Loading

சதாசிவத்தின் ஆருயிர் நண்பர் தான் காளீஸ்வரன். இருவரும் பால்ய வயதிலிருந்தே நண்பர்கள். உணவகம் வைத்துத் தன் மகனைப் பெரிய படிப்பெல்லாம் படிக்க வைத்தவர், கடைசியில் அவனது மேற்படிப்பிற்காக அந்த உணவகத்தை விற்றது தான் மிச்சம். உணவகம் இன்னொருவரின் கைக்குச் சென்றுவிட்டது. வீடு மட்டும்தான் அவர்களுக்கென்று இருந்தது. அதுவும் அடமானத்தில் இருந்தது.

இந்த நிலையில் அவசரமாக மகனுக்குத் தொழில் தொடங்க ஐம்பது லட்சம் தேவைப்பட, மகனுக்காக எல்லாம் செய்யக்கூடியவர், நண்பனிடம் கடன் கேட்க வந்தார்.

சதாசிவமோ, “அவனுக்கு வேணும்னா அவனையே கடன் வாங்கச் சொல்லு! மகன்… மகன் எனத் தலையில தூக்கி வச்சு! சின்னதா முகம் கசங்கி வந்தாலே தாங்க மாட்டாம அவன் கேட்கிற எல்லாத்தையும் நீ வாங்கிக் கொடுக்கிறதாலதான் இப்போ இந்த நிலைமைக்கு வந்திருக்க. ஏன் வேலைக்குப் போனா ஆகாதா? தொழில் தான் அதுவும் ஐம்பது லட்சத்துக்கு வைக்கணுமா? வேண்டாம் காளி! உன்னை உன் புள்ளை ஏமாத்திடுவான்,” என்று எவ்வளவு எச்சரித்தும் பயனில்லாமல் போனது.

காளி தன் மகனுக்குச் செய்ய வேண்டியதைச் செய்தே தீர்வேன் என்று உறுதியாக இருக்க, வேறு வழியில்லாமல் அவரை அழைத்துக் கொண்டு கந்தரூபனிடம் வந்தவர், நண்பனுக்காகச் சூரிட்டி கையெழுத்தும் போட்டார். அதுதான் அவர் ஜனனி வாழ்க்கையில் செய்த மூன்றாவது தவறு.

சதாசிவம் போட்ட கையெழுத்தைத் தனக்குச் சாதகமாக்கிக் கொள்ள, அந்த காகிதத்தைப் பார்த்துக் கொண்டிருந்தவன் மனதிற்குள், ‘என்னையா வேணாம் சொன்ன! இதை வச்சே உன்னை எப்படி லாக் பண்றேன் பாருடி,’ என்றவன் பத்திரத்தைப் பார்த்து விஷமமாகச் சிரித்தான்.

பாவம், அவர் சூரிட்டி கையெழுத்துப் போட்டது சதாசிவத்தின் மனைவி கௌரிக்குக் கூடத் தெரியாது. நண்பரின் மேல் கொண்ட கண்மூடித்தனமான நம்பிக்கையில் இவ்வாறு செய்துவிட்டார். இதன் பின்விளைவுகளை அனுபவிக்கப் போவது என்னவோ ஜனனிதான்.

மறுநாள் அழகாய் விடிந்தது. வழக்கம் போல நீலகண்டன் சச்சினைப் பள்ளிக்கு அழைத்துச் சென்றார். மீதமிருந்த வேலைகளை முடித்துவிட்டு அலுவலகம் செல்லத் தயாராகினாள் ஜனனி! அதே போல அவளோடு வேலைக்குச் செல்ல நந்தனும் தயாராகி வந்தான்.

நீலகண்டனும் பேரனைப் பள்ளியில் விட்டுவிட்டு வந்துவிட்டார். நால்வரும் அமர்ந்து சாப்பிட்டனர்.

பின் பெரியப்பா பெரியம்மா காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினான். “என்னடா வேலைக்குத்தானே போறே! இதுக்கு எதுக்கு இதெல்லாம்?”

