Loading

காதல் 11

 

ரஞ்சுவின் பொறுப்பற்ற தன்மையில் கோபம் கொண்டவனாக அவளின் அறைக்குள் சென்ற சஞ்சய், அங்கு அவள் கீழே விழுந்திருந்த நிலை கண்டு சற்று பதறினான். அவளிற்கு இருக்கும் ஆபத்தைப் பற்றிக் கூறி அவளிடம் எச்சரிக்கை செய்யவே அவன் வந்தது. இப்போது அவளின் நிலை கண்டவன், எதிரிகளினால் ஏற்பட்ட ஆபத்தோ என்று எண்ணினான்.

வேகமாக அவளருகே சென்றவன், அவளை ஆராய்ந்ததில் இரத்தம் வந்ததற்கான அறிகுறி தென்படவில்லை என்று கண்டபோது தான் அவன் பதட்டம் சற்று தணிந்தது. சிறிது தண்ணீரை முகத்தில் தெளித்து, அவளின் மயக்கம் போக்க முயன்றான். ஆனால், அவளோ மயக்கத்திலிருந்து விழித்த பாடில்லை.

இனியும் தாமதிக்காமல் அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று எண்ணியவன், அவளைத் தூக்கிக் கொண்டு கீழே சென்றான்.

அவளைத் தவிர வீட்டில் யாருமில்லை என்பதை கண்டுகொண்டவன், அவளின் குடும்பத்தினர் எங்கு சென்றிருப்பர் என்று யோசித்தபடியே வெளி வாயிலை அடைந்தான். எப்போது அவளை சஞ்சுவுடன் கண்டானோ, அப்போதே அவளைப் பற்றிய விபரங்களை விசாரித்து தெரிந்து கொண்டிருந்தான்.

சஞ்சய் உள்ளே சென்றபோது எட்டிப்பார்த்தவர்கள் இப்போதும் அவரவர்களின் வீட்டிலிருந்து பார்க்க, உள்ளே சென்றவனின் கைகளில் ரஞ்சுவை தூக்கிக் கொண்டு வருவதைக் கண்டு அவர்களுக்குள் பேசிக் கொண்டனர். ரஞ்சுவின் பக்கத்து வீட்டுக்காரர் அவர் வீட்டிலிருந்தே, “தம்பி, பாப்பாக்கு என்னாச்சு?” என்றார்.

சஞ்ஜயோ, “தெரியல சார். நான் போனப்போ மயங்கியிருந்தாங்க. அதான் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறேன். இவங்க பேரண்ட்ஸ் வந்தா சொல்லிடுறீங்களா?” என்றான்.

“அவ அப்பா அம்மா விட்டுட்டு போனதுல தான் தம்பி பாப்பா மயங்கியிருக்கும். பாவம், அவங்க போறப்போ அது முகத்தை பாக்கவே முடியல.” என்று அவர் கூற, சஞ்சயோ குழப்பத்தில் இருந்தான்.

‘அப்பா அம்மா விட்டுட்டு போயிட்டங்களா?’ என்று நினைத்தாலும், முதலில் ரஞ்சுவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டி அவனின் மகிழுந்தில் அவளை அமர வைத்து வேகமாக செலுத்தினான்.

*****

அந்த மருத்துவமனை தாழ்வாரத்தில் கண்களை மூடி அமர்ந்திருந்த சஞ்சய், சற்று முன்னர் தனக்கு ஏற்பட்ட பதட்டதை எண்ணி அதன் காரணத்தை அலசி ஆராய்ந்து கொண்டிருந்தான்.

‘சஞ்சுனால அந்த பொண்ணு பாதிக்கப்படக் கூடாதுன்னு டென்ஷன் ஆகிருப்பேன்!’ என்று அவனே அவனை சமாதப்படுத்திக் கொண்டான்.

