
சத்யாவின் மிரட்டலுக்கும் அழுகைக்கும் அருண் தனு இருவருமே அடிபணியவில்லை. வழக்கு தொடுக்கப் போவதாக லாயருடன் வந்து விட்டாள் சத்யா.
மகிழனை இதற்காக நீதிமன்றம் அலைய வைக்க வேண்டுமா என்று யோசித்த பிரதன்யா கணவனை பார்க்க அவனோ எரிச்சல் மிகுதியில் சத்யாவை முறைத்து நின்றான்.
“உண்மையை பேசுங்க சத்யா எதுக்காக திடீர் னு நீங்க மகிழனை கேட்கிறீங்க”என்று பிரதன்யா கேட்க
“அவன் என் மகன்”பழைய பஞ்சாங்கத்தையே பாடினாள் சத்யா.
“வாயை மூடிரு சொல்லிட்டேன்”என்று ஒருமையில் அவளைத் திட்டியே விட்டான் அருண்.
“ஏய்”என்று அவளின் கணவனை பார்வையிலேயே தள்ளி நிறுத்தியவன் “உண்மையை சொன்னா எங்களால முடிஞ்ச உதவியை செய்வோம். இல்லையா நீ டிப்ரஷன்ல இருக்கறதா இருந்ததா சொன்ன ஆடியோ ரெக்கார்ட் இருக்கு அதை வச்சு அப்புறம் நீ எழுதி வச்சுட்டு போன லெட்டர் எல்லாம் கோர்ட்டில் தந்து மகியை எங்களோட வச்சுக்க என்ன முடியுமோ அதை செய்வோம். உங்களுக்கு உங்க காரியம் பெருசுன்னா நாங்க சொல்றதை நீங்க கேட்டுத் தான் ஆகணும்”என்றான்.
சத்யா வேறு வழியின்றி உண்மையை உரைத்திருக்க ‘நீ இவ்வளவு தானா’ என்பது போல அவளை அற்பமாய் பார்த்தவன் “இப்போ அவன் மைனர். அவனால கையெழுத்தோ எதுவுமோ போட முடியாது தானே சட்டப்படி பதினெட்டு வயது முடியணுமே அதுக்குள்ள எப்படி அவனை கையெழுத்து போட வைக்க முடியும் நீங்க”என்று கேட்க
“மகிழனை வளர்த்து தான் அந்த சொத்தை நாங்க அனுபவிக்க முடியும் அதுக்காக தான்”என்று நிறுத்த
“பெத்த புள்ளையை பணத்துக்காக வளர்க்கிறேன் னு சொல்ற பாரு நீ கிரேட் அம்மா தான்”என்றான் இரு பொருள் பட
“நீ என்ன வேணும்னாலும் சொல்லிக்க அருண். அதை பத்தி எனக்கு கவலை கிடையாது. என் அப்பா கடைசி நேரத்தில் அப்படி ஒரு முடிவுக்கு வருவாங்கனு எங்களுக்கு தெரியாது. நான் என்னை பற்றி விளக்கம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. என் சூழ்நிலையில் இருந்து பார்த்தா தான் அது உங்களுக்கு புரியும்.”என்றவள் “இப்போ சொல்லுங்க மகிழனை தர முடியுமா முடியாதா.”என்றாள் அழுத்தமாக.
“நிச்சயம் தர மாட்டேன். நீங்க ஆயிரம் சொன்னாலும் அதை ஏத்துக்கிற மனசு எங்களுக்கு இல்லை. மகிழனை நீங்க வளர்க்கிறதா கணக்கு வேணும் னா காட்டிக்கங்க. உங்களை மாதிரி ஒரு ஆள் கிட்ட என் அண்ணன் பையன் வளர எனக்கு சம்மதம் கிடையாது”என்றான் அருணும் தீர்மானமாக.
“அவ்வளவு கல்நெஞ்சக்காரின்னா நானே மகிழனை சந்திக்காம இதை செஞ்சு இருப்பேனே. உன் கிட்ட வந்து நிற்க வேண்டிய அவசியம் வந்திருக்காது. மகிழன் எனக்கு வேணும் அருண் அவ்வளவு தான்”என்றாள் சற்று கோபத்துடன்.
