Loading

        பகுதி-24

 

 

காவல்துறையினர் முத்தரசனை வேதாந்தின் புகாரின் அடிப்படையில் கைது செய்ய அதற்குள் சிலர் உள்ளே நுழைந்து  முத்தரசனை அவர்கள் பிடித்தனர். 

 

“நீங்க யாரு…?” என்றதும் அடையாள அட்டையைக் காண்பித்து விட்டு ,”சிபிஐ” என்றனர்.

“சார் நான் எந்தத் தவறும் செய்யவில்லை என்னை ஏன் இவ்வளவு பெரிய ஆட்கள் எல்லாம் பிடிக்க வந்தீங்க…? வனஜா , ஜீவன் சொல்லுங்க “என்று முத்தரசன் அலறினார்.

 

“ஆமாம் அவர் நல்லவரு நீங்க அவரை விடுங்கள்”  என்று வனஜா கத்தினார்.

 

வனஜாவின் கன்னத்தில் இடியென இறங்கியது மணிமேகலையின் கை.

மேகாவோ, “ச்சீ நீயெல்லாம் ஒரு பொம்பளையாடி !!, .ஏதாவது பேசின கொன்னு பொதைச்சிடுவேன். என் அண்ணனை ஏமாத்திட்டு இவன் கூடக் கூத்தடிச்சுட்டு இப்போ இவனை ஏமாத்தி மறுபடியும் ஒட்டிக்கப் பார்க்கிறியா…!! பொறுக்கி” என்று கத்தியபடி வனஜாவை உலுக்கினார் .

“அத்தை விடுங்க ! ஒரு நிமிஷம் நான் சொல்றதை கேளுங்க அதுக்கப்புறம் பேசுங்க… ” வலுக்கட்டாயமாக மேகாவை விலக்கி விட்டான் ஜீவன்.

“என்னடா சொல்லப் போற…? இவ உத்தமி. நான் கூட்டி வந்து அம்மாவா வச்சுக்கிறேன் னு சொல்லப் போறீயா …!!”என்று அவனை அடிக்கப் பாய,  கதிர்வேலன் தடுத்து நிறுத்தினார்.

கதிர்வேலன் தான், “விடும்மா நாம தான் சரியான நேரத்தில் வந்து விட்டோமே அவனுக்குச் சொல்லி புரிய வைக்கலாம்”  என்று சமாதானம் செய்தார்.

“என்னை விடுங்க,  இவளால என் அண்ணன் பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சம் இல்ல…”  என்று கத்தி விட்டு மீண்டும் வனஜாவை அடிக்கப் பாய ,தேவான்ஷி அவரைத் தடுத்து நிறுத்தி விட்டு நேரே ஜீவனிடம் நின்றாள்.

‘அவள் என்ன சொல்வாள்  …!!’என்று பார்க்க ,அவளோ ,”ஜீவ் ஏதோ திட்டம் போட்டு இருக்கீங்கனு மட்டும் தெரியுது பட் அதை எங்களுக்கும் சொல்லிட்டா நாங்க நிம்மதியாக இருப்போம் “என்றாள்.

ஜீவனின் முகத்தில் புன்னகை அரும்பியது. எல்லோரும் இருக்கிறார்கள் என்று கூடத் தோன்றவில்லை அவனுக்கு. தன்னோடு இழுத்து தோளோடு அணைத்துக் கொண்டு நெற்றியில் இதழ் பதித்தவன்,” தாங்க்ஸ் ஆன்ஷி உனக்காவது என்னைப் புரிந்ததே”  என்றவனோ…  திரும்பி சிபிஐ அதிகாரிகளைப் பார்த்தான்.

அனைவரும் ஒரு சேர சல்யூட் அடித்து விட்டு  , “சார் எல்லாம் தயாராக இருக்கிறது “என்று உரைத்தனர்.

கூட்டத்தை விலக்கிக் கொண்டு செல்ல முத்தரசனின் சீடன் நல்லசிவம் வேகமாகச் சல்யூட் அடித்து “ஃப்ரெஷ் ஆகிட்டு வாங்க சார்” என்றான் புன்னகை முகத்துடன் .

