Loading

அத்தியாயம் 20

 

மென்மொழியின் இல்லம்…

 

மென்மொழியின் அன்னையிடம் இருந்து கிடைத்த தகவல் அனைவரையும் யோசிக்க வைத்திருந்தது.

 

குறிப்பாக மென்மொழி தீவிர சிந்தனையில் இருந்தாள். அவளின் அண்ணனாகிற்றே அகரன்!

 

அன்னை கூறியதை மீண்டும் மீண்டும் யோசித்துப் பார்த்தவளிற்கு, எவ்வாறு அதைப் புரிந்து கொள்வது என்று தெரியவில்லை.

 

கருப்பு நிறக்கல்லை எடுத்தது அகரன் என்றாலும், அதை அவனே எடுத்தானா இல்லை வேறு யாராலாவது கட்டுப்படுத்தப்பட்டு எடுத்தானா என்பதே பெரிய குழப்பமாக இருந்தது.

 

அவள் மனதிற்குள் யோசித்ததைச் சுடரொளி சத்தமாக வெளியே கேட்டிருந்தாள்.

 

“பிளாக் கல்லை எடுத்தது அகரனா இல்ல வேற யாரும் எடுக்க வச்சுருப்பாங்களா?” என்று சுடரொளி வினவ, “அகரன் எதுக்குக் கல்லை எடுக்கணும்? அவனுக்கு அதைப் பத்தி எதுவுமே தெரியாதே. வேற யாராவதுதான் அவனை எடுக்க வச்சுருக்கணும்.” என்று வேகமாகக் கூறிய யாழ்மொழி, யுகேந்திரனைப் பார்த்து, “தாத்தா சொன்னாங்களே… ஃபர்ஸ்ட் செட் கற்கள் யாரு கிட்டயோ இருக்குன்னு. ஒருவேளை, அவங்க கூட அகரனை செய்ய வச்சுருக்கலாமே.” என்று வினவினாள்.

 

அண்ணன் மீது விழும் பழியை போக்கி விடும் நோக்கம் அவளின் படபட பேச்சில் தெரிந்தது. இத்தனைக்கும், இருவரும் பேசி பல மாதங்களாகி இருக்கும்.

 

இதுதான், ‘தான் ஆடா விட்டாலும் தன் தசை ஆடும்’ என்பது போலும்!

 

“ரிலாக்ஸ் யாழ்மொழி, இங்க யாரும் உன் அண்ணனைப் பத்தி எந்த முடிவுக்கும் வரல.” என்ற யுகேந்திரன் மென்மொழியை நோக்கி, “நீ என்ன யோசிக்கிற மொழி?” என்று வினவினான்.

 

“அம்மா சொன்னதைத்தான் யோசிச்சுட்டு இருக்கேன் யுகேன். அகரன் ரெண்டு நாளா சரியில்லன்னு சொல்றாங்க. அதோட, இப்போ அவனைக் காணோம்னு வேற சொல்றாங்க. அவன் எங்க போனான்? அவனா போனானா, இல்ல யாரு கிட்டயாவது மாட்டியிருக்கானா? இது எதுக்கும் ஆன்சர் தெரியாம தலையைப் பிச்சுக்கலாம்னு இருக்கு.” என்றாள் மென்மொழி.

 

“ஆன்சர் தெரியலன்னா என்ன, இனிமே தெரிஞ்சுப்போம். ஃபீல் பண்ணாத.” என்று ஆறுதலாகப் பேசிய சுடரொளி, “ஆமா, உன் அண்ணி கிட்ட பேசுனியா? எப்படியும் உன் அம்மா, அந்த ராஜமாதா அவங்களுக்குத் தேவையானதை மட்டும்தான் சொல்லியிருப்பாங்க. முழு உண்மை தெரியணும்னா உன் அண்ணியை கான்டேக்ட் பண்ணு.” என்று யோசனை கூறினாள்.

 

அதை ஆமோதிப்பது போல மென்மொழி அலைபேசியை எடுக்க, அதற்குள் அவளின் அன்னை மீண்டும் அழைத்திருந்தார்.

 

அடுத்து என்னவோ என்ற பதைப்பதைப்புடனே அதை ஏற்ற மென்மொழியை எரிச்சலடையும் விதமாகவே இருந்தது அவளின் அன்னை சொன்னத் தகவல்.