“வாய்ப்பு இல்லை. என் பையன் உங்களைப் பார்த்து பயப்படுறான். நைட் எல்லாம் தூங்காம உங்க கிட்ட அனுப்பிட வேணாம் னு உளறுறான் அதைப் பார்த்தும் நான் எப்படி உன்னோட அனுப்ப முடியும்.”என்றவன் சட்டென” ஒண்ணு வேணும்னா செய்யலாம்”என்று நிறுத்த
என்ன அது என்பது போல இருவரும் பார்க்க “ஒரு பத்திரம் ரெடி பண்ணுங்க வருங்காலத்தில் நானோ அல்லது என்னைச் சேர்ந்தவங்களோ அப்புறம் அந்த சொத்திற்கு உரிமைப்பட்ட மகிழனோ உங்க கிட்ட அந்த சொத்தை கேட்டு வர மாட்டோம்னு கையெழுத்து போட்டு தர்றோம். எங்க வளர்ப்பு அதை கேட்காது ஸோ மகி மேல வச்ச நம்பிக்கையால இந்த உத்தரவாதம் உங்களுக்கு நான் தர்றேன். ரெடி பண்ணுங்க நாங்க சைன் பண்ண தயார்”என்று முடித்துக் கொண்டான் அருண்.
சத்யாவிற்கும் அவள் கணவனிற்கும் இது சரியாக வரும் என்று தோன்றிட அவனிடம் சம்மதம் தெரிவித்து விட்டனர்.
பிரதன்யாவிற்கு இதில் உடன்பாடில்லை. ஆனாலும் அருணின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு நின்றாள்.
அவர்கள் பத்திரத்தோடு வருவதாக சொல்லிக் கிளம்பியதுமே பிரதன்யாவை பார்த்தான் அருண்.
“என்ன மேடம் நான் சொன்னதுல உங்களுக்கு விருப்பம் இல்லை போலருக்கு”என்று அவளை கேலி செய்ய
“அதான் உங்களுக்கேத் தெரியுதே”என்றாள் முறைப்பாக
அவளைத் தன் கைவளைவிற்குள் கொண்டு வந்தவன்”நீ இதை மகிக்காக யோசிக்கிறன்னு நல்லா புரியுது தனு. வருங்காலத்தில் அவன் ஏன் அந்த சொத்தை விட்டு தந்தீங்கனு கேட்டா என்ன செய்யறது அது தானே உன் யோசனை”என்று கேட்க ஆமென்று தலையாட்டினாள் பிரதன்யா.
“நான் அதை எல்லாம் யோசிக்காம இருப்பேனா தனு.”என்றவன் “மகியை நாம அப்படி வளர்க்க போறது இல்லை. இப்போ குட்டி பையன் அவன். பெரியவன் ஆனா இவங்களை எல்லாம் அவன் மறந்தே போயிடுவான்.அப்படியே தெரிஞ்சு கேட்டாலும் நாம பார்த்துக்கலாம். நான் என் வளர்ப்பில் கூட சந்தேகம் படுவேன் தனு. பட் உன் வளர்ப்பில் எனக்கு நூறு பர்சன்ட் நம்பிக்கை இருக்கு நீ அவனை நல்லா வளர்ப்ப”என்று நெற்றியில் இதழ் பதித்தான்.
அவனின் இதழொற்றலை பாந்தமாய் ஏற்றுக் கொண்டவள்”ஏதோ சொல்றீங்க. பார்க்கலாம்”என்றாள்.
“ஃப்யூச்சர் பத்தி அப்புறம் கவலைப்படலாம் இப்ப இந்த ப்ரசன்ட் பத்தி நினை.”என்று நெருங்கி அணைக்க அவனைத் தள்ளி விட்டவள் “போயிடுங்க ஆமா. “என்றாள் கோபத்தில்.
“ஏன் டி”என்றான் பாவமாக.
“ஹ்ம்ம் இந்த திங்க்கிங்கில் இருந்துட்டு இத்தனை நாளும் எங்களை வாட்டுனீங்களே அதுக்குத் தான்”என்றபடி அவனுள் ஒன்றியவள் “சும்மா பிரசாத்”என்று கண் சிமிட்டினாள்.