“முதல் நாள் வேலைக்குப்போறேன் பெரியப்பா! பெத்தவங்க ஆசிர்வாதத்தோட வேலையை ஆரம்பிக்கலாம்னுதான். அது போக முதலாளியம்மா கிட்டத் திட்டு வாங்காம வேலை பார்க்கணும்னு ஆசிர்வாதம் பண்ணுங்க பெரியப்பா,” என்று பக்கத்தில் நின்றிருக்கும் ஜனனியை வம்பிழுக்க, அவளோ அவனை முறைத்தாள்.

“பல கஷ்டங்களையும் அவமானங்களையும் தாண்டி வந்தாதான் வளர முடியும் நந்து.. சொகுசா எல்லாம் எளிதா கத்துக்க முடியாது தம்பி! ஜனனி திட்ட மாட்டா! ஆனா கோபம் வர்றது போல எதுவும் செஞ்சு வைக்காத! பார்த்து நடந்துக்க,” என்று வள்ளி மருமகளை விட்டுக்கொடுக்காது பேசினார்.

“அப்படியே பண்ணுறேன் பெரியம்மா! முதலாளி மனசுல இடம்பிடிக்கிற அளவுக்கு என் வேலை எப்படி இருக்கப் போகுதுன்னு மட்டும் பாருங்க,” என்று இருபொருள்படப் பேச, பெரியவர்களுக்குப் புரியவில்லை என்றாலும் ஜனனிக்கு நன்றாகப் புரிந்தது.

இருவரும் அங்கிருந்து கிளம்பியிருந்தார்கள். இருவரும் லிஃப்ட்டில் பயணிக்க, அவன் பேசவில்லை; அவளும் பேசிக்கொள்ளவில்லை. ஆனால் அவனை எப்படி அழைத்துச் செல்வது என்ற கேள்வி அவளுக்குள் அரித்துக் கொண்டிருந்தது.

அவனை அமர்த்தி ஓட்டுவதா? இல்லை அவனை ஓட்டச் சொல்லிப் பின்னால் அமர்ந்து கொள்வதா? இரண்டிற்கும் சங்கடம் கொண்டாள். லிஃப்ட்டின் கதவு திறக்க, நடப்பது நடக்கட்டும் என்று பெருமூச்சு விட்டபடி தன் வண்டியை நோக்கி நடந்தாள்.

அவனோ சாலையை நோக்கிச் செல்ல, குழப்பம் கொண்டவள் “நந்து” என்று அழைத்தாள். அவனும் திரும்பி அவளைப் பார்த்தான்.

“எங்க போற?”

“உன் ஆபீஸ்க்குத்தான்!”

“அது தெரியுது! இப்போ எங்க போற?”

“வெளிய போறேன்மா! ஆட்டோ, பஸ்ல போறதுக்குத்தான்.”

“ஏன் அதுல போற? வண்டி இருக்கே!”

அவனும் இடையில் கை வைத்து, “நான் உன் கூட வந்தால் உனக்குத்தான் கஷ்டம்… உனக்குத்தான் சங்கடம். உரிமை இருந்தால் உன்னோடு வரலாம்… அந்த உரிமை எனக்கு இல்லையே! தனித்தனியா போறதுதான் சரி. நான் ஆட்டோல வர்றேன் நீ போ,” என்று அவன் நடக்க, இவளுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது.

‘ரொம்பத்தான் பண்றான்’ என முணுமுணுத்துவிட்டு முன்னால் வண்டியில் பறக்க, இவனோ ஆட்டோ பிடித்து அங்கு வந்து சேர்ந்தான்.

ஜனனி கேட்டரிங் சர்வீஸ் பெயர்ப் பலகையைப் புன்னகையுடன் கண்டான். முன்னே வண்டியை நிறுத்த இடம் விட்டுத் தூரமாக அலுவலகம் இருந்தது. பக்கத்திலேயே சமையல் வேலைக்குத் தேவையான காய்கறிகளை நறுக்கிக் கொண்டிருந்தனர்.