 

“மொழி, இப்போதான் அகரன் கால் பண்ணான். ஏதோ வேலை விஷயமா மும்பை போயிருக்கானாம். வரதுக்கு ஒரு வாரமாகுமாம். உன் அண்ணி கிட்ட சொல்லிட்டுத்தான் போனானாம். ஆனா, அவ என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லல பாரேன். கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல. இதுக்குத்தான் நான் இங்கேயே இருக்கேன்.” என்று மறுமுனையில் இருந்தவளின் மனநிலை தெரியாமல் பேசிக் கொண்டே இருந்தார் அவர்.

 

அவர் கூறியதில் கடுப்பான மென்மொழியோ, “அம்மா, கொஞ்சம் நிறுத்துங்க… அகரனைக் காணோம்னு கால் பண்ணி எங்களை டென்ஷன் பண்ணிட்டு, இப்போ சாதாரணமா அவன் கால் பண்ணான்னு சொல்லிட்டு இருக்கீங்க. இதுல, அண்ணிக்கு பொறுப்பில்லன்னு கம்ப்லைன்ட் வேற! உங்களைப் பத்தி எனக்குத் தெரியாதா? அவங்களை எங்க நீங்க சொல்ல விட்டிருப்பீங்க? உங்களுக்கு உங்க பையன் மட்டும்தான கண்ணுக்குத் தெரிவான். மத்தவங்க எப்படி போனா என்ன? அவன் சொல்லாம போயிட்டான்னா, உடனே காணோம்னு எனக்குக் கால் பண்ணி சொல்றீங்களே… என்னைக்காவது அந்த அக்கறைல கொஞ்சம் என்மேலயும், யாழ் மேலயும் உங்களுக்கு இருந்துருக்கா? அப்படி இருந்துருந்தா, எங்களைத் தனியா விட்டுட்டு உங்க பையனோட போய் இருப்பீங்களா?” என்று கத்தி விட்டாள்.

 

கடந்த அரை மணி நேரமாக அவள் மட்டுமல்லாது, மற்றவர்களின் நிம்மதியும் அல்லவா பறி போயிருந்தது.

 

அதன் காரணமாக, பல வருடங்களாக மனதிற்குள் பூட்டி வைத்த கோபம் இப்போது மொத்தமாக வெளி வந்து கொண்டிருந்தது.

 

மென்மொழியைத் தெரிந்தவர்களிற்கு அவளின் இந்தக் கோபம் நியாயமாகவே பட்டது, யுகேந்திரன் உட்பட!

 

எனவே, யாரும் அவளைத் தடுக்க நினைக்கவில்லை. அவளிற்கு ஆதரவாகவே நின்றனர்.

 

ஆனால், அப்போதும் அவளைப் பெற்றெடுத்த அன்னைக்கு அவளின் வேதனை புரியவில்லை போலும்.

 

“இப்போ யாரு உங்களை அங்க தனியா இருக்கச் சொன்னா? என்னமோ உங்களைத் தண்ணி தெளிச்சு விட்ட மாதிரி பேசிட்டு இருக்க? எத்தனை முறை, அந்த வீட்டை விட்டுட்டு வான்னு சொல்லிருக்கேன். என்னமோ, நீதான் அதுக்கு கார்டியன் மாதிரியும், அதைக் கடைசி வரை பாதுகாக்கப் போறவ மாதிரியும் கொந்தளிச்ச… இப்போ என்னமோ நான்தான் தப்புங்கிற மாதிரி பேசுற! இதுக்குத்தான் போன முறை அகரன் சென்னை வந்தப்பவே, அந்த வீட்டுப் பத்திரத்தை எடுத்துட்டு வரச் சொன்னேன்…” என்று கோபமாகப் பேசியவர், இறுதியில் உளறி விட, அப்படியே நிறுத்திக் கொண்டார்.

