Loading

சுற்றி ஆட்கள் இருந்தும் பெண்ணவள் கண்கள் மட்டும் தன்னவன் ஒருவனைத்தேடி அந்த கூட்டத்தில் தேடி அலைந்தது.

தேடி களைத்து போன கண்களுக்கு ஏமாற்றமே பதிலாய் கிடைக்க கண்களை இறுக மூடி கண்ணீர் உகுத்தாள்.

எண்ணவோட்டத்தை மாற்று என்று அறிவு கூறினாலும் மனமோ தன்னவனை மட்டும் நினை என்றது.

அறிவிற்கும் மனதிற்கும் இடையிலான போராட்டத்தில் மனமே வென்றது.

அதிகாலையில் அவன் ஆசையாய் வளர்த்த செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சும் போது தாம் இருவரும் அச்செடிகளுக்கு குழந்தைகள் போல் பெயரிட்ட ஞாபகம்…

மாதவிடாயில் வலி பொறுக்காது தவித்த போது அவன் அன்னையாய் அரவணைத்த ஞாபகம்…

தன் சாதாரண வெற்றிகளை கூட உலக சாதனையாய் எண்ணி அவன் பூரித்து மகிழ்ந்த ஞாபகம்…

வீண் சண்டைகளில் கோபப்பட்டு பனிப்போர் நடத்திய போது அவனுக்காக அவனே தூதாய் வந்து குறும்புகள் செய்து போரில் வெள்ளைக் கொடி காட்ட வைத்த ஞாபகம்…

தன் பக்கம் தவறு இருந்தால் அதை மனம் புண்படாமல் புரிய வைத்த ஞாபகம்…

தம் முதல் குழந்தையை கையில் ஏந்திய போது அதன் பிஞ்சு கைகளை பிடித்து இரசித்து அவனும் ஒரு குழந்தையாய் மாறிப்போன ஞாபகம்….

இப்படி எத்தனை எத்தனை ஞாபகம்….

மனம் ஏங்கியது அவனுக்காக…

இரண்டு நாட்களுக்கு முன் வேலைக்குச் சென்றவன் இன்னும் வீடு திரும்பவில்லை.

குழந்தைக்கு தந்தையாகவும் பெண்ணவளுக்கு தன்னவனாகவும் அரவணைப்பு கிடைக்க அவனுடனேயே மானசீகமாக மன்றாடி
நின்றாள்.

அவளின் தேடலுக்கு முற்றுப் புள்ளியாய் “அம்மு!” என்று ஒலித்தது அவன் குரல். ஆனால் அதிலிருந்த வேறுபாட்டை தான் அவள் கவனிக்கவில்லை.

அவனவன் வந்துவிட்டான் என்பதே போதுமாய் இருக்க சுற்றி இருக்கும் யாரையும் பொருட்படுத்தாது இருபத்தாறு வயது பெண்ணவள் ஆறு வயது குழந்தையாய் மாறி ஓடிச்சென்று அவனை அணைத்துக்கொண்டாள்.

எங்கே மீண்டும் சென்று விடுவானோ என்ற பயத்தில் நொடிக்கு நொடி இறுகியது அவளது அணைப்பு.

அவளின் தவிப்பை உணர்ந்தவனோ ஆதரவாய் முதுகை தட்டிக் கொடுத்தான்.

“அம்மு என்னைப் பாரேன். பிளீஸ்….” என்றவனை பார்த்து நிமிர்ந்தவள்

“ அன்பு…. நீ..நீ வந்துட்ட ல?” என்க ஆமாம் என்று தலையசைத்தான்.

“ஆனா…” என்று சொல்ல வந்தவனை தடுத்து “நீ…ஒன்னும் சொல்ல வேணாம். நான் தான் இனி பேசுவேன்” என்று மிரட்டியவாறு அவனை முழுதாக ஆராய்ந்தாள். குறைகள் எதும் இல்லை என்றவுடன் தான் நிம்மதி அடைந்தாள்.

“அம்மு!”

“மூச்!”

“நான் தான் பேசுவேன் னு சொன்னேன்ல? அதை மட்டும் கேளு” என்க அவளை இரசித்தவாறே சரி என்று வாயில் ஒற்றை விரல் வைத்தவாறு தலையாட்டினான்.

“நீ இரண்டு நாள் இங்க இல்லாத போ என்னன்ன கூத்து நடந்துச்சு தெரியுமா?
அந்த கிழ..வி…தினமும் நான் சாப்பிடல னு திட்டுச்சு. கன்னத்துல கூட அடிச்சுது
அப்பறம் நான் வீட்ல வேலை செய்யாம உட்கார்ந்தே இருக்கேன்னு வேலை எல்லாம் வலுக்கட்டாயமா செய்ய வச்சுது. லூசு கிழவி” என்று தன் பாட்டில் அந்த கிழவியை செய் கூலி சேதாரம் இன்றி வச்சு செய்துகொண்டிருந்தாள்.

“அந்த கிழவி பண்ற அலப்பறைக்கு எல்லாம் சேர்த்து அது மூக்குலயே ஒரு குத்து விடப் போறேன் பாரு” என்க அன்பு அவள் தலையில் கொட்டி சற்று கண்டிப்புடன் பார்த்தான்.