ஆனால் அவன் மனதிற்கு தெரியும், கண்ணாடியாய் உடைந்து போனவளின் பிம்பத்தை சீரமைக்கும் முயற்சியை அவனின் இதயம் ஆரம்பித்து விட்டதென்றும், அதற்கான முதல் படியாய், ரஞ்சுவின் மீதான சலனம் அவனைத் தொற்றிக் கொண்டதென்றும்!

“ஹலோ மிஸ்டர்.” என்று தனக்கு வெகு அருகில் கேட்ட குரலில், சிந்தனையிலிருந்து வெளிவந்து கண்களைத் திறந்தவன், அங்கிருந்த மருத்துவரைக் கண்டு, “டாக்டர், ஹொவ் இஸ் ஷி?” என்றான், மறைக்க முயன்று தோற்றுப் போன பதட்டத்துடன்.

“அவங்க ரொம்ப ஸ்ட்ரெஸ்ல இருக்காங்க. மனசுல எதையோ போட்டு குழப்பிட்டு இருக்காங்க. அவங்களுக்கு இப்போ தேவை ரெஸ்ட் தான். அண்ட் அவங்க பாடி கண்டிஷன் பார்க்கும்போது, சரியா சாப்பிடலன்னு நினைக்குறேன். சோ, இப்போ ட்ரிப்ஸ் ஏறுது. முடிஞ்சதும் ஒரு தடவை செக் பண்ணிட்டு டிஸ்சார்ஜ் பண்ணிக்கலாம்.” என்றார்.

அவரிடம் விடைபெற்றவன் ரஞ்சு இருந்த அறைக்குள் சென்றான். கட்டிலில் நிர்மலமான முகத்துடன் படுத்துக் கொண்டிருந்தவளைக் கண்டவனின் எண்ணங்கள் மீண்டும் கடந்த காலத்திற்கு பயணித்தது.

“சஞ்சு!” என்ற குரலில் இருவருமே திரும்பிப் பார்க்க, அவளோ நாக்கை கடித்துக் கொண்டாள். அவளின் செயலைக் கண்ட இரு சஞ்சுவும் சிரிக்க, “ரெண்டு பேருக்கும் ஒரே பேரு வச்சா நான் எப்படி கூப்பிடுறதாம்?” என்று அவள் செல்லமாக சிணுங்கினாள்.

“சார்!” என்ற விழிப்பில் தன் நினைவுகளில் இருந்து வெளிவந்து, கண்களைத் திறந்தவன், தன் முன் நின்றிருந்த செவிலியைக் கண்டு புருவம் சுருக்கினான்.

“சார், பேஷண்ட் பேரு சொல்லுங்க.” என்று அந்த செவிலி வினவ, “ஷ்ரே… க்கும்… ரஞ்சனா.” என்றான்.

அந்த செவிலி அங்கிருந்து நகர்ந்த பின்பு அவனின் மனம் கடந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் இடையில் சிக்கித் தவித்தது. ‘பெண்கள் எல்லாருமே ஏமாற்றுபவர்கள் தான்’ என்று அவனின் மூளை முழுவதும் தீவிரமாக பரவியிருந்த எண்ணம், ரஞ்சுவையும் அந்த பட்டியலில் சேர்க்க முற்பட, அவன் மனமோ அதற்கு முட்டுக்கட்டையாக இருந்தது.

காலங்காலமாக ஏற்படும் அதே சண்டை, மூளைக்கும் மனதிற்கும் இடையேயான சண்டை! இதில் வெற்றி பெறப்போவது, சஞ்சயின் மூளையா இல்லை சஞ்சயின் மனமா?

*****

ரஞ்சு இன்னும் விழிக்காமல் இருக்க, சஞ்சய்க்கு கடந்த கால சிந்தனைகள் வருவதும் போவதுமாக ஆட்டம் காட்டிக் கொண்டிருக்க அவளருகே அமைதியாக அமர்ந்து கொண்டான்.