 

ஆனால், அதைக் கேட்டு விட்ட மென்மொழியோ, “அப்போ அதுக்குத்தான் அகரன் அன்னைக்கு தாத்தா வீட்டுக்கு வந்துருக்கான்…” என்று சரியாகக் கூறிவிட, அதற்கு மேல் மறைக்க விரும்பாத அவளின் அன்னையும், “ஆமா, அதுக்குத்தான் வந்தான். ஏன் யாழ் உன்கிட்ட சொல்லல? அவளுக்கும் கால் பண்ணி ஹெல்ப் பண்ண சொன்னேன். எங்க, நான் பெத்த ரெண்டும் அந்த வேலையை ஒழுங்கா செய்யல.” என்று அலுத்துக் கொண்டார்.

 

அதில் மென்மொழியின் கோபம் அதிகரிக்க, “ஏன் அந்த வீட்டை விக்கணும்னு இப்படி மெனக்கெடுறீங்கம்மா? கொஞ்சமாவது தாத்தாவைப் பத்தியும் அவரோட ரிசர்ச்சைப் பத்தியும் யோசிச்சுப் பார்த்தீங்களா? அதுசரி, அப்பாக்கே இல்லாத அக்கறை உங்களுக்கு எங்கயிருந்து வரப்போகுது?” என்று பேசி விட்டாள்.

 

அதற்கு அவளின் அன்னையோ, “என்னடி யோசிச்சுப் பார்க்கச் சொல்ற? அவரு வேலை வேலைன்னே இருந்து, எங்களை எல்லாம் ஒதுக்கி வச்சதையா? இல்ல, அவரை மாதிரியே நீயும் அந்தப் பழைய கதை மேல பைத்தியம் பிடிச்சு சுத்திட்டு இருக்குறதையா? எதுக்கு அந்த வீட்டை விக்க மெனக்கெடுறேன்னு கேட்டியே… அதுக்குக் காரணம் நீதான்! அவரை மாதிரி, யாரும் வேண்டாம்னு நீயும் அதுக்குள்ள போயிடுவியோன்னு பயந்துதான் வேகவேகமா அந்த வீட்டை விக்க முயற்சி பண்றோம். அதெல்லாம் உனக்குத் தெரியாது! ஹ்ம்ம், அந்த மனுஷன் போறப்போ என்ன சொல்லிட்டுப் போனாரோ…” என்று புலம்ப ஆரம்பித்து விட்டார்.

 

“அவரு எதுக்கு அப்படி செஞ்சாருன்னு எதுவுமே தெரியாம எப்படிம்மா  அவரை ஜட்ஜ் பண்றீங்க நீங்க? ஈஸியா சொல்லிட்டீங்க, உங்களை ஒதுக்கி வச்சாருன்னு… அதுக்குக் காரணம் என்ன தெரியுமா? க்கும், சொன்னா மட்டும் புரியவா போகுது.” என்று விரக்தியாகக் கூறியவள், “தயவு செஞ்சு கொஞ்ச நாளைக்கு எனக்குக் கால் பண்ணாதீங்க!” என்று அழைப்பைத் துண்டித்து விட்டவள், அங்கிருந்த நீள்சாய்விருக்கையிலேயே பொத்தென்று அமர்ந்து விட்டாள்.

 

அவளருகே அமர்ந்த சுடரொளி அவளின் முதுகை நீவி அவளைச் சமன்படுத்த முயன்று கொண்டிருக்க, அவளோ தோழியிடம் புலம்பிக் கொண்டிருந்தாள்.

 

அவர்களிற்குத் தனிமை கொடுக்க வேண்டி ஆண்கள் அங்கிருந்து நகர்ந்து செல்ல முற்பட, அதே சமயம் யாழ்மொழியின் அலைபேசி ஒலியெழுப்பி அவர்களைத் தடுத்து நிறுத்தியது.

 

அலைபேசியைப் பார்க்காமலேயே யாரென்று தெரிந்தது யாழ்மொழிக்கு.

 

ஒரு விரக்திச் சிரிப்புடன் அதை ஏற்றவள், மறுமுனையில் இருந்த அவளின் அன்னை பேசுவதற்குள், “என்ன, மொழி கால் கட் பண்ணிட்டான்னு எனக்குக் கூப்பிட்டீங்களா?” என்று கேட்டு வைத்தாள்.