“சரி சரி கோவ படாத. அந்த கிழவிய ஒரு வார்த்தை சொன்னதும் உனக்கு உடனே பொத்துகிட்டு வந்தேடுமே” என்று கடைசி வாக்கியத்தை மட்டும் வாய்க்குள் முணுமுணுத்தாள்.

அவனும் மெலிதாக சிரித்தான்.

பெண்ணவள் நீடித்த அமைதியை உடைக்க மீண்டும் தன் பேச்சிற்கு அணையை திறந்தாள்.

“அப்பறம் நம்ம தோட்டத்தில எல்லா காயும் நல்லா விளைஞ்சிருக்கு. எல்லாத்தையும் பார்க்க எவ்ளோ அழகா இருக்கு தெரியுமா? ஆ…சொல்ல மறந்துட்டேன் வீட்டு லோன் விஷயம் பத்தி எல்லாம் இனி கவலை படாத. எனக்கு நல்ல இடத்தில வேலை கிடைச்சிருக்கு. கண்டிப்பா நம்மால அதை கட்டிட முடியும். அதனால நீ அடிக்கடி டென்ஷன் ஆகவும் தேவையில்ல, டெய்லி நைட்டு எக்ஸ்ரா வேர்க்கும் பண்ண தேவையில்ல. இனிமே நாம சேர்ந்தே சமாளிக்கலாம் சரியா? கூல் ஆ இரு. நம்ம பையனுக்கு இப்போ தானே மூணு வயசு. அவன் ஸ்கூல் போக முன்னாடி கடன் பிரச்சினை எல்லாம் சரியாகிடும் ஓகேவா? அப்பறம் என்ன… நீ , நான், நம்ம குட்டி அர்ஜு னு அழகான குட்டி ஃபேமிலி யா வாழலாம்‌. அதோட யாரையும் எதிர்பார்க்கவும் தேவையில்லை. நாம…ஜாதி வெறி புடிச்ச என் அப்பா கிட்ட சவால் விட்ட மாதிரி நல்லா வாழ்ந்து காட்டுவோம். என்று பேசிக்கொண்டே போக அவனோ அவளை அமைதியாகப் பார்த்திருந்தான்.

“உனக்கொன்னு தெரியுமா? நேத்தெல்லாம் நம்ம அர்ஜூ சமத்தா சாப்பிட்டான். அதோட அவனுக்கு என்னை தான் ரொம்ப……பிடிக்குமாம்” அவள் இவ்வாறு எப்போது சீண்டினாலும் பொய்யான ஒரு சண்டைக்கு வரிந்துகட்டி நிற்பவன். இன்று ஒன்றும் பேசாமல் ஒரு மனநிறைவோடு நின்றிருந்தான்.

மேலும் அவள் தொடர்ந்த கதைகள் அனைத்திற்கும் மௌனம் மட்டுமே பதிலாக இருந்தது.

இத்தனை நேரம் அவளை இரசித்த கண்களில் பரிதாபமும் வலியும் மட்டுமே தெரிந்தது. அதை உணர வேண்டியளோ தன் பாட்டில் பேசிக் கொண்டிருந்தாள்.

“அச்சோ நான் பாட்டுக்கு ஏதேதோ பேசிட்டு இருக்கேன். நீ வா வீட்டுக்கு போகலாம்.. உனக்கும் கால் வலிக்கும் ல. இன்னைக்கு எவன் எவனோ ஒரு பெட்டிய தூக்கிட்டு வந்து என்னென்னமோ சொல்றான். நான் எதையுமே நம்பல அன்பு. நீ வர்ற வரைக்கும் தான் வெயிட் பண்ணேன். இதுக்கு அந்த கிழவியும் ஒத்து ஊதுது. நீ வா. வந்து கேளு என்னனு” என்று அவன் கை பிடித்து இழுக்க அவனோ நின்ற இடத்தை விட்டு நகரவில்லை.

அவனது வேருன்றிய நிலை கண்டு “அட வா அன்பு! “ என்று மீண்டும் இழுத்தவள், அப்போது தான் அவன் கண்களை கண்டாள்.

“அன்பு!!!!” என்று அதிர்ந்து பார்க்க
அவன்,”என்னால வர முடியாது அம்மு” என்க 

அவள் புரியாது விழித்தாள்.

“ஏ..ஏன் முடியாது. அதெல்லாம் முடியும் நீ வா. விளையாடாம.”

“அக்னி சாட்சியா உன் கூடவே இருப்பேன் னு சத்தியம் பண்ண என்னை…உன் கிட்ட இருந்து பிரிச்சிட்டாங்க அம்மு!!!” என்று கதறியவனை அவளால் கண் கொண்டு பார்க்க முடியவில்லை.

