
யானை வந்து போன வயலாய் சிதைந்து இருந்தது அந்த இசைக்கூடம்…
அதை பார்க்க முடியாமல் தவித்து கிடந்தாள் இசையரசி.
பூஞ்சோலையாய் இருந்த இடம், அந்த காட்டான் வந்து போன பிறகு மயானமாகி போய்விட்டது.
ஆம் அவன் கால் வைக்கும் இடம் எல்லாம் கன்னி வெடியாய் மாறும் என அறியாத இசையோ அவனை நேருக்கு நேர் எதிர்த்தாள்.
இப்போது கூட அவனுக்கு அடிப் பணிய மனம் மறுத்தது. அவன் செய்த செய்ய போகின்ற எல்லா அட்டூழியத்திற்கும் பதிலுக்கு பதில் செய்ய தான் மனம் துடித்தது.
‘யூ வம்சி… உன்னை என்ன பண்றேனு பாரு டா’ என்று உள்ளுக்குள் கருவிக் கொண்டே உடைந்த பூந்தொட்டிகளை அகற்றி வைத்துவிட்டு மாடிக்கு போனாள்.
அங்கே இருந்த நடராஜர் சிலையை கண்டதும் அதுவரை இழுத்து பிடித்து வைத்து இருந்த அவள் கண்ணீர் அணை உடைந்தது.
அந்த சிலையின் முன்பு மண்டியிட்டவள் “அப்பா உன் நியாபகமாக கடைசியா எனக்கு மிஞ்சுனது, நீ கொடுத்த இந்த நடராஜர் சிலை தான்… இதையும் பறிக்க பார்த்தா நான் எப்படி பா தாங்குவேன்” என்று அவள் பெருங்குரல் எடுத்து அழ அவளை தேற்ற அங்கே யாரும் இல்லை.
☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️
விடியல் காலை பொழுது
மணி நான்கு…
ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் சந்திரிகா.
விடாமல் ஒலித்த காலிங் பெல் ஒலியில் அடித்து பிடித்து எழுந்தாள் அவள்.
அருகே உறங்கி கொண்டு இருந்த தன் தங்கையை கண்டாள்.
அவள் நித்திய நித்திரையில் இருக்க அவள் எழுந்து கொள்ளும் முன்பே வாசல் கதவை அடைந்தாள்.
யார் அது… இந்த நேரத்துலே என்ற கேள்வியுடன் கதவை திறக்க அங்கே பதிலாக நின்று இருந்தான் விக்ரம்.
“நீயா?” என அவள் அதிர்வாக கேட்க
“நானே தான்” என்றான் அவன்.
“எதுக்கு இங்கே வந்த?”
“போலீஸ் வீட்டுக்கு எதுக்கு வருவாங்க கம்ப்ளெயிண்ட் கொடுக்க தான்” என்றான் கண்களில் கூலர்ஸை மாட்டியபடி.
“இந்த விடியல் காலையிலே கூலிங் கிளாஸ் போட்டவன் நீயா தான் இருப்ப” என அவன் ஸ்டைலாக கண்ணாடி மாட்டிய விதத்தை பகடி செய்தவள் வேகமாக கதவை சாத்த முனைந்தாள்.
ஆனால் எவ்வளவு இழுத்தும் கதவு மூடப்படாமல் இருக்க கீழே குனிந்து பார்க்க அங்கே விக்ரமின் கால்கள் இரு கதவுகளுக்கு இடையே இருந்தது.
கோபமாய் அவள் நிமிர “என்ன கண்ணு… என்ன கம்ப்ளெயிண்ட்னு கேட்காம கதவை சாத்துற… இது நல்ல போலீஸ்காரிக்கு அழகா?” என்றான் விக்ரம்.
“நான் நல்ல போலீஸ்காரினு யார் உன் கிட்டே சொன்னது. மோசமானவள் நானு… என் கிட்டே வைச்சுக்காதா” என்று விரலை நீட்டி எச்சரித்தாள்.
“வைச்சுக்கிட்டா என்ன பண்ணுவ?”
“இருக்கிற மொத்த கேஸையும் தூக்கி உன் மேலே போட்டு உள்ளே தள்ளிடுவேன்”
“மேடம் நீங்க எஸ். ஐ ன்ற தை மறந்துட்டு கமிஷ்னர் ரேஞ்ச்க்கு பில்ட் அப் தர்றீங்க” என்றவன் “என் ஒத்தை கால் செருப்பை காணோம் கண்டுபிடிச்சு தாங்க” என கேட்க இவள் பல்லை கடித்தாள்.
“உனக்கு என்ன தான் பிரச்சனை. எதுக்கு காலங்காத்தாலயே ஏழரையை கூட்டுற. உனக்கு செருப்பு வேணும் அவ்வளவு தானே. காலையிலே நானே என் கை காசு போட்டு வாங்கி தாரேன்… இப்போ இடத்தை காலிப் பண்ணு” என்றவள் மீண்டும் கதவை அடித்து சாற்ற முற்பட அவள் கையை இறுக்கி பிடித்தான் இவன்.
அவன் பிடி வலுவாய் இருக்க அவள் முகத்தில் வலியின் சுணக்கம்.
“கையை விடு” என்றவள் அவன் பிடியை விலக்க முற்பட “பேசிக்கிட்டே இருக்கும் போது கதவை சாத்துறது என்ன பழக்கம். காலையிலே எட்டு மணிக்கு ரெடியாகிடு. தொலைஞ்ச என் செருப்பை தேடி போறோம். என் செருப்பு கிடைக்காத வரை உன்னை விட மாட்டேன். போயிட்டு வரேன்” என்றவன் சொல்லிவிட்டு நகர அவளது காலமோ நகராமல் நின்றது.
தெரியாமல் அவன் பாதையில் குறுக்கிட்டு விட்டோமோ என காலம் கடந்து யோசித்தவளுக்கு தெரியாது இனி அவள் காலத்தை மாற்ற போகும் காலன் அவன் தான் என்று.