ஜீவன் அழகாய் சிரித்து விட்டுக் குளியலறை நோக்கி சென்றவனோ ,சற்று நேரத்தில் எல்லாம் திரும்பி வந்தான். 

ஜீவப்ரியன் ஒரு கம்பீரமான காவல் அதிகாரியாக…அவன் பின்னாலேயே முத்தரசனின் சீடன் நல்லசிவம் வந்து கொண்டிருந்தான்.

அவனது நடையும் ,கம்பீரமும் அங்கிருந்த அனைவருக்கும் வியப்பை தந்தது என்றால் முத்தரசனுக்கு வியர்த்துக் கொட்டியது.

“சந்துரு ஒரு இடம் விடாம சர்ச் பண்ணி எல்லா டீடெயிலும் கலெக்ட் பண்ணியாச்சு தானே   … ?எதுவும் விட்டுப் போகலையே…?”

“நோ சார்…  எல்லாம் கலெக்ட் பண்ணிட்டேன் பட் சார் ஒரே ஒரு தப்பு நடந்திடுச்சு அது நானே எதிர்பார்க்காதது” எனத் தடுமாறிய சந்துரு ஒரு அறையைக் கண் காட்டினான்.

உள்ளே நர்த்தனா மயக்கத்தில் கிடந்தாள். 

“என்ன சந்துரு அவ்வளவு தூரம் சொல்லியும் இப்படிக் கேர்லெஸா விட்டுட்டியே…!!   சரி நடக்குறது தான் நடக்கும்…  அத்தை ஒரு நிமிஷம் வாங்க” என்றவன் அந்த அறைக்குள் செல்ல மணிமேகலை புரியாமல் உள்ளே சென்றார்.

நர்த்தனா கிடந்த கோலத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மேகா ,”நர்த்தனா “என்று பதறியபடி அவள்  அருகில் சென்றார்.

“நர்த்தனா ! நர்த்தனா !! “என்று எழுப்ப ,”வயிறு வலி.. வயிறு வலிக்குது…  ம்மா…. ம்மா “என்று முனகியவளின் விழிகளின் ஓரம் கண்ணீர் வழிந்தது.

 

“ஜீவ் இவ எப்படி டா…? அதுவும் இந்த நிலையில் ?”  மேகாவிற்கு வார்த்தையே வரவில்லை.

“சாரி அத்தை !! இந்த ஒரு விஷயத்தை மட்டும் எங்களால பண்ண முடியவில்லை “என்று மன்னிப்பு கேட்டவன் உடனே மருத்துவ மனைக்கு நர்த்தனாவை கொண்டு செல்ல ஏற்பாடு செய்தான்.

“சார் சாரி சார் ஜீஸ் ல மாத்திரை கலந்து கொடுத்த பிறகு தான் எனக்கு விஷயமே தெரியும்…  இவனுங்க அந்தக் கலைந்த கருவை காளிக்கு பலியிட்டு அந்தப் பொண்ணு வயிற்றில் விளக்கேற்றனும் னு சொன்னாங்க நான் பயந்து போயிட்டேன்…  வேறு ஏற்பாடு செய்வதற்குள் போலீஸ் வந்துட்டாங்க ஐம் சாரி சார்… “என்று சந்துரு மன்னிப்பு கேட்டான்.

ஜீவன் பெருமூச்செறிந்தபடி ,”அடுத்தவங்களுக்குக் கெடுதல் நினைக்கிறவங்க கதி எல்லாம் இது தான் போல !!என்ன இவங்களோட பேராசையில் அந்தப் பிஞ்சுக்குழந்தை இந்தப் பூமியைப் பார்க்காமலேயே இறந்து போயிடுச்சு” என்றான் வருத்தமாக.

“சார் அடுத்து என்ன செய்வது…?” என்று கேட்க ஜீவன் முத்தரசனைப் பார்த்தபடியே “அரெஸ்ட் ஹிம்…  சந்துரு” என்று சொன்னதும் முத்தரசனை கைது செய்தான்.

முத்தரசனின் தலைமை சீடன் நல்லசிவம் . இல்லையில்லை இத்தனை நாளும் சந்நியாசி வேடம் பூண்டிருந்த சந்துரு .