“பொ..பொய் சொல்லாத டா. பொய் சொல்லாத” என்று மீண்டும் மீண்டும் சொல்லியபடி அவனை அடிக்க

அன்பு அவள் கைகளைப் பற்றி கண்ணில் வைத்து, “இனிமே தான் நீ தைரியமா இருக்கனும் அம்மு. மனசை தளரவிடாத. நீ எப்போதும் சிரிச்சிட்டே இருக்கனும். எதுக்காகவும் கலங்க கூடாது. உன் கூட நிஜமா இல்லாட்டியும் நிழலாக இருப்பேன் அம்மு. அ..அர்ஜு என்ன ஆசை படுறானோ கண்டிப்பா கிடைக்கும் ஆனா…அது..உன் மூலமா. நா..நான் கிளம்ப வேண்டிய நேரம் வந்தாச்சு. உன்னை கடைசியா பார்க்கனும் னு நினைச்சேன். பா..பாத்துட்டேன். என்னை கடைசியா சிரிச்சிட்டே அனுப்பு அம்மு….” என்று கண்ணீர் வழிய நின்றவனை வெறித்துப் பார்த்தான்.

“அம்மு….பிளீஸ்…..” என்று மண்டியிட்டு அழுதான்.

“அன்பு! “ என்று சிரிக்க முயன்றவள் முடியாமல் போகவும்  அவனை அணைக்க போக

“ஐ லவ் யூ அம்மு” என்று அவன் குரல் காற்றாய் கரைந்து உருவம் மெலிதாய் தேய்ந்து கொண்டே சென்றது.

“ அன்பு!!!!” என்று மனம் வலிக்க வலிக்க கதறி கண் விழித்தவளுக்கு நிதர்சனத்தை உரைத்தது, மரப்பெட்டியில் உறங்கும் அவனும் அன்னையை கட்டிய படி உறங்கிய அர்ஜுனும் தான்.

அதன் பின் எல்லாமே வேகவேகமாக நடந்தது.

கல்லூரி காலத்தில் காதலித்து படிப்பையும் கைவிடாமல் தமக்கென்ற ஓர் அடையாளத்தை உருவாக்கிய பின் திருமணம் செய்து கொள்ள பெற்றோரை நாடி சென்ற போது அமிர்தாவின் பெற்றோர் ஜாதியை காரணம் காட்டி மறுத்தனர்.

பிறந்தது‌ முதல் எதையும் தனக்காக பெற்றோரிடம் கேட்காது ஏற்று வாழ்ந்தவள். முதன் முதலாக தன் காதலில் ஜெயிக்க நின்ற போது கேவலம்…ஜாதியை காரணம் காட்டி மறுத்ததை எண்ணி மனமுடைந்து, அன்புவோடு பதிவுத்திருமணம் செய்து கொண்டாள்.

அவர்களின் கோபம் இன்று மாறும் நாளை மாறும் என்று காத்திருந்தவளுக்கு ஜாதியின் தீவிர பக்தர்களானவர்களால் ஏமாற்றமே மிஞ்சியது. அதுவும், தான் ஒரு தாயான போது மனம் ஏங்கியது. ஆனால் அன்பு அவளை கைவிடவில்லை. தந்தைக்கு தந்தையாகவும் தாய்க்கு தாயாகவும் அவளை அரவணைத்தான்.

வாடகை வீட்டில் அன்பின் பாட்டியோடு சின்ன சின்ன அர்த்தமில்லா சண்டைகள், புதிய வரவின் சந்தோஷம் என்று அழகாக நகர்ந்தது வாழ்க்கை. அத்தோடு வாழ்வில் முன்னேற வேண்டும் என்று வங்கியில் கடனும் எடுத்து தமக்கென்ற ஒரு வீட்டையும் கட்டி முடித்தனர். பின் தமக்கு தான் பெற்றோர் இல்லை, தம் குழந்தைக்காகவேனும் தாத்தா பாட்டியின் அரவணைப்பு வேண்டும் என்று குழந்தையுடன் அமிர்தாவின் வீட்டு படியேறியும் கிடைக்காமல் போனது. ஆனால் அவர்களே எதிர்பாராதது… அமிர்தாவின் பெற்றோரே வீடு தேடி வந்தது‌‌. இனி என்ன பிரச்சினை என்றாலும் தைரியமாக எதிர்கொள்ளலாம் என்றிருந்தவர்களுக்கு திடீரென கிடைத்தது “ அன்பு இறந்து விட்டான்” என்ற செய்தியும் லாரியில் மோதி நையுண்ட அவனின் உடலும் துகள்களாய் உடைந்த அவன் ஆசையாக வாங்கிய பைக்கும் தான்.

அவனது ஒரு துர்மரணம் என்று மட்டும் நினைத்தவள், அதன் பின் நடந்த வழக்குகளால் அது ஜாதி வெறி பிடித்த மிருகங்களால் நடந்த கொலை என்று தெரிந்தது.

அன்பு ஒரு முறை தான் இறந்தான். ஆனால் சுற்றத்தாலும் சமூகத்தாலும் தினம் தினம் கொல்லப்பட்டான் வார்த்தைகளால்…

ஆனால் கொலைக்கு தீர்ப்போ வெறும் சிறை வாசம் தான்.

யாருக்கு வேண்டும் இந்த தீர்ப்பு? இதனால் மட்டும் அவன் திரும்பி வந்துவிடுவானா? இல்லை பெண்ணவள் வலி தான் தீருமா?