சற்று நேரம் கழித்து, மெல்ல கண் விழித்த ரஞ்சுவிற்கு நடந்தது அனைத்தும் கனவாக இருக்கக்கூடாதா என்ற எண்ணம் தோன்ற, அங்கு நிலவிய சூழலலோ, நிகழ்ந்தது கனவில்லை நிஜம் என்று அடித்துக் கூறியது.

ஒரே நாளில் யாருமில்லாத அநாதையாக மாறக்கூடும் என்று கனவில் கூட நினைக்காதவளிற்கு, அவளின் இந்த நிலை சுய-கழிவிரக்கத்தைப் பெருக்க, கண்கள் ஒரு மணி நேரமாக நிறுத்தியிருந்த கண்ணீரை மீண்டும் பொழிய ஆரம்பித்தது.

இத்தனை நேரம், அவள் முகத்தில் தெரிந்த பாவங்களை ஊன்றி கவனித்தான் சஞ்சய். காரணமேயின்றி (!!!) அவளின் சோகம் அவனைத் தாக்குவதை ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியுடன் உணரத் துவங்கினான்.

பெண்ணவள் அப்போது தான் சஞ்சயைக் கண்டாள். அன்றைய நிகழ்வுகளின் தாக்கத்தால், முற்றிலும் குழம்பியிருந்த மூளைக்கு சஞ்சயின் வரவு மேலும் குழப்பத்தை ஏற்படுத்த, சலிப்புடன் கண்களை மூடிக் கொண்டாள்.

அவளையே பார்த்துக் கொண்டிருந்தவனிற்கு அவளின் சலிப்பு கண்களில் பட, “என்னாச்சு?” என்றான் மென்குரலில்.

அவனிடம், அவர்களின் முதல் சந்திப்பின் போது இருந்த கோபமோ, இரண்டாவது சந்திப்பின் போது இருந்த ஆராய்ச்சி உணர்வோ இப்போது இல்லை என்பதை ரஞ்சு உணர்ந்து கொண்டாள்.

அதன் பிறகு தான், சஞ்சய் எப்படி இங்கு வந்தான் என்பதைப் பற்றி தான் எதுவும் வினவவில்லை என்பதே அவளிற்கு உரைத்தது. மேலும், அவன் தான் தன்னை மருத்துவமனைக்கு அழைத்து வந்திருக்க வேண்டும்… அதற்கான நன்றியைக் கூட தெரிவிக்காமல் சலிப்புடன் கண்களை மூடிக் கொண்டதற்கு தன்னைத் தானே திட்டிக் கொண்டவள், கண்கள் திறந்து அவனைக் கண்டாள்.

அவன் முகம் எதையோ உணர்த்த முயன்று தோற்றுக் கொண்டிருந்தோ, இல்லை அவள் தான் உணர முயன்று தோற்றுக் கொண்டிருந்தாளா?

முதல் சந்திப்பின் போது அணிந்திருந்த கோட் சூட் இல்லாமல், சாதாரண ஜீன்ஸ் டி-ஷர்ட் அணிந்திருந்தவனைக் கண்டவள், ‘இவரை வேற எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே?’ என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.

அவள் ஏதோ கூற வந்து மீண்டும் யோசனையில் ஆழ்ந்ததைக் கண்டவன், “க்கும்…” என்ற செருமலில் அவளை நிகழ்விற்கு அழைத்து வந்தான்.

‘ச்சே, இப்படி பேன்னு அவரை பார்த்துட்டு இருக்கேன். இருக்க பிரெச்சனைல இது வேற!’ என்று மனதிற்குள் திட்டிக் கொண்டவள், “தேங்க்ஸ்.” என்று அவனைப் பார்க்காமல் கூறினாள்.

“ம்ம்ம்…” என்று அதை ஏற்றுக் கொண்டவன், சிறிது தயக்கத்துடன் (!!!) “என்னாச்சு? டாக்டர் கிட்ட கேட்டப்போ ரொம்ப டென்ஷன்ல இருக்கன்னு சொன்னாரு. என்னாச்சுன்னு என்கிட்ட ஷேர் பண்ணலாம்னு நினைச்சா சொல்லு.” என்றான்.