முத்தரசனுக்குக் கைது செய்யப்பபடுவதைப் பற்றி எல்லாம் கவலை இல்லை .’இத்தனை நாளும் பாடுபட்டு ஏமாற்றிச் சம்பாதித்த மொத்த பணமும் போய் விடுமே’ என்ற கவலை தான் அவரைப் பீடித்துக் கொண்டது.

“கதிர் மாமா எல்லோரையும் அழைச்சுட்டு வீட்டுக்குப் போங்க,  பத்திரம் நான் வீட்டிற்கு வந்ததும் பேசிக்கலாம்” என ஜீவன் கூறியதும் கதிர் துரிதமாகச் செயல்பட்டு அவர்களை அழைத்துச் சென்றார்.

வேதாந்த் அசையாமல் நின்றிருக்க…  ஜீவனோ கனிவான முகத்துடன் ,”வேதா ப்ளீஸ் ! வீட்டுக்கு போ நான் வந்ததும் எக்ஸ்ப்ளைன் பண்றேன் ப்ளீஸ் டா…  தேவ் ஹேண்டில் ஹிம்…  சில விஷயங்கள் இல்ல பல விஷயங்கள் பேச வேண்டியது இருக்கு” என்றபடியே வேலையைக் கவனித்தான்.

பெண்காவலரிடம் கண் காட்ட ,வனஜாவை கைது செய்தனர் காவலர்கள்.

இளங்கோவன் விஜயா தம்பதியர் அங்கிருந்து செல்ல முற்பட  ஜீவன் அவர்கள் முன்பாக நின்றான்.

“உங்க ரெண்டு பேருக்கும் ஸ்பெஷல் ட்ரீட்மெண்ட் இருக்கு கிளம்புங்க …”என்று முறைக்க இளங்கோவனோ,” தம்பி நாங்க எந்தத் தவறும் செய்யவில்லை” என்று நெஞ்சு நிமிர்த்தி நிற்க தேவான்ஷி அவர்கள் முன்பு வந்து நின்றாள்.

“சார் இவங்க பெத்தப் பொண்ணுகளை நரபலி கொடுக்க முயற்சி செய்ததாகப் பாதிக்கப்பட்ட நான் புகார் தருகிறேன் கைது செய்ங்க “என்றாள் இறுக்கமாக.

“தேவான்ஷி நாங்க எந்தத் தவறும் செய்யவில்லை மா எங்களை நம்பு…!!  நான் நம்ம குடும்ப நலனுக்காகத் தான்” என்று இளங்கோவன் சொல்ல அனுகீர்த்திகா தேவான்ஷி இருவரும் கண்ணீருடன் பதில் உரைத்தனர்.

“ஆமாம் நீங்க எந்தத் தவறும் செய்யல.  உங்களுக்கு வந்து மகள்களாய்ப் பிறந்தது எங்களுடைய தவறு தான்…  ஒரு வேளை ஆண் பிள்ளையாகப் பிறந்திருந்தால் எங்களை விட்டு வச்சிருப்பிங்களோ ?, இதற்காகவா அவ்வளவு பாசத்தைக் கொட்டி வளர்த்தீங்க…?, எங்களைப் பத்து மாதம் சுமந்து பெற்ற நீங்க கூடக் கொல்ல துணிஞ்சுட்டீங்க இல்லம்மா,  முன்ன பின்ன தெரியாத இவங்க கூட எங்க மீது நம்பிக்கை பாசம் அன்பு வைத்து கூட வச்சு பார்த்துக்கிட்டாங்க ஆனா நீங்க…  வேண்டாம் உங்களைப் பார்க்க என்ன நினைக்கக் கூட விரும்பவில்லை நாங்கள் “என்று கண்ணீருடன் முடித்தாள் தேவான்ஷி.

அனைவரையும் கைது செய்து அழைத்து வந்தான் ஜீவன் எனும் ஜீவப்ரியன் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்களைத் தடுக்கும் தடுப்புப் பிரிவு அதிகாரி ஜீவப்ரியன்  .