கேவலம் ஜாதி என்ற சாத்தானுக்காக அப்பாவி உயிர் பலியானது எந்த விதத்தில் நியாயம்?

இதே கேள்வியை கைதி ஆகியும் செருக்குடன் நின்ற தந்தையிடம் கேட்டால் அவரின் பதில்,
“அந்த ஒன்னத்துக்கும் உதவாத குழந்தைய அநாதை ஆசிரமத்தில் கடாசிட்டு வா. உனக்கு நம்ம ஜாதில நல்ல பையனா கட்டி வைக்கிறேன். இந்த தண்டனை எல்லாம் இரண்டு மூணு வருஷத்துக்கு தான். அப்பறம் என்னை எங்க தலைவரு வெளிய கொண்டு வந்துருவாரு. பணத்தை அள்ளி ரைட்ல தட்டி லெஃப்ட் ல விட்டா எல்லா பயலும் நம்ம பக்கம் தான். “ என்று நா கூசாமல் சொன்னவரை என்ன செய்வதென்று புரியாமல் மலைத்து நின்றாள்.

“இப்ப கூட உங்க பொண்ணை விட அந்த ஜாதி தான் பெருசா போச்சா? எப்போல இருந்து நீங்க இப்பிடி மாறுனீங்க. உங்கள அப்பா னு சொல்றத்துக்கே கேவலமா இருக்கு.”

“இப்போ தான் உனக்கு தெரியுதா? நீ படிச்ச படிப்பு, சாப்பிட்ட சாப்பாடு, வாழ்ந்த பகட்டு வாழ்க்கை எல்லாமே என் ஜாதி போட்டது. அத்தனையும் வாங்கிட்டு நன்றி இல்லாம நடக்கிறது நீ தான். நான் இல்லை. இப்போ கூட நான் உண்மையா தான் இருக்கேன். எங்க என் வளர்ப்பு தப்பாச்சு னு தான் தெரியல. நீங்க எல்லாம் நல்லாவே இருக்கு மாட்டிங்க “ என்று பல்லிடுக்கில் கடித்து துப்பியவரை முற்றாக வெறுத்தாள்.

அப்போது தான் ‘என்னை உன் கிட்ட இருந்து பிரிச்சிட்டாங்க அம்மு’ என்று தன்னவன் சொன்னது புத்தியில் உரைத்தது. புரிந்ததும் அதிர்ந்து நின்றவள் கண்களில் கண்ணீர் துளிர்க்க காத்திருந்தது. ‘எதுக்காகவும் கலங்க கூடாது’ என்று மீண்டும் தன்னவன் சொன்னது ஞாபகம் வர, கண்களை துடைத்துக் கொண்டாள். ஒரு நிமிர்வு அவள் கண்களில் தெரிந்தது.

“உங்க வளர்ப்பு தப்பு இல்லை‌. நான் வளர்ந்த இடம் தான் தப்பு. ஒன்னு சொல்றேன் நல்லா கேட்டுக்கோங்க. உங்கள மாதிரி சாபம் விடுற அளவுக்கு நான் ஒன்னும் கேவலமானவ இல்லை. அன்பு என் கூடவே தான் இருக்கான். எங்களை பாத்துட்டும் தான் இருப்பான். உங்க முன்னாடியே நாங்க வாழ்ந்து காட்டுவோம். என் பையன் இந்த ஜாதி, மதம் எல்லாத்தையும் தாண்டி ஜெயிக்க தான் போறான். அதையும் நீங்க பாக்க தான் போறீங்க. நீங்க பண்ணதுக்கான தண்டனை நீதி குடுக்கல. ஆனா அன்பு குடுப்பான்” என்று சொன்னவள், அன்று தான் அவரை கடைசியாகப் பார்த்தாள்.
குற்றவுணர்வில் தவித்த அன்னை அவள் பார்வையில் மூன்றாம் மனிதரானார்.

ஓடும் காலம் என்னை நிறுத்தவில்லை,
மனதில் அழியா காதல் தன்னை கோழையாக்கவில்லை என்ற எண்ணத்தோடு மனதை திடப்படுத்தினாள்.

பிறந்ததில் இருந்து ஒரு பெண்ணவள் வைக்கும் பொட்டும் பூவும், விதவையானால் பறிக்க வேண்டும் என்பது யார் வைத்த சட்டம் இது?
என்று தன் மனதையும் தன்னவனையும் கேட்டவளுக்கு படத்தில் தெரிந்த தன்னவன் ஒற்றைப் புன்னகை தன்னை பெருமையாய் பார்த்தது போல் தெரிய , அவனது படத்தை பார்த்தவாறே பொட்டினை நெற்றியில் இட்டாள். இறுதியாய் அவன் கேட்ட புன்னகை இன்று அவள் முகத்தில் மலர்ந்தது.

அவள் அழகை அன்பு அமர்ந்திருந்து இரசிப்பது போல் அமர்ந்திருந்த அர்ஜுனைக் கண்டவள், அவனை அள்ளி அணைத்துக் கொண்டாள்.