ரஞ்சுவோ அவன் பேசியதைக் கேட்டு, உலக அதிசயமே தன் பக்கத்தில் நிற்பது போல அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்தாள். பின்னே, பார்த்த முதல் நாளே, வெறுப்பை அப்பட்டமாக காட்டியவனாயிற்றே! இப்படி கனிவான சொற்களை அவனிடமிருந்து சத்தியமாக ரஞ்சு எதிர்பார்த்திருக்கவில்லை.

அவளின் விரிந்த கண்கள் அவனை இம்சைப்படுத்த, அவள் முகத்தில் படிந்திருந்த தன் கண்களை வேறு பக்கம் திருப்பி, மீண்டும் செருமினான்.

மீண்டும் அவனின் வார்த்தைகளை தனக்குள் ஓட்டிப் பார்த்தவள், அன்றொரு நாள் சஞ்சீவிடம் தான் கூறிய அதே வார்த்தைகள் இன்று சஞ்சய் கூறியிருப்பதை உணர்ந்தாள்.

அவளிற்கும் நடந்ததை யாரிடமாவது சொல்லி மனதிலுள்ள பாரத்தை இறக்கி வைக்க வேண்டும் என்று தோன்றியது. சஞ்சு மற்றும் தர்ஷு இருந்திருந்தால், அந்த சம்பவம் நடந்த நொடியே நடந்ததைக் கூறி ஆறுதலாக அவர்களின் தோளில் சாய்ந்திருப்பாள். ஆனால், மூளை மந்தமாகிய இன்று அவர்களைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்று கூட தோன்றாது அமைதியாக இருந்தாள்.

இப்போது அந்த ஆறுதலான தோளாக அவன் தெரிய, ஏன், எதுக்கு என்று யோசியாமலயே நடந்ததைக் கூறத் துவங்கினாள்.

அவள் கூறிய அனைத்தையும் பொறுமையாக கேட்டவனிற்கு, சுயநலமாக சிந்தித்த அவளின் ‘முன்னாள்’ பெற்றோரின் மீது கோபமாக வந்தது.

இப்படிப்பட்டவர்கள் எதற்காக குழந்தையை வளர்க்கும் பொறுப்பை ஏற்க வேண்டும்? இப்படி பாதி வழியிலேயே விட்டுவிட்டு செல்ல வேண்டும்?

அவன் மனமோ, ‘அவளும் கிட்டத்தட்ட உன் நிலைமைல தான் இருக்கா. உனக்காவது குடும்பம்னு சொல்லிக்க சஞ்சு இருக்கான். அவளுக்கு அப்பா, அம்மான்னு இருந்தும் இல்லாத நிலைமை!’ என்று யோசித்துக் கொண்டிருந்தது.

“கடைசியா போகும் போது சொன்னாங்க பாருங்க, உன்னை நாங்க அப்படியே விட்டுட விரும்பல, உனக்கு பணமும் வீடும் பங்கு போட்டுருக்கோம்னு. ச்சே, நான் அவங்க கிட்ட எதிர்பார்த்தது பணமும் வீடுமா? என்னை இத்தனை வருஷமா வளர்த்துருக்காங்களே, இது கூடவா தெரியல?” என்று அழுகுரலில் கூறியவளை வருத்தத்துடன் பார்த்தவன், ஆறுதலாக தோளோடு அணைத்துக் கொள்ள, அவளும் இருக்கும் இடம், சூழல் அனைத்தையும் மறந்து அவன் தோளில் சாய்ந்து கண்ணீர் வடித்தாள்.

இருவரும் தங்களை மறந்திருந்த நேரம், சஞ்சயின் அலைபேசி ஒலியெழுப்ப, அதில் தான் நிகழ்விற்கு வந்தனர் இருவரும்.