வெளியே வரும் போது மீடியாக்கள் சூழ்ந்து கொள்ள வனஜாவின் முகத்திலும் விஜயாவின் முகத்திலும்  கருப்புத் துணியைப் போட்டார் பெண் காவலர் .

“மேடம் மீடியாவிற்கு ஃபேஸ் தெரியட்டும்…!!,  இப்படி ஒரு கேடு கெட்ட பெண்ணும் அம்மா என்ற ஸ்தானத்தில் இருந்திருக்காங்கனு எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும்” என்று இறுக்கமாகக் கூறி விட்டு முன்னே நடந்தான் ஜீவப்ரியன்.

தனியறையில் அமர வைக்கப்பட்டு இருந்தான் முத்தரசன் இல்லயில்ல ஸ்ரீ ஸ்ரீ இஷ்டலஸ்டியானந்தா .

அவனின் அருகில் வனஜா,  ம்ஹூம் இஷ்டலஸ்டி மடத்தின் தலைவி , பரந்தாமனின் துணைவி,  நாற்காலியில் அமர வைக்கப்பட்டு இருந்தாள்.

ஜீவப்ரியன் இப்போது அரசியல் கட்சி தலைவர் பரந்தாமனின் வீட்டிற்குச் சென்று அதிரடியாகக் கைது செய்தான் அவரை.

“ஏய் நீ யார் மேல கை வைக்கிறனு தெரியுமா…? நான் அரசியல்வாதி “என்று மிரட்ட அவனோ திமிராகப் பதிலளித்தான்.

“நான் போலீஸ் டா…  அப்புறம் நீ கட்சி தலைவர் எல்லாம் இல்லை , உன்  போஸ்டிங்கை பிடுங்கி நல்ல தலைவனுக்குக் கொடுத்தாச்சு உன்னை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து கூட நீக்கியாச்சு உன்னை இப்போ யாரும் மதிக்க மாட்டார்கள்… அமைதியா வந்தா அழகா ஜீப்பில் வச்சு அழைச்சுட்டு போவேன் சவுண்ட் போட்டா ஜீப் பின்னாடி தாம்பு கயிறை கட்டி அதில் தரதரவென்று ஊரே வேடிக்கைப் பார்க்க இழுத்துட்டுப் போவேன் எப்படி வசதி…?? ” என்றதும் அவரோ அமைதி காத்தார்.

“சந்துரு இழுத்துட்டு வாங்க !!”என்றதும் பரந்தாமன் அவனைப் பார்த்து அதிர்ந்தார்.

“டேய் நீ.. நீ… நல்லசிவம் நீயா ..?தடுமாறினார் பரந்தாமன். .

“உன் விஷயத்தில் ரொம்பக் கெட்டசிவம் நான் தான் வா போகலாம் “என்று நக்கலடித்திட,  பரந்தாமனுக்குப் புரிந்து போனது கும்பலாகச் சிக்கி விட்டோம் என்று

இப்போது மூவரும் ஒரே அறையில் அமர வைக்கப்பட்டு இருந்தனர்.

“நம்ப வச்சு கழுத்தறுத்துட்ட இல்ல? , ஜீவன் நீ போலீஸா டா… ச்சே ! இவ்வளவு நாள் கண்டுபிடிக்க முடியாமல் போச்சே… டேய் நல்லசிவம் நீயும் இவங்க கூட்டத்துல ஒருத்தனா… உன்னை நம்பினோமே நம்பிக்கை துரோகி” என்று கத்திய பரந்தாமனுக்கு விழுந்தது பளாரென்று ஒரு அறை. 

 

 

 

 “நான் வாயைத் திற ன்னு சொன்னா தான் திறக்கணும்   மீறி திறந்தால்  நாக்கு நாய்க்கு டிஃபனா போயிடும் புரியுதா” சந்துரு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு மிரட்டினான்.