“அப்பு குட்டி! நான் அழகா இருக்கேனா?”

“நீ எப்பவும் அதகு மா” என்று அவள் கன்னத்தில் முத்தமிட்டான்.

அதில் கரைந்தவள், அவனது முகத்தை கையில் ஏந்தி “நாம இரண்டு பேரும் சவால் ல ஜெயிப்போமா டா? நம்மால முடியுமா?”

“ஜெயிக்குறதுனா?” என்று அறியாமையில் கேட்ட குழந்தை தனத்தை இரசித்தவள்.

“நீ, நான் அப்பறம் அப்பா எல்லாம் சேர்ந்து விளையாடும் போது.‌‌.. அப்பா, உனக்கு கை தட்டி விஷ் பண்ணி ‘வின்’ அப்டின்னு சொல்வாரே….அந்த மாதிரி”

“ஆ…ஆமா…..”என்றவுடன் க்ளுக் என்று வாயில் கை வைத்து சிரித்து விட்டு “அப்போ நாம கண்டிப்பா ஜெயிப்போம் மா” என்று பெரிய மனிதன் போல் அவள் தோளில் தட்டிக் கொடுத்தான்.

அன்பு தன் மகனாய் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறான் என்பதை உணர்ந்தவள் அவனை இறுக அணைத்தாள்.

அன்னை எவ்வழியோ அர்ஜுனும் அவ்வழி நடந்தான்.

தன் இலட்சியத்தின் முதல் படியாக
அர்ஜுனுக்கு தந்தையாகவும் தாயாகவும் மாறினாள்.

விதவை என்றாலும் அவள் இளமையை களவாட துடிக்கும் கயவர்களுக்கு மத்தியில் போராடி வந்தவள் , பெண் அழகை வெல்பவன் அல்ல, பெண் மனதை வெல்பவனே உண்மையான ஆண்மகன் என்றும் பெண்ணும் ஆணும் மட்டுமன்றி வையகத்தில் மனிதராய் பிறந்த அனைவரும் சமம் என்றும் தன் மகனுக்கு புரியவைத்தாள்.

பணம் இருந்தால் உலகம் உன்னை போற்றும் இல்லையென்றால் தூற்றும் ஆனால் மனிதம் இருந்தால் ஏழேழு ஜென்மும் உன்னை மனிதனாய் வாழ வைக்கும் என்றாள்.

அத்தோடு ஜாதி, மதத்தைப் பார்க்காதே மனிதனை மனிதனாய் பார் என்றாள்.
பணமும் பதவியும் மட்டுமே சம்பாத்தியம் அல்ல இன்னொருவனை வாழ வைத்தால் கிடைக்கும் திருப்தி, அதை விட பெரும் சம்பாத்தியம் என்று வாழ்ந்தும் காட்டினாள்.

‘ அன்பு ட்ரஸ்ட் ‘ என்ற பெயரில் எத்தனையோ பேரை படிக்க வைத்தாள். இன்று வரையும் ‘அன்பு ட்ரஸ்ட்’ எத்தனையோ பேரை வாழ வைக்கின்றது.

கோபம் நியாயத்திற்காக வர வேண்டும் , நேர்மை மூச்சில் ஒன்றாய் கலக்க வேண்டும், தன்னம்பிக்கை,தைரியம் உயிர் நாடியாய் மாற வேண்டும் என்று சொல்லி வளர்த்தாள்.

கனவிற்கு தடைக்கல் வந்தால் அதை தாண்டி ஓடு, போகும் பாதையில் கற்களும் முட்களும் இல்லையெனில் அது தவறான பாதை என்றாள்.

அவள் வளர்ப்பும் அரவணைப்பும் மாற்றம் கொண்டுவருமா ? என்ற கேள்விக்கு பதில் சொல்ல பதினைந்து வருடங்கள் கடந்து விட்டன.

“அர்ஜூன்!”

“அர்ஜுன்!”

என்று சந்தோஷமாய் ஆர்ப்பரிக்கும் கூட்டத்தில் , ஆசிய நாடுகளுடன் போட்டியிட்டு தாய் நாட்டிற்காக ஓட்டப் பந்தயத்தில் ஜெயித்துக் கொடுத்த தங்க பதக்கத்தை நெஞ்சில் சுமந்து கம்பீரமாய் நடந்து வந்தான்.

அன்பின் எளிமையும் அமிர்தா(அன்பின் அம்மு) வின் நிமிர்வும் அவன் தோற்றத்தில் மிளிர்ந்தது.

சற்று நேரத்தில் ஜனாதிபதியின் கையால் கௌரவ விருதினை பெற வீரர்கள் அனைவரையும் அவர்களுக்கான ஆசனத்தில் அமரவைத்தனர்.

அமர்ந்தவன், கூட்டத்தில் அலசி தேடி கொஞ்சம் நரைத்த முடியும் மெலிந்த தேகமும் கொண்டு மகனின் வெற்றியில் பூரித்து போய் அமர்ந்திருந்த அன்னையை இரசித்தான். இப்போது முழு ஆணாய் அமிர்தாவின் அன்பே மேடையில் அமர்ந்திருப்பது போன்ற மாய தோற்றம் அவளுள். அவளின் மெய்மறந்த நிலையைப் பார்த்தவன்
ஒற்றைக் கண்ணடித்தான்.