விசேஷ வீடுகளுக்கு மட்டுமில்லாமல், அலுவலகத்திற்கு அருகே இருந்த ஆண்கள், பெண்கள் விடுதிகளுக்கும் மூன்று வேளை உணவுகளைச் செய்து கொடுத்தனர். எந்நேரமும் அங்கே வேலை இருந்துகொண்டே இருக்கும். உணவகம் போல இல்லை என்றாலும் அங்கே சமைத்துக்கொண்டு ஆட்கள் உணவுகளை வண்டியில் ஏற்றிக்கொண்டு இருப்பார்கள்.

பரபரப்பாகத்தான் இருக்கும் அவர்களது கேட்டரிங் சர்வீஸ்… ஜனனி வருவதற்கு முன் ஆட்டோவில் வந்து இறங்கியவன் உள்ளே நடந்தான்.

அங்கே பெண்கள், ஆண்களுமாகச் சமைத்துக் கொண்டிருக்க, ஒரு வண்டி ஓரமாக நின்று கொண்டிருந்தது.

உள்ளே வந்தவனை வரவேற்ற பெண்மணி அவனிடம், “வாங்க சார்? உட்காருங்க,” என்று அலுவலகத்திற்கு வெளியே போடப்பட்டிருந்த நாற்காலியில் அமரச் சொன்னார்.

“ஜனனி பாப்பா இன்னும் வரல! ஆர்டர் கேட்டு வந்திருக்கீங்களா?” என்று விசாரிக்க,

“இல்லம்மா! இங்க வேலை பார்க்க வந்திருக்கேன்,” என்று புன்னகையுடன் சொன்னான். அதற்குள் அவனுக்குப் பழச்சாறு எடுத்து வந்து கொடுக்க, தயக்கமாக “வேலை பார்க்க வந்த நானும் எடுத்துக்கலாம்ல” என்று கேட்டான்.

“இங்க யாரு வந்தாலும் பழச்சாறு கொடுக்கிறது வழக்கம் தம்பி! அது போக இங்க வேலை செய்றவங்களுக்கும் பழச்சாறு, டீ, காபி, வடை கொடுக்கிறது உண்டு,” என்றார்.

உதட்டை வளைத்தவன் பழச்சாறை எடுத்துக் கொண்டான்.

“ஆமா என்ன வேலைக்குத் தம்பி வந்திருக்கீங்க?”

“உங்க முதலாளியம்மா என்ன வேலை கொடுக்கிறாங்களோ அதைச் செய்ய வேண்டியதுதான்,” என்றான் குறும்பாக.

“உங்களைப் பார்த்தா படிச்சவர் போல இருக்கீங்க? சமையல் வேலை கொடுத்தா செய்வீங்களா?” என காய்களை நறுக்கிக்கொண்டே இன்னொரு பெண்மணி கேட்டிட,

“ஏன் அக்கா, படிச்சவரா இருந்தா சமைக்கக்கூடாதா? நான் படிச்ச படிப்பே சமைக்கிற படிப்புதான். அந்த வேலை கொடுத்தாலும் பண்ணுவேன்…”

“எங்களோட லோடு ஏத்த வருவீங்களா தம்பி?” வண்டியில் சாய்ந்தபடி வயதானவர் ஒருவர் கேட்டிட,

“எனக்கு வண்டி ஓட்டத் தெரியாது அண்ணா! ஆனா லோடு ஏத்தச் சொன்னா ஏத்துறேனே, இதுல என்ன இருக்கு?” என்று அவர்களிடம் சகஜமாகப் பேச, அனைவரும் அவனது பதிலால் சிரித்தனர்.

“என்ன வேலை கொடுத்தாலும் செய்வேன்னு வந்திருக்கீங்க?”

“உங்க முதலாளி அம்மாவோட வேலையை கொடுத்தாலும் செய்வேன்,” என்று கண்ணடித்தபடிச் சொல்ல அனைவரும் வாயில் கை வைத்தனர்.

சரியாக ஜனனியும் வந்துவிட வேலைகள் சற்று விரைந்தன.

“என்ன அக்கா வேலை ஆகுதா?” எனக் கேட்டபடி உள்ளே வந்தாள்.