 

“அப்புறம் என்ன கேட்ட ?எதுக்கு டா நடிச்சு ஏமாத்தினனு தானே …  !! உன்னை ஏமாத்தி எப்படி டீடெயில் கலெக்ட் பண்றது…?நீ இதோ இந்த இஷ்டலஸ்டி ,அப்புறம் இந்தப் பொறம்போக்கு ,எல்லாரும் பண்ண தவறுகளை எப்படிக் கண்டுபிடிக்கிறது ? அதுக்குத் தான்… “என்ற சந்துரு வேகமாக ஜீவனிடம் திரும்பி,   “பாஸ் ஒரே ஒரு ரெக்வெஸ்ட்… இவனை ஒரே ஒரு அடி மட்டும் அடிச்சுக்கிறேனே ப்ளீஸ்…”

 

“டேய் இதுக்கெல்லாம் பர்மிஸன் கேட்க கூடாது போட்டுத் தாக்கு  …! கேட்டா அவனே கையில் வந்து விழுந்து தடம் பதிஞ்சிடுச்சு னு சொல்லலாம்… “என்றான் ஜீவன்.

“தாங்க் யூ பாஸ்…!!” என்ற சந்துரு முத்தரசனின் கன்னத்தைப் பழுக்க வைத்து விட்டான்.

அடித்த அடியில் சந்துருவிற்குச் சோர்ந்தே போனது.

“டேய் இது எதுக்குத் தெரியுமா? எப்போ பார்த்தாலும் என்னைக் கால் அமுக்கச் சொல்லுவியே அதுக்குத் தான்… பரதேசி… உன் காலை பிடிக்க வச்சுட்டியே டா… ” சலித்துக் கொண்டான் சந்துரு.

“போதும் விடு டா” என்றவன் அவர்களின் அடுத்த அத்தியாயத்தை ஜீவப்ரியன் எழுதினான்.

பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டவனோ  அவர்களது கேள்விகளுக்கு எல்லாம் பதில் அளித்தான்.

“சார்… நீங்களே இவ்வளவு ரிஸ்க் எடுத்து இந்தச் சாமியாரை கைது செய்து இருக்கீங்க, எதாவது உள் நோக்கம் இருக்கா ஐ மீன் யாராவது உங்களுக்குத் தெரிஞ்சவங்க ஐ மீன் உங்க ரிலேஷன் பாதிக்கப்பட்டு இருக்காங்களா ..?”என்று கேட்க

“ம்ம்ம்ஹ்ம் ஆமாம் தெரிஞ்சவங்க தான்…  ரிலேஷன் தான், இந்த நாட்டு மக்களைப் பாதுகாக்க தான் நாங்க இருக்கோம் அவங்க எல்லோரும் என் சொந்தங்கள் தான் உறவுகள் தான் அவங்களைப் பாதுகாக்க நானே களத்தில் இறங்க வேண்டியதாகபோச்சு… “

“சார் அவர் மக்களை ஏமாத்தினார் சரி. அரசியல் தலைவர் ஒருத்தரை கைது செய்து இருப்பதாகத் தகவல் கிடைத்ததே ” என்று மூத்த நிருபர் கேட்டதும்…  “ஆமாம் “என்று கூறி விட்டான் ஜீவன்.

“மடத்தில் இருந்து பெட்டி பெட்டியாக ஐநூறு ரூபாய் ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் கிடைத்ததாகத் தகவல் கிடைத்ததே …?”

“அரசியல் தலைவர் பரந்தாமன் தன்னிடம் இருந்த கருப்புப் பணத்தை எல்லாம் மாற்றுவதற்காக இந்தப் போலிச்சாமியாரை நாடி இருக்கார் அவர் மூலமாகப் பணம் பரிமாற்றம் நடந்து இருக்கு… ஒரு பெரிய பேங்க் மேனேஜர் மூலமாகச் செய்ய இருந்தாங்க…”எனும் போதே மூத்த பத்திரிகையாளர் ஒருவர் குறுக்கிட்டார்.  

“அப்படியா யார் அவர் எந்த ஊர் எந்தப் பிராஞ்ச் அவரைக் கைது செஞ்சுட்டிங்களா…?” என்று கேட்க

“வெயிட் மேடம் ஏன் இத்தனை கேள்வி கேட்குறீங்க… ? நாங்க எல்லாம் ப்ளான் பண்ணி தான் இந்த ஐநூறு கோடியையும் போலிச் சாமியாரையும் பிடிச்சு இருக்கோம்…” என்றவன் பத்திரிக்கையாளர்கள் புறம் திரும்பி உங்களுக்கு வேண்டிய தகவல் கிடைக்கும் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க இப்போதைக்கு இது போதும் என்று பேட்டியை முடித்துக் கொண்டான் ஜீவப்ரியன்.