‘ச்சே, இப்படி அவர் தோள்ல சாஞ்சு அழுத்துட்டு இருந்துருக்கேன். என்னைப் பத்தி என்ன நினைப்பாரு!’ என்று அவளும், ‘நானா இப்படி ஒரு பொண்ணை தோள்ல சாச்சு ஆறுதல் சொல்லிட்டு இருக்கேன்?’ என்று அவனும் நினைத்து, ஒருவரையொருவர் பார்க்காமல் தவிர்த்தனர்.

அலைபேசியில் ‘சஞ்சு’ என்ற பெயர் மின்ன, அதை உயிர்ப்பித்து காதில் வைத்தவன், கதவைத் திறந்து வெளியே சென்றான்.

“ஜெய்… என்னாச்சு? இவ்ளோ நேரமாச்சு, நீயே போன் பண்ணுவன்னு நினைச்சேன்.” என்று மறுமுனையில் பேசிய சஞ்சீவின் குரலில் பதட்டம் லேசாக எட்டிப் பார்த்தது.

“இங்க ஒரு ப்ராப்ளம் சஞ்சு.” என்று ஆரம்பித்த சஞ்சய், ரஞ்சு கூறியவற்றை அவனுடன் பகிர்ந்துக் கொண்டான்.

“ப்ச், என்ன மனுஷங்க ப்ரோ இவங்க? இப்படி வளர்த்த பொண்ணையே தனியா விட்டுட்டு போயிருக்காங்க. இப்போ ரஞ்சு எப்படி இருக்கா?” என்றான்.

“ரொம்ப குழப்பத்துல இருக்கா சஞ்சு. அவளைப் பார்க்க பாவமா தான் இருக்கு.” என்று சஞ்சய் கூறியதும், “நான் வரேன் ஜெய்.” என்று எழுந்து விட்டான் சஞ்சீவ்.

“சஞ்சு, உன் கண்டிஷன் என்னன்னு திரும்ப திரும்ப ஞாபகப்படுத்தனுமா?” என்று பல்லைக் கடித்துக் கொண்டு சஞ்சய் வினவ, மறுமுனையோ மௌனத்தில் ஆழ்ந்தது.

“ஹலோ…” என்று சஞ்சய் குரலுயர்த்த, “அவளைத் தான் உனக்கு பிடிக்காதே. அதான் தனியா கஷ்டப்படுவன்னு…” என்று முணுமுணுத்தான் சஞ்சீவ்.

“ப்ச், என்னை இரக்கமில்லாதவன்னு நினைச்சுட்டியா சஞ்சு? இப்படி கஷ்டத்துல இருக்குறவங்க கிட்ட கோபத்த காமிக்குற சாடிஸ்ட்னு நினைச்சியா?” என்று மேலும் சஞ்சய் வினவ, “இப்போ கூட சாடிஸ்ட்டா தான் பிஹேவ் பண்ற ஜெய்!” என்றான் சஞ்சீவ் அலுப்புடன்.

அவன் கூறியதைக் கேட்ட சஞ்சய் அதிர்ந்து பேசாமலிருக்க, அந்த இடைவெளியை பயன்படுத்திக் கொண்ட சஞ்சீவ், “நான் கூட கஷ்டப்பட்டுட்டு இருக்கேன். ஆனா, என்னை திட்டிட்டு தான இருக்க? அப்போ நீ சாடிஸ்ட் தான ப்ரோ?” என்று பாவமாகக் கூற, அவனைத் திட்ட முடியாமல், “சஞ்சு…” என்று பல்லைக் கடித்தான் சஞ்சய்.

அவன் பேச்சை வேறு பக்கம் திருப்புவதற்குள் சஞ்சய், “அவளோட பிரெண்ட்ஸ் கிட்ட சொல்லி அவங்களை வர சொல்லு சஞ்சு. மேபி அவங்க கூட ஃப்ரீயா இருப்பா.” என்றான்.