‘டேய் ! கொன்னுடுவேன் படவா! ‘ என்று அமர்ந்த நிலையிலேயே சைகையால் மிரட்ட இருவரும் சிரித்துக் கொண்டனர்‌.

பின் அவன் பதக்கத்தை தூக்கி காட்டி ‘எப்பிடி?’ என்று ஒற்றைப் புருவத்தை தூக்கி கேட்க

‘ என் ராசா…’ என்று நெட்டி முறித்தாள்.

ஜனாதிபதியின் வருகையின் பின் நிகழ்வு ஆரம்பித்ததும் தாய்நாட்டிற்காக பதக்கம் வென்ற அத்தனை வீரர்களையும் முழு நாடே கொண்டாட நிகழ்வு நேரலையாக ஒலிபரப்பப்பட்டிருந்தது‌.

அர்ஜுன் விருதினை வாங்கும் தருணத்தை இரசிக்க அன்பு கூட இல்லையே என்ற வருத்தம் இருந்தாலும் அவன் வெற்றிக்கு பக்க பலமாய் இருந்திருப்பான் என்ற நம்பிக்கையோடு நிகழ்வை பார்த்திருந்தாள்.

தொகுப்பாளினி அர்ஜுனின் வெற்றியைப் பற்றி ஒரு சில வார்த்தைகள் பகிருமாறு கேட்க

இருக்கையில் இருந்து எழுந்து வந்தவன் , “ என்னை மண்ணில் சுமந்த தாய் நாட்டிற்கும், நெஞ்சில் சுமந்த தந்தைக்கும், கருவில் சுமந்த என் தாயிற்கும் என் முதல் வணக்கம்” என்று ஆங்கிலம் கலங்காது தூய தமிழில் அந்த அரங்கமே எதிரொலிக்கும் அளவு வணக்கத்தை தெரிவித்தான்.
இறுதி வாக்கியத்தின் போது அவன் அனைவர் முன்னிலையிலும் தன் அன்னையைப் பார்த்து கைகூப்பி வணக்கம் தெரிவிக்கவும் மறக்கவில்லை.

இதனை விடவா அவன் தன் அன்னையை பெருமைபடுத்தி விட முடியும்.

அவளும் பதில் வணக்கம் வைக்கும் வரை அவளையே பார்த்திருந்தவன் பதில் கிடைத்தவுடன் தான் தன் பேச்சை தொடர்ந்தான். கேமிராவின் கண்கள் இவளையும் ஒரு முறை வட்டமடிக்க சற்று சங்கடமாக உணர்ந்தாள்.
“வீட்டுக்கு வா. உனக்கிருக்கு!” என்று மானசீகமாக அவனை செல்லமாக திட்டிக் கொண்டாள்.

அதன்பின் ஆங்கிலத்தில் அழகாக , அழுத்தம் திருத்தமாக பேசியவன் தான் யாருக்கும் சளைத்தவன் இல்லை என்று நிரூபித்தான்.

இறுதியாக ,” ஒருவனின் திறமையை ஜாதியை வைத்து அதை தட்டிப்பறிக்காதீர்கள். இது நம் தாய் நாட்டிற்கான சேவை” என்றான்.

அர்ஜூன் தன் திறமையை வைத்து பல மட்டங்களை கடந்து நாட்டிற்காக விளையாடும் நேரம் வந்ததும்,  தமிழன் என்று அவனது திறமையை ஒரு பொருட்டாக கூட மதிக்கவில்லை. அதையும் மீறி முயன்றவனை பணத்தை காட்டி மடிய வைக்க முயற்சித்தனர். எதற்கும் சரிவராமல் போக ‘உற்சாக பானம் அருந்தினான்’ என்று பழி சுமத்தி ஒதுக்கி வைக்க நினைத்தனர். ஆனால் அவன் எதற்கும் துவண்டு போகவில்லை. ‘இதுவும் கடந்து போகும்’ என்று ஒரு திடத்தோடு போராடி, அதனை வீண்பழி என்று நிரூபித்து, இன்று நாட்டிற்காக ஜெயித்தும் விட்டான்.

அவனது உரை அத்தனை பேரையும் எழுந்து நின்று கை தட்ட வைத்தது.

அடுத்த வந்த வீரர்களினதும் உரையினையும் ஆர்வமாக கேட்டுக்கொண்டிருந்தவளை ஒரு பெண் சுரண்டி அழைத்தாள்.

அமிர்தா, அந்த கடுப்பில் திரும்ப
அந்த பெண்ணோ அர்ஜுனைக் காட்டி“ ஆன்ட்டி…இஸ் ஹீ சிங்கிள்?”

“ஆமா…ஏன்?” என்று அவளை ஏற இறங்க பார்த்தாள்.

