனோஜ்ஜின் உதவியாளனிடம் தகவல் கொடுக்கப்பட்டு, அவன் மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்டான்.

“திகழ், மீட் மிஸ் அவர் டீ.எல். இதழினி.” என்று அறிமுகம் செய்து வைத்தான் அறிவு.

எதுவும் நடவாததுபோலவே தன்னை அறிமுகம் செய்துக் கொண்டாள் திகழினி. “ஹலோ மேம்.!”

“ஹாய் திகழ். ஆரம்பமே அமர்க்களம்தான் போ. ஆன்ட், கால் மீ இதழ்.” என்றபடி கைக்குலுக்கினாள் இதழினி.

பின், அவரவர் வேலைகளை செய்து கொண்டிருக்க, நாளும் கழிந்தது. மகிழாழியும் திகழும் இறுதியாக கிளம்ப, “இதழ், ரொம்ப நைஸ்ல.” என்று ஆரம்பித்தாள் திகழ்.

“ஆமா திகழ். இதழ் ரொம்ப நைஸ் பர்சன். அதுவும், இதழும் பிரவீனும் பெஸ்ட் ப்ரென்ட்ஸ். என்னதான் அடிச்சிக்கிட்டாலும் ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டுக் கொடுக்கவே மாட்டாங்க. இதழ் எவ்ளோ நைஸோ அவ்ளோ கோபம் வரும். ஆனா, அத ஈசியா ஹேண்டில் செஞ்சிடுவாங்க.” என்று இதழைப் பற்றி பேசிக் கொண்டே அலுவலக வண்டியில் ஏறினர்.

திகழின் மனதில் இதழ் நீங்கா இடம் பெற்றாள். வந்த முதல் நாளே அவளின் அணுகுமுறை திகழை வெகுவாக கவர்ந்தது.

“அம்மா…” என்று தன் அன்னையை அழைத்துக் கொண்டே சோபாவில் அமர்ந்தாள் திகழ்.

“கை, கால் முகம் கழுவிட்டு வாடி.” என்று அவளின் அன்னை அதட்ட, சலுப்புடனேயே தன் அறை நோக்கி சென்றவளின் குறும்புத்தனம் சட்டென்று விழித்துக் கொண்டது அவளின் அண்ணனின் அறையை கடக்கும் போது. இன்னும் அவளின் அண்ணன் வரவில்லை என்பதை உறுதி செய்துக் கொண்டு, உள்ளே சென்றாள்.

“டன்.. டடான்.. டடான்.. டடான்.. டான்டான்டான்டான்.. டடடன்…” என்று ஜேம்ஸ் பாண்டு இசையை முணுமுணுத்தவாறே அவனின் அலமாரி கதவைத் திறந்தாள். அவனுக்கு பிடித்த கருநீல மேல்பனியனை எடுத்துக் கொண்டு தன் அறைக்கு சென்று விட்டாள் திகழ்.

தன் பணியை முடித்துவிட்டு அறைக்கு வந்தான் அவன். கை, கால்களை சுத்தப்படுத்திக் கொண்டு அலமாரியைத் திறந்தவன், எப்போதும் அணியும் மேல்சட்டையைத் தேட, அது இங்கில்லை என்று புரிந்த நொடி எங்கிருக்கும் என்றும் புரிந்து விட, “திகழ்…..” என்று வீடே அதிரும்படி கத்தினான் அவன். திகழின் அண்ணன், நம் கதையின் நாயகன், இளையபாரதி.

தொடரும்.  

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
7
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. நைஸ் ஸ்டார்ட் 🤩

      இதழினி, திகழினி சூப்பர்… sema bold…. ❤️