“ஸ்யூர் ப்ரோ. அவங்க கிட்ட சொல்றேன். அவங்க வரவரைக்கும் பார்த்துக்கோ.” என்று அழைப்பை அணைத்தான். அந்த கடைசி வரியை ஏனோ சஞ்ஜயை அழுத்த, ‘ஏன் அவன் சொல்லாம நான் பார்த்துக்க மாட்டேனா?’ என்ற உரிமையுணர்வு அவனிற்கே தெரியாமல் தோன்றியது.

அதே குழப்பத்துடன் உள்ளே சென்றவனை வரவேற்றது அவளின் குழப்ப முகம்.

‘இவ சும்மா சும்மா யோசிச்சு குழம்பிட்டு இருக்காளே!’ என்று அவளின் சிந்தனையை அறியாமல் யோசிக்க, அவளோ மற்ற பிரச்சனைகளை விடுத்து, அவன் தோளில் சாய்ந்திருந்தற்காக திட்டுவானோ என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.

“க்கும், நடந்ததயே நினைச்சு குழம்பிட்டு இருக்காத. உன் வாழ்க்கை நீ தான் வாழனும். உன்னை வேணாம்னு விட்டுட்டு போனவங்களை பத்தி யோசிக்காம, உன்கூட இருக்குறவங்களை யோசி.” என்றான் சஞ்சய்.

ரஞ்சுவும் அவனின் கூற்றை ஏற்றுக் கொள்வது போல தலையசைத்தாள்.

அப்போது தான் அவளிற்கு தன் தோழிகள் நினைவும், மலர் மற்றும் வசுந்தராவின் நினைவும் வந்தது. இந்த விஷயங்களை அவர்களிடம் சொல்லவில்லையே என்று எண்ணிக் கொண்டிருக்கும்போதே மலர் உள்ளே வந்தார்.

“ரஞ்சு…” என்று அழைத்தவாறே வந்தவர், கட்டிலில் அவள் சோர்ந்து அமர்ந்திருக்கும் நிலை கண்டு, “உன்னை இப்படி தனியா விட்டுட்டு போக எப்படி டா அவங்களுக்கு மனசு வந்துச்சு? ச்சே, நானும் ஊர்ல இல்லாம போயிட்டேனே. உங்க பக்கத்து வீட்டுக்காரங்க போன் பண்ணி தான் விஷயம் தெரிஞ்சுது டா. உடனே வந்துட்டேன்.” என்று புலம்ப ஆரம்பிக்க, சஞ்சய் அவர்களுக்கு தனிமை கொடுக்க விரும்பி வெளியே வந்துவிட்டான்.

மலரைக் கண்டவளிற்கு மீண்டும் கண்கள் பனிக்க, அவரை அணைத்துக் கொண்டு, “நான் அவங்க பொண்ணு இல்லன்னு என்னை விட்டுட்டு போயிட்டாங்க ஆன்ட்டி. என் அம்மா நான் பிறந்ததும் இவங்க கிட்ட கொடுத்துட்டு போயிட்டங்களாம். இப்போ இவங்களும் என்னை தனியா விட்டுட்டு போயிட்டாங்க. அப்போ யாருக்கும் நான் தேவை இல்லல.” என்று விசும்பினாள்.

அதைக் கேட்டவரின் கண்களும் கண்ணீரைப் பொழிய, அவளின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவரின் இதயத்தை தாக்கியது.

வெளியில் இருந்தவனிற்கோ, கதவிடுக்கின் வழியே அவள் பேசிய வார்த்தைகள் கேட்க, அவளின் கண்ணீரை துடைக்க கைகள் பரபரத்தன. முயன்று கட்டுப்படுத்திக் கொண்டவனிற்கு மனதைக் கட்டுப்படுத்தும் வழி தான் தெரியவில்லை.