 

அதற்கு அவர் என்ன பதில் சொன்னாரோ, “வழக்கமா அப்படித்தான நடக்கும். என்னை அவளோட சப்ஸ்ட்டியூட் மாதிரிதான ட்ரீட் பண்ணுவீங்க?” என்ற யாழ்மொழி, “எனக்கு ஃபர்ஸ்ட் கால் பண்ண மாட்டீங்களான்னு ஏங்குனப்போ எல்லாம் கூப்பிடல… இப்போ எதுவும் வேண்டாம்னு யோசிக்கிறப்போ கூப்பிடுறீங்க… நான் செஞ்ச பெரிய தப்பு, அன்னைக்கு நீங்க கால் பண்ணி பத்திரத்தை எடுக்க சொன்னப்போ, என்னமோ என்னையும் மதிச்சு வேலை சொல்லிட்டீங்கன்னு சந்தோஷப்பட்டு, கொஞ்சம் கூட யோசிக்காம அதை செய்யப் போனதுதான்! அன்னைக்கு மட்டும் அங்கப் போகலைன்னா, இன்னைக்கு இந்த இக்கட்டுல மாட்டியிருக்க மாட்டோமோ என்னவோ!” என்றவளின் கண்களில் கண்ணீர் தேங்கி நின்றது.

 

அங்கிருந்த அனைவருக்கும் யாழ்மொழியின் இந்தப் பக்கம் புதியது. அவளை நன்கு தெரிந்தவர்களிற்குமே புதியதுதான்!

 

“பிளீஸ் கொஞ்ச நாள் எங்களை டிஸ்டர்ப் பண்ணாதீங்க.” என்று அழைப்பைத் துண்டித்த யாழ்மொழி, அங்கிருக்க விரும்பாமல் அவளின் அறைக்குச் சென்று விட்டாள்.

 

அனைவரும் அவள் சென்ற திசையையே பார்த்திருக்க, அவளைப் பின்தொடர்ந்து சென்றான் இன்பசேகரன்.

 

*****

 

கட்டிலில் மறுபக்கம் திரும்பி அமர்ந்திருந்த யாழ்மொழிக்கு இன்பசேகரனின் வரவு தெரிந்தே இருந்தது.

 

அவனைத் திரும்பிப் பார்க்காமலேயே, “கொஞ்ச நேரத்துல தெளிஞ்சுடுவேன் இன்பா. நீ போ.” என்றாள்.

 

அதையெல்லாம் கேட்காதவனாக, அவளருகே வந்து அமர்ந்த இன்பசேகரனோ, “எதுக்கு, அப்புறமா வந்து எனக்குன்னு யாரும் இல்லன்னு புலம்புறதுக்கா?” என்று அந்தச் சூழலிலும் அவளைக் குட்ட மறக்கவில்லை அவன்.

 

சிறிது நேரம் அவ்விடம் அமைதியாக இருக்க, யாழ்மொழியே பேச ஆரம்பித்தாள்.

 

“யாருக்கும் நான் முக்கியம் இல்லங்கிற எண்ணம் சின்ன வயசுல இருந்தே எனக்கு இருக்கு இன்பா. அதுக்கு அம்மாவோட இந்த ட்ரீட்மெண்ட்தான் காரணமான்னு எனக்குத் தெரியல. ஆனா, அந்த எண்ணம் என் ஆழ்மனசுல பதிஞ்சுருச்சு. அதனாலேயே எனக்குள்ள ஒரு இன்ஃபிரியாரிட்டி காம்ப்ளக்ஸ் உருவாகிடுச்சு. அதுலயிருந்து வெளிய வரதுக்கு ‘செல்ஃபிஷ்’ங்கிற பிம்பம் எனக்குத் தேவைப்பட்டுச்சு.” என்று முதல் முறையாக மனதைத் திறந்தாள் அவள்.

 

இன்பசேகரனோ, எதுவும் பேசாமல் அமைதியாக அவள் கூறுவதைக் கேட்க ஆரம்பித்தான்.