மகிழனின் பிரச்சினை இத்துடன் தீர்ந்ததே என்று இருவருக்கும் மனதில் மிகப் பெரிய நிம்மதி பரவ தங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டனர்.
**********
யுகாதித்தன் தேஜாவிடம் காசியாபாத் நான் செல்ல மாட்டேன் என்று தீர்மானமாக கூறி விட்டான்.
“இதை விட அவளை வேறு எதை பண்ணியும் அவமானப்படுத்த முடியாது அஸ்வி. நான் மட்டும் போய் திதி தந்தேன் அது மாதிரியான ஒரு கேவலமான செயல் வேறெதுவும் இல்லை. அவங்க என்ன வேண்டுமானாலும் நினைச்சுக்கட்டும். என்னைப் பொறுத்தவரை கவிலயா என் வாழ்க்கையில் வந்த தேவதை வானவில். கொஞ்ச நாள் இருந்தாலும் அவளை நான் தேவதையாக தான் பார்க்கிறேன். “என்றவன் எழுந்து தேஜாவை அணைத்துக் கொண்டு “என் வொய்ப்னா அது என் அஸ்வி மட்டும் தான். அவளுக்கான இடத்தை விட்டு தந்து என் கவியோட ஆன்மாவை நான் நிச்சயம் திருப்தி படுத்த மாட்டேன் அஸ்வி. அதை அவளே ஏத்துக்க மாட்டா. “என்றான் தவிப்புடன்.
“என்னை சிலர் சுயநலவாதினு கூட நினைப்பாங்க ஆதி. ஆனால் நான் இப்படி தான். என்னால அப்படி எல்லாம் உங்களை உங்களுக்காக கூட விட்டுக் கொடுக்க முடியாது ஆதி. “என்றாள் விசும்பலாக.
மனைவியை தன்னோடு இறுக்கி கொண்டவன் “லவ் யூ அஸ்வி.”என்றான் மனதின் அத்தனை தவிப்புகளையும் ஒரு சேர உடைத்து.
அஜிஸிற்கு அழைத்து தாங்கள் என்றுமே காசியாபாத் வரப் போவதில்லை என்று கூறியவன் “லயாவும் அதைத் தான் விரும்புவாள்”என்றான்.
“இட்ஸ் ஓகே யுகி. நீயாவது கவியை உயர்ந்த இடத்தில் வச்சிருக்கியே. உன் கூட வாழ தான் அந்த பொண்ணுக்கு குடுத்து வைக்கலைடா. கீப் இன் டச் ஆல்வேஸ் யுகி. “என்று இணைப்பைத் துண்டித்து விட்டான் அஜிஸ்.
அவனுக்கு யுகியின் முடிவில் துளியும் வருத்தம் இல்லை. மாறாக இப்படி ஒருவருடன் வாழ கவிலயாவிற்கு கொடுத்து வைக்கவில்லை என்று தான் ஆதங்கப்பட்டான்.
சஞ்சலங்கள் தீர்ந்த மகிழ்ச்சியில் இரு இணைகளும் தங்கள் வாழ்வை கவனித்தனர். காதலில் தோல்வியுற்ற இல்லை இல்லை காதல் ஏன் தோற்கப் போகிறது. காதலர்கள் தோற்றதில் மீண்டு தங்களுக்கான புதிய துவக்கத்தை ஏற்படுத்தி கொள்ள உண்மைக்காதல் அங்கே அழகாய் துளிர் விட்டது.
மறுமுறை செந்தாளம்பட்டி சென்றவர்களின் நெருக்கத்தில் இரு தாய்மார்களும் கவலையை விடுத்தனர்.
எல்லாவற்றுக்கும் தேஜாவை அழைத்தான் யுகாதித்தன். இருவரின் பேச்சும் பார்வையும் அவர்களின் புரிதலை பறைசாற்ற வேறென்ன வேண்டும் பெரியவர்களுக்கு. அதே போல் தான் அருணும் பிரதன்யாவும்.