“எனக்கு யாருமில்ல சஞ்சு. குழந்தையா இருக்கும்போதே என்னை அந்த அநாதை ஆசிரமத்து வாசல்ல விட்டுட்டு போயிட்டங்களாம். ஸ்கூல்ல எல்லாரும் அவங்க பேர் சொல்லும்போது அப்பா பேரையும் சேர்த்து செல்லும்போதெல்லாம் எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும் தெரியுமா? என் பிரெண்ட்ஸ் எல்லாரும், அவங்க அம்மா இது நல்லா சமைப்பாங்க, அது நல்லா சமைப்பாங்கன்னு சொல்லும்போது எனக்கு மட்டும் ஏன் அம்மா இல்லன்னு சாமிக்கிட்ட கேட்பேன். சாமிக்கு ஒன் வே கம்யூனிகேஷன் தான் போல! ஹ்ம்ம், இதுவரைக்கும் நான் கேட்ட கேள்விக்கு பதிலே இல்ல. நீயே சொல்லு சஞ்சு, பிறந்தப்போவே நான் என்ன பாவம் செஞ்சேன்னு இப்படி ஒரு தண்டனை?” என்று கதறியவளை தோளோடு அணைத்து சமாதப்படுத்தினான் சஞ்சய்.

“என் ஷ்ரே பேபி ரொம்ப போல்டுன்னு நினைச்சேனே. இப்படி அழுதுட்டு இருக்காங்களே? இனிமே இப்படி ஒரு கவலை உனக்கு வரக்கூடாது. இதோ உனக்கு நான் இருக்கேன், சஞ்சு இருக்கான். உனக்குன்னு ஒரு ஃபேமிலி இருக்கு. இனி இப்படி அழக்கூடாது சரியா?” என்று வினவியவனை நிமிர்ந்து பார்த்தவள் ஒற்றை சிரிப்புடன் தலையசைத்தாள்.

“தம்பி… தம்பி…” என்று யாரோ அழைக்கும் சத்தத்தில் சிந்தனையிலிருந்து வெளிவந்தவன், அருகில் பார்க்க மலர் தான் நின்றிருந்தார்.

“ரொம்ப தேங்க்ஸ் தம்பி. நீங்க தான் ரஞ்சுவை ஹாஸ்பிடல் கூட்டிட்டு வந்தீங்கன்னு சொன்னா.” என்றவர் பிறகு என்ன நினைத்தாரோ, “நீங்க ரஞ்சுவுக்கு எப்படி பழக்கம் தம்பி?” என்றார் ஆராய்ச்சி பார்வையுடன்.

முதலில் சற்று தயங்கினாலும், தொழிலில் பல சவால்களை சமாளித்தவன் ஆயிற்றே. சஞ்சுவும் ‘த்ரீ ரோசஸும்’ பழகியவற்றை அறிந்தவன் என்பதால், அந்த இடங்களிலெல்லாம் தன்னையும் இணைத்துக் கொண்டு கதை புனைந்து விட்டான்.

மேலும், அவர்களின் பண்ணை வீடு ஒன்று இந்த ஊரில் இருக்கிறது என்றும், அதைப் பார்த்துவிட்டு, அப்படியே ஊருக்கு வந்திருப்பதாக கூறிய ரஞ்சுவையும் பார்க்கவே வீட்டிற்கு சென்றதாகவும் அவருக்கு சந்தேகம் வராதவாறு கூறினான்.

மலரும், ஆண் – பெண் நட்பை எதிர்க்கும் பிற்போக்குவாதி அல்ல. பெண்கள் மூவரின் மீதும் அவ்வளவு நம்பிக்கை! சரி எது, தவறு எது என்பதை பகுத்தறியும் குணம் அவர்களுக்கு இருப்பதாக நம்பினார். மேலும், சஞ்சயின் மரியாதையான தோற்றமும், அவருக்கு அவன் மீது நன்மதிப்பை அளித்தது.

“அப்படியா தம்பி? இந்த பொண்ணுங்க எல்லாத்தையும் சொல்லுங்க, இதை சொல்லாம விட்டுச்சுங்க. மூணு பொண்ணுங்களும் தனியா இருக்காங்களேன்னு அடிக்கடி மனசு பதறும். பரவால உங்களை மாதிரி நல்ல மனுஷங்களோட நட்பை சம்பாதிச்சுருக்குங்க.” என்று கூறினார் மலர்.