“டூ மிங்கிள் ஆன்ட்டி” என்று வெட்கப்பட
அமிர்தா சற்று எம்பி அவள் தலையில் குட்டி விட்டு “ முளைச்சு மூணு இலை விடல அதுக்குள்ள லவ்வு கேக்குதா? போமா பின்னால” என்று அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் திட்டி அனுப்பி விட்டு திரும்பியவள் “இந்த காலத்துல பொண்ணுங்கள விட பசங்களை தான் பாதுகாக்கனும் போல. காலம் கெட்டு போச்சு” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.

மேடையிலிருந்து அவன் கீழிறங்கியதும் அவனை இழுத்துக் கொண்டு சென்று காரில் ஏறினாள். காரணம் அறிந்தவனோ வரும் வழி முழுக்க சிரித்துக் கொண்டே வந்தான். அவளும், தான் நடந்து கொண்ட விதத்தை நினைத்து தானும் சிரித்தாள். வெகு நாட்களுக்கு பிறகு மன நிறைவாக சிரித்தது போன்ற உணர்வு அவளுள்.

வீட்டிற்கு வந்தவர்களை அந்த பகுதி மக்கள் அனைவரும் கொண்டாடி தீர்த்தனர்.

பற்கள் விழுந்து, நடுங்கும் கைகளால் தன் பேரனை கொஞ்சி மகிழ்ந்தாள்‌ அமிர்தாவின் தாய்கிழவி.

பதக்கத்தை எடுத்து அன்புவின் படத்தின் முன் வைத்து வீழ்ந்து வணங்கி ஆசிர்வாதம் வாங்கினான்.

பின் நிமிரந்து அமிர்தாவையும் தன்னோடு சேர்த்து அணைத்து ‘. இப்போ உங்களுக்கு சந்தோஷமா பா?’ என்றவனுக்கு அன்பின் புன்னகை முகமே பதிலாக இருந்தது.

“அம்மு, எல்லாரும் என்னை பாராட்டுனாங்க. ஆனா நீ ஒரு வார்த்தை கூட சொல்லல” என்று கோபித்தவனை பற்றித் திருப்பி “நீ என்னையும் உன் அப்பாவையும் ஜெயிக்க வச்சுட்ட அர்ஜு. தேங்க்யூ! “ என்றாள் ஆனந்த கண்ணீரோடு மிளிர்ந்த புன்னகையோடு.

-சுபம்-

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    73 Comments

    1. Romba power aana story, anbu paasam, kovam, vairaakiyam, thanambikai, konjam kurumbu nu elaathayum kondu vanthutinga, unga writing style simply superb!! Good job👌

    2. மிக நேர்த்தியான படைப்பு. நயத்துடன் ஈர்க்கும் எழுத்து. கதை நகர்வை கூற வார்த்தைகளே இல்லை. மனதிற்கு நெருக்கமாக மாறி விட்டனர் கதை மாந்தர்கள் மேலும் சிறக்க வாழ்த்துகள்.

          1. vennivanathi

            அழுத்தமான அதே சமயம் அழகான கதையமைப்பு. படிக்கும்போது அதோட ஒன்றிப்போகுற உணர்வு❤️ தேர்ந்த எழுத்து நடையும் கூட🤗 இடையில சொல்லப்பட்ட சமூக கருத்தும் நச்👍🏻 இன்னும் நிறைய எழுதுடா💓

    3. மிகச்சிறந்த கதை.இன்னும் சிறப்பாக எழுத என் வாழ்த்துகள்

    4. Nice Story… Vera level.. Congrats keep wrote Story like this. 😇😇😇

      1. பலரின் நிஜம், கதையின் நகர்வு மிகச் சிறப்பு, மேலும் தரமான படைப்புக்களை உருவாக்க வாழ்த்துக்கள்மா ✨💚

          1. Congratulations for your successful writing, super story 👏, be strong 💪❤

    5. அடடே! கருவை கையாண்ட விதம் அருமையோ அருமை. சபாஷ் போட வைத்தது உங்கள் நடை. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.

    6. Vino Malar

      ஜாதி வெறியால் தன் கணவனை இழந்த பெண்ணின் துயரையும், அவள் காதலின் ஆழமும், அவள் மகனை கணவனின் குணங்களுடன் தன்னம்பிக்கையோடு வளர்த்து, அதில் வெற்றியும் கண்ட அம்முவின் கதாபாத்திரத்திம் 👌👌👌👌 காதல், அன்பு, தன்னம்பிக்கை, வைராக்கியம் என அனைத்தையும் அழகாக கையாண்ட விதம் அருமை.. வாழ்த்துகள் மா💐💐