 

“எனக்கும் எல்லாரோடவும் பழக ஆசைத்தான் இன்பா. சுடர் மாதிரியான ஃபிரெண்ட், உன்னை மாதிரியான  வெல்விஷர்… மொழி ரொம்ப லக்கில! என் மனசுல பதிஞ்ச நினைவுகளால, என்னால உங்க கூட பழக முடியல. ஹ்ம்ம், உங்களை எல்லாம் விட்டுட்டு, எனக்கு இம்பார்ட்டன்ஸ் குடுக்குறான்னு நினைச்சு அந்த வருண் கிட்ட பழகுனேன்…” என்றவளின் விழிகள் நீண்ட நேரம் தேக்கி வைத்த கண்ணீரைக் கசிய விட்டன.

 

அதற்கு இன்பசேகரன், “ஹ்ம்ம், நீ முட்டாளா இருந்துருக்கன்னு இப்போயாவது புரிஞ்சா சரி.” என்று கேலியாகக் கூற, அவனை லேசாக முறைத்தாள் யாழ்மொழி.

 

பின் அவளது கரத்தை தன் கரங்களிற்குள் வைத்து மூடியவன், “மனசுல இருக்க எல்லாத்தையும் கொட்டிடு யாழு. அப்போதான் ஃப்ரீயா இருக்கும்.” என்றான் கனிவாக.

 

அவன் ‘யாழு’ என்று அழைத்ததில் அவள் விழிகளை விரித்து, “கோபம் போயிடுச்சா?” என்று வினவ, “ஹ்ம்ம், இப்போதைக்கு போயிடுச்சு. திரும்பி இதே மாதிரி நீ லூசுத்தனமா நடந்துக்காத வரை வராதுன்னு நம்புறேன்.” என்று தோளைக் குலுக்கினான் அவன்.

 

“இனிமே நானும் அப்படி நடந்துக்க மாட்டேன்னு நம்புறேன்.” என்று சிரித்தாள் அவள்.

 

தன் ஒரு கரத்தால், அவளின் கரத்தைப் பற்றியபடி, மறுகரத்தால் காயத் துவங்கிய அவளின் கண்ணீர் தடத்தை அழித்தவாறே அவனும் இதழ்களை விரித்தான்.

 

*****

 

மென்மொழியின் தற்போதைய நிலை மேலும் வருத்தத்திற்குரியதாக இருந்தது.

 

சற்று நேரத்திற்கு முன்பு சுயகழிவிரக்கத்தில் இருந்தவளிற்கு, உடன் பிறந்தவள் இத்தனை நாட்களாக அனுபவித்த வலி தெரிய வர, முந்தைய வருத்தம் பின்தங்கி விட்டது.

 

“ம்ச், இவ்ளோ நாளா இதை நான் கவனிக்கலையே!” என்று மென்மொழி கவலையுடன் கூற, “உன் நிலைமையே மோசமாதான இருந்துச்சு. விடு…” என்ற சுடரொளியோ, “ஆனா, யாழைப் பார்க்கவும் பாவமா இருக்கு. தனியா இதைச் சமாளிக்குறது எவ்ளோ கஷ்டம்?” என்று அவள் பங்கிற்கு வருந்தினாள்.

 

“போதும் போதும், எனக்காக ரொம்ப ஃபீல் பண்ண வேண்டாம். வாங்க விட்டதுல இருந்து திரும்ப ஆரம்பிப்போம்.” என்ற குரல் கேட்க, அங்கு யாழ்மொழிதான் சிரித்தபடி நின்றிருந்தாள். இன்பசேகரனுடன்!

 

அவளிடம் சென்ற மென்மொழி ஏதோ கூறப் போக, “உன் நிலைமை எனக்கும் தெரியும் மொழி. நீ எதுவும் சொல்ல வேண்டாம்.” என்று முதல் முறையாக முதிர்ச்சியுடன் பேசிய யாழ்மொழியை அணைத்துக் கொண்டாள் அவளின் உடன் பிறந்தவள்.

 

“ஹ்ம்ம், ஒரே ஃபேமிலி டிராமாவா இருக்கு. திரும்ப ஃபேன்டஸி பக்கம் போக எண்ணம் இருக்கா இல்லையா?” என்று சூழலை மாற்ற முயன்ற சுடரொளி, “என்ன பார்ட்னர், இங்க இப்படி ஒரு அழுகாச்சிப் படம் ஓடிட்டு இருக்கு, உங்க ஆளை சமாதானப்படுத்தாம, தாத்தா விட்டுட்டுப் போன டைரியோட டூயட் பாடிட்டு இருக்கீங்க! எங்க இன்பாவோட டைமிங்கை பார்த்தீங்கள…” என்று கூற, “இப்போ எதுக்கு என்னை இழுக்குற?” என்றான் இன்பசேகரன்.