மறுநாள் பத்திரிக்கைகளில் முத்தரசன் கைது செய்யப்பட்டதில் ஜீவன் சந்துரு மற்றும் அவர்களது குழுவில் இடம் பெற்ற அனைத்து அதிகாரிகளின் பங்கும் சிறப்பாக விளக்கப்பட்டிருந்தது.

ஜீவப்ரியன் வீட்டிற்கு வர மறுநாள் ஆகிப் போனது.

வேதாந்த் மட்டுமே அங்கே கூடத்தில் அமர்ந்திருந்தான்.

“வேத் ” என்று ஜீவன் அழைத்த மறுநொடி, அவனை அறைந்து இருந்தான் வேதா.

“டேய் நான் சொல்றதை கேளு டா ப்ளீஸ்… !!” ஜீவன் வேதாவிடம் கெஞ்சினான்.

“என்ன சொல்லப் போற ? இத்தனை நாளும் மொத்த குடும்பத்தையும் ஏமாத்திட்டு இருந்தேன் டா ன்னா, இல்ல அப்பாவோட மரணத்தைப் பயன்படுத்தி இவங்களை அரெஸ்ட் பண்ணேன்னு சொல்லப் போறியா…!! அவர் என்னடாப் பண்ணார் உனக்குச் சொல்லு, உன்னைப் பெத்தது ஒரு குற்றமா ? அவர் மரணத்தைப் பயன்படுத்தி இப்படித் தூக்கத்தில் இறந்தவரை நிம்மதியாக இருக்க விடாமல் பாடுபடுத்திட்ட இல்ல நீ அவர் உன்னைப் பெத்ததுக்கு எனும் போதே ” ஜீவன் கத்தினான்.

“அவர் இயற்கையா இறந்திருந்தா, நான் ஏன் டா இப்படிப் பைத்தியகாரன் மாதிரி சாமியார் பின்னாடி அலையப் போறேன் ?” எனக் கதறிட, வேதா அதிர்வாக ஜீவனைப் பார்த்தான்.

“என்னடா சொல்ற ? அப்பா… அப்பா… எப்படி இறந்தார்… ? ஜீவா விளையாடாதே ஜீவா… !!அந்த மனுசன் ஒரு பாவமும் அறியாதவர் அவனுடைய ஆன்மாவைக் கூடத் துன்பப்படுத்திடக் கூடாது டா விளையாடாதே… ” என்று அரற்றினான் வேதா.

“நான் ஏன் டா விளையாடப் போகிறேன்… அப்பாவை அந்தப் பொம்பளை தான் கொன்னுட்டா, அதனால தான் நான் இந்த விஷயத்தில் தீவிரமாக இறங்கினேன்” என்று அன்று நடந்ததை விளக்கினான் ஜீவன்

….. தொடரும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
9
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. Archana

      என்னது கொன்னுட்டாங்களா 😱😱😱😱 அடப்பாவி நல்ல இருந்த மனுஷனே எதுக்கு டா கொன்னீங்க😡😡😡😡😡 இதுக்கு அந்த சாமியர்லே இருந்து அந்தம்மா வயை பதில் சொல்லியே ஆகணும்😤😤😤😤

    2. Janu Croos

      என்னது அப்பாவ கொண்ணுட்டாங்காளா…அடிப்பாவி வனஜா நாசமாபோறவளே…ஏன்டி இப்படி பண்ண குடுகெட்டவளே. நீ எல்லாம் நல்லா இருப்பியா. உன்னால அந்த மறுஷன் எவ்வளவு அவமானப்பட்டாரு அத மீறி புள்ளைங்களுக்காக வாழ்ந்தவர இப்படி கொணீணுட்டிறேடிபாவி…நீ எல்லாம் நல்லாவே இருக்க மாட்டடி.