“ஆகுது பாப்பா!! தம்பி யாரு பாப்பா?”

“என் பிரெண்ட் அக்கா! எனக்கு உதவியா வந்திருக்கான். பேரு இளநந்தன்,” என்று அவனை அறிமுகம் செய்து வைத்தவள்,

“இது ஜெயந்தி அக்கா,…” என்று அனைவரையும் அறிமுகம் செய்து வைத்தாள்.

“உள்ள போலாம் வா,” என்று அழைத்து முன்னே செல்ல அவனும் பின்னே சென்றான். அவர்கள் சென்றதும் வேலைகள் தொடர்ந்தன.

அவள் அவளிடத்தில் அமர, அவனோ சுற்றிப் பார்த்தபடி இருந்தான்.

“இந்த இடம் ரொம்ப அழகா இருக்கு! நல்லாவும் வச்சிருக்க, கண்டிப்பா வர்ற கஸ்டமர் உன் ஆர்டர் வேணாம்னு சொல்லவே மாட்டாங்க,” என்றான். இவளும் சிரிப்புடன் பார்த்தாள்.

“இன்னைக்கு என்ன ஆர்டர்? என்ன சமைச்சிட்டு இருக்காங்க?”

“ஆர்டர் இல்லை.. பக்கத்துல ஆண்கள், பெண்கள் விடுதி இருக்கு. இங்கிருந்துதான் மூன்று நேரமும் சாப்பாடு செஞ்சுக் கொடுக்கிறோம்… அந்தப் பக்கம் கூலி வேலை பார்க்கிறவங்களுக்குச் சமைச்சுப் பொட்டலம் போலக் கட்டி வைப்போம், வந்து வாங்கிட்டுப் போவாங்க… ஆர்டர் மட்டுமில்லாமல் இப்படியும் பார்த்தாதான் இவங்களுக்குச் சம்பளம் கொடுக்க முடியுது.

ஆனாலும் ஆட்கள் அதிகம் தேவை, பாத்திரங்களும் கொஞ்சம் தேவை. இப்போ இப்போ கொஞ்சம் ஆர்டர் வருது. சந்தோஷமா இருந்தாலும், ஒரே நாள்ல இரண்டு ஆர்டர் வருது, ஒன்னைத் தவிர்க்கிறது போல இருக்கு… அது கொஞ்சம் கஷ்டமா இருக்கும்… மத்தபடி நல்லாதான் போயிட்டு இருக்கு,” முகம் முழுதும் புன்னகையைப் பூசிக்கொண்டது போலச் சொன்னாள்.

அவள் மீது சிறிது கோபம் இருந்தாலும் அவளது புன்னகை முகத்தைக் கண்டதும் அந்தச் சிறு கோபமும் காற்றாகிப் போனது.

“இன்னும் ஆள் வேணும்னா விளம்பரம் கொடுப்போம்.. எவ்வளவு பாத்திரங்கள் வேணும் சொல்லு வாங்கிடலாம்,” என்றான்.

“எப்படி வாங்க? பணம்?”

“நான் தர்றேன்… வாங்கிடலாம்.”

அவள் முகம் யோசனையில் சுருங்க, “கடனா வாங்கிக்கோ அப்புறம் கொடுன்னு சொல்ல மாட்டேன். நானும் இந்த கேட்டரிங்ல பார்ட்னரா இருக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன். இன்னும் ஆட்களைச் சேர்க்கலாம். ஒரே நாள்ல ரெண்டு ஆர்டர் வந்தால் தனித்தனியாப் பிரிஞ்சு செய்யலாம்… என்ன சொல்ற?” என டேபிளில் கைகளை ஊன்றி அவள் பதிலுக்காகக் காத்திருந்தான்.