 

அப்போதும் குறிப்பேட்டில் பார்வையை பதித்தபடி, “விட்டாதான? கம் போட்ட மாதிரி ஒட்டி உட்கார்ந்து, சேர்ந்து புலம்பிட்டு, இப்போ வந்து கேள்வி கேட்டா?” என்று யுகேந்திரன் வினவ, “ஓஹோ, அப்போ என்னைக் ‘கரடி’ன்னு இன்டைரக்ட்டா சொல்றீங்க, அப்படித்தான?” என்று உதட்டைச் சுழித்தாள் சுடரொளி.

 

“இதை விட டைரக்ட்டா யாராலயும் சொல்ல முடியாது சுடர்.” என்று கூறியது மதுசூதனன்.

 

‘ஹையையோ, என் சைட்டு இங்க இருக்குறதை மறந்துட்டேனே!’ என்று மானசீகமாக தலையிலடித்துக் கொண்ட சுடரொளி, இளித்து வைத்தாள்.

 

ஒருவழியாக, அங்கிருந்த சூழல் சற்று இலகுவாக மாறியிருக்க, மீண்டும் அவர்களின் தேடுதலைத் துவங்கினர் அறுவரும்.

 

“என்னதான் அகரன் இப்போ எங்க இருக்கான்னு தெரிஞ்சாலும், கருப்புக் கல்லை எடுத்தது அவனாதான் இருக்கும். அதைப் பத்தி தகவல் தெரியணும்னா, அவன் கிட்டதான் கேட்கணும்.” என்றவள், அப்போதே அகரனைத் தொடர்பு கொள்ள முயற்சிக்க, அவன் தொடர்பு எல்லைக்கப்பால் இருப்பதாகத் தகவல் வந்தது.

 

“க்கும், கால் பண்ணதும் எடுத்துப் பேசிட்டாலும்!” என்ற சுடரொளி, “நீ உங்க அண்ணிக்குக் கால் பண்ணு.” என்றாள்.

 

மென்மொழி அலைபேசியை எடுத்துக் கொண்டு சற்றுத் தள்ளிச் சென்றாள்.

 

அப்போது யுகேந்திரன் ஒரு புகைப்படத்தை உற்று நோக்குவதையும், அவனின் அலைபேசியில் ஏதோ பார்ப்பதையும் கண்ட சுடரொளியும் மதுசூதனனும் ஒருவரையொருவர் பார்த்து உதட்டைப் பிதுக்கினர்.

 

“பார்ட்னர் என்ன செய்றீங்கன்னு சொன்னா நாங்களும் ஹெல்ப் பண்ணுவோம்ல?” என்று சுடரொளி வினவ, “அல்மோஸ்ட் ஓவர்!” என்ற யுகேந்திரன், அவன் வைத்திருந்த புகைப்படத்தை மற்றவர்களிடம் காட்டினான்.

 

அதில் ஆராவமுதனுடன் இன்னும் சிலர் இருந்தனர். அவர்களில் பலரின் முகங்களை வட்டமிட்டிருந்தான் யுகேந்திரன், ஆராவமுதனின் முகம் உட்பட!

 

“இவங்க யாரும் இப்போ இல்ல.” என்றவன், வட்டமிடப்படாமல் இருந்த இருவரில் ஒருவரைச் சுட்டிக் காட்டியவன், “இவருதான், ஆராவமுதன் தாத்தாவோட ஹெட் மிஸ்டர். பிரேம் ரத்தோர். மேபி, இவருதான் நம்ம தேடிட்டு இருக்க, நம்மள தேடிட்டு இருக்க வில்லனா இருக்கலாம்.” என்றான்.

 

“இவரு இப்போ எங்க இருக்காரு?” என்று யாழ்மொழி வினவ, “டெல்லில!” என்று பதில் கொடுத்தாள் அங்கு வந்த மென்மொழி.

 

தொடரும்…

Click on a star to rate it!

Rating 4.5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்