      1. Prashadi Krishnamoorthy
        Author

        மிக்க மிக்க நன்றி சகி. விமர்சித்து என்னை ஊக்குவித்தமைக்கு நன்றி ☺️

    7. அருமையான சிறப்பான கதைக்களம் சூப்பர்😃👏
      காதலை பற்றிய புரிதலே சமூகத்துல முழுமையா இல்ல இதுல ஜாதியும் கலக்குறப்போ மனிதன் மிருகமா மாறி மனிதத்தை மறந்து இதுதான் சரிற மனநிலைக்கே போயிடுறான் ஜாதியை வேறொடு அறுக்க எத்தனை தலைவர்கள் போராடுனாலும் அவங்க போராட்டத்தையும் தாண்டி ஜாதி தலைமுறை தலைமுறையா வந்துகிட்டே தான் இருக்கு இதை அழிக்க அமிர்தா மாதிரி வருங்கால தூண்களை நாம சரியான வழிகாட்டுதலோட வளர்க்கணும் நம்ம பிள்ளைங்ககிட்ட ஜாதியை திணிக்கிறதை நிறுத்திட்டாலே ஜாதி என்ற சாத்தான் முழுமையா அழிஞ்சிடும் அதை ரொம்பவே ஆணித்தரமா உணர்த்திய படைப்பு👏👏👏👏👏
      நாட்டு நிலவரத்தை அழுத்தமா சொன்னதோட வார்த்தைகளை சிறப்பா கையாண்டு உணர்வுகளையும் அழுத்தமா பதிவு செஞ்ச விதம் பாராட்டிற்குரியது👏👏👏👏👏👏
      சமூகம் உணர வேண்டிய சிந்தனையை வெளிபடுத்திய படைப்பு எழுதியதற்கு வாழ்த்துக்கள் மா😍😍😍👏👏👏👏👏

    8. Nuha Maryam

      You touch my heart by your story ma 🤪 Romba nalla irukku.. Anbu & Amirdha love superb.. last wara amirtha anbu thannoda pakkathule irukkannu nambi adhe pola paiyanem walathu jeichi kattita.. Keep it up dear ☺️

    9. மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். சமூக கருத்தை வலியுறுத்திய தங்களின் எழுத்து நடையும், வசனமும் மிகவும் அசத்தல். இனிமையாக அதே நேரம் அழுத்தமாக அமைந்தது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    10. அற்புதமான படைப்பு..அன்புவின் இறப்பை அவ்வளவு எளிதாக ஏற்கமுடியவில்லை..ஏன்னா அம்மு கூட அவன் வாழ்ந்த ஒவ்வொரு விஷயத்தையும் ரசித்து எழுதியிருக்கீங்க..அம்மு அருமையான கதாபாத்திரம்..

      ஜாதிவெறி பிடித்த மனிதர்களை எதிர்த்து நின்ற அமிர்தாவின் நிமிர்வும்,காதலும்,அர்ஜீனை மனிதத்தோடு வளர்த்தி வெற்றி பெறச்செய்ததும் அருமை அருமை சிஸ்..கரு,கதாபாத்திர வடிவமைப்பு,காட்சியமைப்பு எல்லாமே அபாரம்.. வாழ்த்துக்கள் சிஸ் 💐💐💐💐💐

    11. மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். சமூக கருத்தை வலியுறுத்திய தங்களின் எழுத்து நடையும், வசனமும் மிகவும் அசத்தல். இனிமையாக அதே நேரம் அழுத்தமாக அமைந்தது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    12. kanmani raj

      அருமையான நிறைவான கதை சகி. சாதி கொடுமையை பற்றி கதையின் ஊடே சொல்லிய விதம் அருமை. பெண்ணால் நினைத்தால் முடியாதது ஏதுமில்லை. அன்பின் அம்மு ஜெயித்து விட்டாள் மகனின் வளர்ப்பில். வெற்றி பெற வாழ்த்துகள்

    13. மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். காதலோடு சேர்த்து குடும்ப உறவுகளின் உணர்வுகளை உணர்த்திய தங்களின் எழுத்து நடையும், வசனமும் மிகவும் அசத்தல். இனிமையாக அதே நேரம் அழுத்தமாக அமைந்தது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    14. மிகவும் நேர்த்தியான படைப்பு மா ஒரு தலைமுறையை ஒரு சிறுகதைக்குள் அடக்கி விட்டாய் அழகான பயணம்… அழுத்தமான கதைக்களமும் அம்முவின் உறுதி மனதில் நின்றது

    15. அழவும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கத்தக்க இந்த சிறந்த ஆக்கத்திற்கு பாராட்டுக்களும் நன்றிகளும் ❤

    16. Suuperb prashadi akka
      Nalla iruku👌👏
      Keep rocking akka
      All the best to achieve more

    17. நவரசமும் நர்த்தனம் ஆடுதே Prash!!!!!
      You are a super duper confident queen of our batch….
      👏👏👏👏👏👏👏👏

        1. சிறந்த ஒரு படைப்பு! இது போன்ற அற்புதமான கதைகளை வருங்காலத்தில் எழுதுவதற்கு எனது வாழ்த்துக்கள் அக்கா.

    18. Excellent story ma. Story kondu pona vitham antha kathai kullaye namala vaazha vaichathu. Great job👌👏

    19. Intha story la niraya part en relative ooda life laum nadanthu iruku unmelaye story read panum pothe antha kathaikulla naama irukira oru feeling uruvaguthu .done a great job inum valara vaalthukal

    20. கதை மாந்தர்கள் மனதில் பதிந்து விட்டனர். அழுத்தமான சமூக கதைக்களம். சிறப்பான எழுத்து நடை. மேலும் படைப்புகளை தொடர வாழ்த்துகள்.