அவள் யோசிக்க, “பெருசா யோசிக்காத! நாம பேசிக்கும்போது நீ சொன்னதுதான். உன்னோட கேட்டரிங்ல என்னைச் சேர்த்துக்கிறேன். அதனால நான் சொன்னது போலவே செய்யலாம்.. வாக்கு மாற மாட்டேன்னு சொல்லியிருக்க,” என்றதும் அவள் அவனை வெறிக்க,

“அது மட்டும் நீ சொல்லல, எனக்கு நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணி வச்சு, குடும்பமும் வாழ்க்கையும் அமைச்சுத் தர்றேன், ஒளிமயமான வாழ்க்கையை நான் காட்டுறேன்னு சொல்லியிருக்க. எனக்கு ஒளிமயமான வாழ்க்கையைக் காட்டுறேன்னு சொல்லிட்டு, நீ இருட்டுல இருந்துட்டு என்னையும் இருட்டுலயே நிப்பாட்டி வச்சிருக்க… எப்போ நீ இருட்டுல இருந்து வெளிய வந்து ஒளிமயமான வாழ்க்கையைக் காட்டப் போறியோ!” எனப் பெருமூச்சுடன் புலம்பிட,

“இப்பவும் அதான் சொல்றேன்… உனக்கு நல்ல பொண்ணாப் பார்த்து கல்யாணம் பண்ணி வச்சு, குடும்பமும் வாழ்க்கையும் அமைச்சுத் தர்றேன். ஒளிமயமான வாழ்க்கையில நீ பயணிக்கலாம்… என்னோட நீ ஏன் இருட்டுல பயணிக்கணும்னு நினைக்கிற?”

“மரணத்துலயும் உன்னோட சந்தோஷமா பயணிக்கத் தயாராக இருக்கிற எனக்கு, இருட்டுல பயணிக்கிறது கஷ்டமா என்ன? நீ இருட்டுலதான் இருப்பேன்னு சொன்னா, எனக்கு ஒளிமயமான வாழ்க்கை வேணாம் இருட்டே போதும்,” என்று அவனது முடிவில் அவன் தீவிரமாக இருக்க, நொந்து போனாளவள்.

உள்ளங்கையை நெற்றியில் பதியவைத்துத் தசையில் கையை வைத்துக்கொண்டு கண்ணை மூடினாள்.

“பாப்பா,” என்று வெளியிலிருந்து ஜெயந்தி அழைக்க, நிமிர்ந்து “உள்ள வாங்க அக்கா,” என்றாள்.

உள்ளே வந்தவர், “பாப்பா! உன்னைப் பார்க்க ஆள் வந்திருக்காங்க,” என்று சொல்ல,

“உள்ள வரச் சொல்லுங்க அக்கா,” என்றாள். அவர்களும் உள்ளே வந்தனர்.

“குட் மார்னிங் மேடம்! நாங்க மெடிக்கல் காலேஜ்ல இருந்து வர்றோம். வர்ற வியாழக்கிழமை எங்க காலேஜ்ல ஃபங்சன், லஞ்ச் ப்ரிப்பேர் பண்ணனும். மெடிக்கல் காலேஜோட சேர்த்து ஹாஸ்பிட்டலுக்கும் சேர்த்துச் சமைக்கணும். இருபதாயிரம் பேர் இருப்பாங்க… அவங்களுக்கு உங்களால் சமைக்க முடியுமா?” என்று அவர்கள் கேட்டுவிட, முதலில் வாயைப் பிளந்தவள் பதில் சொல்லத் தடுமாற,

“வெஜ் அண்ட் நான் வெஜ்! நாங்க சொல்ற மெனு சமைக்கணும்… சாப்பாடு ரொம்ப டேஸ்ட்டா இருக்கணும். வரதராஜன் சார் ஃபங்சன்ல நீங்க பண்ணது பிடிச்சதுனால போயி உங்க கேட்டரிங் ஃபுட் ஆர்டர் பண்ணனும்னு எங்க மேலாளர் சொல்லிட்டாங்க… உங்களால் முடியும் தானே!”

அவள் பதில் சொல்ல யோசிக்க, அவனோ சட்டென “முடியும் சார் பண்ணிடலாம்,” என்றான். அவளோ அவனை அதிர்ச்சியோடு பார்த்தாள்.

Click on a star to rate it!

Rating 4.4 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
4
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்