பத்மநாபனுக்கு தேஜாவை விட பிரதன்யா மீதான அன்பு அத்தனை கூடியது. எந்த வயதுப் பெண் இப்படி யாரோ பெற்ற ஒரு பிள்ளைக்கு தாய்க்கு தாயாக இருந்து கணவனின் சுக துக்கங்களிலும் பங்கெடுப்பாள். என் மகள் செய்கிறாள் என்ற மகிழ்ச்சி அவரின் மனதை நிறைக்க செய்தது. கந்தசாமி என் மருமகள் என்று அத்தனை பூரிப்பாய் பேசினார் மற்றவர்களிடம்.
“ஏதோ ஒரு குருட்டு நம்பிக்கையில் தான் பொண்ணு கேட்டேன் மச்சான். ஆனா இவ்வளவு சந்தோவமா என் பையன் வாழ்வான்னு நான் நினைச்சதே இல்லை. எல்லாம் என் மருமகளால மட்டும் தான்”என்றார் நிறைந்த மனதுடன்.
“இந்த ஒரு வார்த்தை போதும் மாமா. பெத்தவன் எனக்கு குளுர்ந்து போச்சு.”என்ற பத்மநாபன் தூரத்தில் கணவனோடு நின்ற மகளை ஆதூரமாய் பார்த்தார். எத்தனையோ பேர் சிறு பெண்ணை இப்படி ஒரு இடத்தில் திருமணம் செய்து கொடுக்கிறீர்களே அவளுக்கு என்ன தலையெழுத்து வேண்டாம் என்று எல்லாம் சொல்லி இருக்க இன்னும் சிலர் அவளுக்கு என்ன குறையோ என்று தான் பேசினர். இன்னும் சிலர் இப்போது ஏற்று கொண்டதாலும் தங்களுக்கு என்று ஒரு பிள்ளை வருகையில் மகிழனை ஒதுக்கி விடுவர் என்றெல்லாம் பேசினர். ஆனால் அத்தனை பேச்சுக்களையும் தகர்த்தெறிந்து மகிழனை ராஜகுமாரனை போல வளர்த்தனர் அருணும் பிரதன்யாவும்.
இன்னும் தேஜஸ் வினி பற்றி ஒரு படி மேலான பேச்சுக்கள் தான் அங்கே நிலவியது.
“சொந்தத்துக்குள்ள பேசி கீசி அந்த பிள்ளையை கல்யாணம் பண்ணிட்டாங்க. இல்லாட்டி அதெல்லாம் அடங்கறதா”
“பையன் பேங்களூர் வேலை அவன் என்ன லட்சணத்தில் இருந்தானோ இங்கு வந்து இப்படி ஓடிப் போன பிள்ளையை கமுக்கமாக பேசி கட்டி வச்சுட்டாங்க பாரு. சொந்த பந்தம் நாளைக்கு எதுவானாலும் ஒண்ணுக்குள்ள ஒண்ணா போயிருவாங்க”
இப்படி எல்லாம் பேச்சுக்கள் நிலவினாலும் அதை எதையும் பெரிய வீட்டில் யாரும் கண்டு கொள்ளவில்லை.
வாழ்ந்தாலும் பேசும் தாழ்ந்தாலும் பேசும் ஊர் உலகம். ஒவ்வொரு பேச்சிற்கும் காது கொடுத்தால் நம்ம நிம்மதி போயிடும் எதையும் கண்டுகாகாம உங்க வாழ்க்கையை பாருங்க என்று சொல்லி இருந்தார் வெங்கடாசலம்.
காதலில் வீழ்ந்து அதிலிருந்து மீண்டு வந்தவர்கள் திருமணம் செய்யக் கூடாதா என்ன அல்லது வேறு வாழ்க்கை வாழக் கூடாதா என்ன… இங்கே மனம் தான் பிரதானமே ஒழிய மற்றவர்களின் பேச்சுக்கள் அல்லவே.
அதனை பெரியவர்களாக வெங்கடாசலம் கெஜலட்சுமி தம்பதியர் இளையவர்களுக்கு தெளிவாக புரிய வைத்து இருந்தனர். பெரியோர்களின் ஆசீர்வாதமும் ஆலோசனையும் இருக்கையில் இரு இணைகளும் சோடை போகுமா என்ன
…… தொடரும்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
3
+1
+1