சஞ்சய்க்கு அவரை ஏமாற்றுவது மனதிற்கு வருத்தமளித்தாலும், இப்போது இருக்கும் சூழலில் வேறெதுவும் பேசி அவர்களை கலவரப்படுத்த விரும்பவில்லை.

அவன் முடிவெடுத்துவிட்டான், இனி ரஞ்சு மற்றும் அவளை சுற்றியிருப்பவர்களுக்கு அவனே பாதுகாப்பு வழங்க முடிவெடுத்து விட்டான். இந்த முடிவு, சஞ்சு தேவையில்லாமல் ரஞ்சுவை இவர்களின் பிரச்சனையில் இழுத்து விட்டதலா, இல்லை அவன் மனதில் ரஞ்சுவின் மீது ஏற்பட்ட சலனத்தினாலா என்பது அவனிற்கே சரிவர தெரியவில்லை.

“தம்பி, நான் கொஞ்சம் கேண்டீன் வரைக்கும் போயிட்டு வரேன். அதுவரைக்கும் பார்த்துக்குறீங்களா? சாரி தம்பி, உங்களுக்கும் வேலை இருக்கும்…” என்று அவர் இழுக்க, “பரவால ஆன்ட்டி, நீங்க போயிட்டு வாங்க.” என்று அனுப்பி வைத்தான்.

*****

மலர், அவரின் சொந்த ஊருக்கு ஒரு விழாவிற்கு சென்றிருக்க, விழா முடிந்து விருந்து சாப்பிடப் போகும் நேரம், ரஞ்சுவின் பக்கத்து வீட்டுக்காரர்களிடம் இருந்து அழைப்பு வந்தது.

அதில் சாப்பிட கூட செய்யாமல் அடித்து பிடித்து ஓடி வந்ததால், இப்போது அவருக்கு பசியுடன் தலை வலிக்கவும் செய்தது. கேண்டீனில் சூடான தேநீரை வாங்கிப் பருகியவர் மனதில் ரஞ்சுவின் கேள்விகள் சாட்டையடியாக இருக்க, தன் தலையெழுத்தை நொந்தவாறே, ரஞ்சுவிற்கு பாலை வாங்கிவிட்டு வெளியே நடந்தார்.

கவனமில்லாமல் நடந்து கொண்டிருந்தவரை எதிரே வந்த பெண் இடித்துவிட, பால் கீழே சிந்திவிட்டது. தன்னை நொந்து கொண்டே, அந்த பெண்ணிடம் மன்னிப்பு கேட்க திரும்பியவர், அங்கு வேகவேகமாக சென்றவளை நோக்கி, “ஹே ரஞ்சு, எங்க போற?” என்று வினவினார்.

அந்த பெண்ணோ, பதட்டத்துடன் அங்கிருந்து விரைந்து சென்று விட்டாள். குழப்பத்துடன் நின்றிருந்தவரை நோக்கி வந்த சஞ்சய், “என்னாச்சு ஆன்ட்டி, ஏன் இங்கயே நின்னுட்டீங்க?” என்று வினவினான்.

“அது நம்ம ரஞ்சுவுக்கு பால் வாங்கிட்டு வந்தேன். ஏதோ நினைப்புல எதிர்ல வரவங்களை பார்க்காம இடிச்சுட்டேன். சாரி சொல்ல திரும்புனா, ரஞ்சு தான் நான் கூப்பிட கூப்பிட நிக்காம போயிட்டா.” என்று குழப்பத்துடன் கூறினார்.

அவர் கூறியதைக் கேட்டவனின் மனதில் மணியடிக்க வாயோ, “ஷ்ரேயா!” என்று முணுமுணுத்தது.

 

காதல் கொள்வோம்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
8
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்